Monday, January 30, 2017

அம்மனுக்குக் கோவம் வந்தாலும் ஊரே வெள்ளக்காடுதானாம்! ( நேபாள் பயணப்பதிவு 8)

நாம் நேபாளுக்கு வந்த காரணத்துக்கான பயணம் இதோ இந்த நிமிட்தான் ஆரம்பிக்குது:-) யேட்டி  (Yeti)ஏர்லைன்ஸ்லே நமக்கு டிக்கெட் போட்டுருக்கார் ப்ரகாஷ். உள்நாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலையும், வெளிநாட்டினருக்கு அதைப்போல ரெண்டு மடங்குமா இருக்கு. இந்தியர்களுக்கு அநேகமா உள்நாட்டுப் பயணிகளுக்கான சலுகை உண்டு.
ஏற்கெனவே  இது கொஞ்சம் ஆபத்தான பயணமுன்னு கேள்விப்பட்டதை நம்ம ப்ரகாஷ் உறுதிப்படுத்தினார். அதான் அப்பப்ப பத்திரிகையில் சேதி வருதாமே! இப்ப நாம் போக்ரா என்ற ஊருக்குப் போறோம். இங்கே  கார்லே  போக ஆறுமணி நேரம் ஆகுது.  போறவழியில் ரொம்ப அழகான இடங்கள் எல்லாம் பார்க்கலாமுன்னு கேள்வி. பஸ் போக்குவரத்தும் உண்டு. நேத்து நம்மை லெமன்ட்ரீயில் வந்து சந்திச்ச துர்கா, பஸ்ஸுலேதான் போயிருக்கார். நம்மை போக்ரா ஏர்ப்போர்ட்டில்  சந்திப்பார்னு  ஏற்பாடு.
காத்மாண்டு உள்நாட்டு முனையம் நம்முர் போலவேதான்... பஸ் ஸ்டாண்டு. நல்ல கூட்டம். குட்டிக்குட்டி விமானங்கள்  பல இடங்களுக்கும்  போய்வருது. செக்யூரிட்டி எல்லாம் ஒன்னும் பெருசா இல்லை. நம்ம ஃப்ளைட்  ஒன்னேமுக்காலுக்கு. டைம்டேபிள் சொல்ற டைமுக்கு இங்கே எதுவும் நடக்காதாம். எவ்ளோ லேட்டுன்னு தெரிஞ்சுக்கத்தான் அந்த டைம்டேபிள். நம்ம ப்ளேன் இன்னும் வந்தே சேரலை.  வந்துருச்சுன்னா அரைமணியில் கிளம்பிருமாம்.

