Wednesday, June 30, 2010

திராவிடருக்கு மட்டுமேன்னு தனியாவா?

அட வெங்காயமேன்னு தோணிப்போச்சு. இதைமட்டும் வாங்கலைன்னா நீ திராவிடனா இருக்கச் சான்ஸே இல்லை. கண்ணைத் திறந்து பார். உனக்குப் பழக்கப்பட்ட சமாச்சாரங்கள் நிறைஞ்சு வழியுது.

வெளிநாட்டுலேதான் குஜராத்திகள் வச்சுருக்கும் இண்டியன் ஸ்டோர்ஸைத் தேடிப்போறோமுன்னா இங்கே இந்தியாவில் கூடவா? நமக்காவஸ்யமுள்ளதொக்க அவிடே கிட்டுமுன்னு நம்மடெ கம்பேனியிலெ ஜோலி செய்யுன்னவர் பறஞ்ஞதா...... செக்டர் நம்பர் 47 D.
கடைக்குப்பெயர் சிங்லா. யாருலா இப்படிப்பேரு வச்சதுலா????? கடையின் ஒரு மூத்த உதவியாளர் ( ஆகக்கூடி அன்னிக்கு அவர்மட்டும்தான் சாமான்களை எடுத்துக்கொடுத்துக்கிட்டு ஓடியாடித் திரிஞ்சார்) சாமான்களுடனும் வாடிக்கையாளர்களுடன் பழகிப்பேசி இவருக்கும் கொஞ்சம் நம் மொழிகள் வந்துருக்கு. இட்லி அரிசி இருக்கு. தேங்காய் ஃபோட்கி தரேன். உல்லி வேணுமா? உல்லி வேணாம்? நாலுமுறை 'உல்லி உல்லி'ன்னு சொல்லிக்கிட்டே நம்ம மூஞ்சைப் பார்க்கிறார். இதைமட்டும் வாங்கலை..... நீ சவுத்காரனா இருக்கவே முடியாதுன்ற துளைக்கும் பார்வை.

தென்னிந்தியனா நம்மை நிரூபிச்சாகவேண்டிய கட்டாயத்தில் துப்பாக்கி முனையில் நிக்கறோமோ? ஒரு அரைக்கிலோ போடுங்கன்னு சொன்னதும்தான் அவர் முகத்தில், இதுங்க மத்ராஸிகள்னு ஒரு இளம்புன்னகை.
நமக்குப் பழக்கப்பட்ட மசாலாக்கள், கோழிக்கோடு அல்வா, கேரளத்திலிருந்து வரும் அடுமனை சமாச்சாரங்கள், இட்லிப் பாத்திரம், சாமிக்கு விளக்கு வைக்கச் சின்னதாப் பித்தளை விளக்குகள், கடலை முட்டாய் (ராஜபாளையத்துலே இருந்து வருதுப்பா) பொரியுருண்டை, முறுக்கு மிக்ஸ்ச்சர்ன்னு தீனி வகைகள். காய்கறி வகைகளில் ஏத்தக்காய், கப்ப, இளவன், முருங்கைக்காய், சாம்பார் வெங்காயம் (உள்ளி) முக்கியமாத் தேங்காய். அங்கேயே மட்டை உரிச்சுக்கொடுக்க ஒரு இரும்புக் கருவி. அழகா குடுமியை விட்டுட்டு உரிச்சுக்கொடுக்கறார் உதவியாளர். நமக்கு விருப்பமுன்னா அதை உடைச்சும் கொடுக்கறார்.

குமுதம் குங்குமம் ஆன்மீக மலர், மங்கையர் மலர், இன்னும் சில தமிழ்ப் பத்திரிகைகளும் வனிதா, இன்னும் என்னென்னவோ சில மலையாள வாரிகைகளும் ஒரு ஸ்டேண்டுலே கிடக்கு. பத்து ரூபாயிலிருந்து இருவது ரூ வரையிலும். சுடச்சுடப் புத்தம்புதுசா கிடைக்கறதில்லை. லேட்டஸ்ட்டுன்னா ஒரு ரெண்டு வாரப்பழசு. இதுலே படிக்காததுன்னு வேணுமுன்னு கோபால் தேடி எடுத்ததை வீட்டுலே வந்து பார்த்தால் 2008வது வருசம்.
கடை முதலாளி கல்லாவில் இருந்து துண்டுச்சீட்டில் பில்போட்டுக் காசு வாங்கிக்கறார். சூரஜ் பிரகாஷ் அம்பாலாவில் பிறந்து வளர்ந்தவராம். இப்ப இவர் மகனும் சேர்ந்து கடையைப் பார்த்துக்கறாங்க. கடையின் வயசு 42. சண்டிகர் நகரத்துக்கு வயசு 47. அப்போ.... ஒரு அஞ்சு வருசமா நம்ம மக்கள் நம்ம சாமான்கள் கிடைக்காமத் திண்டாடுனபிறகு வந்த கற்பக விருட்சம் இது.

புதுநகரம் உண்டானபோது ஆர்மி, ஏர்போர்ஸ் அலுவலகங்கள் இங்கே தொடங்குனப்ப நிறைய தென்னிந்தியர்கள் இருந்துருப்பாங்க. தனியா ஆக்கித்தின்னும் கஷ்டப்பட்டு இருக்கலாம். அதான் சிங்கிளா இருக்கும் ஆட்களின் தேவைக்கு சிங்லா ஆரம்பிச்சு இருக்கும். இப்போ இந்தக் கடைக்கு நியூ சிங்லான்னு பெயர் கொடுத்துக்கிட்டாங்க. நியூக்குப் பொருத்தமா மகன் விவேக் இப்ப அப்பாகூடவே இருந்து கடையை நடத்தறாரே!
இதே கடையை ஒட்டி அடுத்தடுத்தக் கட்டிடங்களில் தென்னிந்திய உணவகங்கள் ரெண்டு இருக்கு. ஒன்னு சௌத் ரத்னம், இன்னொன்னு கார்த்திக் ரெஸ்டாரண்ட். இது ரெண்டும் போதாதுன்னு கூடுதல் அட்ராக்ஷனா கையேந்தி பவன்கள் இங்கே சிங்லா முன்னால் மூணு நாலு. தென்னிந்திய ஸ்பெஷல்ஸ் இதுலே ரெண்டு.
வேல்முருகன். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர். (ஆஹா.....ஓட்டேரி நரி!) 30 வருசமா இங்கே இதே தொழில்தானாம். இப்போ பத்து பேர்களை வேலைக்கு உதவியா வச்சுருக்காராம்.

'சும்மாப் படம் எடுக்காதீங்க. இப்படித் தோசை ஊத்தறதுபோல எடுங்க'ன்னு நீளமான செவ்வகத் தவ்வாவில் ஒரு பக்கம் ஊத்தப்பமும், இன்னொரு பக்கம் மசாலா தோசையும் செஞ்சு காமிச்சார். ஒரு கைப்பிடி நிறைய பொடியா நறுக்குன வெங்காயத்தைத் தூவி இது வெங்காய ஊத்தப்பம். இன்னும் கொஞ்சம் முட்டைக்கோஸ், பச்சைமிளகாய் கேரட் நறுக்கல்ஸைத் தூவி இது வெஜிடபிள் ஊத்தப்பம்னார். ஒரு கரண்டி உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து ஏற்கெனவே தேசலாத் தேய்ச்சுப் பரத்திய தோசையின் நடுவில் வச்சு அதையும் கரண்டியால் தேய்ச்சுப் பரத்தி இது மசாலாத்தோசைன்னு சொல்லி மூணு பக்கமும் அழகா மடிச்சு ஒரு மசாலா முக்கோணம் செஞ்சு காமிச்சார்.

'சாப்பிட்டுப் பாருங்க' ன்னு ஒரே வற்புறுத்தல். 'பார்த்ததே கண்ணும் வயிறும் நிறைஞ்சு போச்சு'ன்னு சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். ஊஹூம்......அவர் மனம் நோகவேணாமேன்னு சுடச்சுடப் போட்டு வச்சிருந்த வடைகளில் (மெதுவடை, மசால்வடை) ரெண்டு மசால்வடையை மட்டும் பார்ஸல் வாங்கிக்கிட்டேன். ராத்திரிக்கு ரசம் சாதத்துக்கு தொட்டுக்கலாம்.

