Friday, January 27, 2017

சாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்! ( நேபாள் பயணப்பதிவு 7 )

அடுத்த அரைமணி நேரப்பயணத்தில் கடைகள் அதிகமா இருக்கும் ஒரு பகுதிக்குள் நுழைஞ்சுருக்கோம். சூர்யா லாமா.... மேன் ஆஃப் ஃப்யூ வேர்ட்ஸ் என்பதால்.... வாயைப்பிடுங்கி சேதி வாங்கவேண்டி இருக்கு.  போதிநாத்/ போதாநாத் ஸ்தூபா வந்து சேர்ந்தாச்சு.  மெயின் ரோடில் இருக்கும் இன்னொரு தெருவுக்குள் நுழைஞ்சு நடக்கணும்.

கண் எதிரில் பிரமாண்டமான வட்டமான கட்டடம். நிலநடுக்கத்தின் பாதிப்பு இங்கே அதிகம். ஆனாலும் பழுதுபார்க்கும் வேலையை உடனடியாத் தொடங்கி இருக்காங்க.

உலகப்பாரம்பரியச் சின்னங்களில் சேர்க்கப்பட்டுருக்கு. உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் உண்டு. நமக்கு ஆளுக்கு அம்பது ரூபாய். தெருவின் ஆரம்பத்துலேயே அலங்கார வளைவு வச்சு, அதன்பக்கத்துலே டிக்கெட் கவுன்ட்டர்.
இந்த வட்டமான அமைப்பை வலம் வர்றது முக்கியம். பரிக்ரமா என்று சொல்றாங்க. நெடுக ப்ரேயர் வீல் என்ற  அமைப்புகள். இதுலே ஒவ்வொன்னும் மந்திரங்களின் சக்தி நிறைஞ்சதாம். ஒருக்கா சுத்திவிட்டா   கோடி  மந்திரம் ஜெபிச்ச பலன். கண்ணில் பட்ட சக்கரத்தையெல்லாம் சுத்திக்கிட்டே போனேன்னு  உங்களால் ஊகிக்க முடியாதா என்ன? :-)

சுத்துச்சுவர் போலக்கட்டி அங்கங்கே ஜன்னலாட்டம் வச்சுருக்காங்க. சுவருக்கு அந்தாண்டை வரிசையா பிரார்த்தனைச் சக்கரங்கள். ஒவ்வொரு ஜன்னலுக்கும் அஞ்சுன்னு....  கம்பி வழியாக் கைநீட்டிச்   சுத்திவிடலாம். ஆச்சு அஞ்சு  கோடி. அடுத்த ஜன்னலில் வரவு இன்னும் ஒரு அஞ்சு  கோடி. கோடிகளைச் சேர்த்துக்கிட்டு நகர்ந்து போறோம்...  மொத்தம் நூத்தியெட்டு சக்கரம் இருக்குன்னு நினைக்கிறேன். உள்பக்கமாப் போயிருந்தாத்தான் என் வழக்கப்படி எண்ணி இருப்பேனே :-)

ஒருமுறை இதை வலம் வந்தாலே  செஞ்சபாவம் எல்லாம் தொலைஞ்சு போயிருமாம். ஒரு சமயம் ரொம்ப கெட்ட மனுசன் ஒருத்தன் இருந்தானாம். முகம் எப்பவும் கடுகடுன்னே இருக்குமாம். அன்பா ஒரு வார்த்தை வாயிலே இருந்து வராதாம். எதுக்கெடுத்தாலும் கெட்ட பேச்சு, அடுத்த உயிரை இம்சிக்கிறது, பொறாமை, ரொம்பவே சுயநலம்னு எல்லாக் கெட்ட பழக்கங்களும் சேர்ந்த ஒருத்தன் இவன். போற நேரம் வந்ததும் போய்ச்சேர்ந்தான். இவனுடைய குணத்துக்கு நேராப் போய் விழுந்தது நரகத்தில்தான். அங்கேதான் விசாரணை நடத்தி, நம்ம பாவபுண்ணியத்துக்குத் தகுந்தமாதிரி மேற்கொண்டு  தண்டனைகளோ, சௌகரியங்களோ கிடைக்கும். இவனுடைய குற்றப்பத்திரிகையை வாசிச்சு முடிச்சுத் தண்டனை  இதுன்னு சொல்லப்போகும் சமயம் அங்கே புத்தர் வந்துட்டார்.

