Friday, September 29, 2006

எவ்ரிடே மனிதர்கள் -18 கஸ்தூரி

"கஸ்தூரி ஆண்ட்டி வீட்டுலே பூஜைக்குக் கூப்புட்டுருக்காங்க, வர்றியா?"


"வாட் பூஜை? யூ நோ தட் ஐ டோண்ட் பிலீவ் இன் காட்"


" அது பரவாயில்லை. உனக்குத்தான் புடவை கட்டிக்கப் பிடிக்குமே. ஒரு ச்சான்ஸ் கிடைச்சிருக்கு."


" புடவையா? ................ஓக்கே."


எப்படியோ புடவைன்ற தூண்டிலைப் போட்டு மகளை இழுத்துக்கிட்டு பூஜைக்குப் போனேன். இவ நல்லா உயரமா இருக்கறதாலே புடவை கட்டினாக் கொஞ்சம் அழகாத்தான் இருக்கு. அதிலேயும் அங்கே வர்ற நம்ம சங்காதிகள் " யூ லுக் ஸோ நைஸ்"ன்னு சொல்றது இவளுக்கும் பிடிச்சிருக்கு.


அதே சமயம், நம்ம பழக்க வழக்கங்கள், கலை கலாச்சார விஷயங்களை இவ மனசுலே ஒரு மூலையில் எங்கியாவது விதைக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு.
இங்கே நாங்க வந்தப்பதான் தமிழ்நாட்டுக்காரங்க யாருமெ இல்லையே. அதுக்கப்புறம் ஒரு சிலர் வந்தாலும் அவ்வளவா பூஜை, புனஸ்காரம்னு இல்லை. எப்பவாவது ஒருத்தரை ஒருத்தர் விஸிட் பண்ணறதோட சரி.எட்டு வருசம் கழிச்சுத் தமிழ்ச்சங்கம் தொடங்குன பிறகுதான் கொஞ்சம் கலை, மொழின்னு பசங்களுக்கு அறிமுகம் ஆச்சு.


இந்தக் காலக்கட்டத்துலேதான் நம்ம டி.என். கிருஷ்ணன், வயலின் வித்தகர் இங்கே நம்ம ஊருக்கு ஒரு நிகழ்ச்சி கொடுக்க வந்துருந்தார். காஞ்சமாடு கம்பங்கொல்லை பார்த்த மாதிரி பாய்ஞ்சோம். நூறு பேருக்கும் கம்மியாத்தான் அரங்குலே இருந்தாங்க. அப்பத்தான் அங்கே வச்சு நம்ம கஸ்தூரியைப் பார்த்தோம். குளிருக்குப் பயந்து நாங்கெல்லாம் கம்பளி உடுப்புலே புதைஞ்சுக்கிட்டு இருந்தப்பப் 'பளிச்'னு பட்டுப்புடவை நம்ம கண்களை இழுத்துருச்சு.


சிங்கப்பூர்க்காரவுங்களாம். பேச்சுவாக்குலே, இங்கெ அவுங்க வந்து ஒரு மாசம் ஆச்சுன்னு சொன்னாங்க. மகன் யூனியிலே படிக்கிறாராம். நம்ம வீடு யூனிக்குப் பக்கத்துலேதானே இருக்குன்னு சொல்லி அவுங்க வீடு எங்கேன்னுகேட்டா.......... இடம் சொன்னாங்க. அட! நம்ம தெருவுக்கு எதுத்த தெரு. இவ்வளோ போதாதா?


