அநேகமா இதுதான் நான் எழுதுன சின்ன இடுகையா இருக்கணும்!
நேத்து ஒரு வேலையா தி.நகர் போயிட்டு திரும்பிவந்துக்கிட்டு இருந்தோம். மழை நசநசன்னு பெய்ஞ்சுக்கிட்டு இருக்கு. வெங்கடநாராயணா ரோடில் வரும்போது..... அப்படியே திருப்பதி தேவஸ்தானக் கோயிலுக்குப் போயிட்டுப் போகலாமுன்னு கோபால் சொன்னார். 'அதெல்லாம் வேணாம். நாமோ இந்தப் பக்கம் அண்ணாசாலை நோக்கிப் போறோம். எதிர்ப்பக்கமாத்தான் நிறுத்தணும். சாலையைக் கடக்கணும். அழுக்கு வேற...... வேணாம் வேணாமு'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.
'இதுக்கெல்லாம் பயப்பட்டால் ஆகுமா? எப்படி சென்னையில் வாழப்போறே? நான் கூட்டிக்கிட்டுப்போறேன்'னு சொல்லிக்கிட்டே வர்றார். சனி நாக்கில் சப்பளம்/சம்மணம் போட்டு உக்கார்ந்துருக்குன்னு ...... நம்ம கண்ணுக்குத் தெரியலை(-:
கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு சின்னச்சந்துலே( தெருவாம்!) வண்டியைக் கொண்டுபோய் நிறுத்துனார் ட்ரைவர். நமக்கு முன்னாலே இன்னொரு வண்டி நிக்குது. ட்ரைவருக்குப் பின்பக்க இருக்கையில் இருந்து கோபால் இறங்குறார். நான் இந்தப் பக்கம் யாராவது பின்னால் வர்றாங்களான்னு பார்க்கிறேன். இந்த ஊருக்கு வந்ததுமுதல் யார் எந்தப் பக்கம் வந்து ஓவர்டேக் செய்யறாங்கன்ற விவரமே புரிபடாமல் இருக்கு. அதனால் இறங்குமுன்னே நல்லாப் பார்த்துட்டுத்தான் இறங்குறது வழக்கம். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் இல்லை. கதவில் கைவச்சு ஒரு அரை அடி திறக்கிறேன். கண் சிமிட்டும் நேரத்தில் தடால்'னு ஒரு ரெண்டு சக்கரம் வளைவில் பாய்ஞ்சுவந்து கதவை இடிச்சு அந்த ஆள் பைக்லே இருந்து விழுந்துட்டார்.
அர்ச்சனை ஆரம்பமாயிருச்சு. ஒரு நொடி என்ன நடந்ததுன்னே எனக்குப் புரியலை! அதுக்குள்ளே ட்ரைவர் இறங்கி வந்து சின்னதா ஒரு கூட்டம் கூடி..... நான் இன்னும் இறங்கவேயில்லை. வண்டிக்குள்ளேதான் இருக்கேன்.
இன்னொரு நாள், ஒரு மேம்பாலத்துலே இருந்து இறங்கி வலது பக்கம் தெருவில் போக ரைட் சிக்னல் கொடுத்துக்கிட்டே மூணு நிமிஷமா நம்ம வண்டி நிக்குது. எதிரே வரும் ட்ராஃபிக் ஓயட்டுமுன்னு காத்திருக்கோம்.
எதிரே க்ளியர் ஆனதும் நம்ம வண்டி ரைட்டுலே திரும்புது, அதே சமயம் மேம்பாலத்துலே இருந்து ஒரு பைக் வேகமா வந்து நம்மை ஓவர்டேக் பண்ணுது. நேராப் போற வண்டி அது. ரைட் சிக்னல் கொடுத்து நிக்கும் வண்டிக்கு ரைட்லேயே வந்து ஓவர்டேக் பண்ணால் எப்படி? அந்த வண்டி விழுந்து, அதுலே இருந்தவர் பயங்கர அர்ச்சனைகளோடு நம்ம வண்டியை நோக்கி ஓடி வர்றார். இவ்வளவு மோசமா மனுசர்களால் பேசமுடியுமான்னு நான் விக்கிச்சுப்போய் இருக்கேன்.
