Friday, April 29, 2016

இப்படி முன்னாலே உக்காருங்க ஆஃபீஸர்!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 27)

அறைக் கதவில் தொங்கவிட்ட நியூஸ் பேப்பரைப் பார்க்கும் வரையில்  அன்றைக்குத் தைப்பூசம் என்றே தெரியாது. அதுகூட நம்மவர் சொல்லித்தான்.  'ஏம்மா  போறவழியில் முருகனைப் பார்த்துட்டுப் போலாமா'ன்னார். என்னாலே அவ்ளோ படி ஏற முடியாதுன்னேன். நீ எந்தக் காலத்துலே இருக்கே? அதெல்லாம் மேலே போக ரோடு போட்டாச்சுன்னார். எப்போ? நாம் கடைசியாப் போனது 1979 மார்ச் இல்லையோ? 37 வருசத்துலே மாறாமலா இருக்கும்?

போகலாம்தான். ஆனா இன்றைக்குத் தைப்பூசம் என்பதால் கூட்டம் அம்மும். போறவழிதானே...   கீழே இருந்து கும்பிட்டுக்கிட்டுப் போனால் ஆச்சுன்னேன்.

நம்மவர் முருகபக்தர். எனக்கு முருகனோடு ஒரு விரோதமும் இல்லை. அவனுக்கும் அப்படித்தான் போல. கூப்புட்டு தரிசனம் கொடுத்துருவான்.  ஒருவேளை பக்தன் கோபாலுக்காக மனம் இரங்கும்போது கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கும் என்னை எங்கெபோய்த் தள்ளன்னு இருக்கலாம்:-)

கடமைகளை முடிச்சுப் பொட்டிகளைக் கட்டி வச்சுட்டு  ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ரெடியானோம். நம்மவர் வேட்டி கட்டிக்கிட்டார். திருத்தணி ஸ்பெஷலாம்!  கையிலெ செல்ஃபோன் வச்சுக்குங்க. அப்பதான் போஸ் சரியா இருக்கும்னேன்:-)
கீழே ரெஸ்ட்டாரண்ட் அருமையான உள் அலங்காரத்தோடு நல்லாவே இருக்கு. பஃபேதான். ஏராளமான வகைகள் இருக்குன்னாலும் நமக்கு வழக்கம்போல் இட்லி வடைகள். அப்புறம் பார்த்தா அவிச்ச வேர்க்கடலையும் வெள்ளரிக்காயும், முளைகட்டிய பச்சைப்பயிறும் இருக்கேன்னு  கொஞ்சம் எடுத்துக்கிட்டேன்.



திரும்ப அறைக்கு வரும் வழியில் வரவேற்பில்  செக்கவுட் பண்ணறோமுன்னு சொல்லிட்டு மேலே வந்தோம். வரவேற்பில் என்டிஆர்  சாமி வேஷத்தில்  டிவியில் இருந்தார். என்னதான் சொன்னாலும் கிருஷ்ணன் வேஷத்துக்கு  இவர் முகம் ரொம்பவே பொருத்தம், இல்லே!

நம்மவர் திடீர்னு  பேண்ட்ஸுக்கு மாறினார்.  கூட்டத்துலே வேட்டி அவுந்துருச்சுன்னா? பயம்  நியாயம்தான். கீழே வந்து  அக்கவுண்ட் செட்டில் பண்ணும்போது நான் சும்மா வெளியே  தோட்டத்தை எட்டிப் பார்த்தால்  கேட் அருகில்   காம்பவுண்டுக்குள்ளேயே சின்னதா ஒரு கோவில். ஹொட்டேல்காரங்க கட்டி இருக்காங்க.  திரை போட்டு  இன்றைய சடங்குகளுக்குத் தயார் செய்யறார்  அர்ச்சகர்.


'மேடம் சாமி கும்பிட வந்துருக்காங்க'ன்னு  கேட் கீப்பர் சவுண்டு விட்டதும் சரேல்னு விலகியது திரை! ஒரு சின்ன அறை. உள்ளே தாயாரும் பெருமாளும்  பஞ்சலோகத்தில்!

