Wednesday, February 24, 2021

அக்கரோவாவும் அரிசி உப்புமாவும்....


இந்த ரெண்டு வருஷங்களா எங்கேயும் போக முடியலை......மனசே வெறுத்துப் போயிருந்தது..... நம்ம சம்மர் வேற இன்னும் ஒரு வாரத்துலே முடியப்போகுது என்பதால்  வெயில் இருக்கும்போதே  அக்கம்பக்கம் எங்காவது போய் வரணும்.
மகளும் மருமகனும் ஜனவரியில் அக்கரோவா என்னும் கடற்கரைப்பட்டணத்துக்குப் போய் வந்தவுங்க...... 'புதுசா இன்னொரு படகுப்பயணம் கிடைச்சது. அருமை'ன்னு வேற சொல்லி இருந்தாங்களா......  சரி ஒருநாள் அங்கே போய்வரலாமுன்னு நினைச்சோம்.

ஏற்கெனவே பலமுறைகள் போய் வந்த இடம்தான். நம்மூரில் இருந்து ஒரு 82 கிமீ தூரம். 'பேங்க் பெனின்ஸுலா'ன்னு  ஒரு மலையைக் கடந்து அந்தாண்டை இறங்கிப் போகணும். நம்ம வீட்டுக்கு வரும் முக்கிய விருந்தினரை (அவர்கள் நம்ம வீட்டில் தங்கும் பட்சத்தில் ) கூட்டிப்போய்க் காமிக்கிறதுதான் பொது வழக்கம்.

2017 இல் நம்ம அண்ணனும் அண்ணியும் மகள் கல்யாணத்துக்காக வந்திருந்த சமயமும், சிங்கை எழுத்தாளர் ஜயந்தி சங்கர் 2018 இல்  வருகை தந்த சமயமும்  போய் வந்தோம்தான். அதுக்கப்புறம் 2019 இந்தியப் பயணம் வாய்ச்சது. 2020 ஐ கோவிட்டுக்கு நேர்ந்து விட்டாச்சு :-(

இனி ரெண்டு வருஷங்களுக்கு நாட்டை விட்டுப்போக அனுமதி இல்லைன்னு வேற பயமுறுத்திக்கிட்டு இருக்கு எங்க அரசு.  ஊர் உலகமெல்லாம் கோவிட் தடுப்பு ஊசி போட்டுப் பாதுகாப்பாக இருக்கணுமாம். நடக்குமென்ற நம்பிக்கையே போச்சு... ஹூம்....

சரி. வெயில் காலம் முடியுமுன் அக்கரோவாவுக்காவது போய் வரலாமேன்னு கிளம்பினோம். நாம் அங்கே மகள் சொன்ன படகுக் கம்பெனிக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தப்ப, திங்கக்கிழமைதான் டிஸ்கவுண்ட் ப்ரைஸில் கிடைக்குமுன்னு சொல்லி இருந்தாங்க. அன்றைக்கே ஆகட்டும்..... இப்பதான் நம்மவர் ரிட்டயர் ஆயாச்சே. நோ ஆஃபீஸ்தானே!

இவ்ளோ கலாட்டாக்களுக்கிடையில் நம்ம ஊர் நிலநடுக்கம் வந்து பாதி ஊர் அழிஞ்சநாளுக்கான திவஸம் வேற வருது.  அதே திங்கள்தான்.  முதலில் ரெண்டு மனசா இருந்தது..... பத்தாம் வருஷ  நினைவுநாள். பிரதமர் வேற வர்றாங்க. கூடவே கவர்னர் ஜெனரலும்.  நகருக்குள்ளில்தான் இருக்கும் நினைவிடத்துக்குப் போகும் பாதையில் போக்குவரத்தெல்லாம் மாற்றி வைக்கும் சேதிகளை ஒரு வாரத்துக்கு முன்னால் இருந்தே அனுப்பிக்கிட்டு இருக்கு நம்ம சிட்டிக்கவுன்ஸில்.  பார்க்கிங் வேற  இப்பெல்லாம் கஷ்டமா இருக்கு.  கட்டணத்தை உயர்த்திக்கிட்டே போய்க்கிட்டு இருக்கு சிட்டிக்கவுன்ஸில். இந்த அழகிலே சனம் சிட்டி சென்ட்டருக்கு வர்றதில்லைன்னு ஒரு பக்கம் ஒப்பாரி வேற !  முந்தியெல்லாம்  பார்க்கிங் முதல் ஒரு மணி நேரம் இலவசமே. அதுக்குப்பிறகு  இருக்கும் நேரத்துக்குத்தான் ஒன்னு எம்பதுன்னு இருந்தது. அதெல்லாம் போயே போச்.....  

