Monday, January 30, 2017

அம்மனுக்குக் கோவம் வந்தாலும் ஊரே வெள்ளக்காடுதானாம்! ( நேபாள் பயணப்பதிவு 8)

நாம் நேபாளுக்கு வந்த காரணத்துக்கான பயணம் இதோ இந்த நிமிட்தான் ஆரம்பிக்குது:-) யேட்டி  (Yeti)ஏர்லைன்ஸ்லே நமக்கு டிக்கெட் போட்டுருக்கார் ப்ரகாஷ். உள்நாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலையும், வெளிநாட்டினருக்கு அதைப்போல ரெண்டு மடங்குமா இருக்கு. இந்தியர்களுக்கு அநேகமா உள்நாட்டுப் பயணிகளுக்கான சலுகை உண்டு.
ஏற்கெனவே  இது கொஞ்சம் ஆபத்தான பயணமுன்னு கேள்விப்பட்டதை நம்ம ப்ரகாஷ் உறுதிப்படுத்தினார். அதான் அப்பப்ப பத்திரிகையில் சேதி வருதாமே! இப்ப நாம் போக்ரா என்ற ஊருக்குப் போறோம். இங்கே  கார்லே  போக ஆறுமணி நேரம் ஆகுது.  போறவழியில் ரொம்ப அழகான இடங்கள் எல்லாம் பார்க்கலாமுன்னு கேள்வி. பஸ் போக்குவரத்தும் உண்டு. நேத்து நம்மை லெமன்ட்ரீயில் வந்து சந்திச்ச துர்கா, பஸ்ஸுலேதான் போயிருக்கார். நம்மை போக்ரா ஏர்ப்போர்ட்டில்  சந்திப்பார்னு  ஏற்பாடு.
காத்மாண்டு உள்நாட்டு முனையம் நம்முர் போலவேதான்... பஸ் ஸ்டாண்டு. நல்ல கூட்டம். குட்டிக்குட்டி விமானங்கள்  பல இடங்களுக்கும்  போய்வருது. செக்யூரிட்டி எல்லாம் ஒன்னும் பெருசா இல்லை. நம்ம ஃப்ளைட்  ஒன்னேமுக்காலுக்கு. டைம்டேபிள் சொல்ற டைமுக்கு இங்கே எதுவும் நடக்காதாம். எவ்ளோ லேட்டுன்னு தெரிஞ்சுக்கத்தான் அந்த டைம்டேபிள். நம்ம ப்ளேன் இன்னும் வந்தே சேரலை.  வந்துருச்சுன்னா அரைமணியில் கிளம்பிருமாம்.

இப்போ மணி ஒன்னரை. பகல் சாப்பாடு என்ன கிடைக்குமுன்னு பார்த்தால்.... ஒன்னும் எனக்கு சரிப்படலை. நம்மவர்தான் ஒரு வெஜிடேரியன் மோமோ  வாங்கிக்கிட்டார். பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு.  கூடவே மஞ்சள் கலரில் ஒரு ஸாஸ், தொட்டுக்கன்னு  கொடுக்கறாங்க. பிரிச்சு வாயில் வச்சாரோ  இல்லையோ....    உச்சந்தலையில்  மிச்சம் மீதி இருக்கும் தலைமுடிகள் எல்லாம் அப்படியே நட்டுக்கறது.... காரமாம். கண்ணெல்லாம் சிவந்து,  கண்ணீர்  கரை கட்டுது.  இத்தனைக்கும் இது  வெரி மைல்ட்  !   நேபாளிகள் பயங்கரமா காரம் சாப்பிடறாங்க. ஆந்த்ரா காரம் எல்லாம் ஜூஜுபி :-)
அடுத்த வாய்க்கு, வாயே இல்லாமப்போச்சு. ஒன்னும் வேணாம். தண்ணி குடிக்கலாம். ராத்ரி வாங்கி வச்ச பிஸ்கெட் பாக்கெட் செக்கின்லே போயிருச்சேன்னு  இன்னொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டேன். ஆளுக்கு ரெண்டு.   எல்லோரும் அவுங்கவுங்க போகும் ப்ளேன் வந்துருச்சா, வந்துருச்சான்னு எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒருவழியா யேட்டி வந்து சேர்ந்து,  நாம்  நடந்துபோய்  உள்ளே  உக்கார்ந்தோம். ஸீட் நம்பரெல்லாம் கிடையாது. அவரவர் சௌகரியம்.  ஒருபக்கம் ஒத்தை வரிசையும் அடுத்தபக்கம் ரெட்டை வரிசையுமா இருக்கு. நாங்க ஒத்தை வரிசையில் உக்கார்ந்தோம். ஆளுக்கொரு ஜன்னல் :-)
ரெண்டு முட்டாய்,  சின்னதா ஒரு நிலக்கடலை பாக்கெட், ஒரு  அரை டம்ப்ளர் தண்ணி  கொடுத்தாங்க. யேட்டியை இன்னும் பார்க்கலையேன்னு புதுக்கவலை :-)     அரைமணி நேரத்துக்கும் குறைவான ஃப்ளைட்ன்னது நமக்கு முக்கால்மணி நேரம் எடுத்துச்சு. உயரம் குறைவாப்  பறக்கறதால் கீழே இருக்குமிடங்கள்  தெளிவா, அழகாத் தெரிஞ்சதுன்னாலும்....  மேகக்கூட்டம் முழுசா வந்து மறைச்சுக்கிட்டதுதான் அதிகம்.
 இளைஞர்(வயசு ஒரு 19/20 இருக்கலாம்) ஒருத்தர் குட்டியாக் கைக்கு அடக்கமான வீடியோ கெமராவை ஜன்னலில்  ஒட்டிவச்சுட்டு நிம்மதியா  வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தார். அது எங்கே கிடைக்குதுன்னு விசாரிச்சேன். கொரியாவிலாம். காலேஜ் லீவு இப்போ. ரெண்டு வாரம் சுத்திப் பார்த்து மலை ஏற வந்துருக்காராம்.


