Monday, July 11, 2016

திருக்காவளம்பாடி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 58)

நாகபுரியின் நாலைஞ்சு தெருக்களையே சுத்திக்கிட்டு இருந்தோமில்லையா, அப்ப அடுத்துப்போன கோவில்தான் கொஞ்சம் அந்தாண்டை தள்ளி இருந்தது. அதிக தூரம் ஒன்னுமில்லையாக்கும். வெறும் ரெண்டரைக்கிலோ மீட்டர்தான்.  ஆளில்லாப் பாதையில் போனதால்  அஞ்சே நிமிசப் பயணம் :-)
முன்வாசல் சமீபத்திய வரவு போல!  சீர்ப்படுத்தி, குடமுழக்கு  செஞ்சப்பக் கட்டி இருக்கணும்.  உள்ளே கடந்து போறோம். பலிபீடம், பெரிய திருவடிக்கான  சந்நிதி மட்டும்!  கொடி மரம் இங்கேயும் இல்லை.
கோவில் வாசலைச் சட்னு பார்த்தால் எதோ வீட்டுக்குள்ளே போற மாதிரி இருக்கு! கோ இல் =  சாமி வீடு!  அய்க்கோட்டே!


முன் மண்டபஹாலைக் கடந்தால்  கருவறை!  உள்ளே யார் தெரியுமோ?  நம்ம கோகி! அடச்செல்லமே!!!
த்வாரகை நாதன் கோபால கிருஷ்ணன்,  ருக்மிணி, சத்யபாமையுடன் ஜாலியா நிக்கறான்.  மன்னார்குடியில் நம்ம ராஜகோபாலன் கையில் இருக்கே  வளைஞ்சு வளைஞ்சு போகும்  சாட்டைக்குச்சி, அதே போல் இவனும்  கையில் வச்சுருக்கான். அப்புறம் பார்த்தால்....   ராஜகோபாலசாமி கோவில் என்றுதான் கோவிலுக்குப் பெயராம்!
தாயார்கள்   மடவரல்மங்கை, செங்கமல நாச்சியார் என்னும் திருநாமத்தில் கூடவே நிக்கறாங்க.

இந்த இடத்துக்குப் பெயர் காவளம்பாடி!  திரு என்னும் அடைமொழியைச் சேர்த்துட்டால் திருக்காவளம்பாடி!   காவளம் என்றால் தோட்டம் என்று பொருளாம்!

தோட்டத்துக்கு நடுவில் இருக்கும் கோவில் என்று அந்தக் காலத்தில் ரொம்பவே பிரசித்தம்!



நாம்  இந்தப் பயணத்துலே கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த குடமாடுகூத்தன் கோவிலைப்போலவே முன்மண்டபமும், கூரையில் சித்திரங்களுமா   இருக்கு
.
நம்ம திருமங்கை ஆழ்வார் இங்கேயும் நம்ம கோபாலகிருஷ்ணனுக்காக பத்துப் பாசுரம் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். ( 1298-1307 பாசுரங்கள்.)

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே. (1305)

தோட்டம் எப்படி வந்ததுன்னு  கேட்டால் அதுக்கும் ஒரு புராணக் கதை மண்டபத்துச் சுவரில் எழுதிதான் வச்சுருக்காங்க.  வழக்கம்போல் இங்கே கண்டான்முண்டான் சாமான்கள் இல்லை என்பது ஒரு ஆறுதல். ஆனால் பராமரிப்பு இல்லை.
நான் நினைக்கறேன்.... ஏன் பெருமாள் கோவில்களில் இப்படிப் போட்டு வைக்கிறோம் என்றால்.....

நமக்கு  சாமி, எங்கேயோ இருப்பவன் இல்லை. நம்மில் ஒருவன். நம்மகூடவே நம்ம வீட்டில் ஒருவன்.  நம்ம வீடுதான் அவன் வீடு. அவன் வீடுதான் நம்ம வீடு. அதனால் அந்த உரிமையால் நம்மவீட்டுலே எப்படி அங்கங்கே  பொருட்களைப்போட்டு வைக்கிறோமோ அதே போல  அவன் வீட்டிலும் போட்டு வச்சால்தானே அவனுக்கும் நமக்கும் எவ்ளோ  கெட்டியான உறவுப் பிணைப்பு , பந்தம் எல்லாம் இருப்பது புரியும்! இல்லையோ ! 

