Friday, March 29, 2013

ரெங்கா... எனக்கே மூச்சு முட்டுதே.... உனக்கு எப்படி?


மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் எழுந்து நின்னு விஸ்வரூபம் காண்பிக்கும் ராஜகோபுரத்தைக் கண்ணால் கண்டதும்  மனசில் பரவசம்  உண்டானெதென்னமோ நிஜம்.  எத்தனை முறை பார்த்தாலும் இதே உணர்வுதான்!

காளிமுத்துவுக்குச் சொல்லணும் னு நினைச்சுக்கிட்டே ரெங்கவிலாச மண்டபத்துக்குள் நுழைஞ்சதும்  கண்ணில் பட்டார் அவர்!   கேமெராச் சீட்டு ஒன்னு வாங்கிக்கிட்டோம்.  முதல் ப்ரகாரத்துலே இருந்து ஆரம்பிக்கலாமென்பது போல கார்த்திகை கோபுரவாசலுக்குள்ளே நுழைஞ்சவரைப் பின் தொடர்ந்தோம்.  கருடமண்டபத்தையும்   தேவராஜன் குறடு ரெண்டு  பக்கமும்  இருக்கும் ஆழ்வார்கள் சந்நிதிகளை கிளிக்கிக்கிட்டே நானும்  போறேன்.  பொதுவாக எல்லா கைடுகளும் செய்வதைப்போலவே காளிமுத்துவும்  நம்ம கோபாலிடம்  கோவில்கதைகளைச் சொல்லிக்கிட்டே போறார். நம்மவரும் அந்தக்காதில் வாங்கி அதே காதில் வெளியேற்றிட்டு அவர் சொல்வதைக் கேட்டு(!!!) தலையை மட்டும்  ஆட்டிக்கிட்டே போறார். படம் எடுக்க ஒரு ரெண்டு விநாடி பின் தங்க வேண்டியிருக்கே!

(புதிய வாசகர்களுக்கு: இடப்பக்கம், நம்ம கோபால்!)

ஒவ்வொரு வாசலாக் கடந்து முன்நோக்கிப்போகும்போது  மேளச்சத்தம் கேட்டதும் காலை வீசிப்போட்டு உள்ளே ஓடினோம். புறப்பாடு!  ராஜமகேந்திரன் திருவீதியில் (கருவறையைச் சுற்றியுள்ள  பிரகாரம்) நல்ல கூட்டம். இடது புறம் இருக்கும் திண்ணை அமைப்புலே ஏறிப்போனவரைத் தொடர்ந்தோம்.  மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர்  குடும்பத்துடன் இருக்கும் கண்ணாடிப்பெட்டி ஓரமா  இருக்கும் கம்பியழி கிட்டே கிடைச்ச  இடத்தில்  நிக்கறோம்.  இங்கேயும் ஜனநெருக்கடிதான்.

கீழே ஒரு  ஆறேழடி தாழ்வா இருக்குமிடத்தில் மனிதத் தலைகள். எதிரில் சந்தனு மண்டபம் வழியா  நம்பெருமாள் தங்கக்குடை பிடிச்சு ஊர்வலம் வரத் தயாரா நிக்கறார். கெட்டிமேளம் கொட்டியதும் விநோதமான தலைப்பாகை அணிஞ்ச   ஒருத்தர்  (அரையர்?) படியேறிப்போய்  பெருமாள் முன் நிற்க, ஏதோ சம்ப்ரதாயம்  நடக்க, படியை  மறிச்சிருந்த  தண்டம்  விலகுனதும் மேளச்சத்தம் ஜோராய் ஒலிக்க, ரங்கா ரங்கான்னு மக்கள் கூட்டம் அழைக்க   அழகா இறங்கி வர்றார் அழகிய மணவாளர்,எம்பெருமாள் . எல்லாம் நம்ம கண்ணுக்கு முன்னால். நல்ல சமயத்துக்கு வந்து சேர்ந்துட்டோமுன்னு மனசு விம்முது!



தினம் தினம் புறப்பாடுதான்.  இவனுக்கு(ம்) காலில்சக்கரம்.  ஊர்சுத்தக் கிளம்பக் காரணமே வேணாம். அதிலும் இன்னிக்கு ஏகாதசி, வாமன ஜயந்தி(யாம்)  கேக்கணுமா? தாயாருக்குப் 'படி தாண்டாப் பத்தினி'ன்னு பெருமையா ஒரு பட்டத்தைக் கொடுத்துட்டு   ஹாய்யா இவன் மட்டும் சுத்தலாம்.  பெண்ணுரிமைன்னு போர்க்கொடி உசத்திச் சண்டைபோட அவளுக்கும் தெரியலை பாருங்க:(


புறப்பாடுகளில் ஒன்னு:-) 

அடுத்த வீடியோ.    இதுவும் கோவில் தேவஸ்தானமே அவுங்க வெப்ஸைட்லே போட்டது. வைகுண்ட ஏகாதசி சமயம்நடந்த புறப்பாடு.  நாம் பார்த்தது இது இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கட்டுமேன்னு இங்கே சேர்த்துருக்கேன்.ஏறத்தாழ இப்படித்தான் இருந்துச்சு. இந்தக் கோவில் வெப்ஸைட்லே ஏராளமான புறப்பாடுகள் கொட்டிக்கிடக்கு. ஆர்வம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம்.   

அழைக்கின்றான் அரங்கன் (விஜய் டிவி)  தொடர் முந்திபார்த்துக்கிட்டு இருக்கும்போது  ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்வார்  குறைஞ்சதுஒரு வருசம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடுகள் உற்சவங்கள் எல்லாம் பார்க்கணும்னு.  நமக்கும் ஆசைதான்.  அதிர்ஷ்டம் வேணாமா?  வேலையில் இருந்து  ஓய்வு கிடைச்சதும்  போய் ஒரு வருசம் இருக்கலாமுன்னு எப்ப வும் நச்சரிப்பேன்.  காலப்போக்கில்   அது ஆறு மாசம், மூணு மாசமுன்னு  போய்  குறைஞ்சது ஒரு  மாசம் பூராவும் இருக்கணுமுன்னு இறங்கி இருக்கு.  16 மணி நேரப்  பவர்கட்டை நீ தாக்குப் பிடிக்கமாட்டேன்னுவார். உண்மைதான்.  சரி ஒரு பத்து நாள் போய் இருக்கலாமுன்னு  இப்போதைய நினைப்பு.  திருச்சியில் தங்கலாம். ஸ்ரீ ரங்கத்துலே நல்ல ஹொட்டேல் இல்லைன்னு சாதிக்கிறார்.

