Wednesday, February 11, 2015

நான் செத்து வா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 21)

திருமயத்தில்  இருந்து  34 கிலோ  மீட்டர் பயணம். நம்ம சீனிவாசன் இந்தப் பக்கங்களில் வந்ததில்லையாம். அங்கங்கே வழியை விசாரிச்சுக்கிட்டு வந்து சேந்தப்ப மணி சரியா மாலை 5.20.  நாட் பேட். அம்பது நிமிசத்துலே வந்துட்டோமே!


மழை பேய்ஞ்சு சதசதன்னு இருக்கு, கோவிலுக்கு முன்னால் இருக்கும் கார் பார்க். வசதி ஒன்னும் இல்லைன்னாலும்  பார்க்கிங் சார்ஜ் வசூலிக்கக் கரெக்ட்டா வந்துர்றாங்க.  கொஞ்சம் புகழ் பெற்ற கோவில் என்பதால் கூட்டமும் அதிகம் வருதே!


108 திவ்யதேசங்கள்  வரிசையில் இந்தக் கோவிலுக்கு 42 வது இடம்.
( இந்தப் பட்டியல்களைச் சரிபார்க்கலாமுன்னா....  வலையில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேற எண் வரிசை. சில கோவில்களில் அவுங்களே எழுதிப் போட்டுருப்பது  நம்பக்கூடிய தகவல்.  ஆனா எல்லாக் கோவில்களிலும் இந்தத் தகவல்கள் எழுதி இருக்காங்களான்னு தெரியலை. ஒருவேளை எழுதிப்போட்டுருப்பது என் கண்களில் படவில்லையோ என்னவோ!)
(கூகுளாண்டவர் அருளியது)
ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருக்கோட்டியூர் (திருக்கோஷ்டியூர்)

எனக்கென்னமோ திருக்கோஷ்டியூர் என்பதுதான் சரியான பொருளில் இருக்கு.  தமிழ்ப்படுத்தறோமுன்னு  கோட்டி பண்ணிட்டாங்க போல. ஆமா.... கோட்டின்னா பைத்தியம் இல்லையோ?

அட!  ஆமால்லெ?

( ஆழ்வாரே கோட்டியூர் என்றுதான் சொல்லி இருக்கார் என்பதே உண்மை! யாரும் நீ எப்படிச்சொல்லப்போச்சுன்னு வரிந்து கட்டிக்கொண்டு விவாதம் செய்யமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்) 

 அதென்ன கோஷ்டிதான் சரியா இருக்குன்னா எப்படி?

இதோ கதை...:-)

ஹிரண்யகசிபு இல்லாத அட்டகாசம் எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான்.  வாங்குன வரம் இப்படி  அவனுக்கு அகம்பாவத்தைக் கொடுத்து, துளிர்விட்ட திமிர் இப்போ பெரிய மரமாகிக் கிடக்கு. வீட்டுக்கு உள்ளேயோ  வெளியேயோ, பகலிலேயோ, இரவிலேயோ, கடவுளாலோ, மனிதனாலோ, மிருகத்தாலோ,  இப்படி ஏகப்பட்ட  கண்டிஷன்ஸ் போட்டு வரம் வாங்கி இருந்தானில்லையா?

மனிதர்களை மட்டுமில்லாம தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பிச்சதும்தான்  கொடுத்த வரத்தின் ஆழம் புரியுது. குய்யோ ,முறையோன்னு  அடிச்சுக்கிட்டு மஹாவிஷ்ணுவைத் தேடி வர்றாங்க தேவர்கள் எல்லோரும்.  கூட்டமா வந்தார்கள். இல்லைன்னா கோஷம் போட்டுக்கிட்டு  கோஷ்டியா வந்தார்கள். சரியா?  மஹாவிஷ்ணுவை  சந்திச்சு, என்ன செய்யலாம், எப்படிச்செய்யலாம் என்பதற்கு மந்த்ராலோசனை நடக்குது இங்கே.

