Friday, August 28, 2015

எதைச் சொல்ல, எதை விட! .....( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 75)

நாப்பதினாயிரயமுன்னு  சொல்றாங்க.  இருக்கும்தான்.  உண்மையைச் சொன்னால்  அதுக்கும்மேலேயே இருக்கணும்.  இண்டு இடுக்கு விடாம.....  எப்படிங்க?  எப்படி?  நம் தலைக்கு மேல் ஓடும் விதானத்திலும் கூட.....   படுத்துக்கிட்டேவா?  கண்ணுலே  பொடி விழுந்துறாது?  தரையில் வச்சுச் செதுக்கிட்டு அப்புறம் தூக்கி நிறுத்தித் தலைகீழா வச்சுருப்பாங்களோ?   இது இப்படின்னா... தூணு? சதுரத்தூண் கல்லில் நாலு பக்கமும் வெவ்வேற  நிகழ்ச்சிகள்!  எப்படிங்க....  எப்படி?





சொன்னா நம்பமாட்டீங்க....  எங்கியோ தொலைதூரத்தில் இருக்குன்னு முன்னெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்த இடம், நம்ம ராயாஸ்லே இருந்து  வெறும் நாலே கி.மீ!   பத்தே நிமிசம்தானாச்சு அங்கே போய்ச் சேர!

ரொம்பவே அழகாப் பராமரிக்கப்பட்ட புல்வெளிக்கு நடுவிலே கோட்டைச்சுவர் போல் இருக்கு. அதுக்குள்ளில் இருந்து எட்டிப்பார்க்கும் விமானம்!  சுத்திக்கிட்டு முன்புறம் போறோம். ஒரு ஏழடிப்பள்ளமா இருக்கும்  முற்றத்தில் இடப்பக்கம் கோபுரவாசலும்  நேரெதிரா வலப்பக்கம் ஒரு  மண்டபத்தில் பெரிய நந்தியும்! பக்திமேலீட்டால் விளக்கும், சூடமுமா ஏத்தி கல்லையே கரிபிடிக்க வச்சுருக்கு நம்ம சனம்.:-(  ப்ச்....

நந்திக்குப்பின்புறம் இருக்கும் இன்னொரு  தனி மண்டபத்தில் புள்ளையார்! ( நாம் முற்றத்துக்குள் இறங்கிய  படிகளுக்குப் பதிலா   கோவிலுக்கு நேரெதிரா இருந்த படிகளில் இறங்கி இருந்தோமுன்னா  முதல் மண்டபம் பிள்ளையார், அப்புறம் பலி பீடம், அதற்குப்பின் நந்தி மண்டபம்னு வரிசை சரியா இருந்துருக்கும்.)

உசரமா இருக்கும் பலிபீடத்துக்குப் பக்கவாட்டில் சின்னப் படிகள் அமைச்சுருக்காங்க. அந்தப்படிகள் சப்தஸ்வரங்கள் இசைக்குமாம்!. மேலிருந்து ஒரு கல்லை உருட்டிவிட்டால் சரிகமபதநி!  சோதிச்சுப் பார்க்கறோமுன்னு படிகளை ரொம்பவே சோதனைக்கு ஆளாக்கிட்டாங்க போல! அதைச்சுத்தி இப்போ கம்பி அரண்:-(

கோவில் வாசல் ரெண்டு பக்கமுள்ள உயரத்திண்ணைகளோடும், பெரிய மரக்கதவுகளோடும் இருக்கு. கதவில் கோவிலைக் கட்டிய மன்னரின் பெயரும், கோவிலைப்பற்றிய  முக்கிய தகவல்களும் பூஜா விவரங்களும் இருக்கும் தகவல் பலகையைச் சணல் கயிறுகட்டி மாட்டி வச்சுருக்காங்க.  கொஞ்சம் அழகுணர்ச்சியோடு செஞ்சுருக்கலாம்.  ஒருவேளை திருஷ்டிபரிகாரமா வச்சுருக்காங்களோ என்னவோ!

வழிபாட்டு நேரம் காலை 7 முதல் பகல் 12, மாலை 4 முதல்8 வரை.  சரபேஸ்வரருக்கு ஞாயிறுதோறும் சிறப்பு வழிபாடு. ப்ரதோஷ வழிபாடு. அமாவாசைகளில் குபேரலிங்க வழிபாடும் உண்டு.