சிங்கப்பூர்லே இருந்துட்டு இங்கே வந்துருக்காங்க. ஆனா கோவைதான் சொந்த ஊராம். மலேசியாக்காரரைக் கல்யாணம் கட்டி, சிங்கப்பூர்லெ பல வருசங்கள் இருந்துட்டு, இப்ப இங்கெ வந்துருக்காங்க. சிங்கையிலே டீச்சரா வேலை பார்த்துருக்காங்க. ரேடியோவுலே பாட்டெல்லாம் பாடி இருக்காங்க.
நம்ம தமிழ்ச்சங்கத்துலே நாங்க ஆரம்பிச்சிருந்த தமிழ் வகுப்புகளுக்கு முறையான ஆசிரியர்கள் இல்லாம நாங்களே வாரம் ஒருத்தர்ன்னு வகுப்புகள் நடத்திக்கிட்டு இருந்தோம். புள்ளைகள் எல்லாம் ஒண்ணு, டீச்சர்கள் மட்டும் வெவ்வெறு. இதுனாலே என்ன பாடம் நடத்தறோம், பிள்ளைகள் எவ்வளவு தூரம் அதைக் கத்துக்கிட்டாங்கன்னு பார்க்க ஒருதொடர்பில்லாம இருந்துச்சு. அதுலேயும் எங்க வீட்டுக்காரர் வகுப்பு எடுக்கப்போனா, வெறும் ரிவிஷன் வச்சே சமாளிச்சுருவார். இப்ப கஸ்தூரிக்கு ப்ராப்பர் டீச்சிங் அனுபவம் இருந்ததாலே அவுங்களையே டீச்சராப் புடிச்சுப் போட்டுட்டோம்.
அவுங்களும், இதுக்கெல்லாம் அசராம, சிங்கைப் பாடத்திட்டத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் வரவழைச்சு வகுப்பு நடத்தினாங்க. எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்துருச்சு. மொழியின் கூடவே நம்ம கலைகளும் வளரணும்தானே?தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள், விழாக்கள் இதுக்கெல்லாம் கஸ்தூரியின் பாட்டு இல்லாமல் முடியாதுன்னும் ஆகிருச்சு.நாந்தானே கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர். எனக்கும் இவுங்களை விட்டா வேற யார் இருக்கா?


கொஞ்சநாளிலே இங்கே சிலருக்குப் பாட்டுக் கத்துக்கற ஆர்வம் உண்டுன்னு தெரிஞ்சதும் பாட்டு வகுப்பும் ஆரம்பிச்சாங்க.வாரம் ஒரு நாள் அவுங்க வீட்டுலெ 'ச ப ச'ன்னு இருந்துச்சு. இங்கே இருக்கும் யூனி நூலகத்துலேயும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இப்படி படு பிஸியா இருந்தாலும், நம்ம பண்டிகைகள், நல்ல நாள், கிழமைகள்ன்னு வந்தா எதையும் விடாமக் கொண்டாடுவாங்க. எங்களைப்போல வீட்டுவரையில் கொண்டாடாம, எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டாடுவாங்க. அதுலெ பாட்டு, நடனம்ன்னு கலை நிகழ்ச்சிகளும் இருக்கும்.



இங்கே எங்களுக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் குஷியாப் போச்சு. மத்த தோழியர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு.உள்ளேயே ச்சும்மாக் கிடக்கற புடவை, நகைகளை வெளியே எடுக்கறது, உடுக்கறதுன்னு ஜாலிதான். ஆனா வீட்டு ஆம்பிளைகளுக்குத்தான் கஷ்டமாப் போச்சு. 'புடவையெல்லாம் வேணாம், இங்கே யாரு கட்டறா?'ன்னு சொல்லி அவுங்க வயித்துலேயும், பர்ஸுலேயும் பாலை வார்த்துக்கிட்டு இருந்தோமா, இப்பக் கஸ்தூரி வருகையாலே, 'கட்டிக்கப்புடவையே இல்லை. இன்னும் நாலு வாங்கிக்கணும்'னு ஆச்சு.


புடவைன்னதும்தான் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. கஸ்தூரி எப்பவும் புடவைதான் கட்டுவாங்க. நாங்கெல்லாம் குளுருக்குப் பயந்து அதையெல்லாம் ஏறக்கட்டி நாளாச்சு. பட்டுப்புடவைகள் எக்கச்சக்கமா வச்சிருக்காங்க. அந்தக் காம்பினேஷன்கள் பார்த்து வச்சுக்கிட்டு அடுத்தமுறை ஊருக்குப் போறப்ப மறக்காம வேற காம்பினேஷன்லே வாங்கிவர ஆரம்பிச்சோம்:-)))


சிங்கையிலெ ரொம்ப நாளா இருந்ததாலெ மலேசியர்கள், சீனர்கள்ன்னு அவுங்களுக்கு நட்பு வட்டம் இருந்துச்சு.இங்கே தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள்ன்னு அந்த வட்டம் இப்ப ரொம்பப் பெரூசாவே ஆகிருச்சு. அவுங்க வீட்டு நவராத்திரி கொலுவுக்கு பகுதிவாரியா விருந்தாளி வருகை . அதுவும் ஒரு விதத்துலே நல்லதுதான்.