இவனைப் பார்த்ததும், 'கடுமையான தண்டனை இவனுக்குத்  தேவை இல்லை. இவன் பாவி இல்லை'ன்னு சொல்லி இருக்கார். 'என்னடா இது....  இவன் பண்ணாத பாவமில்லை... இவனுக்குப்போய்னு....  தயங்கும்போது சொன்னாராம்... இவன்  போதாநாத் ஸ்தூபாவை  ஒரு முறை வலம் வந்துருக்கான்னு!  அதனால் செஞ்ச அத்தனை பாவமும் போயே போச்!

இவனுக்கே ஆச்சரியமாப் போச்சு. நரகம் இல்லைன்றது மகிழ்ச்சியான சமாச்சாரம் என்றாலும் கூட... அதைவிட தான் எப்போ ஸ்தூபாவை வலம் வந்தோம்னு  தெரிஞ்சுக்கலைன்னா மண்டை வெடிச்சுடும்போல இருக்கு. புத்தரிடமே கேட்டுட்டான்....   எப்பங்க நான் வலம் வந்தேன்னு?  அவர் சொல்றார்.... 'நீ ஒரு நாயைக் கல்லால் அடிக்கப்போனப்ப அது  ஸ்தூபாவைச் சுத்திக்கிட்டு ஓடுது. நீ விடாம அதை எப்படியாவது அடிக்கணுமுன்னு  அதன் பின்னாலேயே ஓடுனே பாரு.. அப்ப' னு!

ஆஹா....   இனி   நமக்கு நரகமே இல்லைன்னு எனக்கு நிச்சயமே ஆகிருச்சு. 'ஓம் மணி பத்மே ஹம்'னு மந்திரத்தை வேற சொல்லிக்கிட்டேக் கைக்கு ஆப்ட்ட   சக்கரத்தையும் சுத்திக்கிட்டே போய்க்கிட்டு இருக்கேன்!
இந்த ஸ்தூபாவின் விளக்கங்கள் எல்லாம் அங்கங்கே தகவல் பலகைகளாக வச்சுருப்பதால் நமக்குப் போற போக்குலேயே கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியுது.  பூட்டான்  நாட்டு புத்த மதத்தினர் கட்டுனது இது!

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. புத்தர்னு நாம் இப்போ சொல்றோமே அவர் மட்டும் புத்தர் இல்லையாமே....     அவர் காலத்துக்கு முன்னேயே  இருபத்தியெட்டு புத்தர்கள் இருந்துருக்காங்களாமே!   நமக்குத் தெரிஞ்ச கௌத்தமர் என்ற புத்தரைத்தான் சாக்கியமுனின்னு குறிப்பிடறாங்களோ? அப்ப நம்ம புத்தர் இருபத்தியொன்பதாவது புத்தரா?  அப்ப ஏன் முப்பதாவது புத்தர் இன்னும் அவதரிக்கலை....   புத்தமதத்துக்குள்ளே புகுந்து பார்க்க ஆசையா இருந்தாலும்.... அதுவும் ஒரு பெரிய சமுத்திரம் என்பதால்.... மூழ்கிப்போய் என்னையே தொலைச்சுருவேனோன்ற பயத்துலே கரையிலே நின்னுகிட்டே எதாவது தெரியுதான்னு பார்க்க வேண்டியதுதான்....  பெருமாளே.... எதுக்கு இப்படி என் மனசை அலைய விடுகிறாய்?