அந்த எர்த் க்வேக் மெமோரியலும்  பார்க்க ஒரு அழகு அந்தஸு இல்லாம இருக்குன்னு எனக்கொரு தோணல்.  நதிக்கரையில் சாம்பல் கலர் மார்பிள் சுவரில் 'போனவங்க' பெயரைச் செதுக்கி வச்சுருக்காங்க. நின்னு வாசிக்கணுமுன்னா சிரமம்தான்.... ப்ச்..... கீழே படம்.
கிளம்பறதுக்கு முன்தினம் என்னென்ன செய்யணுமுன்னு திட்டம் தீட்டினவள், காலையில் ரெண்டு மணி நேரம் கூடுதலாத் தூங்கிட்டேன்.  கண்ணைத் திறந்து பார்க்கும்போது மணி எட்டடிக்கப்போகுது. நாலரைக்கு விழிப்பு வந்ததுதான். இன்னும் நேரம் இருக்கேன்னு மறுபடி தூங்கினால்.... இந்த கதி.....

சட்னு குளிச்சு முடிச்சு, சாமி விளக்கேத்திட்டு,  அரிசி உப்புமாவுக்கு எடுத்துவச்சதைத் தாளிதம் செய்து, பாத்திரத்தைக் குக்கரில் இறக்கினேன். அடுப்பில் வச்சுக்கிளறி எடுக்க நேரமில்லை.  போற இடத்தில் எதாவது வாங்கிக்கலாம் என்றாலும், அந்த ஊருக்கான ஸ்பெஷல் ஃபிஷ் & சிப்ஸ்தான். கடலையொட்டிய நகரம் பாருங்க ! 

மூணு விஸில் ஆனதும்  ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வச்சுட்டுக் கிளம்பியாச்சு.  தொட்டுக்க கொத்தமல்லித் தொக்கு, குடிக்கத் தண்ணீர், ஜூஸ், இன்னும் சிலபல சிறுதீனிகள்னு  இன்னொரு பொதி ஒருபக்கம். குளிருக்கான ஜாக்கெட், வெயிலுக்கான தொப்பி, தேவைப்படுமோன்னு  வாக்கிங் ஷூஸ் , செல்ஃபோன்கள்,  பவர் பேங்க் , சார்ஜர் ஒயர் இப்படி இன்னொரு சின்னப்பொதி.  இந்த எஸ் 9 ப்ளஸ்  வாங்குனதில் இருந்து, ரெகுலர் கேமெராவைக் கொண்டு போற பழக்கம் போயே போயிந்தி.......... மறக்காமல் ரெண்டு மாஸ்க் வேற !

நம்மூரில் கோவிட் இல்லைன்னாலும்,  பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில்  எல்லோரும் (நாடு முழுக்க ) மாஸ்க் போட்டுக்கணுமுன்னு முந்தாநாள் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. ப்ச்.....   படகு, ஒரு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் இல்லையோ ? 