எனக்கு திருச்சி வேணாம்.  கோவிலாண்டையே தங்கணும். நினைச்சா ஓடிப்போய் கோவிலுக்குள் நிக்கணும். அதிகாலை இருள்பிரியா நேரத்தில்  கோபுரங்களை தரிசிக்கணும். சூரியனுடைய கதிர்கள்  மெள்ள மெள்ள  கோபுரத்தில் படர்வதைக் கண்டு பரவசமாகணும்.  தங்க விமானம் புலர்காலைப்பொழுதில் எப்படி இருக்குன்னு பார்க்கணும் இப்படி ஏராளமான ஆசைகள். நல்ல தங்குமிடங்கள் இருந்தால் தெரிஞ்சவுங்க  சொன்னால்  கோடி புண்ணியம்.

நம்பெருமாள் கிளம்பிப்போவதை  வடமேற்கில் இருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் பார்க்கும் வசதி உண்டு. பெருமாள் பின்னாடி முக்கால்வாசிக்கூட்டம் போனதும்  மூலவரைப் போய் சேவிக்கலாமான்னு  ஒரு ஆசை வந்தது. அங்கே  ஏற்கெனவே ஒரு பெரிய வரிசை தரிசனத்துக்குக் காத்திருக்கு.   தரிசனம் செய்யணுமான்னு கேட்டார் கே  எம்(நம்ம காளிமுத்துதான். இனிமேப்பட்டு கே எம். ஓக்கேவா?) வேணாம், நேத்து  ஆச்சுன்னோம்.

நாம் நிற்கும் திண்ணையில்  ஒரு பக்கம் பூட்டிய கதவுகளா இருக்கு பாருங்க.கருவூலங்கள். பெருமாளின் நகை நட்டு,  கவசங்கள்,  தங்க வெள்ளி பண்டபாத்திரங்கள் இப்படி  உள்ளே வச்சுருக்காங்க. என்னைக்கு,  எந்த நேரத்துக்கு  என்ன அலங்காரம்., அதுக்குத் தேவையான  நகைகள் என்னென்னன்னு  வளக்கமான அட்டவணை இருக்காம்.  அததுக்கு அதது  எப்போ வெளியே போகுது, எப்பத் திரும்பிக்கொண்டு வந்து ஒப்படைக்கிறாங்கன்னு எல்லாம் கணக்காக் கவனிக்க தனி அதிகாரி இருக்கார்.  முத்திரை போட்டு அனுப்பி முத்திரை வச்சு வாங்கணுமாம்.

கொஞ்சம் தள்ளி வடக்குப்பக்கம் இருக்கும் அறைகள்  பெருமாளின்  ப்ரைவேட் ரூம்ஸ். திருமஞ்சனத்துக்கு   வெந்நீர் வைக்க ( முந்தி நம்ம  வீடுகளில் பாய்லர் வச்ச வெந்நீருள்  ஞாபகம் வருதே! ), தோய்ச்ச  துணி உலர்த்த , சந்தனம் அரைக்க, வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு புனுகு சார்த்தவும், கஸ்தூரி திருமண்காப்பு தயாரிப்புகளுக்கும்  அரைச்ச சந்தனத்துக்கு  வாசனை திரவியம்  சேர்க்கவுமுன்னு  தனியா சுக்ரவார அறைன்ற பெயரில் ஒன்னு. பெரும் ஆளுக்கு  எததனையெல்லாமும் வேண்டி இருக்கு, பாருங்க.


கோவில் கணக்குகளில்  சோழ மன்னர்   முதலாம் பராந்தகன்  (கி பி 907 )பெருமாளுக்கு ஒரு வெள்ளிக்குத்துவிளக்கு  காணிக்கையாத் தந்துருக்கார்னு கோவில் கல்வெட்டு சொல்லுது. அந்த விளக்கு நிலயான முறையில் ஏத்தி வைக்கத் தேவையான  கற்பூரம், பஞ்சுத்திரி, எண்ணெய் எல்லாம் ஏற்பாடாக்க  51 பொற்காசுகளும்  வழங்கி இருக்கார்.  ரொம்பச் சரி.  நியாயமானவர்.  அந்தக்காலத்தில் யாரையாவது  அழிக்கணுமுன்னா  அரசர்  யானையை மட்டும் தானம் பண்ணிடுவாராம்.   ராஜா கொடுத்த யானையை காப்பாத்துவதுதானே முறை?  அதுலேயே எல்லா செல்வங்களும் கரைஞ்சு  நடுத்தெருவுக்கு வந்துருவானாம்  தானம் வாங்கியவன். இது எங்க பாட்டி சொல்லிய ஏராளமான  கதைகளில் ஒன்னு:-)

ஏழாம் எட்வர்ட் மன்னர் ரங்கனுக்கு ஒரு தங்கப் பாத்திரம்  1875  இல் கொடுத்திருக்கார். இதுக்கு மெயிண்டனன்ஸ் ஒன்னும் தேவை இல்லை:-))))

யானைன்னதும் இன்னொரு கதை நினைவுக்கு வருது.


பாண்டியர்களும் சோழர்களும் விஜயநகரப்பேரரசின் மன்னர்களும் நாயக்கர் கால அரசர்களும்  கோவிலுக்குக் கொடுத்த நன்கொடைகளும், செய்த திருப்பணிகளும் கணக்கில் அடங்காதவை!  செல்வச்செழிப்பு  கண்டு பொறுக்கமாட்டாமல்தான் தில்லி  அரசர்கள் கொள்ளையடிக்க வந்துருக்காங்க.

அதிலும் பாண்டிய மன்னர் முதலாம் சடைவர்ம சுந்தரபாண்டியன் (கிபி 1251-1268) கோவிலையே பொன்மயமாக்கினார்னு கல்வெட்டுகள் சொல்லுது. திருவரங்கன் சந்நிதி, விஷ்வக்ஸேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளின்னு கட்டிக்கொடுத்ததுமில்லாம, கருட வாகனம், பிரபை, பீடம், மகர தோரணம்,ஆதிசேஷன் திருவுருவம் இப்படி  எல்லாத்தையும் பொன்னால் செஞ்சு கொடுத்தாராம்.

முத்துவிதானம், முத்தங்கி, மரகத மாலை, பட்டாடை, பொற்றேர் , கிரீடம் என்றெல்லாம்  கணக்கு வழக்கே இல்லாமல் வாரிக்கொடுத்துருக்கார்!  முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம் பெருமாள் இருக்காரே.... அதுகூட  இவர்தான் கொடுத்துருப்பார்,போல!

