Wednesday, September 18, 2019

ராஜாராணி கோவில்.... (பயணத்தொடர், பகுதி 144 )

லிங்கராஜா கோவிலில் இருந்து ராஜாராணி கோவிலுக்கு ஒரு ரெண்டு கிமீ தூரம்தான்.  தொல்லியல்துறை ஏற்றெடுத்துருக்கும் இடம்! அதனால் சுத்தமாக இருக்கு!



வாசலில் டிக்கெட் கவுண்ட்டரில் விவரம் பார்த்ததும் மனசுக்கு நிம்மதி ஆச்சு. அழகான புல்வெளியில் பாதிரிப்பூ மரங்களும், நடுவிலே  நடந்துபோக, கல்பாவிய  அழகான  அகலமான பாதையுமா.....  கட்டக் கடைசியில் கம்பீரமா நிக்குது ராஜாராணி கோவில்.

எந்த ராஜா? எந்த ராணி ?  ஹாஹா....  ராஜாக்கள் கட்டிவிட்ட கோவிலே தவிர  ராஜாராணிக்கும் கோவிலுக்கும் வேற சம்பந்தம் ஒன்னுமில்லையாக்கும், கேட்டோ!
கோவிலைக் கட்டி இருக்கும்   செம்மண் நிற  மணற்கல்லில் அங்கங்கே துளியூண்டு மின்னலா மைக்கா பதிஞ்சுருக்கு என்பதால் இந்த வகைக் கற்களுக்கு  'ராஜாராணியா'ன்னு ஒரு பெயர் இருக்கு!  அதுலே கட்டுனதால் கோவிலுக்கு ராஜாராணி கோவிலுன்னு பெயர்! அம்புட்டுதான்.
இப்பதான் எனக்கு நினைவுக்கு வருது.... சின்னப்பிள்ளையா இருந்தப்ப  லைட் ப்ரௌன் கல்லில் தங்கத்துகள்களை  வாரித்தெளிச்சால் போல இருக்கும்  கல் பதிச்ச லோலாக்கு போட்டுருந்தேன்.  சன் ஸ்டோன்னு அதுக்குப் பெயர்னு  இப்பத் தெரிஞ்சுக்கிட்டாலும், எங்க காலத்துலே அதுக்கு ராஜாக்கல்லுன்னே பெயர் இருந்துச்சு. அந்த லோலாக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு நினைவில்லை. ஆனால் அந்தக் கல் மனசுலே பதிஞ்சு போயிருந்துச்சு.  க்ராண்ட் கேன்யன் விஸிட்டுக்காக யூ எஸ் போனபோது, ஒரு கடையில் பார்த்துட்டு இதயவடிவில் (!) ஒரு பெரிய கல் வாங்கியாந்தேன். சென்னை போகும்போது நம்ம  சீனிவாச ஆச்சாரியிடம் கொடுத்து கம்பி கட்டச் சொல்லணுமுன்னு  இருந்தது, இப்ப நம்மூட்டு யானைகளில்  ஒருத்தனுக்கு  நெத்திப்பட்டமா இருக்கு :-)
கோவில் பத்தின விவரங்களைச் சுருக்கமா ஒரு போர்டில் எழுதிப்போட்டுருக்கு தொல்லியல் துறை (வழக்கமான எழுத்துப்பிழைகளோடு.....  அக்னி (& வருணன்) என்பதை அங்கின்னு.... ப்ச்.... )

இப்போ போயிட்டு வந்தோமே, லிங்கராஜா கோவிலுக்கு...   சட்னு பார்க்க அதே போல் இருக்கும் கோபுரம்தான் என்றாலும்  அதைவிட இது கலையழகோடு கலையம்சத்தோடு கட்டப்பட்டுருக்கு!
நளினமான பெண்கள் ஏராளம். உள்ளூர் மக்கள் இந்தக் கோவிலை  'காதல்கோவில்'னு சொல்றாங்களாமே!

