Friday, July 29, 2016

விளநகர் வரதராஜர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 66)

கோவிலுக்கு எதிரே திருக்குளம். அதன் கரையில்தான் ஆஞ்சி இருக்கார், கோவில்முகப்பைப் பார்த்தபடி.  குளக்கரையில்தான் அந்தப் புதுக்கோவிலும் வந்துக்கிட்டு இருக்கு.
ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு நேரா கோவில் முகப்பை நோக்கி நடந்தோம். ராஜகோபுரம் எல்லாம் கிடையாது.  முகப்பு வாசல் கடந்தால்  வெளிப்ரகாரம். கொடிமரம். அதுக்கு அந்தாண்டை கருவறை முகப்பு மண்டபம் வந்துருது.

முகப்பு வாசலில் வரதராஜப்பெருமாள் கோவில் என்று எழுதி இருந்தாலும்.....  அங்கே ராமனும் சீதையுமா அரியாசனத்தில் இருக்க, ராமனுக்கு  வலதுபக்கம்      விஸ்வாமித்ரரும்   வில்லேந்திய லக்ஷ்மணனும்,   இடதுபக்கம் பரத சத்ருகர்களுமா இருக்காங்க. ராமர் கோவில் என்னும் கணக்குதான் போல! அதான் நேரெதிரா ஆஞ்சி இருக்காரே!

  அபி அப்பா நம்முடன் இருந்ததால்    சம்ப்ரதாயப்படி  முதலில் வெளிப்ரகாரம் சுற்றி வந்தோம்.  நாங்க மட்டுமுன்னா....  நேரா பாய்ச்சல் மூலவரண்டைதான்:-)

ரொம்பப்பெரிய கோவில் என்று சொல்லமுடியாது.  கும்பாபிஷேகம் கடைசியா நடந்து ஆச்சு 14 வருசம். (ராமர்ன்னதும் பதினாலு வருசம் வந்துருச்சு பாருங்க!) சுத்தமாத்தான் இருக்கு வெளிப்பக்கம்.

பெருந்தேவித் தாயார் தனிச்சந்நிதியில்.
கருவறை விமானம்,  வைகுண்டவாசல்.
கோவில் தேரும், கருடவாகனமும்  ஒரு பக்கம்  தகரக்கூரையின் அடியில்.

இந்தக் கோவில் தென் காஞ்சி என்று அழைக்கப்படுகிறதாம்.  ராமர், சீதை ஐம்பொன் சிலைகளை அகழ்ந்தெடுத்ததாக  அறிவிக்கும் ஒரு தகவல்!  வரதர்  காட்சி கொடுத்தது  ஜயிஷவிய முனிவருக்காம்.
இந்தப் பெயரை முதல்முதலாக் கேட்கிறேன். யார் இந்த முனிவராம்?  தெரிஞ்சவங்க  சொன்னால் நல்லது.

இந்தக்கோவிலையொட்டியே   ரெண்டு அக்ரஹாரங்கள் இருந்ததாம்.  அதில் இருந்த ஸ்ரீநிவாசப்பெருமாள்  இப்போ இங்கே வந்துருக்கார்.  அங்கத்து உற்சவரும் இப்போ இங்கேதான்.  மஹாமண்டபத்தில்   கூட்டத்தோடு கூட்டமா கூடி இருந்து  கொண்டாட்டம்.




சுற்றிவந்து கோவிலுக்குள்ளே போறோம்.  மஹா மண்டபம், அர்த்தமண்டபம் கடந்து அதோ உள்ளே ஆஜானுபாகுவாக நிக்கறார் பெருமாள். ஹைய்யோ......  என்ன ஒரு உயரம்! நெடுநெடுன்னு நிக்கறாரே!  பனிரெண்டடி உயரமாம்!
அவருக்கேற்ற மாதிரி  தேவியர் இருவரும் பொருத்தமான உயரத்தில்!
தீபாராதனை காமிச்சு, நமக்குத் தீர்த்தமும் சடாரியும் லபிச்சது.
அர்த்தமண்டபத்தில் தசாவதாரச் சிற்பங்கள்.  ஆங்....    நம்ம நரசிம்மர்!  மூக்கு இப்படித்தான் இருக்கணும்.










சுவரில் இருந்த பழைய கல்வெட்டு 1944 இல் கும்பாபிஷேகம் நடந்ததாச் சொல்லுது.  அந்த வருசம் மற்ற  வைதீக நாள்காட்டிகளில் என்னவா இருக்குமுன்னு பார்த்து வியப்புதான்.  சாலிவாஹன சகாப்தம் 1866 ஆம்!  அஞ்சு வெவ்வேற ஆண்டுக் கணக்குகள்!