டைம், இடம் எல்லாம் சரியாச்சு. ஆனால் மனிதனா மிருகமா என்பதைத்தான் இன்னும் கொஞ்சம் டீப்பா ஆலோசிக்கணும்.  யோசிச்சாங்க.  ஆ.... கிடைச்சுடுத்து!  பாதி மிருகம், பாதி மனிதன்  என்ற ஐடியா கிடைச்சு சிங்கமும் மனுஷனும் என்று நரசிம்ம  அவதாரத்துக்கு அடிக்கல் நாட்டுனது  இங்கே!

அவதாரம் பார்க்க எப்படி இருக்குமுன்னு கேட்டவங்களுக்கு  மேக்கப் டெஸ்ட் போட்டுக் காமிச்சிருக்கார்  மஹாவிஷ்ணு.  ஸோ.... நரசிம்மனுக்கும் இந்த ஊருக்கும்  ஒரு பொருத்தம் அமைஞ்சது இப்படித்தான்:-)

போகட்டும். கோஷ்டியா வந்தவங்க கோஷ்டியாத்தான் திரும்பிப் போயிருப்பாங்க, இந்த (திரு) கோஷ்டியூரில் இருந்து:-)  இப்ப ஒரு மாதிரி பெயர்க்காரணம் புரிஞ்சுருக்கணுமே!

ஆமாம்....   எதுக்கு இந்த இடத்தை மீட்டிங் போடத் தேர்ந்தெடுந்தாங்களாம்?  அரக்கர்கள் யாரும் அண்ட முடியாத இடம் இதுதானாம். கடம்ப மகரிஷியின் ஆசிரமம் இது. அவரும் அரக்கத்தொல்லை இல்லாத இடம் வேணுமுன்னு  தவமிருந்து இந்த இடத்தை வரமா வாங்கியிருந்தாராம். அரக்கர்கள் இதுக்குள்ளே நுழைஞ்சால் அவர்கள் தலை'டமார்'னு  வெடிக்குமோ என்னவோ!

மழை விட்ட அந்த நிமிஷம் கோவிலுக்குள் நுழையறோம். அதுக்கு முன் வண்டியிலிருந்து இறங்குனதும் சில க்ளிக்ஸ்.  கோபுரத்தைப் பார்த்தால் கொஞ்சம் சிவாலய ஸ்டைல் இருக்கோ?

உள்ளே நுழையும் நாம் முதலில் பார்க்கும் சந்நிதி சிவனோடதே!   பெருமாள் கோவிலுக்குள்ளே சிவனா!!!!   பெரிய நந்தியும் லிங்கமுமா இருக்கார்! சுயம்பு லிங்கம் என்கிறார்கள். நின்றான்  இருந்தான் கிடந்தான்னு  விஷ்ணுவின் மூணு கோலங்களைச் சொல்வது போல் சிவலிங்கத்துக்கும்  இருக்காம். ஆவுடையார் அளவும் லிங்கத்தின் அளவும் ஒன்னா இருந்தால்   இருந்தா(ன்)ர். ஆவுடையாரைவிட லிங்கம் உசரமா இருந்தால் நின்றா(ன்)ர்.  ஆவுடையாரைவிட லிங்கம் சின்னதா இருந்தால் கிடந்தா(ன்)ர் என்று கிடைச்ச தகவலின் படி இங்கே லிங்கர் கிடக்கிறார்!

