Monday, January 30, 2012

கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர் 4)

மறுநாள் ஜெயராமனும் சரவணனுமா வீட்டுக்கு 'சொல்லிக்கிட்டுப் போக' வந்தாங்க. அப்ப ஒரு ஃப்ளவர் வாஸ் (ரெண்டடி உசரம்) எனக்குப் பரிசாக் கொண்டு வந்துதந்தார் ஜெயராமன். வியட்நாமுலே வாங்குனதாம். ப்ளேனில் கொண்டு போக வசதி இல்லை. உடைஞ்சு போயிரும். உங்க வீட்டுலே எங்க நினைவா இருக்கட்டுமுன்னார். அதான் டிவி இருக்கே நினைவுக்குன்னா.,..... கேட்டால்தானே?

அங்கங்கே சேகரிச்ச நல்ல பொருட்களைக் கொண்டு போக முடியாதுன்ற நிலையில் மற்றவர்களும் ஏதோ வந்த விலைக்குக் கொடுத்துட்டாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டார். செலவுக்குக் காசு வேண்டி பொருட்களை விற்கவருபவர்களிடம் இந்த அடகுக் கடைக்காரர்கள் அடாவடி பேரம் பேசுவதும் இப்படித்தான்., எங்கூர் சூதாட்ட விடுதிக்குப் பக்கத்திலும் இந்த அடகுக்கடைகள் உண்டு. ஆடுபவர்கள் அவசரக் காசு பார்க்க சரியான இடம் அதுதான். சுற்றுலா வருபவர்கள் கூட நகைகளை இப்படி அடமானம் வச்சுட்டுத் திருப்பாமல் போயிடுவாங்க. அதெல்லாம் அப்புறம் ஒரு ஏழெட்டு மாசம் கழிச்சு ஏலத்துக்கு வரும். இப்படி அவசரக் காசுக்காக அலையும் இடங்களில் துறைமுகம் இருக்கும் பேட்டையும் ஒன்னு.

துறைமுக நகரங்களில் 'பலான' தொழில்களுக்கு எப்பவுமே கொஞ்சம் கூடுதலான கிராக்கி. தண்ணீரிலேயே பலமாதங்கள் பயணப்பட்டுவரும் கடலோடிகளில் பலர் பலவிதமான பசிகளில் வாடி இருப்பதும், கரை சேர்ந்தவுடன் சிலபல வழிகளில் தாற்காலிக விருந்துக்குப் போவதும் உண்டுதான். கப்பல்வரவைக் காத்து நிற்கும் பாலியல் தொழிலாளர்களும் காசு பார்க்க நேருவது அப்போதுதானே.

ஒரு சமயம் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு, கொரியன் மாலுமி 'சர்வீஸ் சார்ஜா' அம்பதாயிரம் கொரியன் வொன் கொடுத்துட்டுப் போயிருக்கார். அம்பதாயிரமுன்னதும் அந்தப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சு. இவ்ளோ பெரிய தொகை இதுவரை கிடைச்சதில்லை என்ற பரவசத்தில் தூக்கம் பிடிக்கலை. அந்தக் காசை மறுநாள் பேங்குலே கொண்டு மாத்தறதுக்குள்ளே அது உள்ளுர்க்காசு எவ்வளவா இருக்குமுன்னு தெரிஞ்சுக்காட்டா தலையே வெடிச்சுடும் போல இருந்துருக்கு. கையில் காசு வந்தவுடன் என்னென்னெ செய்யணுமுன்னு மனக்கணக்குப்போட்டுப் பார்த்துருக்காங்க. தாங்க முடியலை. அர்த்த ராத்திரியில் பேங்கின் அவசரச்சேவை எண்ணைக் கூப்பிட்டு 'அம்மாம் பெரிய தொகை'க்கு நியூஸி டாலர் எவ்ளோ வருமுன்னு ஆசையா விசாரிச்சு இருக்காங்க. கணக்குப் போட்டுப் பார்த்துட்டு சொன்னாங்களாம் முப்பது டாலரும் சொச்சமும்! பல வருசங்களுக்கு முன் ஒரு சமயம் உள்ளூர் பத்திரிகையில் வந்த சேதி இது.

அடுத்தநாள் காலையிலே கிளம்பிருவோம். முகம் கோணாமல் இத்தனை மாசம் உபசரிச்சீங்கன்னார். இதென்னங்க பெரிய விஷயமுன்னு சொன்னாலும் எங்களுக்கும் ஏதோ சொந்தம் வீட்டுட்டுப் போறதுபோல் மனம் கலங்கி இருந்துச்சு. கண்காணாத தேசத்தில் இருக்கோம். நம்ம மக்களைப் பார்த்தால் சொந்தமுன்னுதானே தோணுது, இல்லீங்களா?

கிறைஸ்ட்சர்ச்சுக்கு என்னைக்கு விமானம் ஏற வர்றீங்கன்ற விவரத்தை டிமருவில் இருந்து புறப்படுமுன் ஃபோனில் சொல்லுங்கன்னோம். நாங்க மெட்ராஸ் வந்தா கட்டாயம் சந்திக்கணுமுன்னு விலாசம் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க.