ஆர்வக்கோளாறில் பெருமாள்கண்ணுலே கருப்பு முழி பெரூசு. போகட்டும் மலைமேலேதான் கண்ணை மறைச்சு நாமம் போட்டுக்கிட்டானே.....
தீபாராதனை ஆச்சு. என்னைக் காணோமேன்னு தேடிக்கிட்டு  வந்த  கோபாலையும்  கும்பிட்டுக்கச் சொன்னேன்.  நம்ம சீனிவாசனும் வந்து சேர்ந்துக்கிட்டார். பெருமாளுக்கு பைபை சொல்லிட்டுக்  கிளம்பிட்டோம்.
நாற்சந்தியில் நம்ம எம் எஸ் அம்மாவின் சிலை. கையில் தம்பூரா! தேவஸ்தானத்து ஆஸ்தான பாடகரா இருந்ததுக்கு மரியாதை!
ஒரு முப்பத்தியஞ்சு நிமிட்டில்  தடு(க்)கு என்ற ஊரைக் கடக்கும்போதே   முருகன் வந்துட்டான். ஸ்ரீ ஸ்ரீனிவாசலு ரெட்டி நகர் என்ற பெயர் போட்ட கட்டிடத்தின் முகப்பில்  தங்கமுருகன்  கையில் வேலோடு. நம்ம பத்துமலை முருகனின் ஸ்டைலில்  சின்னது. எதோ ஆஸ்ரமக்கோவில்  போல இருக்கு.   உணவுக் கடைகளிலும் தமிழ் எழுத்துகளும் இங்கிருந்தே ஆரம்பிச்சுருது .

கொஞ்சதூரத்துலே இயற்கையாகவே stonehenge போல அமைஞ்சுருக்கும் மலை உச்சியில் இருந்து  பாறைகளை வெட்ட ஆரமிச்சுருக்காங்க. அடப்பாவிகளா.....  இது இயற்கையின் அற்புதம் என்றெல்லாம் சொல்லிப் பாராட்டவேண்டிய சமாச்சாரமாச்சே! இதையா வெட்டித் திங்கறீங்க?



உலகத்துலே அங்கங்கே இருக்கும் சாதாரணத்தைக்கூட எப்படி  பெரிய சுற்றுலாவுக்கான இடமாக் காமிச்சு நாட்டின் வருமானத்தைப் பெருக்கறாங்க!  நம்ம நாட்டுலேதான் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் எல்லாம்  அரசு அலுவலர் அனுமதியோடு நடக்குது:-( அடுத்த முறை இந்தப் பக்கம் வரும்போது அந்த மலையே இருக்காது போல! மலைகள் காடுகள், கடற்கரைகள் எல்லாம் நாட்டின் வளங்கள்.  எப்படி இதையெல்லாம் அழிக்க மனசு வருது?
அடுத்து இருந்த இன்னொரு மலைமீது அநாமத்தா  இருக்கும் கல்லுக்கும் இந்த கதி வரக்கூடாதுன்னோ என்னவோ   அதுலே நாமத்தை வரைஞ்சு வச்சுருக்காங்க சில நல் மனத்தவர். சாமிக்கல்லு!  சாமிக்கல்லை மட்டும் விட்டுட்டு சாமர்த்தியமா அதைசுத்திக் கல்வெட்டி எடுத்து விக்கறாங்க.அதான் ரோடுகிட்டேயே ஏத்தி அனுப்ப வசதியா சின்னச்சின்ன குவியல்கள் கிடக்கு.
திருப்பதிக்கு நடந்துபோகும் சனம் மஞ்சள் உடையில்  மூணுநாலுபேர் குழுக்களா நம்மைக் கடந்து போய்க்கிட்டு இருக்காங்க. இவ்ளோ கஷ்டப்பட்டு மலைக்கு நடந்தே போய்  கம்பிக்கூண்டுக்குள் மணிக்கணக்காக் காத்திருந்து பெருமாள் முன்னே போகும்போது  அரை நொடி பார்க்கவிடாமக் கையைப்பிடித்து கடாசும் கோவில் அசுரன்களைக் கன்யாகுமரியில் இருந்து  நடந்துவரச்செஞ்சு மலைமேல் ஏறும்போது தலைகீழா ஏறச் சொல்லணும்.