மேலும் தன்னுடைய யானையுடன்  ஒரு படகில் ஏறி, அதற்குப் பக்கத்தில் இன்னொரு படகை நிறுத்தி ரெண்டும் சரிசமமான நீர்மட்டத்துக்கு வரும்வரை பொன்னாலும் மணிகளாலும் நிரப்பி  எடைக்கு எடை கோவில்கருவூலத்தில் சேர்த்தாராம்.  தலவரலாறு நூல் இவரைப் போற்றிப் புகழ்கிறது.  ஒடிஸா நாட்டு மன்னரை போரில் வெற்றி கொண்டு அங்கே இருந்து கொண்டு வந்தவையாம் இத்தனை பொன்னும்! சிதம்பரம்  கோவில் கனகசபைக்கு பொன்னோடு வேய்ந்து பொன்வேய்ந்த பாண்டியன் என்ற பெயர் அடைந்தவரும் இவரே!


திருவரங்கம் திருக்கோவில் என்று  தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை போட்டிருக்கும் புத்தகத்தில் இருந்து கிடைத்த விவரங்கள் இவை. ஒரே ஒரு குறை  சடையவர்மனை,  சடா வர்மனாக்கி இருக்காங்க:(


கொடுத்த லிஸ்ட்டைப் படிச்சபோதும் சரி, இப்போ தட்டச்சு செஞ்சபோதும் சரி மூச்சு வாங்குது !  இவ்வளவா!!!  இவ்வளவா!!!!!


பிகு:  குலசேகரன் திருவீதி நுழைஞ்சதும்  படம் எடுக்கத்தடைன்னு கே எம். சொல்லிட்டார்:(  சில படங்களை சுட்டேன்.  சுட அனுமதி கொடுத்தவர்களுக்கு என் நன்றிகள்.



Wednesday, March 27, 2013

ரங்கன் பட்டபாடு...... த்சு....த்சு.....

பெரிய பெருமாள்,பெரிய கோவில், பெரிய மேளம், பெரிய தளிகைன்னு எல்லாமே பெருசுதான் இங்கே.   பூலோக வைகுண்டம் இல்லையோ!!!!   கோவில் மட்டுமே 156 ஏக்கர் பரப்பளவு.  இந்தியாவில் இது மட்டுமே ஏழு பிரகாரங்கள் உள்ள ஒரே கோவில். ஒவ்வொன்னுக்கும் ஒரு பெரிய மதில் சுவர். மதில் சுவர்களின் மொத்த நீளம் 11.16 கிலோ மீட்டர்!  ஏழாம் பிரகாரம் தொடங்கி  அஞ்சாம் பிரகாரம் வரை  ரெவ்வெண்டு மதில்களுக்கு இடையில்  வீடுகள் நிறைஞ்சு  ஒரு முழுத் தெருவே இருக்கு.  ஒவ்வொரு தெருவுக்குள் போக ஒவ்வொரு கோபுரம்! கோவிலுக்குள்ளே ஒரு ஊர்.  முந்திக்காலத்துலே கோட்டைக்குள்ளே ஊர் இருக்கும் பாருங்க அதைப்போலத்தான்.

தெற்கு கோபுரத்தின் உயரம்  237 அடி.  13 நிலைகள். (13 என்றது வெள்ளையர்களுக்குத்தான் ஆகாத  நம்பர். நமக்கில்லையாக்கும்!) உச்சியில்  13 கலசங்கள்.  அங்கே நின்னு பார்த்தால் தூரக்க இலங்கை தெரியுமாம். ஆனால் இது உண்மைதான்னு  நிரூபிக்க யாருக்கும் மேலே போக அனுமதி இல்லை.

 கிருஷ்ணதேவ ராயர் காலத்தில்  கட்ட ஆரம்பிச்சு அப்படியே பாதியில் வேலை நின்னுபோய் மொட்டைக்கோபுரமாக் கிடந்ததை  அஹோபில மடம் பெரிய ஜீயர் (44 பட்டம் அழகியசிங்கர்) முயற்சியால்  1980 இல் மீண்டும் கட்ட ஆரம்பிச்சு 1987 வது ஆண்டு வேலை முடிஞ்சது.   பழைய ஆட்களுக்கு இப்பவும் இது ராயர் கோபுரம்தானாம்!





கோபுரத்தில் எதோ விரிசல் வந்துருக்குன்னு அக்கம்பக்கம் 40 மீட்டருக்குக் கடைகண்ணிகளை அகற்ற உத்தரவாகி இருக்குன்னு சேதி. கட்டி முடிச்சு 25 வருசம்தான் ஆறது:(

கோதண்டராமனை தரிசனம் செஞ்ச கையோட, ஏதோ வழியில் எப்படியோ போய்  மறுபடி ரெங்கவிலாஸ் மண்டபத்தின் அப்புறத்தாண்டை இருக்கும் (அகல/ளங்கன் வீதி) கார்த்திகை கோபுர வாசலுக்கு வந்திருந்தோம். வாசலின் இருபுறமும் த்வாரபாலகிகளா கங்கையும் யமுனையும்!  இங்கே எப்படி.?

ஒருமுறை  நம்ம கங்கை, யமுனை காவிரி மூவரும் தேவலோகத்தில்  வாக் போய்க்கிட்டு இருந்தாங்க.  அப்போ அந்தவழியா பறந்து போன கந்தர்வன் அவங்களுக்கு  பொதுவா ஒரு கும்பிடு போட்டுட்டுப் போனான். என்னைத்தான் கும்பிட்டான், என்னைத்தான் கும்பிட்டான்னு மூணுபேரும் தங்களுக்குள் விவாதம் செஞ்சாங்க. ' மகாவிஷ்ணுவின் காலடியில்  இருந்து நான் பிறந்ததால் நாந்தான்  உசத்தி'ன்னு கங்கை  சொல்றாள். நியாயம் கேக்க  மகாவிஷ்ணுவிடமே மூணு பேரும் போறாங்க.  கங்கை சொன்னது உண்மைதான். அவள்தான் உசத்தின்னு  பெருமாளும்  சொல்லிடறார்.  காவிரிக்குக் கண்  கலங்கிப் போச்சு. என்னை  இப்படிக் கைவிட்டீரேன்னு கடும் தவம் செய்யப்போயிட்டாள். தவத்தின் வலிமை கூடிப்போனதால்  பெருமாள் மீண்டும் ப்ரத்யக்ஷமாகி சாமிகள் பொதுவாச் சொல்லும் வசனம் பேசறார்.  " உன் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டுமென்று கேள்!"

'கங்கையைவிட உசந்தவளா என்னை  ஆக்கணும் என்றாள்' இவள்.

'சரி இவளே... நோ ஒரீஸ். அவள் காலில் கிடக்கட்டும். நீ என் கழுத்து மாலையா இருந்துக்கோ'ன்னார். அதுக்குப்பிறகுதான்   காவேரி ரெண்டாப் பிரிஞ்சு மறுபடி ஒன்னாச் சேர்ந்து ஒரு தீவை  உருவாக்கிடறாள்.

