Sunday, February 28, 2010

அகத்தியருக்கு வயித்துவலி!

காதில் விழுந்ததும், வெல்லம் தின்னாப்போல இருந்துச்சு. கோபாலின் முகமோ, கவலையில். 'கதை எனக்குத் தெரியுமே'ன்னு என் மனசு கிடந்து துள்ளுது. 'ஒரு ராட்சஸனை முழுசா முழுங்குனா வயித்துவலி வராதா?' ன்னு கொக்கி போட்டேன். என்ன ஏதுன்னு அவர் கேட்கணும், 'இதுகூட உங்களுக்குத் தெரியலையா?'ன்னு ஒரு சின்ன அலட்டலோடக் கதையை நாம சொல்லணும்! :-)

மருந்தீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தோம். கருவறைமுன்னே நிக்கும்போது, எனக்காக 'மேட்டர் தேத்தும்' மும்முரத்தில், குருக்களிடம் 'ஸ்வாமிக்கு ஏன் மருந்தீஸ்வரர்ன்னு பெயர்?' கோபால் கேட்டார்.

"அதுவா? அகத்தியருக்கு வயித்துவலி வந்ததுன்னு மருந்து தந்தார்"

தேன்வந்து என் காதில் பாய்ஞ்சது அப்போதான். வெளிப் பிரகாரத்துலே ஒரு மேடையில் உக்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிச்சேன்(கோபாலுக்குத்தான்)

இல்வலன், வாதாபின்னு ரெண்டு ராட்சஸ அண்ணன்தம்பிகள். இவுங்களுக்கு என்ன காரணத்தாலோ பிராமணர்கள் மேல் தீராத வன்மம். அவுங்க காலத்துலே 'பெரியவர்' யாராவது இதுக்குக் காரணமான்னு தெரியலையே! இந்தக் குலத்தை ஒழிச்சுக் கட்டணுமுன்னு நினைச்சாலும் முடியலை. பேசாம முடிஞ்சவரைக்கும் இவுங்களைத் தின்னே தீர்க்கலாமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டாங்க.

எங்கியாவது பிராமணர்களைப் பார்த்தால் ரொம்ப வணக்கமாக, எங்க வீட்டுக்கு விருந்து சாப்பிடவரணுமுன்னு விநயமா வேண்டிக்குவாங்க. விருந்தாளி வந்ததும், அண்ணன்காரன் தனக்கிருந்த மாயசக்தியால் தன் தம்பி வாதாபியை ஆட்டுக்கிடாவா மாத்தி அதைக் கொன்னு, மட்டன் சுக்கா, மட்டன் குருமான்னு குழம்பு வச்சுருவான். விருந்தாளியும் வயிறு நிறைய இறைச்சிக் குழம்புன்னு வெட்டி விழுங்குவார். அந்தக் காலத்துலே பிராமணர்கள் நான் வெஜ் சாப்புடுவாங்களாம்.

சாப்பாடு ஆனதும் நிம்மதியா ஏப்பம் விட்டு ஓய்வெடுக்கும்போது,

" என் உடன்பிறப்பே.... தம்பி வாதாபி, அண்ணனிடம் ஓடி வா "

அருமையாக் கூப்பிடும் இல்வலனுக்கு ஒரு அபூர்வ வரம் கிடைச்சுருந்துச்சாம். இவன் யாரைக் கொன்னாலும், அவுங்க உயிரை மறுபடி யமலோகத்துலே இருந்து திரும்ப வரவழைக்க முடியுமாம்.

அருமை அண்ணன் கூப்பிட்டவுடன், விருந்தாளி வயித்தைக் கிழிச்சுக்கிட்டு,'இதோ வந்தேன் அண்ணா' ன்னு தம்பி வெளிவந்திருவார். வயிறு கிழிந்த விருந்தாளியின் கதை முடிஞ்சுரும். இப்படியே பலகாலமாக நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு சமயம் அகத்திய முனிவர் இவுங்களைச் சந்திச்சார். இவுங்களும் வழக்கம்போல அவரை விருந்துக்குக் கூப்பிட்டாங்க. இவரும் போனார். அமர்க்களமா சாப்பாடு ஆச்சு. இவர் எல்லாம் தெரிஞ்ச முனிவராச்சே. ஏப்பம் விட்டுத் தொப்பையைத் தடவிக்கிட்டே 'வாதாபி ஜீரணோ பவ' ன்னு சொன்னார்.

