Friday, June 09, 2023

மனதின் உறுதி.............. கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 58

நம்மாண்டைதான் இப்போ BP மெஷீன் இருக்கேன்னு பொழுது விடிஞ்சதும் ஒரு முறை, சாப்பாட்டுக்குப்பின் ஒரு முறை, அப்புறம் எப்பெப்போ தோணுதோ அப்பெல்லாம்னு  'அளந்துக்கிட்டு' இருக்கோம்.இன்னும் 24 மணி நேரம்தான் இங்கே....  ரொம்ப சுத்தாமல் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு நல்லபடியா வீடு போய்ச் சேரும் வழியைப் பார்க்கணும்.
கொன்னை பூத்துருந்தது............. நல்ல சகுனம் !       எனக்கு லோட்டஸில் பிடிச்ச ப்ரேக்ஃபாஸ்ட் இன்றோடு முடிவுக்கு வருது ! நல்லா சாப்பிட்டுக்கணும். ஆச்சு !
முந்தாநாள் முரளீஸ்லே இருந்து வாங்கிவந்த மாதுளைகளில் ஒன்னு பாக்கி இருக்கு.  சோம்பல்படாம உரிச்சு நம்ம ஆஞ்சிக்கு நைவேத்யம் பண்ணினேன். 
பகல் சாப்பாடு வேணாமுன்னார் நம்மவர்.  ஓக்கே.... ஃப்ரிட்ஜ் காலி செய்யணும்! தயிர், ஜூஸ்,   திறந்து வச்ச பொதிகளாய் சுஸ்வாத் சமாச்சாரங்கள் எல்லாமும் கூட இருக்கு. கொண்டுபோகறதுக்குக் கொஞ்சம் வாங்கிக்கலாமுன்னா.... எங்கே ? எடை கூடுமுன்னு பயம்.  போகட்டும்.. இந்த முறை இப்படி....
மூணுமணி போல தம்பியும் மனைவியும் வந்தாங்க,  எங்களுக்குப் புதுத் துணிகளும், ஆப்பிள் மாதுளைன்னு பழங்களும்,  பூவுமாய்......   உனக்குப் பிடித்தமான பச்சைன்னு ஆசை காமிச்சும்கூட....    ஊஹூமுன்னு தலையாட்டினேன்.  நானே என் மனவுறுதியைப் பாராட்டிக்கிட்டேன் :-)   
பொட்டி மூடியாச் !  அப்படியே இருக்கட்டும். அடுத்தமுறைக்கு வச்சுக்கறேன். பூவும், வாழைப்பழமும் போதும்.  பாவம்  நம்ம ஆஞ்சு வாடின பூவோடு இருக்கார்.





தம்பி மகனுக்கு,  ஒரு பொண் ஜாதகம் பொருந்தி இருக்கு. அவர் அடுத்த மாதம் லீவில் வரும்போது பெண் பார்த்து முடிவு செய்யணுமுன்னு  சொல்லி, பெண் படத்தைக் காமிச்சாங்க.  அட்டகாஸமா இருக்காள் !   நல்லபடி நடக்கட்டும்.

அவுங்க கிளம்பிப்போனதும்,  நாங்களும் கோவிலுக்குப் போய் வரலாமுன்னு புறப்பட்டோம்.  கீழே  வந்து, நாளைக்குக் காலை செக்கவுட் என்பதால் பில் ரெடி பண்ணி வைக்கச் சொல்லிட்டு வரவேற்பில் இருந்தவங்களோடு  சில க்ளிக்ஸ் ஆச்சு. நாம் திரும்பி வரும்போது ட்யூட்டி முடிஞ்சு போயிருப்பாங்க.  காலையிலும்  லேடீஸ் வர்றது ஒன்பது மணிக்குத்தான்.
மதியழகன்   இருந்தார். இன்றைக்கு பத்துமணி வரை   ட்யூட்டியாம்.  நாளைக்குக் காலையில் நாம் கிளம்பறோமுன்னதும்,  'காலையில் சீக்கிரமா வந்துடறேம்மா'ன்னார்.
முதலில் நம்ம அநந்தபதுமனை  ஸேவிச்சுக்கிட்டு, போயிட்டு வர்றோமுன்னு சொல்லிக்கணும்.  நெருங்கிய தோழி,  மகளுக்குக் கொஞ்சம்  உடல்நலம் சரியில்லைன்னாங்க.  கவலையே படாதீங்க. கோவிலில் அர்ச்ச்சனை பண்ணலாமுன்னு சொன்னேன்.   பதுமனிடம்  வேண்டினால் எல்லாம் நல்லபடி நடக்கும் !  