கதைக்குக் காரணகர்த்தா நம்ம நாரதர்.  தேவலோகத்தில் இருந்து  ஒரு நாள் கொஞ்சம் பாரிஜாத மலர்களைப் பறிச்சுக்கிட்டு, ஸ்ரீ க்ருஷ்ணனைப் பார்க்க த்வாரகைக்கு வர்றார்.   நேராப்போய் ருக்மிணிக்கு அந்தப் பூக்களைக் கொடுத்துட்டுக் கலகத்தை ஆரம்பிச்சு வச்சுட்டுக் காணாமல் போனார்.

பக்கத்து மாளிகையில் இருந்து  ஆளையே அசரடிக்கும் வாசனை வருது. என்னவா இருக்குமுன்னு இங்கே சத்யபாமைக்குக் குடைச்சல்.  மெள்ள விசாரிக்கச் சொல்லி ஒரு சேடியை அனுப்பறாள்.  தேவலோகத்து மலர்  வந்துருக்குன்ற சேதியைக் கொண்டுவந்தாள் சேடி!

எனக்கும் கொஞ்சம் கொடுன்னு  ருக்மிணியாண்டை  கேக்கலாமான்னு நினைச்சாள்.  'இல்லைன்னு   முகத்தில் அடிச்சாப்போல சொல்லிருவாளோ? ஏற்கெனவே அகம்பாபம் பிடிச்சவளாச்சே'ன்னு ஒரு எண்ணமும் கூடவே வந்துருது.  நாமென்ன  அவளுக்குக் குறைஞ்சா போயிட்டோம், அங்கே போய் கெஞ்ச?  புருஷன் வரட்டும்  'அப்ப இருக்கு'ன்னு  இருக்காள்.

கண்ணனும் வந்தான்.  மூஞ்சைத் தூக்கி வச்சுருக்கும் சத்யபாமையைப் பார்த்ததும்  டேஞ்சர்னு புரிஞ்சது. கெஞ்சியும் கொஞ்சியும் காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டவன், இது என்ன பிரமாதமா? உனக்கு நானே பாரிஜாத மலர்களைக் கொண்டுவந்து தரேன்னு சொன்னான்.  இவனுக்கு  இவளிடம் கொஞ்சம் பிரியம் அதிகமாம்! நாஞ்சொல்லலை. எழுதி வச்சுருக்கு இங்கே :-)


சரின்னு உடனே ஒத்துக்கிட, இவள் என்ன சாதாரணப்பட்டவளா?  'எனக்கு வெறும் பூக்கள் வேண்டியதில்லை.  நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. ஆனால்  என் மாளிகைத் தோட்டத்திலே ஒரு    பாரிஜாத மரமே வேணும்'னு  போட்டாள்   ஒரு போடு. அப்போதைக்குச் சண்டை  ஒத்து நைனான்னு , '  அட இவ்ளோதானா? நோ ஒர்ரீஸ்'னுட்டான் க்ருஷ்ணன்.

அப்பப் பார்த்து, நரகாசுரனால் இந்திரனுக்கும் தேவர்களுக்கும் தொல்லை அதிகமாப் போயிருச்சு. 'தேவலோகத்தை எப்படியாவது நீர் காப்பாத்தணு'முன்னு  அவசர உதவி கேட்டு தாக்கீது வருது  த்வாரகைக்கு.
உடனே கிளம்பணும். அப்பன்னு பார்த்து சாரதியைக் காணோம்.  ஆள் அனுப்பிக்கூப்பிட நேரமில்லை.  சத்யபாமை  உடனே  தேரோட்டி  ஆசனத்தில் போய்  உக்கார்ந்தாள்.  கிளம்பினார்கள்.