அவரை  வணங்கிட்டு உள்ளேபோறோம். இடப்பக்கம் திரும்பும்போதே....  சந்நிதிகள் சில இருக்கு.  நவநீத கிருஷ்ணன் என்று நினைவு. (இல்லை சந்தான கோபாலனா? )  கண்ணுக்கு நேரா ஒருஇடத்தில் ஏழெட்டுப்பேர்  கூட்டமா உக்கார்ந்து  ப்ரபந்தம்  சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அங்கே இடதுபக்கம் போகக் கை காமிச்சதால்...படிகள் ஏறிப்போறோம்.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் எம்பெருமாள்  இருக்கார்! புஜங்க சயனத்தில்  உரக மெல்லணையான். நாம் போன நேரம், சாமி  சாப்பிட்டுமுடிச்சு ப்ரஸாத விநியோகம். கும்பிட்டகையோடு சுடச்சுட  ததியன்னம், சுண்டல் கிடைச்சது.  நெடுநெடுன்னு நின்ற ஒருத்தர், இந்தப் பக்கம் வாங்க. பிரஸாதம் வாங்கிக்குங்க என்றெல்லாம் சொல்லி நம்மை கைடு பண்ணறார்.   கோவில் காரியஸ்தராக இருக்கணும்.

நாங்க  மீண்டும் படி இறங்கி கீழ்தளத்தில் சுத்திவரலாமுன்னு போறோம். ஒரு மண்டபம் மாதிரி இருக்குமிடத்தில் ஏராளமான அகல்விளக்குகள் (எரியாதவை) இருக்கு.  என்னன்னு தெரியலை. யாரைக் கேக்கணுமுன்னும் புரியலை. முக்கியமா படம் எடுக்கலாமா? இதுக்கு எங்கே விசாரிக்கணுமுன்னு புரியாம ஆஃபீஸ் எங்கேன்னு தேடறேன்.

அதுக்குள்ளே நாம் மேலே பார்த்தவர்,  'வாங்க,  விமானம் பார்க்கணுமுன்னா வாங்க'ன்னு  கம்பீரமான குரலில்  சொல்வது காதில் விழுந்து அவரைப்பின் தொடர்ந்தோம். பெருமாள் தரிசனத்தில் நம்ம கூட நின்ன கூட்டம் இப்ப இவர்கூடவே வருது.  தாயார்சந்நிதிக்குப் பின்னால் ஒரு சின்ன படிக்கட்டுகள் மேலே போகுது. அதில் ஏறி தளத்தில் நின்னா.... அங்கிருந்து இன்னும் மேலே போகும் குறுகிய வழியைக் கைநீட்டிக் காமிக்கிறார்.
நன்றி: சுஜாதா தேசிகன்

நாலுபடி ஏறிப் பார்த்துட்டு, இது எனக்கில்லைன்னு கீழே இறங்கிட்டேன். மற்ற கூட்டம் எல்லாம் மேலேறிப் போய்க்கிட்டு இருக்காங்க. நம்ம சீனிவாசனும் மேலேறிட்டார்.   வரலையான்ன  கோபாலிடம் நீங்க போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்கன்னேன். அவரும் மேலேறிப் போனார். படிக்கட்டையே அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருந்தவளை, அந்தக் கம்பீரக்குரல்  'நீங்களும் ஏறி வாங்கம்மா' ன்னு கூப்பிட்டது.

தயக்கத்தோடு இன்னும் நாலைஞ்சு படி ஏறினேன். தலைக்கு மேலே ஒரு பொந்து போல இடம். படிகளின் அளவு ரொம்பக் குறுகிக்கிடக்கு. கால் வச்சா வழுக்கி விழுவேன்.  ரிஸ்க் எடுக்கணுமான்னு யோசனை.
'இடதுபக்கம் நீட்டிக்கிட்டு இருக்கும் கல்லைப் பிடிச்சுக்கிட்டுக் காலை அழுத்தமா வச்சு இந்தப்பக்கம் வலதுகையால்  இந்தக் கல்லைப்பிடிச்சு வாங்க'ன்னது குரல். கேசவா நாராயணா கோவிந்தான்னு மனசுக்குள்ளே முணுமுணுத்துக்கிட்டே  குரல்சொன்னதைக் கேட்டேன். முதுகில் கைப்பை வேற ஒரு கனம். பொந்தைக் கடந்ததும் தவழ்ந்து போய்  நாலடியில் நிமிர்ந்து நின்னது நினைவுக்கு வருது.

