Wednesday, March 04, 2015

பசுமைப் பயணம் ஒரு வனத்துக்குள்ளே... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 27)

செங்கோட்டை நகராட்சி நம்மை அன்புடன் வரவேற்கிறது.  நகருக்குள் நுழைந்து போகிறோம். சபரிமலை இங்கிருந்து  வெறும் 160 கிமீதானாம்! நகரின் பரபரப்பைத் தாண்டிப் போறோம். தண்ணீர் வளம் இருப்பதால் எங்கும் பசுமை.  பெரிய பெரிய அடுக்குச் செம்பருத்திப் பூக்கள்  சாலைக்கு ரெண்டு பக்கங்களிலும்.

 தேசிய நெடுஞ்சாலை 208 இல் பயணம். (NH208 Kollam Thirumangalam Highway.  ) செங்கோட்டையில் இருந்து  கிட்டத்தட்ட ஒன்பது கிமீ தொலைவில் இருக்கும்  புளியரை என்ற இடத்தில்    தணிக்கைச்சாவடி. (RTO Check post ) சீனிவாசன்  வண்டியைக் கொஞ்சம்மெதுவாக ஓட்டும்போதே....வண்டி எண்ணைப் பார்த்துக் குறிச்சுக்கிட்ட பணியாளர் ,  வண்டிக்குள்  லேசாய் எட்டிப் பார்த்துட்டுக்  கையை ஆட்டிப் போகச் சொல்லிட்டார்.
 ஒன்லி டாஸ்மாக் அலௌடு:-) மற்ற மாநிலங்கள் சாராயக்கடை நடத்துதா என்ன?

தென்மலை வனத்துக்குள்ளே போகும் பாதை இது.  தெங்கும் வாழையுமா  வரிசை கட்டி நிற்குமிடத்தில் அங்கொன்னும் இங்கொன்னுமா  பனைகளும்! கொஞ்ச தூரத்தில்  ஒரு மேடான பகுதியில் எதோ ஷெட் போல இருக்குமிடத்தில் கருப்பசாமி கோவில் என்றொரு போர்டு.  வனத்தின் காவல் தெய்வம் இருக்கு போல. இறங்கிப்பார்க்கலை:(






சாலையில் அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு சில ஓட்டு வீடுகள்.  வனத்துறை மக்கள் வசிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.  புளியரையில் இருந்து ஒரு எட்டரை கிமீ தொலைவில் ஆர்யன்காவு  செக் போஸ்ட். தமிழிலும் பெயர் எழுதி இருக்காங்க. கேரளத்துக்குள் நுழையறோம்.
 கேரளாவில் 'கள்ளு' தவிர வேறெங்கும் தமிழெழுத்துகளைப் பார்ப்பது அரிது!



சீனிவாசன்  இறங்கிப்போய் ஒரு கட்டணம் கட்டிட்டு அடுத்த மாநிலத்துக்குள் நுழைய அனுமதி வாங்கி வந்தார். ஒரு வாரத்துக்கு அனுமதி கொடுத்துருக்காங்களாம். நமக்கு இது போதும். ட்ராவல்ஸ் வண்டி என்பதால் கட்டணம் கட்டணுமாம். தனியார் வண்டிகளுக்கு  இதெல்லாம் இல்லை என்றாலும்.....  (ம்ம்ம்..... வேணாம் விடுங்க.....  ) மேற்கொண்டு  காசு உண்டான்னேன். உண்டுன்னார்.


வனத்தினூடாகப் போகும் சாலை  அருமையாகவே இருக்கு. எதிரில்  அவ்வளவா போக்குவரத்து இல்லை. எதோ ஒன்னுரெண்டு.... வண்டிகள். மக்கள் சபரி மலைக்குப் போகும் சீஸனில்  இதே சாலை மூச்சுமுட்டிக் கிடக்கும், இல்லே?  தமிழ்நாட்டில் இருந்துதான் ஏராளமான மக்கள் சபரிமலை யாத்திரைக்குப் போறாங்கன்னு எனக்குத் தோணுது!




ரயில்பாதைக்கான  பாலம்  ஒன்னு ரெண்டு பார்த்தோம். இடதுபக்கம் சாலையை ஒட்டியே வரும் ஆறு. பெயர் தெரியலை.   எதோ  ஆஃபீஸ் பிக்னிக் கூட்டம் போல இருந்துச்சு. சாப்பாடு நேரம்.

ஆத்துக்கு அந்தாண்டை தென்னந்தோப்புக்குள்ளே  நிறைய வீடுகள் . பாரதியார் பார்த்தால் மகிழ்ச்சி  அடைஞ்சுருப்பார். ஆற்றுக்குள்ளே அங்கங்கே பாறைக்குவியல்கள்.  மனிதர்கள் கொண்டு வந்து போட்டமாதிரி இருக்கு. எதுக்கு? ஒருவேளை  நீர்ப்பெருக்கைக் கட்டுப்படுத்தவோ?  இல்லே குறுக்கே பாலம் கட்டப்போறாங்களோ என்னவோ?


