Monday, April 07, 2014

காலை நீட்டக் காசு கொடு !

எட்டுமணிக்கு ஃப்ளைட். ஒன்னரை மணி நேரத்துக்கு முன்னால்  விமானநிலையத்தில்  இருக்கணும்.  ஓக்கேன்னு  ஆறேகாலுக்குக் கிளம்பினோம்.  அப்படியே பாண்டிபஸார் போய்  காலை உணவு கிடைக்குமான்னு  பார்த்துக்கணும். அட்லீஸ்ட்  எஞ்சினுக்குக் காப்பித்தண்ணி?  கீதா கஃபேயில் ஆள் நடமாட்டம் தெரிஞ்சது.  இட்லி ரெடியா இருக்காம்.  சட்னி தாளிச்சுக்கிட்டு இருக்காங்கன்னார் பரிமாறுபவர்.

நாங்க மூணு பேரும் இட்லி,சட்னி அண்ட் காபி முடிச்சு அன்றைய வியாபாரத்தை போணி பண்ணிட்டு நேரா ஏர்ப்போர்ட்.  அம்மா  உணவகத்துலேதான் நம்ம சீனிவாசன் தினமும் காலைப் பலகாரமாம். அஞ்சு இட்லி அஞ்சே ரூபாய். நல்லா இருக்குன்னார். திரும்பி வந்ததும் ஒருநாள் அம்மா கையால் சாப்பிடணும்.

அவ்வளவா ட்ராஃபிக் இல்லை.  ஏழுமணிக்குப்போய்ச் சேர்ந்தோம். இது உள்நாட்டுக்கான  புது டெர்மினல். பளிச்ன்னு இருக்கு.  பழைய அழுது வடியும் முகம் இல்லை என்பதே ஆறுதல்.  செக் இன் செஞ்சு  உள்ளே போய்  'மசாலா'  விமானத்திலும் ஏறியாச்சு.   தமிழை மறக்காமல் இருக்கணுமுன்னு  சென்னையிலிருந்து போகும்  மசாலா விமானங்களில்  வாசிப்புக்குன்னு  'குங்குமம்' வச்சுருந்தாங்க.  மங்களகரம்!  பத்திரிகை விற்பனை  உயரக் கேட்பானேன்?  அவுங்களோடதுதானே  இந்த பத்திரிகையும்! இல்லையோ?

முதல் வரிசையில் நமக்கு இடம்.  கொஞ்சம் காலை நீட்டிக்கலாம். ப்ரிமியம் ஸீட்டாம். தலைக்கு  ஐநூறு ரூ எக்ஸ்ட்ரா. இது தில்லிவரை  போகுது. அங்கிருந்து  வாரணாசிக்கு வேறு ப்ளேன் மாற்றிக்கணும்.  அதுக்கும் முன் வரிசை ஸீட்தான்  எடுத்துருக்கார் கோபால்.  தலைக்கு 250 கூடுதலாக் கொடுக்கணும். இது போறதுக்கு மட்டும். ஒன் வே.

விமானத்திலும்  சாப்பாடு விக்கறாங்க. ஒரு உணவு வகைக்கு ( எ.கா.
மார்னிங் க்ளோரி என்ற ப்ரேக்ஃபாஸ்ட் ) உள்நாட்டு விமானங்களில்  350 ரூ என்றால் அதே உணவு  வெளிநாடு போகும் இதே விமானத்தில்  700.  எல்லாமே டபுள் டபுள்தான்.  இப்படிச் சிறுகச் சிறுகச்  சுரண்டி எடுத்து  இப்ப அமோக லாபத்தில் நடக்குது இந்த விமானச்சேவை.

மூணரை மணி நேரம் , மஹா போர்.   ஒரு முறை டீ வாங்கிக்கிட்டோம்.  அம்பது ரூபாய்  ஒரு  கப். சின்ன பிஸ்கெட் ஒன்னு இனாமா வச்சுருந்தாங்க:-) தில்லி வரவர ஒரே பனி மூட்டம். இங்கே தில்லியில் இருக்கும் பழைய ஏர்ப்போர்ட்தான் உள்நாட்டு விமானங்களுக்கு .  ஒரு வழியா இறங்கி நாங்க   அடுத்த விமானத்துக்குக் காத்திருக்கோம்.  மணி பகல் பனிரெண்டு.   இன்னும் ஒன்னரை  மணி நேரம் இருக்கு.