நம்ம ஊரில் இருந்து தெற்கே பயணப்பட்டால் ஒரு 160 கிமீ தூரத்தில் கிழக்குக் கடற்கரையில் இருக்கு இந்த டிமரு என்னும் ஊர். துறைமுகம் இருக்கும் நகர். இதை சரக்குகள் ஏத்தி இறக்க மட்டுமே பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. முன்னொரு காலத்தில் திமிங்கில வேட்டைக்கான whale Stationகளில் இதுவும் ஒன்னு. சமீபகாலமாக திமிங்கில வேட்டை கூடாதுன்னு நாங்க தடை கோரிக்கிட்டு இருக்கோம். ஆனாலும் இந்த ஜப்பான் நாட்டுக்காரர்கள் கேக்கமாட்டேங்கறாங்க:( இப்போ டிமரின் ஜனத்தொகை 27 ஆயிரம். இந்தத் துறைமுகம் கட்டறதுக்கு முன்னே.... அந்த வழியாப்போன நிறையக் கப்பல்கள் தரை தட்டி உடைஞ்சுக்கு. அப்படி கடற்பாறைகள் தண்ணீருக்கடியில் ஓசைப்படாமல் உக்கார்ந்திருக்கும் இடம்.

குளிர்ந்து போன ஒரு எரிமலையின் Mt Horrible volcano குழம்பு சிந்துன இடம்தான் இப்போ ஊர். எங்கூர் போல எங்கெங்கு காணினும் சமதரையா இல்லாம ஏத்தமும் இறக்கமுமா இருக்கும். சரித்திர முக்கியத்துவம் உள்ள ஊர். வெள்ளையர் இங்கு குடியேறுமுன்பே மண்ணின் மைந்தர்களான மாவொரிகள் (கிபி1400) அங்கே இருந்துருக்காங்க. இந்த ஊர் டி ம ரு என்பதே மாவொரிகள் வச்ச பெயர்தான். Te Tihi-o-Maru என்று இருந்தது வெள்ளையரின் நாக்குலே விழுந்து இப்போ டிமருன்னு மருவியிருக்கு.

நியூஸியின் தெற்குத்தீவைச் சுத்திப் பார்க்கவரும் பயணிகள் எங்க ஊரில்(கிறைஸ்ட்சர்ச்) இருந்து (சினிமாப் புகழ்) க்வீன்ஸ்டவுனுக்குப் போகணுமுன்னாலும் இல்லே உலகின் தென்கோடி நிலம்வரை போய்ப் பார்க்கணுமுன்னாலும் இந்த ஊரைக் கடந்துதான் போகணும். இந்த ஊரில் இருக்கும் ரோஸ் கார்டனும், ம்யூஸியமும் தெற்குத்தீவில் மூணாம் இடத்தைப் பிடிச்சு வச்சுருக்கு! குட்டியூண்டு ஏர்ப்போர்ட் கூட இங்கே இருக்கு.

ஒரு நாலு நாளில் அங்கிருந்து தொலைபேசி, ஊரைவிட்டுப் புறப்படப் போறோம். ஒரு பெரிய வேன் ஏற்பாடு செஞ்சுருக்காங்க. பத்தரைக்கு உங்கூர் விமான நிலையத்துக்கு வந்துருவோம்ன்னு சரவணன் சொன்னார். கோபாலுக்கு ஆஃபீஸில் முக்கிய வேலை இருந்ததால் நான் மட்டும் விமான நிலையம் போய் அவுங்களைப் பார்த்துப் பேசிட்டு வழி அனுப்பிட்டு வந்தேன். நியூஸி அனுபவங்கள் அவுங்க வாழ்க்கையில் முக்கியமானதாகக் கூட இருக்கலாம். கப்பலை வி(த்து)ட்டுப் போறதுன்னா சும்மாவா?

இனிமே கப்பல் வாழ்க்கை வேணாம். வேற வேலை பார்த்துக்கப் போறோமுன்னு எல்லோரும் கோரஸாச் சொன்னாங்க. ஆனால்...இதுகூட ஒரு பிரசவ வைராக்கியம்தான்:-)
சில வருசங்களுக்குப் பிறகு நம்ம துறைமுகத்துலே ஓப்பன் டே வச்சு ஊர்மக்களை வாவான்னு கூப்பிட்டு, அங்கே வேலைகள் எப்படி நடக்குது என்னென்ன வசதி இருக்கு என்றெல்லாம் காமிச்சாங்க. கப்பல் ஆசையில் அதையும் போய்ப் பார்த்து வந்தோம். கண்டெயினர் டெர்மினலில் இருக்கும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்களை கணினி எப்படிக் கண்டுபிடிச்சு அந்தந்தக் கப்பலில் ஏத்துதுன்னு பார்த்து அம்பரந்து போயிட்டேன். பெரிய பெரிய க்ரேன்கள் நிமிசத்துலே அம்மாம் பெரிய இரும்புப்பெட்டியை அலேக்காத் துக்கிக் கப்பலில் அடுக்கி விட்டுருது
அப்போ நம்ம வீட்டுச் சாமான்கள் ஒருநாள் இப்படி இங்கே வந்து நிக்கப்போதுன்னு கனவுகூடக் காணலை. ரெண்டரை வருசம் முந்தி ஒரு இடமாற்றம் வந்துச்சுன்னு சாமான்செட்டுகளைக் கண்டெய்னரில் ஏத்தி அனுப்புனோம். ரெண்டரை மாசத்துலே சென்னைத் துறைமுகத்துக்கு வந்துருச்சு. நம்ம ஏஜண்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நாள் பாஸ் ஒன்னு வாங்கித்தந்து ஏகப்பட்ட முன்னறிவிப்புகள் எல்லாம் சொல்லித் துறைமுகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். அதுலே ரொம்ப முக்கியமானது கேமெரா கொண்டுவரக் கூடாது:(