கோவிலை தொல்பொருள் இலாகா தத்தெடுத்துக்கிட்டு இருக்குன்னாலும்   2004 ஆம் ஆண்டு முதல் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோவும்  அறிவிச்சு இருக்காங்க.  தஞ்சை அரண்மனை தேவஸ்தானப் பொறுப்பில்தான்  கோவில் பூஜைகள் நடக்குதாம்.

பெரிய மரக்கதவுகளில் திட்டிவாசல் போன்ற ஒரு  அமைப்பு. அதன்வழியாத்தான் நாம் உள்ளே போகணும். கொஞ்சம் உயரத்தைக் குறைச்சிருக்கலாம், ஒரு அரை அடி.

கண்ணுக்கு நேரா கொடிமரம். அதுக்குப்பின்  எக்கச்சக்கத் தூண்கள் உள்ள ஒரு மண்டபம். நூற்றுக்கால் மண்டபம் என்று நினைக்கிறேன். இங்கிருந்தே சிற்பவேலைகளின் அற்புதம் தொடங்கிருது! கொடிமரத்தின் பின்னால் மண்டபத்துக்குள் சின்னதா ஒரு பலிபீடமும் நந்தியும். இங்கேதான் பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் இருக்கு.

இங்கே  இப்ப முக்கியமுன்னு எனக்குத்தோணும் ஒரு சமாச்சாரம் சொல்லிக்கறேன். இதைப்போல சரித்திர முக்கியத்துவம் உள்ள ப்ரமாண்டத்துக்கு விளக்கங்களோடும் படங்களோடும் இருக்கும் கைடு புத்தகம் ஒன்னு போட்டு விற்பனைக்கு வச்சுருக்கலாம். இல்லைன்னா  இடங்களையும்,  முக்கியமானவைகளையும் விளக்கிச் சொல்ல  அரசு அங்கீகாரம் பெற்ற  வழிகாட்டிகளையும் நியமிச்சு இருக்கலாம். அரசு உத்தியோகமுன்னு இல்லை, ஃப்ரீலான்ஸ் கைடு. அவுங்களுக்கும் வருமானத்துக்கு ஒரு வேலையும் கிடைச்சமாதிரி ஆச்சுல்லையா! இங்கே சுத்தம்.........

சுற்றுலாத்துறை,  உலகின் மற்ற இடங்களையும் (எ.கா. கம்போடியா) கவனிச்சு, நம்நாட்டு அற்புதங்கள்மீது கொஞ்சம் பாசமும் காமிச்சு  ஏற்பாடுகள் செஞ்சால்  அன்னியச் செலாவணியை அள்ளலாம்.
ஆங்.... சொல்ல மறந்துட்டேனே....  தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கும்  இடங்களுக்குள் போகணுமுன்னா  ஒரு  டிக்கெட் வாங்கிக்கணும். சின்ன தொகைதான். அஞ்சே அஞ்சு ரூ. (தாஜ்மஹலுக்கு மட்டும் 20ரூ)  இங்கே  கோவில் என்பதால் டிக்கெட் வைக்கலை போல இருக்கு. (தஞ்சாவூரிலும் ப்ரஹதீஸ்வரர் ஆலயத்துக்கு டிக்கெட் இல்லைன்னு நினைவு)


அடுத்து ராஜகம்பீர மண்டபம். தேர் வடிவத்தில் இருக்கு.  ஒரு பக்கம் யானை தேரை இழுப்பது போலவும், இன்னொரு பக்கம் குதிரை இழுப்பதுபோலவும் இருக்கே! இப்படி எதிரெதிரா  இழுத்தா தேர் நகருமோ?  இதுலே யானையின் தும்பிக்கைகிட்டே முதலை போல ஒன்னு வாய் திறந்துக்கிட்டு..... ஐயோ.... என் யானை.....

கோஷ்டத்தில் அங்கங்கே அக்னி, வீரபத்ரர், லிங்கோத்பவர், அகஸ்தியர், நாகராஜர், மஹாவிஷ்ணு, ப்ரம்மான்னு ஏகப்பட்ட சிலைகள் இருந்தாலும் முதல் பரிசைத் தட்டிக்கிட்டுப் போவது நம்ம அர்த்தநாரீஸ்வர் சிலைதான்!


