Friday, August 21, 2015

தம்பிக்குக் கொடுக்கணுமுன்னா அண்ணங்கிட்டே கொடு !... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 73)

இப்ப வேறெந்தக் கோவில்னு கேட்ட கோபாலிடம் நேரா ஒப்பிலியப்பந்தான் என்றேன்.  திருக்கண்ணமங்கை  பக்தவத்ஸலனுக்கும் ஒப்பிலிக்கும் இடையில் 30 கிமீ தூரம்.  வரும்வழியில்தான் நேற்று இருட்டும் நேரத்தில் பார்த்த நாச்சியார் கோவில், திருச்சேறை சாரநாதப்பெருமாள்  இருக்குன்னாலும் .... எனக்கு இப்ப  ஒப்பிலியப்பன் கோவில் ரொம்பவே முக்கியமா இருக்கு. காரணம்? சொல்றேன்.  இந்த அவசரத்திலும் போறபோக்கில் வண்டியில் இருந்தே நேத்து விட்டுப்போன  நாச்சியார் கோவில் புஷ்கரணியைக் க்ளிக்கினேன்.  சுமாரா வந்துருக்கு.  படத்தை அந்தப் பதிவில் சேர்த்துடணும்.

 நேத்து காலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த தோழி ரேவதி (உங்க வல்லியம்மா!) இன்னிக்கு  ஒப்பிலியப்பனைப் பார்க்க வர்றாங்க.  காலையில் கிளம்பி இருப்பாங்க. எத்தனை மணிக்கு வந்து சேரப்போறாங்கன்னு தெரியாததால்....  ராயாஸ்லெ அறைச்சாவியைக் கொடுத்து, இப்படி  நண்பர்கள் வர்றாங்க.  வந்ததும்  அறைச்சாவியை அவுங்ககிட்டே கொடுத்து அறையில் போய் இருக்கச் சொல்லுங்கன்னு  சொல்லிட்டு, ரேவதிக்கு  அறை எண்ணை செல்லில்  தெரியப்படுத்திட்டு இப்ப வந்துருக்கோம்.
கோவில் வாசலில் வந்து இறங்குனதும் கண்ணை ஓட்டினால்  காணோம்.  சரின்னு உள்ளே போகும்போதே பூமா கண்ணில் பட்டாள். குளிச்சு முடிச்சு வந்தவளுக்கு அலங்காரம் நடக்குது. அவளுக்கே முன்னுரிமைன்னு  பார்த்துப்பேசி க்ளிக்கிட்டு இருக்கும்போது அந்தாண்டை இருக்கும் கோவில் குளம் கண்ணில்  பட்டது. பகலிராப்பொய்கை.  பொதுவா  கோவில் புஷ்கரணிகளில் இரவில் குளிக்கக்கூடாதுன்ற நியமம் இருந்தாலும் இங்கே  மட்டும் விதிவிலக்கு.
 பாருங்க, கால் ஃப்ரம்  ஸ்ரீவைகுண்டம்.  செல்லில் பேசிக்கிட்டே நாமத்தைச் சாத்தறார் யானைக்காரர்!  அவளும் ஆடாமல் அசையாமல் நிக்கறாள்.
போனமுறை பார்த்தபோது குளம் வேறமாதிரி இருந்ததோன்னு என் கவலை. அப்போ நவகிரக டூர்லே  கிரகங்களைத் தரிசித்து  முடித்த மறுநாள்  கும்மோணம் கோவில்களைத் தேடிப்போனப்ப உப்பிலிக்கும் ஒரு அரைமணி நேரம். அப்போ யானையைப் பார்க்கலை.
தங்கரதம் வச்சுருக்கார் சாமி! 
'வா, போய் பெருமாளை ஸேவிச்சுட்டு வரலாமு'ன்னு  இவர் என்னை இழுத்துக்கிட்டுப் போனார். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில்  என்னப்பன், ஒப்பிலியப்பன். வலது பக்கம் துளசி என்னும் பெயரில் வளர்ந்த பூமாதேவி!

