Friday, December 13, 2013

GIMME FIVE

அந்த திருவாரூர் மோகனாங்கி  என்னமாத்தான்  ஆடுறாளுன்னு  பார்த்துட்டு வாரேன். ஓட்டுக்கு விட்டதில் 51-49 லே தோத்துப்போயிட்டோம்:(
யார் அந்த கருங்காலி, கையிலே மாட்டணும்...மகனே....

முன்கதைச் சுருக்கம்:  இங்கே!

கட்டுவோம் கட்டுவோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும்  ஒருபக்கம் அழுதுகிட்டே......  என்னதான்  நடக்கும் நடக்கட்டுமேன்னு  அப்பப்ப ஒரு நடை போய் இடத்தை எட்டிப்பார்த்துக்கிட்டு வர்றது,  ' கடமை'களில் ஒன்னாச்சு.

யக், கண்ராவி,சகிக்கலை,ஊரையே அசிங்கம் பண்ணிட்டாங்க. , திருஷ்டி கழிஞ்சது,  Eyesore,  காசைக் கரியாக்கறாங்கன்னு  அப்ப இருக்கும் மனநிலைக்கு ஏத்தமாதிரி பொருமிட்டு வருவோம். எதுக்குத் தலைவலி?  போகாம இருக்கலாமுன்னா....  பாழாப்போன மனசு கேக்குதா?


Shigeru Ban  என்ற  ஜப்பானியர்தான் டிஸைனர். அட்டைவேலையிலே நல்ல பழக்கமும் அனுபவமும் இருக்கும்போல!

சின்னவயசுலே ஜப்பானைப் பத்தி 'டீச்சர்''  சொன்னது.... 'பூகம்பம் அடிக்கடி வருவதால் அங்கே அட்டையில் வீடு கட்டுகிறார்கள்' அதெல்லாம் இப்போ நினைவுக்கு வந்துச்சு. வீடென்ன வீடு...இங்கே கோவிலே கட்டுறாங்கப்பா.....

ஒரு ரெண்டுமூணு  வருசத்துக்கு முந்தி போடிக்குப் போயிருந்தேன்  அங்கே நம்ம சொந்தக்காரங்க ஒருத்தர் ( தமிழ் டீச்சர்)  நியூஸியிலே அட்டைவீடா கட்டுவீங்கன்னு கேட்டாங்க. இல்லையே யாரு சொன்னான்னு கேட்டதோடு சரி.  விஷயம் மட்டும் அப்போ தெரிஞ்சுருந்தால்.....  அட்டையிலே வீடு கட்டமாட்டோம். கோவில்தான் கட்டுவோமுன்னு சொல்லி இருப்பேன்:-)


இன்னொரு சர்ச் (எல்லாம்  இதே ஏஞ்சலிக்கன்  பொறுப்பில் உள்ளதுதான்)  இடிஞ்சு விழுந்துருச்சுல்லே அதே இடத்தை சரியாக்கிக் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க.  2011 நிலநடுக்கம் ஊரில் ஒரு சர்ச்சை விட்டு வைக்கலை.  அதுக்கு மத பேதமோ, வாதமா இல்லைன்னு காமிக்க  இருந்த ஒரே  ஹிந்துக் கோவிலையும் போட்டுத் தள்ளிருச்சு.

உள்ளுர் பத்திரிகை சும்மா இருக்குமா?  இதுவுமில்லைன்னா வேற செய்தி?  அட்டை வந்து இறங்கிருச்சு.  அட்டையை அடுக்கிட்டாங்க.முகப்பு கண்ணாடி பொருத்தியாச்சு. இதுலே ஒரு கண்ணாடி பழைய  கதீட்ரலில் இருந்து  கொண்டு வந்தது.  அது இதுன்னு பிட்ஸ் போட்டுக்கிட்டே இருந்துச்சு.

ஒருநாள்  நேஷனல் டிவியில் செய்தி...  பெரிய மழையினால் கார்ட்போர்டு நனைஞ்சு ஊறிப்போய்,   சர்ச்சில்  தண்ணி நிக்குது. போச்சுடா.... அஞ்சு மில்லியன்:(  ஆனால்....உள்ளூக்குள்ளே ஒரு சின்ன சந்தோஷம் வந்தது நிஜம்.

ரிப்பேர் செய்யறோமுன்னு  வீடுகளுக்கு  wrap போடுவது போல  அங்கேயும் ப்ளாஸ்டிக்  போர்வை சுத்துனாங்க.