வலதுபக்கம் கருவறை விமானம் அடுக்குகளா மேலே போகுது. எதோ வேலை நடப்பதால்  கட்டங்கட்டமா மூங்கில் சாரங்கள் விமானத்தைச் சுத்தி.
குரலுக்குச் சொந்தக்காரர்  திரு.பழனியப்பன்.  ரொம்ப வருசமா கோவில் ஊழியம் போல.  மொத்தக் கூட்டத்தையும்  வழிநடத்தும் பாங்கு அருமை. நான்  நின்ற இடத்தில் இடது பக்கம் இன்னொரு கட்டைச் சுவர். அதனிடையில் இருக்கும்  த்வாரம் வழியா அடுத்த பக்கத்துக்குப் போகணும்.  உடம்பை  ரெண்டா மடிச்சுக்கணும்.  முதுகு பத்திரம்.  நிமிர்ந்தப்ப  விமான அடுக்குகளில்  ஒன்று இதுன்னு புரிஞ்சது.


எல்லோரும் வந்தோமான்னு உறுதிப்படுத்திக்கிட்டு அந்தப்பக்கம் தெருப்பார்த்து உட்கார்ந்திருக்கும் ஸ்ரீ ராமானுஜர் சிலையைக் காமிச்சு திருக்கோஷ்டியூர் நம்பி 'கதை'யைச் சொல்ல ஆரம்பிச்சார் கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரரான  பழனியப்பன்.


ராமானுஜர், திருக்கோஷ்டி நம்பியிடம் உபதேசம்  பெற ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி நடந்தே திருக்கோஷ்டியூர் வந்து சேர்வாராம். (அப்போ ஏது கார்? இல்லேன்னா வண்டி கட்டிக்கிட்டு வரணும்.)  நம்பிகள் வீட்டுக் கதவைத் தட்டறார். யார் என்று குரல் வீட்டுக்குள்ளே இருந்து வருது.  'நான் ராமானுஜன் வந்துருக்கேன்' என்கிறார். ' நான் செத்த பின் வா 'என்று வீட்டுக்குள்ளே இருந்து பதில் குரல்.

 சரி.நாம் வந்த வேளை சரி இல்லை போல இருக்கேன்னு ராமானுஜர் திரும்பிப் போயிடறார். இப்படியே பதினேழு முறை நடந்துருக்கு.  ஒவ்வொரு முறையும் நடந்து வந்து நடந்து போய்.....  போகவர  160 மைல் . பதினெட்டாவது முறை வந்து கதவைத் தட்டறார்.  யார்? குரலுக்கு பதிலாக 'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்றதும் கதவு திறக்குது.

'நான்'  என்ற  சொல்லில் உள்ள  என்னவோ ஒன்னு (அகம்பாவமோ?)  இத்தனை முறை நடக்க வச்சுருச்சு பாருங்க.

ஆனாலும் பொறுமையுடன், முயற்சியைக் கைவிடாமல் பதினேழுமுறை வந்து போன  ராமானுஜனைத் தன் சீடராக ஏத்துக்கிட்டு மந்த்ரோபதேசங்கள்  செய்யறார்.   அதுலே முக்கியமான ஒன்னு .... எட்டெழுத்து மந்திரம்.  மோட்சம் கிடைக்கும் வழி. 'வேற யாருக்கும் சொல்லப்படாது. சொன்னியோ.... உனக்கு நரகம்தான்' என்று கண்டிப்பாச் சொன்ன நம்பிகள், ' ஓம் நமோ நாராயணா'வை  உபதேசம் செஞ்சார்.

அங்கிருந்து கிளம்பின அடுத்த நிமிஷம்,  கோவில்  விமானத்துக்கு மேலே ஏறி, (இப்ப நாம் வந்த வழியிலேதான் ஏறிப்போயிருப்பார், இல்லே!  அப்பெல்லாம்  மக்கள் ஒல்லியா இருந்துப்பாங்க. அதுவும் இவர்  நடையோ நடைன்னு  நடந்தவராச்சே!)   'ஓம் நமோ நாராயணா' வை ஊரெல்லாம் கேட்கும்படிச் சொல்லிட்டார்.  எல்லோருக்கும் மோட்சம் கிடைக்கட்டுமுன்னு நினைச்ச பரந்த மனசு.