கோவிலுக்கு  ஒரு அஞ்சு படிகள் ஏறிப்போகணும்.  வாசல் முகப்பில் ரெண்டுபக்கமும் அநந்தன்ஸ்!   நாகதேவனும், நாகதேவியுமா....  (நாகராஜா & நாகராணி)  வாசல் நிலைப்படிக்கு மேலே ஒன்பது சாமிகள், நிலையைச் சுத்தி அலங்கார  வேலைப்பாடுன்னு கல்லில் செதுக்கித் தள்ளி இருக்காங்க.
உள்ளே  முன்மண்டபத்துக்குள் (ஜக மோஹனா) நுழையறோம்.  அடுத்து இருப்பது கருவறை! வீட்டைக் காலி பண்ணிட்டுக் கழுவித் துடைச்சு வச்சதுபோல் இருக்கு!  சாமிச் சிலைகள் ஒன்னும் இல்லை.

இந்த்ரேஸ்வர் ஷிவா என்ற கோவிலாகத்தான்  முந்தி இருந்துருக்குன்னு தகவல் பலகை சொல்லுது.  அப்படியானால்...மூலவராக சிவலிங்கம் இருந்திருக்கவேணும். இப்போ எதுவுமே இல்லை....
உருவமா இல்லைன்னா என்ன? அருவமா இருக்கக்கூடாதான்னு நினைச்சுக்கிட்டு  சாமியை (! ) கும்பிட்டுக்கிட்டு வெளியே வந்தோம்.   வலம் வரும்போது பார்த்தால் அளவில் பெரிய கோவில் இல்லை. கச்சிதமான சிறிய கோவில்தான். கருவறை விமானம்தான் ஷிகாரா என்ற வடிவில் நெடுநெடுன்னு உசரமாப் போகுது!

வெறும் பிஸ்கெட்டுகளை அடுக்கி வைக்காமல் பகுதி பகுதியாகப் பிரிச்சு,  ரெண்டு அடுக்குகளா சிற்பங்களைச் செதுக்கி இருக்காங்க.
அக்னிக்கு வயிறு பெருசு. அதான் எவ்ளோ இருந்தாலும் தின்னு தீர்த்துரும். சூரியனின் கதிர்கள் மூலம் பிறந்தவன் இல்லையோ!  தன்னுடைய வாகனத்துடன் இருக்கார் இங்கே .
   வருணன்.... இப்படி
 யமனும் தன் வாஹனத்துடன்....


ச்சும்மாச் சொல்லக்கூடாது..... ரொம்ப அழகான நளினமான சிற்பங்கள். சாமின்னு மட்டுமே இல்லாம, ஸ்ருங்காரவகைச் சிற்பங்களும்..... கீழ்வரிசையில்  ஐ லெவலில் சாமி, தலையை உயர்த்திப் பார்க்கும் மேல்வரிசையில் ஆசாமின்னு... பிரிச்சுச் செதுக்கி இருக்காங்க.  அதான் இந்தக் கோவிலுக்கு  லவ் டெம்பிள்னு ஊர் சனம் பெயர் வச்சுருக்கு!




ஒவ்வொன்னா நின்னு பார்க்க நமக்கு நேரம் வேணும்.....  குறைஞ்சபக்ஷம் கைடு சர்வீஸ் இருந்தால் நல்லா இருக்கும். முக்கியமானவைகளைக் காமிச்சுருப்பாங்க.
ஒரு ஜோடி, கோவிலுக்குப் பின்பக்கம் உக்கார்ந்துருந்தாங்க. அதனால்  நின்னு நிதானமாப் படம் எடுக்க எனக்குத் தயக்கமாத்தான்  இருந்தது.....
நம்மவர் இதையெல்லாம் கண்டுக்காம... போற போக்கிலே க்ளிக்கறார். நூறு படம் எடுத்தா ஒரு பத்து தேறும் வகைதான் எப்பவும். ஃபோகஸ் பண்ணும் வழக்கமெல்லாம் இல்லையாக்கும் கேட்டோ... :-)