மார்கண்டேய மகரிஷிக்குக்  குழந்தை வேணும் என்று தோணுச்சு. பெருமாளை மனதில் இருத்தித் தவம் செய்யறார்.  அதே சமயம்  ஸ்ரீவைகுண்டத்தில் பூமா தேவிக்கு  ஒரு ஆசை. பெருமாளின் மார்பில் மஹாலக்ஷ்மிக்கு இடம்  கிடைச்சது போல் தனக்கும் ஒரு இடம் வேணுமுன்னு.... (அதான் மனசில் நீ இருக்கும்போது....  மார்புலே வேற இடம் வேணுமாக்கும்? வேணும்... அப்பத்தான் நான் இருப்பது பளிச்ன்னு வெளியே தெரியும், இல்லையா!)


அமிர்தம் எடுக்கத் திருப்பாற்கடலைக்  கடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப  பதினாறு செல்வங்கள்  ஒவ்வொன்னா வெளியில்  வந்துச்சுன்னு  புராணம் சொல்லுது பாருங்க,  அப்போ  லக்ஷ்மி வெளியில் வரும்போது கூடவே வந்தவள் துளசி. ஒவ்வொரு செல்வமும் வரவர, இது எனக்கு  இது உனக்குன்னு  அங்கேயே பாய்ஞ்சு எடுத்துக்கிட்டு இருக்காங்க தேவர்கள்.  லக்ஷ்மி வந்தவுடன், மஹாவிஷ்ணு எடுத்து மார்பில்  வச்சுக்கிட்டார். கூடவே வந்த துளசி பார்க்கிறாள்.... தனக்கு எங்கே இடமுன்னு!

"ஆல்ரெடி  இடம் போயிருச்சுங்க  துளசி.  நீங்க என்ன பண்றீங்க....   பூலோகத்துலே ஒரு  முனிவர்  பெண்குழந்தை வேணுமுன்னு  தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அவர் வீட்டுலே போய் பிறந்து வளர்ந்து வாங்க. நான்  சமயம் பார்த்து ( லக்ஸ்க்குத் தெரியாம)  அங்கே வந்து  உங்களைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்துடறேன்.  அஃபீஸியல்  மனைவி ஆயிட்டால்  இடம் தன்னாலே கிடைச்சுரும்.  போங்க... சொன்னதைச் செய்யுங்க."

"என்ன இப்படிச் சொல்லி விரட்டப் பாக்குறீங்க?  முனிவர் தனிக்கட்டையா இருக்கார்.  கைக்குழந்தையை எப்படி வளர்க்கப்போறார்? கஷ்டமாச்சே.... "

"நோ ஒர்ரீஸ். ஒரு ரெண்டு வயசுக்குழந்தை அளவு இருந்தால்  பாட்டில், நாப்பி இப்படிப் ப்ரச்சனைகள் இல்லை. ஓக்கேவா?"

"ஓக்கே!  ஆனால் எதுக்குப் பொண் குழந்தை வேணுமாம்? பேசாம  மகன் வேணுமுன்னு கேட்டால்  அவனுக்கு இவர் கற்றதையெல்லாம் சொல்லிக் கொடுத்துத் தன்  வாரிசுன்னு பெருமைப்பட்டுக்கலாமே!"

"அது ஒன்னுமில்லை. பொண் குழந்தையா இருந்தால்  அதை எனக்குக் கட்டிக்கொடுத்து, மஹாவிஷ்ணுவின் மாமனார் என்ற பெருமையைத் தட்டிக்கலாமுன்னுதான். நான் வரதக்ஷிணை எல்லாம் கேக்கமாட்டேன்னு எப்படியோ தெரிஞ்சு வச்சுக்கிட்டுத்தான் இப்படியெல்லாம் தவம் செய்யறார் போல!  சீக்கிரம் கிளம்பிப் போம்மா.... அவர்  தவத்தை முடிச்சுக் கண் திறக்கும்போது ஆஜராகிடணும், சரியா?"
கண்ணைத் திறக்குறார். அவரைச் சுத்தி அடர்த்தியா வளர்ந்திருக்கு  துளசிவனம். அதுலே ஒரு அழகான பொண் குழந்தை. ரெண்டு வயசு இருக்கும்:-) 'பாப்பா, நீயார்? உன் பேர் என்ன? உங்க அம்மா அப்பா எங்கே'ன்னா சொல்லத் தெரியலை. தாடியும் மீசையுமா இருக்கும் முனிவரைப் பார்த்துப் பயமே இல்லாமச் சிரிக்குது குட்டிப் பொண்ணு.  துளசி வனத்தில் கிடைச்ச குழந்தைக்குத் துளசின்னு பெயர் வச்சு அவரே வளர்த்துக்கிட்டு வர்றார்.