போக்ராவில் இறங்குனதும்  பைகள் வரக் காத்திருக்கோம். பெல்ட் கில்ட்டெலாம் கிடையாது. அப்படியே வாரி வண்டியில் போட்டுக் கொண்டாந்து வச்சதும் நாம் கை நீட்டி எடுத்துக்கணும். துர்கா அங்கே நமக்காகக் காத்திருந்தார். இந்த விநாடி முதல் மறுபடியும் நம்மை இங்கே ப்ளேனுக்குள் ஏத்தும் வரை இவரே நமக்கு கைடு. பெர்ஸனல் கைடாக்கும்,
கேட்டோ :-)




ஹொட்டேல் மௌன்ட் வியூவில் தங்கறோம். ஓனர் நம்ம ப்ரகாஷின் நண்பர். அருமையான இடம் என்று நமக்கு ஏற்கெனவே  சொல்லித்தான் அனுப்பி இருந்தார் ப்ரகாஷ். இது கொஞ்சம் பெரிய ஹொட்டேல். ப்ராப்பர் ஹொட்டேல் கேட்டோ!  அருமையான வியூவோடு அறை கிடைச்சது.  இந்த ஊரே சுத்திவர மலைகள் இருக்க, அதுக்கு நடுவிலே இருக்கே:-)
ஊர் முழுக்கச் சுற்றுலாப் பயணிகள்தான்! முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள். எல்லோரும் மலை ஏற வந்துருக்கும் கோஷ்டி!  மூணுமணிக்கு  ஹொட்டேலில் செக்கின் செஞ்சு , ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு  மூணரைக்கெல்லாம்  கிளம்பியாச்சு ஊர்சுத்த:-)

காத்மாண்டுபோல வெயில் கொளுத்தாமல் இதமா இருக்கு என்பதால் நடந்தே போகலாமுன்னு முடிவு.  எங்கே பார்த்தால் ஹொட்டேல்களே!  கடைத்தெருவில் வேடிக்கை பார்த்தபடி நாம் போன இடம் ஃபேவா ஏரி.   வளாகத்தில்   சின்னதா   ஒரு    சிவன் கோவில்.
 Fewa Lake பிரமாண்டமான ஏரிதான்.   நீளம் 17 கிமீ. அகலம்  9 கிமீ.  மொத்தம் 4.43 சதுர கிமீ பரப்பளவு. தூரத்தில் ஒரு தீவு போல ஒன்னு. அங்கே ஒரு கோவில் இருக்கு. பராஹி இருக்காள். இவுங்களுக்கும் 'வ' வர்றதில்லை!  வராஹி அம்மன் கோவில். .  Thal Barahi   தால் பராஹி!

தால் ன்னு சொன்னால் அதுக்கு ஏரி என்று பொருள். நம்ம காஷ்மீர்லே பாருங்க  ஒரு ஏரிக்கே தால் லேக்குன்னு பெயர் நிலைச்சுப்போச்சு:-)  ஏரி ஏரி. வாட் இஸ் திஸ்? வாட் நேம் ஃபார் திஸ் லேக்?   யே தோ தால் ஹை.  ஓக்கே தால்!  தால்  லேக்!  குட்!    சரியா:-)

கோவில் இருக்கும் தீவு அப்படியொன்னும் ரொம்ப தூரத்தில், நட்ட நடு ஏரியில் இல்லையாக்கும்.  மிஞ்சிப்போனால் ஒரு  அரைக்கிமீ இருக்கலாம். ஆனால் படகில்தான் போகவேணும். இங்கே  இது ஒரு பெரிய பிஸினஸாக ஆகி இருக்கு. ரொம்ப ஆழமான ஏரி என்பதால் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கிட்டுத்தான் படகில் ஏறணும். இதுக்கு பத்து ரூ வாடகை வசூலிக்கறாங்க.