எல்லாரும் கூடும்போது பொது மொழியா இங்கிலீஷ் வந்துருதே. இந்தியை வச்சுக்கலாமுன்னா சிலருக்கு மொழித்தகராறு.இன்னொருத் தமிழ்க்காரரைப் பார்த்தவுடன் தமிழ் தானாய் வந்துருது. அக்கம்பக்கம் உக்கார்ந்து இருக்கறவங்களுக்கு மொழி தெரியலைன்னா அது ஒரு சங்கடம். அநாகரிகமும் கூட. தமிழ்லே பேசிட்டு, அடுத்தவங்களுக்காக அதை ஆங்கிலத்துலே மொழி பெயர்த்துக்கிட்டுன்னு ஒரே சல்லியம் போங்க. அதனாலெ எங்களுக்கு இந்தப் 'பிரித்தழைக்கும் கொள்கை' பிடிச்சுப்போச்சு.


இந்தக் காலத்துலே விரதங்கள், பூஜைகள் எல்லாம் சம்பிரதாயமா செஞ்சுக்கிட்டு இருக்கறதே பெரிய விஷயம் இல்லையா?எங்க வீட்டுலே நடக்கும் பூஜைகளுக்கு நம்ம கஸ்தூரிதான் ஆஸ்த்தான பண்டிதர். லேடி பண்டிட். நம்ம வீடு எவ்வளோ முன்னேறிடுச்சுப் பாருங்க. நல்லா நடத்தி வைப்பாங்க. நமக்கும் சரி, நம்ம விருந்தினர்களுக்கும் சரி, பூஜை முடிஞ்சாப் பூரணத்திருப்தி.



நடத்தி வைக்கும் பண்டிட்டுக்குத் தட்சிணை கொடுக்கணும் இல்லையா? நாங்களும் எதோ 'சாஸ்த்திரத்துக்கு'த் தட்சணை கொடுப்போம். உடனே அதை அப்படியே எங்ககிட்டே திருப்பித் தந்து, கோயிலுக்குப் போகும்போது அங்கெ உண்டியல்லே சேர்த்துறச் சொல்லிருவாங்க. சாமிக்கும் ஒரு வருமானம் ஆச்சு:-))



இவ்வளோ ஆச்சாரமா இருக்காங்களே, அப்ப மடிசஞ்சியா இருப்பாங்கன்னு நினைச்சுறக்கூடாது. நல்ல நகைச்சுவையோடு ஜாலியாப் பேசுவாங்க. வயசு,காசு பணம், சாதி வித்தியாசம் ஏதும் இல்லாம எல்லாத் தரப்புலேயும் நண்பர்கள் இருக்காங்க.அவுங்களோட ஒரு மருமகள்கூட இங்கத்துப் பொண்ணுதான்.


இப்ப எதுக்கு மாஞ்சுமாஞ்சு கஸ்தூரியைப் பத்திச் சொல்றேனா? அவுங்க இந்த ஊரைவிட்டு வேற ஊருக்குப்போறாங்க. எங்களுக்குத்தான் கொஞ்சம் கை உடைஞ்சதுபோல இருக்கப்போகுது.


பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))



அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?


அடுத்த வாரம்: மீனாட்சியம்மா


நன்றி: தமிழோவியம்

38 comments:

said...

எங்க வராங்க? எடிஸன், நியூ ஜெர்ஸி தானே வராங்க? :D

said...

வாங்க கொத்ஸ்.

//எடிஸன், நியூ ஜெர்ஸி //

நோ ச்சான்ஸ்(-:

உள்நாடுதான். ஆக்லாந்து

said...

துளசி,
ஊருக்கு ஒரு கஸ்தூரி அம்மா இருந்தாப் போறும்ப்பா.

வேற தனியா
கல்சுரல் அம்பாசடர் வேண்டாம்.
ஆக்லாண்ட் தள்ளி இருக்கா. அடுத்த பாகம்தானே. ஒரு ஆறு மாதத்துக்கு ஒருதடவை கூட போய்ப் பாக்கலாமே.அவங்களுக்கும் நண்பியைப் பார்த்த சந்தோஷம் வரும். அவங்களுக்குப் பிறகுப் பாட்டு மிஸ் வேணும்னா நான் வேணா வரேன்.என்ன ஒரு வீடு,எங்க அரோனாக்கு ஒரு பூல்,
எங்க வீட்டுக்காரருக்கு காணி நிலம்
எல்லாம் ஏற்பாடு சேஞ்சிருங்க,.
:-))

said...

