Friday, February 27, 2015

ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா? (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 2)


ஒரு வீட்டைக் கட்டி முடிச்சுட்டு அப்படியே விட்டுடக்கூடாது. அவ்வப்போது சின்னச் சின்ன மராமத்து வேலைகளை விடாமல் செய்வதோடு, நம் சௌகரியத்துக்கு ஏற்றபடி  மாற்றி அமைக்கத்தான் வேண்டி இருக்கு. உள்ளூர் சட்டப்படி  வெளிப்புற அமைப்பில் கை வைக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே  செஞ்சுக்கலாம். இதுக்கு  தொழில்நுட்பம் தெரிஞ்சவங்க வேணும்.நாம் பாட்டுக்கு  வீட்டு பாரம் தாங்கும் சுவரை (வெயிட்பேரிங் வால்) இடிச்சுட்டோமுன்னா வம்பாயிரும். நஷ்டத்துக்கு  காப்பீடு செஞ்சுருக்கும் காசுக்கும் நாமம்தான்.

இதையெல்லாம் கருத்தில் வச்சுக்கிட்டுக் கவனமா  வீட்டைப்  பராமரிக்கணும்.  யானை அசைஞ்சு தின்னும், வீடு ஆடாமல் தின்னும் என்றொரு பழஞ்சொல் இருக்கே!

ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா?

ஏன்? தனித்தனியா சமைச்சுக்கப் போறீங்களான்னு கேக்கப்டாது கேட்டோ:-)  இப்ப இருக்கும் அடுக்களை பெருசுன்னாலும்,  ஒர்க் ஸ்பேஸ்ன்னு பார்த்தா கொஞ்சமாத்தான் இருக்கு. நாலு பக்கங்களில் ஒரு பக்கம் பூராவும் அலமாரிகள். இன்னொரு பக்கம் அடுப்புகள்! மூணாவது பக்கம் பாத்திரம் கழுவும் ரெட்டை ஸிங்க். இதுலே வேஸ்ட் மாஸ்டர் வச்சுருக்கு.  நாலாவது பக்கம் தான் ஒர்க் பெஞ்சு( மேஜை) ன்னு சொல்லிக்கலாம். இதையே காலை உணவுக்கான ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளாவும் பயன் படுத்திக்கலாம்.  எதிர்ப்பக்கம்  பார் ஸ்டூல்கள் போட்டு வச்சுருக்கு.  மூணாவது பக்கமும் நாலாவது பக்கமும் சேரும் மூலையில்  அடுக்களை மெஷீன்களுக்குரிய  அலமாரி.

மிக்ஸி, டோஸ்ட்டர், கெட்டில், காஃபி மில், இப்படி சாமான்களை வச்சுக்கலாம். உள்ளேயே ப்ளக் பாய்ண்ட்ஸ் போட்டுருப்பதால் தேவை ஏற்படும்போது அலமாரிக்கதவைத் திறந்து  தேவையான உபகரணங்களை  ஜஸ்ட் வெளியில் கொஞ்சமா இழுத்து வச்சு  வேலை முடிஞ்சதும்  உள்ளே தள்ளிக் கதவை மூடிட்டால்....  கப்சுப்.  யாருக்கும்  ஒன்னும் தெரியாது:-)))))

சமையலறை உபகரணங்களில் இப்பெல்லாம் ரைஸ் குக்கர்,  மைக்ரோவேவ் இதுக்கெல்லாம் இடம் வேண்டித்தானே இருக்கு. இதை இந்த  கேட்ஜெட் அலமாரியில் வச்சுக்க முடியாது.  கிச்சன் பெஞ்சுலே வச்சுக்கலாமுன்னா..... இடத்தை அடைக்குது.  இந்த அழகுலே  வெட் க்ரைண்டர் என்னும் சமாச்சாரம் ஒன்னும் இருக்கே!

முந்தி பாருங்க  சாதாரணமான மின்சார ஆட்டுக்கல்தான். டில்ட்டிங்  டைப்.  கீழே வச்சுக்கிட்டு அரைச்சமா, அப்படியே சாய்ச்சு மாவை எடுத்தோமா, தண்ணீர் அந்த க்ரைண்டரில் ஊத்தி  ரெண்டு நிமிசம் மெஷீனை ஓடவிட்டுக் கழுவனோமான்னு இருந்துச்சு.  நமக்கும் ஒன்னு கப்பலில் வந்து சேர்ந்துச்சு. ஊருக்கே  முதல் ஆட்டுக்கல்.  நண்பர் ஒருவர் இந்தியா (செட்டிநாடு)  போனபோது இதுபோல ஆட்டுக்கல் வந்துருக்குன்னு பத்திரிகை விளம்பரம் (அப்பெல்லாம்(1990) குமுதம் ஆ.வி. சந்தா கட்டி வாங்குன காலம்.  ஏர் மெயிலில் வரும்!) பார்த்தேன்னு சொல்லி என்ன விலைன்னு விசாரிச்சுக்கிட்டு வாங்கன்னுகேட்டுக்கிட்டேன்.