இதைக் கவனிச்ச அண்ணனுக்குப் பயம் வந்துருச்சு. 'தம்பி, உடன்பிறப்பே, வாதாபி சீக்கிரம் வா' ன்னு கூப்பிட்டான். ஒன்னும் நடக்கலை. அகத்தியர் சொல்றார், 'வாதாவி ஜீரணமாகிட்டான்'

இப்படி ஒரு ஆட்டை முழுசா முழுங்குனா வயித்துவலி வராம இருக்குமான்னேன்!

அப்புறம் இன்னும் கொஞ்சம் விசாரிச்சதுலே வேற ஒரு கதை கிடைச்சது. பாரதப்போரில் அடிபட்டி வீழ்ந்த வீரர்களுக்கு மருத்து தேவைப்பட்டது. எந்தெந்த மூலிகை, பச்சிலை எல்லாம் சீக்கிரம் காயத்தைக் குணப்படுத்துமுன்னு அகத்தியமுனிவருக்கு சிவபெருமான் உபதேசிச்சாராம். அதனால் இங்கே சிவனுக்கு மருந்தீஸ்வரர்ன்னு பெயர் வந்திருக்கு. அகத்தியர்தான் இங்கே 'அவசர உதவி ' மருத்துவத்துக்கு இன்சார்ஜா இருந்துருக்கார் அப்போ.

பொதுவா உயிரினங்களுக்கு இருக்கும் நோய்வகைகள் 4448. இதுலே எந்தெந்த நோய்க்கு எது மருந்து, மூலிகைகள் எதை எதை எப்படிக் கலக்கணும், எப்படி அவைகளை உபயோகிக்கணுமுன்னு ஈசன், அகத்தியருக்கு விளக்கினாராம். அதனால் இவருக்கு மருந்தீசர்ன்னு பெயர் வந்துருக்கு. வடமொழியில் இவர் ஔஷதீசர்.

பொதுவா தலபுராணமுன்னு கோவிலுக்கும், அங்கே இருக்கும் இறைவனுக்கும் ஒரு கதை இருக்கும். இங்கே என்னடான்னால்.... ஊருக்கே ஒரு கதை இருக்கு! தலத்துக்கே ஒரு தலப்புராணம்.

முன்னொரு காலத்தில் வான்மீகர் என்று ஒருவர் இருந்தார். இவரோட அப்பா, பிரம்ம வம்சத்தில் வந்த பிரசேதச முனிவர். வான்மீகருக்குச் சின்னவயசுலேயே சிலபல வேடுவர்களின் நட்பு கிடைச்சு அவுங்களோட ஒண்னாமண்ணாக் கிடந்து அலைஞ்சுருக்கார். எல்லா நண்பர்களும் நல்லவங்களாவா இருப்பாங்க? சில கூடா நட்பு, கெட்ட மனசுள்ளவர்களோடு சேர்ந்து இவரும் கெட்டலைஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். உயிர்க்கொலை, வழிப்பறின்னு எல்லாம் 'தண்ணி' பட்ட பாடு. தன் குலத்துக்கு உரிய செய்கைகள் மேல் ஒரு அலட்சியம். அப்பாவுக்கு ஒரே கவலை.

திடீர்னு ஒரு நாள் இவருக்கு அறிவுக் கண் திறந்தது. எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ? போகட்டும். எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமுல்லே? மனசாட்சி முழிச்சுக்கிச்சு. தன்னுடைய செய்கைகளுக்குத் தானே மனம் வருந்தி இருக்கார். தவறை உணர்ந்தவர்களுக்கு பாப விமோசனம் கிடைக்குமே! அந்த வகையில் நாரதர், இவரை ஒரு நாள் சந்திச்சு(?) ஸ்ரீ ராமனுடைய கதையை( ! ? ) உபதேசிச்சார். உடனே இவர் தவம் செஞ்சு புனிதராகி, ராமாயணம் என்ற காவியத்தை எழுதுனார். இவரைத்தான் வால்மீகின்னும் சொல்வாங்க.