புடவைக்கு உள்ள அழகே தனிதான்.(ஒரு ஆணின் பார்வையில்):-))
இங்க சில சமயம் பள்ளி மாணவர்கள் "சுமூக நல்லிணக்கம் நாள்" அன்று மல்லாய் மற்றும் சீன பெண்கள்
சுடிதார் மட்டும் புடவை கட்டி பள்ளிக்குச்செல்லும் அழகே தனி.
என்ன அவுங்க பள்ளி போகும் நேரம் பார்த்து வேலைக்கு/ வெளியில் போகவேண்டும்.
தப்பா நினைக்காதீங்க்!!!
புடவை அழகைபாக்கத்தான்.:-))

said...

வாங்க வல்லி.

ஆக்லாந்து உள்நாடுன்னாலும் அங்கே போறக் காசுக்கு ஆஸ்தராலியா போயிட்டு
வந்துறலாம்.

அவுங்களுக்கு அங்கே நல்லா இருக்கும். ரெண்டு மகன், பேரன் பேத்தி எல்லாம்
ஆக்லாந்துதான். அதுவுமில்லாம இங்கெ மாதிரி இல்லப்பா. அது பெரிய சிட்டி.
ஒரு மில்லியன் ஜனம் இருக்கற ஊர்.

அடுத்த வாரம் ஜேசுதாஸ் கச்சேரி கூட இருக்கு.

உங்க அப்ளிகேஷன் பரிசீலணையில் உள்ளது:-))))

said...

வாங்க குமார்.

உங்க 'வார்த்தையை' அப்படியே நம்பறோம்:-))))

said...

ஒரு கல்ச்சுரல் அம்பாஸடர்
மற்றொரு கல்ச்சுரல் அம்பாஸடரைப்
பாராட்டி எழுதியது

said...

//அதனாலெ எங்களுக்கு இந்தப் 'பிரித்தழைக்கும் கொள்கை' பிடிச்சுப்போச்சு.//

இந்தக் கொள்கை இப்படி உலகம் முழுக்க பரவிடுச்சா? அச்சச்சோ! பரவாயில்லை. நல்லது தான். ஒரு முறை தமிழரா வந்து விருந்து சாப்பிடலாம். அடுத்த முறை இந்தியரா வந்து விருந்து சாப்பிடலாம். அதனால் இந்தக் கொள்கைய நன்கு பரப்பவும்! கொ.ப.செ பதவி யாருக்கு கொடுக்கப் போறீங்க :-)

said...

சிஜி,

வாங்க வாங்க.

இப்படித்தான் பெரியவுங்க ஒருத்தரை ஒருத்தர் பாராட்டணும்.

ரெண்டு நாட்டு பிரதமர்கள், ஜனாதிபதிகள் வந்தா கை குலுக்கிப் போட்டோ
எடுத்து பேப்பர்லே வருதுல்லெ? :-)))))

said...

KRS,

கொ.ப.செ. பதவி உங்களுக்குத்தான். நீங்கதான் க்யூவுலெ முதல்:-))))

நிறைய மொழிகள் தெரிஞ்சு வச்சுக்கிட்டா இப்படியெல்லாம் பூந்து வெளையாடலாம்:-)))

said...

//....எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டாடுவாங்க.....//

இதுக்கு நிறைய பொருமை, நல்ல மனசு வேணுங்க...

:-)

said...

வாங்க நன்மனம்.

பொறுமை இல்லேன்னா கஷ்டம்தான். எல்லாரும் வந்து போனபிறகு
வீட்டைச் சுத்தம் செஞ்சு பாத்திரம் தேச்சு அடுக்கின்னு எவ்வளவு வேலை?
நாலைஞ்சு மணி நேரம் சிரிச்ச மூஞ்சோடவே இருக்கணும். அது ஒரு
தொல்லை:-))))

said...