நம்மவருக்கும், தோழி மகளுக்குமாய்  ரெண்டு அர்ச்சனைச் சீட்டுகளும், பக்கத்துக்கடையில் ரெண்டு அர்ச்சனைத் தட்டுகளும் வாங்கி  நல்லபடியாய்  பூஜை நடந்தது.  ஒரு அரைமணி நேரம் 'அவன்' முன் அமர்ந்து பேசினேன்.  போயிட்டு வான்னு சொன்னானோ ? . மனசுக்கு இதமாக இருந்தது.  வெளியே வந்து  சிவன் சந்நிதிக்கும் போய் கும்பிட்டபின்  கிளம்பி  வரும்போது,  பார்த்தஸாரதியைப் பார்த்துட்டுப்போகலாமுன்னார் நம்மவர்.  கரும்பு தின்னக்கூலியா ?





வழக்கம்போல் நல்லபடி தரிசனம் கொடுத்தார் ! வெளியே ப்ரகாரத்தில் நின்னு பார்த்தாலும் பளிச் ன்னு தெரியும் விதம் இங்கே.....  (இருட்டில் நின்னு, ஊழியரின் அக்ரமங்களைக் கண்டுக்காமல் இருப்பதெல்லாம் இங்கில்லையாக்கும் !)

செல்ஃபோன் கவர் ஒன்னு  நம்மவருக்கு வாங்கிக்கணுமாம்.  ஒரு கடையில் விசாரிச்சால்  சரியானதாக இல்லை.  ஆச்சு....  ஊர்லே போய்ப் பார்த்துக்கலாம்தானே  ?  வாசல் கடையில்  தளதளன்னு தக்காளி....   இருபதே ரூ !!!! (ஐயோ.... ஊர்லே போய் சமைக்கணுமே...........  ) 
டின்னருக்கு ப்ருந்தாவன். நெருங்கிய தோழியின் கணவரின்  பீமரதசாந்திக்கு இங்கேதான் விருந்து.  இப்போ அவர் பெருமாளாண்டை போயிட்டார்.  மனசு இருக்கே.... அது ரொம்ப விசித்திரமானது.  ஒரு காட்சி கண்ணில் பட்டால்  அந்த  இடத்தில் நடந்த அத்தனை சமாச்சாரங்களையும்  கொண்டுவந்து  குவிச்சுருது.....பாருங்க....

விஜிக்கு ச்சனா பட்டூரா, நம்மவருக்குப் பூரிக்கிழங்கு, எனக்கு ரவாதோசை. டிஸ்ஸர்ட்டுக்கு ரஸ்மலாய்.  பூரியைக் கொஞ்சம் கரிச்சு வச்சுருக்காங்க. என்னமோ போங்க....  வரவர எல்லா ரெஸ்ட்டாரண்டுகளிலும்  தரம் குறைஞ்சுதான் போயிருக்கு.... ப்ச்.




லோட்டஸுக்கு எட்டரை மணிக்கே திரும்பிட்டோம்.  விஜி நல்ல பையர்.   வேலையா , மேல்படிப்பான்னு குழப்பத்தில் இருக்கார்.  சின்ன வயசுலே மேலே படிக்கறதுதான் நல்லதுன்னு  சொன்னேன். நல்லா இருக்கட்டும்.  நாளைக்கு வேற ட்ரைவர், பெரிய வண்டி கொண்டு வருவார்.  ஏர்ப்போர்ட் ட்ராப்தான். 