இளங்கன்னிப் பருவத்தில்  இருக்கும்போது ஆசிரமத்துக்கு  குடுகுடு கிழவர் ஒருத்தர் வர்றார். அதிதியை வரவேற்று, உபசாரம் செஞ்சு என்ன வேணுமுன்னு (வாட் கேன் ஐ டு ஃபார் யூ?) கேட்ட  மார்கண்டேய முனிவரிடம் (இவர் என்றும் 16 வரம்  வாங்கினபடியால் சின்னப்பையனாத்தான் இருக்கார் பார்க்க, என்பதை நாம் மறந்துறக்கூடாது!) பொண்ணு உங்க தங்கையான்னு  கேட்க, 'இல்லைபா.  என் மகள்'னு சொன்னதும்,  'உங்க  மகளை எனக்குக் கண்ணாலம் கட்டிக் குடுங்கன்னார்'.

முனிவருக்குக் கோபத்துலே உடம்பெல்லாம்  ஆவேசம் வந்தாப்லெ ஆடுது. நடந்ததைப் பார்த்துக்கிட்டு அங்கிருந்த துளசி,  வேகமாத் தன் அறைக்கு ஓடிப்போய்  கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழறாள். 'கிழவருக்கு என்னா தில்லு? போறகாலத்துலே வந்து பொண்ணு  கேக்கறதைப்பாரு......'
இவ்ளோ வயசான நீர் ஒரு இளம்பெண்ணைக் கட்டிக்க நினைப்பது பொருந்துமான்னு  முனிவர் கேட்கும் சமயம், 'ஏன் பொருந்தாது'ன்னு  கேட்ட கிழவர், தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டறார். ஹா... மஹாவிஷ்ணுவா!!!  மனசுக்குள்ளே மகிழ்ந்த முனிவர்,  உடனே சரின்னுட்டா எப்படி? கொஞ்சம் பிகு பண்ணிக்கலாமுன்னு,  குழந்தைப் பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாதே.... குழம்பு கறிகளில்  உப்பு எவ்ளோ போடணுமுன்னு கூடத் தெரியாது. நீர் பேசாம வேற பொண்ணைப் பாரும் என்றதும், சமைக்கலைன்னா என்ன, உப்புப் போடலைன்னா என்ன? நான் உப்பில்லாமல் சாப்பிடத்தயார் என்று சொல்றார்.  என் பொண்ணுக்குத் தனியா இருக்க பயம் என்று ஆரம்பிக்கறார் முனிவர்.  நான் கூடவே வச்சுக்கிட்டு எங்கே போனாலும் கூடவே கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லித், துளசி என்ற பூமாதேவியை இப்ப நான்  கல்யாணம் கட்டிக்கவான்னார்.

முனிவர் உள்ளே போய் துளசியைச் சமாதானப்படுத்தி 'வந்தவர் வெறும் ஆசாமி இல்லை. சாமியாக்கும்'  என்று சொன்னதும் நம்பாத துளசி வெளியே வந்து பார்க்க,  கன கம்பீரமா ஜொலிக்கும் மஹாவிஷ்ணு!  அழுதபுள்ளை சிரிச்சது.  கல்யாணமும் ஆச்சு.  இது நடந்தது ஒரு  ஐப்பசி மாசம் திருவோண நட்சத்திரம் என்பதால் கோவிலில் கல்யாண உற்சவம்  வருசாவருசம் அதே நாளில்  ஜாம் ஜாமென நடக்குது. கோலாகலம். பெருமாள்  பவனியில் இங்கே தாயாரும் கூடவே போறாங்க!
இவரையும் ஸ்ரீநிவாஸன், வெங்கிடாசலபதின்னே  சொல்றாங்க. திருப்பதியில் இருப்பதுபோலவே நின்ற கோலம். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப் பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. பணக்காரர். வைரமா ஜொலிக்கிறார்!  திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டு அங்கே போகமுடியாத நிலைன்னா, தென்திருப்பதின்னு இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!
ஸ்ரீநிவாசருக்குக் கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம்.   கழுத்திலும் மார்பிலுமா இடம் கொடுத்துட்டார். இப்ப திருப்தியா துளசி?  அந்த மாலை மஹாலக்ஷ்மிக்கும் சேர்த்துதான் என்பதைச் சொல்லலை போல! 