இதுக்கு நடுவில் இன்னொரு கதை  வரணும். வருது.  பாற்கடலில் தோன்றிய ரங்க விமானத்தை அர்ச்சாவதாரமா, ப்ரம்மா வச்சுப் பூஜை பண்ணிக்கிட்டு இருக்கார்.  தினப்படி பூஜைக்கு சூரியன்  உதவிக்கிட்டு இருக்கான்.  இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அரசரொருவர்  பிரம்மனுக்கு  ஒரு சமயம் உதவப் போனார். அப்பெல்லாம் தேவர்களுக்கு மனுஷ்யர்கள் உதவியும் தேவைப்பட்டது. அதுக்கு பிரதி உபகாரமா என்ன வேணுமுன்னு ப்ரம்மா கேட்கப்போய் அவர் , நீங்கவச்சுப் பூஜிக்கும் ரங்கவிமானம் வேணுமுன்னு சொல்லிட்டார்.  இதைக்கொடுக்கத் தயங்கிய ப்ரம்மா, சூரியனும் இதை தினமும் பூஜிக்கிறான். அவனாண்டை ஒருவார்த்தை கேட்டுட்டுத்தான் முடிவு செய்யணுமுன்னு சொல்லி ஜகா வாங்குறார். உடனே அரசர், 'அட! சூரியனா? பழம் நழுவி பாலில் விழுந்ததுன்னு வச்சுக்குங்கோ. நானும் சூரிய குல அரசன் தான்.  நானும் உங்களைப் போலவே அனுதினமும்  ரங்கவிமானத்தை வச்சுப் பூஜிப்பேன்னு சொல்றார். இப்படியாக  ரங்க விமானம்  பூலோகம் வந்து சேர்ந்துச்சு.  வழிவழியா  இதே இக்ஷ்வாகு குலத்தின்  தனமா இது தொடர்ந்து  பூஜிக்கப்பட்டு வருது.  இந்தக்குலத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீ ராமர்.  தசரதகுமாரர்.

ராவணனோடு  போர்  நடந்து முடிஞ்சு சீதையைக் காப்பாற்றிக் கொண்டுவந்து வனவாசம் முடிஞ்சதுன்னு எல்லா க்ளைமேக்ஸும் ஆனபிறகு ஸ்ரீ ராமனுக்கு  அயோத்தி நாட்டின் அரசரா முடிசூட்டு விழா நடக்குது .  மேற்படி சமாச்சாரம்  எல்லாத்திலும்  உதவியா இருந்தவங்களுக்கு  தேங்ஸ் கிவிங் கிஃப்ட் கொடுக்கும்போது  குலதனமான ரங்க விமானம் விபீஷணனுக்குக் கிடைச்சது.

இலங்கைக்குக் கொண்டு போறான்.  போற வழியிலே , இந்தக் காவிரித் தீவைக் கடக்கும்போது  மாலை சந்தியாவந்தனம் செய்யும் சமயமாச்சு.  ரங்க விமானத்தைத் தரையில் வைக்க மனமில்லை.  சுத்துமுத்தும் பார்க்க  ஒரு பையன் கண்ணுக்குத் தென்பட்டான்.  அவனிடம் ' கொஞ்ச நேரம் இதைப்பிடிச்சுக்கோ  இவனே. இதோ வந்துடறேன்னு சொல்லி அவன் கையில் கொடுத்துட்டு அனுஷ்டானம் முடிச்சுத் திரும்பினால் பையன்  விமானத்தைத் தரையில் வச்சுட்டு விளையாடிக்கிட்டு இருக்கான்.

விபீஷணன்  என்னடா இவனே இப்படிச் செஞ்சுட்டேன்னு திரும்ப விமானத்தைத் தூக்கி எடுக்க முயற்சிக்கிறான். அசைக்கக்கூட முடியலை. அது  அங்கேயே இடம் பிடிச்சு உக்கார்ந்துக்கிச்சு.  இந்தப்பையனை என்ன பண்ணறேன் பாருன்னு  அவனைத் துரத்த அவன் ஓடிப்போய்  ஒரு மலையில் ஏறி  உச்சிப் புள்ளையாரா மாறி உக்கார்ந்துட்டார்!!

அதென்னவோ தெரியலை   அண்ணன் தம்பி ரெண்டுபேருக்குமே  கிடைச்ச சாமியை  தங்களுடைய ஊர்வரைக் கொண்டு சேர்க்கக் கொடுப்பனை இல்லை. அண்ணனுக்கும் இதே கதைதான். அவருக்கு சிவன். இவருக்கு விஷ்ணு.


இப்படித்தான் காவிரிக்குக் கொடுத்த வரத்தின்படி விஷ்ணு இங்கே கோயில் கொண்டார். அந்தக்கோவில் கோபுர வாசலுக்கு  கங்கையும் யமுனையும் த்வாரபாலகிகளா வந்து நிக்கும்படி ஆச்சு.

கார்த்திகை கோபுரம் கடந்து உள்ளே போனால் ஏகப்பட்ட தூண்களுடன் பிரமாண்டமான  மண்டபம். 212 தூண்கள் இருக்காம்! வலது பக்கம் ஒரு சந்நிதியில்  தீபாராதனை காமிச்சு  அங்கிருந்த சிலர் கண்ணில்  ஒத்திக்கிட்டு இருந்ததைப்பார்த்து  காலை வீசிப்போட்டு அங்கே ஓடினால்.............  பெரிய திருவடி பெருமாளை நோக்கி கூப்பிய கைகள். கூப்பிட்ட நொடியில்  கிளம்பும் வகையில் இதோ பறக்க ரெடி என்றதுபோல் இறக்கைகளை விரிச்சு  எழும் பாவனையில் இருக்கார்!  பெரிய திருவடி என்ற பெயருக்கேத்தமாதிரி பெரிய உருவம். 25 அடி உசரம்! அம்மாடியோவ்!!!!  இவருக்கு 30 மீட்டர் வேஷ்டி வேணுமாம். அகல விரிச்ச கண்ணை சுருக்க மறந்தேன்.  சந்நிதியைப் பூட்டிட்டாங்க. கம்பிக்கதவு என்றதால் நமக்கு பிரச்சனை இல்லை:-)  நகை நட்டுக்களா நாகங்களையே போட்டுருக்கார். கருடனைப்பார்த்து பயந்து ஒவ்வொன்னும்  கையிலும் காலிலுமா சுத்திக்கிட்டு இருக்கு.  மொத்தம் எட்டு!

செப்புச்சிலை மாதிரி ஒரு நிறம்.ஆனால் மரச் சிற்பமாம். இவருக்கு அபிஷேகம் கிடையாது.  ஆனால் கொழுக்கட்டை நிவேதனம் உண்டு!!!