இப்போ மணி ஒன்னரை. பகல் சாப்பாடு என்ன கிடைக்குமுன்னு பார்த்தால்.... ஒன்னும் எனக்கு சரிப்படலை. நம்மவர்தான் ஒரு வெஜிடேரியன் மோமோ  வாங்கிக்கிட்டார். பார்க்கவே ரொம்ப அழகா இருந்துச்சு.  கூடவே மஞ்சள் கலரில் ஒரு ஸாஸ், தொட்டுக்கன்னு  கொடுக்கறாங்க. பிரிச்சு வாயில் வச்சாரோ  இல்லையோ....    உச்சந்தலையில்  மிச்சம் மீதி இருக்கும் தலைமுடிகள் எல்லாம் அப்படியே நட்டுக்கறது.... காரமாம். கண்ணெல்லாம் சிவந்து,  கண்ணீர்  கரை கட்டுது.  இத்தனைக்கும் இது  வெரி மைல்ட்  !   நேபாளிகள் பயங்கரமா காரம் சாப்பிடறாங்க. ஆந்த்ரா காரம் எல்லாம் ஜூஜுபி :-)
அடுத்த வாய்க்கு, வாயே இல்லாமப்போச்சு. ஒன்னும் வேணாம். தண்ணி குடிக்கலாம். ராத்ரி வாங்கி வச்ச பிஸ்கெட் பாக்கெட் செக்கின்லே போயிருச்சேன்னு  இன்னொரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கிட்டேன். ஆளுக்கு ரெண்டு.   எல்லோரும் அவுங்கவுங்க போகும் ப்ளேன் வந்துருச்சா, வந்துருச்சான்னு எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒருவழியா யேட்டி வந்து சேர்ந்து,  நாம்  நடந்துபோய்  உள்ளே  உக்கார்ந்தோம். ஸீட் நம்பரெல்லாம் கிடையாது. அவரவர் சௌகரியம்.  ஒருபக்கம் ஒத்தை வரிசையும் அடுத்தபக்கம் ரெட்டை வரிசையுமா இருக்கு. நாங்க ஒத்தை வரிசையில் உக்கார்ந்தோம். ஆளுக்கொரு ஜன்னல் :-)
ரெண்டு முட்டாய்,  சின்னதா ஒரு நிலக்கடலை பாக்கெட், ஒரு  அரை டம்ப்ளர் தண்ணி  கொடுத்தாங்க. யேட்டியை இன்னும் பார்க்கலையேன்னு புதுக்கவலை :-)     அரைமணி நேரத்துக்கும் குறைவான ஃப்ளைட்ன்னது நமக்கு முக்கால்மணி நேரம் எடுத்துச்சு. உயரம் குறைவாப்  பறக்கறதால் கீழே இருக்குமிடங்கள்  தெளிவா, அழகாத் தெரிஞ்சதுன்னாலும்....  மேகக்கூட்டம் முழுசா வந்து மறைச்சுக்கிட்டதுதான் அதிகம்.
 இளைஞர்(வயசு ஒரு 19/20 இருக்கலாம்) ஒருத்தர் குட்டியாக் கைக்கு அடக்கமான வீடியோ கெமராவை ஜன்னலில்  ஒட்டிவச்சுட்டு நிம்மதியா  வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தார். அது எங்கே கிடைக்குதுன்னு விசாரிச்சேன். கொரியாவிலாம். காலேஜ் லீவு இப்போ. ரெண்டு வாரம் சுத்திப் பார்த்து மலை ஏற வந்துருக்காராம்.


போக்ராவில் இறங்குனதும்  பைகள் வரக் காத்திருக்கோம். பெல்ட் கில்ட்டெலாம் கிடையாது. அப்படியே வாரி வண்டியில் போட்டுக் கொண்டாந்து வச்சதும் நாம் கை நீட்டி எடுத்துக்கணும். துர்கா அங்கே நமக்காகக் காத்திருந்தார். இந்த விநாடி முதல் மறுபடியும் நம்மை இங்கே ப்ளேனுக்குள் ஏத்தும் வரை இவரே நமக்கு கைடு. பெர்ஸனல் கைடாக்கும்,
கேட்டோ :-)




ஹொட்டேல் மௌன்ட் வியூவில் தங்கறோம். ஓனர் நம்ம ப்ரகாஷின் நண்பர். அருமையான இடம் என்று நமக்கு ஏற்கெனவே  சொல்லித்தான் அனுப்பி இருந்தார் ப்ரகாஷ். இது கொஞ்சம் பெரிய ஹொட்டேல். ப்ராப்பர் ஹொட்டேல் கேட்டோ!  அருமையான வியூவோடு அறை கிடைச்சது.  இந்த ஊரே சுத்திவர மலைகள் இருக்க, அதுக்கு நடுவிலே இருக்கே:-)
ஊர் முழுக்கச் சுற்றுலாப் பயணிகள்தான்! முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள். எல்லோரும் மலை ஏற வந்துருக்கும் கோஷ்டி!  மூணுமணிக்கு  ஹொட்டேலில் செக்கின் செஞ்சு , ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு  மூணரைக்கெல்லாம்  கிளம்பியாச்சு ஊர்சுத்த:-)