சோமவம்ச அரசர்கள் ஆட்சியில் (கேசரி என்ற குடும்பப்பெயர் இவர்களுக்கு ! Keshari Dynasty ஏழு நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்சி செஞ்சுருக்காங்க.  ) கட்டிய கோவில்கள்தான் பெரும்பாலும். பத்தாம்  நூற்றாண்டும் பதினோராம் நூற்றாண்டுமா ....  கோவில் கட்டும் வேலையே முக்கியமா இருந்துருக்கு! கேசரி என்றதால் எங்கே பார்த்தாலும் சிங்கங்கள்தான்!

லிங்கராஜா கோவிலைக் கட்டுனவர் யயாதி கேசரி. இவருடைய தகப்பனார் பெயர் ஜனமேஜயன்!   ( இந்தப் பெயர்கள் எல்லாம் நமக்கு ரொம்பவே பரிச்சயமான பெயர்கள் இல்லையோ!   மஹாபாரதம்.... நினைவில் வச்சுக்குங்க ! ) இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா.....    சரித்திரக் குறிப்புகளில் ஆதிகாலத்துலே முதல் கலிங்க அரசர் பெயர்  அநந்த பத்மநாபர் !   (வாவ்..... )

பொதுவா, கலிங்கம் என்றதும்  பிந்துசாரர், அசோகர்னு மௌரிய அரசர்கள்தான் சட்னு நினைவுக்கு வர்றாங்க இல்லே?

இங்கெ ஒரிஸ்ஸாவில் (கலிங்கநாடு) ஏழாயிரத்துக்கும் மேற்பட்டக் கோவில்கள் கட்டி இருந்தாங்களாம். எழுநூறு வருஷங்களுக்கிடையில் இந்தக் கோவில்களைக் கட்டி இருக்கலாமாம்...... இப்போ இதுலே  பத்து சதமானம்தான் பாக்கி.   காரணம் அந்நியர் படையெடுப்பு.

ஹிந்துக்கோவில்களைக் கண்டதும் அழிக்கணும் என்ற எண்ணம் கொண்ட அந்நியர்.
 இதுவும்  பதினோராம் நூற்றாண்டுலே கட்டுன கோவிலாக இருக்கணும் என்பதும் ஒரு தகவல். இங்கேயும் சில பல சிலைகள் உடைஞ்சுதான் இருக்கு.... ப்ச்.....


ரொம்ப இருட்டுமுன் கிளம்பிட்டோம். எப்படியும் காலை எட்டு முதல் அஞ்சுவரைதான்  இங்கே திறந்து (!) வைக்கிறாங்க . உள்ளே சாமி இல்லாததால் பூஜைகளும் கிடையாது. ஆஃபீஸ் டைம்தான்  போங்க.

தொடரும்........... :-)

8 comments:

said...

நாங்கள் சென்றபோது வெளியிலிருந்து தான் பார்க்க முடிந்தது. கா

said...

காதலர்கள் - என்ன சொல்ல? நிறைய இடங்களில் இப்படிதான்.

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

"ராஜா ராணியா" விபரம் தெரிந்து கொண்டோம்.
சாமிக்கும் ஆசாமிகளுக்கும் சிலைகள் அற்புதம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கோவிலுக்குள்ளே ஒன்னுமே இல்லை. அழகெல்லாம் வெளியில்தான். வளாகத்துக்குள்ளே போகலையா?

Beach இல்லாத குறையைக் கோவில்தான் தீர்த்துவைக்குது :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி.

நல்ல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சிலைகள் அற்புதம்தான்ப்பா !

said...

ராஜாராணி கோவில்...அருமையான வேலைபாடுகள் ...தோசைகளுக்கு நடுவே சிற்பங்கள் அழகு ..



நம்மூட்டு யானைகளில் ஒருத்தனுக்கு நெத்திப்பட்டமா இருக்கு :-)...வாவ் செம்மையா இருக்கு மா பளபளன்னு ..