கிட்டத்தட்ட ஒன்பதே முக்காலுக்கு வீட்டை விட்டோம். ஒரு காமணிதான் லேட்.  இன்னொரு பேட்டையைக் கடக்கும்போது  அங்கிருக்கும் ஆஞ்சியை தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போகணுமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. போற போக்கிலேயே கும்பிடு போட்டுட்டுத் திரும்ப வரும்போது  கிட்டப்போய் தரிசிக்கலாம்தானே !
சுமார் ஒரு மணி நேரத்தில் லிட்டில் ரிவர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டோம்.  இதுக்கு ஒரு சரித்திரம் உண்டு.   1886 இல் திறந்துருக்காங்க. 1962 வரை செயல்பாட்டில் இருந்துருக்கு !  முதல் ஸ்டேஷன் மாஸ்டர் தாமஸ் க்ரேஞ் ஜூனியர். நியூஸியில் செஞ்ச ரயில் பெட்டிகளை இணைச்சு ஓடிக்கிட்டு இருந்துருக்கு !










இப்போ தண்டவாளத்தில் நிக்கும் ரெண்டு ரயில் பொட்டிகளும், ரெண்டு சரக்கு கேரியர்களும், ஒரு எஞ்சினும்தான்  சாட்சி !   ஒரு ரயில் பொட்டிக்குள்ளே சின்னதா ஒரு ம்யூஸியம் வச்சுருக்காங்க. ஸ்டேஷனில் கைவினைப் பொருட்கள், உள்ளூர் காய்கறிகள், செடிகள் னு விற்பனை. ஒரு அறையில் குட்டி ரயில்பாதையில் பொம்மை ரெயில். ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் இது ! கார்டு கையில் உயர்த்திக் காமிக்கும் விளக்கு இருக்கு. சின்னப்புள்ளையா இருக்கும்போது இதில் சிகப்பும் பச்சையும் மாறி வருவது மேஜிக்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)


முந்தி இங்கே ஒரு PBX இருந்துச்சு.  அதெல்லாம் எங்கே போச்சோ ?  மூணே வருஷத்தில் என்னென்னவோ மாற்றங்கள்...... ஸ்டேஷன் பெயரும்கூட மாறி இருக்கு. லிட்டில் ரிவர் க்ராஃப்ட் ஸ்டேஷனாம் ! 
ஒவ்வொருமுறை போய்வரும்போதும் படங்கள் எடுத்துக்கிட்டு வர்றோமுல்லெ..... இப்ப அதையெல்லாம் பார்த்தால்  வெளியே இருக்கும் ரயில் பொட்டிகள், உள்ளே ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருக்கும் பொம்மை ரயில் இதுகளில் எல்லாம் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம். ஆமாம்..... அப்பப்ப வெளியே தண்டவாளத்தில் நிக்கும் பொட்டிகளும் காணாமப் போயிருக்கு.  யார் இதை நகர்த்தி இருப்பாங்க !  எப்போ? எப்படி ?  ஜீபூம்பா வேலையா இருக்குமோ ! 

அடுத்த ஸ்டாப் நமக்கு Hilltop Tavern  வாசலில். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பத்து கிமீ. இங்கிருந்து பார்க்கும்போது கீழே கடலும் குன்றுகளுமா வ்யூ அட்டகாசம். அதனால் போறவர்ற வண்டிகள் எல்லாம் நின்னுதான் போகும்! 

இனிமே ஒரே இறக்கம்தான் அடுத்த 18 கிமீ தூரம்..... இடையில்  சின்ன ஊர்கள் ரெண்டு மூணு இருக்கு. ஒரு சீஸ் ஃபேக்டரியும் உண்டு. ஏற்கெனவே சிலமுறைகள் பார்த்திருப்பதால் இந்த முறை உள்ளே போகலை. 
பதிவில் இருக்கும் சில படங்கள் போன பயணங்களில் எடுத்தவையே !