நண்பர் ,வெட்டிக்கிட்டு வான்னு வெட்டி , அதைக் கட்டி எடுத்துக்கிட்டு வரும் ரகம். திரும்பி வந்தவர், உங்க  ஆட்டுக்கல் கப்பலில் வருதுன்னார். அடராமா!  ரெண்டு மாசம் கழிச்சு   துறைமுகத்துலே இருந்து  ஃபோன் வருது.  ஒரு பொட்டி வந்துருக்கு. வந்து காசை அடைச்சு க்ளியர் பண்ணிக்கிட்டுப் போங்கன்னு. அதுக்குக் கப்பல் கூலி, க்ளியரன்ஸ்  சார்ஜ்,  உள்ளூர்  சேவை வரின்னு  கட்டி வீட்டுக்குக் கொண்டாந்தோம். சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் கதைதான்.  ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கல்லுக்கு ஆயிரம் டாலர் வரை  செலவாகிருச்சு.

நாட்டுக்கே ஒரு கல் என்ற நினைப்புதான்.  அதை எங்கே வச்சு அரைப்பதுன்னு  யோசனை . எல்லா ஏரியாவும் கார்பெட் என்பதால் தண்ணீர் சிந்தாம அரைக்கணும். கழுவி எடுக்கணும். அப்புறம் அதை ஒரு இடத்தில் ஸ்டோர் பண்ணியும் வைக்கணும். தினமுமா அரைக்கப்போறோம்? சம்மர் காலத்துலே வாரம் ஒரு நாள். அந்த மூணுமாசம் போச்சுன்னா..... அவ்ளோதான் இட்டிலியும் தோசையும். மாவு வேற புளிக்காது  இந்தக்குளிரில். அதுக்கு வைத்தியம் செய்யறேன்னு அவனுக்குள் வச்சு  மறந்து போய் அது இட்லிப்பவுடர் ஆன கதையெல்லாம்  இருக்கு:-) கிச்சன் மேஜைக்கு அடியில்  வச்சுக்கிட்டு தேவையான போது  இழுத்து வெளியில் வைக்கலாமுன்னு அதை ஒரு  நாலு சக்கரமுள்ள  பலகையில்  வச்சு ஃபிக்ஸ் செஞ்சதெல்லாம் தனிக்கதை:-)

பத்துப்பனிரெண்டு வருசம் உழைச்ச கல் அப்புறம் சுத்தமாட்டேங்குது.  பெல்ட் தளர்ந்து போச்சுன்னு நம்மூட்டு எஞ்சிநீயர் சொன்னார்.  அப்புறம் இவர் ஊருக்குப்போனப்ப ஒரு டேபிள் டாப் கிரைண்டர் வாங்கியாந்தார். மூணு குழவிக்கல்.  இது நல்லாவும்,சீக்கிரமாவும் அரைக்குதுன்னாலும்  கம்பி வச்சு உருளைகளைத் தூக்கி  எடுத்து  மாவை வழிச்செடுக்கணும்.  பின்னே எல்லாத்தையும்  கொண்டுபோய் சிங்க்கில் வச்சுக் கழுவி துடைச்சுன்னு பெரிய பேஜார். நமக்கோ தோள் வலி (!) அதிகம்:(

சராசரி இந்தியர்களை விட (நான் சொல்றது எங்க தலைமுறை ஆட்கள்) இங்கே பொதுவா மக்கள்ஸ்,  கொஞ்சம் உயரம்தான்.   அதுக்கேத்தமாதிரிதான்  அடுக்களை கப்போர்ட், பெஞ்சு டாப் எல்லாம் செய்வாங்க. முழு கிச்சனும் செஞ்சு  விக்கறாங்க. ஏற்கெனவே ரெடிமேடா தயாரிச்சு இருக்கும் அடுக்களைன்னா மலிவாவே கிடைக்கும். எல்லாமே ஒரு ஸ்டேண்டர்டு சைஸுலே செஞ்சுருக்கும்.