ரொம்பவே நுணுக்கமான சிற்பவேலைகள்.  ஒரு பொண் உடம்புக்கு  மூணு செட் கால்கள். ஒவ்வொரு  செட் கால்களும் அந்த உடம்புக்குப் பொருத்தமாத்தான் இருக்கு.

இன்னொரு  சிலையில் ரெண்டு பெண்கள் ஒரு வட்டம் போட்டுருக்காங்க. ஒருத்தியின் வலது காலும் இன்னொருத்தியின் இடது காலும்,  அவரவர் இடது வலது கைகளும் சேர்த்து உண்டாக்கிய வட்டம். இதுலே ஒருத்தியின் வலது கையும் மற்றொருத்தியின் இடது கையும் சேர்ந்து விடுபட்ட கால்களைப் பிடிச்சு  ஒரு சதுரம் உண்டாக்குது. சூரிய நமஸ்காரத்துக்கு  ரெண்டு கை விரல்களையும் கோர்த்து ஒரு சதுரத்துளை உண்டாக்குவோம் பாருங்க...அப்படி!

இன்னொரு சிற்பத்தில் ஒரு கர்ப்பிணி. ஃபுல் டெர்ம் முடிஞ்சு இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பொறந்துரும். அவளை ரெண்டு பக்கமும் தாங்கிக்கிட்டு இருக்கும் பெண்கள். மருத்துவதாதிகளா இருக்கணும்.

எல்லாம் சின்னச் சிற்பங்கள்தான். ஆனால் நிலமை நமக்குப் புரிஞ்சுருது. வலியின் வேதனை முகத்தில்! நல்லபடி பெத்துப் பிழைக்கணுமேன்னு மனதில் பதற்றம் கூட வந்துருது!



வாலி சுக்ரீவன் சண்டையில் ராமன் வில் ஏந்தி  வாலியைக் கொல்ல ரெடியா இருக்கார். தயக்கத்தோடு லக்ஷ்மணன் பக்கத்தில் நிற்கறான்.



கரும்பு வில்லால் தவத்தில் இருக்கும் சிவனுக்கு மலரம்பு வீசும் மன்மதன்!

நீங்களே பாருங்க.... கோவில்மாடு இப்படிப் பக்கத்துலே வந்து நின்னு மூச்சுவிட்டால்  பயம் வருமா வராதா?


நாப்பதாயிரம் சிற்பங்கள் !  எதைச் சொல்ல எதை விட?






பொதுவா நம்ம கோவில்களில் ராஜகோபுரம்தான் பெயருக்கேத்தாப்போல் பெருசா கம்பீரமா நிக்கும்.  உள்ளே சந்நிதிகளில் அவைகளின் முக்கியத்துவத்தைப்பொறுத்து சின்னச்சின்ன விமானங்கள்  இருக்கும். மூலவரின் கருவறைக்குமேல்  கொஞ்சம் பெரிய அளவில் விமானம் இருக்கும்.  சில  கோவில்களில் கோபுர ஸ்டைலிலேயே சின்னச்சின்ன கோபுரங்களை விமானமா அமைச்சுருப்பாங்க.

ஆனால் சோழர்களின் ஸ்டைல் வேற மாதிரி போல.  மூலவர் இருக்கும் கருவறை விமானத்தையே  ப்ரதானமா  கட்டறாங்க. நம்ம தஞ்சைக் கோவிலிலும் இப்படித்தான்.  கோவிலின் முகப்பு வாசல் கோபுரம் சின்னதாத்தான் இருக்கு.

இங்கேயும் மூலவர் ஐராவதேஸ்வரர் கருவறை விமானம் மட்டுமே  உயரமானது. 85 அடி உசரம். இதுதான் ரொம்பதூரத்தில் இருந்து பார்த்தாலுமே நம்ம கண்களுக்கு மதில் சுவருக்கு மேல் தலை தூக்கி எட்டிப் பார்ப்பது போலத் தெரியுது!