திட்டிக்கிட்டே அவர் தன் ஹெல்மெட்டைக் கழட்டுனதும் ........... ச்சீன்னு ஆயிருச்சு. நெற்றி நிறைய திருமண். ரொம்ப வயசான பெரியவர். ஆனால் தோற்றத்துக்கு நேர் எதிரா, புழுத்துப்போன வாய்.
வெங்கடேஷை (ட்ரைவரை)ப் பார்க்கவே ரொம்ப சங்கடமாப் போச்சு. 'நீங்கெல்லாம் இருக்கீங்கன்னு சும்மா இருக்கேன் மேடம். இல்லேன்னா இறங்கிப்போய்.... '
"ஐய்யய்யோ..... அப்படியெல்லாம் செஞ்சுறாதீங்க. அவர் தப்பு செஞ்சுட்டு நம்ம மேல் பாயறார்"
வளைவில் வரும்போது வேகத்தைக் குறைச்சு வரணுமுன்னு இங்கே சென்னையில் விதி இருக்கா? இல்லை இல்லையா? ஏன் இப்படித் தாறுமாறா எல்லா சைடுலே இருந்தும் வண்டிக்கு முன்னே பாய்ஞ்சு வர்றாங்க? லைசன்ஸ்க்கான தேர்வு இவுங்களுக்கு உண்டா? விதிமுறைகள் இவுங்களுக்கு மட்டும் வெவ்வேறா? தப்பு செஞ்சுட்டோமேன்னு கொஞ்சம்கூட உணராமல் அடுத்தவன் மேல் பாய்வது என்ன மாதிரியான உணர்வு? தற்காப்புக்காகவா?
அதெப்படி, சட்னு ஆபாசமாப் பேச இவுங்களாலே முடியுது! அருவருப்பா இருக்குன்னு புலம்பிக்கிட்டே வர்றேன்.
"இவனுங்கெல்லாம் இப்படித்தான் மேடம். நாய் கடிச்சுருச்சுன்னு போய்க்கிட்டே இருக்கணும்"
Thursday, December 03, 2009
நாய் கடிச்சுருச்சுப்பா...........
Posted by
துளசி கோபால்
at
12/03/2009 01:56:00 PM
67
comments
Links to this post
Tuesday, December 01, 2009
ஏம்ப்பா.... உன் 'பெட் ரூம்' எங்கே இருக்கு?
இதுதானே வேணாங்கறது? பசின்னு வந்தே, இருப்பதைப் போட்டேன். அதுவும் எனக்குன்னுக் கொஞ்சம்கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் நீயே தின்னுட்டே! உண்டமயக்கம். அசதி தள்ளுது, இப்போ எங்கே போய் படுக்கலாமுன்னு கேக்கறே! இருக்க இடம்கொடுத்தாப் படுக்கப் பாய் வேணுங்கற கேஸா நீ? என்னது, பாய் வேணாமா? டன்லப் மெத்தையே வச்சுருக்கியா? அடப் போப்பா.....
ஆதி யுகத்தில் ஒரு கணவன் மனைவி. புருபுண்யர் & ஸதி ன்னு பெயர். அவுங்களுக்குப் புத்திரபாக்கியமே இல்லை. சாலியக்ஞம் என்ற யாகம் செய்யறாங்க. ஒரு வருசம் செய்யவேண்டியதாம் இது. கடைசி நாளில் 'கடவுள்' தோன்றி என்ன வரம் வேணுமுன்னு கேட்க, புள்ளை வரமுன்னு இவுங்க சொல்ல, அப்படியே ஆகட்டும். புள்ளைக்கு சாலிஹோத்ரர்ன்னு பெயர் வச்சுருன்னு ஆசிகள் கிடைச்சது.
