Friday, January 24, 2020

கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிக்கலாமா? (பயணத்தொடர் 2020 பகுதி 5 )

சாப்பிட எங்கே போவதுன்னு கேள்வி வந்தப்ப, ' வர்றவழியில் ஒரு ரிஸார்ட் போர்டு பார்த்தேன். ரெஸ்ட்டாரண்ட் இருக்குன்னு போட்டுருந்தாங்க'ன்னேன்.  சரியா எந்த இடமுன்னு சொல்ல முடியலை என்னால்.  வந்த வழியாகவே திரும்பிப்போறோம், போறோம் போய்க்கிட்டே இருக்கோம்......   சில்க் பஸார் கட்டடம் கண்ணில் பட்டது....  இவ்ளவு தூரமில்லை என்றது மட்டும் நிச்சயம்.
 கூகுளாரிடம் கேட்டால்.....   காலையில் போன ஸ்ரீ க்ரிஷ்ணேஸ்வர் கோவிலாண்டை இருக்காம். ஓ..... அந்தக்கோவிலுக்குப் போகும்போதுதான் பார்த்துருக்கேன் போல....  அரை மணி நேரம் சும்மாச் சுத்திட்டோமே..... ' மறக்காமப்    புடவை பார்க்க' ஞாபகப்படுத்தினார் சாமின்னு வச்சுக்கலாம்.
எல்லோரா ஹெரிடேஜ் ரிஸார்ட்க்குப் போய்ச் சேர்ந்தோம்.  போர்டு பார்த்த இடத்துலே இருந்து  உள்பக்கம் திரும்பி ஒரு கிமீ தூரம் வரை போகவேண்டி இருந்தது.
ரெஸ்ட்டாரண்ட்,  கேட்டுக்குப் பக்கத்துலேயே  இருக்கு.
 அவுங்க லஞ்ச் டைம் பகல்  ரெண்டுவரைதானாம்.  இப்ப மணி ரெண்டரைன்னாலும், சமைச்சுத் தருவாங்களாம். 'நம்மவருக்கும்' , நதீமுக்கும் சப்பாத்தி, பருப்பு, ஒரு  வெஜ் கறி, எனக்கு ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரை.  பொரிச்சு தட்டு நிறைய வந்ததை நாலுபேர் ஷேர் பண்ணிக்கிட்டோம். நாலாவது யார்? அங்கே வந்த ஒரு செல்லம்தான். கைப்பிள்ளைக்காரி.....
உருளைக்கிழங்கை மோந்து பார்த்துட்டு, 'இதையா தின்றே'ன்னு ஒரு பார்வையை வீசிட்டுப் போயிருச்சு.   இப்பெல்லாம் பசங்க வெஜ் சாப்பிடறதை விட்டே விட்டுட்டாங்க...  நம்ம லோட்டஸ் எதிர்க்கட்டடத்தில்  இருக்கும் 'செல்வி'யும் பிஸ்கெட்டை மூக்காலத் தொட்டுக்கூடப் பார்க்கலை.....
மூணேகால் ஆகிருச்சு, நாம் சாப்பிட்டு முடிக்கும்போது.  மொஹல் ஸில்க் பஸார் போனோம்.  பைத்தானி புடவைகள்தான் ஃபேமஸாம். விலையைப் பார்த்துப் பைத்தியம் பிடிக்காமல் இருக்கணும்.  ரொம்பவே புளிக்குதே.....    நல்ல புடவைகள் அம்பதாயிரத்துலே இருந்து ஆரம்பிக்குது.  சொல்லி வச்சமாதிரி எல்லாப் புடவைகளுக்கும் ஒரே வகை பார்டர்கள். அதுதான் ட்ரெடிஷனல் டிஸைனாம். பைத்தானி என்றது  அங்கத்து ஒரு ஊர்தான். ரிக்வேத காலத்துக்கும்  இந்த பைத்தானிக்கும் ஒரே வயசாம்.  ஆமாம்... நம்ம காஞ்சிபுரம் புடவையும் ஊர்ப்புகழ்தானே?  எத்தனை வயசு இருக்கும் ?  மராத்தியர் ஆட்சிகாலத்தில் பேஷ்வாக்கள் ரொம்ப விரும்பி இவைகளை ஆதரித்தாங்களாம். ஓ.... அதான் அவுங்களுக்கு விலையைப் பத்தின கவலை இருந்துருக்காது.....