தினம் மாலை 6 மணிக்குத்தான் இந்தக் கையேந்திபவன்கள் வேலையை ஆரம்பிக்கிறாங்க. கண் முன்னால் சுடச்சுடச் செஞ்சு தர்றதாலும் உணவகத்தில் போய்ச் சாப்பிடுவதைவிட விலை கொஞ்சம் குறைவா இருப்பதாலேயும் நிறையக் கூட்டம் வருது. ராத்திரி பத்து பதினொன்னு ஆகிருதாம் கடையைக் கட்ட.
நியூ தமிழ்நாடு கேடரர்ஸ்னு அச்சடிச்ச கார்டு தந்தார். வீடுகளில் விசேஷமுன்னா வந்து செஞ்சு தருவாங்களாம். பதிவர் மாநாடு நடத்தும்போது வடைக்கு இவர்கிட்டேதான் சொல்லணும். நல்ல ருசியாத்தான் இருந்துச்சு.
இந்தக் கடைவரிசைகளில்(செக்டர் 47 D) ஒரு கடையில் இட்டிலி மாவு தோசை மாவு தயாரிச்சு விக்கறாங்க. எட்டிப் பார்த்தேன். வாசலில் மின்சார ஆட்டுக்கல் கடமுடான்னு ஓசையோடு அரைக்குது. ஒரு மூடி போட்டு வச்சுருக்கலாம். ஊஹூம்..... அரைச்ச மாவுன்னு ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட்டுலே கரைச்சு வச்சுருக்காங்க. புளிச்சு ரெடியா இருக்காம். கிலோக் கணக்கில் விக்கிறாங்க. பார்க்கவே சகிக்கலை. இந்த ஊரில் ஈக்கள் தொல்லை அதிகமா இருக்குன்றது ஒரு குறிப்பு. கவனமா இருக்கணும்.
வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உருட்டிவச்சப் பரோட்டா மாவு

மக்கள் எல்லாத்துக்கும் பழக்கப்பட்டு இருக்காங்க. உடம்பும் ஒத்துழைக்குது. நல்லா இருக்கட்டும்.

சாகர் ரத்னா இன்னொரு தென்னிந்திய உணவகம் செக்டர் 17 இல் இருக்கு. தில்லியிலே 40 பேரோடு ஆரம்பிச்சதாம். இப்போ 220 ஆட்கள் இருந்து உணவருந்தும் வகையில் ஏராளமான கிளைகளோடு அங்கே சக்கைப்போடு போடுவது போதாதுன்னு இந்தியாவின் மற்ற பாகங்களிலும் புதுக்கிளைகள் வந்துக்கிட்டே இருக்காம். பலமுறை டெல்லி சுற்றுலாத்துறை விருதுகளை வாங்கிய பெருமையோடு இங்கே சண்டிகரிலும் ஒரு கிளை கொழிக்குது. வாசலில் ஏராளமா நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க. காத்திருந்து மக்கள் சாப்பிட்டுப் போறாங்க.
நாமும் ஒரு நாள் போனோம். எனெக்கென்னவோ சுமாரான சுவையாத்தான் தெரிஞ்சது. வடை ஒரு ப்ளேட்டுன்னா அதுலே நாலு வடைகள். பூரி ஒரு ப்ளேட்டுன்னா அஞ்சு பூரிகள் இப்படி! நம்ம கோபால் ஊத்தப்பம் பிரியர். வீட்டுலே மாவு இருக்கு. கொஞ்சம் வெங்காயம் நறுக்கிக் கொடுத்தா நான் செஞ்சுதரேன்னு சொன்னாக் கேட்டாத்தானே? ஆர்டர் செஞ்சு வந்தது சகிக்கமுடியாமல் இருக்குன்னார். ஆனால் அசல் சுவையை அறியாத வடக்கத்தி மக்களுக்கு சாகர் ரத்னா உண்மையிலேயே ஒரு அபூர்வ ரத்தினம்தான்னு அடுத்த மேசையில் சாம்பாரையும் சட்டினியையும் வழிச்சு வழிச்சு நக்கினவர்களைப் பார்த்தால் தெரியுது.

வடக்கர்களுக்கு நம்ம சாம்பார் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நியூஸியில் நம்ம தோழி ஒருத்தர், 'எனக்கு சாம்பார் வைக்கச் சொல்லிக்கொடு'ன்னு கேட்டு உசிரை வாங்குவாங்க. சரின்னு ஒரு நாள் பேப்பர் பென்சிலைக் கையில் கொடுத்து 'நான் சொல்லச்சொல்ல எழுதிக்கோ'ன்னேன். அளவு சொல்வதற்காக 'உனக்கு எவ்வளவு சாம்பார் வேணுமு'ன்னு கேட்டதுக்கு.........சின்னதா அங்கே மேசைமேல் இருந்த வாட்டியைக் காமிச்சாங்க. (இந்த வாட்டின்றது விளிம்பு இல்லாம மொட்டையா ஹோட்டேலில் தாலி மீல்ஸ்லே தட்டைச்சுத்திக் காய்கறி குழம்பு ரசத்துக்கு அடுக்கும் கிண்ணம்.)
பேப்பரையும் பென்சிலையும் பிடுங்கி வச்சுட்டு, 'சாம்பார் வைக்கும் நாளில் ஃபோன் பண்றென். வந்து வாங்கிக்கிட்டுப்போ'ன்னேன்.
சுந்தரம்ஸ் என்ற பெயரில் இன்னொரு தென்னிந்திய உணவகம் செக்டர் 26 இல் இருக்கு. இன்னும் உள்ளே போகலை. ஆனா இவுங்க ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட் ஒன்னு ஒரு ஷாப்பிங் மாலில் வச்சுருக்காங்க. அங்கே போய்ப் பார்த்தால் மெனு ஒன்னும் சரி இல்லை. வடை வேணுமுன்னு கேட்டதுக்கு அரைமணி நேரம் ஆகுமாம். யாருமே இல்லாமல் கடைக்காரர் போரடிச்சுக்கிட்டு இருக்கார்.. ரசத்தில் ஊறவச்ச வடை விலை கூடுதலாத் தெரிஞ்சது. . அதுக்கும் அரைமணி காத்திருப்பு:( அநியாயமா இருந்துச்சு. எல்லா ஃபுட் கோர்ட்டுகளிலும் சைனீஸ் நூடுல்ஸ்தான் இப்போதைக்கு ஹாட் ஸ்டஃப்!
எப்படியோ போங்கன்னு இருக்கவேண்டியதுதான் போல.


ஆமாம். நமக்குன்னு தென்னிந்தியக் கடைகளை வட இந்தியாவில் சிலர் வச்சுருக்கறதுபோல, நம்ம தென்னிந்தியாவில் வடநாட்டினருக்குன்னு தனிக்கடைகள் இந்த சாப்பாட்டுச் சாமான்களுக்காக இருக்கா?


காலநிலை: புழுக்கம் அதிகம். ஆனால் இன்னிக்கு 40 டிகிரிதானாம். பருவமழைக்குக் காத்திருக்கோம். ஜூன் கடைசியில் வரணும். சிலசமயம் பருவம் தப்புமாம். 2004 வது ஆண்டு ஜூலை 18க்கு மழை ஆரம்பிச்சதாம்.
சண்டிகர் டைம்ஸ் சொல்லுது

Monday, June 28, 2010

பீமா நகர், C/O பஞ்சபுரத்தில் ஒரு மாலை.

இப்படியாப்பட்ட இடத்தில் வந்து பனிரெண்டு வருசம் என்ன.... ஆயுசு முழுக்கவே இருக்கலாமுன்னுதான் எனக்குத் தோணுச்சு. சுட்டெரிக்கும் வெய்யில், இங்கே தன் வேலையைக் காமிக்க முடியாமத் திணறித்தான் போகும்.

சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து பனிரெண்டு வருசம் வனவாசம் செய்யப் புறப்பட்ட பாண்டவர்கள் வந்து தங்குன இடம். இங்கே இருக்கும் பீமாதேவி கோவிலே இதுக்கு ஒரு சாட்சி. அற்புதமான சிற்பங்கள் உள்ள கோவிலாம். யாரும் கவனிக்காம இடிபாடாகி கிடைச்சவரை சிற்பங்களை எடுத்துத் தனியா வச்சுருக்காங்களாம். கோவிலைப் பார்க்க முடியலை. தொல்பொருள்துறையின் 'கவனிப்பில்' இருக்கு. மாலை அஞ்சு மணிக்கு கேட் மூடிருவாங்களாம்:(

நாம் ஆடி அசைஞ்சு ஏழேகாலுக்குப் போனால்............ போகட்டும் இன்னொரு நாள் போய்ப் பார்க்கலாம். அந்தக் காலத்தில் இந்த இடத்துக்கு பஞ்சபுரா, பீமாநகர்ன்னு பெயர்கள் இருந்துருக்கு. இப்போ 'பிஞ்சோர்'ன்னு சொல்றாங்க.
சண்டிகரில் இருந்து ஷிம்லா செல்லும் பாதையில் சரியா 20 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கோட்டைச்சுவர் நம்ம கண்ணில் படாமப்போகாது. சட்னு பார்த்தால் மெல்லிசா ஏதோ சினிமாவுக்குச் செட் போட்டாப்புலெ தெரியுது. உள்ளே நுழைய ஆளுக்கு 20 ரூபாய் டிக்கெட்டு. முன்வாசலைக் கடந்து போனால் கண்ணுக்கு முன்னே விரியும் பசுமை! கொஞ்சம் தூரத்தில் வளைவு வளைவாய் மொகலாயக் கலைகளோடு இருக்கும் கட்டிடம். சட்னு பார்த்தால் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருக்கும் சின்னப் பள்ளிவாசலை நினைவு படுத்துது. இடைப்பட்ட வெளியில் நட்ட நடுவில் அதை நோக்கிப்போகும் நீரோடை.

கட்டிடத்தின் ரெண்டு பக்கமும் இருக்கும் வாசலில் வழியா எட்டிப்பார்த்தால் ஏராளமான அலங்கார வளைவுகளோடு இன்னொரு அழகான கட்டிடம் தொலைதூரத்தில். ஒரு ஏழெட்டுபடி இறங்கிப்போகணும். அது ரங்மஹலாம். இங்கேயும் அதே நீரோடை மேலிருந்து வழிஞ்சு அப்படியே இறங்கி ஓடுது. ரெண்டு பக்கமும் அழகான புல்வெளிகள், அசோகமரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மாந்தோப்புகள்.
ரங்மஹலில் ஒரு சுவரில் எதிர்வரிசை எண்களோடு உள்ட்டாவா ஒரு கடிகாரம். ஆண்ட்டி க்ளாக்காம்! உள்ளூர் (கால்கா) வாசி ஒருத்தரின் கண்டுபிடிப்பு.
ரங்மஹலில் நின்னு நேரா அந்தப் பக்கம் பார்த்தால் இன்னும் ஒரு இருபதடி ஆழத்துலே தோட்டம் நீண்டு போகுது. கூடவே 'நீர் வழி' யும். நீச்சல் குளம்போல ஒரு அமைப்பில் செயற்கை நீரூற்று அமைப்பு.
இறங்கி நடந்தால் பெரிய சதுரவடிவக் குளத்தின் நடுவிலே ஜல்மஹல். ஒளரங்கஸேப் உக்காந்து எதாவது பானம் குடிச்ச பார்! ஆனால் அவர்தான் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அற்புத மனிதராச்சே! ஓய்வு எடுத்தார்ன்னு வச்சுக்கலாமா? இப்போ இந்த ஜல்மஹலை கேஃபே பார் னு ஆக்கிவச்சுருக்காங்க. இந்த நிமிஷம் அங்கங்கே இடிச்சுப்போட்டு வச்சுருக்காங்க. கிட்டத்தட்ட பனிரெண்டுகோடிச் செலவில் பராமரிப்பு/ புனரமைப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு மொத்தத் தோட்டத்திலும். சவுகரியக்குறைவுக்குப் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்கு ஹரியான மாநில அரசாங்கம்.

டிக்கெட் வாங்கி, நாம் தோட்டத்துக்குள் நுழையும் இடத்தில் இருந்து இப்படியே ஏழு அடுக்குகளா இறங்கிப் போகுது மொத்தத் தோட்டமும். கூடவே நீரோடையும் இறங்கி இறங்கி வழிஞ்சு வழிஞ்சு ஒரு ஓட்டம். வழிநெடுக வண்ணவிளக்குக்களும், தண்ணீர் பீச்சியடிக்கும் அமைப்புமா அழகாத்தான் இருக்கு. கோட்டைச்சுவர்கள் அரண்கட்டி நிக்கறது பத்தாதுன்னு கொஞ்ச தூரத்தில் சுற்றிவர மூணு பக்கமும் மலைகளும் இன்னொரு அரணா நிக்குது.
இமயமலையின் பேரக்குழந்தைகளான ஷிவாலிக் மலைப்பகுதிகளை ஒட்டி
மொத்தம் 100 ஏக்கர் இடமாம். மொகலாய மன்னர் ஔரங்கஸேபின் வலதுகை போல இருந்த அமைச்சர் ஃபிடாய் கான் ( Fidai Khan) வடிவமைச்ச தோட்டம். பதினேழாம் நூற்றாண்டு. அப்போ இவர் முழு பஞ்சாப் மாநிலத்தின் கவர்னரா இருந்துக்கார். மொகலாயர்கள் காலத்துக்குப்பின் பராமரிப்பு இல்லாமல் பாழடைஞ்சு போயிருந்த இந்தத் தோட்டத்தை பாட்டியாலா மகாராஜா யதுவீந்தர் சிங் ஏற்றெடுத்து சீரமைப்பு செஞ்சு இப்ப புதுப்பொலிவோடு ஜொலிக்குது. உள்ளூர் வெளியூர் மக்களுக்கு இது ஒரு பொக்கிஷமுன்னு சொல்லணும்.
கோடைகாலத்தில் ராத்திரி பனிரெண்டு மணி வரையிலும் , குளிர்காலத்தில் ராத்திரி பத்து வரையிலுமா தோட்டம் திறந்து வைக்கிறாங்க. இருட்டானதும் வண்ணவிளக்குகள் அலங்காரம் பிரமாதமா இருக்குமுன்னு கேள்விப்பட்டதால் நாங்க கொஞ்சம் தாமதமாத்தான் போய்ச்சேர்ந்தோம். வெளியே தலைகாட்ட முடியாம பொளக்கும் வெயிலுக்குப் பயப்படாமக் கொஞ்சம் சீக்கிரமாப் போயிருந்தால் அங்கே இருக்கும் நர்ஸரி, மினி Zoo எல்லாம் போயிருக்கலாம். அப்படியே பத்தாம் நூற்றாண்டு பீமாதேவியையும் தரிச்சு இருக்கலாம்.
வண்டியை விட்டு இறங்குன விநாடி, நம்மை வரவேற்பதுபோல் ஒரு 'ஆந்தி' (கொடுங்காற்று) சுழற்றி அடிச்சது. ஐயோன்னு கத்த வாயெடுத்தால் வாய்க்குள்ளே மண்:( அஞ்சே நிமிசத்தில் எல்லாம் அடங்கிருச்சு. உள்ளே வேடிக்கை பார்த்துக்கிட்டே போனோம். அங்கிருக்கும் மாமரங்களில் இருந்து பழங்களைப் பறிச்சு விற்பனைக்கு வச்சுருக்காங்க. வெளியே விற்கும் அதே விலைதான். ஆனால் மரத்தில் இருந்து டைரக்ட்டா ஃப்ரெஷா கிடைக்குதே. கூடவே சப்போட்டாப் பழங்களும். மாமரங்களுக்கு இடையிடையே இதுகளும் இருக்கு. தராசு ஒன்னும் இல்லை. ச்சும்மாக் குத்துமதிப்பா எடுத்துப் பையில் போட்டுத் தர்றாங்க.