சாலிஹோத்ரர் நல்ல பண்புகளுடன் பெரியவனா வளர்ந்து கலியாணம் கட்டி, இல்லற தர்மத்தைக் கடைப்பிடிச்சு, தீர்த்தயாத்திரை செஞ்சுக்கிட்டே வீக்ஷாரண்யம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஹ்ருத்தாப நாஸினி ன்னு ஒரு திருக்குளம் இருக்கு. தேவர்கள் காந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், ரிஷிமுனிகள் இப்படி பலரும் அங்கே வந்து நீராடி பூஜைகள் செஞ்சு, தர்ப்பணம் கொடுத்துட்டுப்போறதையெல்லாம் பார்த்தார். (மனசுலே எந்தவிதமான கஷ்டங்கள் இருந்தாலும் இங்கே நீராடி, சாமி கும்பிட்டால் அதெல்லாம் தீர்ந்துருமுன்னு ஒரு நம்பிக்கை)
நாமும் இங்கே தவம் செய்யலாமுன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. தவம் ஆரம்பிக்குமுன் சாப்பிடலாமுன்னு நெல்மணிகளைப் பொறுக்கிச் சேர்த்து அதைப் பக்குவமா மாவா ஆக்கிவச்சுட்டாங்க வீட்டம்மா. அதுலே ஒரு பங்கை யாராவது விருந்தாளி(அதிதி) வந்தால் கொடுத்துட்டுச் சாப்புடணுமுன்னு நியதி இருக்கு(ஐயம் இட்டு உண்). ஒரு கிழவர் வந்தார். அவரை வரவேற்று, உபசரிச்சு, கால் பங்கு மாவைக் கொடுத்தாங்க. அதெப்படி வெறும் மாவை விழுங்குவாங்க? விக்கிக்காதோன்னு கேக்கப்பிடாது. பார்க்கதான் ஒல்லியா இருந்தாரே தவிர கிழவருக்கு நாய் வயிறு! அடங்கலை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமுன்னு இருந்த மாவெல்லாம் இவருக்கே போச்சு. யானைப் பசி. வந்த வேலை முடிஞ்சதுன்னு கிழவர் போயிட்டார். வெறும் சட்டிபானையை வீட்டம்மா கழுவி கமர்த்தியாச்சு.
போயிட்டுப் போகுதுன்னு சாலிஹோத்ரர், தவம் செய்ய உக்காந்தார். இது ஒரு வருசத் தவமாம். தை அமாவாசைக்கு தை அமாவாசை.. அடுத்த வருசமும் வந்துச்சு. (பாவம். வீட்டம்மா(-: அவுங்களும் வருசப் பட்டினியோ என்னவோ!) தவம் முடிச்சு இன்னிக்கு எதாவது சாப்பிடணுமுன்னு எல்லாம் ரெடியாகுது. 'டான்'னு கிழவர் இன்னிக்கும் இங்கே ஆஜர். இன்னிக்கும் அதே மாதிரிதான். பூராவும் விழுங்கிட்டு, 'அசதியா இருக்கு. கொஞ்சம் தூங்குனாத்தான் சரியாகும். எங்கே எந்த அறையிலே படுத்துக்க?'ன்னு கேட்டார். பெரிய பங்களாவா என்ன? இத்துனூண்டு குடிசை. 'உள்ளே போய் இருக்கும் இடத்தில் தாய்ச்சுக்கோ'ன்னு சொல்லிட்டார் சாலிஹோத்ரர். சின்னக் குடிலில் கிழக்காவது மேற்காவது?
கிழவர் தெற்கே தலைவச்சுப் படுத்தார். ஆகாயத்துலே இருந்து மலர்மாரி பெய்யுது. மங்கள வாத்தியங்கள் ஒலிக்குது. 'என்னடா இது இம்மாம் சத்தமு'ன்னு சாலிஹோத்ரர் குடிசைக்குள் எட்டிப் பார்க்க, ஏதோ மேஜிக் ஷோ போல ஸீன் மாறுது. ஆதிசேஷன் படுக்கை விரிக்க, சங்கு சக்கரம் ஏந்திய கைகளோடு மகாவிஷ்ணு 'கிடந்தார்'.
இவருக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. அப்படியே பிரமிச்சு நின்னு பெருமாளை வணங்கினார். 'என்ன வரம் வேணுமுன்னு அவர் கேக்க, எப்பவும் உன்னையே பார்த்துக்கிட்டு உன் அருகிலேயே இருக்கணுமுன்னு இவர் சொல்ல 'அப்படியே'ன்னு அனுகிரகம் ஆச்சு'.