இன்னொரு சிறப்பு வகை ஹிம்ரூ புடவைகள். அரசகுடும்பத்தினருக்கானதாமே......   எல்லோரும் இந்நாட்டு மன்னர் இல்லையோ..... (பரம்பரை ராஜாக்களின் மான்யத்தில் மண்ணள்ளிப் போட்டபின் அவுங்களும் நம்ம நிலைக்கு வந்துட்டாங்க, கேட்டோ! ) இதுலே ரெண்டு புடவைகள் வாங்கியாச்.  ஒன்னு எனக்கும், இன்னொன்னு அண்ணிக்கும்.  அவுங்களும் பூனாவில் கால்நூற்றாண்டுக்கும்மேல் குப்பை கொட்டுனவுங்க என்பதால் இந்தப் புடவைகளைப்பற்றித் தெரிஞ்சுருக்கும்தானே!
இந்த  ஹிம்ரூ புடவைகளின் இன்னொரு சிறப்பு என்னன்னா....  உள்ளூர் பருத்தியைப் பயன்படுத்தி நெய்யறாங்க. அதுலே இருக்கும் பூக்கள், சித்திரங்கள் எல்லாம் அஜந்தாவில் இருக்கும் ஓவியங்களில் இருக்கும் பூ வகைகளாம். மொஹம்மது பின் துக்ளக், தலைநகரை, தில்லியில் இருந்து தௌலதாபாத்துக்கு மாத்தியப்போ, தில்லியில் இருந்து வந்த நெசவாளர்கள் குடும்பம்தான் இங்கேயே தங்கிட்டாங்கன்னும், இப்பவும் அவுங்க வம்சாவழியினர்தான்  இந்தப் புடவைகளை நெசவு  செய்றாங்கன்றதும் சுவாரசியமான தகவல்தான்.

ஷாப்பிங் முடிஞ்சதுன்னு ஔரங்காபாத் திரும்பிப்போறோம். வழியெல்லாம்  அங்கங்கே சாலையோரப் பழக்கடைகள்.  சீதாப்பழமும், கொய்யாப்பழமுமாத்தான் கிடக்கு. ரெண்டுமே நியூஸியில் கிடைக்காது...   வாங்கலாமா, வேணாமான்னு எங்களுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்திட்டு, 'கிராமத்துலே இருந்து ஃப்ரெஷா வந்துருக்கும்'  வாங்கலாமுன்னு தீர்ப்பு வரும்போது ஏகப்பட்டக் கடைகளை கடந்து  போயிருந்தோம்.


ஒரு கடையாண்டை நிறுத்தச் சொல்லி இறங்கியாச்.  ஸக்ரா பாய் ( Zakra Bai ) கடை ஓனர். சீதா பழமும், கொய்யாவுமா ஒவ்வொரு கிலோ. வெள்ளைக் கொய்யாதான். ஆனால் கலர் தடவி வச்சுருக்காங்க.... எல்லாம் ஒரு ஷோதான்... தம்பாகு மாதிரி ஒன்னு பல்லுலே தேய்ச்சுக்கறது  மஹாராஷ்ட்ரா கிராமப்பெண்களின் வழக்கம். மிஷ்ரின்னு சொல்வாங்கன்னு நினைவு....   இது வாயைக் கருப்பாக்கி வைக்கும்....   நம்ம ஸக்ரா பாய்க்கும்தான்..... க்ளிக்கிய படத்தை அவுங்களுக்குக் காமிச்சப்ப, 'நான் இவ்ளோ அழகாவா இருக்கேன்'னு வெக்கத்தோடு சொன்னதைப் பார்க்கணுமே!!!

