நான் ஏற்கெனவே சொல்லலை..... இங்கே இருவரைத்தான் தெரியுமுன்னு..... அந்த இரண்டாமவரைக் காலையிலேயே செல்லில் கூப்பிட்டு சந்திக்க நேரம் இருக்குமான்னு கேட்டதுக்கு, அவுங்கெல்லாம் வெளியூரில் இருப்பதாகவும், மதியத்துக்கு மேலே ஊர் திரும்புவதாகவும் சொன்னார். மாயவரம் வந்து போனதைப் பதிவில் எழுதுனசமயங்களில் ..... நண்பர்கள் பலர் 'காளியாகுடி' போகலையான்னு 'அக்கறை'யோடு விசாரிக்கறதும்..... அதுக்கு வேளை வரலைன்னு நான் சொல்றதுமாவே போய்க்கிட்டு இருந்தது.
அதான் இப்போ லஞ்ச் டைம் வேற வந்துருச்சே.... அந்தக் காளியாகுடியை விடவேணாமுன்னு அங்கே போனோம். வலையாண்டவர் வழி காமிச்சார். ஏற்கெனவே சில பயணங்களில் வெளியே இருந்து பார்த்தமாதிரி இல்லைன்னு தோணுச்சு. உள்ளே போனால்..... நல்ல கூட்டம். மதிய சாப்பாட்டு நேரம் என்பதால்..... தட்டுத்தட்டாச் சோறே சோறு !
பணியாளரிடம்..... உங்க ஹொட்டேல் ஃபேமஸ் ஐட்டம் என்ன இருக்குன்னதுக்கு, ஒரு நிமிட் முழிச்சவர், அதெல்லாம் சாயந்திரம் தான். இப்போ சாப்பாடுதான் ஸ்பெஷல்னார்.
'எதுவுமே இல்லையா'ன்னதுக்கு ஊஹூம்.... 'உங்க ஹல்வா கூடவா ? ' உள்ளே போய் பார்த்துட்டு வரேன்னவர், இருக்குன்னார். நேத்து சமாச்சாரமா இருக்குமோன்னு நினைச்சாலும்.... இனிப்புக்கு 'தோஷமில்லை'ன்னு மூணுபேருக்கும் சொன்னேன். வந்தது..... சூடா இல்லை..... போகட்டும்.....ப்ச்.
நம்மவருக்கும் விஜிக்கும் தாலி மீல்ஸ், எனக்கொரு தயிர்சாதம். உண்மையில் எனக்கு இந்தியப்பயணத்தில் வெளியே தயிர் சாப்பிடவும் பயம்தான். நம்மவரின் வற்புறுத்தலால் தயிர் சாதத்துக்குச் சரின்னேன். மூணு பங்கு போட்டால் ஆச்சு. இல்லே ?
வேறெங்கும் கிளைகள் இல்லையாம்..... ரொம்ப நல்லது.....
இதுக்கிடையில் நம்ம இந்தியாவுக்குன்னு வச்சுருக்கும் செல்ஃபோனில் அப்பப்பத் தகவல்கள் வந்துக்கிட்டே இருக்கு. ரோமிங் ஃபோன் பயங்கர செலவுன்றதால்..... தனி செல் ஒன்னு, தாய்நாட்டுக்கு ! ஏர்ட்டெல்....
வந்தாச்சுன்னு தகவல் வந்ததும் கிளம்பிப்போறோம். நம்ம சீனிவாசன் இருந்தால்..... அட்ரஸ் சொல்லவே வேணாம்..... அந்தந்த ஊர்களில் எங்கெங்கே போவோம் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. இப்ப ? ஒருன் புள்ளையார் கோவில்பக்கம் இடம் போகணும் என்பதுதான் நினைவிருக்கு. செல்லில் விலாசம் வந்தது..... புள்ளையார் கோவில்.... கரெக்ட்.
கடைசியா எப்போப் பார்த்தோம்? வீட்டங்கங்களையெல்லாம் 2012 இலும் அபி அப்பாவைக் கிட்டத்தட்ட நாலு வருஷம் கழிச்சும் !!!