பெருமாள் கோவில்களுக்கே உரித்தான ஒரு அலட்சியம்,  மூலவரைத் தவிர மற்றவர்களைக் கவனிக்காமல் போட்டு வைப்பது இப்படி  இது போன்ற கல்யாண குணங்களுக்கெல்லாம் குறை வராமல் அப்படிக்கப்படியே போட்டு வச்சுருக்காங்க :-(
கோவில்னா இப்படித்தான் இருக்கும் என்பதைப்போல பட்டாச்சார்யார் சந்நிதி  கம்பிக் கதவை மூடிட்டு  வெளிப்படியில்  வந்து உக்கார்ந்தார்.
விசேஷ நாட்களத்தவிரக் கோவிலுக்கு  வரும் பக்த ஜனம் குறைஞ்சுக்கிட்டே வருது இப்பெல்லாம்.....   ப்ச்.



இந்த உற்சவர் கையில் இருக்கும் வளைந்த பிரம்பு போல் இருக்கும் குச்சிக்குப் பெயர் செண்டு. இதைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம் ஒருமுறை வாசிக்க வாய்த்தது.  ' தருமன் எல்லாவற்றையும் இழந்ததோடு, மனைவியையும் விளையாட்டில் பணயமா வச்சுத் தோத்துப் போயிடறார். துரியோதனின் தம்பி துச்சாதனன்,  அண்ணனின் ஆணைக்கிணங்க  த்ரோபதியை  அவளுடைய அரண்மனையில் இருந்து  தலைமுடியைப் பிடிச்சு இழுத்து வரும் சீன். '

வில்லிபுத்தூரார் பாரதத்தில்,  'தாமரைக்கைச் செண்டால் அவள் பைங் குழல்பற்றி' எனக் கூறும் வரிகளில் வரும் செண்டு என்னும் வார்த்தைக்கு பொருள் பூச்செண்டு  என்றுதான் பலரும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  தமிழ் தாத்தா   உ.வே.சா, அது சரியான பொருளா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறார். பாரதக்கதையின்படி, சம்பவம் நடந்த சமயம் த்ரோபதி  மாதவிலக்கில் இருக்காள். அப்ப எப்படி தலையில்  பூ வச்சுக்கிட்டு   இருந்திருப்பாள்?  

அப்பதான் ஒருநாள் இங்கே இந்தக் கோவிலுக்கு  வந்துருக்கார். உற்சவ மூர்த்திக்கு ராஜகோபால் என்று பெயர் இங்கே. கையில் வளைஞ்ச தண்டு வச்சுருக்கார். அதைக் கவனிச்ச தமிழ்த் தாத்தா, அது என்னன்னு பட்டரிடம் விசாரிக்க,  அவர் சொல்றார் அதுதான் செண்டுன்னு.  மாடுமேய்க்கும் கோபாலன், மரத்தில் இருந்து  இலைதழைகளைப் பிடிச்சு இழுத்துப் பறிச்சு  மாடுகளுக்குக் கொடுக்கப் பயன்படுத்தும் தொரட்டி அது! 

ஆஹா....  இதை வச்சுத்தான் த்ரோபதியின் கூந்தலைப்பிடிச்சு இழுத்து வந்துருக்கான் துச்சாதனன். அதான் 'செண்டால் பைங்குழல்பற்றி 'என்பதற்குச்  சரியான பொருள்னு  புரிஞ்சதாம்.  தமிழ்த்தாத்தாவின் ஐயம் தீர்த்த பெருமாள்! 


ஆறுபாதி கிராமப் பகுதி இதெல்லாம்.  இன்னும் ஒரு நாலு கிமீ போயிருந்தால் செம்பொன்னார்கோவில் வந்துருக்கும். அப்ப  தெரியாததால்  போக விட்டுப்போச்சு.

அடுத்துப்போகும் கோவில் அபி அப்பாவின் ப்ரத்யேகக் கோவில். ஏற்கெனவே சாட் லைனில் ஒருக்கா சொல்லி இருக்கார்.  அப்போ  இந்தமாதிரி ஒரு பயணம் இருக்குன்னு  பேச்சு வந்தப்ப,  'சொல்லுங்க..எங்க ரூம் போடனும் கோபால் சாருக்கு? எந்த கோவில் போகனும்? ஆனா ஒன்னு...எங்க போனாலும் கிருஷ்ணா தான் சாப்பாடு தருமாம். மெனு எல்லாம் இப்பவே சொல்லிடுச்சு' அன்புக் கட்டளைகள்தான்!

