Monday, October 31, 2016

எல்லாம் சரியா இருக்கா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 94)

நம்ம ரஜ்ஜு இருக்கான் பாருங்க...... அவனிடம் ஒரு பழக்கம்.....   கொஞ்ச நாள்  கேட்டரி என்னும்  பூனைஸ் ஹாஸ்டல் போய் தங்க வேண்டி வந்து, லீவு முடிஞ்சதுன்னு  நாம் போய்  கூட்டிக்கிட்டு வருவோமில்லையா...  அப்ப வீட்டுக்குவந்து கூண்டைத்  திறந்து விட்டதும்  முதல்லே போய்  எல்லாம் அந்தந்த இடத்தில் சரியா இருக்கா? நாமில்லாதப்ப வேற யாராவது வந்துட்டுப் போயிருப்பாங்களோ? இது நம்ம வீடுதானா இப்படி எல்லாம் சந்தேகம் வச்சுக்கிட்டு ஒவ்வொரு மூலையா, ஒவ்வொரு அறையாப்போய் மோந்து பார்த்துட்டுப் புழக்கடைப்பக்கம் போகும் பூனைக்கதவு திறந்து  இருக்கு தானேன்னு செக் பண்ணிட்டு இதுநாள்வரை ஏதும் நடக்காத  மாதிரி, தலையைத் தூக்கிக்கிட்டு  சிங்கம் போல அங்கிட்டும் இங்கிட்டுமாப் போய் வருவான்.  ரஜ்ஜு மட்டுமில்லை, நம்ம வீட்டு மத்தச் செல்லங்களும் இப்படித்தான் என்றாலும்,  ரஜ்ஜு காலத்தில்தான்  பயணங்கள் அதிகமா  நடப்பதாலே,  அடிக்கடி  ஹாஸ்டல் லைஃப் அனுபவிக்கும்படி ஆகுது  அவனுக்கு.  இதையெல்லாம் கவனிச்சு கவனிச்சு  என் மனசில் இந்த பேட்டர்ன் ஒட்டிக்கிச்சு போல!


மூணே காலுக்குக் கிளம்பி ரங்கா ரங்கா கோபுரவாசலுக்குப்போய் இறங்கினோம். நம்ம ஹயக்ரீவாவில் இருந்து நேரா இடது பக்கம் பொடி நடையாப் போனால் பத்து நிமிட் ஆகலாம். வெறும் 850 மீட்டர்தான். வெயில் ஒரு பக்கம், கூட்டம் ஒரு பக்கம், நடக்க சரியான நடைபாதை கிடையாதுன்ற பலகாரணங்களால் வண்டியில் போக வேண்டி இருக்கு. இதுலே ஒரு வழிப்பாதைன்னு இங்கே அங்கே திரும்பி ஏறக்கொறைய பாதி கோவிலைச் சுத்திக்கிட்டு ரெங்கா கோபுரத்தாண்டை இறங்க எடுத்துக்கற நேரம் பதினொரு நிமிட்.

செக்யூரிட்டிச் செக் முடிஞ்சு  திருமாமணி மண்டபம் கடந்து விடுவிடுன்னு போய் ரெங்கவிலாஸ் மண்டபத்தின் இடதுபக்கம் கெமெரா டிக்கெட் வாங்குனதும்தான் நிதானம் வந்துச்சு நடையில் :-)


எல்லா சந்நிதியும் பத்திரமா இருக்கான்னு பார்த்துக்கணும். பெரிய சைஸிலிருக்கும் பெரிய திருவடிக்கு ஒரு கும்பிடு போட்ட கையோடு  முதலில் போய் நின்னது நம்ம அன்னமூர்த்திப் பெருமாள் சந்நிதியில்தான்.  தின்னும் ஒரு பிடி சோற்றுக்குப் பஞ்சம் வராமல் வைக்கவேணும் என்ற வேண்டு கோளுடன் ஒரு  க்ளிக்:-)  மடியில் துளசியோடு உக்கார்ந்துருக்கார் !