இந்த க்ஷேத்திரத்துக்கு பதிவுலகத்தோழி ஒருத்தருடன் ரெண்டு வாரத்துக்கு முன் போய்வந்தேன். ரெண்டு மணிநேரப் பயணம் சென்னையில் இருந்து. கோவில் வாசலில் போய் இறங்குனோம். ஆன்மீகச் செம்மலை நினைவுபடுத்தும் விதமா....(அட!) ராகவா!
'எவ்வுள்ளே கிடக்க'ன்னு கேட்டதால் இந்த ஊருக்கு எவ்வுள்ளூர்ன்னு பெயர் வந்துருச்சு. 'திருஎவ்வுள்ளூர்'. இந்தப் பெயரை ஒரு பத்துதரம் வேகமாச் சொல்லிப் பாருங்க. ஆங்..... திருவள்ளூர்ன்னு கேக்குதா? அதே அதே. பெருமாளுக்கும் 'எவ்வுள்கிடந்தான்'ன்னு காரணப்பெயர் உண்டு. இதைச் சொல்லிப் பார்க்க வேணாம். ஸ்வாமி பெயர் வீரராகவன் என்று சொல்றாங்க. (இதுக்கும் ஒரு கதை இல்லாமப்போகுமா? இருக்கு!) வஸுமதியாக இங்கே அவதரித்த தாயாரை, வீரராகவன் என்னும் இளவரசனா வந்து திருமணம் செஞ்சுக்கிட்டார் பெருமாள். தொழில்முறையில் பக்தர்களின் நோய்களைப் போக்கும் வைத்தியர். அதனால் வைத்ய வீரராகவன். நம்ம டாக்டர் வீரராகவன், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட். வார்ட்ஸ் (Warts) மரு, கட்டி, இதெல்லாம் கரையணுமுன்னா இவரை வேண்டிக்கலாம். . ஃபீஸ் ஒன்னும் அதிகம் இல்லை. உப்பும் குறுமிளகும் வாங்கித் தந்தால் போதுமாம்.
அகோபிலமடத்தின் பொறுப்பில் இருக்கும் கோவில். வழக்கம்போல் புகைப்படத்துக்கு அனுமதி இல்லை. வெளிப்புற மண்டபத்துக்கு நேரா பிரமாண்டமான கதவுகளோடு, கோபுரவாசல். உள்பிரகாரம் கடந்து நேராப் போனால் மூலவரை தரிசிக்கலாம். எனெக்கென்னமோ இங்கே கருவறைக்கு ரொம்பப் பக்கமாப்போய் நிற்கும்படியான ஏற்பாடா இருக்கேன்னு வியப்பா இருந்தது. பெரிய திருவுருவம். வலது பக்கம் லேசாத் தலையைச் சாய்ச்சு புஜங்க சயனமாப் படுத்து, வலக்கையை சாலிஹோத்ரர் தலையில் வச்சு ஆசீர்வாதம் செஞ்சுக்கிட்டே, கால்களை நீட்டிப் பாதங்களை ரொம்ப ரிலாக்ஸா, ஒரு பாதம் நேராவும் வலது பாதம் ஒரு முப்பது டிகிரி கோணத்துலேயுமா வச்சுக்கிட்டு போர்வை ஒன்றைப் போர்த்துக்கிட்டுக் கிடக்கிறார். (பப்ளி துப்பட்டியாம். சிகப்பு வெள்ளைக் கட்டம் போட்டது. கோவிலில் மட்டுமே கிடைக்குமாம்.)