திடீர்னு ஒரு மழை பிடிச்சது. பெரிய பெரிய மழைத்துளிகள். ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்கு விடாம ஒரு மழை. தொப்பலா நனைஞ்சுக்கிட்டே ஓடிவந்து படியேறி ரங்மஹலுக்கு வந்து கூட்டத்தில் நீந்தி ஒடுங்கினோம். விளக்குப் போடும்வரை இருக்கலாமா இல்லை மழை விட்டுருக்கும்போதே கிளம்பலாமான்னு யோசனை. கேட்டில் வந்து கேட்டால் ஏழரைக்கு விளக்கு போடுவாங்களாம். (இங்கே அந்திநேரம் இருட்டவே ஏழேமுக்கால் எட்டு ஆகிருது) இன்னும் முக்காமணி நிக்க வேணாம். இன்னொருநாள் ஆகட்டுமேன்னு கிளம்பி வெளியே வந்தோம்.

நாலு பெட்டிகளொடு பொம்மை ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. முப்பது ரூபாய் டிக்கெட். பழையகாலத்து ரயில் எஞ்சின் ஒன்னு பார்வைக்கு வச்சுருக்காங்க. அலங்கார விரிப்பை முதுகில் தாங்கிய ஒட்டகங்கள் மக்களைச் சவாரிக்குக் கொண்டு போகுது. ஒரு குதிரையும் சேவைக்குத் தயாரா நிக்குது. பொம்மைகள், விளையாட்டுச்சாமான்கள், நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகளும் தீனிக்கடைகளும் ஏராளம். மக்கள் கொஞ்சமும் அசராமல் வாங்கித்தின்னுட்டுத் தரையெங்கும் குப்பைகளைக் கடாசிட்டுப் போறாங்க:( ஏகப்பட்ட இரைச்சலும், அதிசப்தமாப் பாடும் பாட்டுக்களுமா குழந்தைகளுக்கான ஒரு வேடிக்கை விநோதப்பூங்கா வேற. தனி டிக்கெட். சின்ன செயற்கைக்குளங்களில் நீர்விளையாட்டு.
இந்தியாவில் அமைதி என்றதுக்குப் பொருளே இல்லை. நாராசமா பேரோசையோடு ஒலிக்கும் பாடல்களையும் ரசிச்சுக்கிட்டே அவைகளை மீறிய தொனியில் பேசிக்கிட்டே இருக்காங்க. சத்தமே பார்ட் ஆஃப் த லைஃப். அநேகமா இந்தியாவை விட்டுக் கிளம்பும் சமயம் எனக்கு ரெண்டு காதும் அவுட்தான்.
ஏழேகால் ஆகி இருந்துச்சு. இன்னும் காமணி இருந்து லைட்டைப் பார்க்கலாமுன்னு தோணுச்சு. இன்னொரு நுழைவுச்சீட்டு வாங்கணுமா இல்லை இதுலேயே போகலாமான்னு தெரியலை. விசாரிக்கலாமுன்னு டிக்கெட்டைக் கையில் பிடிச்சுக்கிட்டு போனா நாம் வாயைத்திறக்கு முன்னேயே டிக்கெட்டைப் பிடுங்கி முந்தி கிழிச்ச அதே இடத்தில் இன்னும் கொஞ்சம் கிழிச்சுட்டு உள்ளே அனுப்பிட்டாங்க.
ஏழரைக்கு ஆரஞ்சு விளக்கு மட்டும் ஆரம்பிச்சது. இன்னும் வரும் வருமுன்னு காத்திருந்தோம். ஊஹூம்..... ஏகே 47 வச்சுருந்த ( கோபாலுக்கு எந்தத் துப்பாக்கியைப் பார்த்தாலும் ஏகே 47தான். பிஸ்டலைக்கூட இப்படித்தான் சொல்வாரோ என்னவோ!) காவலரிடம் விசாரிச்சால் நல்லா இருட்டுனபிறகுதான் ஒவ்வொன்னாப் போடுவாங்களாம். எட்டேகால் எட்டரை ஆனாலும் ஆகிரும். சட்னு இருட்டித் தொலைக்குதா என்ன? பார்த்தவரை போதுமுன்னு ஃபைனலாக் கிளம்பிட்டோம்.
தோட்டத்துக்குள்ளே அங்கங்கே இப்படி ஸ்பீக்க்ர்ஸ்களில் மெலிசான ஓசையில் ஹிந்திப்பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கு.


முகலாயர்கள் உண்டாக்கி வச்ச தோட்டங்களில் இதுதான் மூத்தது. இந்தப் பக்கம் வர நேரிட்டால் சொல்லுங்க. போய்ப் பார்க்கலாம்.
உள்ளேயும் ஒரு கோட்டை மதில் கொஞ்சம் பலமானதாக நிக்குது. திருட்டுமாங்காய் அடிக்கமுடியாது:-)



காலநிலை: இரவு ஆரம்பிச்ச (அநேகமா அதிகாலை நாலு இருக்கலாம்) மழை இன்னும் விடலை. வர்றதும் போறதுமா இருக்கு. இப்ப வீட்டுக்குள்ளே 33.4 டிகிரி. வெளியே.... ? 41 வரை போகுமுன்னு சண்டிகர் டைம்ஸ் சொல்லுது.

Friday, June 25, 2010

ஜெய் ஹனுமானுக்கு அரோஹரா.... (பூநூல் தொடர்ச்சி)

விழாவுக்கான அழைப்பிதழில் காலை ஏழரை முதல் கணபதி ஹோமம் ஆரம்பிச்சு வரிசையா கலசாபிஷேகம்,. ஸ்ரீ ராம நாம ஹோமம், ஹனுமனுக்கு மஹா அபிஷேகமுன்னு நாள் பூராவும் நிகழ்ச்சிகள். முக்கிய நிகழ்ச்சி ஹனுமனுக்கு பூநூல் சார்த்துவது பதினொன்னேமுக்காலுக்கு. இவர் வந்து ஏழுவருசம் முடிஞ்சுருச்சு. சபாஷ்! சரியான வயதுதான் பூநூல் போட்டுக்க:-)
'வெள்ளைக்காரர்போல சரியான நேரத்துக்கு' உள்ளே நுழைஞ்சோம். பிள்ளையார் பக்கம் காலையில் நடந்து முடிஞ்ச யாகத்தின் மிச்சங்கள் சாட்சி. இப்போ நம்ம கிருஷ்ணமாரியம்மன் பகுதியில் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு மேடையில் அஞ்சு கலசங்கள். நடுவில் இருக்கும் கலசத்தின் மாவிலைமேல் ஒய்யாரமா இருக்கும் வெள்ளிப்பூநூல்.
முன்னால் இருக்கும் யாககுண்டத்தில் கொழுந்துவிட்டெறியும் அக்னி. யாகத்தை நடத்திக்கொடுக்கன்னே தில்லியில் இருந்து வந்துருக்கும் பண்டிட். நல்ல இரும்பில் சதுரமான பெரிய யாககுண்டம். புகை சூழாமல் இருக்க அதுக்கு நேராய் கோவில் உள்கூரையில் எக்ஸாஸ்ட் ஃபேன். சூப்பர் ஐடியா.
மிகவும் வயதான ஒரு தம்பதியர் (94 + 84) யாகம் நடப்பதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். குண்டத்தைச்சுற்றி இன்னும் சிலர். நம்ம ப்ரஸாத்gகாருதான் இன்றைய விழாவுக்கான மெயின் உபயதாரர். நாங்கள் ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருந்தோம். முறைப்படி இதை முடிச்சதும் இன்றைய விழாவுக்கு ஸ்பான்ஸர் செய்தவர்கள் மகாகலசங்களை ஏந்தி வலம்வந்து ஹனுமன் சந்நிதிக்கு வந்து சேர்ந்தாங்க.