பெரியவரைப் பார்க்கலையான்னு கேட்ட கோபாலுக்கு இன்றைக்கு வேண்டாமுன்னு  சொல்லிக்கிட்டு இருக்கும்போதே  இவர் விடுவிடுன்னு போய்  அம்பது ரூ வரிசையில் போய் நின்னார். 'நாளைக்குப் பார்க்கலாமுன்னு நினைச்சேன்' என்று ஆரம்பிக்கும்போதே... "அது எப்படிமா......இவ்ளோ தூரம் வந்துட்டு, அவரை நாளைக்குப் பார்க்கலாமுன்னு சொல்றே...."

 சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்குமேன்னால்.... அதிசயத்திலும் அதிசயமா  இந்த நேரம் அவ்வளவாக் கூட்டம் இல்லே!   முந்தியெல்லாம்  மூணு முதல் நாலு வரை சீனியர் சிட்டிஸன்களுக்கு  இந்த அம்பது ரூ வரிசையில் இலவச  அனுமதி  இருக்குன்னு வேற கேள்வி. அதையும் விசாரிக்கலாமுன்னு  டிக்கட் கவுண்ட்டரில் கேட்டால் அதை ரத்து பண்ணிட்டாங்களாம். அதுவுமில்லாம  அம்பது ரூ டிக்கெட்டே கிடையாதாம்.  முன்னாலே ரெண்டு சேர்த்துட்டால் ஆச்சுன்னு  தெரிஞ்சது. 250 ரூ டிக்கெட் மட்டும்தான்!

திருப்பாதம், திருமுகம் கட்டாயம்  தரிசிக்கணும் , அதே சமயம் கழுத்துலே இருக்கும் தங்கத்தைக் காப்பாத்திக்கணும் என்ற    நினைப்போடயே வரிசையில்  போய்ச் சேர்ந்தோம்.  கூட்டம் இல்லைன்னு நினைச்சது தப்பு. வந்த கூட்டம் முழுசும் அங்கே முன்மண்டபத்துக் கம்பித் தடுப்புகளுக்கிடையில்   அடைசலா நிக்குது.   'தள்ளும் முள்ளும் இல்லாமல் சாமி தரிசனம் ருசிக்காது'ன்னு அவுங்களே தள்ளிக்கிட்டும் இடிச்சுக்கிட்டும் இருந்தாங்க.  ஒரு வழியா நம்ம வரிசை நகர்ந்து  பெரும் ஆளை  'அடியும் முடியுமா' ஸேவிச்சுக்கிட்டு, யாகபேரர் இருக்காரான்னு எட்டிப் பார்த்தும் ஓரளவு திருப்தியுடன்  காயத்ரி மண்டபப்படிகளில் இறங்கினோம்.

அதென்னவோ கோவில்களில் இந்த கம்பித்தடுப்பு சமாச்சாரங்களை  இங்கேயும் அங்கேயுமா மாத்தி  மாத்தி வச்சு   ரூட்டை மாத்திக்கிட்டே இருக்காங்க.  முந்தி கீழே இறங்குனதும் விஷ்வக்ஸேனர் சந்நிதியைச் சுத்திட்டு,  விமான தரிசனம்  பார்க்கக்கிடைக்கும் திண்ணை மீது ஏறின  நினைவு.  இப்ப என்னன்னா.... கம்பித்தடுப்பு மூலவருக்குப்  பின்னே   இருக்கும் வடக்கு வாசலுக்குப்போகும் வழியில் கொண்டு விட்டுருச்சு. நமக்கு முன்னே போன சிறுவன், படிகள் மேலேறினதும் திரும்பி நின்னு சட்டைப்பையில் இருந்து  செல்ஃபோன் எடுத்து  மேலே அண்ணாந்து பார்த்து க்ளிக்கினான்.



என்னத்த க்ளிக்கிறான்னு அஸ்வாரசியமா திரும்பிப் பார்த்தால் ரங்க விமானம்!  நம்மகிட்டேதான் கெமெரா டிக்கெட் இருக்கேன்னு சட்னு  கைப்பையில் இருந்து கெமெராவை எடுத்து க்ளிக்கினேன்.  அப்படியே அந்த மூலையில் இருந்த சந்நிதியையும்.