வாங்கின பழங்களை  பாகம்  பிரிச்சு, நதீமின் குழந்தைக்குன்னு கொடுத்தோம்.  ரெண்டு வயசாகப் போகுதாம்.
கன்டோன்மெண்ட் பகுதி கடந்து ஊருக்குள் வர்றோம். எனக்குக் கொஞ்சம்  புடவை, ப்ளவுஸுக்கான  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வேணும்.  தொடப்பக்கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் வேண்டி இருக்குமோ இருக்காதோ.... இப்பெல்லாம்  புடவைகளுக்குக் குஞ்சம் வேண்டித்தான் இருக்கு. அப்படியே 'நகைக்கடை' விஸிட் போகணும்.

குல்மண்டி(Gul Mandi ) என்ற இடம்தான் இங்கத்துக் கடைத்தெரு. பயங்கரக்கூட்டமும் ட்ராஃபிக்குமா இருக்கு!

நதீம் சொன்ன கடை என்னமோ மூடிக்கிடந்துச்சு. நாளைக்குத் திறப்பாங்களாம். அடுத்து நகைக்கடை.....    ஹிஹி.....   கடைவீதியில் சரியான பார்க்கிங் கிடைக்கலை. நாங்க  மட்டும்  வண்டியில் இருந்து இறங்கிக்கிட்டோம். போறவர்ற வண்டிகளைப் பார்த்தால் எனக்குப் பயமா இருக்கு. அந்தாண்டை எப்படிப் போகப்போறேன்?  'நம்மவர்' இதுக்குள் இந்தியச் சாலைப் போக்குவரத்து நெளிவு சுழிவுகளைக் கத்துக்கிட்டார் போல.... கையைப்பிடிச்சுத் தரதரன்னு இழுத்துப் போய் அந்தாண்டை விட்டுட்டார்.  பயந்து போய் 'என்ன இப்படி'ன்னு கேட்டால்.... 'சனம் எல்லாம் அப்படித்தான் போகுது'ன்றார்.
அந்தாண்டை நாம் போய் நின்ன இடமே ஒரு நகைக்கடை வாசல்தான்.  ஸோன் ரூபம்னு பெயர். சின்னப்பொண்களா நிறையப்பேர் வேலை செய்யறாங்க.  எல்லோரும் ரொம்பவே ஸ்நேகமாப் பேசறாங்க.  எனக்கு நத்து வேணும்.  மராத்திப்பெண்களின் பாரம்பரிய மூக்குத்தி :-)
அழகழகான டிஸைன்களில் கொட்டிக்கிடக்கு!  எதை எடுக்க?  ஒரு மூணு வாங்கினேன். எங்கூர் புள்ளையார் சதுர்த்திக்கு மறக்காமப் போட்டுக்கிட்டுப் போகணும் :-)

 உள்ளூர் பெண்களுக்கு கடைகள் பற்றிய விவரம் தெரியுமே, அவுங்ககிட்டே கேளுன்னார்  நம்மவர். குஞ்சம் லேஸ்ன்னு விற்கும் ஸ்பெஷல் கடை ஒன்னு பக்கத்துலே இருக்கு, நானே கூட்டிப்போறேன்னு சொல்றாங்க அந்தப்பொண்கள். ஹாஹா.... நெசமாவா?
கடை முதலாளியிடம்,  'உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். அருமையான பெண்கள் வேலை செய்யறாங்க.  கஸ்டமரிடம் எப்படிப் பேச, நடந்துக்கன்னு தெரிஞ்சு வச்சுருக்கறவங்களால்  வியாபாரம் ரொம்ப நல்லா நடக்கும்'னு சொன்னது அவருக்கு(ம்) பிடிச்சுப்போச்சு.  கடைப்பையர் ஒருத்தரைக் கூப்பிட்டு எங்களை 'அந்தக்கடை'க்கு கூப்பிட்டுப்போய், திரும்பக் கூட்டிவரச் சொன்னார்.