சாலைக்கு இடதுபக்கம் கோவில் அலங்கார வளைவு ஒன்னு இருக்கு. மூலவர் சாய்பாபா.  இப்பெல்லாம் நிறையக் கோவில்கள்  இவருக்கு வந்துக்கிட்டு இருக்கு போல!  போனமுறை (2011) திருப்பதிக்குப் போனபோது   இந்த வளைவு இல்லை. ஆனால்  சின்னக்குன்றுமேல் ஒரு கோவில் கட்டிக்கிட்டி இருந்தாங்க. போறபோக்குலே அப்ப க்ளிக் செஞ்சுருந்தேன். இப்ப பக்காவா கட்டி முடிச்சுட்டாங்க போல. கோவிலுக்கான பவர் லைன் கம்பங்கள் கோணாமாணான்னு மேலேறிக்கிட்டு இருக்கு.
கொஞ்ச தூரத்தில் இன்னொரு அம்மன் கோவிலுக்கான அலங்கார  வளைவு. ஸ்ரீதேசம்மாள் தேவஸ்தானமாம். 'கன் பார்வை அம்மன். எனக்குத்தான் கண்பார்வை போயிருச்சோன்னு பார்த்தேன்.....    கன் பார்வைன்னுதான் எழுதியிருக்கு.

அடுத்து இன்னும் கொஞ்சதூரத்துலே சாலையோரமாவே பெரிய ஆஞ்சி நிக்கறார். இதுவும் ஒரு கோவில்தான். மக்கள்தொகை கூடக்கூட கோவில்களும் கூடிக்கிட்டே வருது. இப்பெல்லாம் பெரிய பெரிய சிலைகள்  செஞ்சு வைப்பது ஒரு ஃபேஷனாவே போயிருக்கு. 'மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது' என்பதெல்லாம் அந்தக் காலம்......

இதையடுத்துதான் சென்னைக்குப்போகும் சாலை இடது பக்கமும், திருத்தணி, காஞ்சிபுரம்  போகும் சாலைக்கு  நேராப்போய் வலதுபக்கம் திரும்பணுமாம்.  தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையின் உருப்படியான போர்டு.
திருத்தணி ஊருக்குள்ளே நுழையறோம். பூமாலைகள் தொங்கும் பூக்கடைகளும் வாழைபழக்குலைகளும் வெத்தலைக்கூடைகளுமா ஜேஜேன்னு இருக்கு. இதுலே ட்ராஃபிக் ஜாம் வேற.   நம்ம வண்டியை நாலைஞ்சு போலீஸ் நிறுத்துச்சு.

என்னவோ ஏதோன்னு  நிறுத்தினா......   "மேலே போறீங்கதானே?  இவுங்களையும் அங்கே ட்ராப்  பண்ணிடறீங்களா?"  அதுக்கென்ன முன் ஸீட் எப்பவும் காலியாத்தானே கிடக்கு.  போலீஸ் ஆஃபீஸரம்மாவை வண்டியில் ஏத்திக்கிட்டோம்.  இப்பதான் நம்ம வண்டிக்கு ஒரு கெத்து வந்துருக்கு.
மலைமேலே போகும் பாதையில் தடுப்பு வச்சு, வர்ற வண்டிகளைத் திருப்பி விட்டுக்கிட்டு இருக்காங்க.  மேலே இடம் இல்லையாம். ஆனா  நமக்கு? ஸல்யூட் அடிச்சு வழிவிட்டது  தடுப்புக் காவல்.  பாருங்க.... கூட்டமா இருந்தா கீழே இருந்தே  போறபோக்குலே கும்பிட்டுக்கலாமுன்னு நினைச்சால்  இந்த முருகன் 'வந்து பார்த்துட்டுத்தான் போகணுமு'ன்னு விடாப்பிடியா  வழி செஞ்சு கொடுத்துட்டான்!