பால் தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் இப்படி வரிசையா அபிஷேகங்கள் எல்லாம் முறைப்படி நடந்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற முழக்கத்தோடு ஹனுமனுக்கு பூநூலும் சாத்தி, பதினாறு உபசாரங்களும் ஆச்சு. ஆரத்தி காமிச்சு நமக்கு தீர்த்தம் சடாரி எல்லாம் திவ்யமாக் கிடைச்சது.
ஃபிஜித்தீவில் நம்ம முருகன், மாரியம்மன் கோவில்களிலும், வீடுகளில் நடக்கும் பூஜைகளிலும் எதுவானாலும் சரி கோவிந்தா கோவிந்தா ன்னு முழக்கத்தோடுதான் பூஜையை முடிப்பாங்க. மாமனுக்கும் மருமகனுக்கும் அப்படி ஒரு இணக்கம். நாம்தான் அனாவசியமாக் குழப்பிக்கறோமோ?


பண்டுரீத்திகோலு, ராம நன்னு ப்ரோவரான்னு தியாகையர் பாடல்களைப் பாடுனாங்க உள்ளூர் இளைஞிகள் இருவர். முற்பகல் நிகழ்ச்சிகளின் கடைசிக்கு வந்துட்டோம். மாடிப்படியேறி மேலே போனோம். பந்தியில் உக்கார்ந்தோம். சக்கரைப்பொங்கல்(மாதிரி.) கோவிலில் செஞ்சதாம். பஞ்சாமிர்தம்(ஹனுமனுக்கு அபிஷேகம் செஞ்ச பிரசாதம்) நம்ம கார்த்திக் ரெஸ்டாரண்ட் குணாவின் அறுசுவையில் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கறி, ரசம் மோர். சாப்பிட்டு முடிச்சப்ப மணி ரெண்டரை.


பிரஸாத்காரு & குடும்பம்

வெள்ளைச்சட்டை: குணா. கார்த்திக் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்

தில்லிப்பண்டிட், அன்னதாதாவையும் அன்னமிட்ட கைகளையும் ஆசீர்வதிச்சார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நாம் சாம்பார் ரசமுன்னு சாப்பிடும் வரிசை முறைகளில் வாழ்க்கை இருக்குன்னார். எப்படி? காதைத்தீட்டினேன்.

முதலில் இலையில் சோறு வெள்ளைவெளேர்ன்னு பரிமாறுகிறாங்க. இது நாம் பூமியில் வந்து பிறக்கும் தருணம். புதுசாப்பிறந்த குழந்தை கள்ளம்கபடு சூதுவாதறியாமல் களங்கமில்லாமல் வெள்ளைமனசோடு இருக்கு.

அடுத்து சாம்பார். அதுலே காய்கறிகள் கலவை. காய்கறிகளைத் 'தான்' என்று சொல்வது வழக்கம். இப்படி வெள்ளை மனசுலே 'தான்' என்ற அகங்காரம் சேர்ந்தவுடன் மனசு குழம்பாட்டம் குழம்பிடுது மனுசனுக்கு.

அப்புறம் ரசம். இதுலேயும் பூண்டு தக்காளின்னு காய்கள் இருந்தாலும் சாம்பார்போல கெட்டியாக் குழம்பி இருக்காது. 'தானும்' அவ்வளவா இல்லை. கொஞ்சம் தெளிவான வகை. மனுசன் கல்வி கேள்விகளால் கொஞ்சம் தெளிவடைஞ்சு மாறிக்கிட்டு இருக்கான்.

கடைசியா மோர், தயிர். மறுபடியும் பரிசுத்தம் என்பதுபோல வெண்மை. வெள்ளையான சோறும் இதனுடன் கலக்கும்போது பளிச்சிடும் வெண்மை! தெளிவடைஞ்ச மனசோடு இருப்பவன் மறுபடி மனத்தூய்மை அடையறான்

ஆனால் ஒரேதா இப்படி இருந்துட்டா....வாழ்க்கை நடத்த முடியாது. எல்லாரும் ஏமாத்திட்டுப்போயிருவாங்க. கொஞ்சம் 'சுருக்'னு உஷாராவும் இருக்கவேண்டி இருக்கே. அந்த 'சுருக்'கைக் காமிக்கத்தான் மோர்/தயிர் சாதத்துக்கான கொஞ்சமே கொஞ்சமாய் துளி ஊறுகாய் நல்ல காரஞ்சாரமாய்.

ஆஹா..... இவர்கிட்டே நிறைய பேசணும்னு அவருக்குத் தோதான சமயம், எப்ப டெல்லி கிளம்பறார்ன்னு விசாரிச்சேன். பெயர் ஜெகன்னாதன். அட பூரி! ஆமாவாம். அவர் பெற்றோர் பூரி தரிசனம் செஞ்சுவந்தபிறகு பிறந்தவராம். தில்லி 'ஆர் கே புரம் குரு'ன்னு சொன்னாவே தில்லிவாழ் தமிழ்மக்களுக்குத் தெரியுமாம். மறுநாள் காலை 6 மணி வண்டிக்கு தில்லிக்குத் திரும்புறாராம்.

இவரும் காலை 5 முதல் கோவில் வேலைகளில் ஓடியாடிக்கிட்டே இருந்திருக்கார். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கட்டும். மாலை நிகழ்ச்சியின்போது சந்திக்கிறேன்னு சொல்லிட்டு வந்தோம்.

மாலை நிகழ்ச்சியாக அஞ்சு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஆஞ்சநேய சகஸ்ரநாம அர்ச்சனை. அஞ்சே முக்காலுக்கு சுந்தகாண்டம் முழுசும் பாடலாப் பாட பஜனை ஸ்பெஷலிஸ்ட் தம்பதி சுனில்குமார் த்யான் ஜி & மஞ்சித் த்யான் ஜி வர்றாங்க. மூணு மணி நேரம் அவுங்களுக்கு ஒதுக்கி இருந்துச்சு. அதுக்குப்பிறகு சமூஹ ஆரத்தி. எல்லோரும் வீட்டுலே இருந்தே விளக்கு தட்டு எண்ணெய் திரி எல்லாம் கொண்டாங்கன்னு ஒரு குறிப்பு விழா அழைப்பிதழில் பார்த்தேன். (வேற யாரும் பார்த்த மாதிரி தெரியலை!!)

கடைசி நிகழ்ச்சியா டின்னர்.

இந்தியாவில் இருக்கும்போது இந்தியனாகவே இருக்கணுமுன்னு சிலபல நிகழ்ச்சிகளால் ஒரு சங்கல்ப்பம் செஞ்சுக்க வேண்டியதாப் போயிருந்துச்சு. அதையொட்டி நாம் போகவும் நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் சரியாக இருக்குமுன்னு ஒரு 'கணக்கு'ப்போட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமப் புத்தகத்தோடு (பெரிய எழுத்து!)அஞ்சரை மணிக்குப்போய்ச் சேர்ந்தால்...... கணக்குத் தப்பாயிருச்சு:( கிடைச்சவரை லாபமுன்னு பாதியில் போய்க் கலந்தோம். சுமாரான கூட்டம் இருந்துச்சு. மஞ்சள் உடைகள் போட்ட ஒரு இளைஞர் குழுவைக் கவனிச்சேன். ஆராயணும். பக்கத்தில் இருக்கும் வேதபாடசாலை வித்யார்த்திகளாம்!!!
ஆறுமணிக்கு அடுத்த நிகழ்ச்சியாக சுந்தரகாண்டம் பாடல். ஜஸ்ட் பதினைஞ்சு நிமிஷம்தான் ரன்னிங் லேட். பரவாயில்லை. இந்த காலதாமததை சரிக்கட்டும்விதமா ஒரு வேகம் எடுத்தாங்க பாருங்க. ஆஹா.... சண்டிகர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ். புல்லட் ட்ரெயின் தோத்தது போங்க!!!! கடவுள் வணக்கப்பாடலைத் தவிர வேற ஒன்னுமே எங்களுக்குப் புரியலை. இதுலே கூடி இருந்த மக்கள்ஸ் ஆளாளுக்குக் கையில் புத்தகம் வேற! ஒரே ராகத்துலே ஏற்ற இறக்கம் இனிமைன்னு ஒன்னும் இல்லாம தலையில் ட்ரில் செஞ்சு நுழையறார் நம்ம ஹனுமன்! ஒரு ஒன்னரை நிமிச வீடியோ க்ளிப் எடுத்தேன். அதென்னவோ சரியா பதிவாகலை. (உங்களுக்கு அதிர்ஷ்டமில்லைன்னு வச்சுக்கணும். மாத்தி யோசிக்க வேண்டாம் மக்களே)
இதுலே பாருங்க அந்த ஹால் கொஞ்சம் சின்னதுதான். ஜன்னல்களும் கிடையாது. கோவிலின் ஒரு பக்க உள்ப் பிரகாரம்தான். பாடகர் கூடவே அவர் மனைவி பாடறாங்க. மைக் வச்சுருக்கு அவுங்களுக்கு. அதுவரை ஓக்கே. உள்ளூர் இளைஞர் குழு மாணவி ஒருத்தர் பாடகர்களுடன் சேர்ந்து பாடினார். (ட்ரெய்னி?)ஆனால் இவுங்களுக்கு ரெண்டு பக்கமும் கீ போர்டு & டோலக் கலைஞர்கள். அவுங்களுக்கும் ஒலி பெருக்கி வச்சதுதான் கொஞ்சம் கூடிப்போச்சோன்னு இருந்துச்சு. அவுங்க வாசிப்புதான் குரல்களை அப்படியே அமுக்கிப்பிடிச்சு வச்சுக்கிட்டு 'டுபுக்டுபுக்'ன்னு மேலே எழும்பி வந்துக்கிட்டேஏஏஏஏஏ இருந்தது.