பகல் சாப்பாட்டை முடிச்சுக்க 'வாங்கோ' வில்   ஆளுக்கொரு ஒரு காம்போ:-) இது ஒன்னுதான் தென்னிந்திய சாப்பாட்டுக் கடை அங்கே. ஒரு மசால் தோசை, ஒரு வடை ஒரு இட்டிலி.  இருநூத்தியொன்பது  ரூ.  லஸ்ஸி  ஒரு நூறு.  சரியான கொள்ளை:(




பனி மூட்டம் லேசா விலகிக்கிட்டு இருக்கு. ஆனாலும் வாரணாசி போகும் விமானம் லேட்.  அங்கிருந்து  வரும் விமானம் இன்னும் வரலையாம். அது  வந்து நம்மை ஏத்திக்கிட்டுப் போகணும்.

 ஒன்னரைக்குக் கிளம்ப வேண்டியது   ரெண்டே காலுக்கு வந்து  உடனே  ரெண்டரைக்குக் கிளம்புச்சு.   . நாலுமணிக்கு லால்பகதூர் சாஸ்திரி  இண்டர்நேஷனல்  ஏர்ப்போர்ட்டில் இறங்குச்சு. சிங்கை, தாய்லாந்து, சீனா இப்படி வெளிநாடுகளில்  இருந்தெல்லாம் மக்கள்ஸ் வர்றாங்க.  நிறைய பேர்களைப் பார்த்தாலே தெரியுது புத்தபிட்சுக்கள் என்பது.   ஏனாம்?

விமானநிலையத்துலேயே  காரணம் தெரிஞ்சுருச்சு:-)  காசிக்கு அருகில் சாரநாத் இருக்கே. அதான்.....

ஒரு  டாக்ஸிக்காரர் நம்மைப் பிடிச்சார்.  நகருக்குப் போகும் வழியெல்லாம்  அங்கங்கே வயல்களும், சின்ன கிராமங்களும், காய்கறிக்கடைகளும், மண்பானை விற்பனைகளுமா இருக்கு. பழம்பெரும் மாநகரமான காசியைச் சுத்தி ரொம்ப சாதாரண கிராமங்கள். நகரமின்னும் விரிவாகலை போல.

கண்டோன்மென்டில் இருக்கு நாம் புக் பண்ணி இருக்கும் ஹொட்டேல். காசி படித்துறைகளுக்கு வரணுமுன்னா  அஞ்சரை கிலோ மீட்டர்  பயணம்.  கங்கைக்கரையில் இருக்கும்  ஹோட்டேல் எதாவது எடுக்கலாமுன்னா...........  கூட்டமும் இரைச்சலும் அதிகமா இருக்கும் என்பது  நம்ம கோபாலின் கணிப்பு. ஸோ....காலையில் கங்கையில் கண் முழிப்பது நமக்கில்லைன்னு ஆகிப்போச்சு:(

ஹொட்டேல் ராடிஸ்ஸன்  வந்து சேர்ந்தோம்.  விமானநிலையத்தில் இருந்து ஊருக்குள் வர  22 கி மீ பயணம். இதுக்கே   55 நிமிசமாயிருச்சு.  குண்டும் குழியுமா மண் சாலை சாலை அவ்ளோ அழகு.  வருசத்துக்கு ஆறு லட்சம் பேர்   விமானம்வழியாக  வந்திறங்கும்  நகரம்.  கொஞ்சம்  நல்ல சாலையாப் போட்டு வச்சுருக்கப்டாதோ?  இங்கத்து விமானநிலையத்துக்கு  நம்ம பழைய பிரதமர் திரு. லால்பஹதூர் சாஸ்த்ரி அவர்களின் பெயரைச் சூட்டி இருக்காங்க.  இதுக்கு இண்டர்நேஷனல் அந்தஸ்த்து கூட இப்ப சமீபத்தில்  2012 இல் கிடைச்சதுதான்.

அறைக்குப்போய் கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு உடனே கீழே வந்தோம். அதான் நான் துடிச்சுக்கிட்டு இருக்கேனே..... ட்ராவல் டெஸ்க்கில்  ஒரு  வண்டி ஏற்பாடு செஞ்சுக்கணும்.  மணி ஆறு அடிக்கப்போகுது.  கொஞ்ச நேரத்தில் இருட்டிரும். இனிமேல்  கார் எடுத்துப் பயனில்லை.  பேசாம ஒரு ஆட்டோவில் போனால்  படித்துறைகளுக்குச் சமீபத்தில் போகலாம்.  ரொம்ப நடக்க வேணாம் என்று  உபதேசம் கிடைச்சது.  ஹொட்டேல் பணியாளர் 'தெரிஞ்ச' ஆட்டோவை ஃபோன் செஞ்சு வரவழைச்சார்.