அக்கரோவாவுக்குள் நுழைஞ்சப்ப, நாம் வீட்டில் இருந்து புறப்பட்டு ரெண்டு மணி நேரம் ஆகி இருந்தது.  மகளிடமிருந்து  ஒரு  டெக்ஸ்ட்.  படகுப்பயணத்துக்கான ஜாக்கெட்டுகள், கூலர்ஸ், டேஷ் வராமல் இருக்கும் மருந்து எல்லாம் எடுத்துக்கிட்டீங்க தானே ?  ஐயோ..... டேஷை எப்படி மறந்தேன் ?   மருந்துக்கடையைத் தேடி ஓடவேண்டியதாப் போச்சு....  பீச் ரோடில் கடை இருக்குன்னு கூகிளார் சொன்னார்.
மாத்திரை வாங்கினதும், ரெண்டு  எடுத்து வாயில் போட்டேன். நல்லவேளை, இதுக்குத் தண்ணீர் வேணாம். 


பீச் ரோடில் நிறைய நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள்.  வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு கடைக்குள் நுழைஞ்சு ஒரு யோகா தவளை (மட்டும்) வாங்கினேன்.  இப்பெல்லாம் நாங்க யோகா வகுப்புக்குப் போறோம், தெரியுமோ ? முதியோர் யோகான்னு சொல்லலாம் :-) இதுக்கு ச்சேர் யோகான்னு பெயர் ! 

நமக்குப் படகு ரெண்டு மணிக்குதான். ஒன்னே முக்காலுக்குப் படகுத்துறையில் இருந்தால் போதும். அதுவரை அக்கம் பக்கம்  வேடிக்கை பார்க்கலாம். ச்சும்மா பீச் ரோடில் கடலைப் பார்த்துப் போட்டு வச்சுருக்கும் பெஞ்சுகளில் உக்கார்ந்தாலுமே நேரம் ஓடிறாதா என்ன ? 

 ஆட்கள் போய் உக்கார்ந்தவுடன், கஞ்சி வர/ருதப்பா.....ன்னு  ஸீகல் கூட்டம் வந்து நோட்டம் விடுதுங்க. திங்கத்தா..... திங்கத்தா.......   




கண்பார்வை நம்மைத் துளைச்செடுத்துருது.....  பெடல்போட், கனூஸ் இறக்கும் படிகளாண்டை ஒரு Shag உக்கார்ந்து போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கு. இந்தப்பக்கம் ஒரு நாரை... கடல்நாரைன்னு நினைக்கிறேன்.

படகுப்பயணம் முடிஞ்சபின் சுத்திப்பார்க்க நேரம் இருக்காதுன்னு  'வழக்கமான ரவுண்டை 'இப்பவே முடிச்சுக்கலாமுன்னு கிளம்பினோம்.
லைட் ஹவுஸ் போனோம். எல்லாம் ரெண்டு மூணு நிமிட் ட்ரைவ்தான்.  வழக்கம்போல அது மூடிக்கிடக்கு.  ரொம்ப வருஷங்களுக்கு முன்னே  அதுக்குள் போயிருக்கோம்.  அப்ப ஏது டிஜிட்டல் கேமெரா ? படங்கள் ஆல்பத்தில் இருக்கு. எந்த ஆல்பம் ? ஙே......  ஒரு இருவது ஆல்பங்கள் இருக்கே நம்மாண்டை....




சில க்ளிக்ஸ் ஆச்சு. அடுத்தது பகல் சாப்பாடு.  சாப்பிட இடம் தேடிக் கொஞ்சம் அலைய வேண்டியதாப் போச்சு.  Garden of Tane  (  Tane மரங்களுக்கான  மவொரிக் கடவுள் ) வாசலில் என்னவோ தடைகள். உள்ளே போகலாமுன்னா வண்டியை எங்கே நிறுத்த ?  ப்ச்.....  திரும்பக் கடலாண்டை வந்து ஒரு மரத்தடியில் உக்கார்ந்து சாப்பிட்டோம். 
நம்ம அரிசி உப்புமாவுக்கு பயங்கர ஃபேனா ஒருத்தர் இருந்தார்.  மற்ற யாரையும் அண்டவிடாம, தான் மட்டுமே தின்னு தீர்க்கணுமுன்னு நினைச்சால் நான் என்ன செய்ய ?  குர்..........குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு  கத்திக்கிட்டேத் தலையைச் சாய்ச்சபடி விரட்டுனதைப் பார்க்கணுமே.....  படம் எடுக்க முடியலை..... எச்சக்கை இல்லையோ.....
சரி வாங்க.....   ஒன்னு இருபதாச்சு.  பார்க்கிங்லே வண்டியைப் போட்டுட்டுப் படகுத்துறைக்குப் போகலாம்.  பீச் ரோடுலே 2 மணி நேரம்தான் லிமிட். நமக்கு சுமார் மூணுமணிநேரம் வேணும். 