 நானோ உயரம் கம்மி. வீட்டுக்குள்ளே செருப்பு போட்டுக்கும் பழக்கமும் இல்லை. உயரம் என்னதான் 10, 15 செண்டி மீட்டர் கூடுனாலும், கை வலி, தோள்பட்டை வலி வந்துருது.  இது  இன்னும் வலியை அதிகப்படுத்திருதுன்னுதான்  நம்ம வீட்டு அடுக்களையை  செஞ்சப்ப உயரம் கொஞ்சம்  குறைச்சுச் செஞ்சோம். ஒர்க் பெஞ்சுக்கு மட்டும் இன்னும்  ஒரு பத்து  செ.மீ குறைச்சேதான்  வச்சோம்.அதுக்காகவே என்னுயரத்துக்குத் தகுந்தமாதிரி ஸ்பெஷலா செய்யறோம். (அதானே.........பதிவு எழுதும் கைக்கு வலி வரலாமா? )

இந்த பட்டர்ஃப்ளை  ஆட்டுக்கல்லை கிச்சன் பெஞ்சுலே நிரந்தரமா வச்சுக்கிட்டா நல்லது.  கீழே கப்போர்ட்லே இருந்து தூக்கி வச்சு அரைச்ச பின் கீழேமறுபடி இறக்கி வச்சுன்னு..... வேலைப்பளு அதிகமா இருக்கு. ஆனால் பெஞ்சு டாப்லே போதுமான இடம் இல்லையே:(

அதான்.... இன்னொரு அடுக்களை ,இல்லேன்னா இந்த அடுக்களையைப் பெருசா மாற்றி அமைப்பது ன்னு எதாவது செஞ்சாகணும்.  முன்னாலேயே சொன்னபடி  மீண்டும் கிச்சன் ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிட்டு  எதாவது செய்யமுடியுமான்னு பார்க்கலாம். ஜஸ்ட்  இதுக்கே இங்கே காசைத் தீட்டிருவாங்க. சுலபமான வழின்னால் இன்னொரு அடுக்களை.

நம்ம வீட்டில் டைனிங் ஏரியாவை ஒட்டி  வெளிப்புறம் போக  ஒரு ஸ்லைடிங் டோர்ஸ் போட்டுருக்கோம் பாருங்க. அந்த இடம்  வீடு கட்டும்போதே காங்க்ரீட் போட்ட தரையாக  செஞ்சுக்கிட்டதுதான். திறந்த வெளியாக ரெண்டு பக்கம் மட்டும் சுவருள்ளதாக  இருக்கும். அளவு கூட  நாலு மீட்டர் பை ரெண்டு புள்ளி நாலு மீட்டர் இருக்கு.  கிட்டத்தட்ட 96 சதுர அடிகள்.  நம்ம கிச்சன் கிங்  வீடு கட்டிய புதுசுலேயே அதுக்கு மேலே  ஒரு சரிந்த கூரை  போட்டு,  மூணாவது பக்கத்துக்கு  ட்ரெல்லீஸ் வச்சு  , நாலாவது பக்கத்துக்கு நம்ம பழைய வீட்டுலே இருந்து கழட்டி எடுத்த  ஸ்லைடிங்  டோர்ஸ் எல்லாம் இங்கே சரிப்படுத்தி வச்சு இதை ஒரு அறையா அமைச்சுக் கொடுத்திருந்தார்.

அங்கே ஒருமேஜை போட்டு ஒரு ரெண்டு பர்னர் கேஸ் அடுப்பு,  டேபிள் டாப் ஆட்டுக்கல்  வச்சுக்கிட்டு இருந்தேன்.  நம்ம கிச்சன்  சாமான்கள்   மின்சாரத்துலே இயங்கும்  கடாய், தோசைக்கல்,  ஹாட் ஏர் அவன், வடை மேக்கர் ன்னு ஒவ்வொன்னாக் கூடி வர வர   அந்த மேஜையில் இடம் போதலை:(

இன்னொரு சுவர்ப்பக்கம் ஒரு நீள பெஞ்சு (இதுவும் என் தையல் மெஷீன், ஓவர் லாக்கர் வைக்க  கவுத்துப்போட்ட 'ட'  டிஸைனில் கோபால் செஞ்சதுதான்.  அப்புறம் ஒரு காராஜ் ஸேலில்  தையல் மெஷீன் வைக்கன்னே ரெடிமேடா வரும்  ஸோயிங் டேபிள் கிடைச்சதால் , நம்ம ' ட'வை நீட்டிக்கொடுத்துட்டார்  கிச்சன் கிங்) அதுலேயும் பக்கத்துலே ஒரு பிரம்பு ஸ்டேண்டிலும் நம்ம காக்டஸ் செடிகளை வச்சு இதை காக்டெஸ் கன்ஸர்வேட்டரியாகவும் வச்சுருந்தேன்.