வீட்டு வாசலில் இருந்தோ இல்லை மாடியில் இருந்தோ  இதை நம்பிகளும் பார்த்திருப்பார்தானே?  'நரகத்துக்குத்தான் போகப்போறே.  வெளியே சொல்லக்கூடாத ரகசியமுன்னு சொல்லி  உனக்கு மட்டும் உபதேசிச்சதை  எப்படி ஊரைக்கூட்டிச் சொல்லப்போச்சு'ன்னு கடிந்ததும்,  'நான் ஒருத்தன் நரகத்துப் போனாலும், மற்ற உயிர்கள் அனைத்தும்  மோட்சத்துக்குப் போகும்தானே' என்றார் ராமானுஜர்.

நீரே 'எம்பெருமானார்'  என்று வாழ்த்தி அப்படியே  சீடர் ராமானுஜரை  கட்டித்தழுவி ஆசீர்வதித்தாராம் திருக்கோஷ்டியூர் நம்பிகள்.
அதோ அந்த வீடுதான்  நம்பிகள் வீடுன்னு காமிச்சார் பழனியப்பன்.
நன்றி: சுஜாதா தேசிகன்

 கண்முன்னே விரிந்த தெருவில்  ரெண்டு பக்கமும் வீடுகளே இருக்க,எது எதுன்னு ராமானுஜர் சிலையின் தோள்வழியா எட்டிப் பார்த்தேன்.
அதோ....முன்னால் சார்ப்புப் போட்டு  மேலே ஜன்னல் பக்கம் ஒரு  போர்டு இருக்கு பாருங்கன்னார் . 'கல் திருமாளிகை'ன்னு எழுதி வச்சுருக்காங்களாம்.

மறுபடி உடம்பை ரெண்டாய் மடிச்சு  கட்டைச்சுவரின் இடைவெளியில் இந்தப்பக்கம் வந்ததும்  விமானத்தை வலம் வந்தோம். இங்கேயே மூணடுக்குகள் !
(கூகுளாண்டவர் அருளியது)

ஒவ்வொன்னா சுற்றி ஏறிப்போய்ப் பார்க்கப் படிகள் இருக்கு.  கிடந்தும், நின்றும் இருந்தும்  அருள் பாலிக்கிறார்  நம்ம பெருமாள்.  கம்பிக்கதவு வழியாக் கண்குளிர தரிசிக்கலாம். பழங்காலச் சித்திரங்கள் !

அஷ்டாங்க விமானம் என்றும் சொல்லி, இப்போ விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தும் வேலை நடப்பதையும் சொன்னார்.  நம்மால் ஆன ஒரு தொகையை கைங்கரியத்துக்குத் தரணுமுன்னு உடனே முடிவு செஞ்சோம்.

மறுபடி கீழே இறங்கிப் போகணுமேன்னு நினைச்சதும் மலைப்பு!

 திகைச்சுப்போய்  கீழே பார்த்துக்கிட்டே  எதிர்சுவரில் இருந்த மூலைக் கல்லின் நீட்டிய முனையைப் பிடிச்சேன்.  'அதேதாம்மா. இங்கே இதுக்குக்கீழே ஒரு கால் வச்சு மெதுவா இறங்கிடலாம் 'என்றார்,   பொந்து வழிக்கு மேல் இருக்கும்  கட்டைச்சுவத்துக்குப் பின் இருந்த பழனியப்பன்.


பெருமாளே என்று மனசுக்குள் அரற்றிக்கிட்டே  கால் வச்சவள் எப்படியோ படிகள் வழியா கீழே இறங்கி வந்தே வந்துட்டேன்!  இப்ப நினைச்சாலும் ப்ரமிப்பா இருக்கு.... இத்தனை பெரிய  யானை எப்படி மேலே போய் வந்துச்சுன்னு:-)))

ஆயிரக்கணக்கான வருசங்களா  வழி இப்படியே இருக்கு பாருங்க. இனியும் இப்படியேதான்  இருக்கும்!