நான் மட்டும் மெதுவா 'எஸ்' ஆகி ஹனுமனிடம் வந்தப்பக் கோவில் காரியதரிசியைக் கண்டேன். 'என்னங்க இது ? இப்படின்னு....லேசா ஆரம்பிச்சதும், 'இங்கே வடக்கத்திக்காரர்களுக்கு சுந்தரகாண்டம்ன்னா உயிர்'ன்னார். அதுக்கப்புறம் நான் ஏன் வாயைத் திறக்கப்போறேன் சொல்லுங்க:-))))

மூலவர் கார்த்திகேயனுக்கு தீபாராதனை செய்துக்கிட்டு இருந்தார் ஜகன்னாதன். பிரகாரத்தின் மறுபக்கம் போய் உக்கார்ந்து பேச ஆரம்பிச்சோம். வெரி இண்டரஸ்ண்டிங் பெர்ஸன். அம்பாள் உபாசகர். தோள்மேலே உக்கார்ந்து அம்பாள் இவரை கைடு செஞ்சுக்கிட்டு இருக்காளாம்!!! ஆமாம் அம்பாள் எப்படி இங்கே இப்படின்னு கேள்விகளால் நிறைஞ்சுருந்த என் முகத்தைப் பார்த்துட்டு, அவரே ஆரம்பிச்சார். இவருடைய குருநாதர் அம்பாள் உபாசகர். அவருடைய கனவில் அம்பாள் வந்து, இன்ன இடத்தில் இந்தமாதிரி ஒரு பையர் இருக்கார். அவரை உன் சிஷ்யப்பிள்ளையா ஏத்துக்கோன்னு சொல்ல, அவர் அம்பாள் கொடுத்த கைடன்ஸ்படி இவரைத்தேடிக் கண்டுபிடிச்சு சிஷ்யனாக ஆக்கி தீட்சையெல்லாம் கொடுத்து தனக்கு வாரிசாக்கினார். குருவின் காலத்துக்குப்பின் அம்பாளுக்கு அமர தோள் வேணுமோல்லியோ? ஜெகன்னாதனின் தீட்சைக்குப் பிறகு கிடைச்ச பெயர் சரணானந்தா. தேவியே சரணமுன்னு இருந்துட்டார். வயசு இப்போ அறுபத்தியேழாகிறது.

அவர் கொடுத்த கார்டுலே 'அஸ்ட்ராலஜர்'ன்னு போட்டுருக்கேன்னு பார்த்தப்ப, இவருக்குத் தில்லியில் சோதிடம் பார்ப்பது, வீடுகள் கோவில்களில் எல்லாம் சாஸ்திர சம்பிரதாயங்களை நடத்திக்கொடுக்கும் சாஸ்திரிகள்ன்னு பல முகங்கள் இருக்குன்னார். முகமுன்னதும் இன்னொன்னும் சொல்லலாம். ஒருவருடைய பிறந்த நாள் நட்சத்திரம் இப்படி ஒன்னுமே சொல்லாமல் இருந்தாலும், வந்த நபரின் முகம் பார்த்தே வரப்போகும் இன்னல்கள், அவற்றுக்குண்டான பரிகாரங்கள் எல்லாம் சொல்லிடுவாராம். இவர் எங்கே சொல்றார்? எல்லாம் அம்பாள் இவர்மூலம் சொல்ல வைப்பதுதான்! ஒன்னும் குறுக்கே பேசாமல் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டேன்.
ஆனால் ஒன்னு எதுவுமே நம்புனால்தான் தெய்வம். நம்பிக்கை என்பது அவரவர்களுக்கு வெவ்வேறு இல்லையா? நம்பிக்கைன்னதும் தெய்வநம்பிக்கையைப் பத்திப்பேச்சு வந்தது.

என்னதான் நம்முடைய திறமை கல்வி, பேங்குபேலன்ஸ்ன்னு ஏகப்பட்டது இருந்தாலும் கடவுளின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை தடுமாறாமல் தண்டவாளத்துலே போகும் ரயில் போல் சீராக ஓடும்ன்னார். ( இப்போ தண்டவாளத்துலே அங்கங்கே வச்சுக்கிட்டு இருக்கும் தடங்கல்கள் பற்றி நான் ஒன்னும் சொல்லலை)

கடவுளைக் கும்பிட நாம் மெனெக்கடவே வேணாம். இரு கைகளையும் சேர்த்து விரல்கள் அதன் ஜோடியைத் தொட்டால் போதும். ஆமா.... கைகூப்பி வணக்கம் சொல்றமே அதேதான். அந்த அஞ்சு விரல்களும் பஞ்ச பூதத்தைக் குறிக்குது. நிலம் நீர் நெருப்பு வளி வான் இப்படி. காலையில் குளிச்சு முடிஞ்சதும் அவரவர் மதத்துக்கேற்ற இறைவனை மனசுலே நினைச்சுக் கைகூப்பினாலே போதும்.

இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக் கும்பிடணுமுன்னா ஒரு பூவோ ஒரு இலையோ போதும். ஒரு துளி தண்ணீர். ஒரு ஊதுவத்தி அதுலேயே நெருப்பு, காற்று எல்லாம் வந்துருது. ஒரு பத்து பதினைஞ்சு ரூபாய்க்குக் கிடைக்கும் சந்தனக்கட்டைத் துண்டு ஒன்னு வாங்கி வச்சுக்குங்கோ. கற்பூரம் ஏத்தணுமுன்னா செலவு கூடவே கரும்புகை. அதனால் அது வேணாம். சந்தனக்கட்டையை ஒரு இழை இழைச்சால் வரும் துளிச்சந்தனம் நெற்றிக்கு. இந்தக் கட்டையே ஒரு பத்து வருசத்துக்கு வரும். சாமி கும்பிட செலவே இல்லைன்னார்.

இது எனக்கு ரொம்பவே பிடிச்சது. காட்சிக்கு மட்டுமல்ல கும்பிடவும் எளியவனா இருக்கணும் கடவுள். இதோ வர்றேன்னு மூலவரைப் பூஜிக்க வந்த குடும்பத்துக்கு தீபாராதனை காமிக்க எழுந்து போனார். அப்போ வந்த நம் வாசகநண்பர்களில் ஒருவர், என்னங்க அவர் வரலையான்னதும் நானும் எழுந்து போய் கோபாலைப் பார்த்தால்...... சோதிச்சது போதுமுன்னு தோணிருச்சு. அவர் கண்ணில் ஒரு கெஞ்சல். எனக்கே ஐயோன்னு போயிருச்சு:(

மூன்று மணி நேர பஜனை நிகழ்ச்சியின் படி இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருக்கு. இன்னொரு சமயம் ஆகட்டுமுன்னு எழுந்துபோய் முருகனிடம் சொல்லிட்டுக் கிளம்பிட்டோம்.