நரகாசுரனுக்கும் க்ருஷ்ணனுக்கும் பயங்கர யுத்தம்!  நரகாசுரன் செலுத்திய அம்பால் அடிபட்டு மயக்கமாத்  தேர்த்தட்டில் வீழ்ந்தான் க்ருஷ்ணன்.  பார்த்த பாமை சும்மா இருப்பாளா? எடுத்தாள், வில்லை!  நரகாசுரனை வீழ்த்தினாள்.  இவன் இப்படி மரணத்தை அடைய, இவன் வாங்கிய வரம்தான் காரணம்.  தாயின் கையால் மரணம் என்று  சாமர்த்தியமா ஒரு வரம் வாங்கிக்கிட்டான்.  எந்தத் தாயாவது, பெற்ற மகனைக் கொல்வாளா என்ற எண்ணம்தான்.
ஒரு வகையில் பார்த்தால் நரகாசுரன் விஷ்ணுவின் மகன்தான்.  செங்கண்மால்  கோவிலில் (திருத்தெற்றியம்பலம்)  அசுரனோடு சண்டை போட்டு, பூமாதேவியை மீட்டு வந்த கதை நினைவிருக்கோ?  அப்போது  பூமாதேவிக்கும்,  வராக அவதார விஷ்ணுவுக்கும் பிறந்தவன்தான் இவன்.  சத்யபாமையும் பூதேவியின் அம்சம் என்பதால்  இதெல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு.  அப்பதான் அவன் மரணித்த தினத்தை தீபம் ஏற்றிக் கொண்டாடணும் என்று  மரணவாக்குமூலத்தில் கேட்டுக்கிட்டான்னு   அந்த நாளில் தீபாவளி கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.

 மயக்கம் தெளிஞ்சு எழுந்த க்ருஷ்ணன்,       நரகாசுரன் மகனுக்கு  (பெயர் பதத்தன்)  பட்டாபிஷேகம் செய்துட்டு, நரகாசுரன் சிறை வைத்திருந்த பதினாயிரத்து நூறு  கன்னிகைகளை விடுவித்தான்.  பொக்கிஷ அறையில் பார்த்தால் இந்திரனிடம் இருந்து  கவர்ந்துகொண்டு போன  வெண்கொற்றக்குடை, மணிபர்வதம் என்று சிலபல தேவலோக சமாச்சாரங்கள் எல்லாம் இருந்துருக்கு.  அவைகளை வாரிக்கிட்டு,  இந்திரலோகம் போய்ச் சேர்ந்தாங்க  க்ருஷ்ணனும் சத்யபாமையும்.
அரக்கனிடம் பறிகொடுத்த பொருட்கள் திரும்பக் கிடைச்சதும், அரக்கனின்  அழிவும்  இந்திரனுக்கு ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுத்தது.  ரெண்டு பேரையும்  நல்லா உபசரிச்சு  விருந்து வச்சுக் கொண்டாடறான்.

அங்கிருந்து கிளம்பும் சமயம்,  பாரிஜாத மரத்தைப் பற்றி ஞாபகப்படுத்தினாள் பாமை.  நேராத் தோட்டத்துக்குப்போய் ஒரு மரத்தைப் பெயர்த்து எடுத்துக்கிட்டு அல்மோஸ்ட் புறப்பட்டுட்டாங்க.  இந்திரனின் மனைவி  இதைப் பார்த்துட்டு,  அபாயக்குரல் எழுப்புனதும்,  இந்திரன்  ஓடிவந்து தடுக்கறான்.  க்ருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும் சண்டை வந்துருது.  சண்டையில் இந்திரன் தோத்துப் போயிடறான்.  அப்ப இந்திரனின் தாய் அதிதி அங்கே வந்து  கிருஷ்ணனை வணங்கி, சமாதானப்படுத்திட்டு,  தன்  மகனை மன்னிக்கச் சொல்லி வேண்டுனாங்க.   சரி. போன்னுட்டுக் கிளம்பினதும்,  பாரிஜாத மரத்தைக்  கொண்டு வந்து  கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கிட்டான் இந்திரன்.