இப்படியே (கதை)போய்க்கொண்டிருக்கும்போது மார்க்கண்டேய மகரிஷி இவரை ஒரு நாள் சந்திச்சார்! 'அடடா....... இத்தனை ஆயிரம் ஸ்லோகம் எழுதி ராமாயணம் எழுதி புண்ணியம் கிடைச்சது சந்தோஷம். ஆனா.... இவ்வளவு கஷ்டப்படாமலேயே புண்ணியம் கிடைக்க ஒரு ச்சான்ஸ் இருக்கே. அதை வுட்டுட்டீங்களே'ன்னார். 'அப்படியா சேதி? விளக்கமாச் சொல்லுங்கோ. செஞ்சுறலாம் நோ ஒர்ரீஸ். புண்ணியம் டபுளாகட்டுமே'ன்னார்.

"சிவபெருமானை வணங்கினால் ஆச்சு. நீங்க அப்படியே தென்னாட்டுப்பக்கம் நடையைக் கட்டுங்கோ. தென்னாடுடைய சிவன் என்பது இதனால்தானோ? சுயம்புவா அங்கே இருக்கார். எங்கே இருக்காருன்னு கண்டுபிடிக்க ஒரு சிரமமும் இல்லை. அந்த இடம் போகும்போது அவரே சொல்வார், சட்டுப்புட்டுன்னு கிளம்புங்கோ"

நடந்து நடந்து கிழக்குக் கடற்கரையோரம் போய்க்கிட்டே இருக்கும்போது, ' (அப்போல்லாம் கூட்டமே இல்லாத நாடா இருந்ததால் சுத்தமான இடங்களாத்தான் இருந்துருக்கும். மணலில் தைரியமா நடந்து போயிருப்பார்!) நான் இங்கே இருக்கேன்'ன்னு ஒரு அசரீரி கேட்டுச்சு. இடத்தைத் துழாவிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கம் இருந்துச்சு. தான் தோன்றி. சுயம்பு. மனம் உருக வழிபட்டு இருக்கார். சிவன், மனம் மகிழ்ந்து இவர்முன் தோன்றி ஆசீர்வதிச்சு, என்ன வரம் வேணுமுன்னு கேட்க, பாவ மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டுக் கூடவே 'தன் பெயர் உலகில் நிலைச்சு இருக்கணுமுன்னு ( ஆஹா.... பெயர் ஆசை யாரை விட்டது?) இந்த ஊருக்கு வான்மியூர்ன்னு பெயர் வைக்கணுமுன்னும் அப்பீல் செஞ்சார். அன்று முதல் இது வான்மியூர். மரியாதைக்குரிய 'திரு' சேர்ந்ததால் திருவான்மியூர் ஆச்சு!
நல்ல அருமையான கோவில். கோவிலோட வயசைக் கேட்டால் ஆளாளுக்கு ரெண்டாயிரம், மூவாயிரமுன்னு சொல்றாங்க. திருநாவுக்கரசரும், திரு ஞானசம்பந்தரும் வந்து வழிபட்டுப் பதிகங்கள் பாடி இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலம். கல்வெட்டுகள் கணக்குப் படி ஏழாம் நூற்றாண்டுன்னு சொல்லுது. கோவில் எழுப்பியது அந்தக் காலக்கட்டமா இருக்கணும். ரொம்ப விஸ்தாரமான இடம். கோபுரவாசலுக்கு முன் பெரிய திருக்குளம். சுத்தமா இருக்கு!!!!! நடுவில் மண்டபம் தங்கப்பெயிண்ட் அடிச்சுத் தகதகன்னு ஜொலிக்குது.
பிரதான கோபுரவாசலில் இருந்து கோவிலின் வெளிப்ரகாரம் வரை அருமையான மண்டப அமைப்பு. (சிங்கை சீனுவின் கோவிலை நினைவுபடுத்துச்சு). நுழைஞ்சு போனால் முதலில் புள்ளையார். விஜயகணபதி! இந்தப் பக்கம் பிரகாரத்தின் இன்னொரு மூலையில் மூணு விநாயகர்கள் இருக்காங்க.
அடுத்து தியாகராஜர் மண்டபம். இந்தக் கோவில் மூலவருக்கு ஔஷதீஸ்வரர், தியாகராஜர், வான்மீகநாதர், பால்வண்ண நாதர்ன்னு பல பெயர்கள் இருக்கு. இந்தக் கருங்கல் மண்டபத்துத் தூண்களிலே கண்ணப்பர்,(சிவலிங்கத்துலே ஒரு காலை வச்சுக்கிட்டு அம்பால் தன் கண்ணை நோண்டி எடுக்கறார்) ஆஞ்சநேயர், முருகன், விநாயகர், பழனி ஆண்டவர்னு இருக்காங்க. நம்ம ஜனங்கள், சந்தனம், குங்குமம், விபூதி, வெண்ணைன்னு பலவிதப் பொருட்களால் பூசி மெழுகி வச்சுருக்காங்க. நல்லா உத்துப் பார்க்கவேணும்.