சுந்தரகாண்டம் புத்தகத்தை ஒவ்வொரு பகுதியாப் படிச்சு அதுக்கு விளக்கவுரை சொல்லிக் கேக்கறதுதான் எங்களுக்கு இனியதா இருக்கு. இப்படிப் பாடலாக் கேட்டது இதுதான் முதல்முறை. அதான் மனசுலே ஒட்டவே இல்லை. பேசாம நானே புத்தகத்தைக் கொண்டுவந்து விளக்கமாப் படிச்சுருக்கலாமோ?
'வந்திருந்த கூட்டத்தில் நம்ம தென்னிந்தியர்கள் குறிப்பாத் தமிழ்க்காரர்கள் எத்தனைபேர்ன்னு விரல்விட்டு எண்ணிடலாம். இதுலே எது இங்கத்து வழக்கமோ அப்படிச்செய்யறதுதானே நல்லது. கோவிலுக்கும் ஆட்கள் வரணுமில்லையா? நாமோ கொஞ்சநாள் இங்கிருக்கும் விருந்தாளிகள். ஊரோடு ஒத்து வாழ்ன்னு இருக்கணும். மனசை அடக்கிக்கிட்டு பேசாம வா' ன்னு சொன்ன கோபாலின் பக்கம் நியாயம் இருக்குல்லே?

முருகா முருகா.

Thursday, June 24, 2010

ஏழாம்படைவீட்டில் ஏழு வயசு பாலகனுக்கு................பூ நூல் போட்டாச்சு

பாரத பூமியில், முருகனின் ஏழாம்படை வீடாக இருக்குதாம், 'சண்டிகர் முருகன் கோவில்'. முந்தின ஆறைத் தமிழ்நாட்டில் பார்க்கலாம். ஆறிடம் ஓட நேரமில்லைன்னா சிங்காரச்சென்னை, பெஸண்ட் நகரில் ஒரு அறுபடைவீடு கோவில் இருக்கு.

இந்திய அரசின் விமானப்படையினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சின்னக் கோவிலாக ஆரம்பிச்சதாம். அப்போ ஒரு வேல் மட்டும் மூலவராக வச்சு சின்னதா ஒரு சந்நிதி. சுற்றிவரத் தகரத்தால் மேல் கூரையிட்ட வெராந்தா. படிப்படியாக வளர்ந்த விதம் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம் (இன்னும் முழுவிவரமும் கிடைக்கலை).
ஸ்ரீ லக்ஷ்மிநாராயண் மந்திர்

யாகமண்டபம் நல்லா இருக்குல்லே?


இப்போது இருக்கும் கோவில் கொஞ்சம் பெருசாகத்தான் இருக்கு. நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் பாதி அளவு இருக்கும். ஸ்ரீ கார்த்திகேய ஸ்வாமி கோவில். செக்டர் 31D. Airforce Temple Complex. இந்த வளாகத்துக்குள்ளே முருகனைக் கடந்து போனால்.....பஜனை, சத்சங்கம் நடத்திக்க ஒரு சின்ன ஹாலும், அதை அடுத்து ஒரு லக்ஷ்மிநாராயணன் கோவிலும் (வட இந்திய முறைப்படிப் பளிங்குச்சிலைகள்) யாகம் செய்வதற்கான மண்டபம் ஒன்னும் இருக்கு. தமிழர்கள் கோரிக்கைகளை ஏற்று சின்னதா இடம் கொடுத்தாங்களாம். நமக்கு அப்போ.

தெருவில் இருந்து வளாகத்துக்குள்ளே நுழைஞ்சால் வாசலில் 'நான்'! நமக்கு இடப்புறம் அழகான சின்ன விமானத்தோடு கூடிய கோவில். கண்ணுக்கு முன்னால் கருவறை. படிகூட ஏறாமல் வாசலில் இருந்தேகூட வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் கார்த்திகேயனை தரிசிக்கலாம். நல்ல நீளமான படிகள். அர்த்தமண்டபத்தின் படியேறுமுன் முகப்பின் இரு பக்கமும் உசரத்தில் பரிச்சயமான முகங்கள். ஓருத்தர் நம்ம அவ்வை. அப்ப இன்னொருத்தர்? ஜடாமுடிக்கொண்டையைப் பார்த்து அவர் திருவள்ளுவர்ன்னு சாதிச்சேன். ஆனால்.... அவர் அருணகிரிநாதரா இருந்தார்!!!!!
உள்ளே போனால் நமக்கிடப்புறம் செல்லம்போல நிற்கும் சின்ன ஆஞ்சநேயர். இவரை மார்போடு அணைச்சுப்பிடிச்சுத் தூக்கி வந்தாராம் கோவில் காரியதரிசியாகப் பொறுப்பேத்து நடத்தும் நண்பர் ராஜசேகர்.
இங்கே வீடுமாற்றி வந்த பிறகு வந்த முதல் சனிக்கிழமை. பெருமாள் கோவிலைத் தேடிப்பிடிச்சுப் போனோம். அங்கே சந்திச்ச ஒரு தமிழ்ஜோடி சொன்ன தகவல்கள்தான் சண்டிகர் முருகனும் தமிழ்ச்சங்கமும். அடுத்துவந்த ஒரு ஞாயிறில் முருகனைத்தேடிக் கண்டடைந்தோம். கோவிலுக்குக் கிளம்புமுன்னே தமிழ்ச்சங்க விவரம் கிடைக்குமான்னு நமக்குக் கிடைச்ச தகவலைப் பயன்படுத்தினால்..... குறிப்பிட்ட நபர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் அது முடியுமுன்னும் சேதி.
கருவறை விமானம்

முருகனை வலம்வந்து வணங்கியபின், கோவிலில் விவரம் கேட்டால் இதே எண்ணைத் தந்தாங்க. சண்டிகர் முழுசும் வாழ்க்கை எண்களால் மட்டுமேன்றதால் மறுபடி அவரைக் கூப்பிட்டோம். எங்கே இருக்கீங்கன்னார். பக்கத்துலே இன்னொரு செக்டர் எண்ணுக்கு வழி சொல்லி அங்கே வந்துருங்கன்னார். அங்கே அவர் சொன்ன இடத்துக்குப் போனால் அவர் குடும்பமே காத்துருக்கு. தற்சமயம் இவர்தான் இங்கே எல்லாமே!!!! நிறையப் பேசினோம். மேட்டர் ஏராளமாக் கிடைச்சது:-)
கோவில் தூண்கள் ஒவ்வொன்னும் லட்சம் பெறும் ! மொத்தம் 33 லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதப்பட்டு ஒவ்வொன்னுக்கும் அடியில் ஒரு லட்சம் வச்சு பலமான அஸ்திவாரம் போட்டுருக்காங்க.


நம்ம கோபால் வேற ச்சும்மா இருக்காம, 'இவுங்க எழுதுவாங்க'ன்னார். 'கோவில் விஸிட் ஸ்பெஷலிஸ்ட்'னு மகுடம் வேற ( காசா பணமா.... ஆத்துலே போறதை அள்ளிக்கோ....)

