Wednesday, August 17, 2022

எதை எங்கே வச்சுருக்கணும் ?


ஆபத்து எப்படியெல்லாம் வருது பாருங்களேன்.....   எது ?  நேத்து  வந்த நம்ம நாப்பத்தியெட்டாவது கல்யாண நாளா ?   அதைச் சுடச்சுட  நம்ம துளசிதளத்தில் படங்களோடு கொண்டாடியாச்சு!  அப்பப் பார்க்கலைன்னா பிரச்சனையே இல்லை!  வெறும் '48 ' ன்னு தேடினால் கிடைச்சுரும்:-)
கூரியர்கார ஆள் பார்ஸலைக் கொண்டுவந்து வாசலில் வச்சுட்டுப்போறது இங்கே வழக்கம்தான். ஆனால் ஒரு ஓரமா வைக்காம வாசப்படியில் வச்சுட்டுப்போகலாமோ ? 
அந்த வாசலுக்கு மூணு படி ஏறிப்போகும் அமைப்பு.  கதவோ வெளிப்பக்கம் திறக்கும் வகை. நேரமோ அந்தி மாலை. அரையிருட்டு.....  வெளியே எதுக்கோ  போகவேண்டி, கதவைத்திறந்து காலடி எடுத்துவச்சது பார்ஸல் மேலே.... அடுத்த நொடி  கால் இடறித் தவறி  விழுந்து குய்யோ முறையோன்னு கணவரைக் கூப்பிட்டால்....    அவர் காதுலே ஹெட்ஃபோனை மாட்டிக்கிட்டு  வீட்டுக்குள்ளே ஏதோ  பாட்டு  கேட்டுக்கிட்டு இருக்கார். 

கூப்பாடு கேட்டது, பக்கத்துவீட்டுக்காரம்மாவுக்கு.  ஓடிவந்து பார்த்துருக்காங்க.  இந்த வீட்டுக்காரம்மா கீழே விழுந்து, எழுந்திரிக்க முடியாமல் கதறிக்கிட்டு இருக்காங்க.  

அடராமா......   அப்புறம் ?  வேறென்ன கணவருக்கு ஹெட்ஃபோன் இல்லாமலேயே பாட்டு கேக்க வேண்டி இருந்துருக்கும்தானே ? 

முந்தாநாள்  அப்பா அம்மா விஸிட் வந்த மகளும் மருமகனும்  ரஜ்ஜுவைக் கொஞ்சிக்கிட்டு இருந்தப்ப......   யதேச்சையா  'அப்பா அம்மா எப்படி இருக்காங்க'ன்னு மருமகனிடம் கேட்டதுக்கு, அம்மாவுக்குக் காலில் ஃப்ராக்ச்சர்னு சொன்னார். அவ்ளோதான் மேல் விவரம் ஒன்னும் இல்லை. 


சரி. நாம் போய் பார்த்துட்டு வரலாமுன்னு கிளம்பினோம்.  அவுங்க வேற ஊரில் இருக்காங்க. ஒரு அம்பது  நிமிட் ட்ரைவ். கண்ட்ரி லிவிங் !    சம்பந்தி வீட்டுக்குப்போனபின்தான்  மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் முழு  விவரம் தெரிஞ்சது ....   கணுக்காலில்  எலும்பு முறிவு!  அதுவும் ரெண்டு கால்களிலும்..............  ஐயோ....  ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு, இங்கே நம்மூர் ஆஸ்பத்ரிக்கு வந்து  கட்டுப்போட்டு , மூணு நாள்  வச்சுப்பார்த்து, வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க.   ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை செக்கப் பண்ணுவாங்களாம். எனக்கு ஐயோன்னு இருந்துச்சு.  வெள்ளையர் குடும்பத்திலே  ஆண்கள் நல்லாவே சமைச்சுடறாங்க என்பதால் குறைஞ்சபட்சம் சாப்பாட்டு பிரச்சனை இருக்காது. இதுவே எனக்காகி இருந்தால்..............   நம்மவர் அம்போ..... 