படகில்  கோவில்வரை போய் வர  ஒரு சார்ஜ், சும்மா மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கிட்டு ஏரியைச் சுத்தி வர ஒரு சார்ஜ்ன்னு பலவிதமான சர்வீஸ்கள்.  சின்னப்படகு, பெரிய படகுன்னு  பல சைஸ்களில்  படகுகள். நாங்கள் போய்வந்தது பத்துப்பேர்கள் போகக்கூடியது. இதில் என்ன ஒரு  சௌகரியம்ன்னா....  கீழே படகுத்தரையில் காலை மடக்கி உக்கார வேணாம். பெஞ்சுலே உக்கார்றமாதிரி உக்கார்ந்துக்கலாம். அப்பாடா....   என் கால் முட்டி  தப்பிச்சது:-)
நேபாளிகளுக்கு  அம்பது ரூபாயும்,  வெளிநாட்டு  மக்களுக்கு ஆளுக்கு நூத்தியம்பது ரூபாயுமா டிக்கெட்டுக்குக் கொடுக்கணும். ஏற்கெனவே    மூணுபேர் உள்ள ஒரு குடும்பம் படகில் இருந்தாங்க. நாங்க மூணு பேர். அப்புறம் இன்னொரு  மூணுபேர் வந்து சேர்ந்தாங்க.  ப வடிவில் மூணு பெஞ்சு. ரெண்டு  படகுகளுக்கு மேல்  மரப்பலகைகளை  அடுக்கிக் கட்டி, அதுக்கு மேல் மூணுபக்கங்களில் பெஞ்சு. படகோட்டி, அந்த கீழே இருக்கும் படகுகள் ஒன்றில்  உக்கார்ந்து துடுப்புப் போட்டுக்கிட்டு வர்றார்! நம்மப் படகில் இருந்த பொடியன், காலியா இருக்கும் இன்னொரு படகில்  உக்கார்ந்து தண்ணீரை அளைஞ்சுக்கிட்டே வந்தான்.   குழந்தையா இருப்பது எவ்ளோ சுகம்!!!
ஒரு ஏழெட்டு நிமிசத்துலெ கோவில் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம்.  லைஃப் ஜாக்கெட்டைப் படகிலேயே விட்டுட்டுப் போகலாம்னு சொன்னது  மகிழ்ச்சி.


 படிகளில் ஏறி  கோவில்வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.  நல்லா சுத்தமாப் பராமரிக்கப்படும் இடம்.  நிறைய மரங்கள். அதைச்சுத்தி உக்கார்ந்துக்க வட்டமேடைகள்.  நமக்கு நடந்து போக சிமென்ட் பாதைகள். கோவில் பூஜைக்கான பொருட்கள் வாங்கிக்க ஒரு கடை.  கூடவே  வண்ணவண்ண பாசிமணிகள் விக்கறாங்க. என்றைக்குமில்லாமல்   இந்த மணிகள் மேல் எனக்கொரு காதல் வந்தது  இங்கேதான்:-)


இந்துக்கள் மட்டுமில்லாமல் ஏகப்பட்ட பௌத்தர்களும் இந்தக் கோவிலுக்கு  வர்றாங்களாம். அவுங்களுக்கும் இது முக்கிய வழிபாட்டுத் தலமாம்! நல்லது. ரொம்ப நல்லது.
வராஹி அம்மனுக்கு  ரெண்டு நிலைக் கட்டடம். பகோடா ஸ்டைல்.  சந்நிதியே நாலைஞ்சு படிகள் இறங்கிப்போகும் பள்ளத்தில் இருக்கு. வெளியே ரெண்டு பக்கமும் வாயிலே 'தீ நாக்கு'களோடு இருக்கும் சிங்க உருவங்கள்.  சந்நிதி வாசல் முகப்பில்  உள்ளே இருக்கும்  சாமியை விளக்கும் ஒரு டிஸைன். இங்கே எல்லாக் கோவில்களிலும் முகப்பில் இப்படித்தான்  ப்ரீவ்யூ இருக்கு.   இங்கே சந்நிதிக்குள் போக ரெண்டு படி ஏறி நிலைவாசலுக்குள் குனிஞ்சு  மூணு படி இறங்கணும்.


குங்குமம் அப்பிக்கிடக்கும் வராஹி  சின்னதா  செதுக்கிய    சிலைவடிவில்!  கொஞ்சூண்டு சந்தனம் கைகளில்.  ஒரு ப்ளாஸ்டிக் ட்ரே பக்கத்தில்  இருக்கு. விரும்பினால்   அம்மனுக்கு தக்ஷிணை கொடுக்கலாம்.  இடப்பக்கம் ஒரு தேங்காய். அவ்ளோதான் சாமி அலங்காரம்:-(    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று நம்பிக்கை!!  உள்வாசல்பக்கம் உக்கார்ந்துருக்கும் பட்டர்,  குங்குமமும் அரிசியும் கலந்து  குழைச்சு வச்சுருக்கும் பிரஸாதத்தை  ஒரு சிட்டிகை எடுத்து நம்ம நெற்றியில்  அழுத்தி ஒட்டவைக்கிறார்.
அம்மன் சிலை எத்தனை காலத்துப் பழசுன்னு கேட்டதுக்கு ஒரே சொல் சொன்னார், ப்ராச்சீன் !