முந்திக்காலத்துலெ பூட்டானில் இருந்து காத்மாண்டு நிலப்பகுதிக்கு  வியாபாரம் செய்யன்னு வந்துபோய்க்கிட்டு இருந்த பூட்டான் பௌத்தர்களுக்கு இந்த ஸ்தூபா ரொம்பவே விசேஷப்பட்ட இடமா இருந்ததால் இங்கே அக்கம்பக்கத்துலேயே குடி இருப்பை ஏற்படுத்திக்கிட்டாங்களாம்.  அப்புறம் 1959லே சீனர்கள் திபெத்தைப் பிடிச்சு வச்சுக்கிட்டதும், அங்கிருந்து அகதிகளாக ஏகப்பட்ட திபெத்திய பௌத்தர்கள் காத்மாண்டு வந்து சேர்ந்ததும்...அவுங்களுக்கும் இது முக்கியமான வழிபாட்டுத் தலமா ஆகி இருக்கு!
நிறைய நாய்கள்  அதுபாட்டுக்கு  ப்ரேயர்வீலாண்டை கிடக்குதுகள். நம்ம சுத்தல் கோடிகளில் சில கோடிகள் அவுங்களுக்கும் போய்ச்சேரட்டும்..... பாவம்....



இந்த ஸ்தூபாவின் வெளியில் வளாகத்தின்  வெளிவட்டத்தில் நினைவுப்பொருட்கள், புத்தமத சம்பந்தமுள்ள  கலைப்பொருட்கள் இப்படி ஏராளமாக் கொட்டிக்கிடக்கும் கடைகள். கண்ணால் மட்டுமே பார்க்கணும் என்ற நிபந்தனை எனக்கு:-( பெரிய பெரிய யானைகளும் சிலைகளுமா....  சீச்சீ.... இந்தப் பழம் ரொம்பவே புளிப்பு......

வாங்க நாம் ஸ்தூபாவைப் பார்க்கலாம்.  ஏராளமான மணல் மூட்டைகளை அங்கங்கே வச்சுருக்காங்க. அதிர்வைத் தடுப்பதற்காக இருக்கலாம்.  ட்ரக்குகளில் இன்னும் மூட்டைகள் வந்து இறங்கிக்கிட்டே இருக்கு.
வலம் வந்துக்கிட்டு இருந்த நாங்க ஒருவாசலுக்கு வந்துருந்தோம். வாசலில் செக்யூடிட்டி  நிக்குது. உள்ளே போக அனுமதிக்கறாங்க. வாசலுக்கு முன்னால் இருக்கும் சந்நிதியில் மூணு பெண்கள் விளக்கேத்தி வச்சுக்கிட்டு இருந்தாங்க.


மேலே  மாடங்களில் சாமிகள், பக்கத்துலே மேடையிலே மணிகள்!  அங்கிருக்கும் சாமி சிலைகளில் எல்லாம் குங்குமம் பூசி வச்சுருக்காங்க. என்ன சாமி, யார்னு விவரம் ஒன்னும் இல்லை....  'பழுது பார்க்கும் வேலைக்கிடையில் பயணிகளைக்  குறைஞ்சபட்சம் உள்ளே விட்டதே அதிகம்.  இதுலெ விளக்கம்வேறு சொல்ல ஆளில்லைன்னு அழறே....'   கேட்டது மனத்தின் குரல்தான். கூடவே இன்னொன்னும் சொல்லுச்சு... உங்க நியூஸியிலே எர்த்க்வேக் வந்தாட்டு மூணுவருசம் சிட்டிக்குள்ளே யாருக்குமே அனுமதி இல்லாம மூடி வச்சது மறந்து போச்சா? இப்பக்கூட பழுது பார்க்கும் வேலை நடக்கும் இடத்தில் கால் வைக்க விடுவாங்களா என்ன? பாதுகாப்பு பாதுகாப்புன்னு பூச்சி புடிச்சுக்கிட்டு இருப்பதைப் பார்க்கறே தானே?  ஆமாம்னு ஒப்புக்கொள்ள வேணும்தான். கப்சுப்.....
ஒரு பெரிய அறையில் கூரையை எட்டிப்பிடிக்கும் அளவில் ரெண்டு ப்ரமாண்டமான ப்ரேயர் வீல் வச்சுருக்காங்க.  அதையும் சுத்திட்டோம்!  மேலே படிஏறிப்போய்  முதல் நிலை வரை பார்க்க முடிஞ்சது. நேரெதிரா இருக்கும் கட்டடத்தில்தான் கோவில் நடக்குது இப்போ.