கெடுபிடிகள் எல்லாம் கடந்து உள்ளே போனோம்.நம்ம கண் முன்னால் கண்டெயினர் பூட்டை வெட்டித் திறந்தாங்க. ஒரு பரிசோதகர் லிஸ்ட்டை ஒரு பார்வையிட்டு, அதிகாரியைக் கூப்பிட்டு வந்தார். டிவி, ஃப்ரிட்ஜ் மட்டும் பெரிய அளவுலே இருப்பதால் அதுக்கு ட்யூட்டி கட்டிடுங்கன்னு சொன்னதும் அதை அலுவலகத்தில் கட்டினோம். அவ்ளோதான். கண்டெயினர் நம்ம தெருவுக்குள் வர அனுமதி இல்லைன்னு ஏஜண்டு, அவுங்க குடோனுக்குக் கொண்டுபோய் சாமான்களை வேற ரெண்டு ட்ரக்கில் ஏத்திக் கொண்டுவந்து வீட்டில் அடுக்கி வச்சுட்டுப் போனாங்க.

வனவாசம் முடிஞ்சு இங்கே திரும்பி வந்தபோது அதே ஏஜண்டுகள் மூலம் கண்டெயினர் மும்பையில் இருந்து கிளம்புச்சு. ட்ராக்கிங் செஞ்சு பார்த்துக்கிட்டே இருந்தோம். கொரியாவரை ஒழுங்கா வந்த கப்பலை அப்புறம் ட்ராக் பண்ண முடியாப்போய் என்ன ஆச்சோ ஏதாச்சொன்னு கவலை. ஒரு வழியா மூணரை மாசம் கழிச்சு லிட்டில்டன் போர்ட்டுக்கு வந்து சேர்ந்துச்சு.

நவராத்ரி சமயம். போதுமான பொம்மைகள் இல்லாம ஒரு வழியா ஒப்பேத்தினேன். ( இல்லாட்டா...கிழிச்சேன்!) விஜயதசமியன்னிக்கு கண்டெயினரை வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கி வச்சார். ட்ரக்கை ஓட்டிவந்தவர்.... 'அட! இங்கே இருந்து கண்டெயினரை எடுத்துப்போக நாந்தான் வந்துருந்தேன். இப்ப நானே திரும்பக் கொண்டுவந்துட்டேன்னு சந்தோஷத்தோடு சொல்லிக்கிட்டே தனி ஆளா இயந்திரத்தை இயக்கினார். உள்ளூர் ஏஜண்டு நம்ம கண் முன்னால் கண்டெயினரைத் திறந்தார். லிஸ்ட்டைப் பார்த்து ஒரு அஞ்சு பொதிகளை பரிசோதிக்கணுமுன்னு நியூஸி MAF பிரிவு (Ministry of Agriculture and Forestry சொல்லி இருந்தாங்கன்னு அந்தக் குறிப்பிட்ட பொதிகளை அப்படியே வச்சுட்டு, மற்ற சாமான்களைப் பிரிச்சு வீட்டில் அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க. சொன்ன நேரத்துக்கு MAF பிரிவு பரிசோதகர் வந்தார்.

தொடரும்.............:-)

Friday, January 27, 2012

கப்பலுக்கொரு (கட்ட) பஞ்சாயத்து! ( கப்பல் மினித்தொடர் 3)

அடப்பாவமேன்னு ஆகிருச்சு. எட்டுமாசமா சம்பளம் கொடுக்கலையாம்! வேலைக்குப் போகமாட்டோமுன்னு 'வீட்டுலே' இருக்கமுடியாது. நடுக்கடலில் குதிச்சு நீந்தவா முடியும்? இதோ அதோன்னு இழுத்தடிச்சுக்கிட்டு இருக்கார், க்ரீஸ் நாட்டு மொதலாளி. கப்பலைச்சுத்திக் கடன் வச்சுக்கிட்டுக் கலக்கமில்லாம எப்படித்தான் தூங்கறாரோ?