மசமசன்னு ஒரு படம் கிடைச்சது. காப்பிரைட் இருக்காம்.இந்தச் சுட்டியில் பாருங்களேன்.



மண்டபத்துக்குள் மண்டபமா இவருக்கு முன் ஒரு மண்டபம்.  விக்ரம சோழர் காலத்தில்(1070-1125 ) கட்டுனது.  இதுக்கே ஆயிரம் வயசு ஆயிருக்கு பாருங்க!  இவருக்கு த்வாரபாலகரா சுக்ரீவனும் அங்கதனும்!!!  இவர் மண்டபத் தூண்களில் நாயக மன்னர்களின் சிலைகளும் உண்டு.

மாலிக்காபூர்  படையெடுப்பில் இவர் மேல் பூசி இருந்த தங்கத்தை அபகரிக்க  இவர்மேல் மெழுகு தடவி தீவச்சு அதில் உருகி வழிஞ்ச தங்கத்தைத் திருடிக்கொண்டு போனதாக ஒரு கதை உலவுது.  ஒருவேளை அப்போ செப்புத் திருமேனியா இருந்துச்சோ என்னவோ!  இல்லை...இந்தக் கதை  இன்னொரு பிரகாரத்தில் இருக்கும் அமிர்த கலச  கருடாழ்வாருக்கானதா?  சின்னக்குழப்பம்.தெரிஞ்சவுங்க சொல்லுங்க. கீதா? சீக்கிரம் மேடைக்கு வரவும் ப்ளீஸ்:-)

இந்தக்கோவிலிலே   ஏராளமான மண்டபங்கள் இருந்தாலும்  ரொம்ப  அழகானதுன்னு  இந்த கருட மண்டபத்தைத்தான் சொல்றாங்க.  தேவராஜன் குறடு என்று பெயராம். பகல்பத்தில் நம்பெருமாள்  மோஹினியா இங்கேதான் எழுந்தருள்வாராம்!

 மண்டபத்தின்  இரு பக்கங்களிலும் ஆழ்வார்களின் சந்நிதிகள். ஒரு பக்கம் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்களை தரிசிக்கலாம். மறுபக்கம் திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், நவநரசிம்ஹர் சந்நிதிகள். எல்லாமே  சாத்தி இருக்கும் கம்பிக்கதவு வழியாத்தான் ....... நாள் நக்ஷத்திர விசேஷத்துக்கு மட்டும் திறப்பார்களோ என்னவோ!

மண்டபம் கடந்து அடுத்த பிரகாரத்துக்கு  ஆர்யபட்டாள் கோபுரவாசல் வழியாகப் போனோம்.  கொடிமரமும் பலிபீடமுமாய் வலதும் இடதும்  திறந்த மண்டபமுமாய் இருக்கு. குலசேகரன் வீதியாம்.  மூலவரை நோக்கிப்போய்க் கொண்டிருக்கோம். அடுத்து நாழிகைக்கோட்டான் கோபுரவாசல்.  நீண்ட பாதையில் போய் நின்னது ராஜமகேந்திரன் வீதி(!)யில்,  சந்தனு மண்டபம் முன்னால்.  மக்கள் நடமாட்டம் கூடுதலா இருக்கு.

திடீர்னு பட் பட் ன்னு ஒரு சப்தம். ரெண்டு பேர் ஒரு தோல்வாரை தரையில் அடிச்சுக்கிட்டே வர்றாங்க.  அவர்களுக்குப்பின்னால்  பெரிய பாத்திரங்களைச் சுமந்து கொண்டு சிலர். ஓ.... சாமி சாப்பிடப்போறார்!  டின்னர் டைம்லே டிஸ்டர்ப் செய்யலாமான்னு  யோசனை எனக்கு.  இடது மூலையில் இருந்த படிக்கட்டில் போய் உக்கார்ந்தோம்.  அப்போ அங்கே வந்த பட்டர் ஒருவரிடம் தரிசனம் உண்டான்னு கேட்டதுக்கு  ஸ்பெஷல் தரிசனம் 250ன்னு சொன்னார்.

இந்த  பிரகாரத்தில்  மேற்குப்பக்கம் திண்ணை போன்ற ஒரு அமைப்பு. அதில் பூட்டப்பட்ட சின்னச் சின்ன  கதவுகளா இருக்கு.  முன்பக்கம் ஒரு கண்ணாடி கவசத்துக்குள் ஆள் உயரச் சிலைகளா சிலர். மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர்  குடும்பத்துடன்.  தந்தச் சிற்பமாம். அதுக்குமேல்   வர்ணம் பூசி இருக்காங்க.

கோபால் மட்டும் எழுந்து போய் விசாரிக்கறேன்னு போனவர் தர்ம தரிசனத்துக்கு பெரிய வரிசை காத்துருக்கும்மா.  பெருமாளை இன்னிக்குப் பார்க்கலாமா இல்லை நாளைக்கான்னு கேட்டார்.  என்ன கேள்வி இது?  இன்னைக்கே.......தான்.

தரிசனச்சீட்டு வாங்கும் இடத்துக்கு ஒருவர் கை காட்டினார்.  வளைஞ்சு திரிஞ்சு போய்  சீட்டு வாங்கியதும்  அவர் காமிச்ச வழியில் போனோம்.  படிகள் இறங்கி, ஏறின்னு போய்  கருவறை முன் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஏற்கெனவே நின்னுருக்கும் தர்ம தரிசனக்கூட்ட ஜோதியில் கலந்தோம்.

காயத்ரி மண்டபம் இது.  எங்கே நேராப் பெருமாளைப் பார்த்துடப் போறோமுன்னு வரிசையை  இடது பக்கம் கம்பிகளுக்கிடையில் திருப்பி விட்டுருக்காங்க. அங்குலம் அங்குலமா நகர்வு.  ஒரு  இருபது நிமிஷக் காத்திருப்பு.  நாம் குலசேகரன் படியருகில் போகப்போறோம். அப்ப   தடுப்புச்சங்கிலியை அவிழ்த்து ஒரு  பெண்ணையும் அவர் மகன் போலிருந்த  பதின்மவயது பிள்ளையையும் உள்ளே கூட்டிவந்து நமக்கு முன்னால் ஒட்ட வைத்தார் பட்டர் ஒருவர்.

"பெருமாளைப் பார்க்கணுமுன்னா  இங்கேயும்  தெரிஞ்சவா சிபாரிசு  வேணும்போல!  நமக்குப் பெருமாளைத்தவிர வேற யாரையும் தெரியாதே"  கொஞ்சம் உரக்கவே சொல்லியிருக்கேன். சட்டென்று திரும்பிய  பட்டர் (கொஞ்சம் அசடு வழிய) ' அப்படியெல்லாம் இல்லே மாமி.  உங்களுக்கும் தரிசனம் பண்ணி வைக்கிறேன்(!!)  நீங்க நன்னா சேவிங்கோ' ன்னார்.
(சுட்ட படம்!   இவர் கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் . எதுக்குக் கயிறு? அவனைக் கட்டி வலிக்கணுமா என்ன?)