கொஞ்சநேரம் குடும்ப விஷயங்கள் பேசிட்டுக் கிளம்பினோம்.
இவுங்க ஊருக்குப் போகும் வழியில்  ஒரு பண்ணையில் விமானம் ஒன்னு தரையிறங்கி இருந்தது. ரெண்டு வருஷமாப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.  இந்த முறை பார்த்தால்..... அதுலே பாதியைக் காணோம்!!!   மீதிப்பாதி, இப்போ வீட்டாண்டை வந்து நிக்குது. அதை விருந்தினர் தங்கப் பயன்படுத்தப் போறாங்களாம். நம்ம சம்பந்தியின் நண்பரின்  பண்ணைதானாம். முழுசா இருந்தால்  நானே பைலட் ட்ரைய்னிங் எடுத்து  ஓட்டியிருப்பேனோ என்னவோ :-) எப்படி நகர்த்தியிருப்பாங்க ?  பண்ணையில் இருக்கும் ட்ராக்டர் இழுத்துருக்குமோ ? பைலட்டுக்கு என்னமாதிரி சிந்தனை பாருங்க... ஹாஹா...
பண்ணைவீட்டு மெயில்பாக்ஸ் , கலையழகோடு இருப்பதைப் பாராட்டத்தான் வேணும் !

நம்மூர்லே  மூணு புத்தர்கோவில்கள் இருக்கு.  அதுலே ஒன்னு  இந்தப்பக்கம்தான்.  ஒரு பண்ணை நிலத்தை வாங்கி கோவில் கட்டியிருக்காங்க. கோவில்ன்னா.... கோவில் அமைப்பு இல்லை. ஒரு பெரிய ஹாலில் ஒருபக்கம் புத்தர் சிலை இருந்தது.  இப்பப் பார்த்தால் தோட்டத்தில் புத்தர் நிக்கிறார். சம்பந்தி வீட்டுக்குப் போகும்போதே கண்ணில் பட்டார். வரும்போது போகலாமுன்னு நேராப்போயிட்டோம்.
இப்போ திரும்பி வரும்போது மறக்காம அங்கே போனோம்.  தெருவுக்கு முதுகு காமிச்சு நிக்கிறார். என்னன்னு பார்த்தால் கிழக்கே பார்த்த நிலை.  இவுங்களுக்கும் இப்படி சாமி கிழக்கே பார்க்கணும் என்ற நியமம் இருக்கு போல !
Wat Khemera Putthea Thireach  என்று பெயர். பளிங்குக் கல்வெட்டில் எழுத்தைப் பார்த்தால் ' தாய்' போல இருக்கு. யாரையாவது விசாரிக்கலாமுன்னா...   யாருமே கண்ணில் படலை, பக்கத்துப் பண்ணை குதிரைகளைத்தவிர.  அவையும் ஆள் நடமாட்டம் பார்த்து, வேலிப்பக்கம் வந்து 'என்னம்மா சுகமா'ன்னு விசாரிக்குதுகள்.  முந்தி ஒரு சமயம் இங்கே  கோவில் வந்துருக்கு பார்க்க வந்தப்பவும் யாருமே இல்லை.  ஹால் திறந்துருந்தது. போய்க் கும்பிட்டு வந்தோம். இப்ப அந்த ஹால் பக்கம் பார்த்தால்  மூடிக்கிடக்கு. 
புது புத்தர் நல்ல உயரமா இருக்கார். அவருக்குப் பின்பக்கக்கட்டைச்சுவரில்  நன்கொடை கொடுத்தவர்கள் பெயரிருக்கு.  500$ கொடுத்தவர்களையும் நன்றியோடு நினைவுகூர்தல் நல்லது ! 
வலை எதுக்கு இருக்குன்னு தேடுனதில் ஆப்ட்டது சில சேதிகள். 2020 செப்டம்பரில்  புத்தர் ப்ரதிஷ்டை ஆகி இருக்கு.  இது  கம்போடியன் புத்தர் கோவில்.அப்போ கோவிட் காரணம் ஊரடங்கும் வீடடங்கும்  இருந்த காலம். அதான் எல்லாம் ஓசைப்படாமல் நடந்துருக்கு போல ! 

