Friday, July 29, 2016

விளநகர் வரதராஜர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 66)

கோவிலுக்கு எதிரே திருக்குளம். அதன் கரையில்தான் ஆஞ்சி இருக்கார், கோவில்முகப்பைப் பார்த்தபடி.  குளக்கரையில்தான் அந்தப் புதுக்கோவிலும் வந்துக்கிட்டு இருக்கு.
ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு நேரா கோவில் முகப்பை நோக்கி நடந்தோம். ராஜகோபுரம் எல்லாம் கிடையாது.  முகப்பு வாசல் கடந்தால்  வெளிப்ரகாரம். கொடிமரம். அதுக்கு அந்தாண்டை கருவறை முகப்பு மண்டபம் வந்துருது.

முகப்பு வாசலில் வரதராஜப்பெருமாள் கோவில் என்று எழுதி இருந்தாலும்.....  அங்கே ராமனும் சீதையுமா அரியாசனத்தில் இருக்க, ராமனுக்கு  வலதுபக்கம்      விஸ்வாமித்ரரும்   வில்லேந்திய லக்ஷ்மணனும்,   இடதுபக்கம் பரத சத்ருகர்களுமா இருக்காங்க. ராமர் கோவில் என்னும் கணக்குதான் போல! அதான் நேரெதிரா ஆஞ்சி இருக்காரே!

  அபி அப்பா நம்முடன் இருந்ததால்    சம்ப்ரதாயப்படி  முதலில் வெளிப்ரகாரம் சுற்றி வந்தோம்.  நாங்க மட்டுமுன்னா....  நேரா பாய்ச்சல் மூலவரண்டைதான்:-)

ரொம்பப்பெரிய கோவில் என்று சொல்லமுடியாது.  கும்பாபிஷேகம் கடைசியா நடந்து ஆச்சு 14 வருசம். (ராமர்ன்னதும் பதினாலு வருசம் வந்துருச்சு பாருங்க!) சுத்தமாத்தான் இருக்கு வெளிப்பக்கம்.

பெருந்தேவித் தாயார் தனிச்சந்நிதியில்.
கருவறை விமானம்,  வைகுண்டவாசல்.
கோவில் தேரும், கருடவாகனமும்  ஒரு பக்கம்  தகரக்கூரையின் அடியில்.

இந்தக் கோவில் தென் காஞ்சி என்று அழைக்கப்படுகிறதாம்.  ராமர், சீதை ஐம்பொன் சிலைகளை அகழ்ந்தெடுத்ததாக  அறிவிக்கும் ஒரு தகவல்!  வரதர்  காட்சி கொடுத்தது  ஜயிஷவிய முனிவருக்காம்.
இந்தப் பெயரை முதல்முதலாக் கேட்கிறேன். யார் இந்த முனிவராம்?  தெரிஞ்சவங்க  சொன்னால் நல்லது.

இந்தக்கோவிலையொட்டியே   ரெண்டு அக்ரஹாரங்கள் இருந்ததாம்.  அதில் இருந்த ஸ்ரீநிவாசப்பெருமாள்  இப்போ இங்கே வந்துருக்கார்.  அங்கத்து உற்சவரும் இப்போ இங்கேதான்.  மஹாமண்டபத்தில்   கூட்டத்தோடு கூட்டமா கூடி இருந்து  கொண்டாட்டம்.




சுற்றிவந்து கோவிலுக்குள்ளே போறோம்.  மஹா மண்டபம், அர்த்தமண்டபம் கடந்து அதோ உள்ளே ஆஜானுபாகுவாக நிக்கறார் பெருமாள். ஹைய்யோ......  என்ன ஒரு உயரம்! நெடுநெடுன்னு நிக்கறாரே!  பனிரெண்டடி உயரமாம்!
அவருக்கேற்ற மாதிரி  தேவியர் இருவரும் பொருத்தமான உயரத்தில்!
தீபாராதனை காமிச்சு, நமக்குத் தீர்த்தமும் சடாரியும் லபிச்சது.
அர்த்தமண்டபத்தில் தசாவதாரச் சிற்பங்கள்.  ஆங்....    நம்ம நரசிம்மர்!  மூக்கு இப்படித்தான் இருக்கணும்.










சுவரில் இருந்த பழைய கல்வெட்டு 1944 இல் கும்பாபிஷேகம் நடந்ததாச் சொல்லுது.  அந்த வருசம் மற்ற  வைதீக நாள்காட்டிகளில் என்னவா இருக்குமுன்னு பார்த்து வியப்புதான்.  சாலிவாஹன சகாப்தம் 1866 ஆம்!  அஞ்சு வெவ்வேற ஆண்டுக் கணக்குகள்!