கருவறை நோக்கிப்போனால் அங்குள்ள பிரகாரத்தில் அறுபத்துமூவரில் தொடங்கி அனைவரும். வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமரர், 108 சிவலிங்கங்கள், காலபைரவர், சிவகாமசுந்தரியுடன் நடராசர், கஜலக்ஷ்மி, வீரபாகுன்னு எல்லாரும் ஜே ஜே!

மூலவர் மேற்குப் பார்த்து இருக்காராம். (சிவலிங்கம் எந்த திசை பார்க்குதுன்னு எப்படி கண்டு பிடிப்பது?) கருவறை வாசல் மேற்கு பார்த்து இருக்கு. இதுக்கும் ஒரு கதை வச்சுருக்காங்க. அபய தீக்ஷிதர் என்னும் பக்தர் சாமியை தரிசிக்க வந்துருக்கார். அடைமழை, வெள்ளப்பெருக்கு. கடந்துவரமுடியலை. அவர் நிக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் சாமியின் முதுகு(??) தெரியுது. அபயக்குரலால் ஈசனை வழிபடறார். சிவலிங்கம் உடனே திரும்பி இந்தப்பக்கம் காமிச்சு, தரிசனம் கொடுத்ததாம். லிங்கத்தின் மேல் மாட்டுக்குளம்பு அடையாளம் ஒன்னு இருக்காம். இதுக்கான கதை, காமதேனு சாபத்தால், காட்டுப்பசுவா அலையும்போது லிங்கத்தில் காலிடறி இருக்கு. இந்தக் கோவிலுக்கு மட்டும் எப்படி ஏகப்பட்ட கதைகள் இருக்கு என்பது ஒரு ஆச்சரியம்தான். அதையெல்லாம் இன்னொருநாள் பேசலாம். (இப்பவே பதிவு நீண்டு போச்சு) ஒன்னே ஒன்னுமட்டும் சொல்லிக்கறேன்.

பாரத யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிஞ்சது ஒரு பெரிய துன்பியல் நிகழ்ச்சி. இந்தப் போருக்கு கண்ணனும் ஒருவிதத்தில் காரணகர்த்தாவா இருந்ததால் அவனுக்கும் பாவம் வந்து சேர்ந்துருச்சு. சாமியா இருந்தாலும் செஞ்ச பாவம் விட்டுப்போயிருமா? அதுக்குப் பரிகாரமா, பார்த்தசாரதி, இங்கே வந்து தீர்த்தக்குளங்களில் மூழ்கி எழுந்து வான்மீகநாதரை வழிபட்டார். சிவனின் தலையில் இருக்கும் கங்கையில் இருந்து அஞ்சு துளி கீழே சிந்தி, இங்கே அஞ்சு தீர்த்தமா ஆகி இருந்துச்சாம். ஜென்மநாசினி, பாவநாசினி, காமநாசினி, மோட்சதாயினி, ஞானதாயினின்னு அஞ்சு. (இப்ப இதெல்லாம் எங்கே போச்சுன்னு தெரியலை!)