இந்திரனுடைய வாகனமான ஐராவதம் என்ற பெயருடைய வெள்ளை யானைக்கு ,  தான் தேவர்களுடைய அரசனுக்கான யானை என்பதில் கொஞ்சம் கர்வம் இருக்கு. ஒரு நாள்  துர்வாஸமுனிவர் (இவரைத்தான் வில்லன் மகரிஷி ஆக்கிட்டாங்களே!) மஹாவிஷ்ணுவைப் பார்க்கப்போறார். வந்தவருக்கு  மாலை மரியாதைகள்  செய்து உபசரிக்கிறார், விஷ்ணு.  பேசி முடிச்சுட்டு வரும் சமயம்,  எதிரில் இந்திரன்  தன்  ஐராவதத்தில் ஏறி வந்துக்கிட்டு இருந்தார்.  முனிவரை வணங்கியதும்,  நலமுண்டாகட்டும் (இப்படித்தானே சொல்லணும்,இல்லையோ?) என்று வாழ்த்தித்  தனக்கு  ஸ்ரீவைகுண்டத்தில்  கிடைச்ச மாலையை இந்திரனுக்குக் கொடுக்கறார் முனிவர்.

அதை வாங்கிய அந்த இந்திரன், அங்கே அவர் கண் முன்னாலேயே  தன் யானையின் தலையில் வச்சான். சட்னு யானை அதைத் தன் தும்பிக்கையால் எடுத்துத் தன் காலடியில் போட்டு மிதிச்சது.  (அவர் போனபிறகு கொடுத்திருக்கப்டாதோ? ) வந்துருச்சு கோபம் நம்ம துர்வாஸருக்கு!  "பிடி சாபம். அகந்தை பிடிச்ச ஐராவதமே....  நீ உன் ஒளியை இழந்து கருப்பாக ஆகக் கடவாய். உன்  அரச அந்தஸ்து எல்லாம் காலி"

சாபம் கிடைச்சதும் மனம் வருந்தி அழணும். சாபவிமோசனம் கேட்கணும். சாபம் கொடுத்தவர் அதில் இருந்து மீள வழி சொல்வார் என்ற சம்ப்ரதாயத்தின் படி எல்லாமாச்சு.  இங்கிருக்கும் சிவபெருமானை வணங்கித் தவம் செய்யணும். சிவன் மனம் இரங்கினால் சாபவிமோசனம்.

இதுலே பாருங்க.... சிவன் கொஞ்சம் அப்பாவிதான். இல்லாமலா   எல்லோரும்  ஆலகால விஷத்தைப் பார்த்துத் தயங்கிக்கிட்டு இருக்கும்போது, 'உலக நன்மைக்குன்னா, என்னைப் பற்றிய கவலை இல்லை' ன்னு சட்னு எடுத்து விழுங்கினார், சொல்லுங்க .  இதுலே   அவரைக் குறிச்சுப் பாடினாலே மனம் இளகிருவார்.  உடலை வருத்தித் தவம் இருந்தால் கேட்கணுமா?

 இப்படித்தான் அசுரர்களுக்கும் கூட வரங்களை அள்ளித் தந்துருவார்.
ஐராவதமும் அதே போல் தவமிருந்து  சாபவிமோசனம் அடைஞ்சது.  அதனால் சிவனுக்கும் ஐராவதேஸ்வரர் என்ற  பெயரும் உண்டாச்சு.  அடியார்கள் பெயரைத் தன்னுடன் இணைச்சுக்கறதுலே அப்படி ஒரு மகிழ்ச்சி நம்ம சிவருக்கு!

இப்படித்தான் தாரன் என்ற அசுரன்,  தேவர்களைப் போரில் வெல்லணும், தனக்கு மரணமே நிகழக்கூடாது, இப்படி (அசுரர்கள் பொதுவாக வேண்டும்) வரங்களைப் பெற  சிவபெருமானைக் குறித்து தவம் செஞ்ச இடம் என்பதால்  தாராசுரம் என்ற  பெயர் வந்ததுன்னும் சொல்றாங்க.