பெருமாள் கோவில்களுக்கே உரித்தான ஒரு அலட்சியம்,  மூலவரைத் தவிர மற்றவர்களைக் கவனிக்காமல் போட்டு வைப்பது இப்படி  இது போன்ற கல்யாண குணங்களுக்கெல்லாம் குறை வராமல் அப்படிக்கப்படியே போட்டு வச்சுருக்காங்க :-(
கோவில்னா இப்படித்தான் இருக்கும் என்பதைப்போல பட்டாச்சார்யார் சந்நிதி  கம்பிக் கதவை மூடிட்டு  வெளிப்படியில்  வந்து உக்கார்ந்தார்.
விசேஷ நாட்களத்தவிரக் கோவிலுக்கு  வரும் பக்த ஜனம் குறைஞ்சுக்கிட்டே வருது இப்பெல்லாம்.....   ப்ச்.



இந்த உற்சவர் கையில் இருக்கும் வளைந்த பிரம்பு போல் இருக்கும் குச்சிக்குப் பெயர் செண்டு. இதைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம் ஒருமுறை வாசிக்க வாய்த்தது.  ' தருமன் எல்லாவற்றையும் இழந்ததோடு, மனைவியையும் விளையாட்டில் பணயமா வச்சுத் தோத்துப் போயிடறார். துரியோதனின் தம்பி துச்சாதனன்,  அண்ணனின் ஆணைக்கிணங்க  த்ரோபதியை  அவளுடைய அரண்மனையில் இருந்து  தலைமுடியைப் பிடிச்சு இழுத்து வரும் சீன். '

வில்லிபுத்தூரார் பாரதத்தில்,  'தாமரைக்கைச் செண்டால் அவள் பைங் குழல்பற்றி' எனக் கூறும் வரிகளில் வரும் செண்டு என்னும் வார்த்தைக்கு பொருள் பூச்செண்டு  என்றுதான் பலரும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  தமிழ் தாத்தா   உ.வே.சா, அது சரியான பொருளா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறார். பாரதக்கதையின்படி, சம்பவம் நடந்த சமயம் த்ரோபதி  மாதவிலக்கில் இருக்காள். அப்ப எப்படி தலையில்  பூ வச்சுக்கிட்டு   இருந்திருப்பாள்?  

அப்பதான் ஒருநாள் இங்கே இந்தக் கோவிலுக்கு  வந்துருக்கார். உற்சவ மூர்த்திக்கு ராஜகோபால் என்று பெயர் இங்கே. கையில் வளைஞ்ச தண்டு வச்சுருக்கார். அதைக் கவனிச்ச தமிழ்த் தாத்தா, அது என்னன்னு பட்டரிடம் விசாரிக்க,  அவர் சொல்றார் அதுதான் செண்டுன்னு.  மாடுமேய்க்கும் கோபாலன், மரத்தில் இருந்து  இலைதழைகளைப் பிடிச்சு இழுத்துப் பறிச்சு  மாடுகளுக்குக் கொடுக்கப் பயன்படுத்தும் தொரட்டி அது! 

ஆஹா....  இதை வச்சுத்தான் த்ரோபதியின் கூந்தலைப்பிடிச்சு இழுத்து வந்துருக்கான் துச்சாதனன். அதான் 'செண்டால் பைங்குழல்பற்றி 'என்பதற்குச்  சரியான பொருள்னு  புரிஞ்சதாம்.  தமிழ்த்தாத்தாவின் ஐயம் தீர்த்த பெருமாள்! 


ஆறுபாதி கிராமப் பகுதி இதெல்லாம்.  இன்னும் ஒரு நாலு கிமீ போயிருந்தால் செம்பொன்னார்கோவில் வந்துருக்கும். அப்ப  தெரியாததால்  போக விட்டுப்போச்சு.

அடுத்துப்போகும் கோவில் அபி அப்பாவின் ப்ரத்யேகக் கோவில். ஏற்கெனவே சாட் லைனில் ஒருக்கா சொல்லி இருக்கார்.  அப்போ  இந்தமாதிரி ஒரு பயணம் இருக்குன்னு  பேச்சு வந்தப்ப,  'சொல்லுங்க..எங்க ரூம் போடனும் கோபால் சாருக்கு? எந்த கோவில் போகனும்? ஆனா ஒன்னு...எங்க போனாலும் கிருஷ்ணா தான் சாப்பாடு தருமாம். மெனு எல்லாம் இப்பவே சொல்லிடுச்சு' அன்புக் கட்டளைகள்தான்!

மயிலாடுதுறைக்கு வர்ற தேதி  சரியாத் தெரியாததால்.....   அப்ப  ஒன்னும் சொல்லலை.
இங்கிருந்து கிளம்பின அடுத்த இருபதாவது நிமிசத்தில் அபி அப்பாவின் கோவில் வாசலில் இருந்தோம்!