கிண்ணத்தைக் கவுத்து வச்சாப்லெ இருக்கும் அமைப்புக்கு மேலே  சதுரமா இருக்கும் ஒரு அமைப்பு. இதுலே நாலு பக்கத்துலேயும் ரெவ்வெண்டு கண்கள்!
சாமி நம்மைப் பார்த்துக்கிட்டே இருக்கார்னு நாம் சின்னப்புள்ளைகளா இருந்தப்ப நம்ம தாத்தா பாட்டி சொன்னதை,  அப்போ நம்புனமாதிரி இப்பவும் நம்பணும்.  புத்தரின் கண்கள்! கண்களுக்கு இடையில்  கொஞ்சம் கீழே  கேள்விக்குறி போல ஒரு அடையாளம்.  மூக்கு இருக்கற இடம்? மூக்குன்னே வச்சுக்கலாம்:-) ஆனால் இது மூக்கு இல்லை(யாம்!)நேபாள மொழியில் எண் ஒன்று என்பதை இப்படித்தான் எழுதுவாங்களாம். நம்பர் ஒன்!  அப்ப அது ஒன்னுன்னு சொல்லுது! எது ஒன்னு? நாமெல்லாரும் ஒன்னு. ஒத்துமையைக் குறிப்பிட,  'ஒன்னாயிருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும் 'என்று சொல்லுது!
இந்த சதுரத்துக்கு மேலே இன்னொரு கோபுர அமைப்பு.  மேலே போகப்போக அளவு குறுகுதே தவிர நாலு பக்கமும் சதுரமாவே இருக்கும் பதிமூணு அடுக்குகள்.  இதுக்கு மேலே ஒரு தாமரை. அதுக்கும் மேலே ஒரு குடை. அப்புறம்  கடைசியில் எல்லாத்துக்கும் மேலே ஒரு கும்மாச்சின்னு  அடுக்கடுக்கா இருக்கு! இதை அழகா விவரிச்சு இருக்கும் ஒரு படம் கூகுளார் அருளினார். படத்தின் ஓனருக்கு நம் நன்றிகள்.

  நிலம், நீர், நெருப்பு, வளி , வான்  இப்படிப்  பஞ்சபூதத்தைக் குறிக்கும் அடையாளங்கள் கூட இதுலே இருக்காமே!!!

சரித்திரம் இப்படிச் சொல்லுதுன்னு  நம்ம கோபு சொல்றார்!   கோபாலராஜவம்சாவழியில் லிச்சாவி அரசர்கள் சிவதேவா, மானதேவா ஆட்சி காலத்துலே (அஞ்சாம் ஆறாம் நூற்றாண்டுகள்)போதிநாத் புத்தமதம் நிறுவப்பட்டதுன்னு!  அதுக்குப்பின் நாம் இப்போ பார்க்கும்  இந்த ஸ்தூபாவை பதினாலாம் நூற்றாண்டுலே கட்டி எழுப்பி இருக்காங்க.

பூட்டான் நாட்டுச் சரித்திரக்குறிப்புகளில் வேற வகையில், வேற காலக்கட்டத்தில் இன்னும் ஒரு நூற்றாண்டு தள்ளி கட்டுனதுன்னு இருக்காம்.

பூட்டான் நாடுன்னதும்  இது சம்பந்தப்பட்ட கதையொன்னும் வாசிச்சேன். ஒரு தேவதை, எதோ பாவம் செய்யப்போய் மனித உயிரா பூமியில் வந்து பூட்டானில் பிறந்துட்டாள். ரொம்ப சாதாரண எளிய குடும்பமாம்.  அவளுக்கு நாலு  கணவர்கள். ஒவ்வொரு கணவனிடத்திலும்  ஒரு பிள்ளைன்னு நாலு மகன்கள். (ஆஹா... பூட்டான் நாட்டுப் பாஞ்சாலி! )  இவள்தான் ஒரு காலத்துலே  இந்தக் கோவிலைக் கட்ட ஆரம்பிக்கிறாள்.  நாலுவருசமா வேலை நடக்குது. நாலாவது வருசம் முடிஞ்ச கையோடு இவளுடைய ஆயுசும் முடிஞ்சுருது. கட்டடம் இன்னும் பூர்த்தி ஆகாத நிலையில் இவளுடைய நாலு பிள்ளைகளும் சேர்ந்து இன்னும் மூணு வருசம் உழைச்சு இதைக் கட்டி முடிக்கறாங்க. ஆகமொத்தம் ஏழு வருசம் ஆகி இருக்கு இதைக் கட்டி முடிக்க!