கங்கையை நோக்கிப் போறோம்.  நகரச் சாலையும் கிராமச் சாலைக்கு ஈடு கொடுக்கும் விதமா அதே குண்டும் குழியும். கடைத்தெருக்களில் கூட்டம் அம்முது.  எந்தப் படித்துறைன்னு கேட்ட ஆட்டோக்காரருக்கு, என்னமோ ரொம்பத்தெரிஞ்சது போல் 'ஹனுமன் காட்' என்றேன்.  அதான் நம்ம பதிவர்களின் காசிப்பயணத்தைத் தொடந்து வாசிச்சிருக்கேனே!  ஆரம்பம் அனுமனாக இருக்கட்டுமே!   இருட்டுச் சந்தில் நுழைஞ்சு  மூலை முடுக்குகளில் திரும்பி  ஒரு இடத்தில்  ஆட்டோவை நிறுத்தினவர்  இனிமேல் ஆட்டோ போக வழி இல்லை.நீங்கள் இறங்கிப்போய் பார்த்துட்டு வாங்கன்னார்.

  நாலஞ்சடி அகலம் மட்டுமே இருக்கும்  குட்டிச்சந்து, கல்பாவிய தரைகள்.  துள்ளித்துள்ளி நடக்கணும்.  இல்லைன்னா....   சாணிக் குளியல்தான்:(  இதுலே நான் போட்ட சாணி  அது என்ற பெருமிதத்துடன்  அதுக்குப் பக்கத்துலேயே உக்கார்ந்து ஓய்வெடுக்கும் மாடுகள்.  இருட்டுக்குள்ளெ கருப்பு மாடுகள்.   ஒரு மாட்டுக்கு அஞ்சு நாய்கள் என்ற விகிதத்தில்   அதுகள் வேற சந்தில் ஓடிக்கிட்டு இருக்குதுகள்.  நல்லவேளையா மறக்காமல் ஒரு டார்ச் எடுத்துக்கிட்டு வந்திருந்தோம்.

நாயாருக்கு மெத்தைப் படுக்கை:-)



எல்லா சந்தும் போய்ச் சேருமிடம் கங்கை என்பதால்  இடமும் வலமுமாகப் போறோம்.  அதோ கங்கைன்னார் கோபால்.  கும்மிருட்டில்  கங்கை!  இதுக்குள்ளே இருட்டுக்குப் பழக்கப்பட்டிருந்த பார்வையை அவர் கைபோன திக்கில் ஓட்டினேன்.  ஏழெட்டுப் படகுகள்  வரிசையில்  ஒன்னோடொன்னு லேசா முட்டி நின்னு  ரகசியம் பேசின.


படிக்கட்டுகளில் இறங்கிப்போகணும்.   ரொம்ப உயரமான படிகள்.  கீழே கால் வைக்கும்போது  ரெண்டடிக்குப் போகுது.  கைப்பிடிக் கம்பிகள் ஏதும் இல்லை.கவனமா இறங்கணும்.  இருட்டு வேற  பாருங்க.     ஒரு இருவது படி இறங்கினதும்  இடப்பக்கம் பளீர்னு  மின் ஒளி.   இதுவரை இந்த வெளிச்சத்தை  மரங்கள் மறைச்சிருக்கு!

ஷிவாலாகாட் னு எழுதி இருக்கு. அர்த்தநாரியாக  சிவன் படம் வரைஞ்சு வச்சுருக்காங்க. கூடவே ஒரு லிங்க ரூபமும். வயசான பெரியவர் ஒருவர் குளிருக்கு ராஜாய் ஒன்னு போர்த்திக்கிட்டுப் படியில் உக்கார்ந்திருந்தார்.  அநேகமா இங்கேயே ராத்திரி தூக்கம் போல:(

அப்ப ஹனுமன்?   'இங்கெதான் எங்காவது இருப்பார். தேடணும்.  பேசாம நாளைக்கு வெளிச்சத்தில்  ஹனுமனைத் தேடலாம். இப்போ வர்ற வழியில் ஒரு சௌத் இண்டியன் கோவிலைப் பார்த்தேன்.அங்கே போகலாமு'ன்னார் கோபால்!  எப்போ எப்போ? நான் பார்க்கலையே:( ஆட்டோவில் வரும்போது அவர் பக்கத்தில்   தெரிஞ்சதாம்.

சும்மாச் சொல்லக்கூடாது. வழி தெரியலைன்னாலும் தெரிஞ்சாப்போல விறுவிறுன்னு நடப்பதில் கோபால் வல்லவர். கையைத் திருப்பி  டார்ச்சை  பின்னால் காமிச்சபடி  அதே விறுவிறு. நானும் சரசரன்னு  ஓடறேன்.  வழி தப்பிட்டோமோ?

ஊஹூம்.சரியா ஆட்டோ நின்ன சந்துக்குப் போயிட்டோம்.

தொடரும்...........:-)





18 comments:

said...

