Friday, January 25, 2013

பொழுது விடிஞ்சால் புது வருசம்!

பார்ட்டிக்கு வா வான்னு கூப்புட்டுக்கிட்டே இருப்பதை இந்த ரெண்டு நாளாப்பார்த்துக்கிட்டே இருக்கேன்.   சிட்டி கவுன்ஸில்  சதுக்கம். Wachner Place. நாம் முந்தி மணிக்கூண்டு பார்த்தோம் பாருங்க. அதே இடம்தான்.  மூணுபக்கமும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் திறந்தவெளி முற்றமா இருக்கு.  நாம் தங்கி இருக்கும்  இடத்துக்குத் தொட்டடுத்துதான்.


ராச்சாப்பாட்டுக்கு எதாவது  வாங்கிக்கணும். நேத்து வாங்கின பீட்ஸா பாதி அப்படியே இருக்கு. ஃப்ரிட்ஜ்லே போட்டு வச்சுருக்கேன். நாளைப் பகலுக்கும் இங்கிருந்தே எதாவது லஞ்ச் எடுத்துக்கிட்டுப்போனால் தேவலைன்னு மனசில் சட்னு தோணுச்சு.  பேக் அண்ட் ஸேவ் என்ற சூப்பர் மார்கெட்டுக்குப் போய்ப் பார்த்தால்  நேத்து ஸேலில் இருந்த வாழைப்பழம் இன்னிக்கு உச்சாணிக்கொம்பிலே  போய் உக்கார்ந்திருந்தது.   இன்னும்  கொஞ்சம் (2 நிமிச ட்ரைவ்) தூரத்தில் இருந்த  கௌண்ட் டவுன் சூப்பர்மார்கெட் போய்  மூணு வகை ஸாலட், கொஞ்சம் பழங்கள் எல்லாம் வாங்கினோம்.

 இங்கே சூப்பர்மார்கெட்டுகளும் சரி, மற்ற பெரிய கடைகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஹார்ட் வேர் இப்படி எல்லாமே நாடு முழுசும் கிளைகள் பரப்பி வச்சுருக்கு.  வடக்கு முனை முதல் தெற்கு முனை வரை  எல்லாம் ஒரே விலை.  ஸேல் ஐட்டங்களும் அப்படித்தான்  எல்லா இடத்திலும் ஒன்னு போல! கடைகளின் உள்கட்டமைப்பு கூட ஏறக்குறைய ஒன்னுபோலவே இருக்குமுன்னா பாருங்க. வேற ஊர்க் கடைகளில் வாங்குவது போலவே இருக்காது. இதுலே ஒரு நன்மை என்னன்னா.....  ஊர் ஊருக்கு ஸ்பெஷாலிட்டின்னு  ஒன்னும் இல்லாததால்  நண்பர்களுக்கு பரிசு அங்கங்கே போய் வாங்கிக் கொடுத்தால் ஆச்சு. இங்கிருந்தே மூட்டை கட்டத் தேவை இல்லை.



சிவிக் தியேட்டர் கட்டிடம்  ஆரம்பகாலத்தில் கட்டுன அதே ஸ்டைலில்  இன்னமும். பாரம்பரிய லிஸ்ட்டில் இதுவும் இருக்கு.  அப்படி அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க  இந்த ஊர் முழுசும் உள்ள விக்டோரியன் ,எட்வர்டியன் காலக் கட்டுமான டிஸைன்களை!


வாங்குன பொருட்களை அறையில் வச்சுட்டு மழைத் தூரலினூடே  குடையும் பிடிச்சுக்கிட்டு அப்படியே டீ தெருவில் ஒரு மெதுநடை. நூலகம்  கண்ணில் பட்டது. ஆனால் சாத்திட்டாங்க. பரவாயில்லை. எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களும் ஒன்னு போலவே சேவை.  ஒரு அட்டையில் எத்தனை புத்தகங்கள் வேணுமானாலும் எடுத்துக்கலாம். உள்ளுர்ப் பயணம்  போனால், உள்நாட்டுலே எந்த ஊர் நூலகத்திலும் அதைத் திருப்பிக்கொடுக்கலாம்.டிவிடி சிடி போன்றவைகளுக்கு மட்டுமே  ஒரு கட்டணம் கட்டணும். அதுவும் அதிகமில்லை.  அதுவே அங்கத்தினர் 16 வயசுக்குட்பட்டவரா இருந்தால்  எல்லாமே இலவசம்.   தேவைப்படும் புத்தகம் ஷெல்ஃபில் இல்லைன்னா அது திரும்பி வந்ததும் நமக்கு வேணுமென்று புக் பண்ணிக்கலாம். அதுக்கு ஒரு சின்னக் கட்டணம் உண்டு. பள்ளிக்கூடப்பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்ய ஒரு பகுதியும்,  நிறைய கணினிகள் வச்சு  இன்ட்டர்நெட்  வசதிகளோடு  ஒரு பகுதியும் உண்டு, இதுவும் முழுக்க முழுக்க  அனைவருக்கும் இலவசமே.  15 நிமிசம் என்ற கணக்கு உண்டு. யாரும் வரிசையில் இல்லைன்னா எவ்வளவு நேரமுன்னாலும்  வலை மேயலாம்.