த்வாரகையில்  பாரிஜாத மரத்தை எங்கே நட்டு வைக்கலாமுன்னு   இடம் தேடி, பாமா வீட்டுத் தோட்டத்தில்,  ருக்மிணி வீட்டு வேலிக்குப் பக்கத்தில் நட்டு வச்சுடறாங்க. மரம் பூக்கத்தொடங்கியதும் அந்தப் பக்கமும் பூத்துக் கொட்டுதுன்னு  பாமைக்குக் கோபம்.  இதனாலேயே எப்பப் பார்த்தாலும் ரெண்டு பேருக்கும் சண்டை.   கலகதாரிக்கோ ஏகப்பட்ட கொண்டாட்டம்.

நல்லவேளை நம்மளை விட்டாப் போதுமுன்னு  இவனும்,  யார்.....   அந்த  ஸ்ரீ க்ருஷ்ணன்தான்  சந்தோஷமாக இருந்துருப்பான் போல!

இங்கே திருநாங்கூரில் பதினொரு ரூபத்துலே சிவனுடைய ஏகாதஸருத்ர யாகத்துலே   தரிசனம் கொடுத்தப்ப, இந்த இடத்துலே த்வாராகாதிபதியா ருக்மிணி சத்யபாமையுடன் வந்து  எழுந்தருளினபோது,  பெரியவர்களுடைய வழக்கத்தின்படி இங்கே இதே ரூபத்தில் இருந்து  பக்தர்களை அனுகிரஹிக்கணும் என்று வேண்டிக்கொண்டு  அதே போல ஆச்சு இல்லையா.

  இந்திரனுக்கும்  ' க்ருஷ்ணனோடு  சண்டை போட்டுட்டோமே என்ற மனக்கஷ்டம் இருந்துக்கிட்டே இருந்ததால்......     இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கலாமுன்னு  தோணுச்சு.   இங்கேயேஒரு தோட்டம் ஏற்படுத்தி தேவலோக மரங்களை நட்டு வச்சுடலாமுன்னு  அதேபடிக்குச் செய்தான். காவளம் அமைத்துக் கொடுத்தான்!  அந்தமரங்களின் கன்றுகளைக் கொண்டு வந்து நட்டு வச்சுருப்பான்னு நினைக்கிறேன்.  அதான் இந்த இடத்துக்குப்பெயர் காவளம்பாடின்னு ஆச்சு.

உண்மையைச் சொன்னால்....  இந்தக் கதை இங்கே இப்படி முடிஞ்சால் நல்லா இருக்கும். ஆனால்   கோவில்  சுவற்றில் எழுதுன கதை வேறொரு சம்பவத்தையும் சேர்த்தே எழுதப்பட்டு இருக்கு.  ஏன்னு தெரியலை. ஆனாலும் அது 'நம்ம' மஹிமையைக் கூறுவதால் அதையும் சேர்த்தே சொல்லிடறேனே....  இதுவும் ருக்மிணி பாமா சம்பந்தப்பட்டதுதான்.

பாமாவுக்கு எப்போதும்  கணவன்,  ருக்மிணியிடம் அதிகமாக அன்பு வச்சுருப்பதாக ஒரு எண்ணம். சக்களத்திக்களுக்கே உரிய எண்ணம்தான் :-)
நாரதர் எப்போதும்  மூவுலக சஞ்சாரத்தின்போது, அப்பப்ப க்ருஷ்ணரைக் காணவருவது வழக்கம்.  கலகதாரியா இருந்தாலும்  எப்படியோ எல்லோருடைய குட்புக்ஸிலும் இருக்கார்.   அப்போ சத்யபாமா, அவரிடம்  க்ருஷ்ணன் தன்மீது அதிகமா அன்பு  செலுத்தணுமுன்னா தான் என்ன மாதிரி விரதம், பூஜைகள்  அனுசரிக்க வேணுமுன்னு கேக்கறாள்.

'இதுக்குப் பெரிய விரதம் எல்லாம் தேவை இல்லை.  அந்த க்ருஷ்ணனை நீ நல்லவரும் நம்பிக்கையானவருமா இருக்கும் ஒருத்தருக்குத் தானம்செஞ்சுட்டு, திரும்ப வாங்கிக்கணும். அம்புட்டுதான்'னு சொல்றார்.  அப்படி ஒருவரை எங்கே போய்த் தேட?  நீரே மிகவும் நல்லவராக இருக்கிறீர். நம்பத் தகுந்தவரும் கூட. தானம் செஞ்சுட்டுத் திருப்பிக் கேட்டால் மறுக்கமாட்டீர்தானே ன்னு  கேட்டதும், ஆமாம்....  இதுலே என்ன சந்தேகம்?  நானோ எப்போதும் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பவன். க்ருஷ்ணனையும் தூக்கிக்கிட்டே பயணம் போறது நடக்கற காரியமான்னு பதில் சொல்றார், நாரதர்.