ஆனால் அவரை, மரத்தடிகாலம் முதல் தெரியும். அப்ப இருந்தே அபி அப்பான்னுதான் பதிவுகளே! தொல்காப்பியன் என்ற இயற்பெயர்(! ) நினைவுக்கே வர்றதில்லையாக்கும்.
முதல்முறை இங்கே
https://thulasidhalam.blogspot.com/2013/03/blog-post.html
இரண்டாம் முறை இங்கே
https://thulasidhalam.blogspot.com/2016/07/65.html
அக்கம்பக்கம் நிறைய வீடுகள் அடுத்தடுத்து வந்துருக்கு. ஆனாலும் வீட்டைச் சட்னு கண்டுபிடிக்க முடிஞ்சது. வீட்டுக்கு உதயசூரியன் போட்ட கம்பிகேட் ! நம்ம வரவை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கார் அபி அப்பா. உருவத்தில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் வரவேற்பறையில் மாற்றம் இருக்கு ! புது ஊஞ்சல் !
பதிமூணு வருஷங்களுக்கு முன் நான் பார்த்தக் குட்டிப்பொண்ணுக்குக் கல்யாணமாம்! முஹூர்த்தப்புடவை எடுக்க எல்லோருமாக் காஞ்சிபுரம் போய் இருக்காங்க. அபி அப்பா மட்டும் இன்றைக்குத் திரும்பியிருக்கார்.
அடராமா..... விவரம் முன்கூட்டித் தெரிஞ்சுருந்தால் தொந்திரவே பண்ணி இருக்கமாட்டோமேன்னு மனசுக்குள்ளே நொந்துக்கிட்டேன். இன்றைக்கு கோவிலில் இவுங்க வகைக் கட்டளை என்பதால் இவர் மட்டும் திரும்பினாராம். அப்பாடா.....நொந்த வலி கொஞ்சம் போச்சு.
குடும்ப விஷயங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம். மாப்பிள்ளை, மகள், நிச்சயதார்த்தப் படங்களையெல்லாம் செல்லில் காமிச்சார். நட்டுவை இளம் வாலிபனாப் பார்த்ததும் ஒரே ஷாக் ! இவ்ளோ பெரியவனா வளர்ந்தாச்சா !!!! காலம் எப்படி ஓடுது பாருங்க.
, வெத்தலைபாக்கு பழத்தோடு கல்யாணப் பத்திரிகையை நீட்டினார். ஏப்ரலில் கல்யாணம் வச்சுருக்காங்க. நாம் நியூஸி திரும்பியிருப்போம்..... அதுக்காக, அன்பும் பரிவும் குறைஞ்சுருமா என்ன ?
எல்லாம் அமோகமா நடக்கணுமுன்னு பெருமாளை வேண்டிக்கிட்டு ஆசிகள் வழங்கினோம். (கல்யாணப் படம் இது )
வழக்கம்போல் சில க்ளிக்ஸ். ஊஞ்சல் அட்டகாசமா இருக்கு. இந்த டிஸைன்தான் எனக்குப்பிடிக்கும். நம்ம வீட்டிலும் இதேதான். இப்ப வர்ற மாடர்ன் சமாச்சாரமெல்லாம் இப்படி ஸிம்பிள் & ஸ்வீட்டா இருப்பதில்லை.
சுமார் ஒரு மணி நேரம், கதையளப்பில் போனதே தெரியலை. என்ன ஒன்னு....அபி அம்மாவைப் பார்க்க முடியலையேன்னு கொஞ்சம் வருத்தம்தான். பெரியக்காவை நினைவுபடுத்தும் பெருந்தன்மை !
(அன்றும் இன்றுமுன்னு.... பழைய படங்களும் புதுப்படங்களுமாப் பதிவில் சேர்த்திருக்கேன்.)அங்கிருந்து கிளம்பி நேரா ராயாஸ் வந்துசேர்ந்தோம். வர்றவழியில் ஒரு இடத்தில் ஆஞ்சு..... என்ன ஊர்னு தெரியலை.....
நாளைக்கு இங்கே கும்மோணத்தில் இருந்து கிளம்புவதால்..... சாயங்காலம் ஒரு கோவிலுக்குப் போகணும்....
தொடரும்......... :-)

0 comments:
Post a Comment