 நூலகப் புத்தப் பட்டியல் பார்க்க,  நமக்கு வேண்டியது  எந்த ஷெல்ஃபில் இருக்குன்னு தெரிஞ்சுக்க, இப்ப இருக்கா அல்லது வெளியே போயிருக்கா, அப்படிப்போயிருந்தால் எப்போ திரும்பி வரும்  என்ற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க  தனியா ஒரு ஏழெட்டு கணினிகள்.

கண் பார்வை குறைந்துவரும் முதியவர்களுக்காக ,  பெரிய எழுத்து ப்ரிண்ட் உள்ள  புத்தகங்கள்  பல தலைப்புகளிலும்  ஏராளம். நாம் கட்டும் வீட்டு வரிகளில் கணிசமான பங்கு நூலகத்துக்குப் போயிருது.


திரும்பிப் போகும்போது  சதுக்கத்தில்   பார்ட்டி நடப்பதற்கான ஏற்பாடு ஒன்னையும் காணோம்.  எட்டுமணிக்கு மேல்தான் ஆரம்பம் என்பதால் நாங்கள் அறைக்கு  வந்துட்டோம்.  ஒன்னு சொல்லணும். இங்கே மாடியில் நம்ம அறைக்குத் திரும்பும் திருப்பத்தில் ஒரு திராக்ஷை கொத்துப் படம் மாட்டிவச்சுருக்காங்க. சாதாரணமான படம் என்றாலும் அதுக்குள்ளே ஒவ்வொரு  நிமிசத்துக்கும் ஒவ்வொரு நிறம் வந்துக்கிட்டு இருந்தது . எனக்கு ரொம்பப்பிடிச்சுப் போச்சு.

அந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும், அறைக்கதவைத் திறக்கும்போதும்  இப்ப என்ன நிறமா இருக்குமுன்னு  ஒன்னை நினைச்சுக்கிட்டு அதே நிறம் அங்கே இருந்தால் மனசு (அல்ப )மகிழ்ச்சி  அடைஞ்சது உண்மை.  ஆரூடம்......  நீலம் வந்தால் போற(?) காரியம் வெற்றி.

ராச்சாப்பாட்டை முடிச்சபின் கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சுட்டு  'ஆச்சி மசாலா நீயா நானா ?'  பார்த்தோம். மழை வலுக்க ஆரம்பிச்சு பக்கத்து தகரக்கூரையில் பெரும்கூப்பாடு போடவும் அதையும் மீறிய பாட்டுச்சத்தம்  ஒலிக்கவும்  சரியா இருந்துச்சு. கச்சேரி ஆரம்பிச்சுட்டாங்க .


ஐயோ....ராத்திரி எல்லாம் தூங்கமுடியாது போலன்னு புலம்பிக்கிட்டே இவர்  பைக்குள்ளே  இயர்ப்ளக்ஸ் தேட ஆரம்பிச்சார். ஜன்னலை அடைச்சதும் சத்தம் குறைஞ்சு போனதென்னவோ உண்மை. நியூஸி வந்த பிறகு  எந்தவொரு நியூ இயர்ஸ் ஈவ் நிகழ்ச்சிக்கும் போனதில்லை. ராத்திரி ஊர் சுற்றல் கிறிஸ்மஸ் ஈவ்  மட்டும்தான். ஆனால் இரவு 12 வரை சும்மானாச்சுக்கும் முழிச்சுருந்து  12 மணிக்கு டிவிக்காரன் ஹேப்பி நியூ இயர் சொல்லி  பட்டாஸ் போட்டு வான /வாணவேடிக்கை காமிப்பதைப் பார்த்துட்டு  தூங்கப்போவோம். இங்கே கோடைகாலம். டேலைட் ஸேவிங்க்ஸ் நடைமுறை இருப்பதால் உண்மையில் அப்போ ராத்திரி 11 மணிதான் ஆகி இருக்கும்.  டேட்லைனில் வேற இருக்கு நியூஸி. ஊருலகத்துக்கு முன்னாடியில் இது இன்னும் முன்னாடி:-)))


வாங்க,  புது வருசப் பார்ட்டிக்குப் போய் வரலாமுன்னா  சோம்பலா இருக்கு மழையில் வெளியே போகன்னார். நல்லாருக்கு. நம்ம கட்டிடத்தைத் தொட்டடுத்து சதுக்கம். இதைவிட வேற சான்ஸ் கிடைக்குமா?