இன்னும் கோவில் பிரகாரங்களைச் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் நமக்கோ காலில்  திளைக்கும் கஞ்சி. இன்னுமொரு கோவிலையும்  பார்த்துக்கிட்டு மதுரை போய்ச் சேரணும் ரொம்ப இருட்டும் முன். இன்னொரு முறை வரத்தான் வேணும். அவன் கூப்பிடுவான்தானே?

இன்னொருக்கா சிவனைக் கும்பிட்டு விட்டு லிங்கத்தின் அளவைப் பார்த்தால்  இவர், உள்ளே  கிடக்கும் பெருமாளுக்குக் கம்பெனி கொடுப்பதைப்போல்  சின்ன சைஸிலே சயனலிங்கமா இருக்கார்.

 பேயாழ்வார்,  பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் என்று அஞ்சு ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்ச இடம். மொத்தம் 37 பாசுரங்களாம்.

கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே.

பெரியாழ்வார்  பாடிய பாசுரங்களில் ஒன்று மேலே!  (தினமலரில் போட்டுருக்கு!)

குலசேகரன் வந்து பார்த்து சரியான்னு சொல்வார் என்று நினைக்கிறேன்.

ஆனால் இப்படி வெவ்வேற இடத்தில் இருந்து எடுத்துப்போடுவது  எனக்கு விருப்பமில்லாத செயல். அதனால்தான் பதிவுகளில் பாசுரங்களை  (நாலாயிரத்தில்  நானே தேடிப் பார்த்தாலொழிய )போடுவதில்லை.  ஜஸ்ட் ஒரு கோடி காமிச்சுட்டுப்போய்க்கிட்டே இருந்தால் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தேடிப்பார்த்துப் பயனடைவதோடு நமக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் நன்றி உடையவளாக இருப்பேன்!


பார்க்கிங் சார்ஜ் அடைச்சுட்டு  மதுரை போக வழி கேட்டுக்கிட்டு இருந்தார் சீனிவாசன். அப்படி என்ன சொல்லிட்டாருன்னு இப்படி விறைப்பா!!


சுலபமா இருக்குமுன்னு ஒரு வழியைச் சொல்லிப்பிட்டுக் கடைசியா இப்படியேப்போனா வருமுன்னு நினைக்கிறேன்னாராம்:-))))

ரிஸ்க் வேணாமுன்னு  நாம் அங்கே போன பாதையிலே திரும்பி வந்து மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம்.

நல்ல நேரத்தில் போயிருக்கோமென்று மனசு கொண்டாடியது உண்மை.  தினமும்  சாயரக்ஷை பூஜை முடிஞ்சதும்  கோபுரப்ரவேசம்  கொண்டுபோய் எல்லாத்தையும் நல்லாவே விளக்கிச் சொல்றார் பழனியப்பன்.  ரொம்ப லேட்டாப்போயிருந்தோமுன்னால் தவறவிட்டிருப்போமில்லையா!

மனசுக்கு ரொம்ப நிறைவா  இருந்துச்சு.

 "எப்படிமா? எப்படி?"

" எல்லாம் பெரும் ஆள் க்ருபை!  ஏத்தி இறக்கிப்பிட்டான், இல்லே!"

 தொடரும்.............:-)


PIN குறிப்பு:  இந்தப் பதிவுக்கும் படங்கள்கிடைக்குமான்னு தேடியதில் நம்ம சுஜாதா தேசிகன் எடுத்தது  கிடைச்சது.  அதுலே ஒரு ரெண்டை இங்கே போட்டுருக்கேன். அவருக்கு  என் மனம் நிறைந்த நன்றிகள்.


24 comments:

said...