  கீழே வலையில் அகப்பட்ட படம். 
நாலுமணிக்கு நம்ம வீட்டுக்கு வரும் பறவைகளுக்கான டின்னர் டைம் என்பதால் வீட்டுக்கு வந்து சோறு போட்டதும், இன்றைக்கு இன்னொரு விஸிட் போக ஏற்கெனவே முடிவு பண்ணியது நினைவுக்கு வந்துச்சு.  கால் உடைஞ்ச காதையில் இதை மறந்துட்டேன்....

நம்ம அண்ணி ஒருத்தருக்கு  ரெண்டுநாள் முன்னாலே பொறந்தநாள் வந்தது.  கொண்டாட்டம் மகன் வீட்டில்.  நாம்தான்  மாரியம்மன் கோவில் கல்யாணத்துக்குப் போயிருந்தோமே.....   அண்ணன் ரமண் சாமிக்கிட்டே போயிட்டார்.  முப்பத்திநாலு வருஷப் பழக்கம் நமக்கு.  முதலில் நம்ம வீட்டுக்குப்பக்கம்தான் இருந்தாங்க.  அப்பெல்லாம் வாரம் ஒருமுறை போய்ப் பார்த்துப்பேசிட்டு வருவோம்.  அண்ணன் மறைவுக்குப்பின்தான், அண்ணி இப்போ இருக்கும் இடத்துக்குப் போயிட்டாங்க.  அங்கே  உறவினர்கள் சிலர் இருக்காங்க.  அண்ணன் குடும்பம் பெருசு.  அவரோடு சேர்த்து எட்டு தம்பி, தங்கைகள்.  எல்லோருமே  நல்ல அன்பான ஆட்கள். 

 அண்ணன்தான் மூத்தவர். சின்ன வயசில் தன் தகப்பனாரோடு கிளம்பி ஃபிஜித்தீவுக்குப் போறார். கப்பல் எப்படியோ வழிதவறி  அஸ்ட்ராலியா  வந்துருக்கு.  அப்புறம் ?  அங்கிருந்து   நியூஸிலாந்து வந்தவங்க   இங்கேயே இருந்துட்டாங்க. சில வருஷம் கழிச்சு, ஊருக்குப்போய் அம்மாவையும் உடன்பொறந்தவங்களையும்  கூட்டி வந்துருக்கார்.  பழைய கதைகளை ரொம்ப சுவாரஸ்யமாச் சொல்லுவார். இப்பக்கூட நான் அண்ணனை அடிக்கடி நினைச்சுக்குவேன்.     

அண்ணனுடைய தம்பி, நம்ம சிட்டிக் கவுன்ஸில் அங்கமா பல வருஷங்கள் இருந்தார். அவரும் இப்ப சாமிக்கிட்டே போயிட்டார். அவர் பெயரில் ஒரு தெருவும் , சிறு தோட்டமும்  கூட  இருக்கு !   Ishwar Ganda Boulevard  & Ishwar Ganda Park.  இவை இவரின் முப்பது வருஷ கவுன்ஸிலர் சேவையைப் பாராட்டிய உள்ளூர் கவுன்சில் உபயம்.

நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேனில்லையா .... தோழியும் நானும் சேர்ந்து ஒரு கடை ஆரம்பிச்சோமுன்னு.... அதை நம்ம ஈஷ்வர் அண்ணன்தான் திறந்துவச்சார். (அப்புறம் நாங்களே ஆறுமாசம் கழிச்சு மூடிட்டோம்!)
பொறந்தநாள் கொண்டாட்டப் படங்களையெல்லாம் பார்த்தோம்.  அழகான கொள்ளுப்பேத்திக்கு ரெண்டரை வயசு. நல்லா இருக்கட்டும்!  அண்ணிக்கு வயசு எண்பது.  பொறந்தநாள் கேக்  நமக்கு எடுத்து வச்சுருந்தாங்க. 