 இன்னிக்கு லஞ்சு முடிச்சுட்டு  நடந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே போனபோது  'மேக்பேக் ' கடையில் ஸேல் போட்டுருக்குன்னு நுழைஞ்சதுலே  இவருக்கு ஒரு ஜாக்கெட் வாங்கினோம்.  66% கழிவு. ஆனாலும் இதுலேயே அவுங்களுக்கு லாபம் இல்லாமல் போகாது. முதலில் அந்தத் தொழிற்சாலை இங்கே எங்கூரில்தான் இருந்துச்சு. தயாரிப்புச் செலவு கட்டுப்படி ஆகலைன்னு  இப்ப சீனாவுக்கு மாறிட்டாங்க. ரொம்ப லைட் வெயிட். ஆனால் கொஞ்சம்கூட குளிரே தெரியாது. வாட்டர் ப்ரூஃப் வேற. பனிச்சறுக்கு, மலையேற்றம் போன்ற சகல குளிர்கால விளையாட்டுகளுக்கும் தேவையான  உள்ளாடை முதல் பெரிய கூடாரம் வகைகள் வரை இவுங்கதான் ஸ்பெஷலிஸ்ட்.  புது ஜாக்கெட்டைப்போட்டுக்கிட்டுக் கிளம்பினார்.


1942 முதல் 1950 வரை எட்டு வருசம் மேயரா இருந்தவர்  Abraham Wachner. ராணுவ வீரர். முதலாம் உலகப்போரில் தலையில் அடிபட்டு ஸ்டீல்ப்ளேட் வச்சுருக்காங்க. அப்படியும் கல்லிப்போலி போரிலும்  கலந்துக்கிட்டார். இவர் சேவையை பாராட்டி இவருக்கு 1946 இல் O.B.E. (Order of the British Empire) பட்டம் கொடுத்து கௌரவிச்சது அரசு.   நகரசபையும் ,  புதுப்பிக்கப்பட்ட சதுக்கத்துக்கு    Wachner Place என்று இவர் பெயரை வச்சுருக்கு.  தொழில் முறையில் இவர் ஷூ கடை நடத்திக்கிட்டு இருந்துருக்கார்.  இவருடைய கடை ஒரு மாடியில் இருந்துச்சுன்னு நியூஸி சரித்திரக் குறிப்புகள் சொல்லுது.


சின்னதா இருக்கும் மேடைப்பகுதியில்  நால்வர்  இசைக்குழு.  முன்னே சதுக்கத்தில் கொட்டும் மழையில்  இசைக்கேற்ப நடனமாடிக்கிட்டு  பார்ட்டியை அனுபவிக்கும் மக்கள்  மூன்று பேர் உள்ள  கூட்டம். எல்லாம் சின்னப்பசங்க. ஒரு 12 இல்லை 13 வயசு இருக்கலாம்.


சதுக்கத்தின்  ரெண்டுபக்கமும் இருக்கும் கடைகளுக்கான மேற்கூரையின் கீழ் அங்கங்கே சிலர். பசங்களோட அப்பா அம்மாவா இருக்கலாம். "வீட்டுக்கு வா. காலை ஒடிக்கிறேன். இப்படி மழையில் ஆட்டம் போட்டு, நாளைக்கு ஜுரம் வந்தா யார் க்ஷ்டப்படப்போறது? "  இப்படி  மனசுக்குள்ளே ஆங்கிலத்தில் பொருமிக்கிட்டு இருந்துருக்க வேணும் அவுங்க. உலகம் எங்கும் பெற்றோர் அநேகமா ஒரே மாதிரிதான் புள்ளைகள் நலத்தில்!

இசைக்குழுவினரைப் பார்த்தால் எனக்கே பாவமாப்போச்சு. யாருக்காக? யாருக்காக .....ன்னு நான் மனசுக்குள்ளே  டி எம் எஸ் குரலில் பாடினேன்.  மழையில் நனையாம ஓரமாவே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா போய் கொஞ்சம் க்ளிக்கிட்டு (அடாத மழையிலும் விடாமல் கடமையைச் செஞ்சுருவொம்ல)  விழா முடிஞ்சு கூட்டம் வீடு போய்ச்சேரணுமுன்னு  பஸ்  மையத்துலே எல்லா ரூட்டுகளுக்கும் வண்டிகள் காத்து நிக்குது. இங்கே  மூணுபேர் இருக்காங்கன்னு  பஸ் செண்டர் அதிகாரி புலம்பினார்.  உள்ளூர் பஸ் ஸ்டாண்டு சதுக்கத்தின் பின்னால்தான்.