அப்படியெ வடக்கில் போகும்வழியிலேயே போகும்போது,  ஒரு இடத்தில்  மேலே பார்ன்னார் கோபால்.

தங்கப்பல்லி ரெண்டு. புதுசா என்ன? பார்த்த  நினைவு இல்லையே.... இப்படி அப்படிப் போனதில் ஆயிரங்கால் மண்டபத்தின் இந்தப் பக்கத்தில் இருந்து திருமணி மண்டபத்தைப் பார்த்துட்டு எப்படி எப்படியோ போய் கடைசியில் அன்னமூர்த்தி சந்நிதிக்கே வந்து சேர்ந்துருந்தோம்!

ஆரம்பமும் இங்கே முடிச்சதும் இங்கேன்னு labyrinth மாதிரி  இது மாயச்சுழல்! இவ்ளோ நேரமும் ஆடாமல் அசையாமல் அதே போஸில் உக்கார்ந்துருந்தார் நம்ம அன்னமூர்த்திப்பெருமாள்!




கொடிமரம் பலிபீடம் கடந்து  கம்பத்தடி ஆஞ்சியையும் வணங்கிட்டு,  பெரிய திருவடிக்கும் வணக்கம் சொன்ன கையொடு வெளியே வந்தோம்.  துலாபாரமண்டபம், திருக்கொட்டாரம், செங்கமலவல்லித்தாயார் சந்நிதி  கடந்து போனால்   பழுதுபட்டுக்கிடந்த களஞ்சியங்களை சீரமைச்சுக்கிட்டு இருக்காங்க.  நல்லவேளையா இவைகளுக்கு வேளை வந்துருக்கு!
தன்வந்த்ரி, வாசுதேவப்பெருமாள் சந்நிதிகளிலும் கும்பிடு போட்டுட்டு நேரா சொர்கவாசல்தான்.  கம்பர் மண்டபத்து வழியாத் தாயார் சந்நிதி.  இந்த அஞ்சு குழி மூணு வாசலை எப்பவும் மறந்து போறோமேன்னு அதைத் தேடுனதில்  எதிரில் இருக்கும் லக்ஷ்மிநாராயணர் சந்நிதிக்கு முன்னால் இருக்குன்னு  விவரம் கிடைச்சு அங்கே போனால் இருக்கு. இது எப்படி இருக்கும் என்று இதுவரை பார்த்ததே இல்லையா...   அதனால் தாயார் சந்நிதி மண்டபத்தில் கீழே இருக்கும்  சின்னக்குழிகளைக் கூட விட்டு வைக்கலை :-) உண்மையில் இது குழியே கிடையாது . கற்கள் இணைக்கப்பட்டுருக்கும்   இடமுன்னு நினைக்கிறேன்!


சரியான இடத்துக்குப் போனதும்  ஏற்கெனவே டேமேஜ் ஆன முதுகுக்கு பங்கம் வராமல் அஞ்சு குழியையும், ஒரு வாசலையும் பார்த்துக்கிட்டோம் :-) மூணு வாசலைத் தேடினால் உடம்பு முறுக்கிக்கும் அபாயம் உண்டு !

அடுத்து தாயார் சந்நிதி.  மண்டபத்தில் செம்பகம்  இல்லை. உள்ளே போய் சட்னு ஒரு கும்பிடு. ராமானுஜர் சந்நிதிப்  பக்கம்   எட்டிப்பார்த்துட்டு எல்லாம் இருக்குமிடத்தில் தான் இருக்கு என்ற நிம்மதியுடன்  வெளியே வந்தாச்சு.
வாசலில் இருவர் எனக்காக !  எப்படி? ஆண்டாள் கேம்புக்குப் போயிருப்பாளே.....