திருக்கோட்டியூர் சென்றுள்ளோம். தங்களின் பதிவு வழியாக மறுபடியும் இன்று செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

said...

உங்களின் கதையை ரொம்பவே ரசித்தேன் அம்மா...

எனது இன்றைய பதிவை திரட்டிகளில் இணைக்க வேண்டும் என்பதால், System Bookmark-ல் உள்ள ஒரு இணைப்பு : http://www.divyaprabandham.org/alwar/1087

said...

Thirukkoshtiyur is very close to my native village. Sowmya Narayana Perumal temple is very beautiful. Thanks for posting the pictures in your blog.

said...

இதை எல்லாம் நினைச்சுத் தான் நாங்க சத்தம் போடாம நழுவிட்டோம். அது சரி, வாசல்லே ஒரு ஐயங்கார் மாமி காஃபி, இட்லி வியாபாரம் பண்ணிட்டு இருந்தாங்களே! இருக்காங்களா இப்போவும்? சிட்டுக்குருவிங்க கூட வந்து இட்லி எல்லாம் சாப்பிட்டுட்டுப் போகும். எல்லாக் குருவிங்களும் பத்திரமா இருக்குதுங்களா? நாங்க இட்லி எல்லாம் வேண்டாம்னுட்டு காஃபி மட்டும் குடிச்சோம். :)

said...

ஊருக்கே மோட்சம் கிடைத்த எடத்துல இருந்திருக்கீங்க. ஆண்டவன் அருள் உங்களைக் காக்கட்டும்.

ஊருக்கே மோட்சம் கிடைக்கும்னா தனக்கு மட்டும் நரகத்தை ஏத்துக்குறதுக்குப் பெரிய மனசு வேணும்.

அந்த வழியில் ஏறுவதும் இறங்குவதும் நம்ம கைலயா இருக்கு? பரந்தாமன் கைப்பிடித்து ஏற்றிவிட்டால் கோபுரத்தின் உச்சி என்ன வாழ்க்கையில் பேரின்பத்தின் உச்சியே தெரியுமே.

திருக்கோட்டியூருக்கு வேற பொருள் இருக்குன்னு படிச்ச நினைவு. தேடிப் பாக்குறேன் டீச்சர்.

said...

அண்ணன் பெருமாள் கோவிலில் திவ்ய தேசங்கள் வரிசையை கோவிலின் சுற்றுச் சுவரில் படங்களாகப் பார்த்திருக்கிறேன்.

கோவிலின் படங்கள் பார்க்கும்போதே பார்க்கத் தோன்றுகிறது. எங்கள் சித்தப்பா (சித்தி கணவர்) வீட்டு குலதெய்வம்! இன்னும் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் வருகிறது.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கும் இன்னொருமுறை போகத்தான் வேணும். சரியாப் பார்க்கலைன்னு ஒரு எண்ணம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க தெய்வா.

உங்க ஊர் கோவில் ரொம்பவே பெருமை வாய்ந்ததாச்சே!

இன்னொரு முறை கண்ணாரக் கண்டு களிக்க எண்ணம் உண்டு.

'அவன்' கட்டாயம் கூப்பிடுவான்!

said...

வாங்க கீதா.

அக்கம்பக்கம் ஏறிட்டுக்கூடப் பார்க்கலைப்பா. இருட்டும் நேரம் கோவிலைவிட்டு வெளிவரும்போது.

இன்றையப் பயணம் இன்னும் பாக்கி இருக்கேன்னு ஒரே ஓட்டம்தான்.

said...

வாங்க ஜிரா.

இப்போ மறுமுறை நினைச்சுப் பார்த்தாலும் 'எப்படி' என்ற பிரமிப்பு தீரலை!
அவ்வளவு கீக்கிடம் அந்த இடம்!

பொருள் கிடைச்சதும் சொல்லுங்கோ!

said...

வாங்க ஸ்ரீராம்.

சீர்காழி பக்கம் இன்னும் போகலை. அங்கே 15 திவ்ய தேசங்கள் இருக்கு.