//இதுலே நான் போட்ட சாணி அது என்ற பெருமிதத்துடன் அதுக்குப் பக்கத்துலேயே உக்கார்ந்து ஓய்வெடுக்கும் மாடுகள்//
//சும்மாச் சொல்லக்கூடாது. வழி தெரியலைன்னாலும் தெரிஞ்சாப்போல விறுவிறுன்னு நடப்பதில் கோபால் வல்லவர்.// படிக்கும் போதே சிரிப்பா வருது! அனுமார் கிடைச்சாரா இல்லையா :)

said...

தாவித்தாவி நீங்க நடக்கும் காட்சி கொஞ்சம் யோசனை செய்யவைத்தது. ஏம்பா இருட்டில ஆத்தங்கரைக்குப் போவாங்களா. அதுவும் படி அவ்வளவு உயரம் தெரிஞ்சு கொண்டப்புறமும். காசி தரிசனம் ஆரம்பம். நடக்கவேண்டிய காரியங்கள் நடக்கட்டும். மாற்றம் என்பது இங்கில்லைன்னு எழுதி வச்சிருக்கங்களோ .

said...

காசி அனுபவம் நல்லா ஓடுது.

said...

வாங்க தக்குடு.

ரொம்பநாளாச்சே!!! ஜூனியர் சுகம்தானே?

அனுமார் கிடைக்காமலென்ன?

பாவாடை கட்டிண்டு இருக்கார்!!!

said...

வாங்க வல்லி.

இருக்கும் நாள் நாலில், ஒன்னு கூட வேஸ்ட் ஆகக்கூடாதுன்ற பதற்றம்தான்:-)

மாற்ற நினைச்சாலும் முடியாது என்பதே உண்மை!

உள்ளூர் மக்கள்ஸ் 14 லக்ஷம். ஆனால் வந்து போகும் மக்கள் அதைப்போல பத்து மடங்கு! எப்படி எதையும் சரிப்படுத்துவது? இருந்துட்டுப்போகட்டும் என்று விடவேண்டியதுதான். எதுக்கும் கஷ்டப்பட்டு தான் காசிப் பயணம் செய்யணும். அப்பதான் அதுக்குப் பலன் என்று சொன்னால் ஆச்சு:-)))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வண்டி ஸ்டார்ட் ஆகிருச்சுன்னால் எங்கேயும் நிக்காது கேட்டோ:-))))

said...


வணக்கம்!

கண்டுஉவந்த காட்கிகளைக் கொண்டுஉவந்த சொல்யாவும்
வண்டுஉவந்த தேனின் வளம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

said...

விறுவிறுன்னு நாங்களும் உங்கள் பின்னே ஆவலோடு !! நாயாரின் மெத்தை அழகு :)

said...

இரண்டு முறை போய் வந்தாயிற்று. ஆனாலும் போகத் தோன்றுகிறது - சந்துகளில் எத்தனை இடர்கள் வந்தாலும்! :)

said...

வாங்க, கவிஞா் பாரதிதாசன் அவர்களே!

வணக்கம். நலமா?

தங்கள் முதல் வருகை மிகுந்த உவப்பை அளித்தது.

தொடர் வருகையை எதிர்நோக்குகின்றேன்.

said...

வாங்க சசி கலா.

குளிர்காலத்துக்கு இளஞ்சூடு மெத்தை நல்லாவே இருக்கும்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

காசிக்குப் போறோம் என்றதும் உங்க பதிவுகளில் இன்னும் சிலமுறை புகுந்துவந்தேன்:-)

இன்னொருக்காப் போனால் நல்லாதான் இருக்கும். விட்டுப்போனவைகளைப் பார்க்கலாம்.

கோபாலுக்கு அதிர்ச்சி தரவேணாமுன்னு இப்போதைக்கு கப்சுப்:-)))

said...

Today only I found your posts. Really interesting. Don't forget to update :)

Mahi
http://mahibritto.blogspot.com

said...

வாங்க உஷா நந்தினி.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.

உங்கள் மருத்துவப்பதிவுகள் அருமை. தொடர்கின்றேன்.

said...

உங்கள் தளத்தில் ஒரு ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்கக் கூடாதோ?

said...

எனக்கு எப்படி create பண்றதுன்னு தெரியலங்க. Let me try that today. Thanks for your comments :)

said...

வடக்கே போனால் எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகள் அதிகம் தான். மாடுகளும் அதிகம் தான். அதுவும் பெரிய பெரிய மாடுகள். (அவர்கள் இங்கே வந்து அதேபோல சொல்வார்களோ!?)

இன்னும் காசிக்குப் போனதில்லை. எந்த பயணக் கட்டுரையைப் படித்தாலும் அங்கு போக வேண்டும் என்று தோன்றுகிறது.

நானும் உங்களைப்போலத்தான் இருக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும்!

said...

காசிஎன்றாலே சந்துபொந்துகள்தான்....