அவசரத்தேவைக்கு கைவசம் வச்சுருந்த காசை அங்கங்கே துறைமுகங்களில் நிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாச் செலவழிச்சுக்கிட்டே வந்து இப்போ..... சுத்தம்:( நல்லவேளையா வெவ்வேற துறைமுகங்களில் கப்பலுக்குன்னு இருக்கும் ஏஜண்ட் புண்ணியத்தில் மளிகைச் சாமான்கள் மட்டும் முடங்காம 'இதுவரை' கிடைச்சு வந்துருக்கு. இனிமேப்பட்டு என்ன செய்யறதுன்னு புரியலையாம். இது எல்லாத்துக்கும் கேப்டந்தான் பொறுப்புன்னாலும் ரிஸர்வு காசு தீர்ந்துட்டா அவரும்தான் என்ன செய்வார்? அவருக்கும்தானே சம்பள பாக்கி நிலுவையில் கிடக்கு.

இது ஒரு பக்கமுன்னா.... கப்பலில் வர்ற சரக்குக்கு ஏற்கெனவே பணம் கட்டி வாங்குனவங்களுக்கு பொருட்கள் போய்ச்சேரத் தாமதம் ஆகுதுன்னு அவுங்க ஏஜண்டும் கப்பலுக்கான ஏஜண்டும் முட்டிமோதிக்கிட்டு இருக்காங்க.
இந்தக் கப்பல் ஒரு பல்க் கேரியர் . இப்ப அதுலே இருப்பது முழுசும் நிலக்கரி. அதை எதிர்பார்த்து உள்ளூர் கம்பெனி காத்துக்கிடக்கு. கடைசியில் கோர்ட்டுக்குப் போச்சு இந்தக் கேஸ். தரைச்சட்டம் எல்லாம் தண்ணியிலே செல்லுபடியாகாது. அதுவேற இதுவேற இல்லையா? (Maritime law)

கட்டப்பஞ்சாயத்து நடந்துச்சு. மொதலாளிகிட்டே இருந்து காசு ஒன்னும் பெயராதுன்னு தெரிஞ்சு போச்சு. பேசாமக் கப்பலை காயலான் கடையில் எடைக்குப் போட்டுட்டு அதுலே வர்ற காசை தொழிலாளர் சம்பளம், துறைமுக வாடகை, ஏற்கெனவே கப்பலுக்கு டீஸல் ரொப்பின கம்பெனி பாக்கி, கேஸ் நடந்ததுக்கு வக்கீல்களுக்கான கூலி, நீதிமன்ற செலவு, கப்பல் தரகர்களுக்கான கூலின்னு ஏகப்பட்ட செலவுக்கு எடுத்துக்கணுமுன்னு தீர்ப்பு. கப்பல் வேற 25 வருசப்பழசு. மெயிண்டனன்ஸ் செலவு இழுத்துக்கிட்டுப் போயிருமுன்னு ஓனர் ஓசைப்படாமல் இருந்துட்டார்.

சரக்கை வெளியே எடுக்கணுமேன்னு துறைமுகத்துக்குள்ளே கொண்டுவந்து கப்பலை நிறுத்துனாங்க. ஒரு பத்து நாள் போல அங்கே நின்னுச்சு.
நாங்களும் ஒரு நாள் 'கப்பல் பார்க்க'ன்னே போனோம். உள்ளே போய்ப் பார்த்தால்..... ஏதோ கால்பந்தாட்ட மைதானத்துலே நிக்கறமாதிரி 'ஹோ'ன்னு பரந்து விரிஞ்சு கிடக்கு. நிலக்கரி எல்லாம் வெளியே எடுத்தாலும் தரையெல்லாம் கரகரன்னு கரித்தூள். பெரிய எலிகள் நாலைஞ்சு சாவகாசமா நடந்து போய்க்கிட்டு இருக்குதுங்க.

' இப்பக் கொஞ்சம் மெலிஞ்சு போச்சுங்க. முந்தி கோதுமை ஏத்திக்கிட்டு வந்தப்ப நல்லாத்தின்னு கொழுத்துக்கிடந்துச்சுங்க'ன்னார் சரவணன். இரும்புக்கம்பி ஏணி வழியா கீழே எஞ்சின் ரூமைப்போய்ப் பார்த்தோம். ஒரே சத்தம். பயங்கர சூடு வேற! நம்ம திரு, முகமெல்லாம் கரி பூசிக்கிட்டு கருப்பு அப்பின உடுப்போடு வந்து நலம் விசாரிச்சார். முதல்லே யாருன்னு அடையாளமே தெரியலை! தமிழ் கேட்டதும்தான் மனசிலாச்சு:-) இவர் மதுரைக்காரர்,
அப்புறம் மேல்தளத்துக்குப்போய், கப்பல் ட்ரைவர்(!!) இருக்கும் ப்ரிட்ஜ் ரூம் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு, நாமே கப்பலை ஓட்டுவதாய் கற்பனை செஞ்சுக்கிட்டேன். பாவம்.... கப்பல். அடிமாடாப் போகுதேன்னு ஒரு வருத்தம்தான்.