 அப்டீன்னா....  ரொம்ப காலத்துக்கு முந்தி,  ஆதி காலம்!    ஒரு ராத்திரியில் இந்த ஊருக்கு  வராஹி  வந்துருக்காள்.  மனித உருவில் வந்தவள், ஊர் மக்களிடம் தனக்கு  அன்னம் அளிக்க வேணுமுன்னு கேட்க,  எல்லோரும் ஒன்னும் தராமக் கதவை சாத்திக்கிட்டாங்க. ஒரே ஒரு  ஏழைக்குடும்பத்தினர் மட்டும், 'ஐயோ  யாரோ ஒரு பெண் இந்த  அர்த்த ராத்ரியில் பசியோடு வந்துருக்காளே'ன்னு, தங்களிடம் இருந்த  சாப்பாட்டை  அவளுக்கும் பகிர்ந்து  கொடுத்து,  ராத்திரி தூங்க இடமும் கொடுத்துருக்காங்க.

காலையில் பொழுது விடிஞ்சு பார்த்தா, இவுங்க வீட்டைத்தவிர, ஊர் முழுசும் தண்ணீர் நிரம்பி  பெரிய ஏரியாக் கிடக்கு.    ராத்திரி வந்து சாப்பிட்டுத் தூங்குன பொண்ணைக் காணோம். அப்புறம்தான் தெரிஞ்சுருக்கு, வந்தவள் வராஹின்னு!  அவள் தூங்குன இடம்  தான்  இந்தக் கோவில். தங்குன வீடுதான் இந்தத் தீவு!

இப்ப ஏரியைச் சுத்தி வேற ஊர் உருவாகிருச்சுன்னு வையுங்க.
சாமி தரிசனம் முடிச்சுட்டுத் தீவைச் சுத்திப் பார்த்தேன். தேங்காய் உடைக்க தனி இடம்,  ஏரி மீன்களை 'தரிசிக்கும் ' இடம்னு இப்படி இருக்கு. காக்காய்கள் நிறைய !  நியூஸியில் காக்கா இல்லை தெரியுமோ? அதனால் நல்லாவே பார்த்தேன்:-)
புறாக்களும் ஏராளம். பறவைகளுக்குத் தீனி விக்கறாங்க. வாங்கிப்போட்டால் புண்ணியம்.  வளாகத்தில் காளிக்கு ஒரு சின்ன சந்நிதியும், புள்ளையாருக்கு கொஞ்சம் பெரிய சந்நிதியும் இருக்கு. ஆனால் மூடி இருந்துச்சேன்னு    கேமெராக் கண்ணை அனுப்பி புள்ளையாரை தரிசித்தேன்:-)
நம்மவரும் துர்காவும்   ஒரு  இடத்தில் உக்கார்ந்து  பேசிக்கிட்டு இருந்தாங்க.  இந்தத் தீவில் இறங்குனது முதல் மொத்த சுத்தலுக்கும்  அரைமணி நேரம்கூட ஆகலை.  பகல் நேரமா இருந்தால்  வெயிலுக்கு இதமா நிழலில்  உக்கார்ந்து    அமைதியான சூழலை  அனுபவிக்கலாம்.
நாம் இருட்டுக்கு முன்னே கொஞ்சம் மத்த இடங்களையும் பார்க்கணுமேன்னு   கிளம்பிட்டோம். வந்த படகிலேயே போக வேணும் என்ற அவசியமில்லை. பத்துப்பேர்  வந்ததும் படகு கிளம்பிரும்:-)
கூட்டம் வராததால் நம்ம படகு அங்கேயே நின்னுருந்துச்சு.   நம்மோடு வந்த பொடியன் குடும்பமும் வந்துருந்தாங்க.    இப்பப் புதுசா ஒரு பொடியளும் குடும்பமும் நம்ம படகில்! ஆறே நிமிட்லே கரைக்கு வந்து சேர்ந்தோம்.

தொடரும்.......... :-)




Friday, January 27, 2017

சாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்! ( நேபாள் பயணப்பதிவு 7 )

அடுத்த அரைமணி நேரப்பயணத்தில் கடைகள் அதிகமா இருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைஞ்சுருக்கோம். சூர்யா லாமா.... மேன் ஆஃப் ஃப்யூ வேர்ட்ஸ் என்பதால்.... வாயைப்பிடுங்கி சேதி வாங்கவேண்டி இருக்கு.  போதிநாத்/ போதாநாத் ஸ்தூபா வந்து சேர்ந்தாச்சு.  மெயின் ரோடில் இருக்கும் இன்னொரு தெருவுக்குள் நுழைஞ்சு நடக்கணும்.

கண் எதிரில் பிரமாண்டமான வட்டமான கட்டடம். நிலநடுக்கத்தின் பாதிப்பு இங்கே அதிகம். ஆனாலும் பழுதுபார்க்கும் வேலையை உடனடியாத் தொடங்கி இருக்காங்க.