கோவிலைக் கட்டிய மன்னர் இரண்டாம் ராஜராஜ சோழன்.  பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டி இருக்கார்.  கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் இந்தக் கோவிலும் அடுத்தடுத்துக் கட்டுனதாத்தான் இருக்கு. (நான் இன்னும் கங்கைகொண்ட சோழபுரம் போகலை:-(  முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சைக் கோவிலைப்போலவே ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டி இருக்காராம்)

முதலில் இந்தக் கோவிலுக்கு ராஜராஜேஸ்வரம் என்ற பெயர் இருந்து அப்புறமா, ஐராவதேஸ்வரர் கோவில்னு  எந்த நூற்றாண்டிலோ மாறி இருக்கு.  தாராசுரத்தில் இருக்கும்  ஐராவதேஸ்வரர் கோவில்னா இப்ப எல்லோருக்கும் புரிஞ்சுருது பார்த்தீங்களா.

சோழர்களின்  கட்டடக்கலை ஆர்வத்தில் கட்டப்பட்ட மூணு பெரிய  கோவில்களில் இதுதான் வயசில் இளையது. மன்னருக்குப் பெண்கள் மேல் மதிப்பு நிறைய இருந்ததாகவும்,  அதனால்தான் அம்மனுக்குத் தனிக்கோவிலாகவே கட்டுனதாகவும் கேள்வி. மன்னருக்கு நான்கு மனைவியர் தெரியுமோ? பட்டத்தரசியின் பெயர் அவனி முழுதுடையாள்! அப்புறம் வரிசையா புவன, தரணி, உலகுன்னு முழுதுடையாளைச் சேர்த்துக்கணும்.


நாட்டியப்பெண்களின் உருவங்கள்தான்  கோவில் முழுக்க. (கம்போடியாக் கோவில்களில் எங்கே பார்த்தாலும்  அப்ஸரஸ்கள், பலவித நாட்டிய போஸில் இருப்பது நினைவுக்கு வந்தது)


விஷ்ணு துர்கைக்கு  எதிரில் சண்டிகேஸ்வரரா இருக்குமோ?
 ஓன்னு திறந்த வாய்க்குள்ளே யாராக்கும் கல்லைப் போட்டு வச்சது?

சரபேஸ்வரருக்கும், தக்ஷிணாமூர்த்திக்கும் தனித்தனி சந்நிதிகள். மக்கள்ஸ் ஏறிப்போய் தரிசிக்க இரும்புப் படிகள் போட்டு வச்சுருக்காங்க.


பாருங்க...  நாயை வாக் கூட்டிக்கிட்டுப்போறார்!

மூலவர் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில்தான் கோவில் அலுவலகம் இருக்கு. சந்நிதி  திறக்கலை. நாலுமணி ஆகுமுன்னு சொன்னார் அங்கிருந்தவர்.  இன்னும் அரை மணி  காத்திருக்கணும் என்றதும் கோபாலுக்கு ஒரு சுணக்கம். நாளைக் காலை கும்மோணத்தில் இருந்து கிளம்பறோம். இப்பப்போனால்  இன்னும்  கும்மோணத்தில்  தரிசிக்க வேண்டிய கோவில்களில் ஒன்னு ரெண்டாவது போகலாமேன்னார்.




உண்டியலா?  தகர டப்பா.....:-(   கொஞ்சம் கலை அழகோடு டிஸைன் செஞ்சுருக்கக் கூடாதா? வண்ணம் அழிஞ்சுக்கிட்டு இருக்கும் பழைய ஓவியங்கள்.......  ப்ச்....

இங்கே இப்ப நாம் நிக்கும் கோவிலுக்கு நேரெதிரா இன்னும் ஒரு கோவில்கூட இருக்கு. அதுவும் இந்தக் கோவிலில் சேர்த்திதான். இப்போ போய்ப் பார்க்கத் தோணலை. அடுத்தமுறை வரும்போது(!) பாக்கி வச்சவைகளை முடிச்சுக்கலாமுன்னேன். ரெண்டு மணி நேரமா பிரகாரங்களிலும்  மண்டபங்களிலும்  கல்தரையில் நடந்து நடந்து கால் வலி. கோவிலுக்குள் இருக்கோம் என்பதால் வெறுங்கால்தான்.