காத்மாண்டுபோல வெயில் கொளுத்தாமல் இதமா இருக்கு என்பதால் நடந்தே போகலாமுன்னு முடிவு.  எங்கே பார்த்தால் ஹொட்டேல்களே!  கடைத்தெருவில் வேடிக்கை பார்த்தபடி நாம் போன இடம் ஃபேவா ஏரி.   வளாகத்தில்   சின்னதா   ஒரு    சிவன் கோவில்.
 Fewa Lake பிரமாண்டமான ஏரிதான்.   நீளம் 17 கிமீ. அகலம்  9 கிமீ.  மொத்தம் 4.43 சதுர கிமீ பரப்பளவு. தூரத்தில் ஒரு தீவு போல ஒன்னு. அங்கே ஒரு கோவில் இருக்கு. பராஹி இருக்காள். இவுங்களுக்கும் 'வ' வர்றதில்லை!  வராஹி அம்மன் கோவில். .  Thal Barahi   தால் பராஹி!

தால் ன்னு சொன்னால் அதுக்கு ஏரி என்று பொருள். நம்ம காஷ்மீர்லே பாருங்க  ஒரு ஏரிக்கே தால் லேக்குன்னு பெயர் நிலைச்சுப்போச்சு:-)  ஏரி ஏரி. வாட் இஸ் திஸ்? வாட் நேம் ஃபார் திஸ் லேக்?   யே தோ தால் ஹை.  ஓக்கே தால்!  தால்  லேக்!  குட்!    சரியா:-)

கோவில் இருக்கும் தீவு அப்படியொன்னும் ரொம்ப தூரத்தில், நட்ட நடு ஏரியில் இல்லையாக்கும்.  மிஞ்சிப்போனால் ஒரு  அரைக்கிமீ இருக்கலாம். ஆனால் படகில்தான் போகவேணும். இங்கே  இது ஒரு பெரிய பிஸினஸாக ஆகி இருக்கு. ரொம்ப ஆழமான ஏரி என்பதால் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கிட்டுத்தான் படகில் ஏறணும். இதுக்கு பத்து ரூ வாடகை வசூலிக்கறாங்க.



படகில்  கோவில்வரை போய் வர  ஒரு சார்ஜ், சும்மா மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கிட்டு ஏரியைச் சுத்தி வர ஒரு சார்ஜ்ன்னு பலவிதமான சர்வீஸ்கள்.  சின்னப்படகு, பெரிய படகுன்னு  பல சைஸ்களில்  படகுகள். நாங்கள் போய்வந்தது பத்துப்பேர்கள் போகக்கூடியது. இதில் என்ன ஒரு  சௌகரியம்ன்னா....  கீழே படகுத்தரையில் காலை மடக்கி உக்கார வேணாம். பெஞ்சுலே உக்கார்றமாதிரி உக்கார்ந்துக்கலாம். அப்பாடா....   என் கால் முட்டி  தப்பிச்சது:-)
நேபாளிகளுக்கு  அம்பது ரூபாயும்,  வெளிநாட்டு  மக்களுக்கு ஆளுக்கு நூத்தியம்பது ரூபாயுமா டிக்கெட்டுக்குக் கொடுக்கணும். ஏற்கெனவே    மூணுபேர் உள்ள ஒரு குடும்பம் படகில் இருந்தாங்க. நாங்க மூணு பேர். அப்புறம் இன்னொரு  மூணுபேர் வந்து சேர்ந்தாங்க.  ப வடிவில் மூணு பெஞ்சு. ரெண்டு  படகுகளுக்கு மேல்  மரப்பலகைகளை  அடுக்கிக் கட்டி, அதுக்கு மேல் மூணுபக்கங்களில் பெஞ்சு. படகோட்டி, அந்த கீழே இருக்கும் படகுகள் ஒன்றில்  உக்கார்ந்து துடுப்புப் போட்டுக்கிட்டு வர்றார்! நம்மப் படகில் இருந்த பொடியன், காலியா இருக்கும் இன்னொரு படகில்  உக்கார்ந்து தண்ணீரை அளைஞ்சுக்கிட்டே வந்தான்.   குழந்தையா இருப்பது எவ்ளோ சுகம்!!!
ஒரு ஏழெட்டு நிமிசத்துலெ கோவில் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம்.  லைஃப் ஜாக்கெட்டைப் படகிலேயே விட்டுட்டுப் போகலாம்னு சொன்னது  மகிழ்ச்சி.