அப்படின்னா  இதோ இப்பவே என் க்ருஷ்ணனை உமக்கு தானம் கொடுத்தேன்னு சொல்லிக் கொடுத்துட்டாள். அடுத்து  'இப்போ க்ருஷ்ணனை எனக்குத் திருப்பிக்கொடும்'னு  கேட்கும்போது,  'அப்படி  ச்சும்மாத் தூக்கித்தர முடியுமா?   அவருக்குப் பதிலாக  எதாவது  கொடுத்துட்டு வாங்கிக்கோ'ன்னார். அதுவும் எப்படி? எடைக்கு எடை!  துலாபாரம்!


'க்ருஷ்ணனுக்கு ஈடாக எதைத் தர்றது?  என் தங்கமாச்சே   அவர்!   சரி என்னுடைய  ஆபரணங்களைத் தரேன்'னு சொன்னவள்  தராசின் ஒரு தட்டுலே    ஸ்ரீக்ருஷ்ணனை  உக்காரச் சொல்லிட்டு, அடுத்த தட்டில் தன்னுடைய நகைநட்டுகளையெல்லாம் வாரி வைக்கிறாள். க்ருஷ்ணனும் இந்த வேடிக்கையை அனுபவிச்சுக்கிட்டு, பாமா சொல்றதையெல்லாம்  கேக்கறான், பாருங்களேன்!

எல்லா நகைகளையும்  ஒரு சின்ன மூக்குத்தி, திருகாணி உட்பட வச்சாச்சு. ஆனால்  எடை  சமம் ஆகலை. நகைத்தட்டு உசரத்துலேயே இருக்கு.  இனி என்னத்தைக் கொண்டு வைக்கன்னு தெரியாம திகைச்சு நிக்கும்போது,  'அகஸ்மாத்தா' அங்கே ருக்மிணி வர்றாள்.  தராசின் ஒரு தட்டில் க்ருஷ்ணன். அந்தத் தட்டு கீழே இருக்கு. எதிரில் உசரமா இருக்கும் தட்டில் சின்ன குன்று மாதிரி நகைக்குவியல்!  என்ன ஏதுன்னு விசாரிச்சவள், இதோ வர்றேன்னு திரும்பிப் போறாள்.  சரி. அவளுடைய நகைகளைக்  கொண்டு வரத்தான் போயிருக்காள்னு பாமா காத்துக்கிட்டு இருக்காள்.
இதோ... ருக்மிணி திரும்பி வந்தாச்சு.  கையில் நகை மூட்டை ஒன்னையும் காணோம்?  ஆனால்   ஒரு  கையில் துளசிதளம்  மட்டும் இருக்கு.  ஒரு நொடி அந்தத் துளசியை கண்ணில் ஒத்திக்கிட்டு,    அந்த துளசிதளத்தை  எதிர்த்தட்டில் வைக்கிறாள். தராசு  சரியா எடைக்கு எடை காமிச்சது!

ஆஹா ஆஹா..........

ருக்மிணிக்கு இருந்த பக்தியையும், துளசியின் மஹிமையையும் அந்தக் கணமே பாமை உணர்ந்தாள்னு கதை போகுது!

இவ்ளோ  அருமையான துளசியையும், இந்திரன் அந்தக் காவளத்துலே கொண்டு வந்து நட்டு வச்சான்னு நாம் முடிக்கலாம்தானே :-)


 கோவிலை வலம் வந்தோம்.  தாயார்களுக்குன்னு தனிச்சந்நிதிகள் ஏதும் இல்லை.  சுத்தமான வெளிப்ரகாரம்.  பளிச்னு இருக்கும்  கோவில் விமானம் எல்லாம் ஒரு அழகுதான்!
இந்தக் கோவிலையும் பழுதுபார்த்து  சீரமைத்தவர் நம்ம முரளிதரஸ்வாமிகள்தான்.
கோவிலில் பளிங்குக் கல்வெட்டில் கோபாலனுக்காக ஒரு  கீர்த்தனாவளி இருக்கு!