பக்கத்துலேன்னு சொன்னது...... பக்கத்துலேயா இருக்கு?  பையர் கூடவே போறோம், போறோம் போய்க்கிட்டே இருக்கோம்.  குறுக்கு வழின்னு சொல்லிக்கிட்டே போறார் பையர் சாகர்.



வழியெல்லாம்  சாலையோரம் காய்கறிக் கடைகள், தள்ளுவண்டிகளில் பழக்கடைகள்.  இங்கேயும் அதே சீத்தாப்பழங்களும், கொய்யாப்பழங்களும்தான். எல்லாமே ரொம்பவே ஃப்ரெஷ்ஷா, பெருசு பெருசா இருக்கு!



 ஒரு   ஆஞ்சி கோவில் தாண்டிப்போறோம். உள்ளே போய் கும்பிட்டுக்கலாமுன்னு நினைக்கும்போது,   கடைப்பையர் அவர்பாட்டுக்கு  முன்னாலே போய்க்கிட்டு இருக்கார். தினப்படி பார்க்கும் இடங்கள்தானே...  நமக்கு அப்படியா?  ஆனால் அவரை இந்தக் கூட்டத்தில் தவறவிட்டுட்டால்..... எப்படித் தேடறதுன்னு....  போற போக்கில் ஆஞ்சிக்கு ஒரு கும்பிடு போட்டேன்.
சப்னா எம்போரியம்  வந்துட்டோம்.    இங்கேயும் நல்ல கூட்டம். புடவை முந்தானைக்கு வைக்கும் பட்டுக் குஞ்சலங்கள் வாங்கிக்கணும். நார்த் இண்டியாவில் நல்லதாக் கிடைக்குமுன்னு பார்த்தால், ஹிந்தி சினிமாவில் வர்றாப்ல  ரொம்பவே க்ராண்டான ஐட்டம்ஸ்தான் இருக்கு.  சரிதான்....தொடப்பக் கட்டைக்கு...........  நிஜமாவே  பட்டுக்குஞ்சலம்... ?

கொஞ்சம்  சுமாரா இருந்தவைகளையும் கல்பதித்த மோடிஃப்களையும் வாங்கிக்கிட்டுத் திரும்பி சாகரின் வழிகாட்டுதலில் சோன்ரூபம் கடையாண்டை வந்துட்டோம்.
நம்ம  வண்டி எதிர்வாடையில் காத்திருந்தது.
மறுநாளைக்கும் நமக்கு ஊர் சுத்திப் பார்க்க வண்டி  வேணும். நதீம் நாளைக்கு ஒரு குடும்ப நிகழ்ச்சிக்குப் போகணுமாம்.  சொந்தக்காரர் கல்யாணம்.  பகல் ரெண்டு வரைன்னா அவரே வர்றேன்னார். அரைநாளில் முடியுமா என்ன?  அப்ப வேற வண்டியை அனுப்பறேன்னார்.   ஔரங்காபாதில் முக்கியமாப் பார்க்க வேண்டிய இடங்களை ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார். (கையெழுத்து  ரொம்ப நல்லா இருக்கு!) அந்த ட்ரைவர்கிட்டே மேற்படி இடங்கள் சொன்னால் கூட்டிப்போவாராம்.
அம்பாஸடர் அஜந்தா வந்து சேர்ந்தப்ப மணி ஆறு. இனி எங்கேயும் போறதா இல்லை.  ரொம்ப நடந்தாச்சு.
நத்து நல்லா இருக்கான்னு பார்க்கணும், இல்லையோ? சின்ன மூக்குக்குக் கம்பிதான் ரொம்ப நீளம். சென்னையில் நம்ம சீனிவாசஆசாரியிடம்  கொடுத்து  வளைச்சு விடணும்.
ராத்ரிக்கு டின்னர் ரூம்சர்வீஸில்தான். புதினா பரோட்டாவும் தயிரும் !
 பின்பக்கத்தோட்டத்தில்  கல்யாணம் நடக்குது. புரோஹிதர் மைக்கில் மந்திரங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தார். ராத்ரி பதினொரு மணி இப்போ. வெளிச்சத்தங்கள் அடங்கிய நிலையில்  சொல்லும் மந்திரங்கள் ஸ்பஷ்டமாக் கேட்டது. கல்யாணப் பொண்ணும் புள்ளையும் நல்லா இருக்கட்டும்!