அம்மன் பெயர் திரிபுரசுந்தரி.(அட! நம்ம திருப்பூ!) இந்தச் சந்நிதி முன்மண்டபத்தில் அட்டகாசமான அபூர்வ சிலைகள் பல இருக்கு! குதிரை வீரர்கள் சிலை ரொம்ப நுணுக்கமான ஆடைஅணியுடன் இருக்கு. நரசிம்மர், சரபேஸ்வரர்ன்னு கவனிச்சுப் பார்க்கணும். மேல் விதானத்தில் திருப்பாற்கடல் கடையும் ஸீன். இன்னும் அப்சரஸ்கள், அசுரர்கள், நாட்டியமங்கைகள்னு அழகனான சிற்பங்கள் அதிகம். தலையை உசத்திப் பார்த்துக் கொஞ்சம் கழுத்துவலி!

முக்கியமாச் சொல்லவேண்டியது என்னன்னா வருசம் 365 நாளும் இங்கே சமயச்சொற்பொழிவுகள் நடக்குது. இதுக்குன்னே தனியா ஒரு பெரிய ஹால் கட்டிவச்சுருக்காங்க. வெளிப்பிரகாரத்தின் ஒரு மூலையில் தலவிருட்சமா வன்னிமரம். அந்த மேடையச்சுத்தி நந்திகள். பார்க்கப் படு அம்சம்.

சந்தர்ப்பம் கிடைச்சால் தவறவிடாமல் இங்கே ஒரு நடைபோய் பார்த்துட்டு வாங்க.
ஒருநாள் மத்தியான வேளையில் கோவில் கோபுரத்தைப் படம் எடுக்கலாமுன்னு போனால் குளக்கரையில் நின்னுக்கிட்டு இருந்த வண்டிகள் ஒன்னில் சின்னதா சிறு தீ எரிஞ்சது. ஆஹா..... காரில் மர்மமான முறையில் தீப்பிடித்ததுன்னு பத்திரிகையில் அப்பப்போ வரும் செய்திகள் உண்மைதான் போல. நம்ம டிரைவரிடம் சொல்லி, அபாயச்சங்கு ஊதவச்சேன். அக்கம்பக்கம் வந்து மண்ணள்ளிப்போட்டு அணைச்சது.

26 comments:

said...

அருமையாக இருந்தது குஜராத் பயணத் தொடர். மிக்க நன்றி டீச்சர்.
இது என்ன ஓர வஞ்சனை, மருந்தீஸ்வரர் பற்றி எழுதிவிட்டு, ரோட்டின் இடையில் இருக்கும் வால்மீகியின் கோவிலை விட்டு விட்டீர்கள். அவரால்தான் கோவிலே வந்தது. அவரின் கோவிலைப் புறக்கணித்தது சரியா?. ஒரு குட்டிப் படம் போட்டுருக்கலாமே. நான் பலமுறை இந்தக் கோவிலின் அருகின் இருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்தாலும்,ஏனே இந்தக் கோவிலுக்குப் போகவில்லை. மறுமுறை சென்னை வரும் போது போகவேண்டும். நன்றி டீச்சர்.

said...

{அந்தக் காலத்துலே பிராமணர்கள் நான் வெஜ் சாப்புடுவாங்களாம்.
}

டீச்சர்,இந்தக் காலத்துலயும்தான் சாப்பிடறாங்க !

:))

நல்ல கதை சொல்லி போல நீங்க..

said...

கடைசியா நம்ம பக்கமும் போக ஆரம்பிச்சாச்சா?!! :))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

எல்லாத்துக்கும் நேரம்ன்னு ஒன்னு வரணும். 'குட்டிப்படம்' போடணுமா? போட்டாப் போச்சு:-)

said...