உலகப்பாரம்பரியச் சின்னங்களில் சேர்க்கப்பட்டுருக்கு. உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் உண்டு. நமக்கு ஆளுக்கு அம்பது ரூபாய். தெருவின் ஆரம்பத்துலேயே அலங்கார வளைவு வச்சு, அதன்பக்கத்துலே டிக்கெட் கவுன்ட்டர்.
இந்த வட்டமான அமைப்பை வலம் வர்றது முக்கியம். பரிக்ரமா என்று சொல்றாங்க. நெடுக ப்ரேயர் வீல் என்ற  அமைப்புகள். இதுலே ஒவ்வொன்னும் மந்திரங்களின் சக்தி நிறைஞ்சதாம். ஒருக்கா சுத்திவிட்டா   கோடி  மந்திரம் ஜெபிச்ச பலன். கண்ணில் பட்ட சக்கரத்தையெல்லாம் சுத்திக்கிட்டே போனேன்னு  உங்களால் ஊகிக்க முடியாதா என்ன? :-)

சுத்துச்சுவர் போலக்கட்டி அங்கங்கே ஜன்னலாட்டம் வச்சுருக்காங்க. சுவருக்கு அந்தாண்டை வரிசையா பிரார்த்தனைச் சக்கரங்கள். ஒவ்வொரு ஜன்னலுக்கும் அஞ்சுன்னு....  கம்பி வழியாக் கைநீட்டிச்   சுத்திவிடலாம். ஆச்சு அஞ்சு  கோடி. அடுத்த ஜன்னலில் வரவு இன்னும் ஒரு அஞ்சு  கோடி. கோடிகளைச் சேர்த்துக்கிட்டு நகர்ந்து போறோம்...  மொத்தம் நூத்தியெட்டு சக்கரம் இருக்குன்னு நினைக்கிறேன். உள்பக்கமாப் போயிருந்தாத்தான் என் வழக்கப்படி எண்ணி இருப்பேனே :-)

ஒருமுறை இதை வலம் வந்தாலே  செஞ்சபாவம் எல்லாம் தொலைஞ்சு போயிருமாம். ஒரு சமயம் ரொம்ப கெட்ட மனுசன் ஒருத்தன் இருந்தானாம். முகம் எப்பவும் கடுகடுன்னே இருக்குமாம். அன்பா ஒரு வார்த்தை வாயிலே இருந்து வராதாம். எதுக்கெடுத்தாலும் கெட்ட பேச்சு, அடுத்த உயிரை இம்சிக்கிறது, பொறாமை, ரொம்பவே சுயநலம்னு எல்லாக் கெட்ட பழக்கங்களும் சேர்ந்த ஒருத்தன் இவன். போற நேரம் வந்ததும் போய்ச்சேர்ந்தான். இவனுடைய குணத்துக்கு நேராப் போய் விழுந்தது நரகத்தில்தான். அங்கேதான் விசாரணை நடத்தி, நம்ம பாவபுண்ணியத்துக்குத் தகுந்தமாதிரி மேற்கொண்டு  தண்டனைகளோ, சௌகரியங்களோ கிடைக்கும். இவனுடைய குற்றப்பத்திரிகையை வாசிச்சு முடிச்சுத் தண்டனை  இதுன்னு சொல்லப்போகும் சமயம் அங்கே புத்தர் வந்துட்டார்.

இவனைப் பார்த்ததும், 'கடுமையான தண்டனை இவனுக்குத்  தேவை இல்லை. இவன் பாவி இல்லை'ன்னு சொல்லி இருக்கார். 'என்னடா இது....  இவன் பண்ணாத பாவமில்லை... இவனுக்குப்போய்னு....  தயங்கும்போது சொன்னாராம்... இவன்  போதாநாத் ஸ்தூபாவை  ஒரு முறை வலம் வந்துருக்கான்னு!  அதனால் செஞ்ச அத்தனை பாவமும் போயே போச்!

இவனுக்கே ஆச்சரியமாப் போச்சு. நரகம் இல்லைன்றது மகிழ்ச்சியான சமாச்சாரம் என்றாலும் கூட... அதைவிட தான் எப்போ ஸ்தூபாவை வலம் வந்தோம்னு  தெரிஞ்சுக்கலைன்னா மண்டை வெடிச்சுடும்போல இருக்கு. புத்தரிடமே கேட்டுட்டான்....   எப்பங்க நான் வலம் வந்தேன்னு?  அவர் சொல்றார்.... 'நீ ஒரு நாயைக் கல்லால் அடிக்கப்போனப்ப அது  ஸ்தூபாவைச் சுத்திக்கிட்டு ஓடுது. நீ விடாம அதை எப்படியாவது அடிக்கணுமுன்னு  அதன் பின்னாலேயே ஓடுனே பாரு.. அப்ப' னு!