மயிலாடுதுறைக்கு வர்ற தேதி  சரியாத் தெரியாததால்.....   அப்ப  ஒன்னும் சொல்லலை.
இங்கிருந்து கிளம்பின அடுத்த இருபதாவது நிமிசத்தில் அபி அப்பாவின் கோவில் வாசலில் இருந்தோம்!

தொடரும்...........  :-)



Wednesday, July 27, 2016

நம்ம அபி அப்பாவுடன் ஊர் சுத்தலாமா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 65)

ஹொட்டேல் பாம்ஸ்.     சுமாரான அறை. இதாவது கிடைச்சதே ன்னு  ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும்...   க்குக்கும்  க்குக்கும் என்று புறாவின் கொஞ்சல்:-) ஒரு ஹை சொல்லிட்டுக் கீழே சாப்பிடப் போனோம்.

நம்மவருக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல்ஸ். எனக்குச் சப்பாத்தியும் தயிரும்.  மணி ரெண்டரையைத் தாண்டி இருக்கு.

சாப்பாடு ஆனதும், வரவேற்பில் போய் wifi தொடர்பு விசாரிச்சால்,  அதாலே ரெண்டாவது  மாடி வரை ஏற முடியாதாம் :-(  நமக்கு  Non smoking floor  வேணுமுன்னு கேட்டதால் ரெண்டாவது மாடி கொடுத்துருக்காங்களாம்.  முதல் மாடின்னா அறையிலேயே wifi கிடைக்குமாம்.  இங்கே ரிஸப்ஷன் ஏரியாவில் பிரச்சனை இல்லைன்னு  சொன்னாங்க.  அதுக்கான தொடர்புக்கு அவுங்களே நம்ம செல்லில் போட்டுத்தந்தாங்க.  ரகஸிய  பாஸ்வேர்ட் கோட் :-)

மாயவரத்துலே நமக்கு வேண்டப்பட்டவங்கன்னா  அபி அப்பா, சீமாச்சு, கோமதி அரசு  அண்ட் பரிமள ரெங்கன் மட்டும்தான்.  சீமாச்சு நாட்டில் இல்லை. கோமதி அரசு இடப்பெயர்ச்சியில்.  ரெங்கனுக்கு செல்ஃபோனே கிடையாது.  அபி அப்பாவுடன் பேசிட்டு, கொஞ்ச நேரத்துலே வர்றதாச் சொல்லியாச்.

போனமுறை போனது  செப்டம்பர் 2012.  மூணரை வருசமாச்சு.  நட்டுவுக்கு ஏதும்  வாங்கி வரலை.  நியூஸியில் இருந்து சாக்லேட்கள்தான் வாங்கிப்போயிருந்தாலும், அவை எல்லாம் சென்னைக்குன்னே இருக்கு.  அங்கிருக்கும் சூட்டில் எல்லாம் உருகிப்போயிருது பாருங்க. அதிலும்  உள்ளூர் கார்ப்பயணத்தில் கேக்கவே வேணாம்.
முதலில் கடைவீதிப்பக்கம் போய் எதாவது வாங்கிக்கணும். போனோம். காளியாகுடி கண்ணில்பட்டது. இந்த முறையும்  தூரதர்சனம்தான். ஒரு 'பெரிய கடை'யில் சுமாரான      சாக்லேட்ஸ் கிடைச்சது.  அப்படியே நேரா அபி அப்பா வீட்டுக்குத்தான். நம்ம சீனிவாசனுக்கு  ஒருமுறை போன இடம் சட்னு  மறக்கறதில்லையாக்கும்.

போய்ச் சேரும்போது, என்னடா இதுவரை காணோமேன்னு  வெளியே தெருவில் வந்து பார்த்துக்கிட்டு இருந்தார் அபி அப்பா. இவரை இப்போதான் முதல்முறையா சந்திக்கறோம்.  ஆனால் மற்ற குடும்ப  அங்கத்தினருடன் இது நமக்கு ரெண்டாவது சந்திப்பு.
முதல்முறை சந்திப்பு என்ற உணர்வு கொஞ்சமும் இல்லை. தினம் பார்த்துப்பேசும் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல ஆக்கி இருக்கு வலையுலகம் :-)

வீட்டுக்குள்  காலெடுத்து வைக்குமுன் அபி அம்மா ஓடிவந்து  'வாங்க'ன்னு  சொன்னதும்  எனக்கு அக்கா நினைவு வந்துருச்சு.  ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்:-)


உறவினர் வீட்டுலே குழந்தை பிறந்துருக்குன்னு  போயிட்டு அவசர அவசரமா வந்துருக்காங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் போயிட்டு வரேன்னு அபி அப்பா கிளம்பிப்போய் கொஞ்ச நேரத்துலே  வந்துட்டார்!  பின்னாலேயே நட்டு த க்ரேட்!