எனக்குக் கப்பலுன்னா ஒரு தனி ஆசை. படகுப்பயணம் உடம்புக்கு ஒத்துக்கறதைல்லையே தவிர ச்சும்மா வேடிக்கை பார்க்கக் கசக்குதா? நம்மூர் கடற்கரைக்குப்போனாலும் கப்பல் எதாவது தெரியுதான்னே கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். இந்த ஆசையில்தான் ஒரு முறை கார் விபத்து ஒன்னுகூட எனக்கு ஏற்பட்டுருச்சு:( ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னது நெசம்தான்!

ஒரு நாள் 'கப்பல்காரவுஹ' வந்தப்ப பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உள்ளூர் ஹேக்ளி பார்க்கைச் சுத்திக் காமிக்கக் கூட்டிட்டுப் போனோம். அங்கே என் ஃபேவரிட் இடமான கள்ளிச்செடிகளைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்தப்ப...... பக்கத்துலே வந்து நின்ன ஒரு இளம்பெண்....சிநேகமாப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே 'நீங்க தமிழா'ன்னு தமிழில் கேட்டதும்.................. 'ஆமாம்....எப்படித்தெரியுமு'ன்னு அசட்டுத்தனமாக் கேட்டு வச்சேன். தொணதொணன்னு ஓயாம கள்ளிகளை விளக்கோ விளக்குன்னு விளக்குனது காதில்'விழுந்துருக்கு'!!!!

பொண்ணு சிங்கப்பூர். இங்கே படிக்க வந்துருக்கு. ரொம்ப சந்தோசமுன்னு தொலைபேசி எண்ணைக் கொடுத்துட்டுக் கப்பல்காரவுஹளை பஸ் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு வந்தோம். அஞ்சே நிமிசம். தொலை பேசி அடிக்குது. கூப்ட்டது சிங்கைப் பொண்ணுதான். பேச்சுக்கிடையில் என்ன சமையல் செஞ்சீங்கன்னு கேட்டதுக்கு, வெஜிடபிள் பிரியாணியும் மசால் தோசையுமுன்னு அப்பாவியாச் சொன்னேன்.

மசால் தோசையான்னு கேக்கும்போதே அந்தப் பக்கம் நாக்கில் எச்சில் ஊறுவது இங்கேயே எனக்குப் புரிஞ்சு போச்சு. வீட்டுக்கு வர்றியான்னு (ஒரு பேச்சுக்குக்) கேட்டதும், 'வர்றேன். வழி சொல்லுங்க'ன்னுது பொண்ணு. ஒரு பத்துத் தெருதள்ளி வசிக்குதாம். நானே வந்து கூட்டிட்டுப்போறேன்னு சொல்லிட்டுப்போய்க் கூட்டியாந்தேன்.

அதுக்குப்பிறகு நிறைய தடவை வந்து போச்சுன்னு வையுங்க.அடுத்த மூணு வருசங்களில் ஒரு தொடருக்கான சம்பவங்கள் (கிளைக்கதை ஒன்னு இப்போ இங்கே கிளைக்குது) .இருக்கு. இந்தக் கச்சேரியை இன்னொருநாள் வச்சுக்கலாம். இப்போ 'நம்ம' கப்பலைக் கவனிக்கணும்.

ஒரு நாள் சரவணன் ஃபோனில் கூப்பிட்டு அவருடைய டிவிக்கு 150 விலை வந்துருக்கு. கொடுத்துறவான்னார். லிட்டில்டன் (துறைமுக ஊர்) அடகுக்கடையில் ' டிவி இருக்கு விலைக்கு வேணுமா'ன்னு கேட்டுருக்கார். என்ன டிவி, எவ்ளோ பழசுன்னு விசாரிச்சால்..... இங்கே வர்றதுக்கு முன்னால் போன ஜப்பான் துறைமுகத்தில் வாங்குனதாம். JVC 22" ஊருக்குக் கொண்டு போக வாங்கி இருக்கார். புத்தம் புதுசு. இன்னும் பொட்டியில் இருந்து வெளியில் எடுக்கலை.

அப்போ இங்கே நம்மூரில் டிவி எல்லாம் பயங்கர விலை. அறுநூறுக்குக் கொறைஞ்சு ஒன்னும் இல்லை. நம்ம வீட்டில் ஒரு 26 இஞ்ச் GE இருக்கு. அதனால் நமக்கு வேணாம். ஆனாலும் 150 அநியாயம். வேற யாருக்காவது வேணுமுன்னா கேட்டுப்பார்க்கலாமுன்னு நினைச்சு டிவி உங்ககிட்டேயே இருக்கட்டும். ரெண்டொருநாளில் சொல்றேன்னு கோபால் பதில் சொன்னார்.

"இல்லீங்க, நாளான்னிக்குக் கப்பலை டிமரு என்ற ஊருக்கு ஓட்டிட்டிப்போய் விடணும். ரெண்டொரு நாளில் அங்கே நமக்கு பணம் செட்டில் செஞ்சுருவாங்க. அதை வாங்கிக்கிட்டு உங்கூருக்கு வந்து, ஊருக்குப்போக விமானம் பிடிக்கணும். ப்ளேனில் போறதாலே கூடுதலா லக்கேஜ் ஒன்னும் கொண்டு போக முடியாது. அதுக்குக் கட்டுற கட்டணம் கூடுதல். அதான் வந்த விலைக்குப் போட்டுடலாமுன்னு......"