இவுங்களுக்கு ஒரு நம்பிக்கை என்னன்னா....  மேலோகத்தில் இருக்கும் தேவர்களும், கடவுளர்களும்தான்   இந்த போதா ஸ்தூபாவில் புத்தமத லாமாக்களா அவதரிக்கிறாங்களாம். அப்போ  நம்ம சூர்யா லாமா?

ஸ்தூபாவின் மேல்பாகம் நிலநடுக்கத்தில் உடைஞ்சு போனதால் திரும்பப் புதுசாக்கட்டிக்கிட்டு இருக்காங்க. கட்டி முடிச்சுட்டாங்க போல... ஆனால் மக்கள் பார்வைக்குப் படாமல் திரை போட்டு வச்சுருக்காங்க. முழு வேலைகளும் முடிஞ்சு திறப்பு விழா நடக்கும்போது திரையை எடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன். அதுவரை புத்தர் உக்கார்ந்துருப்பார்!
நிலநடுக்கத்துக்கு முன்னால் இருந்த ஸ்தூபாவின்  இந்தப் படத்தை வலையில் இருந்து எடுத்துருக்கேன். கண்ணு தெரியுதோ?

கீழே இறங்கி வந்து எதிர்வரிசையில் இருக்கும் கோவிலுக்குப் போறோம். இடதுபக்கம் இருக்கும் ஒரு அறையில் பெரிய ப்ரேயர் வீல்!  உம்.... சுத்து சுத்து சுத்திக்கோ.....
மாடி ஏறிப்போகும் வழியில் சுவற்றில் புத்தர் கதைகள் பலதும் சித்திரங்களாக! மாடி ஹாலில் கோவில் ! அவலோகிடேஷ்வரா
  (Avalokiteshvara) இருக்கார். இவரை நம்ம தாய்லாந்து, பாலி, கம்போடியாப் பயணங்களில் தரிசனம் செஞ்சுருக்கோம்!
புத்தபிக்ஷுக்கள் பலர் வரிசையா உக்கார்ந்து  அவர்கள் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இந்தக் கோவில்களில் வெளிநாட்டினருக்கும் அனுமதி உண்டு என்பதால் வெள்ளைக்காரப் பயணிகள் அதிகம் இருந்தாங்க.  படம் எடுத்துக்க தடை ஒன்னும் இல்லை.


ஸ்தூபா மாடியில் இருந்து இந்தக் கோவிலைக் க்ளிக்கியது  மாதிரி, இங்கிருந்தும் ஸ்தூபாவை க்ளிக்கினேன்.  பழுதுபார்க்கும் வேலைகள் மும்முரமாத்தான் நடக்குது. இன்னும் ஒரு வருசத்தில் வேலை முடிஞ்சுரும்போல!  செக்யூரிட்டிகளுக்குத் தனியா பந்தல் போட்டு வச்சுருக்காங்க, வெயிலுக்குப் பாதுகாப்பா!  அனாவசிய நாட்டாமை பண்ணாம எல்லோரும் அமைதியாத்தான் இருந்தாங்க.
கீழே பரிக்ரமா போகும் மக்கள் ஒன்னு ரெண்டுபேர்  அப்பப்ப வலம் போய்க்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் பாதியில் வலத்தை விட்டுட்டு எதிர்ப்பக்கம் வந்துட்டேனேன்னு தோணுச்சு. மீதி வலத்தை முடிச்சோம், சக்கரத்தைச் சுத்தாமல்....