அபி அப்பாவுடன் வெளியே கிளம்பினோம்.  அபி அம்மா வரலை. நட்டுவும் வரலை. நண்பர்களுடன் விளையாடப் போறாராம். வரேன்னு வாக்குக் கொடுத்ததை மீற முடியாது !  ஆஹா....
 அபி அப்பா வழிகாட்ட முதலில் நாங்க போய்ச்சேர்ந்த இடம் விளநகர். இதில் ஆறுபாதி என்ற  பகுதி.   மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிமீ தூரம். பெருமாள் கோவில்  வாசலில் இறங்கியதும், வலப்பக்கம் இருக்கும் சிறிய திருவடி கைகூப்பிய நிலையில் இருக்க அவருக்கு நேர் எதிரா இருக்கார் பெருமாள்.


சிறிய திருவடியையொட்டியே ஒரு கோவில் உருவாகிக்கிட்டு இருக்கு. சின்ன இடம்தான். அதுலே குறுக்குவாட்டிலே கோவில் எழும்புது. என்ன கோவிலாக இருக்குமுன்னு போய் எட்டிப் பார்த்தேன்.

ஷீரடி சாயிபாபா கோவிலாம். இங்கே கோவில் வருவதன் காரணம்?  மரத்தில் தோன்றிய சுயம்பு சாயிபாபா!

 பக்தர் ஒருவர் மரத்தாண்டை கூட்டிப்போய் காமிச்சார். இலவம் பஞ்சு மரத்தில்  கீறியது போல் இருந்தது.  நெற்றியில் விபூதி குங்குமம் வச்சுருந்தாங்க.  இவர் மரத்தில் தோன்றி  டிசம்பர் 20, 2015 தேதி   ஒரு வருசம் ஆகி இருக்குன்னு   முதலாம் ஆண்டுவிழா கொண்டாடி இருக்காங்க.
இன்றைக்கு (ஃபிப்ரவரி 1 2016)  கோவில் மளமளன்னு  வளர்ந்து வருது.  அடுத்த  மாசம் கும்பாபிஷேகம் ஆகிருமாம்.

 கோவில் கருவறைக்கான மூலவர் சிலை வந்துருச்சு. வாங்கன்னு  பக்தர்  ஒரு வீட்டின் வெளிப்புறம் போட்டுருந்த தாற்காலிக  ஷெட்டுக்கு கூட்டிப்போனார்.  மூடி இருந்த  ஷெட் கதவைத் திறந்ததும் பெரியதும் சிறியதுமா ரெண்டு மார்பிள் சிலைகள் இருந்தன.  இங்கேதான் பூஜைகள் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு.

கோவிலைப் பார்த்துக்கிட்டு  எல்லா வேலைகளுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சாயி பன்னீர்.  சிலைகள்,  ஷீரடி கோவிலில்  ஒரு மண்டலம்  வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி, ஆசிர்வதிச்சு  அனுப்பினாங்களாம்.

ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து மூணு பிஸ்கட்ஸ் எடுத்துப் பூஜைத்தட்டில் வச்சு  பாபாவுக்கு  தீபஆரத்தி எடுத்துட்டு, நமக்குப் பிரஸாதம் வழங்கினார்.
நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.  இங்கே ஃபேஸ்புக்கிலும், பதிவர் உலகிலும் எனக்குத் தெரிஞ்ச சாயி பக்தர்கள் நினைவு வந்தது என்பது உண்மை.
எந்த நிகழ்வானாலும் சரி, சம்பந்தப்பட்ட  பதிவர்கள் நினைவுவருவது இந்த 12 வருசத்தில் சகஜமாத்தான்  போயிருக்கு.
கடவுள் என்பதே  நம்பிக்கைதான். நம்புனாத்தான் கடவுள்!   அவரவர் நம்பிக்கையை நாம் மதிக்க வேணும் இல்லையா?

சமீபகாலமாக நிறைய இடங்களில்  சாயிபாபா கோவில்கள் பெருகி வர்றதை கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.  யாருக்கு எங்கே மனம் லயிக்குதோ அங்கே பக்தி செலுத்துதல் தப்பே கிடையாது!

வாங்க நாம் வந்த வேலையைப்  பார்க்கலாமுன்னு  கிளம்பினோம்.


 PIN குறிப்பு:  இந்தப்   பதிவு எழுதும்போது  கும்பாபிஷேகப்படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். மார்ச் 26  நடந்துருக்கு.  சுட்டபடங்கள்  சில  உங்களுக்காக! படத்தில் நம்ம சாய் பன்னீரைத் தேடினேன்.  காணோம் :-(






தொடரும்.......... :-)