ஆஹா....   இனி   நமக்கு நரகமே இல்லைன்னு எனக்கு நிச்சயமே ஆகிருச்சு. 'ஓம் மணி பத்மே ஹம்'னு மந்திரத்தை வேற சொல்லிக்கிட்டேக் கைக்கு ஆப்ட்ட   சக்கரத்தையும் சுத்திக்கிட்டே போய்க்கிட்டு இருக்கேன்!
இந்த ஸ்தூபாவின் விளக்கங்கள் எல்லாம் அங்கங்கே தகவல் பலகைகளாக வச்சுருப்பதால் நமக்குப் போற போக்குலேயே கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியுது.  பூட்டான்  நாட்டு புத்த மதத்தினர் கட்டுனது இது!

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. புத்தர்னு நாம் இப்போ சொல்றோமே அவர் மட்டும் புத்தர் இல்லையாமே....     அவர் காலத்துக்கு முன்னேயே  இருபத்தியெட்டு புத்தர்கள் இருந்துருக்காங்களாமே!   நமக்குத் தெரிஞ்ச கௌத்தமர் என்ற புத்தரைத்தான் சாக்கியமுனின்னு குறிப்பிடறாங்களோ? அப்ப நம்ம புத்தர் இருபத்தியொன்பதாவது புத்தரா?  அப்ப ஏன் முப்பதாவது புத்தர் இன்னும் அவதரிக்கலை....   புத்தமதத்துக்குள்ளே புகுந்து பார்க்க ஆசையா இருந்தாலும்.... அதுவும் ஒரு பெரிய சமுத்திரம் என்பதால்.... மூழ்கிப்போய் என்னையே தொலைச்சுருவேனோன்ற பயத்துலே கரையிலே நின்னுகிட்டே எதாவது தெரியுதான்னு பார்க்க வேண்டியதுதான்....  பெருமாளே.... எதுக்கு இப்படி என் மனசை அலைய விடுகிறாய்?


முந்திக்காலத்துலெ பூட்டானில் இருந்து காத்மாண்டு நிலப்பகுதிக்கு  வியாபாரம் செய்யன்னு வந்துபோய்க்கிட்டு இருந்த பூட்டான் பௌத்தர்களுக்கு இந்த ஸ்தூபா ரொம்பவே விசேஷப்பட்ட இடமா இருந்ததால் இங்கே அக்கம்பக்கத்துலேயே குடி இருப்பை ஏற்படுத்திக்கிட்டாங்களாம்.  அப்புறம் 1959லே சீனர்கள் திபெத்தைப் பிடிச்சு வச்சுக்கிட்டதும், அங்கிருந்து அகதிகளாக ஏகப்பட்ட திபெத்திய பௌத்தர்கள் காத்மாண்டு வந்து சேர்ந்ததும்...அவுங்களுக்கும் இது முக்கியமான வழிபாட்டுத் தலமா ஆகி இருக்கு!
நிறைய நாய்கள்  அதுபாட்டுக்கு  ப்ரேயர்வீலாண்டை கிடக்குதுகள். நம்ம சுத்தல் கோடிகளில் சில கோடிகள் அவுங்களுக்கும் போய்ச்சேரட்டும்..... பாவம்....



இந்த ஸ்தூபாவின் வெளியில் வளாகத்தின்  வெளிவட்டத்தில் நினைவுப்பொருட்கள், புத்தமத சம்பந்தமுள்ள  கலைப்பொருட்கள் இப்படி ஏராளமாக் கொட்டிக்கிடக்கும் கடைகள். கண்ணால் மட்டுமே பார்க்கணும் என்ற நிபந்தனை எனக்கு:-( பெரிய பெரிய யானைகளும் சிலைகளுமா....  சீச்சீ.... இந்தப் பழம் ரொம்பவே புளிப்பு......

வாங்க நாம் ஸ்தூபாவைப் பார்க்கலாம்.  ஏராளமான மணல் மூட்டைகளை அங்கங்கே வச்சுருக்காங்க. அதிர்வைத் தடுப்பதற்காக இருக்கலாம்.  ட்ரக்குகளில் இன்னும் மூட்டைகள் வந்து இறங்கிக்கிட்டே இருக்கு.
வலம் வந்துக்கிட்டு இருந்த நாங்க ஒருவாசலுக்கு வந்துருந்தோம். வாசலில் செக்யூடிட்டி  நிக்குது. உள்ளே போக அனுமதிக்கறாங்க. வாசலுக்கு முன்னால் இருக்கும் சந்நிதியில் மூணு பெண்கள் விளக்கேத்தி வச்சுக்கிட்டு இருந்தாங்க.