ஆஹா நிறைய கதைகள் இன்னைக்கு இருக்கே டீச்சர் :)

இன்னும் ஹோலிக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்ன்றது வரலயே?

said...

வாங்க அறிவன்..
அப்போ 'அது' அஃபீஷியல்:-)

said...

வாங்க கொத்ஸ்.

நம்ம பக்கமுன்னு விட்டுறமுடியுதா?

போனவருசம்(!) போய்வந்ததை இப்பத்தான் எழுதறேன். நேரம் கிடைக்கறதில்லைப்பா:(

said...

வாங்க நான் ஆதவன்.

அதுவா? நேத்து மாசி மகம். அதான் பெருமாள் வீதி உலா! கருடசேவை!

said...

வால்மீகிதான் கதை எழுதினார்னா அவருக்கே நிறைய கதை இருக்கே. புற்றிலிருந்து வந்ததால் அவருக்கு வால்மீகின்னு பெயர்னு சொல்லுவாங்க இல்லையா.
அவர் இங்க தமிழ்நாட்டில இருந்ததற்கு இன்னோரு அடையாளம் லவகுசா கோவில் பூந்தமல்லியில் இருக்கே. அதில சீதை கர்ப்பிணி கோலத்தில் ஒரு அபூர்வக் காட்சியாகத் தரிசனம் கொடுக்கிறார்;(

said...

// பொதுவா உயிரினங்களுக்கு இருக்கும் நோய்வகைகள் 4448.//

4448 எண்ணிக்கை அந்தக்காலத்துலே. அப்ப சிக்கன் குனியா, ரோஸ் ஃபீவர் எல்லாம் கிடையாது. ஐட்ஸ் வல்லை. ஸ்வைன் ஃப்ளூவும் எதுவுமே இல்லை.

இந்தக்காலத்து நோய் வகைகள் லேடஸ்ட் ஸென்ஸஸ் படி 44,44,44,4448 அப்படியோவ் !!

இதுலேகூட ஒரு நோய் மட்டும் நாட் இன்க்ளுடட். (கிடையாதாம்) . என் நண்பர் தமிழாசிரியர் சொல்றார். அது என்னது ?அப்படின்னு ஆவலோட கேட்டேன்.

அது 1237 ல வள்ளுவர் சொல்லியிருக்காரு. நீங்களே போய் படிச்சுக்கங்க.. என்று சொல்லிப்போய்விட்டார்.

மெனக்கட்டு, வீட்டுக்கு வந்து திருக்குறள் புத்தகத்தைக் குடஞ்சு கண்டுபிடிச்சேன். ஆஹா !1 கண்டுபிடிச்சேன்.

காலை அரும்பிப் பகல் எல்லம் போதுஆகி,
மாலை மலரும், இந்நோய் ...

அர்த்தம் சரியா புரியல்ல. வீட்டுக்கார அம்மாதான் அந்தக்காலத்து தமிழ் ஆசிரியர் ஆச்சே, அப்படின்னு நினச்சுகிட்டு,
" இங்கன ஒரு நிமிசம் வந்து இதுக்கு அருத்தம் சொல்லேன். " என்றேன்.

வந்து நின்ற கிழவி, குறளை ஒரு தரம் படித்துவிட்டு, என்னைப் பார்த்து முறைத்துவிட்டு, " ஏங்க.. வெயில் ரொம்ப அதிகமாயிடுத்தோ! " அப்படிங்கறாக.

ஏங்க !! ப்ள்ட் டெஸ்ட், எக்ஸ் ரே, ஸ்கான் எதுவுமே இல்லாம கண்டுபிடிக்கற நோய் இதுதானோ !!

மருந்தீஸ்வரர் துணை.

சுப்பு ரத்தினம்.

said...