அதில் ரெண்டுதான் இதுவரை தரிசனம் ஆச்சு.

தனியா ஒரு பயணம் வரும் காலங்களில் போகணும்தான். அப்போது லிஸ்ட்டை மறக்காமல் எழுதி வச்சுக்கணும்.

தகவலுக்கு நன்றி.

said...

ஆஹா! நான்கூட ஒரு இரண்டு தடவை ஏறி இறங்கிட்டேன்!
உங்களோட கூட இப்போ மூணாவது முறை!
எனக்கும் இன்னும் பிரமிப்பு அடங்கல.

said...

//மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சு.//

உங்க பதிவை படித்ததும் எனக்கும் மனநிறைவாக இருந்தது. சிறப்பான விளக்கங்களுடன் அருமையான பதிவு.

said...

டீச்சர், இன்று தான் ஹோம்வொர்க் எல்லாத்தையும் ஒருவழியா முடிச்சேன்...:)) இனிமே ஒழுங்கா செய்வேன் என்று நினைக்கிறேன்....:)

நானும் சிறுவயதில் திருக்கோஷ்டியூர் சென்று வந்திருக்கிறேன். கோபுர தரிசனமும் செய்து ராமானுஜர் கதையையும் கேட்டதை இப்போ மீட்டுக்கொண்டாச்சு. அப்படியே குன்னக்குடியும், பிள்ளையார்பட்டியும் சென்று வந்தோம். அது ஆச்சு இருபது வருடங்களுக்கும் மேலாக அத்தைப் பெண்ணின் கல்யாணம் முடிந்த கையோடு...:)))

said...

பிரமிப்பு இன்னும் அடங்கலை எனக்கு துளசி. எத்தனை மகத்துவமான இடம். புண்ணிய ஸ்தலம் .சௌம்ய நாராயணன் பெயர் தான் நம் சின்னவனுக்கு. சதய நட்சத்திரத்தில் பிறந்ததால். படி ஏறுவதற்கே கெஞ்சும் கால்கள் இவ்வளவு இடுக்குகளில் ஏறிப் பார்த்திருக்கின்றன என்றால் பகவான்தான் துணை. நரசிம்ம வைபவமும் அங்கே நடந்திருப்பது இன்னுமொரு பெரிய தகவல் .

said...

எங்களுக்கும் மனம் நெறஞ்சு போச்சு !!!!

said...

திருக்கோஷ்டியூர் சென்றதில்லை.....

உங்கள் பதிவின் மூலம் கதையையும் கேட்டு, படங்களைப் பார்த்தாயிற்று....

நேரில் செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்!

said...

வாங்க ரஞ்ஜனி.

எப்படிப்பா?எப்படி ஏறினோம்? எப்படி இறங்கினோம்?

உண்மைக்குமே அடங்காத வியப்புதான்!

said...

வாங்க ரமாரவி.

ரசித்து வாசித்துள்ளீர்கள்! நன்றீஸ்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இப்ப இன்னொருக்காப் போனாலும் உங்களுக்கு விமானம் வரை போக பிரச்சனையே இருக்காதுப்பா. ரோஷ்ணிக்குட்டிக்கு ரொம்பப்பிடிக்கும்!

said...

வாங்க வல்லி.

படியேறும்போது உண்மையாகவே எந்தோழியை நினைச்சுக்கிட்டு, மேலேறிப் போனதும் கோபாலிடம் சொல்லவும் செஞ்சேன்.

எனக்கும்தான் நினைக்க நினைக்க இன்னும் பிரமிப்பு தீரலையாக்கும்!

said...

வாங்க சசி கலா.

அற்புதமான இடம்ப்பா. சான்ஸ் கிடைத்தால் விடவேண்டாம், கேட்டோ!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கணும் என்று எம்பெருமாளிடம் வேண்டிக்கறேன்.

இடுக்கில் ஏறுவதும் இறங்குவதும் உங்களுக்கு ஜூஜுபி!