அலிமுக்கு என்ற இடம் வந்துச்சு.  கடைத்தெரு வழியாத்தான் சாலை போகுது.  கால்மணியில் பத்தனாபுரம் வந்துருந்தோம்.  பெரிய ஊர்தான். அம்பிளி புஷ்ப வியாபாரம். கடையில்  பூக்கள் சரம்சரமா..... என்றும் வாடாமல் இருக்கும் வகை:(

அடுத்து வந்தது புனலூர்.  ' தீர்த்தாடகர்க்கு  ஸ்வாகதம்' ( தீர்த்த யாத்திரையாளர்களுக்கு நல்வரவு)சொல்லும் ஏசு நாதர். செயிண்ட் ஜியார்ஜ்  கத்தோலிக்கத் திருச்சபையின் செயிண்ட் ஜூட் பில்க்ரிம் சென்ட்டர்.  சத்திரம்.

ஹிந்துக்கள் அலங்கரிக்கும்விதமாத்தான் இங்கே  கிறிஸ்தவர்களும் அலங்கரிக்கறாங்க. இது அந்தந்தப் பகுதியில் உள்ள கலை கலாச்சாரம் என்பதால் மதங்கள்  பொருட்படுத்துவதில்லை. நம்ம குத்துவிளக்குகள் போலவே  செஞ்சு, உச்சியில் அன்னப்பறவைக்குப் பதிலா சிலுவை வச்சுருப்பாங்க.  கோவில்கொடிமரங்களும் இப்படித்தான்.  உச்சியில் சிலுவையோடு இருக்கும். குறைஞ்சபட்சம் இந்த ஒற்றுமையாவது மதங்களிலிருக்கேன்னு மகிழ்ச்சிதான்.

அடுத்த பதினைஞ்சு நிமிசத்தில் ஆடூர். பாஸி நினைவு வந்துச்சு. நல்ல நடிகர். பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் மக்கள்ஸ். ஒரு ஒழுங்கு வரிசையில்தான் இருக்காங்க.

சாலை நல்ல அகலமாவே இருக்கு. பயணமும் சுகமே.  அதிகப் பட்சமா ஒவ்வொரு  இருவது நிமிசத்துக்குள்ளே ஒரு ஊர் என்று கடந்து போறோம். அடுத்த காமணியில் பந்தளம். அய்யப்பனுடைய  நாடு! பந்தள ராஜகுமாரன் அல்லவா!

செங்கண்ணூர் வருது ஒரு  இருவது  நிமிசத்துலே.  இதுதான்  இன்னிக்கு நாம்  தங்கப்போகும் ஊர்.  இந்தமுறை எங்கேயும் ஹொட்டேலுக்கான முன்பதிவை நியூஸியிலிருந்து செஞ்சுக்கலை.  போற போக்கில் பார்த்துக்கலாமுன்னு இருந்தோம். தங்கப்போகும் ஊரில் என்ன வசதி இருக்குன்னு முதல்நாள் வலையில் பார்த்து ஒரு இடம் தேர்ந்தெடுத்து  செல்லில் சொல்லி வைப்பதுதான்.

குற்றாலத்தில் இருந்து  111 கிமீ வந்துருக்கோம், பெருமாளே! செங்கோட்டையில் இருந்து செங்கண்ணூர் வர,  கூகுள்  சொன்ன  ரெண்டு மணி  இருபத்தியிரண்டு நிமிசமெல்லாம் கடந்து,   நமக்கு மூணரை மணி நேரம் ஆகி இருக்கு.  பரவாயில்லை. இருட்டுமுன் வந்ததுதான் முக்கியம்.  நம்ம சீனிவாசன், இந்தப்பக்கங்களில் வர்றது இதுதான் முதல் முறையாம்.  கொஞ்சம் நிதானமா ஓட்டுங்கன்னு சொல்லி இருக்கோம்.


பகவதி கார்டன்ஸ் போறோம். வழியெங்கும்  பந்தல் போட்டாப்லெ தோரண வரிசைகள்.   வெய்யிலில் தகதகன்னு மின்னும் வெள்ளி. புது மாதிரியா இருக்கு. கடைத்தெருவிலேயே இருக்கு  இந்த ஹொட்டேல்.  வாசலிலேயே காரை நிறுத்திக்கலாமாம்.  முன்பக்க  கட்டிடம் பார்த்தால் ஓக்கேன்னுதான் இருக்கு.

எதுக்கும் அறையை ஒருமுறை பார்த்துக்கலாமேன்னு கேட்டேன்.  டீலக்ஸ் ரூம் தரேன்.  பாருங்கன்னார்.  இந்த ஊருக்கு இதுதான்  பெரிய ஹொட்டேல் என்றார்.

நாலாவது மாடியில் அறை. பெருசுதான். குளியலறையும்  பரவாயில்லை.  ஆனால்  அறையில் இருக்கும்  மரச்சாமான்கள் தான் ...ப்ச்:(    எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கி வச்சேன்:-)

ட்ரைவருக்குத் தனியா  இடமில்லை. ஆனால்... இங்கே வரவேற்பில் இருக்கும் ஒரு அறையில் படுத்துக்கலாமுன்னு  சொன்னாங்க.  குளியலறை கீழே பேஸ்மெண்டிலே இருக்காம்.