வீட்டுப்ளானில் வீட்டுக்குள் ஒரு அடுக்களை மட்டுமே வைக்கணும் என்பது  சட்டம். ப்ளம்பிங் எலக்ட்ரிகல் வேலைகள் எல்லாம் இருக்கே. ரெண்டு அடுக்களைக்கு சிட்டிக்கவுன்ஸில்  அனுமதி தரமாட்டாங்க.

 ஆனால்....வீட்டுக்கு வெளிப்புறம் பார்பக்யூ ஏரியா ஒன்னு வச்சுக்க  அனுமதி உண்டு.சுட்டுத் திங்கும் சமாச்சாரத்துக்கு  இடம்  ஒதுக்கிக்கலாம்.
இங்கெல்லாம் வீடு கட்டிக்கணுமுன்னா வீட்டுப்ளானை சிட்டிக் கவுன்ஸிலுக்கு அனுப்பி அவுங்க அனுமதி வாங்கிக்கணும். கட்டும்போதே ஒவ்வொரு கட்டத்துக்கும் வந்து பார்த்து  சரியா இருக்கு. மேலே கட்டலாம் என்ற சான்றிதழ்  கொடுப்பாங்க.  இது கிடைக்கலைன்னா   கட்டும் வேலையைத் தொடர முடியாது. இதைப்பற்றியெல்லாம் நம்ம வீடு வா வாங்குது தொடரில் விளக்கமா(!)எழுதி இருக்கேன். வெறும் 46 பகுதிதான்:-)


அங்கே ஒரு பெஞ்சு  டாப் & கப்போர்டு வச்சுக்கலாமுன்னு  நம்ம மகள் வீட்டுக் கிச்சன் செஞ்சுதந்த கம்பெனியைக் கேட்டோம்.  சொன்ன விலை ரொம்பவே அதிகம்.  மற்ற ஹார்ட் வேர் கடைகளில்  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்  டாப்  போட்ட மெட்டல் ஒர்க்  பெஞ்ச் கிடைக்குது. அளவு தான் நமக்கு  ஒத்துவரலை. அவை 2.4 மீட்டர் நீளம். நம்ம இடம்  இதே நீளத்துக்கு இருக்குன்னாலும்  ஸ்லைடிங் கதவில் இடிக்கும்.

தேடுதல் தொடர்ந்த நிலையில் ஒரு கடையில்  2.2 மீட்டர் நீள பெஞ்சு டாப் பலகை பார்த்தோம்.  இப்ப இதுக்குக் கீழே கப்போர்டு செஞ்சுக்கலாமுன்னு கோபால் சொன்னார். கார்ட் லெஸ் ட்ரில், மத்தபடி சுத்தி , அரம் இப்படி  மரவேலைக்கான சாமான்களை,  அப்பப்ப  சாண்ட்டா க்ளாஸ் தந்துருக்காரே.

எனக்கு ஹார்ட் வேர் கடையில் சுத்திப்பார்க்கறது சூப்பர் மார்க்கெட்டை விட சுவாரஸியமான பொழுது போக்கு. இன்னொருநாள் பார்த்தால்  கிச்சன் கேபினெட் பேஸ்  வச்சுருக்காங்க.வெவ்வேற அளவுகளில்  இருக்கு. நாம் அதை வாங்கி அஸெம்பிள் செஞ்சுக்கணும்.

2.2 மீட்டருக்கு  எந்தெந்த அளவு  கேபினட் வாங்கலாமுன்னு கணக்குப்போட்டு,  முன்னூறில் ரெண்டு, அறுநூறில் ஒன்னு,  நாப்பதில் ஒன்னுமா வாங்கினோம். மீதி இருக்கும் இடம்கேஸ் ஸிலிண்டர் வச்சுக்கன்னு  ஐடியா.

கேபினட்  மட்டும் தயாரிச்சுட்டு விக்காம,  அதுக்குண்டான Hinge, Knob எல்லாம்  தனித்தனியா அவுங்களே செஞ்சு வச்சுருக்காங்க.  இதை வாங்கினவன் அதையும் வாங்கித்தானே ஆகணும்! Kaboodle என்ற பெயரில் சீனத் தயாரிப்பு.

சும்மாச் சொல்லக்கூடாது.... நான் பார்த்தவரையில் இங்கே இறக்குமதி ஆகும் சீனத்தயாரிப்புகளுக்கு  அஸெம்ப்ளிங் இன்ஸ்ட்ரக்‌ஷன்  அருமையா இருக்கு.  எதெது எங்கே இணைக்கணும். எந்த பார்ட் எதுக்கு, எந்த ஆணி எதுக்குன்னு ஒரு சின்ன தகவல் பிழைகூட இல்லாமல் இருக்கும். தைரியமா நம்பி வாங்கலாம்.