அழிவு பார்க்க வந்துக்கிட்டு இருந்த டூரிஸ்ட் கூட்டம்....  இப்பெல்லாம்  ஆக்கம் பார்க்க வருது.  சுத்திப்பார்க்க மாடி பஸ்ஸெல்லாம்  போட்டுருக்காங்க. இன்னும் பத்தே வருசத்தில் எங்களுக்கு ப்ராண்ட் நியூ சிட்டி, கேட்டோ!


ஆகஸ்ட் 15 க்கு அட்டைக்கோவில் திறப்பு விழா கோலாகலமாக  நடந்துச்சு. மற்றநாள் சனிக்கிழமை தினப்பத்திரிகை முழுசும் இதுதான் செய்தி. அன்னிக்குப்போக முடியலைன்னு  அடுத்த வீக் எண்ட் போனோம்.  பதிவின் முதல் வரி இங்கே வரணும்:-))))

பெரிய  அட்டைக்குழாய்கள் 98. ஒவ்வொன்னும் 20 மீட்டர் நீளம். இதன் எடையே  120 கிலோ  ஆகி இருக்கு.  இங்கே அடிக்கும் காத்துக்கு இது தாங்காதுன்னு  அட்டைக் குழாய்க்குள்ளே மரக்கம்பங்களையும் செலுத்தி இருக்காங்க. எல்லா குழாய்களுக்கும்  பாலியூரித்தீன்  பூச்சு உண்டு. (அப்படியும் ஒழுகியிருக்கு பாருங்க!)



இடிஞ்சு விழுந்த தேவாலயத்தில் இருந்த 'ரோஸ் விண்டோ'  விலிருந்து  சில பாகத்தை எடுத்து  அட்டைக்கோவில் முகப்பில் வரும் 1.2 மீட்டர் உசரம்  இருக்கும் முக்கோண ஜன்னலில் வைக்கலாம் என்று பழையதை  படம் புடிச்சு அதை அப்படியே  கண்ணாடியில் பதிச்சு  கண்ணாடிக் காளவாய்லே சுட்டு எடுத்தாங்களாம்.

கண்டெய்னர்களை  சுத்திவர வச்சு,  அதன் மேல் சட்டம் அடுக்கிக்  அட்டைக் குழாய்களைப் பொருத்தி இருக்காங்க. உள்பக்கமா கண்டெய்னர்களைத் திறந்து அறைகள் அமைச்சு, ஜன்னலும் வச்சதும்  புது ஆட்களுக்கு வெளியிலிருந்து  பார்க்கக் கட்டிடம் போலவே தெரியுது.

முன்வாசக்கதவு கடந்தால் ஒரு பெரிய ஃபோயர். சின்ன ஹால் போல இருக்கு.  அடுத்த கதவைக்  கடந்தால்  சர்ச். 700 பேர்கள் கொள்ளும் என்கிறார்கள். எனெக்கென்னமோ சின்னதாத்தான் தெரியுது.


ரெண்டு பக்கமும்  ஒல்லியா  இருக்கைகள். (தனித்தனி நாற்காலிதான்) நேரெதிரே  சுவற்றில்  இருக்கும் மரச் சிலுவை. கீழே ஒரு நீண்ட மேடை. இதுதான் ஆல்ட்டர் இப்போதைக்கு! பழைய கோவிலில் இருந்து கொண்டுவந்த  பருந்து ஸ்டேண்ட் ( இதன் சரியான பெயர் தெரியலை) இருக்கு.

பழைய கோவிலுக்கு நம்ம சிட்டி கவுன்ஸில் வருசத்துக்கு   ரெண்டு லட்சத்து நாப்பதாயிரம் டாலர் (எல்லாம் மக்கள்  கட்டும் வரிப்பணம்தான்) கொடுத்துக்கிட்டு இருந்துச்சு.  கோவில் நம்ம சிட்டி ஐகான்  ஆச்சே!  இலவச சேவையா பழைய கோவிலை  சரிப்படுத்திக் கட்டித்தர  வல்லுநர்கள் பலர்   நிலநடுக்கம் வந்த சமயமே முன்வந்தாங்க. பல நாடுகளில் இருந்தும் பொருளுதவியும் தரேன்னாங்க.  நாங்களும் தனிப்பட்ட முறையில் தாராளமாத் தர்றோமுன்னு  கெஞ்சினோம். ஆனா...... பிஷப் விக்டோரியாதான் எதுக்கும் சம்மதிக்கலை. கோவிலை இடிச்சே ஆகணுமுன்னு   ஒத்தைக்காலில் நின்னாங்க.  கோர்ட்டுக்குப் போனோம்.  தோற்றோம்:( ப்ரைவேட் சொத்து. அவுங்க என்னமும் செஞ்சுக்கலாமுன்னு  தீர்ப்பு  ஆச்சு.