தோட்டத்தில் பசுமையான மரங்கள் இருக்கே தவிர, பவளமல்லி மரத்தைக் காணோம்! தங்கரளியும் ஒத்தை நந்தியாவட்டமும்தான்  கேமெராக் கண்ணில் பட்டன!

கிணத்தாண்டை  ரெண்டுமூணு  துளசிமாடங்கள் இருக்கே தவிர ஒன்னுலேகூட பெயருக்கு ஒரு துளசியைக் காணோம் :-(   
நான்மட்டும்தான் அங்கே இப்போதைக்கு.  பாவம்..... துளசி....  இல்லே?
 மடப்பள்ளிக்கான விறகுகளைக் காயப்போட்டு வச்சுருந்தாங்க.  அதை ப் பிளந்து போட்ட  ரெண்டுபேர்,  கோவிலுக்கு வேலை செய்யறோம், எதாவது கொடுங்கன்னு சொல்லிக் கேட்டதால்.....  நம்ம கோகியின் சார்பில் கொஞ்சம்  அன்பளிப்பு கொடுத்தோம்.

பெரிய திருவடிக்கு ஒரு நமஸ்காரம்  செஞ்சுட்டு  வாசலுக்கு வந்து எதிரே இருக்கும் கோவில் குளத்தையும்  (தடமலர் பொய்கை தீர்த்தம்) க்ளிக்கிட்டு இதோ அடுத்த கோவிலுக்குப் போறோம். சரியா?

தொடரும்...........  :-)



15 comments:

said...

அஹா... படங்களும் பகிர்வும் அற்புதம் அம்மா...

said...

நன்றி.
தொடரட்டும்.
தொடர்கிறேன்.

said...

பாமா ருக்மணி சமேத ராஜ கோபால சுவாமி..ஆகா என்றுமே அழகு..

மடவரல்மங்கை, செங்கமல நாச்சியார் ..அழகான பெயர்கள்..

said...

திருக்குளத்தின் (பெரும்பான்மையான கோவில்களில்) இப்போதைய நிலைமையையும் அதைச் சரியாக வைத்துக்கொள்ளாத நம்மையும் 'நினைத்தால் வருத்தமாக இருக்கு. இன்னும் காலம் சென்றால், உங்கள் தளத்தில்தான் குளங்களைக் காண இயலும். அதில் வீடுகள் கட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

யாத்திரையைத் தொடர்கிறோம்.

said...

படங்கள், கதை என அனைத்துமே அருமை.

தொடர்கிறேன்....

said...

அருமையான கண்ணன் !!!! அகஸ்த்தாமானா என்ன அர்த்தம் ??

said...

வாங்க பரிவை சே குமார்.


நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆமாங்க. நானும் ரசித்தேன்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வரவர நம்ம மக்களுக்கு அலட்சியம் அதிகமாகி வருது :-( பெருமாள்தான் நல்ல புத்தி கொடுக்கணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

அகஸ்மாத்தாக ... = 'தற்செயலாக '

said...

காட்சிகளும், கதை அமைப்பும் அபாரம்.

said...

ஒரு படத்துல செந்தில் பதனி விக்கிறவரா வருவாரு. வீடு வீடா பதனி கொடுத்து குடும்பங்களைப் பிரிச்சிருவாரு.

அது மாதிரி குடும்பங்களைப் பிரிக்கிற மாதிரி கதைகள்ள நாரதர் பதனி வித்திருக்காரு போல.

ஒரு பழத்தால பரமசிவன் குடும்பம் படாதபாடு பட்டுச்சு. ஒரு பூவால கிருஷ்ணன் குடும்பமே கிழிஞ்சி போச்சே. நல்ல வேள ஒட்டுப் போட துளசி இருந்துச்சு :)

said...

இரண்டு கதைகளும் தெரிந்தது தான்...கோகியின் தரிசனம் தங்களால் எங்களுக்கும் கிடைக்கப் பெற்றது..