கஸ்தூரிகள் இப்போது அருகிவரும் இனம் :)) வேகமான வாழ்க்கைச்சூழலில் வேறு கலாசாரத்திடையேயும் நட்பில்லா வானிலையிலும் நமது பழக்கங்களை கடைபிடிப்பது என்பது கடினம்தான். கிரியாஊக்கியாக ஒருவர் இருந்தால் மற்றவர்களையும் அது தொற்றிக் கொள்ளுதல் இயல்பு. உங்கள் இழப்பு புரிந்து கொள்ள முடிகிறது.
இருந்தாலும் நீங்களே அத்தகைய ஒருவர்தான் :D

said...

வாங்க மணியன்.

//.....அருகிவரும் இனம்//

சரியாத்தான் சொன்னீங்க.

அவ்வளவு பொறுமை எனக்கு இல்லீங்களே.

இப்ப நேரம் கொஞ்சம் கிடைச்சா , பதிவு எழுத ஓடி வந்துடறேன். வேலை செய்யறதுக்கு உடம்பு வணங்கறதில்லையாக்கும்(-:

said...

பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))

அடடடா.. என்னா கவலை, என்னா கவலை.. இதுவரைக்கும் நான் புடவை உடுத்தறதுக்குத்தான் கேக்காங்கன்னுல்ல நினைச்சிக்கிட்டிருந்தேன்..



அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?//

அதுவும் சரிதான்..

said...

வாங்க டிபிஆர்ஜோ.

பார்த்தீங்களா, நீங்களே அதுவும் சரின்னுட்டீங்க:-)))

said...

கஸ்தூரி அக்கா போனா என்ன‌ங்க, அவ‌ங்க‌ இட‌த்த நீங்க நிர‌ப்பிட வேண்டிய‌துதானே. அதுக்கு வேண்டிய‌ எல்லாத‌குதியும்தான் உங்க கிட்ட‌ இருக்கே.( பாட்டுப் பாட வ‌ரும்ல‌?).

Atleast அந்த புடவை க‌லாச்சார‌த்த‌யாவ‌து continue ப‌ண்ண‌லாமே. எதுக்கு அதெல்லாம் பீரோவுல தூங்கப் போவ‌னும்?

இப்ப‌ உங்க கொலுவுக்கு வ‌ர்ர‌வ‌ங்கள பட்டுப்பு‌டவை க‌ட்டிகிட்டு வ‌ரச் சொல்ல‌லாம். தீபாவளி வேற வ‌ர‌ப்போவுது, RMKV யில புதுசு புதுசா ப‌ட்டுப் புடவை வ‌ருதாம். மாமாகிட்ட சொல்லி DHL ல்ல வ‌ர‌வ‌ச்சிட வேண்டிய‌துதானே.

Note: (இந்த பின்னூட்டத்த மாமா‌கிட்ட காட்டாம ம‌றைச்சுடுங்க‌)

said...

மதி,


ஆரெம்கேவி புடவை என்னென்ன கலர் காம்பினேஷன்லெ இருக்குன்னு
'கண்ண்ணாலே' பார்த்துட்டுத்தான் வாங்கணும்.

பாட்டெல்லாம் வராது. உங்களை மாதிரி ஆளுங்க வந்து பாடினால்தான் உண்டு.

உங்களுக்கு மாமாவைப் பத்தித் தெரியாது. அவர் பதிவைப் படிக்க மாட்டார்.
பின்னூட்ட ரசிகர். அதை மட்டும் படிச்சுட்டு அதுக்கு காமெண்ட்ஸ் கொடுத்துக்கிட்டே
இருப்பார்:-))))

புடவை வரைக்கும் சரி. ஆனா பொறுமைக்கு எங்கே போறது? எந்தக்கடைலே
கிடைக்குமுன்னு சொல்லுங்க:-)

said...

கஸ்தூரி மான்குட்டியாம்
அது கண்ணீரை ஏன் சிந்துதாம்
வேறூரும் புறப்பட்டதோ
பட்டுத் துணிகளும் மூடப்பட்டதோ!

(ராஜநடைங்குற படத்துப் பாட்டைக் கொஞ்சம் மாத்தீருக்கேன்.)

டீச்சர்...நம்மவங்க நிகழ்ச்சிக்குப் பட்டுலயோ சேலையிலையோ போறது பெரிசில்ல...வெளியூர்க்காரங்க நிகழ்ச்சிக்கு நம்மூர் பாணியில போறதுதான் கலக்கல். எல்லாரும் என்னன்னு வந்து பாப்பாங்க. கண்டிப்பா.

said...

வாங்க ராகவன்.