அங்க கோசாலை இருக்கு.ஆத்திகீரை மாட்டுக்கு கொடுக்க விடுவா. அபிஷேகம், ஆர்த்தி போது ஒரு ஓதுவார் ஒருவர் சிவாச்சரியாரின் ஓடி ஓடி ஓடி நின்று உட்கலந்த ஜோதியை பாடுவார் . அற்புதமான vibrations ஆ இருக்கும். professor saab ஐ பாக்கலையா எதுதாப்ல? நிறைய நாள்கள் திருப்பணி நடக்காம இருந்து அப்புறம் காஞ்சி மட உபயத்தால கைங்கர்யம் நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆறுபடை வீடு என்றோ? பக்கத்துல தானே.2 ம் ஒரேனாள் முடியாது. இதை பாத்துட்டு அதுக்கு போறத்துக்குள மூடிடுறா

said...

// நம்ம ஜனங்கள், சந்தனம், குங்குமம், விபூதி, வெண்ணைன்னு பலவிதப் பொருட்களால் பூசி மெழுகி வச்சுருக்காங்க. நல்லா உத்துப் பார்க்கவேணும்.//

அது ஒரு பெரிய கொடுமை டீச்சர்.. ஆயிரக்கணக்கான காலங்களை தாங்கி நிலைச்சு நிற்கும் சிற்பங்கள், இந்த மெழுகல்களால் என்னாகுமோன்னு தோணும்.அங்கங்கே கிண்ணங்கள் வெச்சிருந்தாலும், மக்களுக்கு இப்படி மெழுகுவதில்தான் விருப்பம் போலிருக்கு.

தீ எரியும் ட்ரக்.. கடவுளே!!அவர்தான் உங்களை தகுந்த சமயத்தில் அனுப்பி காப்பாத்த வெச்சிருக்கார்.

said...

திருவான்மியூர் கோயில்,குளம்,அழகு. கதைகளும் அறிந்து கொண்டேன்.

said...

// அந்தக் காலத்துலே பிராமணர்கள் நான் வெஜ் சாப்புடுவாங்களாம்.//

பிராமணர்கள் இல்லை முனிவர்கள்

said...

வாங்க வல்லி.

அதென்ன...புத்துக்கும் வாலுக்கும் என்ன சம்பந்தம்?

எனக்குத் தெரிஞ்ச அக்கா ஒருத்தர், அவுங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி என்றதால் அவுங்க பொண்ணுக்கு 'ஆஷா'ன்னு பெயர் வச்சுருக்கோமுன்னு சொன்னதைபோல இருக்கே!

அதெப்படின்னு கேக்காதீங்க! A வுக்கு A வாம்:-)))

அது இருக்கட்டும். அந்த கர்ப்பிணி சீதை இருப்பது கோயம்பேடாச்சே!

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா.

நீங்க சொல்லும் அந்த நோய்க்கு 'தடா' போட்டா தேவலை. ஏற்கெனவே இந்த நோய் பீடிச்சுத்தான் , இந்திய ஜனத்தொகை அளவுக்குமீறி வீங்கிக்கிடக்கு.


மீனாட்சி அக்கா மொறைச்சது ரொம்பச்சரி:-))))

said...

வாங்க ஜெயஸ்ரீ.

தீபாராதனை முடிஞ்சபிறகுதான் போயிருந்தோம் போல. சந்நிதியில் அவ்வளவாக் கூட்டமில்லை.

அறுபடை வீடையும் ஒருநாள் எழுதணும். நிறையதடவை போயிட்டு வந்தாச்சு. அதென்னவோ எழுத நேரம் கூடி வரலை:(

said...

வாங்க அமைதிச் சாரல்.

பிடிப் பிடியா விபூதியையும் குங்குமத்தையும் அள்ளிக் கையில் போடாமல் ஒரு தட்டுலே வச்சுட்டால் அவுங்கவுங்க தொட்டு நெத்தியில் இட்டுக்கலாம்தானே!

ஃபிஜித் தீவுகளில் இந்துக்கோவில்களில் தீபாராதனையை சாமி முன் உயர்த்தி நமக்குக் காமிப்பதோடு சரி. நாம் நின்ன இடத்தில் இருந்தே மானசீகமாத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கணும். கடைசியில் அங்கிருக்கும் ஒரு பெஞ்சுலே தீபாராதனை செஞ்ச தீபத்தியும் தட்டுகளில் விபூதி குங்குமம் வச்சுடுவாங்க. வேணும் என்பவர்கள் விளக்கு ஜோதியை தொட்டுக் கும்பிட்டு, விபூதியோ குங்குமமோ தாமே எடுத்துக்கலாம்.