அடுத்து நம் முறை!  ஆஜானுபாகுவா 21 அடி நீளத்தில்   பதினைஞ்சடி ஆதி சேஷ மெத்தைப் படுக்கையில் கிடக்கிறான்.புஜங்க சயனம்.  லேசாத் தலை சாய்ச்சு தெற்கு நோக்கிய திருமுகம்  குழைச்சாந்தில்  செஞ்சு, புனுகுச்சட்டம் சாத்திய மினுமினுப்பான மேனி! படுக்கை நீளம் போறாமல் வெளியே நீட்டி இருக்கும்  பங்கஜச் சரணம்  காட்சிக்கு இல்லை. போர்த்தி வச்சுருக்கு. காலடியருகே நிற்கும் விபீஷணனும்  தரிசனம் கிடைக்கலையேன்னு இருக்கான். புரட்டாசி மாசம் தைலக்காப்பு. தீபாவளிக்குத்தான்  பாத தரிசனம் கிடைக்குமாம்.  பெருமாளை அடி முதல் முடிவரை  சேவிக்கணும் என்ற நியமம் இருந்தாலும்.....  நம்மைப்போன்ற நாடோடிகளுக்கு  கிடைச்சவரை சொர்க்கம்தான் இல்லையா?
ஊனக்கண்ணால் முகத்தையும் ஞானக்கண்ணால் காலடியும்  கண்டேன்.

முகலாயர் படையெடுத்து கோவில்களைக் கொள்ளையடிச்ச  காலத்தில்  நம்பெருமாளை தூக்கிக்கிட்டு  ஒளிஞ்சோடிப்போன  கதையும்  சிலபல வருடங்கள் அவர் திருப்பதியில்  அடைக்கலமா இருந்ததும்  தெரிஞ்ச கதைதானே?  உற்சவரைத்  தூக்கிப்போக முடிஞ்சது. சுதைச் சிற்பமா இருக்கும்  மூலவரின் கதி?  21 அடி  பெரிய ஆளை  எப்படி ஒளிக்க?   பேசாம கருவறைக்கு முன் சுவரெழுப்பித்தான், வேற வழி?  காற்றுமில்லாம கவனிப்பும் இல்லாம காராக்ருஹ வாசம் செஞ்ச தை நினைச்சாப் பாவமாத்தானே இருக்கு?

கருவறை  திருச்சுற்றில்  சாளக்ராமத்தால்  செஞ்ச   திருமலை ஸ்ரீநிவாஸன்  நிற்கும் கோலம்  கண்டு வணங்கி  விஷ்வக்சேனரை தரிசனம் செஞ்சுக்கிட்டு  கோவிலில் இருந்து வெளியே வந்தோம். மணி ஏழரை.   ஊர் முழுசும் அந்தகாரம். இந்தப் பக்கங்களில்  16 மணி நேரம் பவர் கட்டாம்.  அதுக்காக இப்படியா?

திருச்சிக்குப் போய் சாப்பிட்டு ஓய்வெடுக்கணும்.  சங்கீதாவுக்குப் போனோம்.  சாப்பாட்டுக்கிடையில் செல்லில்  ஒரு கால்.   காளிமுத்து கூப்புடறார்.

"நாளைக்கு நீங்க கட்டாயம் வந்துருவீங்கதானே?"

" கட்டாயம் வர்றோம். காலை ஒரு எட்டரை ஆகிரும்.  கோவிலுக்கு வந்தவுடன் உங்களை கூப்பிடறேன்"

வாக்குக் கொடுத்தேன்.

தொடரும்...........:-)




Monday, March 25, 2013

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!


காவிரிப்பாலம் கடந்து  கொஞ்சதூரத்தில் இடதுபக்கம் திரும்பி இன்னும் கொஞ்சதூரத்தில்  அம்மா மண்டபம் தாண்டி வலமெடுத்ததும்   மனசெல்லாம் ஒரு பரவசம்.  தூரத்தே கண்முன்னே தெரியும் ராஜகோபுரம். எங்கெ சுத்தியும் ரங்கனை ஸேவிக்கணும் என்பதுதான் நம்முடைய இந்தப் பயணத்தின் மொத்த நோக்கமே!  எங்கெ போய் சுத்தினாலும் ரங்கனை  வந்து ஸேவிக்கணும்.  (எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி)அதான்  பழமொழியைப் பொய்யாக்க வேணாமேன்னு சில ஊர்களைச்  சுத்திச் சுத்தி வந்தப்பக் கிடைச்சதையெல்லாம் பார்த்து அனுபவிச்சுக்கிட்டே வந்திருக்கோம்.

( அம்மாமண்டபம் ரோடு பார்த்ததும்  ஒரு தோழியின் நினைவு  தவறாமல் வந்தது. (மீண்டும் )சந்திக்க முடியலை என்பது ஒரு மனக்குறைதான்)

வழக்கம்போல சீனிவாசன் கேட்ட எத்தனையாவதுக்கு  நான், 'இதுதாம் நம்பர் ஒன் இன் த லிஸ்ட்'ன்னதும்   அப்படியா அப்படியான்னு மாய்ஞ்சுபோயிட்டார்.

கம்பீரமா நிற்கும்  தெற்கு கோபுரம் வழியா  ஏழு வீதிகள் கடந்து ரங்கனை சேவிக்கணும். ஆனால்....  கோவிலுக்குப்போகும் வழின்னு  அம்பு காட்டிய  சாலையில் போனால் அது  மேற்கு கோபுரம் வழியா வடக்கே போய் இன்னும் சில தெருக்களைக் கடந்து மறுபடி தெற்கே மதில்சுவரையொட்டியே போகும் சாலையில் வந்து  இடமெடுத்து கிழக்கே போகும்வழியில்  நமக்கிடப்பக்கம் இருக்கும் தெற்கு நோக்கிய  கோபுரவாசலில் வந்து இறங்கினோம்.


தெற்கு உத்தரவீதி.  கோவிலுக்கு ஏழு பிரகாரமும் ஏழுதெருக்கள் என்றாலும்  இங்கே இந்த கோபுரவாசல்தான்  கோவிலுக்குள் போகும் முக்கிய நுழைவிடமா இருக்கு.  ரங்கா கோபுரம் இதுதான். இதுக்கு நான்முகன் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.  ஆனால்.... என்னால் முன்பக்கம் பார்க்க முடியலை. கொஞ்சம் தள்ளி  முன்னால் போய்ப் பார்த்திருக்கலாம்தான். ஆனால் தோணலையே.....வாசலில் இறங்குனதும் (ஒப்புக்கு இருக்கும்) எலெக்ட்ரானிக் கேட்  கடந்து  ஓடினேன்.