எனக்கு என்ன ஒரே ஒரு  மனக்குறைன்னா.... வண்டியின் தலையிலே சிகப்பு விளக்கு மிஸ்ஸிங் ஆனதுதான்.  ஜெகஜெகன்னு விளக்கு சுத்த  உய்ங் உய்ங்குன்னு  ஸைரன் கத்த  மலை ஏறி இருந்தா எம்பூட்டு நல்லா இருந்துருக்கும்!

தொடரும்.....:-)


Wednesday, April 27, 2016

குதிரை முட்டை இருபதே ரூபாய்!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 26)

நோகாமல் நோம்பு கும்பிட்டதில் வெறும் ரெண்டேமுக்கால் மணி நேரத்தில் அஞ்சு கோவில் முடிச்சு அஹோபிலம் விட்டுக் கிளம்பறோம். நாம் போகும் துக்கம் தாங்காமல் சோகமா காட்சி கொடுத்தார் இவர்!


இன்னுமொரு கால்மணி நேரத்தில்   நாம் வந்த வழியிலே திரும்பிப்போகும்போது (அல்லகட்டா போகும் சாலை) குதிரைமுட்டைகள் ஏராளமாக் கொட்டிக் கிடக்குது. ஒரு இடைவேளை ஸ்நாக்கா இருக்கட்டுமேன்னு  வண்டியை நிறுத்தி இறங்கினோம்.  ஒரு முழுப்பழம் 20 ரூபாய்(தான்!)  இளவயது ஜோடியின் வியாபாரம். ஏற்கெனவே வெட்டி வச்சது இருக்குன்னாலும் நமக்குப் புதுசா ஒன்னு வேணுமுன்னதும் நல்லதா ஒன்னு எடுத்து வெட்டினாங்க. அச்சச்சோ....  இது நல்லது இல்லை(யாம்)  அவுங்களே இது ரொம்பக் காய்ஞ்சு கிடக்குன்னு தூக்கிப்போட்டுட்டு இன்னொன்னு எடுத்து வெட்டுனாங்க. அருமை.

முதலில் ஒரு பெரிய துண்டை நம்மாட்களுக்குக் கொடுக்கணுமுன்னு சொன்னதும் நம்ம சீனிவாசன் வாங்கிட்டுப்போய்  பைக் ரைடர் ஒருத்தருக்குக் கொடுத்தார். கைநீட்டி வாங்குனவர் கொஞ்சம் தின்னு பார்த்துட்டு, ஓக்கே, ருசியாத்தான் இருக்குன்னு வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போனார்:-) பைக் ரைடருக்குப் பழம் ஓக்கே!!




சாலைக்கு எதிர்ப்புறம்  இன்னொருத்தர். அவருக்கு நான் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தேன்.  பொழுதன்னிக்கும் இதையேத் தின்னக்கொடுத்தால் பாவம் போரடிக்கத்தானே செய்யும், இல்லையா?

முகம் கோணாமல் உபசரிச்சு வியாபாரம் செய்யும் இந்த இளம்ஜோடி ராஜ் அண்ட் ஸ்வேதா நல்லா இருக்கணும்.
வயல்களில் விளைஞ்சுருந்த குதிரை முட்டைகளை  விற்பனைக்குக் கொண்டுபோக ஒரு ட்ரக்கில் அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. வைக்கோல் வச்சு ஒன்னுக்கொன்னு அடிபடாமத்தான் பேக்கிங். நல்லது. செம்மண் பூமி. வேறொன்னும் விளையாதோ என்னவோ!