தட்டில் விழும் தட்சிணையை பொருட்படுத்தாமல் இருந்தால்தான் இப்படி நடக்க வாய்ப்புண்டு.

ஆனால் இங்கே தட்டில் போடும் அளவைப் பார்த்துத்தானே பக்தர்களுக்கு மரியாதை:(

said...

வாங்க மாதேவி.

குளம் நிஜமாவே அழகு. நல்ல சுத்தமும் கூட!

மயிலை கபாலி குளத்தில் இப்பத்தான் ரெண்டு வாரம்முன்பு தெப்போத்ஸவம். ஆனால் நேத்துப் பார்த்தால் ஒரே ப்ளாஸ்டிக் குப்பை மிதக்குதுப்பா:(

said...

வாங்க எல் கே.

//பிராமணர்கள் இல்லை முனிவர்கள்//

அச்சச்சோ.....முனிவர்கள் மட்டும்தானா?

தெரியாமல் போச்சே!!!!!

said...

பல தகவலுக்கு நன்றி அம்மா.

//.(அட! நம்ம திருப்பூ!) // :)

வடமொழியில் ஔஷதாலாய என்றல் மருத்துவமனை என்று அர்த்தம், சென்னை தங்கசாலையில் மார்வடிகளால் இன்றும் இலவசமாக நடத்தப்படும் ஆயுர்வேத மருத்துவமனைக்கு வெங்கடேச ஔஷதாலாய என்று பெயர். ( குறிப்பு - இது என்னை போன்ற ஏழைகளுக்கு மட்டுமே)

//எனக்குத் தெரிஞ்ச அக்கா ஒருத்தர், அவுங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி என்றதால் அவுங்க பொண்ணுக்கு 'ஆஷா'ன்னு பெயர் வச்சுருக்கோமுன்னு சொன்னதைபோல இருக்கே!

அதெப்படின்னு கேக்காதீங்க! A வுக்கு A வாம்:-))) //

;-)))))))))

said...

திருவான்மியூர் கோயில்,குளம்,அழகு.

said...

வாங்க லோகன்.

ராஜஸ்தானிகள் நிறைய இலவச மருத்துவமனை வச்சுருக்காங்க. அதேபோல் ராமகிருஷ்ண மடமும் அங்கங்கே இலவச சிகிச்சை முகாம் நடத்துது. ப்ளட் டெஸ்ட்க்கு பத்து ரூபாய்தான் சார்ஜ்ன்னு கேள்வி!

said...

வாங்க சங்கவி.

ஆமாம்ங்க. அழகாத்தான் இருக்கு. கூடவே சுத்தமாவும்!

said...

இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கு. இப்பத் தான் படிச்சேன்.

//சிவலிங்கம் எந்த திசை பார்க்குதுன்னு எப்படி கண்டு பிடிப்பது?// ஏதோ, என்னாலானது: சிவலிங்கத்தின் ஆவுடையப்பர் வடக்கு நோக்கி இருக்கும். வடக்கு நோக்கின லிங்கத்துக்கு, ஆவுடை சார் ரைட்டுல பாத்துனு இருப்பாருன்னு கேள்வி. பெரியவங்க (ஜெயஸ்ரீ, சூரி சார்) இருக்கற இடம். அவங்க சொல்லட்டும்.

said...

வாங்க கெக்கே பிக்குணி.

ஆ............ உடையாரைப் பார்க்கணுமா? ஆஹா.... தெரியாமப் போச்சே! தகவலுக்கு நன்றி.

இந்தக் குறிப்பிட்டக் கோவிலில் சிவன் மேற்கே திரும்பி நின்னுட்டார். அப்ப ஆவுடையாரும் திரும்புனாரான்னு தெரியலையே.......