மூலவர் ரொம்ப அழகுன்னா, உற்சவர் அதி அழகு. அவருக்கு வலப்பக்கம் தாயார் சந்நிதி. பெயர் கனகவல்லி. மூலவர் முகம் பார்க்கப் பார்க்கப் பரவசம். ரொம்பத் தெரிஞ்ச ஒரு பொண்ணைப் பார்க்கறதுபோல் இருக்கு. உருண்டை முகமா இல்லாமக் கொஞ்சம் நீண்ட சின்ன முகம். பார்வையில் ஒரு அன்பும் கருணையும் ததும்பிக்கிடக்கு. (இதை எதுக்குச் சொல்றேன்னா..... நம்ம வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தானக் கோவிலில் வச்சுருக்கும் தாயாரை ஒரு முறை போய்ப் பார்த்துட்டு வாங்க. ஏற்கெனவே புலம்பினதுக்கு இங்கே சுட்டி கொடுக்க முடியலை. ப்ளொக்கர் நாலைஞ்சு நாளா மிரட்டுதுப்பா. எதையும் எடிட் செய்ய முடியாம அப்படியே போட்டுக்கிட்டு வர்றேன்)
ஸ்ரீராமர் சந்நிதியில் அந்த உற்சவர்களையும், குட்டியூண்டா நிற்கும் ஹனுமனையும் பார்த்துக்கிட்டே நின்னுடலாம். ஹைய்யோ.....இவ்வளவு திருத்தமான முகத்தை நான் என் (இந்த) ஜென்மத்துலே பார்த்ததே இல்லை. அழகு அழகுன்னு வாயாரச் சொன்னதைக் கேட்ட பட்டர், 'பிரம்மோத்ஸவம் நடக்கும்போது வந்து பாருங்கோ. தாயாரும் பெருமாளுமா மேட் ஃபார் ஈச் அதர் ன்னு இருப்பா'ன்னார்!
ஸ்ரீவேணுகோபாலனுக்கும் ஒரு சந்நிதி இருக்கு, கொஞ்சம் பாழடைஞ்ச மாதிரி. இறுக்கமா மூடிக்கிடக்கு. கோவிலை வலம்வந்தும் நம்மாளைக் காணோமேன்னு விசாரிச்சேன். 'வலப்பக்கம் மூலையில் தேடு'ன்னு உத்தரவாச்சு. நம்மாழ்வாரும் ஆண்டாளம்மாவும் இருட்டு மூலையில் ஒரு விளக்குக்கூட இல்லாமல் மூடுன டபுள் கதவுக்குப் பின்னே(-:. அந்த மண்டபம் முழுசும் கண்டாமுண்டான்னு மரச்சாமான்கள் அடைஞ்சு கிடக்கு. 'நேரடியாப் புருஷன் கவனிப்பு இல்லைன்னா இப்படித்தான்'. பௌர்ணமிக்குத் திறப்பாங்களாம். 'இப்போ வேணுமுன்னா திறக்கச் சொல்லவா?'ன்னு கேட்டார் பட்டர் ஒருத்தர். (அட! நம்ம முகம் முழுநிலவு போல பொழியுதா என்ன!!!!) வேணாம். கதியைப் பார்த்தால் மனசு தாங்காது........
டாக்டர் ஃபீஸ் ஒரு பக்கமா குவிஞ்சுகிடக்கு. ப்ளாஸ்டிக் பையில் இருந்து உப்பைக் கொட்டிட்டு அந்தக் காலிப் பொதியையும் அங்கேயே கடாசிட்டுப் போகுது நம்ம ஜனங்கள். நம்ம தோழிதான் முடிஞ்சவரை அவைகளைப் பொறுக்கி ஒரு குப்பைத் தொட்டியில் போட்டாங்க. (நான்? சரிவர செய்யறாங்களான்னு சூப்பர்வைஸ் செஞ்சேன்)
சிலவருசங்களுக்கு முன்னே பிரம்மோற்சவம் சமயம் ரத்தினக்கற்கள் பதிச்ச தலை அலங்காரக் கொண்டை ஒன்னு செஞ்சு பெருமாளுக்குச் சாத்தினாங்களாம். ஜிலுஜிலுன்னு கண்ணைப் பறிச்சது. அப்பவே அதுக்கு ரெண்டுகோடி ரூபாய் செலவுன்னு கணக்கு சொன்னார் நம்ம வண்டி ஓட்டுன டிரைவர். 'கும்பி கூழுக்கு அழுது கொண்டை பூவுக்கு அழுது' ன்னு சொல்லிவச்சது சரியா இருக்கே! ஸ்வாமிக்கு நகைநட்டு போட்டா அலங்காரமா, நமக்குப் பார்க்கவும் நல்லா இருக்குன்னாலும்...... அப்பழுக்கு இல்லாம கோவிலைச் சுத்தமா வச்சு எல்லா சந்நிதிகளையும் கோவில் நேரங்களில் திறந்து வச்சு குறைஞ்சபட்சம் ஒரு விளக்கேத்தி வச்சா சாமி வேணாமுன்னா சொல்லப்போறார்?