பதிவின் நீளம் கருதி பாக்கி அப்புறம்.....ஓக்கே ? 

PIN குறிப்பு : போனமுறை எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு கறி :-)

தொடரும்......:-)



Wednesday, February 17, 2021

சரித்திரத்தில் இடம் புடிச்ச பொட்'டீ'க்கடை !

எங்க பாட்டி ( கொள்ளோ, எள்ளோ ! )  இங்கே பொட்'டீக்கடை' வச்சுருந்தாங்க. அவுங்க சேவையைப் பாராட்டி  நினைவு மண்டபம் கட்டப்போறோம்னு இப்ப ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னே பாட்டியின்   வம்சாவழியினர்,  நகரசபை உதவியுடன்  கட்டி விட்டு, அதை   உள்ளூர் மேயர் வந்து திறந்து வச்சுருக்கார் ! 

இங்கிலாந்துலே  பொறந்த ரோஸ் ஆனி, தன்னுடைய பதினோராவது வயசுலே,  அப்பா அம்மாவோடும், கூடப்பொறப்புகள்னு இன்னும் நாலு பேரோடும் கண்காணா தேசத்துக்குக் கப்பலில் வந்து இறங்கினாங்க.  

இங்கிலாந்தில்,  அப்போ 'நியூஸிலாந்து  கம்பெனி'ன்னு ஒன்னு ஆரம்பிச்சு,  தொலைதூரத்துலே இருக்கும் நாட்டுக்கு இடம் மாறிப்போக ஆட்களைப் புடிச்சுக்கிட்டு இருந்த காலம்.   இப்ப அஸ்ட்ராலியா, கனடா, நியூஸி போகணுமா? ன்னு  விளம்பரம் பண்ணிக்கிட்டு இருப்பதைப் பார்க்கறீங்கதானே ?  அதுவும்' படிக்கப்போறேன்னு  போங்க. ஸ்டூடண்ட் விஸா சுலபமாக் கிடைச்சுரும். அப்படியே  படிப்பு முடிஞ்சதும் (! ) மூணு வருஷ  ஒர்க்கிங் விஸா கொடுத்துருவாங்க.  வேலை ஒன்னு தேடிக்கிட்டு நிம்மதியா இருந்துடலாம்' னு  மக்களை ஏமாத்தும் ஏஜெண்டுகளைப் போல இல்லாமல்,  'கப்பலில் போக, அங்கே  விவசாயம் பண்ணிக்க இடம் வாங்க  இவ்ளோ காசு கட்டுங்க.   கொண்டுபோய் இறக்கிருவோம். அங்கே நம்ம கம்பெனி ஆளுங்க உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாங்க 'ன்னு சொன்னதை நம்பி வந்தவங்கதான்.  தேனும் பாலுமா ஓடுதுன்னு சொல்லி இருப்பாங்களோ ?
 