கோபாலுக்கு மனசு கேக்கலை. 'சாயந்திரம் வந்து பார்க்கறேன். அந்த அடகுக்கடையில் இன்னும் ஒரு அம்பது கூடுதலாக் கேட்டு வையுங்க'ன்னார். சாயங்காலம் கப்பலாண்டை போனபோது Pawn shop காரர் 150 மேல் தரமுடியாதுன்னாட்டாராம். சரவணனோட அறைக்குப்போய் டிவியைப் பார்த்தோம். இதுக்கு நூத்தியம்பதுதானா? கோபாலுக்கு மனசே ஆறலை. 'ஏம்மா...பேசாம நாமே வாங்கிக்கலாம். புது மாடலா இருக்கு. பெட் ரூமுக்கு ஆச்சுன்னு 250 எடுத்து சரவணன் கையில் வச்சார்.

(இந்த டிவி இன்னும் நம்மூட்டுலே இருக்கு. நல்லவே வேலை செய்யுது. ஆனா இந்த வருசம்தான் கடைசியாம். நம்ம நாட்டுலே டிவி காமிக்க டிஜிட்டல் ட்ரான்ஸ்மிஷன் மாத்தறாங்களாம். இனிமேல் இந்த டிவி எல்லாம் பயன்படாதுன்னு அரசாங்கம் சொல்லுது. இருந்துட்டுப் போகட்டும். தமிழ்சினிமா பார்க்க வச்சுக்கிட்டால் ஆகாதா? இப்பவே நம்ம ஜிம் அறையில் அதை வச்சுத்தான் தமிழ்ப்பாட்டு டிவிடி போட்டுட்டு நடைப்பயிற்சி செய்யறோம்.)


தொடரும்...................:-)

Tuesday, January 24, 2012

ஒரு முகம்தேட ....த்ரீ முகம் கிடைச்சது! (கப்பல் மினித் தொடர் 2)

நம்ம பக்கங்களில் துறைமுகத்துக்குள்ளே போய் வர ஏதொரு நிபந்தனைகளும் கெடுபிடிகளும் 'அப்போ' இல்லை. மீன்பிடிக்கறேன்னு ஒரு நூலைக் கையில் பிடிச்சுக்கிட்டுப் போய் வார்ஃப் ஓரத்தில் உக்காந்துக்கலாம். ஒரு சமயம் எனக்கு 9 கேட் ஃபிஷ் கிடைச்சது. ஆறு இஞ்சுக்கு மேல் நீளமுன்னா எடுத்துக்கலாம். சின்ன சைஸுன்னா திரும்பத் தண்ணீரில் விட்டுடணும். நம்ம 'கேட்ஸ்'க்குப் பிடிக்குமுன்னு ஆசைஆசையாக் கொண்டுவந்தேன். மோந்து பார்த்துட்டு ச்சீன்னு (என் முகத்தில்) துப்பிட்டுப்போனது நம்ம கப்பு:-)
படம் இடது பக்கம்: டன்னல் கண்ட்ரோல் பில்டிங். நிலநடுக்கம் காரணம் கட்டிடத்தின் முகப்பும் கற்பாறை விழுந்து பழுதாகிக்கிடக்கு. டன்னலுக்குள்ளும் கற்பாறைகள் விழுந்ததால் மூணுநாட்கள் மூடி வச்சுருந்து பழுது பார்த்தாங்க. மின்சார சப்ளை நின்னு போயிருச்சு. அவசர நடவடிக்கையா உள்ளே மின்சாரம், எக்ஸாஸ்ட் ஃபேன் எல்லாமும் பேக் அப் பவர் ஜெனெரேட்டர் உபயத்தால் நடந்துச்சு. இந்தப் படம் எடுத்த சமயம் எல்லாம் நார்மல்(டச் வுட்)


ஏறக்கொறைய ஒரு கூட்டமா இந்திய முகங்களைப் பார்த்ததும் திகைச்சுப்போயிட்டேன். நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க என்பது எங்கூர் நியதி. சரவணன், திரு, ஜெயராமன் என்ற மூவரணிக்கு எங்க மூணு பேரையும் பார்த்ததும் பூவாய் மலர்ந்தன முகங்கள். மூணும் மூணும் ஆறுன்னு சிரிச்ச ஆறுமுகங்கள்
படம்:: துறைமுகத்துக்குள்ளே


'இந்தத் தமிழ்ப் படங்கள் எல்லாம் ஏற்கெனவே பார்த்ததா' ன்னு என் முதல் கேள்வி. 'அட! புதுசுங்க. நாங்க யாரும் பார்க்கவே இல்லை. ஊரைவிட்டு வந்து ஒன்னரை வருசமாகுது'ன்னாங்க. இங்கிருந்து திரும்பிப் போகும்போது இன்னும் சில நாட்டுக்குப்போய் சரக்கை இறக்கி ஏத்திக்கிட்டு சிங்கப்பூர் வழி சென்னைதானாம். அப்புறம் ஆறு மாசம் லீவு. பேசும்போதே வரப்போகும் ஜாலியை எதிர்நோக்கும் பரவசம் கண்ணில் தெரிஞ்சது.