பிரகாரம் சுத்தலாமுன்னு  சந்நிதியை விட்டு இறங்கும் தருணம்,  மிஸஸ். நரசிம்மன் வந்தாச்சுன்னு  நம்ம சீனிவாசன் வந்து சொன்னார். வாசலுக்கு ஓடி வந்தேன். ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு நேரா வந்துருக்காங்க. சாலை சரியில்லாததால் மூணு மணி நேரமாச்சாம். சிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள்  நல்லபடியா நடந்ததான்னு  விசாரிச்சுட்டு, இங்கே கோவிலில் தரிஸனம் முடிச்சுக்கிட்டு அறையில் போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்கோன்னு  சொன்னோம்.
அவுங்க உள்ளே போனதும் மீண்டும்  பூமா கிட்டேயே போயிட்டேன். அலங்காரம்  முடிஞ்சு திருமண் பளிச்சிட நிக்கறாள்.
பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்னு  மூவரும் 47 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க. அதிலும்  நம்மாழ்வார், இவரை  எவருக்கும் ஈடு இணை இல்லாதவர். ஒப்பு நோக்கிப் பார்க்க முடியாத  ஒப்பிலியப்பன் என்றே பாடி இருக்கார்.  108 திவ்ய தேசக்கோவில்களில் இதுவும் ஒன்னு.

ஆனால் இவரை உப்பியப்பன்னு சொல்லி  அதுக்கு ஒரு கதையும் பண்ணி, அதை நிரூபிக்கறதுக்காக இங்கே உப்பில்லா நைவேத்தியங்கள்னு ஆரம்பிச்சு  ஜோரா அதே போல நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. பிரஸாத ஸ்டாலில் நானும் உப்பில்லாத ' லட்டு' ஒரு பேக்கட் வாங்கினேன்.
திருவிண்ணகரம் என்ற புராணப்பெயர் இருந்தாலும் உப்பிலியப்பன் கோவில்னு சொன்னால்தான் சட்னு புரியுது நமக்கு.  கோவில் காலை 6 முதல் பகல்1 மணி வரையும், மாலை 4 முதல் 9 வரையிலும் திறந்து இருக்கு.

1.  பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல்  வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல்-வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண்ணகர்

2.  விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

மேலே இருக்கும் இரண்டு பாசுரங்களும் பேயாழ்வார் அருளியது.

கூட்டமும் அதிகம். எல்லா நாளும் இப்படித்தானாம்! திருப்பதின்னு பெயர் வச்சுட்டாலே கூட்டம் சேர்ந்துருது இல்லே!

இங்கே பெருமாள்  பஞ்சகோலம் காண்பிக்கிறார். அதெப்படி பணக்காரக்கோவிலில் பஞ்ச.....ன்னு  நினைக்கவேணாம்.  ஐந்துவித கோலங்கள்! திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், என்னப்பன், முத்தப்பன், மணியப்பன்!  முத்தே மணியேன்னு செல்லம் கொஞ்சுறாப்லெ இருக்குல்லே!  இருக்கட்டும். நாமும் கொஞ்சினால் ஆச்சு:-)

இப்ப மணி பதினொன்னுதான் என்பதால்  இன்னும் ஒரு கோவிலை தரிசனம் செஞ்சுக்கிட்டு அறைக்குப் போகலாம். அதுவரை வல்லியம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும். சரியா?

சொல்லமறந்துட்டேனே..... இந்தக் கோயிலின் ஸ்தலவிருட்சம் என்னன்னு தெரியுமா? வேற யார்? சாக்ஷாத் 'துளசி'தான்:-)

தொடரும்.........:-)


18 comments:

said...

என்னுடைய கல்யாணம் முடிந்த உடனே போனது, அதற்கு பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.

said...

வணக்கம் மேடம் நலமா? விளக்கவுரைகளுடன் அழகான தெளிவான புகைப்படங்கள் அருமை தங்களது (துளசி)தளத்தில் இணைத்துக்கொள்வது எப்படி ? பதிவு போட்டால் எனக்கு தெரிவதில்லை...

said...

ஒப்பிலியப்பன் கோவில். நாச்சியார் கோவில் என்று எல்லா இடமும் போய் இருக்கிறோம். இருந்தாலும் உங்கள் பதிவில் அருமையான படங்களுடன் படிப்பதும் ஒருஅனுபவம் வாழ்த்துக்கள்.

said...