வாங்கி வந்த  மறுநாள் ஒரு முன்னூறு கேபினெட்டைப் பொருத்திவச்சுப் பார்த்தார் கோபால். சுலபமா செய்ய வருது.  க்றிஸ்மஸ் லீவுக்கான அஸைன்மெண்டா இதை ஒதுக்கி வச்சுக்கிட்டோம். லீவு ஆரம்பிச்சதும்  வேலையை ஆரம்பிக்குமுன்  சரியான கணக்கைப் போட்டுக்கலாமுன்னு நினைச்சேன். ஸிலிண்டருக்கு விட்ட காலி இடம்  வேண்டாமுன்னு தோணுச்சு. பெஞ்சு டாப்புக்கு அடியில் இன்னுமொரு நாற்பது  செமீ  கேபினெட் போடலாமா?  இன்னொருக்காக் கணக்குப்போட்டுப் பார்த்து  ரெண்டு நாற்பது, ஒரு அறுபது,  ஒரு எண்ணூறுன்னு போட்டால் என்ன?

அடடா...  ஏற்கெனவே தப்புக்கணக்கில் வாங்கி வந்தவைகளை என்ன செய்வது?  இங்கெல்லாம் நோ ஒர்ரீஸ். பாக்கிங் பிரிக்காம அப்படியே இருந்தால்  திருப்பிக்கொடுத்துட்டு மாத்திக்கலாம். வேணவேவேணாமுன்னு நினைச்சால்  திருப்பிக் கொடுத்துட்டுக் காசையும்  வாங்கிக்கலாம். என்ன ஒன்னு.... சாமான்கள் வாங்கின ரசீதைக் கடையில் காமிக்கணும்.

அதேபோல வேண்டாதவைகளைக் கொடுத்துட்டு  எண்ணூறு வாங்கிக்கிட்டோம். ஒரு முப்பது தான்,  அஸெம்பிள் பண்ணிட்டதால்  திருப்ப முடியலை. இருந்துட்டுப்போகட்டும். குச் காம் கோ ஆயேகா!
ஒருநாள் மடமடன்னு வேலையைப் பார்த்தார். நானென்ன செஞ்சேன்னு கேக்கபிடாது.  செய்முறை விதிகளைப் படிச்சு அததுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொடுப்பது என் வேலை. சுருக்கமாச் சொன்னால்...சித்தாள்! கூடவே  க்ளிக்கும் வேலையும் இருக்கே:-)



 அதிக உயரம்  வேண்டாம் என்பதால்  கேபினெட் பொதியில் இருந்த கால்களுக்கான பீடத்தை வைக்கலை.

காக்டஸ் கன்ஸர்வேட்டரியை முதலில்  காலி செஞ்சு இடத்தைச் சுத்தப்படுத்தினோம்.  செஞ்சு வச்ச கேபினெட்களை  அடுக்கிப் பார்த்தால்.....
வீட்டில் ஒரு கேஸ் அடுப்பு அவனோடு கூடியது  சும்மாத்தான் இருக்கு. பழைய வீட்டில் இருந்து கொண்டு வந்தது.  அது  விலை கூடியதும் கூட . அது வாங்கி  நாலாம் வருசம்  வீடு மாறிட்டோம்.  மகள் வீட்டுக்குப் போடலாமுன்னு வச்சுருந்து,  வச்சுருந்து அதுக்கு நேரங்காலம் அமையலை. ச்சும்மா  பொதிஞ்சு கிடக்கும் அடுப்பை இங்கே கொண்டு வந்து போட்டுக்கலாமுன்னு நினைச்சேன். பொதியைப் பிரிச்சுப் பார்த்தால் புதுக்கருக்கு மாறலை.  அவன் உட்பட முழு சமையல் செய்யலைன்னாலும்  தேவைப்பட்டால்  ஸ்டவ்டாப் மட்டும்  பயன்படுத்திக்கலாம்.  மேலும் அதிலுள்ள அவன் பகுதி, வார்மர் எல்லாம் ஸ்டோரேஜ் ஸ்பேஸாகவும் பயன்படுமே!

ஒருவழியா  வேலை முடிஞ்சதும் பார்த்தால்  இடமே பளிச்!   உடனே அவுட் டோர் சிட்டிங் இருக்கட்டுமுன்னு  நாற்காலிகள் போட்டுப் பார்த்தால் அமர்க்களம். நடுவில் வைக்க ஒரு சின்ன வட்ட மேஜை, மார்கெட்டில் நமக்காகவே காத்திருந்தது இன்னும் விசேஷம். ஒரே ஒரு சின்ன ப்ராப்ளம் என்னன்னா...