ஆஹா.... உங்களை அந்த முருகனே இங்கே வரவழைச்சுட்டான். நீங்க நம்ம கோவில் தலபுராணம் எழுதித்தாங்கன்னார். திருதிருன்னு முழிச்சதைப்பார்த்து இங்கே ஏராளமாத் தமிழ்க்காரர்கள் இருக்காங்க. ஒரு பத்தாயிரம் குடும்பமாவது இருக்கும். அவுங்க இங்கே வந்தது, வாழ்க்கை முறைகள் எல்லாம் எழுதித்தாங்கன்னார். வரலாறுன்னதும் ஒரு பிடிப்பு வந்துச்சு. சரின்னுட்டேன். இப்ப அதிகாரப் பூர்வமா ஒவ்வொன்னையும் 'ஆராய்ஞ்சு எழுதும் பொறுப்பு கிடைச்சுருச்சு பாருங்களேன்.
'என்ன சாப்பிடறீங்க? தோசை, வடை'ன்னு அடுக்கிக்கிட்டே போறார். நாங்க உக்காந்து பேசுன இடம் கார்த்திக் ரெஸ்டாரண்ட்:-) ஓனர் 'குணா' வை அறிமுகப்படுத்தி வச்சார். அப்படியே அங்கே வந்த இன்னும் சில தமிழர்களையும். ரெண்டு இளைஞர்கள் வேற வந்தாங்க. 'மென்பொருள்' மக்கள், கோவிலுக்கு ஒரு வெப் சைட் தயாரிச்சுக்கிட்டு இருக்காங்க. பலே பேஷ் பேஷ். இங்கே பாருங்களேன், 'கார்த்திகேயனின் பக்கம்'.
(கடவுளர்களின் படங்கள் இங்கே கோவிலின் வெப்சைட்டில் இருக்கு )

முன்கதை போதும், வாங்க கோவிலுக்குள்ளே போகலாம்.
மூணே படி ஏறி உள்ளே நின்னால் நமக்கு இடப்பக்கம் செல்லம் போல ஒரு நேயுடு இருக்கார்னு சொன்னேனில்லை? ரெண்டரை அடி உசரம் இருப்பார். தலையில் கிரீடம் சார்த்தி அவரை மூணடி ஆக்கலாம்:-)))
அஞ்சடிக்கு அஞ்சடின்னு சின்னதா ஒரு சந்நிதி. அவருக்கு நேரெதிரா ராமரோன்னு கண்ணை விரிச்சுப் பார்த்தால் அங்கே நவகிரகங்கள்.

நேயுடுவின் சந்நிதியின் மேல் முகப்பில் நம்ம ராமர் & கம்பேனியாக நால்வர். (கோவிலின் சுற்றுச்சுவரில் மதிலின் மேல் நேயுடு சந்நிதிப்பக்கம் யோக ஆஞ்சநேயர் சுதைச்சிற்பம் ரெண்டு.

கருவறையில், கையில் செவ்வேல் பிடித்த சேவல்கொடியோனின் இரு பக்கங்களிலும் வள்ளியும் தேவசேனா/தெய்வானை. நல்ல அழகான முகவிலாசம். அர்த்தமண்டபத்தில் உற்சவர் ஜொலிக்கிறார்.
கருவறைக்கு இருபுறமும் அழகான முகப்போடு ரெண்டு சந்நிதிகள். முருகனுக்கு வலப்பக்கம் பிள்ளையார். அவர் முன் பார்க்கிங் செஞ்ச வாகனம். அதையொட்டி சின்னதா ஒரு தொட்டிக்குள் பாறாங்கல் ஒன்னு சிதறு தேங்காய் உடைக்க. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்டைல் இது. முதல்முதலா 'சிங்கை சீனு'வின் கோவிலில் பிள்ளையார் சந்நிதிக்குமுன் பார்த்தது. என்ன ஒரு அட்டகாசமான ஐடியா. தேங்காய் ஓடுகள் சிதறி வளாகம் முழுசும் பரவாமல்......... அதன் பிறகு வேறொரு பயணத்தில் பிள்ளையார்ப்பட்டி, செட்டிநாடுப் பகுதிகளில் கவனித்திருந்தேன். இங்கே இந்த ஐடியாவைக் கொண்டு வந்தவர் கட்டாயம் செட்டிநாட்டுப் பகுதிக்காரராகத்தான் இருக்கணும். அதே அதே!! நண்பர் ராஜசேகர் காரைக்குடிக்காரர்.
தும்பிக்கையானை நம்பிக்கையோடு வலம்வந்து அடுத்தபக்கம் போனால் இதே முறையில் அழகான சந்நிதிக்குள் கிருஷ்ண மாரியம்மா. சிங்கத்தை வெளியே நிறுத்திவச்சுட்டு உள்ளே இருக்காங்க. அழகான சின்ன பலிபீடம் வேற! கருவறையின் வெளிப்புறச்சுவர்களில் இடது பக்கம் ரெண்டு தனித்தனி மாடங்களில் நர்த்தனகணபதி ( ஆனால் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்தான்.) தக்ஷிணாமூர்த்தி ஆகியோர், முருகனுக்கு நேர் பின்னால் மாமன் மகாவிஷ்ணு, வலதுபுறச் சுவர்களில் ப்ரம்மா, துர்கா. இந்தப் பிரகாரத்தில் கருவறைச்சுவரை ஒட்டியபடி சண்டிகேஸ்வரர் நம் 'ஆஜர்' பட்டியலைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார்.

கோவிலின் பிரகாரத்தில் வருசந்தோறும் இங்கே கொண்டாடப்படும் பண்டிகைகள் விழாக்களின் விவரங்கள், அந்தந்த கடவுளர்களுக்கான ஸ்லோகங்கள் எல்லாம் பளிச் ன்னு எழுதி வச்சுருக்காங்க. ரெண்டு வார்த்தை சொல்லி சாமி கும்பிட எளிதா அமைச்சது எவ்வளோ நல்லது பாருங்களேன்.


ஒரு வருசத்தில் கொண்டாடும் நிகழ்ச்சி விவரங்கள்

நவகிரக மண்டபத்தையொட்டி கோவிலின் வலது ஓரமா சின்னதா ஒரு மேடை. கலைநிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் எல்லாம் நடத்திக்கலாம். மேடைக்கு முன் சுமார் நூறு பேர்கள் வரை உட்காரலாம் என்ற அளவில் ஹாலில் இடம் இருக்கு. ஹாலின் கடைசியில் மாடிக்குப் போகும் வழி. அங்கேதான் கோவிலுக்கான டைனிங் ஹால். அன்னதானக் கூடம். அம்பதுபேர்கள் வரை தாராளமாக அமர்ந்து சாப்பிடலாம்.

இந்தக் கூடத்தைத் தன்னுடைய தகப்பனாரின் 59 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக முழுக்க முழுக்கத் தன் செலவில் கட்டிக்கொடுத்துருக்கார் நண்பர் ராஜசேகர்.
பிரகாஷ் கோவில் குருக்கள்.


கோவிலில் விதிப்படி பூஜைகளை நடத்த ஒரு குருக்கள் இருக்கார். இளைஞர். வயசு வெறும் இருபத்தியஞ்சுதான் வந்து ஒன்பது மாசமாச்சாம். சிங்காரச்சென்னை வாசி. மேற்கு மாம்பலத்துக்காரர். பாலக்காட்டில் குருகுலவாசத்தில் ஒன்பது ஆண்டுகள் வேதம் படிச்சுருக்கார். அதுக்குப்பிறகு தென்தமிழ்நாட்டில் சில கோவில்களில் வேலை. பழகப்பழக அப்படியே கடவுளர்களுக்குச் செய்யும் சாற்றுமுறை விதிகள் எல்லாம் கைவர ஆரம்பிச்சுருக்கு. சரியாச் சொன்னால் இவர் சாஸ்திரங்கள் எல்லாம் வைதீக முறைப்படி செஞ்சு வைக்கும் பண்டிட்தானாம். கூடப் படித்த நண்பர் தில்லியில் கோவில் வேலை கிடைத்து வந்தபிறகு தன் தோழனுக்கும் பரிந்துரைச்சதில் இங்கே வேலை ஆகி இருக்கு.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை:-)

டிஸ்கி: இது ஒரு 'ஆன்மீகப் பதிவு' கண்டதைத்தான் எழுதி இருக்கேன். அப்புறம் கண்டதை ஏன் எழுதினேன்னு கோச்சுக்கக்கூடாது ப்ளீஸ்.

காலநிலை: இந்த வாரம் பூராவும் 45+ தானாம்:( ஆனால் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மூனு மணிக்கு பெரிய பெரிய ஐஸ்கட்டிகளாக் கல்மழை பெய்ஞ்சுச்சு. நம்ம வீட்டு கேட்டுக்கதவுக்கிட்டே பொருத்தி இருந்த கண்ணாடி உருண்டைகள் மண்டையைப் போடவேண்டியதாப் போச்சு. அடிஅடின்னு ஒரு அரைமணி நேரம்தான்!