தனியாரின் பொக்கிஷம்!  எனக்காக வெளியில் :-)

ரொம்ப நல்ல சகுனம்!   முரளி கடையில்  ஒரு காஃபியை  எஞ்சினுக்கு ஊத்திட்டு அறைக்குத் திரும்பியவுடன் இன்னொரு புறப்பாடு !  பதிவர் சந்திப்பு  :-)

தொடரும்...........  :-)


Monday, October 24, 2016

ஏகாந்தமாக இருவர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 93)

பொழுது விடிஞ்சு எல்லாம் வழக்கம்போல். இன்றைக்கு இங்கே இருந்து கிளம்பறோம். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டு, ஹொட்டேல் பில்லை செட்டில் செஞ்சுட்டு போகணும். இந்தப் பயணத்தில் இதுவரை தங்கிய  ஹொட்டேல்களில் வாடகை இங்கேதான் அதிகம். இவ்ளோ வாங்கிக்கிட்டு, அறையில்  வைஃபை இல்லாமப் பண்ணதுதான் எரிச்சல்.....

எட்டேமுக்காலுக்குக் கிளம்பி  நேரா முதலில் போனது  கலாம் ஐயாவின் சமாதிக்குத்தான். ஊர் முழுக்க  கலாம்  ஐயாவின் பெயர்களிலேதான்  கடைகளும், புதுப்புது வியாபாரங்களும்!  நாம் இருந்த ஹொட்டேலில் கூட  கலாம் ஆர்கேட் என்ற பெயரில்தான் கலைப் பொருட்கள் கடை.
நேத்து இந்த வழியா மூணு முறை போய் வந்தாலும்,  சமாதி இருக்குமிடம் கண்ணில் படலை. அப்புறம் ராத்திரி டின்னர் சமயம், குமாரிடம் கேட்டு இடம் தெரிஞ்சு வச்சுக்கிட்டோம்.  ரோடில் இருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.  ஒரு போர்டாவது போட்டு வச்சுருக்கலாம்.
பேய்க் கரும்பு கிராமம் என்ற பெயராம் இந்த இடத்துக்கு. தெய்விக் ஹொட்டேலில் இருந்து 2.7 கிமீ தூரம்தான்.

தகரக்கொட்டகையின் கீழே சுத்திக் காவல்துறை போட்டு வச்சுருக்கும்  தடுப்புகளுக்கு நடுவில்  ஏகாந்தமா  மீளாத துயிலில் இருக்கார்  கலாம் ஐயா.  மனசுக்கு வலியா இருந்தது உண்மை. மின்விளக்கு ஒன்னு போட்டு வச்சுருக்காங்க. நல்ல மணல்பரப்பு. நினைவிடம் மண்டபம் கட்டப் போறாங்க.  காம்பவுண்டு சுவருக்கான வேலை  இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு.  அஞ்சு நிமிசம் கண்ணை மூடி  கலாம் ஐயாவை நினைச்சுப் பெருமாளிடம் பிரார்த்தனை செஞ்சுட்டுக் கிளம்பினேன்.


 ஒரு விளக்கு போட ஒன்பது லட்சரூபாய் செலவா?  அநியாயமா இல்லே? இதைச்சுத்தி என்னா விளம்பரம் பாருங்க.........   :-(   ப்ச் ....



எதிர்சாரியிலே  ரோடின் அடுத்த பக்கம்  ஏகாந்தராமர் கோவில் இருக்கு.  சீதையைத் தேடி வந்தவர், இங்கே சீதையில்லாமல் தரிசனம் கொடுக்கறார்.  மண்டபங்களும் தூண்களுமா இருக்கு.   கொஞ்சம் பெரிய கோவில்தான். ஒரே பிரகாரத்தோடு இருக்கு.


1963 இல்  பழுதுபார்க்க ஆரம்பிச்சு  2010 லே  கும்பாபிஷேகம்  நடந்துருக்குன்னு  பளிங்குக் கல்வெட்டு சொல்லுது. ஆனால் கோவிலில் இன்னும் பராமரிப்பு வேலைகள் முடிஞ்சமாதிரி தெரியலை :-(
உள்ளே நுழைஞ்சதும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் துளசி :-(





கோவில் பாத்திரங்கள் எல்லாம் படு சுத்தமாத் தேய்ச்சு வச்சுருந்தாங்க.  மகிழ்ச்சி.
இங்கே உள்ள கிணறு  அமிர்தவாபி தீர்த்தம்.  பார்த்தாலே புண்ணியமாம்!   பார்த்தாச்சு.