மேற்  கூரையில்  பாலிகார்பனேட் இணைச்ச இடங்கள் சிலதில்  சன்னமான இடைவெளி வந்துருக்கு போல. லேசான ஒழுகல். நம்ம கிச்சன் கிங் இருந்தால் தகவல் சொல்லிட்டு நாம் நிம்மதியா இருக்கலாம்.  வேலை முடியும்வரை தூங்கமாட்டார் அவர்.  இந்தக்கூரை அவர் போட்டது இல்லை. அவர் போட்ட கூரையில்  ஆலங்கட்டி மழை விழுந்து   நிறைய இடங்களில்  பொத்தல் விழுந்துருச்சுன்னு  மாத்த வேண்டியதாப்போச்சு.  கிங்,நாட்டை விட்டுட்டு  இப்போ அமெரிகாவில் இருக்கார்.  அவர் தம்பிதான் இப்போ நமக்கு  அப்பப்ப எதாவது வேலைக்கு வந்து செஞ்சுட்டுப் போவார்.  ரெண்டாவது கூரை மாத்தியது தம்பிதான். கிங் போல வேலையில் அவ்ளோ சரி இல்லை இவர்.  ரொம்பவே சுமார்தான்.

நானே கூரை மாத்தப்போறேன்னு ஆரம்பிச்சார் நம்மவர்.  முதல் வேலையாத் தடா போட்டேன்.  காசுக்குப் பிடிச்ச கேடு. மாற்று மருத்துவமா என்ன செய்யலாமுன்னு யோசிச்சபோது,  இன்னொரு மெட்டீரியல் கிடைச்சது அதே ஹார்ட் வேர் ஷாப்பில்.  நல்ல கனம் கூடிய  ப்ளாஸ்டிக் ஷீட். மீட்டர் கணக்கில் வாங்கிக்கலாம். இங்கே Shade Cloth ஆக பயன்படுத்தறாங்க. அதில் தேவையான அளவு வாங்கி இருக்கும் கூரையின் மேலேயே  விரிச்சு  அங்கங்கே  மரத்தோடு இணைக்கும்  ஆணிப்பட்டைகளை வாங்கி அடிச்சுப் பார்க்கலாமே!
செஞ்சோம்.  மழை வந்தால் தாங்குமா, இல்லே ஒழுகுமான்னு பார்க்க, கார்டன் ஹோஸ் எடுத்து தண்ணீர் அடிச்சுப் பார்த்தால்.....   வெற்றி வெற்றி!

என்ன ஒன்னு இப்போ கூரைக்கு அடியில்  நாற்காலிகளில் உக்கார்ந்தால்  சூடு அதிகமாத் தெரியுது. எப்பவாவது வரும் சூரியன் என்றாலுமே வந்துட்டான்னா..... கூரையைப் பொத்துக்கிட்டுல்லே வர்றான்.

நமக்கென்ன ஐடியாவே வராதா என்ன?  போடு ஒரு ஷாமியானா:-)  தேடிப் பார்த்ததில்  அனிமல் தீம் உள்ளது மாட்டுச்சு.  ஆணிப்பட்டை வச்சு இதையும் ஒரு வழியாப் பொருத்தி இருக்கோம்.

எல்லாம் நல்லபடி அமைஞ்சதில் நம்ம வீட்டுத் தொழிலாளிக்கு  ரொம்பவே மகிழ்ச்சி. இதே மகிழ்ச்சியோடு  இங்கே சமைச்சுக்குங்கன்னு சொல்லி மகிழ்ச்சியை அதிகரிச்சுட்டேன்:-)

தொழிலாளியின் மற்ற தொழில் விவரங்கள்  அடுத்து வரும் பதிவுகளில் வரும்!

PINகுறிப்பு:    நியூஸி ரிட்டர்ன் ஆட்டுக்கல்  புராணம்: இந்திய வாசம்  சமயம் இங்கிருந்து  கொண்டுபோன சாமான்களுடன் சாந்தாவையும் தூக்கிப்போட்டோம். சென்னையில் அதை ரிப்பேர் செஞ்சால் ,  நம்ம ஹோப் ஃபவுண்டேஷனுக்கு  பயன்படுமான்னு கேட்டால்,  மலர்விழி (ஹோப் இயக்குனர்)  உடனே வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஹோப் ஹோமுக்கு கல் வேண்டி இருந்த சமயமாம். 'இருவது ரூபாய் செலவில் இந்த பெல்ட்டையே வெட்டி ஒட்டுனதும், ஜோராய் அரைக்குது மேடம். உங்க பெயர் சொல்லி குழந்தைகளுக்கு இன்னிக்கு இட்லி'ன்னு  ஃபோனில் சேதி சொன்னாங்க.   பயனாகுது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி!