இந்த இடம் நரசபுரம் ஃபாரஸ்ட் செக்போஸ்ட்டுக்கு அருகில்தான்.
செக்போஸ்ட் கடந்து போறோம். ரெட்டை மாடு பூட்டுன ஏர்,  பெரிய பஞ்சாரம் இப்படிக் கிராமத்துக் காட்சிகள். ஒரு அம்மன் கோவில் கட்டிக்கிட்டு இருக்காங்க. கடப்பாக்கல் குவியல். தரைக்குப் போடறாங்க போல!!


ஒரு ஊரின் கடைத்தெருவில் பாலசுப்பையா அங்கடின்னு ஒரு போர்டு!  அங்கடி... கடை.   தெலுகு மொழியில்.  அட!  நம்ம தமிழ் 'அங்காடி' தான் இல்லே!
கொஞ்சதூரத்தில் நவீன கைலாயம் கண்ணில் பட்டது! (எந்த ஊருன்னு தெரியலையேப்பா..........)
அதுக்குப்பின்னே பொட்டல்காட்டுப் பயணம்தான். கடுகு விதைச்சுருக்காங்க போல, தூரத்துலே மஞ்சள் நிறம் இன்றைக்கு  நேரா திருப்பதி போய் ராத்தங்கிட்டு  மறுநாள் கிளம்பிடணுமுன்னு திடீர் திட்டம்.  மணி ஆகிக்கிட்டே போகுதே  எங்கியாவது  ரெஸ்ட்டாரண்ட் கண்ணில் படுமான்னு பார்த்துக்கிட்டே வர்றார் கோபால். அவர் கவலை எல்லாம் சீனிவாசனுக்குப் பசிக்குமேன்னுதான்.  ஆனால் அவர் தண்ணிப்பழம் சாப்பிட்டதால்  வயிறு திம்முன்னு இருக்கு. இப்பப் பசி இல்லைன்னார்.
அஹோபிலம் விட்டுக் கிளம்பி ரெண்டேகால் மணி நேரமாயிருந்தது.
கடப்பா ஊருக்குள்ளே போகாமல் பைபாஸ் வழியாப் போய்க்கிட்டு இருக்கோம்.  மணி இப்போ ரெண்டே முக்கால். அப்பதான் கண்ணில் பட்டது சுஷாந்த் மோட்டல்ஸ். கார்டன் ரெஸ்ட்டாரண்டு. ஆந்த்ரா ஸ்பைஸ்!  அதுக்குள்ளே நுழைஞ்சோம்.
இடுப்புயரச் செடிகளும், தனித்தனி குடில்களுமா  பார்க்க நல்லாத்தான் இருந்துச்சு. ஒவ்வொரு குடிலும் சின்னக் கொட்டகைதான். அதுக்குள்ளே மேஜையும் நாற்காலிகளும் போட்டு வச்சுருக்காங்க.  அந்த மேஜையின் நிலை பார்க்கச் சகிக்கலை.  ஒரு மேசை விரிப்புபோட்டு வைக்கப்டாதோ?  மேலே சோம்பேறியா ஒரு ஃபேன் .  ஈக்கள் விஸிட் பண்ணுதுகள். ஆர்டர் எடுக்க ஆள் வந்ததும் மேஜையைச் சுத்தம் செஞ்சு, ஃபேன் போடச் சொல்லி அப்படியே ஆச்சு.  ஆந்திரா உணவு வகைகள் என்னன்னு கேட்டால்  நான்,  தால் மக்கானி, மிக்ஸட் வெஜிடபுள் கறியும்தான் இருக்காம்.  ராத்திரி டின்னர்தான் இங்கே  விசேஷமாம். சரி அதையே கொண்டு வாங்கன்னார் நம்மவர்.