நடுவில்  ஒரு நாலு கால் மண்டபம். இடது பக்கம் பூராவும்  கோவில்கடைகள். வலது பக்கமும்  தொண்டரடிப்பொடியார்  சந்நிதிக்கு  ரெண்டு பக்கமும் கோவில் கடைகள்தான்.  நாலு கால்மண்டபம் தாண்டி  முற்றம் அடைத்து ஒரு பெரிய மண்டபம். ரெங்கவிலாஸ் மண்டபம். இதில் ஒரு கொடிமரமும் நேயுடு சந்நிதியும் இருக்கு.

 உள்ளே நுழைஞ்சதும் இடது பக்க ஓரத்தில்  மேசைநாற்காலி. மேசையில் சில ரசீது   புத்தகங்கள் பார்த்ததும் விசாரிக்கப் போனோம். கெமெரா டிக்கெட் அம்பது ரூ, கோவில் சரித்திரம் 20 ரூ, கோபுர தரிசனம்  நபருக்கு 10 ரூ ன்னு வாங்கியதும்  கோபுரதரிசனத்துக்கு வழி என்னன்னு விசாரிச்சால்  இருக்கைக்குப் பின்புறம் கை காமிச்சாங்க. கண் உயர்த்திப் பார்த்தால்  நேராக நம்ம ஆண்டாள் சந்நிதி. அடிச்சது ப்ரைஸ். உள்  ஆண்டாள் சந்நிதியாகத்தான் இருக்கணும் இது.

அருமையான தரிசனம். ஆண்டாளுக்கு மாலை சார்த்தணுமுன்னா  அம்பது ரூ கொடுத்தால்போதும். மறுநாள்  காலையில்  நம்ம பெயரில்  மாலை சார்த்துவோமுன்னு (பார்த்தாலே ஏழ்மை நிலையில்  இருக்கும் )பட்டர்  சொன்னார்.  மாலையை வாங்குன ஆண்டாள் நம் மனக்குறையைத் தீர்த்து வைப்பாளாம்.   எழுதித்தாங்கோன்னு  ஒரு லிஸ்ட்  நீட்டுனார். அவரவர் மனக்குறைக்கு  பெருமாள் பெயரில்  நம் வகையில் ரெண்டு மாலை!  காலையில் வந்து ப்ரஸாதம் வாங்கிக்குங்கோன்னார்

கோபுரதரிசனம் பார்க்க மாடிக்கு போகும் வழி கேட் மூடி இருந்துச்சு.  ஒருத்தர் வந்து திறந்து விட்டார்.  கோவிலைச் சுத்திப் பார்க்கன்னு ஆரம்பிச்சவரை..... முதலில் மேலே போயிட்டு வர்றோம்.  இருட்டப்போறதுன்னு சொன்னதும்  சரி அப்புறமா பேசறேன்னு போனார்.

மொட்டை மாடிக்குப்போனோம். கீழே உள்ள ரெங்கவிலாச மண்டபத்தின்  தளம்தான் இது. 21 கோபுரம் இருக்காமே! எண்ணி எண்ணிப் பார்த்தபோதும் கணக்கு மிஸ்ஸாகிக்கிட்டே  இருந்துச்சு.  ப்ளஸ் குறி போல வடக்கு தெற்காவும் கிழக்கு மேற்காவும் கோபுரங்கள் ஒரே வரிசையில். கேமெராக் கண்ணுக்கு ஒரு ஒளிஞ்சாட்டம்!  இதுகளுக்கிடையில் உசரம் குறைவாக இருந்தாலும் கண்ணில் தப்பாமல் ஜொலிக்கும்  ரங்கவிமானம். தகதகன்னு............ தங்கம் போர்த்தியது!   கெமெரா மூலம் கிட்டக்கக் கொண்டு வந்தால்....   ஹைய்யோ!!!!!




மேற்குப்பக்கம்  வியூ பாய்ண்ட் / லுக் அவுட்  போல இன்னொரு ஏழெட்டுப் படிகளோடு  ஒரு இடம். அதுலே ஏறிப் பார்த்தால்  இன்னும் கொஞ்சம் நல்லாத் தெரியுமே தவிர ஒளிஞ்சாட்டாம், ஒளிஞ்சாட்டம்தானாக்கும் கேட்டோ!

ரெண்டு பெண்களும் ஒரு சிறுவனுமா இன்னும் மூணுபேர் படியேறி வந்து சேர்ந்துக்கிட்டாங்க.  கையில் இருக்கும் செல்ஃபோன் கேமெராவில் பையன் வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தான்.  அம்மாவும் பெரியம்மாவும்  போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.   பெயர் விஜய். சிவகெங்கையில் இருந்து  பெரியம்மா வீட்டுக்கு விஸிட் வந்துருக்காங்களாம்.  செல்ஃபோனில் கேமெரா வந்த பிறகு,  வளரும் ஒளி ஓவியர்கள் ஏராளம்!

ஃபொட்டோக்ராஃபர்  கிடைச்சா விடமுடியுதா?  நம்மையும் ஒரு படமெடுக்கச் சொன்னோம். ப்ராப்பர் கேமெரா பரிச்சயமில்லை. குழந்தைதானே!  ஆனாலும் படம் நல்லா வந்துருச்சு:-)


கோபுர அமைப்பு விவரம் தேடுனதில் கிடைச்ச படம் இது.  கூகுள் ஆண்டவருக்கு நன்றிகள்.

மணி ஆறு ஆனதும்  சொல்லிவச்சமாதிரி இருட்டு  சட்னு வந்து கவிழ்ந்தது.  ட்வைலைட் எல்லாம் ஒன்னும் இல்லை. வெளிச்சம் டு டைரக்ட் இருட்டு.  கவனமாக் கீழே இறங்கி வந்தோம்.  நபர் காத்துக்கொண்டிருந்தார்.  பெயர் காளிமுத்து.   அரசு அங்கீகாரமுள்ள அஃபிஸியல் கைடு. சார்ஜ் இருநூறு ரூ தான்.  கோவிலைச் சுத்திக் காமிக்கவான்னார். இருட்டில் என்னன்னு பார்க்க?  இன்னிக்கு நாங்களே கொஞ்ச நேரம் சுத்திப்பார்த்துட்டு போறோம். நாளைக் காலையில் திரும்ப வருவோம். அப்போ  கைடு சேவை  வேணும் என்றேன். நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டார்.