வரவேற்பில்  பில் ரெடியா இருந்தது.  செட்டில் செஞ்சுட்டு அறைக்குப் போனோம்.  ஃபைனல் பேக்கிங் முடிக்கணும்.  அந்த காயத்திருமேனியால் கொஞ்சம் சண்டை வந்தது. நல்லவேளை காயம் வர்ற அளவுக்குப் போகலை. பத்திரமா நான் பேக் பண்ணி என்னோடவே வச்சுக்கறேன்னாலும் கேக்கவேயில்லை. 

எடை குறைப்புன்னு  புது லுங்கிகள், இன்னும் சிலபொருட்கள் எல்லாம் 'நம்மவர்' பொட்டியில் இருந்து வெளியே வந்தன. மதியழகனுக்கு எடுத்து வச்சார். 

பாண்டுரங்கன் & ருக்மாயி தம்பதிகளைக் காசிக்குப் போகுமுன்னேயே பக்காவாப் பொதிஞ்சு வச்சுருந்தோம். இப்போ நம்ம நிக்கற லக்ஷ்மியை, பபுள் ராப் போட்டு அடிபடாதவிதம்  சுத்தி டேப் போட்டுக் கொடுத்தார். என்னுடைய கேபின் பேகில் இவுங்க வர்றாங்க.
 
நம்மவரின் கேபின் பேகில்  வீடு போய்ச் சேரும்வரை தேவைப்படும் மாற்று உடைகள். & டாய்லெட்ரி.   ஆஞ்சியை செக்கின் பேகில் வச்சோம். எல்லாம் ரெடி.

பெட்டிகளைப் பொறுத்தவரை எனக்கொரு மனத்தாங்கல் இருக்கு. என்னதான் லைட் வெயிட்னு சொன்னாலும் நாலைஞ்சு கிலோ வந்துருது காலிப்பெட்டிக்கே!  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுக்கும் முப்பது கிலோவில் அஞ்சு இதுக்கே போயிருது. ஊருக்கு வரும்போது ஆளுக்கு ரெண்டுன்னு நாலு பெட்டிகளால் ஒரு பதினெட்டுகிலோவரை பெட்டிகளுக்கே போயிருது பாருங்க....  ஒரு ஒன்னரை இல்லே ரெண்டு கிலோவில் பெட்டிகள் தயாரிச்சால் நல்லா இருக்குமே.... 

உள்ளூர் பயணத்தில் 15 கிலோதான் அனுமதி என்பதால் அந்த சைஸ் பெட்டிகள் வேற கொண்டு போகவேண்டி இருக்கு. இதுலே என்னத்தைன்னு நான் ஷாப்பிங் செஞ்சுக்கறது ?  23 கிலோவுக்கு மேல் பொட்டியின் எடை இருக்கக்கூடாதுன்னு ஏர்லைன்ஸ் சொல்லுது. தூக்கி வைக்கும் பணியாளர்களுக்குக் கஷ்டமாம்.  (பேகேஜ் ஹேண்ட்லர்ஸ் வீடியோ ஒன்னு பார்த்தேன்.  தூக்கி வைக்கறதெல்லாம் இல்லையாக்கும். தூக்கிக் கடாசறதுதான் உண்மை ) இப்படி ஒவ்வொன்னாப் பார்த்துப் பார்த்துத்தான் பயணம் செய்யணும். முந்தாநாள் பாண்டிபஸாரில் ஒரு பெரிய பெட்டி ஒன்னும் வாங்கவேண்டியதாப் போச்சு. நம்மவருக்குப் பெட்டி,  பைகள் எல்லாம்  ரொம்பவே ஃபேவரிட் ஐட்டம்ஸ் என்பதால்  கப்சுப்.  