 எங்கூர்லே கூட  ஆபீஸ் நேரம் இல்லாத பல சமயங்களில்  மாலை 6 க்கு மேல்  ஆளில்லாமல்தான் பஸ்கள் ஓடிக்கிட்டு இருக்கும். அபூர்வமா சில நாட்களில் ஒருத்தரோ ரெண்டு பேரோ இருப்பாங்க. எப்படிக் கட்டுப்படியாகுதுன்னு  வியப்புதான்.

 பத்து நிமிசத்துக்குமேலே தாக்குப்பிடிக்கமுடியாமல் அறைக்கு வந்துட்டோம். மணி பத்தேகால்கூட ஆகலை. தெருவில் இருக்கும் கிறிஸ்மஸ் அலங்காரங்களில் கலர்லைட்ஸ் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. ஆஹா.... பெரிய ஊர் என்று சொல்லிக்கும் கிறைஸ்ட்சர்ச்சில் கூட இதெல்லாம் இல்லை:(


நாளெல்லாம் சுத்துனதுலே  உடல் சோர்ந்து தூக்கம் கண்ணைச் சுழட்டிக்கிட்டு வருது.  ரொம்ப லேசா அப்பப்பப் பாட்டு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. டப் டப்ன்னு ஒரு அஞ்சாறு சத்தம். ஓ.... 12 மணி ஆச்சு. பட்டாஸ் வெடிக்கறாங்க.  அம்புட்டுதான்  நிசப்தம் சூழ்ந்தது.  ஹேப்பி நியூ இயர்  டு த  ஹோல்வொர்ல்ட் னு  நினைச்சுக்கிட்டு  கோபாலுக்கு  வாழ்த்து  சொன்னால்.......   அசைவில்லாம அவர் வேற உலகில் இருந்தார்.

காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும். குட் நைட்.

தொடரும்.............:-)




15 comments:

said...

குட் மார்னிங்க். இப்ப விடிஞ்சிருக்கும் இல்லீங்களா?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

பின்னே... விடியாம என்ன? விடிஞ்சே போச்சு:-)

நாளும் கிழமையும் யாருக்காகக் காத்திருக்கு!!!

said...

நூலகம் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.

said...

மூனு பேர் கூட்டம்!!
வாசிப்பவர் நிலமையை யோசித்துப்பார்த்தேன்..பாவம்.

said...

ரெயின் டான்ஸ் ஆடுன மூணே மூணு பேருக்காக வாசிச்ச குழுவின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது :-))

இந்த ஹோட்டல்ல ரெஸ்டாரண்ட் ஒண்ணும் இல்லையா?. ஊரு சுத்தப்போன இடத்துல கூட அடுக்களைக்கு லீவு விட முடியலையே :-))))

said...

ஹ்ம்..பஸ் ..
அதெல்லாம் இங்க கனவு..

said...

ராத்திரியில் பஸ் - தில்லில இருந்தாலும் போகறது கஷ்டம் - ஊர் நடப்பு அப்படி!

திருச்சியில் கூட இரவில் ஒவ்வொரு அரை மணிக்கும் ஜங்ஷன் டு ஸ்ரீரங்கம் பஸ் இருக்கு! அ[எ]ப்பவும் கும்பல் தான்! :)

said...

ரெயின் டான்ஸ் ஆடுன மூணே மூணு பேருக்காக வாசிச்ச குழுவின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது :-))//

ரிப்பீட்டு

said...

ரெயின் டான்ஸ் ஆடுன மூணே மூணு பேருக்காக வாசிச்ச குழுவின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது :-))//

ரிப்பீட்டு

said...

ஹேப்பி நியூ இயர் டு த ஹோல்வொர்ல்ட்

said...

/தூரலினூடே குடையும் பிடிச்சுக்கிட்டு /

குடை பிடித்துப் போகும் அளவிற்கு குப்பையா?

தூரல் இல்லை ரீச்சர் தூறல்!!

கிணறுதான் தூர்ந்து போகும்!

விடமாட்டோமுல்ல :))

said...

கலர்கலர் முந்திரி அழகாக இருக்கின்றது.

முத்து மழையில் சிறுவர்களின் ஆட்டம் களை கட்டுகிறது.

said...

nice to hear about the library . wish we have the same facility in our chennai

said...

நூலகத்தில் எங்கு வேண்டுமானாலும் குடுத்து மாத்திக்கலாம் என்பதும், மூன்றே பேருக்காக வாசிச்சவங்களும், கும்பலே இல்லாத பேருந்து என ஒவ்வொண்ணும் புல்லரிக்குது டீச்சர்....

said...

எல்லாமே அருமை அற்புதம்