தொடரும்........  :-)

Wednesday, January 22, 2020

Kailash Mandir @ Ellora caves pics !


எல்லோராக் குகை எண் 16 இல் இருக்கும் கைலாஷ் மந்திர்  ஆல்பம்,  ஃபேஸ்புக்கில்  போட்டு வச்சுருக்கேன்.


https://www.facebook.com/gopal.tulsi/posts/10216613807160178
அங்கே எடுத்த எண்ணூறு படங்களில்  ஒரு 25%  இது :-)

உலகை மறக்கலாம்...... (பயணத்தொடர் 2020 பகுதி 4)

வெளிப்புறச் சுவர்களிலேயே அதகளம் ஆரம்பிச்சுருது!  ஹிரண்யகசிபுவை, மடியில் போட்டு வயித்தை ஒரே கிழி !


எல்லாமே பெரிய பெரிய சிலைகள்.  வராஹம் நிக்கற ஸ்டைல் பாருங்க.... என்ன ஒரு கம்பீரம்....  உலகளந்தான் அளந்துக்கிட்டு இருக்கார். ஆமாம்.... இது சிவன் கோவில் இல்லையோ?  அந்தக் காலத்தில்  சிவா விஷ்ணு பேதம் இருந்துருக்காது..... சாமின்னா எல்லா சாமியும்தான்.....
எலக்ட்ரானிக் கேட்டும், ரெண்டு செக்யூரிட்டிகளும்.... கடந்து உள்ளே போறோம்.



தொந்திக்கணபதி, கஜலக்ஷ்மி, த்வாரபாலகர்கள்னு அமர்க்களமா இருக்கு!  எங்கே திரும்பினாலும் கற்சுவர் முழுக்கச் செதுக்கித்தள்ளி இருக்காங்க.  கருடவாஹனத்தில் பெருமாள் ! மஹிஷாசுரமர்த்தினி, சிவனும் உமையும்.... ஹைய்யோ..... எதைச் சொல்ல எதை விட?

யாருப்பா.....இது கரும்புவில்லோடு நிக்கறது?  நம்ம மன்மதன் இல்லையோ?


நடுவிலே மாடியும் கீழுமாப் போகும் கட்டடம்.  முற்றத்தின் ரெண்டு பக்கங்களிலும் நம்ம யானை! கல்தூண்கள்.  ஒரு கல்தூண் விஜய ஸ்தம்பம், இன்னொன்னு விளக்கு ஸ்தம்பம்.
மொதல்லே.... இப்படிக் கோவிலை டிஸைன் செஞ்சது யாராக இருக்கும்?  எப்படி இப்படி ஒரு ஐடியா வந்துருக்கும்? ஒரு மலையையே...  இப்படி  நடுப்பகுதி பாதிக்காம வெட்டி எடுக்க எப்படி முடிஞ்சது?   வெட்டிவச்ச துண்டத்தில்  மேலே கருவறை விமானத்தில் இருந்து ஆரம்பிச்சு, அப்படியே கீழே வரை செதுக்கிக்கிட்டே வர எப்படி முடிஞ்சது?