முந்தி ஒரு காலத்தில்  ராத்ரி ஃப்ளைட்டில்தான்  இந்தியாவில் இருந்து கிளம்புவோம்.  சிங்கை ஹொட்டேல்களில் செக்கின்  டைம் எல்லாம்  பகல் மூணுமணி ஆக்கினதில்,   பகல் நேர ஃப்ளைட்டுக்கு மாறிட்டோம். ஒரு வகையில் நல்லதாப் போச்சு.  தூக்கம் கெடாது.  இப்பெல்லாம் சிங்கையில்,  ஹொட்டேல் வாடகை எல்லாம் அநியாயத்துக்குக் கொள்ளையாகப் போனதால்  ஒருநாள் தங்கலே போதுமுன்னு இருக்கு.  நேத்து ஒரு ஸர்வேயில் உலகத்தில் உள்ள பத்து  எக்ஸ்பென்ஸிவ்  நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் இருக்கு.  

நம்ம லோட்டஸில் 24 மணிநேர செக்கின்!!! எவ்ளோ வசதி பாருங்க !


தொடரும்......... :-)


Thursday, June 08, 2023

நல்லவர்களைக் காண்பதும் நன்றே !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 57

உடம்பு சரியில்லைன்னா  முகமே மாறிடுது இல்லை..... எனக்கே பார்க்கப் பாவமா இருக்கு.  ஏறக்குறைய  செத்துப்பிழைச்ச மாதிரிதான்.  தப்பிச்சார் என்ற நிம்மதியில் ஒரு பரிசு வாங்கிக்கொடுக்கலாமுன்னு ப்ரின்ஸ் நகைக்கடைக்குக் கூட்டிப்போனேன்.  இன்றைக்கும் நம்ம விஜிதான் டிரைவர்.  சுமாரான எடையில்  ஒரு ப்ரேஸ்லெட்.  கடையின் விற்பனையாளர் நல்ல உதவி செஞ்சு கனம் கூடாமல் பார்த்துக்கிட்டாங்க :-)

லோட்டஸுக்கு வந்து ஆஞ்சிக்கு மாலையாப் போட்டுக் கும்பிட்டேன்.

'எப்படியும்  நீங்க  கிளம்புமுன் வந்துருவேன்மா'ன்னு  சொன்ன   நம்ம மகள் சங்கீதா ராமசாமி, ஊரைவிட்டுக் கிளம்பியாச்சுன்னு சேதி அனுப்பினாங்க. சென்னை வந்து சேர குறைஞ்சது அஞ்சாறு மணி நேரமாகுமாம்.  பஸ்ஸுலே வர்றாங்க என்பதால் கோயம்பேடுக்கு வண்டியை அனுப்பவான்னு கேட்டதுக்கு,  தோழி வந்து கூப்புட்டுக்குவாங்கன்னுட்டாங்க. 

 இந்தக் கணக்கில் எப்படியும்  சாயந்திரம் நாலு மணி ஆகிரும்தான்.  அதுவரை இங்கே அக்கம்பக்கம் போய் வரலாமுன்னா.... எடை எடை....
சரி. ஊர்ப்போய்ச் சேர்ந்ததும்  அன்றைக்கே நம்ம குடும்ப மருத்துவரைப் பார்க்கணும் னு  ஃபோன் செஞ்சு அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கியாச்சு.  இனி லைஃப் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தியமைச்சுக்கணுமுன்னு பேசிக்கிட்டு இருந்தோம்.

அப்பப்ப ஒரு வேகத்தில் தீர்மானம்  எடுப்போம் பாருங்க..... அதேதான். இன்றையத் தீர்மானம் ஊருக்குப்போய்ச் சேர்ந்ததும்  தினமும் கொஞ்சமாவது  வெளியில் நடக்கணும்.  டிசம்பர் முதல் நம்ம கோடைகாலம் ஆரம்பிக்குதே....