 படிகளில் ஏறி  கோவில்வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.  நல்லா சுத்தமாப் பராமரிக்கப்படும் இடம்.  நிறைய மரங்கள். அதைச்சுத்தி உக்கார்ந்துக்க வட்டமேடைகள்.  நமக்கு நடந்து போக சிமென்ட் பாதைகள். கோவில் பூஜைக்கான பொருட்கள் வாங்கிக்க ஒரு கடை.  கூடவே  வண்ணவண்ண பாசிமணிகள் விக்கறாங்க. என்றைக்குமில்லாமல்   இந்த மணிகள் மேல் எனக்கொரு காதல் வந்தது  இங்கேதான்:-)


இந்துக்கள் மட்டுமில்லாமல் ஏகப்பட்ட பௌத்தர்களும் இந்தக் கோவிலுக்கு  வர்றாங்களாம். அவுங்களுக்கும் இது முக்கிய வழிபாட்டுத் தலமாம்! நல்லது. ரொம்ப நல்லது.
வராஹி அம்மனுக்கு  ரெண்டு நிலைக் கட்டடம். பகோடா ஸ்டைல்.  சந்நிதியே நாலைஞ்சு படிகள் இறங்கிப்போகும் பள்ளத்தில் இருக்கு. வெளியே ரெண்டு பக்கமும் வாயிலே 'தீ நாக்கு'களோடு இருக்கும் சிங்க உருவங்கள்.  சந்நிதி வாசல் முகப்பில்  உள்ளே இருக்கும்  சாமியை விளக்கும் ஒரு டிஸைன். இங்கே எல்லாக் கோவில்களிலும் முகப்பில் இப்படித்தான்  ப்ரீவ்யூ இருக்கு.   இங்கே சந்நிதிக்குள் போக ரெண்டு படி ஏறி நிலைவாசலுக்குள் குனிஞ்சு  மூணு படி இறங்கணும்.


குங்குமம் அப்பிக்கிடக்கும் வராஹி  சின்னதா  செதுக்கிய    சிலைவடிவில்!  கொஞ்சூண்டு சந்தனம் கைகளில்.  ஒரு ப்ளாஸ்டிக் ட்ரே பக்கத்தில்  இருக்கு. விரும்பினால்   அம்மனுக்கு தக்ஷிணை கொடுக்கலாம்.  இடப்பக்கம் ஒரு தேங்காய். அவ்ளோதான் சாமி அலங்காரம்:-(    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று நம்பிக்கை!!  உள்வாசல்பக்கம் உக்கார்ந்துருக்கும் பட்டர்,  குங்குமமும் அரிசியும் கலந்து  குழைச்சு வச்சுருக்கும் பிரஸாதத்தை  ஒரு சிட்டிகை எடுத்து நம்ம நெற்றியில்  அழுத்தி ஒட்டவைக்கிறார்.
அம்மன் சிலை எத்தனை காலத்துப் பழசுன்னு கேட்டதுக்கு ஒரே சொல் சொன்னார், ப்ராச்சீன் !

 அப்டீன்னா....  ரொம்ப காலத்துக்கு முந்தி,  ஆதி காலம்!    ஒரு ராத்திரியில் இந்த ஊருக்கு  வராஹி  வந்துருக்காள்.  மனித உருவில் வந்தவள், ஊர் மக்களிடம் தனக்கு  அன்னம் அளிக்க வேணுமுன்னு கேட்க,  எல்லோரும் ஒன்னும் தராமக் கதவை சாத்திக்கிட்டாங்க. ஒரே ஒரு  ஏழைக்குடும்பத்தினர் மட்டும், 'ஐயோ  யாரோ ஒரு பெண் இந்த  அர்த்த ராத்ரியில் பசியோடு வந்துருக்காளே'ன்னு, தங்களிடம் இருந்த  சாப்பாட்டை  அவளுக்கும் பகிர்ந்து  கொடுத்து,  ராத்திரி தூங்க இடமும் கொடுத்துருக்காங்க.