நீங்க சொன்னதைத்தான் இந்த 19 வருசமாச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

அதிலேயும் வெள்ளைக்காரப் பார்ட்டின்னா கண்டிப்பா இண்டியன் தான்.
( இல்லேன்னா மட்டும் .....? )

said...

ஹை...உங்க பதிவில் டான்ஸாடும் யானை சூப்பர்ி

said...

கஸ்தூரி கதை நல்லா இருக்கு, துளசி

//அவுங்க வயித்துலேயும், பர்ஸுலேயும் பாலை வார்த்துக்கிட்டு இருந்தோமா//

chariyaana panch

said...

First time here.romba romba azhaga ezhudureenga.unga golu padi romba cute.enaku pada varadhu.aana en ponnu "mamavathu sri saraswathi" ungalukkaga padinadha ninachukkongo.2yearsa ezhudureenganna acharyama irukku.unga archives padikka yennaku 2years aayidum pola ,avvalavu vishayam irukku.I like your writing style.naerula pesara madhiri irukku.My Mom used to write like that.Enjoyed your blog.Thanks.--SKM

said...

அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?

டீச்சர் இன்னிக்கி மயிலை குடும்பத்துடன் சென்றிருந்தோம். வழியில் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு போயிருந்தோம் அங்கே பட்டுப்புடவையில் நிறைய பேர் வந்திருந்தனர்.மயிலாபூர் மயிலாபூர்தான்.
புடவை கட்டத்தயங்கும் கலாசரம் இங்கும் வந்து விட்டது.சமீபத்தில் நடந்த ஒரு தமாஷ்.என் மூத்தபையன் நிச்சியதார்த்துக்காக போட்டோகாரர் வந்தார். அன்று என் மகள் அவள் அம்மாவின் பட்டுப் புடவையைக் முதல்தடவையாக கட்டிக்கொண்டு இருந்தாள்.பார்க்கவும் லக்ஷ்மிகரமாக இருந்தாள்.வந்த போட்டோகாரர் அவளை பல போஸ்களில் 15 பொட்டோ எடுத்து ஜமாய்த்து விட்டான். கடைசியில் விசாரித்தால் அவளை மணப்பெண் என்று நினைத்து விட்டான்.வயது 20 தான் ஆகிறது பி.இ. முடித்துவிடாள்,அன்றிலிருந்து எனக்கும் என்மனைவிக்கும் தூக்கம் இல்லை
கஸ்த்தூரி போன்றவர்களை மறக்கமுடியாது,அவளப்போன்றவர்கள் எங்கும் கிடைக்க மாட்டார்கள். சந்தனம் ந வனே வனே. சந்தனமரங்கள் எல்லா காட்டிலும் இருப்பதில்லை.

said...

வாங்க செந்தழல் ரவி.

இப்பதான் யானையைப் பார்த்தீங்களா? இவர் ஆரம்பத்துலே இருந்தே
ஆடிக்கிட்டு இருக்காருங்களே!

'யானை போட்டுத்தந்த புண்ணியவதி'க்குத்தான் தினம் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்.

said...

கார்த்திகேயன்,

யாருமே கவனிக்கலியேன்னு இருந்துச்சு.
நீங்க சரியாப் பு(ப)டிச்சுட்டீங்க.:-))))
நன்றி.

said...

சண்டை-கோழி.

வாங்க வாங்க. புதுசா இருக்கீங்களேன்னு பார்த்தேன். நலமா?

உங்க ப்ண்ணு பாட்டு சூப்பர். இன்னிக்கு சரஸ்வதி பூஜையாச்சா. ரொம்ப நல்லா பொருத்தமா
அமைஞ்சது.
உங்க அம்மா எழுதுவாங்களா? அவுங்களுக்கு ஒரு ப்ளொக் தொடங்கித் தாங்களேன்.
நாங்களும் அவுங்க எழுத்தை அனுபவிப்போமே.

அவுங்களுக்கு முடியாதுன்னு இருந்தா பேசாம நீங்களே அவுங்க எழுத்துக்களைப் பதியலாமே.
எப்படியோ நல்ல எழுத்துக்கள் மக்களைப் போய்ச் சேரணும். இல்லீங்களா?

ஆமாம், இவ்வளவு நட்பா பின்னூட்டம் போட்டுட்டுப் பேரை மட்டும் சண்டை-கோழின்னு வச்சுருக்கீங்க?
தற்காப்பு??? :-)))))))

said...