அப்புறம் தினமும் நடந்தீங்களான்னு கேக்கப்டாது.....   இந்தியாவில் இருந்து நியூஸி வரும்வழியில்  நேற்றுப்போட்ட தீர்மானம்  காத்தோடு போயாச்சு. என்ன சம்மரோ....... குளிர்கால உடுப்பெல்லாம் போட்டுக்கிட்டுத்தான்  வெளியே காலடி வைக்கணும்.  யாராலெ ஆகுதுன்னு சொல்லுங்க சுமை தூக்கி நடக்க.... ப்ச்..... குனிஞ்சு ஷூ போட்டுக்கறதும் ஒரு தொல்லை...

நம்ம நண்பர் கார்த்திக் (கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன் ) Decathlon shoes  கனமும் இல்லை, லேஸும் கட்ட வேணாம். சுலபமாப் பாதத்தை நுழைச்சுக்கலாம் என்றதால்  இங்கேயே வாங்கிக்கலாமுன்னு கடையைத் தேடிப்போனோம்.  Decathlon Sports India, Ramee Mall . வாசலில் புள்ளையார் இருக்கார்.



இந்த மால் இப்போ காலி மால். ஜிலோன்னு  இருக்கு.  கடைக்குள்ளே போய் ஷூ போட்டுப் பார்த்துட்டு வேணாமுன்னுட்டார். இத்தனைக்கும் கனம் கூட இல்லை. காத்தாத்தான் இருக்கு. நம்மவர் பெரிய தியாகி!   இதைப்போல் தனக்குன்னு வாங்கிக்கணுமுன்னா.... (தங்கம் விதிவிலக்கு ! )வேணாம் வேணாமுன்னுவார்.  நம்முர் காசுலே மாத்திப்பார்த்தால் விலை மலிவோ மலிவு.  இங்கே கத்தரிக்காய்  கிலோ 15$.  சொன்னாக் கேக்கணுமே.....
தனக்கு ஒரு  BP Monitor  வாங்கிக்கணுமாம்.  'அதான் ஊருலே ஒன்னுக்கு ரெண்டா இருக்கே !   எதுக்கு இப்போ'ன்னு சொல்ல நினைச்சாலும் சொல்லலை.  நாம் ஒன்னு சாதாரணமாச் சொல்லப்போக.... அதனாலேயே பிபி எகிறிப்போச்சுன்னா..... ச்சும்மா இருப்பதே உத்தமம்னு  அப்பொல்லோ பார்மஸிக்குப் போனோம். ஹபிபுல்லா ரோடுன்னு நினைக்கிறேன். அப்பொல்லோ பேருலேயே ஒன்னு கிடைச்சது. வாங்கினதும்  லோட்டஸுக்கு வந்து ,  நம்ம மருத்துவர் தோழி சொன்னதைப்போல்  மூணு நிலைகளில்  கிடந்தும் இருந்தும் நின்றும் பார்த்தால்  இருக்க வேண்டிய அளவில்தான் இருக்கு. அப்பாடா....


இங்கேயே லஞ்சு எடுத்துக்கிட்டு கொஞ்சம் பெட்டிகளை அடுக்கி வைத்தோம்.  அப்போ நம்ம சித்ரா, செல்லில் கூப்பிட்டு எப்படி இருக்கோமுன்னு கேட்டாங்க.  நம்ம ஏரியாவாண்டைதான்  வந்துருக்காங்களாம்.  நேரம் இருந்தால் வந்துட்டுப்போங்கன்னதும்  'ஒரு அரைமணி நேரத்தில் வந்த வேலை முடிஞ்சுரும்.  அதுக்கு அப்புறம் வர்றேன்'னாங்க. 