காலையில் பொழுது விடிஞ்சு பார்த்தா, இவுங்க வீட்டைத்தவிர, ஊர் முழுசும் தண்ணீர் நிரம்பி  பெரிய ஏரியாக் கிடக்கு.    ராத்திரி வந்து சாப்பிட்டுத் தூங்குன பொண்ணைக் காணோம். அப்புறம்தான் தெரிஞ்சுருக்கு, வந்தவள் வராஹின்னு!  அவள் தூங்குன இடம்  தான்  இந்தக் கோவில். தங்குன வீடுதான் இந்தத் தீவு!

இப்ப ஏரியைச் சுத்தி வேற ஊர் உருவாகிருச்சுன்னு வையுங்க.
சாமி தரிசனம் முடிச்சுட்டுத் தீவைச் சுத்திப் பார்த்தேன். தேங்காய் உடைக்க தனி இடம்,  ஏரி மீன்களை 'தரிசிக்கும் ' இடம்னு இப்படி இருக்கு. காக்காய்கள் நிறைய !  நியூஸியில் காக்கா இல்லை தெரியுமோ? அதனால் நல்லாவே பார்த்தேன்:-)
புறாக்களும் ஏராளம். பறவைகளுக்குத் தீனி விக்கறாங்க. வாங்கிப்போட்டால் புண்ணியம்.  வளாகத்தில் காளிக்கு ஒரு சின்ன சந்நிதியும், புள்ளையாருக்கு கொஞ்சம் பெரிய சந்நிதியும் இருக்கு. ஆனால் மூடி இருந்துச்சேன்னு    கேமெராக் கண்ணை அனுப்பி புள்ளையாரை தரிசித்தேன்:-)
நம்மவரும் துர்காவும்   ஒரு  இடத்தில் உக்கார்ந்து  பேசிக்கிட்டு இருந்தாங்க.  இந்தத் தீவில் இறங்குனது முதல் மொத்த சுத்தலுக்கும்  அரைமணி நேரம்கூட ஆகலை.  பகல் நேரமா இருந்தால்  வெயிலுக்கு இதமா நிழலில்  உக்கார்ந்து    அமைதியான சூழலை  அனுபவிக்கலாம்.
நாம் இருட்டுக்கு முன்னே கொஞ்சம் மத்த இடங்களையும் பார்க்கணுமேன்னு   கிளம்பிட்டோம். வந்த படகிலேயே போக வேணும் என்ற அவசியமில்லை. பத்துப்பேர்  வந்ததும் படகு கிளம்பிரும்:-)
கூட்டம் வராததால் நம்ம படகு அங்கேயே நின்னுருந்துச்சு.   நம்மோடு வந்த பொடியன் குடும்பமும் வந்துருந்தாங்க.    இப்பப் புதுசா ஒரு பொடியளும் குடும்பமும் நம்ம படகில்! ஆறே நிமிட்லே கரைக்கு வந்து சேர்ந்தோம்.

தொடரும்.......... :-)




17 comments:

said...

ஒரு வாட்டி மோமோ மோமோன்னு சொல்ற இந்தப் பண்டத்தைச் சாப்பிட்டுப் பார்க்கணும். வெங்கட்டும் அடிக்கடி சொல்லியிருக்கார். நம்மூர்க் கொழுக்கட்டை மாதிரி இருக்கு பார்க்க!

ஆ! ஏரில எவ்ளோ தண்ணி! ஒரு தமிழ்நாட்டுக்காரனின் ஆதங்கம்!

said...

மோமோ சாப்பிட ஆசையா ஸ்ரீராம்... சாப்பிடும் முன்னர் வெஜ் மோமோ தானான்னு ஒரு தடவை கேட்டுக்கோங்க..... :)

இனிய பயணம். உங்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி டீச்சர்....

said...

உட்கார்ந்த இடத்திலேயே வராஹி தரிசனம் ஆச்சி.
அடுத்தெங்கே என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
நன்றி.

said...

நாங்கள் போன போது நல்ல மழை , அதனால் பெண்கள் உடை நனைந்துவிடும் என்று வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். படகுதுறையில் கார் ஏற்பாடு செய்து எங்களை தங்கும் விடுதிக்கு அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் வராஹி அம்மனை தரிசனம் செய்து வந்தார்கள்.

said...