நான் அதுவரை எதாவது க்ளிக்கலாமேன்னு போனேன். மரத்தடியில் கீரைக் கட்டுகளை வச்சு ஆய்ஞ்சு போட்டுக்கிட்டு இருந்தவங்க பெயர் ரேவதி. பெரிய பேஸின் நிறைய பூண்டு  உரிச்சுப்போட்டுகிட்டு இருந்தவங்க சின்னம்மா. ராத்திரி சமையலுக்கு ரெடி பண்ணறாங்களாம். சமையலுக்குக் காய்கறி  வெட்டும் இடம் இப்படியா? ஐயோ....  கொஞ்ச நேரம் அவுங்களோடு பேசிக்கிட்டு இருந்தேன்.  எதோ இந்த வேலை கிடைச்சதால் இப்போ வசதியா இருக்காங்களாம்.

இந்த ஹைவேக்களைப் பொறுத்தவரை  வியாபாரம் எப்படின்னாலும் சனம் ஒன்னும் சொல்லாதுன்ற எண்ணத்தில்தான்  ரெஸ்ட்டாரண்டுகளும் கடைகளும் இருக்கு.  பயணிகளுக்கு  நல்லதா ஒரு இடம் அமைச்சுக் கொடுத்தால் வேணாமுன்னா சொல்லப்போறோம்!  கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லைன்னு அந்த இடம் வரும்வரை காத்திருந்து போகமாட்டோமா என்ன?

என்னுடைய இந்தியப் பயணங்களில் நான் இதுவரை பார்த்ததில் , நம்ம சண்டிகர் வாழ்க்கையில் அடிக்கடி தில்லி வந்துட்டுப்போகும்படி இருக்கும். போகும்போதும் சரி , திரும்பி வரும்போதும் சரி, சோனிப்பெட் ஹவேலிக்குள் நுழையாமல் வந்ததே இல்லை!  இதை விட்டுட்டால்  கர்னால் தாண்டி ஒரு  'ச்சோக்கிதானி ' ரெஸ்ட்டாரண்ட் கிராம ஸ்டைல் ஒன்னு, இன்னொரு  பழைய ஹவேலி பஞ்சாபிதாபா   இருந்தாலும்  இந்த சோனிப்பெட் ஹவேலி த பெஸ்ட்! பயணிகளுக்கு ஒரு பசுஞ்சோலை! எப்பப்போனாலும் கூட்டம் அம்மும்!  அதுவும் மாலை வேளைகளில் வெயில் தாழ்ந்தபிறகு  வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமா சூப்பர்!
மேலே படம்: சோனிபெட் ஹவேலி

நம்ம சாப்பாடு வந்துருச்சுன்னு சீனிவாசன் வந்து  சொன்னார். எனக்கு ஒரே ஒரு காய்ஞ்ச 'நான்' போதும். நம்ம சீனிவாசனிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், சாப்பாட்டைப் பற்றிக் குறை சொல்வதே இல்லை. எனக்கு  எப்போ அந்த புத்தி வருமோ தெரியலை.....
இங்கே நமக்கு அரைமணி நேரம் போயிருந்துச்சு. கிளம்பி நேரா திருப்பதி  நோக்கிப் போகணும்.  ஒரு இருவது நிமிசத்தில் வொன்ட்டிமிட்டா ராமர் கோவில் கண்ணில் பட்டது. நல்ல பெரிய கோவில்தான். வெளிப்புற அழகு அபாரம். கிட்டப்போய் பார்க்கலையேன்னு......... ப்ச்...

ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியாமலேயே போகவேண்டியதுதான். எல்லோரும்  அவரவர் மாநில மொழிகளில் மட்டுமே  கடைப் பலகைகள் வச்சுருக்காங்க. மொழி தெரியலைன்னா ரொம்பவே கஷ்டம்.  இதுக்குத்தான் ஒரு தேசிய மொழி வேணுங்கறது. ஹிந்தி வேணாமுன்னா பேசாம இங்லீஷையாவது  வச்சுக்கலாம். தெரியாத  தேவதையை விட  250 வருசமாத் தெரிஞ்ச பேயை வச்சுக்கறதில் என்ன அவ்வளவு கஷ்டம்?   22 அதிகாரபூர்வமான மொழிகள் இருக்கும் ஊரில் என்னதான் முயன்றாலும் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்க முடியுமா?  தட்டித்தடுமாறி பேசக் கத்துக்கறது ஒன்னுன்னா, எழுத்துருக்களைப் படிக்கக் கத்துக்கறது  இன்னொரு கஷ்டமில்லையோ?  கடைசியில் மொழி என்பது  கம்யூனிக்கேஷனுக்கு  இல்லை. காம்பௌண்டு.  அதை ஒரு வேலியாகப் போட்டு வச்சுக்கிட்டு உள்ளே அந்தந்த மாநிலம் மட்டும் தனியா உக்கார்ந்துக்கணும் போல!

இன்னும் ஒரு  அரைமணிப் பயணத்தில்   அன்னமய்யா சிலை, ஹரிதா ரெஸ்ட்டாரண்ட் பார்த்தவுடன்  சரியான பாதையில்தான் போறோமுன்னு நிம்மதி ஆச்சு. கொஞ்ச தூரத்தில்  நேத்துக் காலை வரும்போது மிஸ் செஞ்ச என் டி ஆர்  இன்றைக்கு ஆப்ட்டார்:-)
அடுத்த ரெண்டு மணி நேரப் பயணத்தில்  திருப்பதிக்கு வந்து சேர்ந்தோம். இன்றைக்கு இங்கேதான் தங்கறோம். இன்னும் ஹொட்டேல்  தேடிக்கலை.  நம்ம சீனிவாசன்,  ஃபார்ச்சூன் ஹொட்டெல் நல்லா இருக்குமுன்னு சொன்னார். போய்ப் பார்த்துட்டு சரி இல்லைன்னா பேசாம முந்தா நாள் தங்கின ப்ளிஸ்க்கே போயிடலாமுன்னு  ஃபார்ச்சூன் போனோம்.

இப்பெல்லாம் அறையைக் காமிக்கச் சொல்லி கேட்பது  வழக்கமா இருந்துச்சு. போய்ப் பார்த்தபோது  நல்லாத்தான் இருந்துச்சு. சரின்னு  சொல்லிட்டோம் வரவேற்பில் இருந்த ஸ்வேதாவிடம். சென்னைதான். ஹொட்டேல் மேனேஜ்மென்ட் இப்பதான் முடிச்சு இங்கே ட்ரெய்னீயாம்.
ரொம்ப சுத்திட்டோம் இன்றைக்கு. பேசாம  ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு  கம்ப்ளீட் ரெஸ்ட்.  வைஃபை  அறையில் இருக்கு. அது போதாதா? சீனிவாசனுக்கும் சொல்லியாச்சு இன்றைக்கு வேறெங்கேயும் போகலை. நாளைக் காலை  ஒன்பது மணிக்குக் கிளம்பறோம்.

முந்தாநாள் திருப்பதியில் ப்ளிஸ் ஹொட்டேலில் தங்கியிருந்தமே அப்போ, தோழிகூடப் பேசுனபோது,  திருப்பதிக்கே வரக்கூடாதுன்னு இருந்தேன். அஹோபிலம் பயணத்துலே காளஹஸ்தியைச் சேர்த்ததால் இங்கே வரவேண்டியதாப் போச்சு.  ஆனாலும் மலை ஏறப்போறதில்லை. இதுதான் எனக்குக் கடைசி திருப்பதிப் பயணமுன்னு சொன்னேன். அதுக்குத் தோழி, இதுதான் கடைசின்னு எப்படித் தெரியும்னு எதிர்க்கேள்வி கேட்டாங்க. அது அப்படித்தான்னு சொன்ன  மூணாம்நாளே திரும்ப திருப்பதிக்கு வரவச்சுட்டான் பாருங்க!