ராஷ்ட்ரகூட மன்னர்கள் ஆட்சி காலத்தில் மன்னர் தந்திதுர்கா அவர்களால் கட்ட ஆரம்பிச்சதை,  தலைமுறைகளுக்குப்பின் இருந்த மன்னர் முடிச்சு வைக்கும்போது  இருநூறு வருஷங்களும், பத்துத் தலைமுறை சிற்பவல்லுநர்கள் வம்சமும் கடந்தே போயிருக்குன்னா.......   ஹைய்யோ.....
மொத்த மலையும்  ஒரே கல்தானே.....  இப்படி ஒரே கல்லில் கருவறைகள், மண்டபங்கள், சந்நிதிகள்,  நடந்து போக வெராந்தாக்கள், மாடி  அமைப்பு, அதுக்கான படிக்கட்டுகள்,  ஸ்தம்பங்கள், முற்றத்துலே நிக்கும் யானைகள்,  மண்டபங்களின் மேலே நிற்கும் யானைகள்,  கஜபீடம் என்ற வகையில் யானைகளே தாங்கி நிற்கும் கருவறை, நாகதேவதைகள், யாளிகள், ஒரு இடம் பாக்கி விடாமக் கடவுளர்களின் சிற்பங்கள்....இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்........    இதெல்லாம் எப்படி சாதிக்க முடிஞ்சது?


காலக்கட்டம் ஏழாம் நூற்றாண்டுன்னு நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் சொல்றாங்கன்னா... அப்போ ஏது இப்ப இருக்கும்  கட்டட வேலைக்கான கனரக  மெஷீன்ஸ்?
இது மனிதர்கள் கட்டிய கோவில் இல்லை......   தேவர்களே மண்ணில் இறங்கி, இந்த தெய்வங்களுக்காகக் கட்டிய கோவில்னு சொல்றது உண்மையாத்தான் இருக்குமோ?
நட்ட நடுவில் கோவிலும், சுத்திவரப் பிரகாரமுமா இருக்கு! நல்ல உயரத்தில் செதுக்கி இருக்காங்க. கிட்டத்தட்ட ரெண்டாள் உயர மேடை ! செதுக்கிக்கிட்டே வரும்போது தப்பித்தவறி ஏதானும் பிழை ஆச்சுன்னா, கதை கந்தல் இல்லையோ? இப்படி ஒரு பெர்ஃபெக்‌ஷன் எப்படிப்பா? எப்படி?  வேற  எந்த எண்ணமும் மனசுலே இல்லாம  'கருமமே கண், கை'ன்னு இருந்துருந்தால்தானே  இப்படி  ஒன்னு முடிஞ்சுருக்கும்..... ?
பிரகாரத்தை வலம் வரும்போது, நமக்கிடதுபக்கம் இருக்கும் மலையிலேயே திண்ணை அமைப்பு போல அகலமாவும்,   தூண்கள் வரிசைகளாவும் குகைமண்டபங்கள் மூணு பக்கங்களிலும்..... இதுலே மாடி வேற !   ஹைய்யோ..... யாரோட சிந்தனையில் உதிச்சது?
காலப்போக்கினாலோ, இல்லை அந்நியர்களின் கைவரிசையாலோ, விஷமிகளின் வேண்டாத வேலையாலோ  நிறைய சிற்பங்கள் உடைஞ்ச நிலையில்தான் இருக்கு. மேலும் பழுதாக்காமல் இருக்க சுத்திவரக் கம்பித்தடுப்பு போட்டு வச்சது நல்லதுதான்.   இல்லைன்னா...   நம்ம சனம் மட்டும் சும்மாவா  இருக்கும்?

(நம்ம பக்கம் கோவில்களில் பார்க்கறோமே......   முடிஞ்சவரை பழுதாக்கி, கிறுக்கி வச்சால்தானே அவுங்க  மனசே ஆறுது.... )

மாடிப்படிகளுக்கான அமைப்பின் வெளியே சுவரில் ஒருபக்கம் முழுசும் ராமாயணம். இன்னொரு பக்கம் முழுசும்  மஹாபாரதம் !  ஹைய்யோ  ஹைய்யோ....