மேலே  மாடங்களில் சாமிகள், பக்கத்துலே மேடையிலே மணிகள்!  அங்கிருக்கும் சாமி சிலைகளில் எல்லாம் குங்குமம் பூசி வச்சுருக்காங்க. என்ன சாமி, யார்னு விவரம் ஒன்னும் இல்லை....  'பழுது பார்க்கும் வேலைக்கிடையில் பயணிகளைக்  குறைஞ்சபட்சம் உள்ளே விட்டதே அதிகம்.  இதுலெ விளக்கம்வேறு சொல்ல ஆளில்லைன்னு அழறே....'   கேட்டது மனத்தின் குரல்தான். கூடவே இன்னொன்னும் சொல்லுச்சு... உங்க நியூஸியிலே எர்த்க்வேக் வந்தாட்டு மூணுவருசம் சிட்டிக்குள்ளே யாருக்குமே அனுமதி இல்லாம மூடி வச்சது மறந்து போச்சா? இப்பக்கூட பழுது பார்க்கும் வேலை நடக்கும் இடத்தில் கால் வைக்க விடுவாங்களா என்ன? பாதுகாப்பு பாதுகாப்புன்னு பூச்சி புடிச்சுக்கிட்டு இருப்பதைப் பார்க்கறே தானே?  ஆமாம்னு ஒப்புக்கொள்ள வேணும்தான். கப்சுப்.....
ஒரு பெரிய அறையில் கூரையை எட்டிப்பிடிக்கும் அளவில் ரெண்டு ப்ரமாண்டமான ப்ரேயர் வீல் வச்சுருக்காங்க.  அதையும் சுத்திட்டோம்!  மேலே படிஏறிப்போய்  முதல் நிலை வரை பார்க்க முடிஞ்சது. நேரெதிரா இருக்கும் கட்டடத்தில்தான் கோவில் நடக்குது இப்போ.

கிண்ணத்தைக் கவுத்து வச்சாப்லெ இருக்கும் அமைப்புக்கு மேலே  சதுரமா இருக்கும் ஒரு அமைப்பு. இதுலே நாலு பக்கத்துலேயும் ரெவ்வெண்டு கண்கள்!
சாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்னு நாம் சின்னப்புள்ளைகளா இருந்தப்ப நம்ம தாத்தா பாட்டி சொன்னதை,  அப்போ நம்புனமாதிரி இப்பவும் நம்பணும்.  புத்தரின் கண்கள்! கண்களுக்கு இடையில்  கொஞ்சம் கீழே  கேள்விக்குறி போல ஒரு அடையாளம்.  மூக்கு இருக்கற இடம்? மூக்குன்னே வச்சுக்கலாம்:-) ஆனால் இது மூக்கு இல்லை(யாம்!)நேபாள மொழியில் எண் ஒன்று என்பதை இப்படித்தான் எழுதுவாங்களாம். நம்பர் ஒன்!  அப்ப அது ஒன்னுன்னு சொல்லுது! எது ஒன்னு? நாமெல்லாரும் ஒன்னு. ஒத்துமையைக் குறிப்பிட,  'ஒன்னாயிருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும் 'என்று சொல்லுது!
இந்த சதுரத்துக்கு மேலே இன்னொரு கோபுர அமைப்பு.  மேலே போகப்போக அளவு குறுகுதே தவிர நாலு பக்கமும் சதுரமாவே இருக்கும் பதிமூணு அடுக்குகள்.  இதுக்கு மேலே ஒரு தாமரை. அதுக்கும் மேலே ஒரு குடை. அப்புறம்  கடைசியில் எல்லாத்துக்கும் மேலே ஒரு கும்மாச்சின்னு  அடுக்கடுக்கா இருக்கு! இதை அழகா விவரிச்சு இருக்கும் ஒரு படம் கூகுளார் அருளினார். படத்தின் ஓனருக்கு நம் நன்றிகள்.

  நிலம், நீர், நெருப்பு, வளி , வான்  இப்படிப்  பஞ்சபூதத்தைக் குறிக்கும் அடையாளங்கள் கூட இதுலே இருக்காமே!!!

சரித்திரம் இப்படிச் சொல்லுதுன்னு  நம்ம கோபு சொல்றார்!   கோபாலராஜவம்சாவழியில் லிச்சாவி அரசர்கள் சிவதேவா, மானதேவா ஆட்சி காலத்துலே (அஞ்சாம் ஆறாம் நூற்றாண்டுகள்)போதிநாத் புத்தமதம் நிறுவப்பட்டதுன்னு!  அதுக்குப்பின் நாம் இப்போ பார்க்கும்  இந்த ஸ்தூபாவை பதினாலாம் நூற்றாண்டுலே கட்டி எழுப்பி இருக்காங்க.

பூட்டான் நாட்டுச் சரித்திரக்குறிப்புகளில் வேற வகையில், வேற காலக்கட்டத்தில் இன்னும் ஒரு நூற்றாண்டு தள்ளி கட்டுனதுன்னு இருக்காம்.