கப்பலின் கேப்டன், இன்னும் ரெண்டு அதிகாரிகள் தவிர ஒரு பிலிப்பைன் சமையல்காரர். அப்புறம் இந்த ஒரு ஏழுபேர் ஆஹா.... அப்ப பாக்கி நாலு பேர் எங்கே? கப்பல் நங்கூரமடிச்சு நின்னாலும் எஞ்சின் ஓடிக்கிட்டே இருக்கணுமாம். அப்பதான் மின்சாரம் கிடைக்குமாம். ரெண்டு பேர் அந்த ட்யூட்டியில் இருக்காங்க. இன்னும் ரெண்டு பேர் தூக்கம். நைட் ட்யூட்டி பார்க்கணுமாம்.

இந்த ஏழு பேரில் ஒருவர் வடக்கிந்தியர். பாக்கி ஆறு பேரும் தமிழர். நாலு தமிழ்நாடு, ரெண்டு இலங்கை.

'பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. அநேகமா இன்னும் ரெண்டொரு வாரத்துலே துறைமுகத்துக்குள்ளே விட்டுருவாங்க'ன்னு ஜெயராமன் சொன்னார். இவர் ஒரு அதிகாரி. chief Officerன்னு சொன்னாங்க. சரவணன் ரேடியோ ஆபீஸராம். இந்த ரேங்க் எல்லாம் என்னத்தைக் கண்டேன்? அப்போ நாம் பதிவர் ஜாதி இல்லை பாருங்க. அதனால் முழுசா விவரம் ஒன்னும் கேட்டுக்கலை:( மொதநாளே தொணதொணக்க வேணாமுன்னு கொஞ்சம் அடக்கிப்பேசிட்டு, படங்களைக் கொடுத்துட்டு, நம்ம வீட்டுக்கு வாங்கன்னு அழைப்பும், எந்த பஸ், எந்த ஸ்டாப்புன்னு விவரம் எல்லாம் விளக்கிட்டு நாங்க திரும்பிட்டோம்.

தொடர்ந்துவந்த சனிக்கிழமை, 'உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கோமுன்னு ஃபோன் பண்ணிச் சொன்னாங்க.' மணி ஒரு பத்து இருக்கும். பகல் சாப்பாடு நம்மோடு இருக்கட்டுமேன்னு கொஞ்சம் கூடுதலா சமைக்க ஆரம்பிச்சேன். பகல் மணி மூணாகுது...இதுவரை இவுங்க வந்து சேரலை:( என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு மனசுலே பதற்றம். அப்ப இந்த செல்ஃபோன் எல்லாம் நம்ம வீட்டில் புழக்கத்தில் வரலை. கோபால் ஆஃபீஸ்லேகூட எல்லாருக்கும் பேஜர் கொடுத்தாங்களே தவிர நோ செல்:(

வாசலுக்கும் உள்ளுக்குமா நடந்துபோய்ப் பார்த்துக்கிட்டு இருக்கோம். எங்கேன்னு போய்த் தேட? நாலுமணி போல வந்து சேர்ந்தாங்க மூவர். நம்ம சரவணனும், ஜெயராமனும், இன்னொரு புது முகமும். லிட்டில்டன்னில் இருந்து டவுனுக்கு வந்தவரைக்கும் எல்லாம் சரி. ஆனால் டவுனில் நம்ம வீட்டுக்கு பஸ் எடுக்காம கொஞ்சம் சுத்திப்பார்க்கலாமுன்னு போனதில் வழி தவறி, நேரம் ஓடி இருக்கு!

பெரிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்னு கொண்டுவந்து மகளுக்குத் தந்தாங்க. 'எதுக்கு இதெல்லாம்? அனாவசிய செலவு'ன்னு கடிந்தேன். கப்பலில் சாப்பாட்டுக் குறைவு ஒன்னும் இல்லையாம். 'அதான் உங்க ஊர் ஜனங்க பொட்டிபொட்டியா தின்பண்டங்கள் அனுப்புனீங்களே' என்றார் ஜெயராமன்.

எப்போ சாப்பிட்டாங்களோ என்னவோன்னு உடனே சாப்பாடு பறிமாறினேன். வத்தக்குழம்பு பார்த்ததும் நம்ம ஜெயராமனுக்குக் கண்ணுலே கரகரன்னு தண்ணீர். சரவணனுக்கு சாம்பார் ரொம்பப்பிடிச்சுப் போச்சு. இலங்கைக்காரர் நகுலன் ஒன்னும் கதைக்காமல் சாப்பிட்டார்.

நம்ம வீடியோ ஷெல்ஃபைப் பார்த்ததும் நகுலனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாப் போயிருச்சு. நம்ம படக் கேஸட்டுகளைக் கொடுத்துட்டு இன்னும் நாலைஞ்சு எடுத்து வச்சுக்கிட்டார். பார்க்காத படங்கள் நிறைய இருக்குன்னும் சொன்னார்.