கல்தரையின் சூடு நம்ம பாதங்களைப் பதம் பார்த்துருமோன்னு கயிறு நடை விரிப்பு போட்டு வச்சுருக்காங்க. தீமிதிக்காமல் போகலாம்.  ஆனால் பல இடங்களில் கயிறு  பிரிஞ்சு போய் கிடக்கு. விரலில் சிக்கினால் தொபுக்கடீர்! பல் போயிரும் அபாயம்.
நான் பயப்பட்ட மாதிரியே மழைத்தண்ணீர் வடிகால் இல்லை போல:-(  ராஜராஜன் இதையெல்லாம் யோசிச்சு இருக்கமாட்டாரா என்ன?  இருந்து, ஒருவேளை அது  அடைஞ்சுருக்கோ?  தண்ணீர் தேங்கி பாசிபிடிச்சுக்கிட்டு வருது.  கவனிக்கணும்.  அம்பாள் சந்நிதியிலும் நந்திதேவருக்கு அருகிலும் அபிஷேகத்தண்ணி விழுந்து  மஞ்சளா இருக்கு.  அப்படியே விட்டு வச்சால் ஆபத்துதான். துடைச்சாவது  வைக்கலாம். சுத்தப்படுத்துனாதான் பக்தின்னு யாராவது எடுத்துச்சொன்னால் தேவலை.

இவ்ளோ நேரம்  சுத்திக்கிட்டு இருக்கோம், கோவிலில் வேற  பயணிகள் யாரையும் காணோம்.  இது என்ன ஏகாந்த சுற்றல்னு நினைக்கும்போது  ஒரு வெளிநாட்டுத் தம்பதிகள் (பெல்ஜியம்) வந்தாங்க. கொஞ்சம் கோவில் கதை சொல்லி கைடு வேலை செஞ்சேன்.  அப்ரதக்ஷணமா வந்தவங்களுக்குப் பார்த்துப் போங்க. கயிற்றில் ஒரு கண் இருக்கட்டுமுன்னு  எச்சரிக்கை வேற!  ஏதோ நம்மால் ஆனது.
 கிணறு, தலவிருட்சம் இருந்த இடத்துக்குப் பக்கத்தில், மண்டபமா இருப்பதை கம்பிக்கதவு போட்டுவச்சு,  கோவிலை சீரமைச்சபோது கிடைச்ச சிலைகளை  சின்ன ம்யூஸியம் போல  காட்சிக்கு வச்சுருக்காங்க. ராஜராஜனின் விவரம், சோழப்பேரரசின் விவரங்கள் எல்லாம் கூட இருக்கு.  ஒரு சிலைக்குக் காதும் மூக்கும் குத்தியிருக்கு.  தர்ப்பை போல மெலிஸான நீளக்குச்சியால்  காது மூக்கு ஓட்டைகளைக் காட்டினார்  அந்த இடத்தைப் பார்த்துக்கும் நபர். இத்தனை வருசமாச்சு.... மூக்கு ஓட்டைகள்  அடைஞ்சு போகலை பாருங்க:-)  மூக்குத்தியும் கம்மலும் கூடப்போட்டு வைக்கலாம்!


சரி. கிளம்பலாமுன்னு  கோவில் வாசலுக்கு வந்தால் அப்பதான் ரெண்டு லேடீஸ் உள்ளே வர்றாங்க. கூடவந்த  வெள்ளைக்காரப் பயணிக்கு  விளக்கம் சொல்ல ஆள் இருக்கு!

தாராசுரம் கோவிலின் சிற்பக் கலைகளை முழுசுமா ரசிச்சுப் பார்க்கணுமுன்னா ஒரு மூணு மாசம் அங்கே இருந்தால் போதும்போல!

  PIN குறிப்பு:  எடுத்த 373 படங்களில்  கொஞ்சூண்டு  இந்தப் பதிவில் போட்டேன்.  பாக்கி?

 ஃபேஸ்புக்கில் ஆல்பம் போட்டு வைக்கறேன்.  அங்கே அப்லோடு ஆவது  சுலபமா இருக்கு. நேரம் கிடைக்கும்போது பாருங்க.  லிங்க் கொடுக்கலாமுன்னா  குறிப்பிட்ட  போஸ்ட்க்கு  வரமாட்டேங்குதே:-(  link க்ளிக்கிப்பார்த்துட்டு சரியா இருக்கான்னு யாராவது சொன்னால் நலம்.

https://www.facebook.com/gopal.tulsi/media_set?set=a.10204932166646466.1073741839.1309695969&type=3



தொடரும்.....:-)