உள்நாட்டு சனமான மவொரிகளுடன் சண்டை எல்லாம் போட்டு, ' அப்புறம் சண்டை ஒத்து நைனா, சமாதானங்காப் போத்தே மஞ்சிதி'ன்னு   1840 ஆம் வருஷம்  மவொரிகளுடன்  ஒப்பந்தம் போட்டு ( வைட்டாங்கி  என்ற  இடத்தில்  நடந்த நிகழ்வு . வருஷாவருஷம் வைட்டாங்கி டேன்னு  ஃபிப்ரவரி ஆறாம் தேதி அரசு விடுமுறை உண்டு !)  நியூஸியில் இடம் புடிச்சு உக்கார்ந்துக்கிட்ட பிரிட்டிஷ் அரசின் காலனிகளுக்கு மக்களைக் கொண்டுவர ஆரம்பிச்சதெல்லாம் அப்போதான். இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிஞ்சக்கணுமுன்னா.... சந்தியா பதிப்பகம் வெளியிட்ட  நியூஸிலாந்து என்னும்  புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம் !  (எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான் ஹிஹி.... )
ஆமாம்...  ரோஸ் ஆனியை அம்போன்னு விட்டுட்டு இது என்ன  பேச்சு இங்கே ? வாங்க 1876க்கே போகலாம்.  ஒருவழியா குடும்பம் செட்டில் ஆகி, புள்ளைகள் எல்லாம் வளர்ந்துட்டாங்க. ஆச்சே பனிரெண்டு வருஷம்!   பசங்க பெருசாக ஆக  இவுங்களைப் போலவே இடம்மாறி வந்த பிரிட்டிஷ் குடும்பங்களோடுதான்  சம்பந்தம் பண்ணிக்கிட்டு கல்யாணம்,காட்சின்னு நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க, மக்கள். 

வில்லியம் ரேனால்ட் என்ற வரனுக்கும் ரோஸ் ஆனி என்ற வதுவுக்கும்  1888லே  லீஸ்டன் என்ற ஊரில் இருக்கும் சர்ச்சுலே  கல்யாணம் ஆச்சு.  ரெண்டுபேருக்கும் அப்போ வயசு 23. 

மெயின்லேண்ட் என்னும்  கேன்டர்புரி  பகுதியின் இன்னொரு பாகமான ஆக்ஸ்போர்டில்  ரெண்டு பிள்ளைகளுடன் ஒரு பனிரெண்டு  வருஷம் போயிருச்சு !   மாமியார் வீடாக இருந்துருக்குமோ ?

எல்லாம் இப்போ நாம் இருக்கும் கிறைஸ்ட்சர்ச் நகரத்தில் இருந்து ஒரு அம்பது மைல் சுற்றளவில் இருக்கும் இடங்கள்தான்.  குதிரை வண்டிகளுக்குப் பஞ்சமா என்ன ? வீட்டுவீட்டுக்கு  இருந்துருக்கே இந்தக் குதிரைக்கார் !  ரொம்பப் பணக்காரர்கள்தான்  நெசமான கார் வச்சுருந்தாங்க. !

  (நியூஸியில் ஒன்னு கவனிச்சீங்கன்னா... இங்கிலாந்துலே இருக்கும் ஊர்களின் பெயர்கள்தான் இங்கேயும் இருக்கும். அங்கிருந்து வந்த மக்கள், புது இடங்களுக்குப் பெயர் வைக்கும்போது தெரிந்த, பரிச்சயமான பெயர்களைத்தானே வைக்க முடியும் , இல்லையோ ? இன்னும் சில இடங்களுக்கு நியூன்னு அடைமொழி சேர்த்து வச்சுருவாங்க. நியூஸீலேண்ட் கூட இப்படித்தான். ஸீலேண்ட்க்கு நியூ சேர்த்தாச்! ) 

 
இந்த ஆக்ஸ்ஃபோர்டில் இருந்துஒரு நாலு மைலுக்கு அந்தாண்டை ,  மலையையொட்டி இருக்கும் பள்ளத்தாக்கில் ஒரு ஆறு ஓடிக்கிட்டு இருக்கு. ஆஷ்லி ரிவர்னு பெயர். இந்தப் பகுதியை சனம் பிக்னிக் ஸ்பாட்டாப் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க.
நம்ம ரோஸ் ஆனி ரேனால்ட், 1920லே  அங்கே ஒரு சின்ன காட்டேஜ் கட்டிக்கிட்டுக் குடிபோனாங்க. அக்கம்பக்கம் இருக்கும் வளமான இடத்தில் பூச்செடிகள், மரக்கன்றுகள் எல்லாம் நட்டு இன்னும் செழிப்பா அழகா மாத்துனது இவுங்கதான். கடும் உழைப்பாளி.  இப்பக் கணக்குக்கு நூறு வருஷங்கள்  ஆனாலும் சிலபல செடிகள்  இன்னும் பூத்துக்குலுங்குது. எலுமிச்சை மரங்கள் இன்னும் காய்க்குதாமே ! 