Monday, August 15, 2022

15 ஆகஸ்ட் 2022

சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பிச்சு 75 வருடங்கள் ஆச்சு !
காலை  ஏழுமணிக்குக் கிளம்பிப்போறோம், இந்திய சுதந்திரதினக் கொடியேற்றும் வைபவத்திற்கு ! நடுக்கும் குளிர்... மைனஸ் ஒன்னு.  நண்பர் ஹிடேஷ் ஷர்மா, அவருடைய நிறுவனத்தில் கடந்த எட்டு வருஷங்களா நடத்திக்கிட்டு வர்றார்.  அதுக்கு முன்.... வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு இடத்தில்... எது எப்படியோ.... சுதந்திர தின விழாவிற்கான  முதல் கொடியேற்றம் இங்கே நம்ம ஊரில்தான் !  டேட் லைனில் இருக்கோமே !


























கொடியேற்றி வைத்தவர்  இந்திய ராணுவத்தின்  அதிகாரி  Lt. Col. Sadat Naseem அவர்கள்.  போன வருஷமும் இவரே கொடியேற்றினார். பணி ஓய்வுக்குப்பின் இங்கே நியூஸியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் இங்கே நம்ம ஊரில் வசிப்பதுகூட எங்களுக்குப் பெருமை தரும் விஷயமே!


வேலைநாளாக இருந்ததால், வழக்கத்தைவிடக் கூட்டம் குறைவுதான். அதனால் என்ன ? எல்லோர் மனதிலும்  போகமுடியலையே என்ற நினைப்பு இருக்கத்தானே செய்யும், இல்லையோ ? 


https://www.facebook.com/1309695969/videos/1107297323476819/

கொடியேற்றி  வணக்கம் சொல்லி முடிச்சதும் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு!   சிற்றுண்டி வகையில்  பஜ்ஜியாவும்  நல்லதொரு மசாலாச் சாயாவும்.... குளிருக்கு நல்ல இதம் !

நம்ம வீட்டிலும் ஜன்னுவும் க்ருஷ்ணாவும் விழாக்கால அலங்காரத்துடன் ஜொலிக்கிறார்கள். பாரதமாதாவும் கையில் கொடியேந்தி, மூவர்ணச் சாட்டையுடன் நிற்கிறார், தேசத்ரோகிகளை விளாசித்தள்ள !

வாங்க நாமெல்லோரும் சேர்ந்து பாடுவோம்.....  மஹாகவி நம் பாரதியின் தாயின் மணிக்கொடி பாரீர்... அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.....


https://youtu.be/ggD6oliUF-Q


மேற்படிப் பாடலை நினைவுகூர வைத்த இனிய தோழி பத்மா அர்விந்த் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்! 

நண்பர்கள் அனைவருக்கும்  இந்திய சுதந்திரநாளுக்கான இனிய வாழ்த்துகளோடு எங்கள் அன்பும் ஆசிகளும்!




Wednesday, August 10, 2022

கோவிலில் முதல் கல்யாணம்!

நேத்துதான் சிவலிங்கம் ப்ரதிஷ்டை ஆச்சு. இன்றைக்கு  அங்கே ஒரு கல்யாணம் நடக்கப்போகுது.   நிச்சயதார்த்தம், நம்ம சநாதன் ஹாலில் நடந்தது. நம்மைப் போக விடாமல்  கோவிட் முடக்கிவிட்டது அப்போதான்.  எல்லாம் ஃபிஜி ஸ்டைல் கல்யாணம். அதுவும்  மணமக்கள் மந்த்ராஜிகள் !  ( தென்னிந்தியர்கள் எல்லோரும் மத்ராஸிகள் இல்லையோ ! ) தமிழ் மக்கள் கல்யாணத்தை விடமுடியுமோ ?  மணமகள்  நம்ம தோழியாக்கும், கேட்டோ !மாரியம்மன் மேல் அளவில்லாத பக்தி உடைய தோழி, வருடாந்திர விழாவில் கரகம் சுமந்து வருவாங்க.   