Varahi namaha

said...

இந்தப் பொக்காராவுல இருந்துதான் எவரெஸ்ட் போவாங்களா? சின்ன விமானத்துல கூட்டிட்டுப் போய் எவரெஸ்ட் காட்டுனாங்கன்னு ஒரு நண்பன் முன்னாடி சொன்னது நினைவுக்கு வருது.

ஊர் அழகா இருக்கு. தண்ணியும் பச்சையும் துப்புரவுமா. நம்ம ஊர் எப்போ இப்பிடி ஆகுமோ!!!

வெஜ் மோமோன்னதும் எனக்கு சிக்கிம்ல கேங்டாக் போனதுதான் நினைவுக்கு வருது. அங்கயும் பசின்னா வெஜ்மோமோதான். வேற எதையும் திங்க முடியல. பாத்தாலே பயமா இருந்தது. எதுக்கு வம்புன்னு முட்டக்கோஸ் அடைச்ச மோமோவும் பிஸ்கட்டும் தான்.

வட்டங்களையும் வளைவுகளையும் அவங்க சிற்பங்கள்ளயும் ஓவியங்கள்ளயும் நிறைய பயன்படுத்துறாங்க. அந்தச் சிங்கத்தோட வாய்ல இருந்து வர்ர தீயைப் பாருங்க. வட்டவட்டமா வருது.

ஒட்ட வெச்ச கேமரா நல்லாருக்கு. கேமராவை மறந்துட்டு நம்ம பாட்டுக்கு இரசிக்கலாம். கொரியா வழியா ஒரு டிரிப் போட்டு அங்க ஒன்னு வாங்கிருங்க. இப்பல்லாம் செல்பி எடுக்கவே குட்டியா பறக்கும் கேமரா வந்திருக்காம்.

said...

கோவில் இல்லா ஊருக்குப் போகவேண்டா

said...

அழகான இடங்கள்...

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த மோமோ கொழுக்கட்டை நம்மது போல அரிசிமாவில் இல்லை. மைதாக் கொழுக்கட்டைதான். அழகா மடிப்பு மடிப்பா செய்யறாங்க.!

தன்ணி............ ஹூம்............

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணத்தில் கூடவே வருவதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்!

said...

வாங்க விஸ்வநாத்.

சரியான ஆர்ம் சேர் ட்ராவலரா இருக்கீங்க :-)

said...

வாங்க கோமதி அரசு.

அடடா..... மேற்கூரை உள்ள படகுகள் இருந்ததே.....

பயணத்தில் கைவசம் குடை ஒன்னு வேண்டித்தான் இருக்கு!

said...

வாங்க ப்ரசன்னா!!

அருள் புரிவாள்!

said...

வாங்க ஜிரா.

எவரெஸ்ட் பார்க்க பொகரா வர வேண்டியதில்லை. காத்மாண்டு நம்ம தமெல் ஏரியாவுலேயே எக்கச்சக்கமான குட்டிவிமான கம்பெனிகள், ஏஜண்டுகளிருக்காங்க. ரெண்டு மணி நேர டூர் எல்லாமிருக்கு!

இப்ப எங்கூரில் கூட ட்ரோன் கேமெரா வந்துருச்சு. விலை கூட ரொம்பவே மலிவு.

எனக்கு இப்ப வேண்டிய கேமெரா நம்ம உடம்பில் வச்சுக்கறமாதிரி வேணும். நம்ம கண்ணுதான் கேமெரா லென்ஸ். கண்ணை மூடித்திறந்தால் எதிரில் இருப்பது ரெக்கார்ட் ஆகணும். அப்ப எல்லாக் கோவில்களிலும் உள்ளே போய் சாமி கும்பிட்டுக்கிட்டே க்ளிக்கலாம்:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எல்லா ஊரிலும் எதாவது ஒரு கோவில் இருக்கத்தான் செய்யுது !

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

நன்றி.

said...

இங்கு நான் கிளிக்கியவை:
https://photos.app.goo.gl/TnrnfWHobKSeufin8