சனம் வண்டிகட்டிக்கிட்டு வந்து இந்தக் காட்டையொட்டி மலைஅடிவாரத்தில் ஓடும் நதியாண்டை வீகெண்டில் வந்து தங்கி, ஆத்துலே குளிச்சு, ஆக்கித்தின்னுன்னு  இருந்துருக்கு.  வர்ற சனம் ரெண்டுநாளுக்குத் தேவையான எல்லாத்தையும் மறக்காம மூட்டைக்கட்டிக்கிட்டு வரமுடியுமா?
எப்படிப்பார்த்தாலும் ஒன்னுரெண்டு சாமான்களை  மறந்துறமாட்டாங்க ? 
மிஸஸ். ரேனால்ட் (நம்ம ரோஸ் ஆனி) பிஸினஸுக்குள் நுழைஞ்சது அப்போதான்.  வீட்டுலேயே  பொட்டிக்கடை ஒன்னு ஆரம்பிச்சாங்க.  சனி ஞாயிறு மட்டும்தான் வியாபாரம்.  பழம், பிஸ்கெட், சாக்லெட் முக்கியமா சிகரெட், பைப்புலே வச்சுப்புடிக்க புகையிலைன்னு  வாங்கி வச்சாங்க.  கூடவே காஃபி, டீ, சிம்பிளா கொஞ்சம்  வீட்டுத்தயாரிப்புத் தீனி வகைகள்.....  பிஸினஸ் பிச்சுக்கிட்டுப் போச்சு! 
அட!  அப்போ  ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் படித்துறை போல !


சும்மா வர்ற சனத்துக்குக் கூட,  ரொம்ப ஆழமில்லாம அழகா ஓடும் ஆத்தைப்பார்த்தா, இறங்கிக் குளிக்கத் தோணுதே !

 அச்சச்சோ.... குளிக்கிறப்போ போட்டுக்கற உடுப்பைக் கொண்டு வரலையே.... 

அந்தக் காலத்துலே பிக்னிக் வரும்போது போட்டுக்கிட்டு வர்ற ட்ரெஸைப் படத்துலே  பாருங்க !

 நோ ஒர்ரீஸ்......  மிஸஸ் ரேனால்ட் 'கடை' யில் வாங்கிக்கலாம்.  வெறும் அஞ்சு ஷில்லிங், ஆறு பென்ஸ்தான்!

நியூஸியில்  அப்போ கரன்ஸிகூட பவுண்ட், ஷில்லிங் , பென்ஸ்தான்.  இப்போ 1967 இல் தான்  டாலர், சென்ட்டுன்னு  டெஸிமல் கரன்ஸிக்கு மாறினாங்க.

எங்கெயோ பிறந்து, எங்கெயோ இடம் பெயர்ந்து வந்து , வந்த இடத்திலும் ச்சும்மா உக்காராமத் தன் உழைப்பால் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்திய மிஸஸ். ரேனால்ட், தனது 72 வது வயசில் கடைசியா சாமிக்கிட்டே போனாங்க.  அவுங்க கல்லறை இங்கே நம்மூரில்தான் இருக்கு!

அவுங்களுக்கு அப்புறம்  'கடை' என்னாச்சுன்ற விவரம் இல்லை. புள்ளைங்க வளர்ந்து பெரியவங்களாகி அவுங்கவுங்க வாழ்க்கை முறையை, அவுங்கவுங்க விருப்பப்படி மாத்திக்கிட்டு இருந்துருப்பாங்க, இல்லே ?