கப்பலை எப்போ உள்ளே விடுவாங்கன்னதுக்கு, இன்னும் சரிவரத் தெரியலையாம். கப்பலை கைது செஞ்சு வச்சுருக்காங்களாம். அடராமா?
கப்பலைக் கூடவா? ஏன்? எதுக்கு?

போன ரெண்டு முறை இங்கே வந்துட்டுப்போன கப்பல்தான் இது. அப்போ வேற க்ரூ இருந்துருக்காங்க. பொதுவா சாமான்களை இறக்க, ஏத்தன்னு சர்வீஸ் செய்யும் துறைமுகத்துக்கு ஒரு கட்டணம் கட்டணும் அதைக் கடந்த ரெண்டு முறையும் கட்டாம நைஸாக் கம்பி நீட்டிருச்சு கப்பல். இந்த முறை வாகா வந்து மாட்டிக்கிச்சு.

கப்பல் உரிமையாளருடன் பேச்சு வார்த்தை நடக்குது. அவர் அதுக்கெல்லாம் ஏற்கெனவே பணம் கொடுத்துட்டேன் அப்போ இருந்த கப்பல் அதிகாரிகளிடம். இன்னொரு தடவை கொடுக்க முடியாதுன்றாராம். அடப்பாவமே! யாரு நடுவிலே ஆட்டையைப் போட்டா?

ஏழு மணிக்கு முன் துறைமுகத்துக்குத் திரும்பணுமாம். இவுங்களைக் கூட்டிப்போய் கப்பலில் விடும் துறைமுக நிர்வாகத்தின் சின்னப்படகு அதுக்குப்பிறகு வேலை செய்யாதாம். மணி ஆகுதேன்ற பதைபதைப்பில் ' பஸ் பிடிச்சுப்போனால் ரொம்ப நேரமாகும். நான் போய் விட்டுட்டு வர்றேன்'னு கோபால் நம்ம வண்டியை எடுத்தார். அஞ்சு ஸீட் டொயோடா. இங்கெல்லாம் அஞ்சுன்னா அஞ்சு. அதுக்குமேல் அடைச்சுக்கிட்டுப் போகமுடியாது. கப்பலில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு இருக்கட்டுமுன்னு குழம்பு, பொரியல், கூட்டுன்னு பார்ஸல் செஞ்சு கொடுத்தேன். ரைஸ் குக்கரில் சோறு ஆக்கிக்குவோம் என்றார் சரவணன்.

எப்பப்ப முடியுமோ அப்பெல்லாம் வந்து போங்க. வர்றதுக்கு முன்னால் ஒரு ஃபோன் அடிங்கன்னு சொன்னேன்.

அஞ்சாறு நாளைக்கொருமுறைன்னு யாராவது ரெண்டு பேர் வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம். சாப்பாடெல்லாம் வேணாமுன்னும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு மனசு கேக்குதா? கொஞ்சம் கூடுதலாச் சமைச்சால் ஆச்சுன்னு குழம்பு, ரசம். கறின்னு கொடுத்து அனுப்புறதுதான். மூணு வாரம் ஆச்சு. இன்னும் கப்பலை உள்ளே விடலை. நல்லவேளையா இது சரக்குக் கப்பல் என்றதால் ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லைதான். (ஆமாம். இந்தக் காலத்துலே யார் கப்பலில் பயணம் போறாங்க? மாசக்கணக்கா பயணம் பண்ண காலம் மாறிப்போச்சுல்லே!)

இதோ விட்டுருவாங்கன்னு இருந்த 'சரவணன் அண்ட் கம்பெனி'க்கும் ஆரம்ப கால உற்சாகம் படிப்படியாக் குறைய ஆரம்பிச்சது. இவுங்களுக்கு இப்படி நடப்பது முதல் அனுபவமாம். முதலாளி எதுக்கும் ஒத்துவரலையாம். என்னடா இப்படி வந்து கண்காணாத தேசத்தில் மாட்டிக்கிட்டமேன்னு இருக்கு போல!

கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகுமுன்னு ஆறுதலாப் பேச்சுக் கொடுத்த ஒரு நாள், அதிர்ச்சியா இன்னொரு தகவல் சொன்னார் சரவணன்!

தொடரும்.............:-)
சின்ன ஊர்தான். ஆனாலும் நிலநடுக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. கண்டெயினர்களை வச்சே இங்கேயும் பிஸினஸ் ஏரியாக்களை சுமாராச் சரிபண்ணி இருக்காங்க.

PIN குறிப்பு: நிறைய படங்கள் எடுத்தாலும் இப்ப நம்ம தேவைக்கு எதுவும் கண்ணுலே ஆப்டலை. ஏகப்பட்ட ஃபோட்டோ ஆல்பத்துலே, இது எங்கே ஒளிஞ்சுருக்கோ? என்ன ஆனாலும் இந்த டிஜிட்டல் ஃபோட்டோ சௌகரியம் வராது கேட்டோ!


முந்தாநாள் போய் சில படங்கள் உங்களுக்காக எடுத்து வந்தேன். அவை பதிவில் இடம் பெறும்.
படம்: துறைமுகத்துக்குள்ளே