ஒன்வே என்பதால் தெருமுனையில் வண்டியை நிறுத்தி இருக்காராம் சூர்யா லாமா. தேடிப்போய் ஏறி லெமன்ட்ரீக்கு வந்து சேர்ந்தோம். ப்ரகாஷ் இருந்தார்.  பயணத்திட்டத்தை  இன்னொருமுறை சரி பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு, பெரிய பெட்டிகளை அங்கேயே விட்டுட்டு ஆளுக்கு ஆறு கிலோ எடையுள்ள பைகளை  எடுத்துக்கிட்டு இதோ ஏர்ப்போர்ட்டுக்குக் கிளம்பியாச்சு.

எதிரே வரப்போகும் புது ஹொட்டேலில்  சின்ன  ஸ்தூபா கட்டும் வேலை  இன்னும் முடியலை :-)

தொடரும்..........:-)


15 comments:

said...

புதிதாக ஒரு கோவிலைப்பற்றி அறிந்துகொண்டேன். ப்ராப்தம் இருந்தால் தரிசனம் கிட்டும். எழுத்து ஃப்ளோ நல்லா இருக்கு. "சாராலி"யை "பாஞ்சாலி"ன்னு குறிப்பிட்டிருக்கீங்களே.

said...

//கெட்ட மனுசன் ஒருத்தன் இருந்தானாம். முகம் எப்பவும் கடுகடுன்னே இருக்குமாம். அன்பா ஒரு வார்த்தை வாயிலே இருந்து வராதாம். எதுக்கெடுத்தாலும் கெட்ட பேச்சு, அடுத்த உயிரை இம்சிக்கிறது, பொறாமை, ரொம்பவே சுயநலம்னு எல்லாக் கெட்ட பழக்கங்களும் சேர்ந்த ஒருத்தன் இவன்.//

அப்போ ஒருத்தன். இப்போ எல்லாருமே (including me) இப்படித்தானே இருக்கோம். இல்லியா ?

said...

//நிறைய நாய்கள் அதுபாட்டுக்கு ப்ரேயர்வீலாண்டை கிடக்குதுகள். //

நாயை அடிக்கக் கல்லோட துரத்தும்போது ஸ்தூபாவைச் சுத்தி வந்ததால சொர்க்கம் நிச்சயமாச்சுன்னு கதை இருக்கறதால அதே மாதிரிச் செய்ய விட்டு வச்சிருக்காங்களோ!

நிறைய படங்களும், நிறைய விவரங்களும்! சுவாரஸ்யம்!

said...

அழகான குறிப்புகள், தகவல்கள். நேபாலை உங்கள் மூலம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அழகான கோயில்!!!! நேரில் பார்க்க சான்ஸ் கிடைக்குதானு பார்க்கணும்...

said...

கீழைக்கலாச்சாரங்களில் கதைகளுக்குப் பஞ்சமில்லை

said...

நிறைய படங்கள்.... நன்றி.

தவாங்கில் பார்த்த புத்தர் கோவில் நினைவுக்கு வந்தது...

said...

அருமை..

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆஹா.... எங்க பக்கம் Sarah Lee ஒரு ஃபேமஸ் ப்ராண்ட். ஐஸ்க்ரீம் கேக் ஸ்பெஷலிஸ்ட். :-)

said...

வாங்க விஸ்வநாத்.

கலி முத்திண்டு வர்றதே.... அதுதான் ....!

said...

வாங்க ஸ்ரீராம்..

இங்கே நாயைக் கண்டால் கல்லைக் காணோம் !!!

ஆனாலும்விடாமல் வலம் வந்துட்டேனே :-)

said...

வாங்க துளசிதரன்.

எல்லாம் அவன் செயல். இத்தனை வயசுக்கு என்னைக் கூட்டிக்கிட்டு போயிருக்கானே!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மேலைக் கலாச்சாரங்களில் மட்டும் கதைகளுக்குப் பஞ்சமா என்ன? :-)

மனுசன் கற்பனைக்கு எல்லாமும் ஒன்னுதான் !

said...

வாங்க வெங்கட்நாகராஜ்.

அநேகமா புத்தர் கோவிலுக்குள்ளில் எல்லாம் ஒன்னுபோலவே இருக்குல்லே!

said...

வாங்க சாந்தி.

நன்றிப்பா!

said...

இங்கு நான் கிளிக்கியவை:

https://photos.app.goo.gl/KoYo2KQD71kq45yCA