வெளிப்பிரகாரத்துலே ஒரு உச்சி மாடம் கட்டி பிரமாண்டமான ரெண்டு வெங்கல மணிகளைக் கட்டித் தொங்கவிட்டுருக்காங்க. சமீபத்துலே செஞ்ச திருப்பணி. ஆராய்ச்சி மணி போலவே இருக்கு. கோவிலில் மற்ற சந்நிதிகளில் இருட்டில் உக்கார்ந்துருக்கும் திருவுருவங்கள் எல்லாம் இதை அடிச்சு, நியாயம் கேட்டாக்கூட நல்லா இருக்குமேன்னு எனக்கு ஒரு தோணல்.
பழைய குளத்துக்கும் இப்போ இருக்கும் குளத்துக்கும் எவ்வளோ இடைவெளின்னு அந்தப் படிக்கட்டுகளைப் பாருங்க.
வெளியே வந்து, புஷ்கரணிக்குப் போனோம். பிரமாண்டமா இருந்து, இப்போ வத்திப்போன இடமெல்லாம் குறுக்குத் தெருக்களா மாறிக்கிடக்கு. நடுவில் நீராழிமண்டபத்தோடு குளம். இப்பவுமே பெருசாத்தான் இருக்குன்னா, முந்தி எப்படி இருந்துருக்குமுன்னு மனக்கண்ணால் பார்க்கலாம். திருக்குளம் ஸ்பெஷலா, வெல்லம் வாங்கிவந்து இங்கே கரைக்கணுமாம். நம்ம மனசுலே இருக்கும் தாபங்கள் எல்லாம் வெல்லம் கரைவது போல அப்படியே கரைஞ்சு போயிருமாம். (நல்லவேளை. இன்னும் குட்டியாக் குளம் வெட்டி இருந்து அதுலேயே கொஞ்சம் பால், காப்பிப்பொடி போட்டால்........) பெரிய பெரிய நீண்ட படிகள். ஜோடிகள், கடலைகள், இப்படி இது ஒரு திருவள்ளூர் பீச். பாவமோ புண்ணியமோ எதுவானாலும் அது இங்கே பலமடங்கா விருத்தியாகுமுன்னு நம்பிக்கை. எதுக்கும் வம்பு வேணாம்? புண்ணியமாவே இருக்கட்டும். நீராழிமண்டபம்.
பி.கு: வெளிச்சம் குறைவா இருந்ததால் ...... மணிரத்தினம் படங்கள்'' தான் எடுக்க முடிஞ்சது:-)
Posted by
துளசி கோபால்
at
12/01/2009 02:57:00 PM
22
comments
Links to this post
Labels: அனுபவம், டாக்டர் வீரராகவன், திருஎவ்வுள்ளூர்
Monday, November 30, 2009
செய்யும் வேலையில் கவனம் வேணும்
எந்த வேலை செஞ்சாலும் அதுலே எவ்வளவு கவனம் இருக்கணுமுன்னு இங்கே பார்த்தாலே புரிஞ்சு போகும்.கொடியிடை?
உனக்குத் தலையிலே எதாச்சும் இருக்கா?
கழுத்து ஏந்தான் இப்படி.....
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!
வாலோடுதான் நான் பேசுவேன்!குரங்குமாதிரிக் கையைக் காலை ஆட்டாமக் கொஞ்சம் சும்மாத்தான் இரேன்.
யக்கா...புள்ளையைக் கூட்டியாரேன்.கொஞ்சம் பேன் பார்த்துவுடேன்.
Posted by
துளசி கோபால்
at
11/30/2009 03:19:00 PM
30
comments
Links to this post
Labels: அனுபவம், குரங்கு I பேன், மல்லை