பல முறை சென்ற கோயில். தங்களால் இன்று ஒரு முறை தரிசனம். நன்றி.

said...

திருப்பதி போவதுதான் முறை. வீட்டு வழக்கப்படி. எனக்கு போகமுடியும் என்று தோன்றவில்லை.
இவரும் முதல் குலதெய்வம்தான். அதனால் வந்துவிட்டோம். பார்க்கப் பார்டக்கத் திகட்டாத கோவில். உங்களை அங்கே சந்தித்தது மகா மகிழ்ச்சி. நன்றி துளசிமா. துளசி தேவியைப் போலவே காருண்யம் எப்பவும் உங்களிடம். பூமா வெகு தீர்க்க அழகு.

said...

சிறு வயதில் இங்கே சென்றது. பல வருடங்களாகி விட்டன.....

உங்கள் மூலம் இன்னும் ஒரு முறை பார்த்துக் கொண்டேன்....

படங்கள் வழக்கம் போல அழகு!

said...

ரொம்ப நல்லா இருக்கு கோவில் தரிசனம். அது ஏன் இந்துக் கோவில்களில் மட்டும் பிரசாதம் பெரிய பங்கு வகிக்கிறது? (இங்கு புளியோதரை விசேஷம்..உப்பில்லாதது. ஆனால் தெரியாது)

said...

ஒப்பிலியப்பன் கதை கேட்டோம் . பூமா அழகி !!

வல்லியம்மா வுடனான போட்டோவை எதிர்ப்பார்த்தேன் :(

said...

வாங்க குமார்.

அப்ப... மகனோட கல்யாணம் ஆனதும் எல்லோருமாப் போய் தரிசனம் செஞ்சுக்குங்க.

said...

வாங்க கில்லர்ஜி.

பதிவை இணைத்துக் கொள்வதற்கான நிரலை நான் போட்டுக்கலை. பொதுவா திங்கள், புதன் & வெள்ளி என்று வாரம் மூன்று பதிவுகள். இந்திய நேரம் காலை 7 முதல் 9 மணிக்குள் வெளியிடுகின்றேன்.

இமெயிலில் அறிவிக்கும் ஆப்ஷனும் உண்டு என்றாலும், வாசகர்களை வாசிக்கக் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது என்ற நினைப்பால் அதையும் பயன்படுத்துவதில்லை.

வேறென்ன செய்யலாம் சொல்லுங்க?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தொடர் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றிகளும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

விவரங்கள் சரியா என்றுபாருங்கள். ஏதேனும் பிழை என்றால் தலையில் குட்ட மறக்க வேண்டாம்:-)

said...

வாங்க வல்லி.

எல்லாம் உங்கள் அன்பின் வெளியீடு!

நான் நல்லவளா கெட்டவளான்னு எனக்கே தெரியலையேப்பா:-)

நன்றீஸ்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சந்தர்ப்பம் கிடைச்சால் குடும்பத்தோடு கட்டாயம் போயிட்டு வாங்க. அருமையான கோவில் & யானை!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எல்லாம் விருந்தோம்பல்தான். ஹிந்துக்கோவில்களில் மட்டுமா? இங்கே சர்ச்சுகளிலும் சர்வீஸ் முடிஞ்சதும், கேக், பிஸ்கெட், மஃப்பின், ஸான்ட்விச், காஃபி, டீ, ஜூஸ் என்று ஒரு ஹாலில் வைத்திருப்பார்கள். விருப்பம் உள்ளவர்கள் போய் சாப்பிட்டுக்கொள்ளலாம். அநேகமாக எல்லோரும் எடுத்துக் கொள்வார்கள். குசல விசாரிப்புகளுடன் அப்படியே இது ஒரு சோஸியல் கேதரிங்காக மாறிடும்.

said...

வாங்க சசி கலா.

அது என்னமோ வல்லியம்மாவுடன் கும்மோணத்துலே படமே எடுத்துக்கலை:-( அவரவர் ஓட்டத்தில் பிஸியா இருந்துருக்கோம் போல!

said...

மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப் பகுதி

Why charam slokam - it means the sloka about a person's death (charamam)?

said...

வாங்க Strada Roseville .

'அங்கே போனபிறகுதான்' முக்தி என்பதால் சரமஸ்லோகம் எழுதிக் காமிக்கறார் போல!