பூட்டான் நாடுன்னதும்  இது சம்பந்தப்பட்ட கதையொன்னும் வாசிச்சேன். ஒரு தேவதை, எதோ பாவம் செய்யப்போய் மனித உயிரா பூமியில் வந்து பூட்டானில் பிறந்துட்டாள். ரொம்ப சாதாரண எளிய குடும்பமாம்.  அவளுக்கு நாலு  கணவர்கள். ஒவ்வொரு கணவனிடத்திலும்  ஒரு பிள்ளைன்னு நாலு மகன்கள். (ஆஹா... பூட்டான் நாட்டுப் பாஞ்சாலி! )  இவள்தான் ஒரு காலத்துலே  இந்தக் கோவிலைக் கட்ட ஆரம்பிக்கிறாள்.  நாலுவருசமா வேலை நடக்குது. நாலாவது வருசம் முடிஞ்ச கையோடு இவளுடைய ஆயுசும் முடிஞ்சுருது. கட்டடம் இன்னும் பூர்த்தி ஆகாத நிலையில் இவளுடைய நாலு பிள்ளைகளும் சேர்ந்து இன்னும் மூணு வருசம் உழைச்சு இதைக் கட்டி முடிக்கறாங்க. ஆகமொத்தம் ஏழு வருசம் ஆகி இருக்கு இதைக் கட்டி முடிக்க!

இவுங்களுக்கு ஒரு நம்பிக்கை என்னன்னா....  மேலோகத்தில் இருக்கும் தேவர்களும், கடவுளர்களும்தான்   இந்த போதா ஸ்தூபாவில் புத்தமத லாமாக்களா அவதரிக்கிறாங்களாம். அப்போ  நம்ம சூர்யா லாமா?

ஸ்தூபாவின் மேல்பாகம் நிலநடுக்கத்தில் உடைஞ்சு போனதால் திரும்பப் புதுசாக்கட்டிக்கிட்டு இருக்காங்க. கட்டி முடிச்சுட்டாங்க போல... ஆனால் மக்கள் பார்வைக்குப் படாமல் திரை போட்டு வச்சுருக்காங்க. முழு வேலைகளும் முடிஞ்சு திறப்பு விழா நடக்கும்போது திரையை எடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன். அதுவரை புத்தர் உக்கார்ந்துருப்பார்!
நிலநடுக்கத்துக்கு முன்னால் இருந்த ஸ்தூபாவின்  இந்தப் படத்தை வலையில் இருந்து எடுத்துருக்கேன். கண்ணு தெரியுதோ?

கீழே இறங்கி வந்து எதிர்வரிசையில் இருக்கும் கோவிலுக்குப் போறோம். இடதுபக்கம் இருக்கும் ஒரு அறையில் பெரிய ப்ரேயர் வீல்!  உம்.... சுத்து சுத்து சுத்திக்கோ.....
மாடி ஏறிப்போகும் வழியில் சுவற்றில் புத்தர் கதைகள் பலதும் சித்திரங்களாக! மாடி ஹாலில் கோவில் ! அவலோகிடேஷ்வரா
  (Avalokiteshvara) இருக்கார். இவரை நம்ம தாய்லாந்து, பாலி, கம்போடியாப் பயணங்களில் தரிசனம் செஞ்சுருக்கோம்!
புத்தபிக்ஷுக்கள் பலர் வரிசையா உக்கார்ந்து  அவர்கள் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இந்தக் கோவில்களில் வெளிநாட்டினருக்கும் அனுமதி உண்டு என்பதால் வெள்ளைக்காரப் பயணிகள் அதிகம் இருந்தாங்க.  படம் எடுத்துக்க தடை ஒன்னும் இல்லை.


ஸ்தூபா மாடியில் இருந்து இந்தக் கோவிலைக் க்ளிக்கியது  மாதிரி, இங்கிருந்தும் ஸ்தூபாவை க்ளிக்கினேன்.  பழுதுபார்க்கும் வேலைகள் மும்முரமாத்தான் நடக்குது. இன்னும் ஒரு வருசத்தில் வேலை முடிஞ்சுரும்போல!  செக்யூரிட்டிகளுக்குத் தனியா பந்தல் போட்டு வச்சுருக்காங்க, வெயிலுக்குப் பாதுகாப்பா!  அனாவசிய நாட்டாமை பண்ணாம எல்லோரும் அமைதியாத்தான் இருந்தாங்க.
கீழே பரிக்ரமா போகும் மக்கள் ஒன்னு ரெண்டுபேர்  அப்பப்ப வலம் போய்க்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் பாதியில் வலத்தை விட்டுட்டு எதிர்ப்பக்கம் வந்துட்டேனேன்னு தோணுச்சு. மீதி வலத்தை முடிச்சோம், சக்கரத்தைச் சுத்தாமல்....

ஒன்வே என்பதால் தெருமுனையில் வண்டியை நிறுத்தி இருக்காராம் சூர்யா லாமா. தேடிப்போய் ஏறி லெமன்ட்ரீக்கு வந்து சேர்ந்தோம். ப்ரகாஷ் இருந்தார்.  பயணத்திட்டத்தை  இன்னொருமுறை சரி பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு, பெரிய பெட்டிகளை அங்கேயே விட்டுட்டு ஆளுக்கு ஆறு கிலோ எடையுள்ள பைகளை  எடுத்துக்கிட்டு இதோ ஏர்ப்போர்ட்டுக்குக் கிளம்பியாச்சு.

எதிரே வரப்போகும் புது ஹொட்டேலில்  சின்ன  ஸ்தூபா கட்டும் வேலை  இன்னும் முடியலை :-)

தொடரும்..........:-)