Wednesday, February 25, 2015

ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்' அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)





ராயல் கோர்ட்லே  இருக்கும்  க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை!  எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம் போகணுமே!





ரெஸ்ட்டாரண்ட்  பணியாளரிடம்,  மதுரை ஸ்பெஷல் என்னன்னதும் திருதிருன்னு முழிச்சவர் வடை  என்றார். ஒரு பக்கம் ஹைய்யா நம்ம வடைன்னு மகிழ்ச்சியா  இருந்தாலும்,  வடையா?ன்னதுக்கு,  தோசைன்னார். குறைஞ்சபட்சம் இட்லின்னுசொல்லி இருக்கப்டாதோ?  மல்லிப்பூ இட்லி!  திகைச்சுப்போன பணியாளர் 'நான் இந்த  ஊர் இல்லீங்க'ன்னார்:-)))
அப்புறமா ஒருசிலர் சாப்பிட வந்தாங்க.







இந்த வருச இந்தியப்பயணத்தின் மொத்த நோக்கமே  சேரநாட்டுதிவ்ய தேசங்களை  தரிசிப்பதுதான். இடையில் மதுரை மாநாடு, நமக்குக் கிடைச்ச போனஸ்!  முதலில் போட்ட திட்டம் இதனால் கொஞ்சம் மாறிப்போச்சு. அதனால் என்ன ... இன்னொருமுறை போகலாம் என்று தீர்மானிச்சு, மதுரைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.

மதுரையில் இருந்து தேனி வழியா போடிநாயகனூர். (கோபாலின் அவதார ஸ்தலம்!) உறவினர்களைச் சந்திச்சுட்டு, அப்படியே பூட்டிக் கிடக்கும் வீட்டையும் ( மாமனார் & மாமியார் ரெண்டு பேரும் சாமிகிட்டே போய்  3 வருசம் ஆகுது) எட்டிப் பார்த்துட்டு போடிமெட்டு வழியா மூணார். அங்கே ஒரு ரிஸார்ட்டில்  இரவு தங்கிட்டு, மறுநாள்  கோட்டயம்.

ஆனால் இடைவிடாது பெய்த பெருமழையில் போடிமெட்டு பாதையில் நிலச்சரிவும், கற்கள் விழுந்து பாதைகள் மூடியிருக்குன்னும் சேதி. வேற வழி என்னன்னு பார்த்தால்  ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி , செங்கோட்டை வழியா செங்கண்ணூர் போயிடலாம்.

ஸ்ரீவில்லின்னதும் உள்மனசுக்குள்ளே மகிழ்ச்சிதான். நம்ம ஆண்டாள் இருக்காளே!  போனமுறை கொஞ்சம் இருட்டும்நேரம் போனதால் சரியாப் பார்க்கலை என்ற மனக்குறை வேற பாக்கி. இப்பப் பகல்  பொழுது என்பதால்  கூடுதல் மகிழ்ச்சி.

ஆனால்....நம்மவர், 'அதிகநேரம் கோவிலில் இருக்கமுடியாது. சாமி தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினால்தான்  அதிகமா இருட்டுமுன்  கேரளா போய்ச் சேரலாம். இதுக்கும்  மலைப்பாதை வழியாத்தான் போகணும்' என்றார்.

என்ன ரூட்ன்னு  வலையில் பார்த்தால்  தென்காசி வழி! ஆஹா.... குற்றாலம். பார்த்துட்டுப் போகலாம்தானே? தேவதைகள் சதாஸ்து சொன்னார்கள்!














திருப்பரங்குன்றம், திருமங்கலம்,  க்ரிஷ்ணன்  கோவில் வழியா  ஸ்ரீவில்லிக்குள் நுழையும்போது மணி பத்து.  மதுரையிலிருந்து  கிளம்பி சுமார் ஒன்னரை மணிநேரம் ஆகி இருக்கு.  எண்பது கிமீதான்.  கோபுரவாசலில் கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.



















நீண்டு போகும் பாதையில் யாருமே இல்லை.  என்ன இப்படின்னு நடந்து போனால், கொஞ்ச தூரத்தில்  காவல்துறைக்காரர்,  இதன்வழியா அனுமதி இல்லைன்னார். ஆமாம்.... இதை கோபுரவாசல் அருகிலேயே உக்கார்ந்து சொல்லக்கூடாதா?  நோ எண்ட்ரி போர்டாவது  வச்சுருக்கலாமுல்லெ? இல்லைன்னா ஒரு கம்பித்தடுப்பு.... அதான் நேராப்போகும்  சாலைகளில் ஏகப்பட்டது  வச்சு வேகத் தடுப்பா  ஆகி இருக்கே!