ராச்சாப்பாட்டுக்கு  ரூம் சர்வீஸ்.  அதே இட்லி & லஸ்ஸி. கோபாலுக்கு மட்டும் கூடுதலா ஒரு தோசை. கொண்டு வந்தது ஒரு சின்னப் பையன்.  ஐயோ....
பெயர் கணேஷ். நம்ம வேலூர்தான் சொந்த ஊர்.  கேட்டரிங் டெக்னாலஜி  ஸ்டூடண்ட்.  இவரும் பயிற்சி & ப்ராக்டிக்கலுக்காக இங்கே வந்துருக்கார்.  நல்லபடி இருக்கட்டும்.
சாப்பாடு ஆனதும் பேப்பர் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர்,  ஷோளிங்கர் கோவிலுக்கு விஞ்ச் போடப்போறாங்கன்னார். இப்படித்தான் ரொம்பநாளா சொல்லிக்கிட்டு இருக்காங்கன்னதும்,  விஞ்ச் போட டெண்டர் அனுப்பச் சொல்லி இருக்காங்க. அப்ப அநேகமா அடுத்த வருஷம் வேலை முடிஞ்சுரும்னார்.

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம் வந்தது உண்மை. ஏன்னா....  சென்னையைச் சுற்றி இருக்கும் 108 கோவில்களில் இன்னும்  ஷோளிங்கர் மட்டும் பாக்கி வச்சுருக்கோம்.  படிக்கட்டுகள் பயம்தான்.  பதிவுலக நண்பர் ஒருவர்  அங்கே போய் வந்ததை எழுதுனதும், படிகள் விவரம் கேட்டதுக்கு  ரொம்பவே வயதான பெண்களும் எங்கள் குழுவில் வந்தாங்க. நல்லபடியாத்தான் போய் வந்தோம்னு சொல்லி  இருந்தார்.  சரி. இந்தமுறை நாமும் போகணுமுன்னு முடிவு செஞ்சது அப்போதான்.

சென்னையிலிருந்து  கிட்டத்தட்ட ரெண்டே முக்கால்மணி நேரப் பயணமாம். அதிகாலையில் கோவில்வாசலில் இருந்தால்  மலை ஏறும்போது சிரமம் இருக்காது. அதனால்  சென்னையில் இருந்து காலை 4 மணிக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும். குளிச்சு ரெடியாக ஒரு மணி நேரம். இந்தக் கணக்கில்  காலை 3 மணிக்கு எழுந்தால் சரியாக இருக்கும். இப்படித்தான் நம்ம பயணங்களுக்குத் திட்டம் போடறோம்.  ஆனால்  மூணு மணிக்கு....   ப்ச்... சரி வருமான்னு தெரியலையே.... ஷோளிங்கரில் தங்குமிடங்கள் இருக்கா? இல்லைன்னா அக்கம்பக்கத்துலே கொஞ்சம் பெரிய ஊர் எது? தேடுனதில் 'காஞ்சிபுரம்தான் இருக்கு. அங்கிருந்து  ஒன்னரை மணி நேரத்தில்  போயிறலாம் ' என்றார். ஒன்னேகால் மணி பயண நேரம் மிச்சம். அப்ப நாலரைக்கு எழுந்தால் போதுமே!


எனக்கும் காஞ்சிபுரம் ஓக்கேதான். ஒரு முக்கியமான விஷயம் பாக்கி வச்சுருக்கேன். அப்ப நாளைக்கு நேரா காஞ்சிபுரம் போயிடலாம்.  அங்கே எனக்கான வேலையை முடிச்சுக்கிட்டு  சாயங்காலமாக் கிளம்பினாலும் ராத்திரி  பத்துமணிக்கு முன்னே சென்னை.  இல்லைன்னா ஒருநாள் தங்கிப்போனால் ஆச்சு.

இது நம்ம ப்ளான். ஆனால் நமக்காக  முருகன் வேற ப்ளான் போட்டு வச்சுருந்தான்.

தொடரும்............ :-)