ராவணன், சீதையை விமானத்தில் வச்சுக் கடத்திக்கிட்டுப் போறான், ராவணன் சபையில் அவனுக்குச் சரியாசனமா வாலால் மேடை கட்டி அதன் உச்சியில் உக்கார்ந்துருக்கும் ஆஞ்சி..... , யுத்தக் காட்சிகள்....   பார்க்கப்பார்க்கக் கண்ணும் மனசும் நிறைஞ்சே போயிருது.

படியேறி மாடிக்குப்போறோம்.  மாடிப்படிக்கான வழிகள் உட்பட  ரெண்டு பக்கமும் ஒரே மாதிரிதான் !  (Symmetrical )
மேலே பெரிய வாசலுக்குள் போனா.... ஏராளமான தூண்களோடு  ரொம்பப்பெரிய மண்டபம்.  மண்டபத்துக்கு அந்தாண்டை கைலாசநாதர் லிங்க வடிவில்!  நாம் போய் தொட்டுக்கும்பிடலாம்!  கும்பிட்டோம்.
மண்டபத்தின் வழியாக கருவறையை வலம் வரலாம். கோஷ்டத்திலும் கணக்கில்லாத சிற்பங்களே! இதைத் தவிர  நாம் வலம் வரும் போது, நமக்கிடப்பக்கம் தனித்தனிச் சந்நிதிகள் வேற வரிசை கட்டி.....
லக்ஷ்மியோடு என்ன ஆட்டம் பார்த்தீங்களா, சிரிச்ச முகமுள்ள சிங்கத்துக்கு!
வலம் முடிஞ்சு  அந்தப் பக்கம் வாசல் வழியாத் திரும்ப மண்டபத்துக்குள் வந்து,  இங்கே நின்னபடியே ஈசனை இன்னொருக்கா வணங்கிட்டு,  கருவறை மண்டபத்தை விட்டு வெளியே வர்றோம்.   வெளிமண்டபத்துக்கு எதிரில் நீண்டு போகும் ஓப்பன் காரிடார் போல....

அங்கிருந்து ஒரு ஏழெட்டுப்படி இறங்கி நடக்கணும். இன்னொரு மண்டபத்துக்குள்ளே நுழைவோம். மண்டபத்தில் கருவறைவாசலுக்கு நேர் எதிரா  நந்தி உக்கார்ந்துருக்கார். பொதுவாக  கம்பீரமாத் தலை உயர்த்தி ஈசனைப் பார்க்கும் நந்தியைத்தானே  இதுவரைக் கோவில்களில் நாம் பார்த்துருக்கோம்.  இங்கே ஒருபக்கமாத் தலையைச் சாய்த்து வச்சுக் கீழ்ப்பார்வை பார்க்கும் நந்தி. எதாவது தப்பு செய்யும் குழந்தைகளைக் கையும் களவுமா நாம் புடிச்சுட்டாக் கீழ்ப்பார்வை பார்க்குமே அப்படி!  ஏண்டா நந்தி.... என்ன செஞ்சு இப்படி சாமியாண்டை மாட்டிக்கிட்டே?  :-)
நந்திக்கு இடம் வலமுன்னு ரெண்டு பக்கமும் ஜன்னல்கள் ! நந்திக்குப் பின்னால் இருக்கும் வாசலுக்குள் போனால் இன்னும் சில படிகள் இறங்கி நேரா நடந்து கோவிலின் முகப்புக்கு மேல் இருக்கும்  மாடத்தின்(பால்கனி) வழியா முன்புறத் தோட்டத்தைப் பார்க்கலாம்.