சாயங்காலம் ஆறரைக்குக் கல்யாணக் கொண்டாட்டம் ஆரம்பம். சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சிம்பிளான ஏற்பாடுகள்.  அருமை.
இப்பல்லாம் கல்யாணங்களில் ஆடம்பரம் அதிகமாகிக்கிட்டுப் போகுதுல்லெ ?  இந்தியாவில் மட்டுமில்லை.... வெளிநாட்டு இந்தியர்கள் கல்யாணங்களும் வரவர இப்படித்தான்... பொதுவா ஃபிஜி இந்தியர்கள் வாழ்வில் சினிமா அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் சமாச்சாரம்.  சினிமாவில் பார்ப்பதுதான் இந்தியான்னு நினைக்கும் சனம்.  நாங்கள் போன புதுசுலே இந்தியாவைப் பத்தி ஆயிரம் கேள்விகள் கேப்பாங்க.  ஆச்சு நாப்பது வருஷம். அப்பெல்லாம் உலகம் சுருங்கவே இல்லையே... நெட்டா பாழா.... அப்போ ஃபிஜியில் டிவி ஸ்டேஷன் கூடக்கிடையாது. வீடியோ கேஸட் காலம்.  சினிமாவைத்தவிர வேறு பொழுதுபோக்கே கிடையாது.

இப்ப எதுன்னாலும் இந்தியாவில் இருந்து வரவழைக்க முடியுது.  சினிமா செட் போல அலங்காரங்கள் வரவழைச்சுக் கல்யாண மேடைகள்  அமைச்சுடறாங்க. இந்த  அலங்காரங்கள் செஞ்சுதரும் புது பிஸினஸ்களும் ஆரம்பிச்சுருக்கு. நண்பர் மகளுக்குக் கல்யாணமுன்னு போனப்ப,  அலங்காரத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்னது உண்மை !

நம்ம  சநாதன் தர்ம சபையின் பண்டிட்தான்  கல்யாணம் நடத்தித்தரப் போறார். அவரும் ரெடியாக  வந்துட்டார். தென்னிந்திய  சன்மார்க்க ஐக்கிய  சங்கத்தின் தலைவி,  கல்யாண வேலைகளைக் கவனிச்சுக்கிட்டு இருந்தாங்க.
கருவறைக்கு முன் இருக்கும் மண்டபத்தில் கல்யாணம் . நேற்று பிரதிஷ்டை ஆன சிவன், சாட்சியாக  இருக்கார். 

ஏழுமணிக்கு மாப்பிள்ளை வந்திறங்கினார்.   பண்டிட் சொற்படி அக்னி வளர்த்துத் தாலிகட்டல் ஆச்சு. எதிரில் இருக்கும் கூடாரத்தில் இருந்து கல்யாணச் சடங்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.  சரியா முக்கால் மணிநேரத்தில்   கல்யாணம் நடந்து முடிஞ்சது.



அப்புறம் ஃபோட்டோ செஷன்.  மணமக்கள் கூடாரத்துக்கு வந்து  எல்லோரையும் தனிப்பட விசாரிச்சு நன்றி சொன்னாங்க. கல்யாண விருந்து ஆரம்பம் ஆச்சு.  டின்னருக்குப் பிறகு தெருக்கூத்து நிகழ்ச்சி இருக்கு. நாம்தான்  சாப்பாடானதும்  மணமக்கள் நல்லா இருக்கட்டுமுன்னு வாழ்த்திட்டுக் கிளம்பிட்டோம்.


பண்டிட், என்னிடம் கல்யாணம் சௌத் இண்டியன் முறையில் சரியானபடி  நடந்ததான்னு  விசாரிச்சார். என்ன இருந்தாலும் நான் ஊர்க்காரி, அதிலும் பக்கா மத்ராஸி இல்லையோ !  'இன்னும் நிறைய சடங்குகள்  இருக்கும், குடும்ப வழக்கத்தின்படி.  அக்னியை வலம் வருதல் முக்கியம்'னு  சொன்னேன்.  'ஆமாம். வட இந்தியத் திருமணங்களிலும் சப்தபதி முக்கியமு'ன்னு சொன்னார்.    
சிம்பிள் & ஸ்வீட்டாக  இருந்ததைப் பாராட்டத்தான் வேணும். வாழ்க மணமக்கள் !