நாமும் ஒரு அரை மணி ஓய்வெடுத்துக்கிட்டுக் கிளம்பலாம்.

தொடரும்.........:-)




17 comments:

said...

ஆகா...! என்னே பசுமை...!

நம்ம மக்கள் போகவில்லை என்றால் சபரிமலை - வெறும் மலை...!

என்னது...! பாலம் கட்டப்போறாங்களா...? ஹா... ஹா...

said...

பாதி தமிழ்நாடு. பாதி கேரளா. குளுமை.

said...

படங்கள் அனைத்தும் அழகு.. அதுவும் அந்த தென்மலை வனத்துப்பாதை மிக அழகு துளசி மேடம்..

said...

குளுமை குளுமை.பச்சை நிறமேன்னு பாடத் தோணுது.
செங்கண்னூர் பகவதியையும் பார்த்தீங்களா.

said...

மேடம் அருமை,நான் 9 வருடம் சபரிமலை போனது இந்தெ ரூட்டில் தான்,குற்றாலம் செங்கோட்டை தாண்டியது வரும் தென்மலை ரம்மியமான அழகு.அடிவாரத்திலிருந்து ஓங்கு தாங்காக இரு பக்கமும் வளர்ந்திருக்கும் மரங்கள்,அழகோ அழகு.அந்த ரயில் பாலம் மறக்க முடியாதது,கொண்டை ஊசி வளைவுகள் எல்லாமே அருமையாக இருக்கும்.அச்சன் கோயில்,ஏட்டுமானூர்,அம்பலப்புழைஎல்லாமே இந்த பாதையில் வரும்.முல்லை பெரியார் அணை எல்லாம் இந்த ரூட்டில் இருக்கும். அந்த பாறைகள் நீரின் வேகத்துக்கு போட்டது போலத்தான் தெரிகிறது

said...

செம்பருத்தி பூ மரம் மொட்டுக்களோடு , தென்னை , பச்சை வயல் , ரயில் பாலம் , கூடவே பயணிக்கும் ஆறு ஆகா !!! இதைவிட அழகாக பயணத்தை பகிர முடியாது . கண்ணும் மனமும் குளிர்ந்தது . நன்றி துளசி !!

said...

கேரளத்தின் வளமை அருமை. தமிழ்நாட்டுலயும் அந்த அளவுக்கு மழை பேஞ்சா நல்லாருக்கும். முருகா.. கொஞ்சம் கருணை காட்டப்பா!

சபரிமலைக்குப் பின்னாடி பெரிய அரசியலே இருக்கு டீச்சர். இப்பச் சொல்லி என்ன புண்ணியம்.

கள்ளுக்கடைகளை இப்பக் கேரளாவுல தடை செஞ்சுட்டாங்களாமே.

கேரளாவின் தூய்மை மிகுந்த பாராட்டுக்குரியது.

குத்துவிளக்குல சிலுவை நம்மூருக்கும் வந்திருச்சு. கோயில் மாதிரியே கோபுரமெல்லாம் வெச்சு சமீபத்துல ஒரு சர்ச்செல்லாம் கட்டியிருக்காங்க.

said...

படங்கள் எல்லாம் கண்களுக்கு குளுமை.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

//வெறும் மலை..........//
ஹாஹா.... உண்மையை இப்படி உரக்கச் சொல்லிட்டீங்களே!

பில்லர் போட்டு வைச்சுருப்பதைப் பார்த்தால் அப்படியும் இருக்கலாம். ஒரு நடைப்பாலமா இருக்காது. அந்த பங்களாக்களுக்குப் போகும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமாக இருக்க வாய்ப்புண்டு.

said...

வாங்க ஜோதிஜி.

ஒரே கூலோ கூல்:-)

said...

வாங்க ரமா ரவி.

காட்டுக்குள்ளே போகும் பாதைகள் ஒரு தனி அழகுதான்ப்பா.

said...

வாங்க வல்லி.

பாட ஏது தடை:-)

அம்மாவைப் பார்த்தேன்.

said...

வாங்க கார்த்திகேயன்.

அழகான, அருமையான பின்னூட்டம்! ரசனைக்கு நன்றி.

said...

வாங்க சசிகலா.

மனம் குளிர இன்றே வாசியுங்கள் துளசிதளம்!

ஸ்லோகன் தயார்:-)

said...

வாங்க ஜிரா.

மழை பொழியத்தான் பொழியுது தமிழகத்தில். ஆனால் நீர் சேமிப்புக்கான ஏரி குளங்களைத் தூர்வாறாமல் விட்டது போதாதுன்னு நில ஆக்கிரமிப்பு செஞ்சு ப்ளாட் போட்டுல்லே வித்துடறாங்க:(


பெஸண்ட் அவென்யூவில் போகும்போது ஒரு புதுமாதிரி சர்ச் இருக்கும், பாருங்க!

said...

வாங்க கோமதி அரசு.

ரசிப்புக்கு நன்றி.

said...

கேரளத்தின் இயற்கை அழகு படங்களில் அற்புதம். தொடர்கிறேன்.