அதே போல் வந்ததும்...  பயணம் உறுதியானதைச் சொன்னேன்.  இந்த மிளகு வைத்தியத்தால் எளிய முறையில் வலிகளைப் போக்கிக்கலாம். அக்குப்ரெஷர் முறைதான் இது. உங்க கை கால் வலிக்கானதை எப்படின்னு செஞ்சு காமிக்கிறேன். அதை வீடியோ க்ளிப்பா எடுத்து வச்சுக்குங்க.  ரொம்ப வலி இருக்கும்போது இதே போல் செஞ்சால் வலி குறையும்னு  சொன்னதும் சின்னதா ஒரு வீடியோ க்ளிப் எடுத்தேன்.
கொஞ்ச நேரத்துலே  மகள், லாபியில் இருந்து கூப்பிட்டு வந்துட்டேன்னதும், சித்ராவே , கீழே போய்க் கூட்டிவந்தாங்க. மகளுடன், அவுங்க தோழி மஹாலக்ஷ்மியும் வந்துருந்தாங்க. நல்ல ஜமா சேர்ந்துருச்சு. பேச்சும் சிரிப்புமா நேரம் போனதே தெரியலை. 
சித்ராவை எங்களுக்கெல்லாம் பிடிச்சுப்போச்சு.  எளிய சுபாவம். வீடு பல்லாவரம் தாண்டிப் போகணும் என்பதால்  கிளம்பிட்டாங்க. 
மகளின் நீண்டநாள் தோழி மஹாலக்ஷ்மி இப்போ எங்களுக்கும் தோழி ஆகிட்டாங்க.  இருவரும் செல்ஃபி எடுப்பதில் கில்லாடிகள்:-)






ஏழு மணி நெருங்கும்போது,  இவுங்களும் கிளம்பியாச்சு.  நாளைக் காலை  பஸ்ஸில் ஊர் திரும்புவாங்களாம். இத்தனை தூரம் பயணப்பட்டு வந்து பார்த்துப்போகும் அன்பை நினைச்சு மனம் இளகினது உண்மை. பொண்கள் நல்லா இருக்கட்டும் !

அவுங்கெல்லாம் போனதும் கொஞ்சம் வெறுமையாக உணர்ந்தது உண்மை.  ஏதோ போனஜன்மத்துப் புண்ணியம், நல்லவர்கள் நட்பு கிடைச்சுக்கிட்டே இருக்கு !

டின்னருக்கு எங்கியாவது போய்வரலாமுன்னு பார்த்தால்  தி நகர் ஏரியாவில்  நல்ல தரமான வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்ட் இல்லைன்னுதான் சொல்லணும். திரும்பத்திரும்ப பாண்டி பஸார் வேணாமேன்னு அடுத்த தெருவுக்குப் போனோம் :-)  முருகன் இட்லிக்கடை.  எல்லோரும் புகழ்ந்தாலும் எனக்கென்னவோ சுமாராத்தான் தோணுது.  ரொம்ப வருசங்களுக்குமுன் இங்கே முதல்முறை வந்ததே... 'நம்ம சுஜாதா'  எழுதினதைப் பார்த்துத்தான் ! 




எனக்கு வழக்கம் போல் இட்லி,  நம்மவருக்கு ரவாதோசை, விஜிக்கு நெய் ரோஸ்ட்.  இங்கே எனக்குப் பிடிக்காதது என்னன்னா.... இலையில் சட்னி சாம்பாரெல்லாம் ஓடும் வகையில் இருக்குன்றதுதான்.  நான் சாப்பிடுவேனா இல்லை அணை கட்டுவேனா ? 
மதுரையில் ஆரம்பிச்ச இந்தக் கடைக்கு இப்போ சென்னையிலேயே பத்து கிளைகளும், சிங்கப்பூரில் ரெண்டு கிளைகளும் இருக்காம்.  முருகன் காஃபி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிச்ச பெற்றோர்களின் படம் மாலையோடு இருக்கு. 

டின்னர் முடிஞ்சதும் லோட்டஸுக்குத் திரும்பிட்டோம்.  விஜியையும் வீட்டுக்கு அனுப்பியாச்சு.

தொடரும்............ :-)