பாரதத்தில் ராமன் நடந்த பாதையைக் காமிக்கும் வரைபடம் ஒன்னு சுவரில்.
மாமரம் பூத்துக்குலுங்குது. தரையெல்லாம் புல்மண்டிக்கிடக்கு. இன்னும் நல்லா வச்சுக்கலாம்தான்............   ப்ச்
கோவிலைத் தொட்டடுத்து  'தூயகுழந்தை' ஆலயம்!  இந்த வளாகம் ரொம்பவே பெருசா இருக்கு!
இதோ...  பாம்பன் பாலம் வந்தாச்சு. ஒரு ஸ்டாப் போட்டுட்டுத்தான் போகணும். அதே பத்து மினிட் அனுமதிக்கப்பட்டது :-)  இன்னும் மக்கள் கூட்டம்  வந்து சேரலை. க்ளிக்ஸ் ஆனதும் கிளம்பிட்டோம்.


மண்டபம் தாண்டுனதும் கடலோரக் காவல்படையினரின் ஸ்டேஷன் இருக்கு.

நேத்துப் பார்த்தது போல இன்றைக்கும் பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு  விற்கும் வியாபாரிகளின் கடைகள்.  வெள்ளைச் சக்கரையை விட  பனைவெல்லம் நல்லதுன்னு சொல்றாங்க.

இன்றைக்கு  வேற  எங்கேயும் வேடிக்கை பார்க்காம, ராமேஸ்வரத்தில் இருந்து 240 கிமீ பயணம். நாலேகால் மணி நேரம் ஆகுமுன்னு கூகுளார் சொன்னார்.  உச்சிப்புளின்னு கூட ஒரு பெயர் பார்த்தேன்.

 கிளம்பி ஏறக்கொறைய ரெண்டு மணி நேரம் ஆகி இருக்கும் என்பதால்          எங்கெயாவது நிறுத்தி டீ குடிக்கலாமேன்னு சீனிவாசனிடம் சொன்னார் நம்மவர்.  இவருக்கு வேணாம் என்றாலும்  இந்த டிரைவர்களுக்கு டீ குடி பழக்கம் இருக்கே!  நல்லவேளையா நம்ம சீனிவாசனுக்கு மற்ற 'குடிப்பழக்கம்' இல்லை என்பதே எங்களுக்கு மனநிம்மதி.

புண்ணிய தலங்களில் தமிழக அரசு  தீர்த்தம் விக்காதுன்ற என்ற என் நம்பிக்கை பொய்த்துப் போனது ராமேஸ்வரத்தில். ஏகப்பட்ட தீர்த்தம் இருக்குமிடத்தில் நம்ம தீர்த்தமும் இருந்துட்டுப் போகட்டுமேன்னு தமிழக அரசுக்கு நினைப்பு :-(

ஒரு டீக்கடை கண்ணில் பட்டது.  பெண் தொழிலதிபர் இருக்காங்க. என்ன இடமுன்னு  கண்கள் தேடுனதில் C.K. மங்களம் னு  தெரிஞ்சது.  அட... நம்ம மங்களம் :-) இவுங்க ரெண்டு பேரும் போய்டீ குடிச்சுட்டு வந்தாங்க.  கொஞ்சதூரம் போனாட்டு, சின்னக்கீரைமங்கலம் என்ற பெயரோடு ஒரு பள்ளிக்கூடம்.  ஆஹா....   C.K. தான் சின்னக்கீரை :-)

ஷிர்க் ஒழிப்பு மகாநாடு திருச்சியில்  நடக்கப்போகுதுன்னு  நிறைய இடங்களில்  பார்த்தேன்.  இந்த ஷிர்க் யாரு? ஏன், எப்படி  ஒழிக்கப்போறாங்க? ஒரு வேளை புது அரசியல் கட்சியோ?
அன்றைக்கு மாலை தோழியோடு அலைபேசுனதில், இஸ்லாமில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு இந்தப் பெயர்னு தெரிய வந்தது.  எந்த மதமா இருந்தாலும் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டியதுதான், இல்லையா?