ரெங்கவிலாஸைத்தாண்டி அடுத்த பிரகாரம் வந்தோம். இதுவும் ஒரு தெருதான். அலிநாடன் திருவீதி. கண்ணெதிரே   ஆர்யபட்டாள் கோபுரவாசல் . இடது பக்கம் சக்ரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம்  ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி, கிழக்கு கோபுர வாசல்,   கோவில் அலுவலகம் இப்படி  போர்டுலே எழுதிவச்சுருக்கு.

சக்ரத்தாழ்வாரையே பார்க்கலாமுன்னு  இடது பக்கம் போனோம். அழகான மண்டபம்,   ஜொலிக்கும் விளக்கில் சக்ரத்தாழ்வார். அருமையான தரிசனம். வலது பக்கம்  வசந்தமண்டபத்துக்கு வழின்னு பார்த்ததும் அதில் நுழைஞ்சோம். கோவில் நந்தவனத்திலூடே  போகும் பாதையில் நடந்தால்  கொஞ்சதூரத்தில் இன்னொரு சின்னகோபுரவாசலுக்குள் நுழைஞ்சு அந்தப் பக்கம் போனால் தாயார் ரங்கநாயகியின் சந்நிதி.  பெரிய முன் மண்டபத்தில்  செண்பகப்பூவும் தாமரையும் மல்லியுமா  பூக்கள் விற்பனை.


எனக்கு செண்பகம் ரொம்பப் பிடிக்கும். ஒரு பத்துப்பூ சேர்த்து கோர்த்து வச்சுருக்கும் செண்டு ஒன்னை நம் தாயாருக்கு  வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்.  சந்நிதிக்கதவு  சாத்தி இருக்கு, ஆனால் கம்பிகள் வழியா தரிசிக்கலாம்.   கம்பியினூடே கையைவிட்டு  செண்பகத்தை தாயாரிடம் சேர்ப்பித்தேன்.  சந்நிதிக் கதவை ஆறேமுக்காலுக்குத் திறப்பாங்களாம்.  தரிசன நேரம் இங்கே பார்த்துகுங்க.



திருமஞ்சனக்குட வரிசை!




தாயார் சந்நிதிக்கு  நேரெதிரில்  ஒரு அழகான மண்டபம்.  கம்பர் ராமாயண அரங்கேற்றம் நடந்த இடம்.  வலது பக்கம் உக்ர நரசிம்மர் சந்நிதி.   அரங்கேற்றம் நடந்தபோது,  ஒரு அதிசயம் நடந்ததாம்.  கம்பராமாயணத்தில் ஹிரண்யவதம் பகுதி வாசிக்கப்பட, சுற்றி இருந்தோர் அதை ஆட்சேபிக்கவும், யாம் ஏற்றுக்கொண்டோம் என்று  விமானத்தின் மேலிருந்து சிம்மக்குரலில் நரசிம்ஹர் கர்ஜித்தாராம். ஓவர் ரூல்ட்!!!  அப்புறம் வேற யாராவது வாயைத் திறக்க முடியுமோ!!!


அவர் சந்நிதியை நோக்கி ஒரு கும்பிடு.  அடுத்த பக்கம் போறோம்.  மூடி இருக்கும் வைகுந்த வாசல், வைகுண்ட ஏகாதசிக்குக் காத்து நிக்குது. வாசலுக்கு முன்பக்கம் ஒரு பதினாறுகால் மண்டபம்.

சரியான வழி ஒன்னும் தெரியாமல் அரை இருட்டில் இங்கே அங்கேன்னு சுத்துனதில்  நல்ல வெளிச்சம் இருக்கும் ஒரு சந்நிதி கண்ணில் பட்டது. உள்ளே பரவாசுதேவன். ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளுடன் எப்படி இருப்பாரோ அதேபடி காட்சி தர்றார்.

.
 இந்தப்பக்கம் தலையைத் திருப்புனதும் அப்படியே 'ஆ' என் வாய் பிளந்தேன்.  கண்ணாடி முன் ஆண்டாள்! சர்வ அலங்கார பூஷிதையா இருக்காள்.  ட்ரெஸ்ஸிங் டேபிள் போல் இருக்கும் அடுக்கு வரிசைக் கண்ணாடியில்  ராக்கொடி வச்சுப்பின்னிய ,பின்னம்பக்கத்து  ஜடையும்  சூடி இருக்கும் பூக்களும்  கொண்டை அலங்காரமும்  அப்படியே  ஜொலிப்பு!

சுட்ட படம் ஒன்னு இங்கே.  கூகுளாண்டவருக்கு நன்னி.


மனசு நிறைஞ்சு வழிய  நடந்தால் இங்கே வாங்கோன்னு அழைப்பு.  கோதண்டராமர் சந்நிதி.  நல்ல தரிசனம்.  சேவிச்சுட்டுத் திரும்பும்போது  ஒருத்தர் துளசிக்கொத்து ஒன்னை என் முன் நீட்டினார். கையில்  கொடுக்க  நீட்டிய கை மடங்கலை.  எதாவது கொடுங்கோன்னார்.  அதான்  சாமிக்கு முன் இருக்கும் தட்டில் போட்டாச்சேன்னதும், அது எனக்கு வராது.  நீங்க கொடுங்கோன்றார். நாம் நடக்க நடக்கப் பின்னாலேயே வந்துண்டுருக்கார்.  எனக்கு தர்ம சங்கடமாப் போச்சு. ஒரு பத்து ரூபாயும் அந்த துளசிக் கொத்தையும்  கொடுத்தேன். வேற யாருக்காவது கொடுங்கோன்னு சொல்லி நடையைக் கட்டுனேன்.

சில சமயம் கோவில்களில் சட் டென்று கைநீட்டும்  நபர்களைப் பார்த்தால்  என்ன செய்யறதுன்னு புரியாது. பொதுவா என் கையில் கேமெரா மட்டுமே இருக்கு. கைப்பை இருந்தாலுமே சில்லறை நோட்டா ஒன்னும் வச்சுக்கும் வழக்கம் இல்லை.  கோபாலும்  பொதுவாக் கோவிலுக்குள் நுழையும்போது  கொஞ்சம் பத்துக்களாக் கொண்டு வருவார்தான். ஆனால் இங்கே  ஸ்ரீரங்கம் பெரிய கோவில் என்பதால் சில  பத்துகள் பத்தாது.  ஒரு  சில நூறு பத்தாவது  வச்சுக்கிட்டால்தான்  தேவலை.

 எப்பவாவது வரும் பக்தர்களுக்கு இது  பெரிய தொகை இல்லைன்னாலும் உள்ளூர்வாசிகளுக்கு  அவஸ்தையா இருக்காதோ?

தொடரும்............:-)

பி.கு: இன்னும் சில  இடுகைகள் ரங்கனைச் சுற்றியேதான் வரப்போகுது. ஒரு இடுகையில் அடங்கமாட்டான் நம்மவன்!!!!