இந்த மண்டபத்துக்கு மூணுபக்கமும் வாசல்!   இடம் வலமுன்னு ரெண்டு பக்கமும் இருக்கும் வாசலுக்குள் போனால் நாலு படி இறங்கி நடந்து போய்  கருவறை விமானம், கீழே பிரகாரம் எல்லாம் பார்க்கலாம்.
கருவறை முன்மண்டபத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வர்ற மாதிரி கட்டி இருக்காங்க.

நாம் இன்னும் மேல்தளத்துலேயே நடந்து, அக்கம்பக்கம் பார்த்துக்கிட்டுருக்கோம். மனசில்லா மனசோடுதான் கீழே இறங்கி வரும்படி ஆச்சு. மண்டபங்கள் கடந்துபோய் ஏறி வந்த அதே வழியில்  கீழே போய்ச் சேர்ந்தோம். இந்த பதிநாலு நூற்றாண்டுகளில்  கோடி கோடி மக்கள் ஏறி, நடந்து தேய்ஞ்சு போன படிகள், இல்லே?

கோவிலில் நல்ல கூட்டம்.  பள்ளிக்கூடப்பிள்ளைகள்  'கல்விச்சுற்றுலா' வந்துருக்காங்க. ஓரளவு விவரம் உள்ள வளர்ந்த பிள்ளைகளைக் கூட்டிவந்தது சரி.  ரெண்டாங்ளாஸ், மூணாங்ளாஸ் பிள்ளைகளையும் பார்த்தேன். எந்த சிற்பங்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல்  அவுங்களே தங்களுக்குள் விளையாடிக்கிட்டு வரிசையில் நடந்துக்கிட்டு இருந்தாங்க....

 சாயங்காலம் அஞ்சரை வரை திறந்து வைக்கிறாங்களாம். பிரதோஷம், விசேஷநாள் இப்படி வரும்போது, உள்ளூர் மக்கள் வந்து பூஜை செஞ்சுட்டுப் போறாங்களாம். இன்னிக்குக்கூட சோமவாரம் என்பதால் பாட்டிலில் தண்ணீர், கொஞ்சம் சாமந்திப்பூவோடு  சிவன் காட்சி கொடுக்கறார். மத்தபடி  சுற்றுலாப்பயணிகள்தான் மொய்ச்சுக்கிட்டு இருக்காங்க.

காலையில் ஆறரைக்குத் திறந்து, மாலை அஞ்சரைக்கு  மெயின்கேட்டை மூடிடறாங்க.  வாரவிடுமுறை செவ்வாய்க்கிழமை.
 மணி ரெண்டாகப்போகுது.....   நம்மவர் வயித்துலே மணியும் அடிக்குது.  ட்ரைவர் வேற சாப்பிடாமல் காத்துக்கிட்டு இருப்பார். கைலாஷின் வெளிவாசலுக்கு வந்து கொஞ்சம் க்ளிக்ஸ் முடிச்சுக்கிட்டு ஒரு அரைக்கிலோ மீட்டர் நடந்து மெயின் கேட்டுக்கு வந்தோம். நதீமை செல்லில் கூப்பிட்டுச் சொன்னதும் அவர் வந்துட்டார்.

இன்னும் கொஞ்சநேரம் 'நல்லாப் பார்த்துருக்கலாமோ'ன்ற எண்ணம் ஒரு பக்கமும்,   'உண்மையான உலக அதிசயம் ' பார்க்கக் கிடைச்சதின் திருப்தி ஒரு பக்கமுமா என்னை (வழக்கம்போல்) அலைக்கழிக்க 'கைலாசம்' விட்டுக் கிளம்பியாச்சு....

தொடரும்.......   :-)

PIN குறிப்பு: இந்தக் கோவிலின் பட ஆல்பம் அடுத்த பதிவாக இருக்கு. நேரமும் விருப்பமும் இருந்தால் என்னோடு சுத்திப் பார்க்கலாம், வாங்க !!