தேவகோட்டை வழியாகப்போய்க்கிட்டு இருக்கோம். தேவகோட்டை ரோடுன்னு ஒரு ரயில்வே ஸ்டேஷன் கூட இருக்கு!
திருமயம் வருது. கோட்டை தெரியுதான்னு பார்த்ததில் தூரக்கத் தெரிஞ்சது. ஊருக்குள் போகாமல்  இந்தப் பக்கமாப் போய் திருச்சி பைபாஸ் ரோடு வழியா  போறோம். எல்லா இடங்களில் டோல் சார்ஜ் நம்ம சீனிவாசனே கட்டிக்கிட்டுப்போகணுமுன்னு முன்னேற்பாடு.  கடைசியில்  கணக்கு தீர்க்க சுலபமா இருக்கு இப்படிச் செய்வது.
தூரத்தில் தெரிஞ்ச  மலைக்கோட்டை உச்சிப்புள்ளையார் கோவில், ஹப்பாடா வந்துட்டோம் என்ற ஆறுதலைக் கொடுத்தது.  நமக்கு நேரா ஸ்ரீரங்கம்தான் போகணும். அங்கேதான் இந்தமுறை ஹொட்டேல் புக் பண்ணி இருக்கு. ரெங்கனுக்குப் பக்கத்தில் இருக்கணுமுன்னு நச்சரிச்சு  இங்கே.  நம்மவருக்கு  அவ்வளவா விருப்பம் இல்லை.......   அதுக்குப் பார்த்தால்  திருச்சியில் அறை எடுத்துக்கிட்டு  ஸ்ரீரங்கம் வர்றதுக்குள்ளே..........  ப்ச்.....

டோல் ரோடு முடிஞ்சு  போகும்போது  ஸ்ரீரங்கம் வழியைத் தவற விட்டுட்டார் சீனிவாசன்.  ஒரு பாலத்துமேலே போகவேண்டியது. ஆனால் இன்னும் அந்தப் பாலம் கட்டி முடியலையாமே..... திருச்சி மார்கெட் பகுதியில் போய் மாட்டிக்கிட்டோம். வண்டி நகரக்கூட இடமில்லாமக் கூட்டம்  அலை மோதுது. சிந்தாமணியை இப்பதான் பார்த்தேன் :-)  லூர்துமாதா கோவில் கோபுரம் பார்த்ததும் இங்கிருந்தே ஒரு கும்பிடு.
கால்மணி நேரம் அங்கெல்லாம் சுத்திப் பார்த்து முடிச்சுச் சரியான வழியில் போக ஆரம்பிச்சுக் காவிரி பாலம் தாண்டி, அம்மாமண்டபம் திரும்பினதும்  ரெங்கன் கோபுரம்!  வந்துட்டேண்டா.......
ஹொட்டேல் ஹயக்ரீவாவில் தங்கறோம்.   ஜஸ்ட் பேஸிக். ஆனால் நீட்டா இருக்கு அறை. கீழே கார் பார்க்கில் ஸ்ரீ பாலாஜி பவன்.  மொட்டை மாடியில் இருக்கும் ரெண்டு அறைகள்  ட்ரைவர்களுக்கு. எல்லாம்  சரி!

நம்ம அறையில் இருந்து  ஜன்னலில் ஒரு   கோணத்தில் பார்த்தால் ஹொட்டேல் வாசல் தெரியும். அவ்ளோதான்.  ஆனால்  நம்ம சீனிவாசன் தங்கும்  மொட்டைமாடியில் இருந்து பார்த்தால்  கோபுர தரிசனமாம்!

முதல் வேலை முதலில்னு கீழே போய் பகல் சாப்பாடு. இப்ப மணி ரெண்டேகால்.  ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின் கிளம்பலாம் ரெங்கனைப் பார்க்க :-)

தொடரும்..............  :-)