தொடரும்...........  :-)



14 comments:

said...

கும்பாபிஷேக நாளை அந்தந்த ஆண்டு என்ற நிலையில் இங்கிலீஷ் ஆண்டு என்று குறிப்பிட்டது வித்தியாசமாக இருந்தது. தங்கள் பதிவால் மற்றொரு புதியகோயிலைக் கண்டோம். நன்றி.

said...

தொடருங்க.. நாங்களும் அபிஅப்பா கோவிலைப் பத்தி படிக்க வெயிட்டிங்.

said...

தாமரைக்கை செண்டால் பைங்குழக் பற்றி... அர்த்தம் தெரிந்து கொண்டேன்...தமிழ் தாத்தாவின் ஐயத்தை தீர்த்த ராஜகோபாலனை நாங்களும் சேவித்துக் கொண்டோம்..தொடர்கிறேன்.

said...

கண் கவரும் புகைப்படங்கள். "செண்டால் பைங்குழல் பற்றி" மிக சுவாரஸ்யமான தேடல். உ.வெ.சா ஆசீர்வதிக்கப் பட்டவர். சரஸ்வதி கடாக்ஷம் அல்லவா?

said...

சின்னக் கோயில்களும் ஒரு அழகுதான்.

மூக்கு இப்பிடிதான் இருக்கனும்னு எடுத்துக்காடு ஃபோட்டோ காட்டீட்டீங்களே டீச்சர். இதை பொம்மை செய்றவர் பாக்காமப் போயிட்டாரே.

செண்டு என்பது ஒருவகை ஆயுதமும் கூட. பாண்டிய மன்னர்கள் நிறையப் பயன்படுத்திய ஆயுதம்.

கைச்செண்டால் சரி... அதென்ன தாமரைக் கைச் செண்டால்? துச்சாதனனுடைய கையைத் தாமரையோடு ஒப்புமைக்க என்ன காரணம்? தாமரை போன்ற கையை உடைய துச்சாதனன் கையில் செண்டு இருந்திருக்கலாமோ? அந்தக் காலத்து மைனர் மாதிரி கையில் மல்லிகைப்பூச்சரம் கட்டிக்கொண்டிருந்திருப்பானோ அவன்?

செண்டு என்ற சொல்லை தொரட்டியோடு சேர்த்து நான் எங்கும் கேட்டதில்லை. நான் கேட்டதில்லை என்பதால் அப்படி இருக்கக்கூடாது என்றில்லை. செண்டு என்று ஒரு ஆயுதம் இருக்கும் போது, செண்டு என்று தொரட்டியையும் குறிப்பதற்கு இந்தக் கோயில் ஒன்றுதான் ஆதாரமா?!?! தெரியல. முருகன் விட்ட வழி.

said...

புதியதாய் ஒரு சொல் விளக்கம், சில கோவில் கதைகள் என பலவும் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி......

said...

சின்ன கோவில் என்ராலும் அழகு .அந்த வெளி ப்ரகாரத்தில் காலை வேளெயில் வெற்றூ காலூடன் நடப்பது ஒரு சுகம்.கருடன் வாகனம் கம்பீரம்.தொடர்ந்து வருகிரென்

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பழைய கோவில்தான். ஊருக்கு ஜஸ்ட் வெளியே இருப்பதால் அவ்வளவாக வெளியில் தெரியலை போல!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

இந்நேரம் அபி அப்பா கோவில் தெரிஞ்சுருக்குமே! நாந்தான் பதில் சொல்ல தாமதமாகிருச்சு :-(

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நானும் தமிழ்த்தாத்தா ஐயம் எங்கோ வாசித்ததுதான்!

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க மோகன்ஜி.


உண்மைதான். தமிழ்த்தாத்தா ஆசீர்வதிக்கப்பட்டவரே!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

தொரட்டி என்னும் பொருளில் செண்டைச் சொன்னது நாந்தான். அப்படி இருக்குமோ என்ற ஊகம்தான்! அதிகப்பிரசங்கியா இருக்கேன் பாருங்க.......

தாமரைக் கை! துச்சாதனின் கையில் அப்ப தாமரை இருந்ததோ?

பாண்டியர் பயன்படுத்திய செண்டு கிடைக்குமான்னு தேடணும். எங்கேயாவது கோவில் சிற்பங்களில் கிடைக்காமலா போகும்? முருகன் காமிச்சுக் கொடுப்பான்! பொறுத்திருப்போம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பல சமயங்களில் தேடும்போது, ஒரு சம்பவத்துக்கு நாலைஞ்சு வெவ்வேற கதைகளும் கிடைச்சுருது!

said...

வாங்க மீரா பாலாஜி.

தொடர்ந்து வருவது 'மகிழ்ச்சி'!