அந்த ஆஷ்லிகார்ஜ் இடம் இப்போ 25 ஏக்கரில் பெரிய ஹாலிடே பார்க்கா மாறி இருக்கு.  சின்னதும் பெரியதுமா அறைகள் எல்லாம் கட்டிவிட்டுருக்காங்க. நம்மாண்டையே கேம்பர் வேன், இல்லே கூடாரம் இருக்குனா, இடத்துக்கு மட்டும் சின்னதா ஒரு  வாடகை கொடுத்துட்டு அங்கே போய் தங்கிக்கலாம்.

பொதுவா இங்கத்துக் கோடைகாலம், பள்ளிக்கூட விடுமுறை காலங்களில் எல்லாம்  சனம் நிறைஞ்சு வழியும் இடங்களில் ஒன்னா ஆகி இருக்கு! 
அக்கம்பக்க சனம், ஒருநாள் அவுட்டிங்காப் போய் வர்றாங்க. 

நாமும் இப்படித்தான்.  முந்தியெல்லாம் அடிக்கடி போய் வர்ற நாம், இப்போ ஒரு  20  வருசங்களா அந்தப்பக்கம் போகவே இல்லை. நம்ம எதிர்வீட்டுலே  இருக்கும் மரங்கள்,  நம்மூட்டுப்  புழக்கடையில் இருந்து பார்க்கும்போது, அசப்பிலே ஆஷ்லிகார்ஜ் மரங்கள் போலவே  இருக்கும்!  அடடா.... ஆஷ்லிகார்ஜ் போய் எவ்ளோ நாளாச்சுன்னு நினைக்கறதுதான். 
கீழே படம் : எதிர்வீட்டு மரங்கள்
அதான் ஒருநாள் லஞ்சுக்குப்பிறகு சட்னு கிளம்பிப்போனோம். நம்ம வீட்டில் இருந்து 71.7 km தூரம். நதியாண்டை  பள்ளத்தாக்கைக் கடந்து போக பெரிய பாலம் இருக்கு!  முதலில் பாலத்துக்கு  வலப்புறமா இறங்கிப்போய்  கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு, அப்படியே 'நம்ம ரஜ்ஜு சட்னி அரைச்சுக்க  ஒரு அம்மிக்கல்லை'யும் ஆத்துலே இருந்து எடுத்துக்கிட்டேன். அப்புறம் பாலம் கடந்து  அந்தாண்டை ஒரு நாலைஞ்சு கிமீ தூரத்தில் இருக்கும் ஹாலிடே பார்க் போனோம். 







பிக்னிக் வந்த சனம் தண்ணியிலும், கரையிலுமா இருந்துச்சு.
காட்டுக்குள் (! )கொஞ்ச தூரம் நடந்தால் புதுசா ஒரு  மரக்கூடாரம்  கட்டி இருக்காங்க. என்ன ஏதுன்னு கிட்டப்போய்ப் பார்த்தப்பதான் 'மிஸஸ் ரேனால்ட்' பற்றிய விவரம் கிடைச்சது ! 





என்னங்க வேணும் ?  ரெண்டு இட்லி, ஒரு வடை


உள்ளுர் நியூஸ் பேப்பரில் கூட அப்போ இவுங்களைப்பற்றிய சேதிகள் வந்துருக்கு ! சில விஷமிகள், இவுங்க 'கடை'யைக் கூட விட்டுவைக்காம ஆட்டையைப் போட்டுருக்காங்க. ப்ச்.....    
ஆனால் ஒரிஜினல் காட்டேஜ் இருந்த இடத்தில், அதே அமைப்பில் சிறைக்கைதிகளின் உடலுழைப்புடன் இப்போ கட்டி விட்டது அருமை.  அந்தக் காலத்தில் செஞ்ச சின்ன நல்ல விஷயங்களைக்கூட, மறக்காமல் நன்றி செலுத்துறது  ரொம்பவே பாராட்டப்படவேண்டிய அம்சம் இல்லையோ !