சரின்னு வலது பக்கமாச் சுத்திக்கிட்டுப்போறோம். எதிரில் பூக்காரம்மா.  ஒரு முழம் தலைக்கு வாங்கிக்கிட்டேன். இன்னும் அஞ்சே முழம்தான் இருக்குன்னு.... இழுத்தாங்க. சரி சூடிக்கொடுத்தவளுக்கே  ஆகட்டுமே!






 இன்னிக்குச் சீக்கிரமா வீட்டுக்குப்போய்  வீட்டுவேலையை முடிக்கப்போறேன்னு சந்தோஷமாச் சொன்னாங்க. பெயரென்னங்கன்னதுக்கு  'கோதை'ன் னு பதில் !














கோவிலுக்குள் போய்  ஆண்டாளம்மாவை தரிசித்தோம். பூவை வாங்கி அவளுக்கு மாலையாகச் சார்த்தினார் பட்டர். (காலடியில் வீசி எறிய இன்னும் படிக்கலை போல. அவரை சென்னை, வெங்கட்நாராயணன் சாலை திருப்பதி தேவஸ்த்தானக்கோவில் பட்டர்களிடம் ட்ரெய்னிங் அனுப்பணும்!)

கண்ணாடிக்கிணறை எட்டிப்பார்த்துட்டு ஏற்கெனவே வந்து போய் எழுதியும் ஆச்சு என்பதால் பக்கத்துலே இருக்கும் நந்தவனத்துக்குப் போனோம்.










கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் இங்கே:-)



ஆண்டாள்  அவதாரம் செஞ்ச இடம். திருப்பூர நந்தவனம்.  போனமுறை உள்ளே போகலையேன்னு பார்த்தால் சந்நிதி காலி. பட்டர் தேவுடு காத்துக்கிட்டு இருந்தார். உள்ளே போய் ஸேவிச்சுக்கிட்டு அப்படியே வடபத்ர சாயி தரிசனத்துக்குப் போனோம்.



 இடது பக்கம் சக்கரத்தாழ்வாருக்கு அழகான மண்டபமும் சந்நிதியும். சக்கரத்தாழ்வாருக்கு  ஒரு கும்பிடு நேர் எதிர்ப்புறம் வானுயரக் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ராஜகோபுரம்.



படிகள் ஏறி மேலே போனால்....மூலவருக்கு முன் பெரிய திரை! தைலக்காப்பு !

இதென்னடா, இப்போ  ஐப்பசிதானே? இல்லையோன்னுன்னு விசாரிச்சால்..... இங்கே ஐப்பசிக்கு(ம்) இப்படியாம். வலதுபக்கத்துலே  உற்சவர்களை வச்சு அங்கேதான்  தினப்படி பூஜை நடக்கறது.சடாரி, தீர்த்தம் கிடைச்சது.








 பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே  இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி?  என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............  ன்னு சொல்லணுமோ!



நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களில்(108)  நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு  நாப்பத்தி எட்டாவது இடம்(48)

இந்த முறையும்  கோவில் குளத்தையும், தேர் நிற்குமிடத்தையும் பார்க்கவே இல்லையேன்னு  இப்ப இந்தப் பதிவு எழுதும்போதுதான் நினைவுக்கு வருது:(



நாப்பதே நிமிசத்தில்   தரிசனம் முடிச்சு ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பி, மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோபுரம் பார்த்து  வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு. ஏனோ நம்ம வடுவூர் குமார் நினைவுக்கு வந்தார்:-)













வழியில் ஒரு குன்று, ப்ரேக் இன்ஸ்பெக்ட்டர்களின் ஊர்வலம், இன்னொரு குன்றின்மேல்  கோவில்(என்ன கோவிலோ?) அப்புறம் சேத்தூர் வெயிலுக்குகந்த விநாயகர் திருக்கோவில் சிலபல சமாதிகள் இப்படி  எல்லாம் கடந்து போறோம்.



விவசாயம் நல்ல முறையில் நடக்குதுன்னு கண்ணுக்கு எதிரில் தெரியும் காட்சிகள் சொல்கின்றன.









கடைய நல்லூர் கடந்து தென்காசி நோக்கிப்போகும்போதே சாரலின் குளிர்மை மனசுக்குள் வந்துருச்சு. இடது பக்கம் திரும்பி தென்காசி ஊருக்குள்ளே போகாமல் நேராகக் குற்றாலம்தான் அடுத்த நிறுத்தம்.






எல்லாரும் குளிக்க ரெடியாகுங்க.

தொடரும்.....:-)