வாங்க தி.ரா.ச.

வணக்கம். நலமா?

மயிலாப்பூர் மயிலாப்பூர்தாங்க. எப்படியும் கோயில் குளமுன்னு பட்டுப்புடவையோட வலம்
வரும் மக்கள் அப்படியே கடை கண்ணி போகறது உண்டுதானே?

இங்கே சாதாரணப் புடவை தினப்படி கட்டுறதே கொஞ்சம் கஷ்டம்தான்.அதிலும் பட்டுப்புடவைன்னா
இன்னும் ..........

'பளிச் பளிச்'ன்னு ஒரே ஒரு தீற்றல் சிந்தெடிக் ஜரி இருந்தாலே அது இங்கெல்லாம் 'பார்ட்டி ட்ரெஸ்'

பொண்குழந்தைகளுக்கு பட்டு கட்டுனாவே ஒரு வசீகரம் வந்துரும். அதுவும் 16 முதல் 25 வரை இன்னும் விசேஷ
அழகு வேற. வெடவெடன்னு ஒல்லியா இருக்கறதாலே உயரமாவும் தெரிவார்கள். என் பொண்ணுக்கும் புடவைன்னா
ஒரு அலாதி பிரேமை.

இங்கே ஸ்கூல் இறுதி ஆண்டுலே ஒரு பெரிய விழா நடக்கும். ஃபார்மல் ஸ்கூல் டான்ஸ்.( ப்ராம்) அதுக்காக விசேஷ உடுப்பு
என்ன போட்டுக்கணுமுன்னு வருஷ ஆரம்பத்துலே இருந்தே பசங்க யோசிக்க ஆரம்பிச்சுரும். என் பொண்ணு புடவைதான்னு
உறுதியா இருந்தா. அதுக்காகவே நம்ம 'தில்லையாடி வள்ளியம்மை'லே ஒரு புடவை அவளே வந்து செலக்ட் பண்ணி
வாங்கிக்கிட்டா. அதுக்குத்தான் பயங்கரப் பாராட்டு அன்னிக்கு.

உங்க பொண்ணுக்கு எங்கள் அன்பையும், வாழ்த்துகளையும் சொல்லுங்க.

உங்க அனைவருக்கும் பண்டிகைகால வாழ்த்து(க்)கள்.

said...

இன்றைய மனிதர்களைப்பற்றி
இனிதாகச் சொல்கிறீர்கள்!
என்றும் சொல்லுங்கள்
என்வாழ்த்து உங்களுக்கு!

said...

வாங்க வாத்தியாரைய்யா.
கவிதையாப் பாடிட்டீரே.( நல்லவேளை, இது புரிஞ்சது)
நன்றி.

said...

அதானே.. ஏன் எல்லாம் உள்ள போகணும்? கஸ்தூரி இடத்த நீங்க நிரப்புங்க :))

@தி.ரா.ச:
அதுக்கு உங்க 2 பேருக்கும் தூக்காம் போச்சா?! புரியலியே, சந்தோஷம் தானே படணும் :(

said...

@பொற்கொடி உங்க அப்பா அம்மாவைக்கேளு அவுங்க சொல்லுவாங்க.

said...

பொற்கொடி,

உங்க கேள்விக்கு தி.ரா.ச. பதிலைச் சொல்லிட்டார்.
அது என்னமோ சத்தியம்தான்.

said...

என்னமோப்பா.. இந்த பெற்றவர்கள் லாஜிக் நமக்கு பின்னாடி தான் புரியும் போலிருக்கு :(( இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் :)

said...

வாங்க வைசா.

எல்லா இடத்துலெயும் 'நம்ம மக்கள்ஸ்'தானே?
அப்படித்தான் இருப்பாங்க:-)))

said...

பொற்கொடி,

உங்களுக்கும் பண்டிகைக்கால வாழ்த்துகள்.

said...

//பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))//

ஆமாமா...வாஸ்தவம் தான்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்.

said...

வாங்க கைப்புள்ளெ.


அட்லீஸ்ட் நீங்களாவது எங்க 'கஷ்டத்தை' புரிஞ்சுக்கிட்டீங்களே.

இந்தூர்/பூனாலே எல்லாம் கர்பா போயிட்டு வந்தீங்களா?

உங்களுக்கும் தசரா வாழ்த்து(க்)கள்.