ஆனால்.... இப்போ அந்தக் காசு 240,000 தர்றயான்னு  கேக்கறாங்க.  ஒரு ஒற்றைச் சொல்தான் நாங்க சொல்வோம்..  'ஊஹூம்'....

அட்டைக்கோவில் நடத்த ஒரு நாளைக்கு  $ 600  செலவாகுதாம். உண்டியலில்  குறைஞ்சது அஞ்சு போட்டுட்டுப் போங்கன்னு  சொல்றாங்க.  கிம்மீ ஃபைவ் கிம்மீ  ஃபைவ்.


அஞ்சு மில்லியன் என்பது இப்போ  கிட்டத்தட்ட  ஏழு மில்லியன் ஆகிப்போச்சுன்னு  ஒரு சேதி. நமக்கென்ன அவுங்க காசுன்னு  இருக்கலாமுன்னா.... அட்டைக் கோவிலுக்கு ஏழா???? இத்தனைக்கும்,  ஜப்பான்கார கட்டிடக்கலை நிபுணர்  Shigeru Ban ஒத்தை பைஸா கூலியா வாங்கிக்கலை(யாம்)  உலக நாடுகளின்  முதல் அட்டைக்கோவில் என்ற பெத்த பேரு கிடைச்சுருக்கு.

'கட்டுனது எதுதான் பட்ஜெட்டுக்குள்ளே அடங்குது',  சொல்லுங்க!


பழைய கதீட்ரல்  முழுசும் இடிச்சு நிரவி புதுசு கட்டப்போறாங்களாம். பழைய கம்பீரமும் கலையழகும் இனி இல்லை. மாடர்ன் டிசைனாம்.  அதைக் கட்டி முடிச்சதும்  அட்டைக்கோவிலை அங்கே மாத்திட்டு,  கல்யாணம் கார்த்திகைன்னு  அட்டையை ஃபங்ஷன் செண்டரா மாத்திருவாங்களாம். அதுவரை தாங்குனா ஆண்டவன் புண்ணியம்!



Tuesday, December 10, 2013

இனி எல்லாம் நலமே!

முகம் பளிச்ன்னு  இருக்கு.  என் கண்கள் விரிவதைப் பார்த்ததும் ஷேவ்  பண்ணிக்கிட்டேன்.  'டூத் ப்ரஷ், அண்ட் பேஸ்ட், ஷேவிங் கிட்  கொடுத்தாங்க'ன்னார். பல் சமாச்சாரம் மட்டும் தெரியும். ஆனா ஷேவிங் கிட் கொடுப்பாங்கன்னு  இப்பதான் தெரியும்.

கண்ணாடி இல்லைன்னு   கொஞ்சம் மனவருத்தம்.  சீப்பு வேற இல்லையாம்:(  ஆஹா ஆஹா....  குணமாகிக்கிட்டு வர்றார்.  உடல் சரியில்லைன்னா  அழகு ரெண்டாம் பட்சம் இல்லையோ? தலைவாரிவிட்டதும் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் லுக் வந்துருச்சு:-)  நாங்க அஞ்சே முக்காலுக்கு  வந்துருக்கோம்.அதுக்குள்ளே டின்னர் முடிஞ்சுருக்கு! (இங்கே நியூஸியில் இதுக்குப்பெயர் டீ. ! கிவி வழக்கம்)

இது தெரியாமல்  இங்கே வந்த புதிதில், தோழி ஒருவர் சில நண்பர்களை 'டீ' க்கு வாங்கன்னு சொல்லி இருக்கார். நம்மூர் தேநீர் விருந்து என்ற அனுமானம்.  சில நொறுக்ஸ் வகைகளும்  கெட்டில் நிறைய தேநீரும் போட்டு வச்சாச்சு.  வந்தவங்க எல்லோரும்  இண்டியன் ஸ்நாக்ஸ் தின்னு டீ குடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருக்காங்க.

என்னடா இது. இன்னும் உக்கார்ந்திருக்காங்க? அவுங்க எப்பப்போறது,நாம் டின்னர்  எப்போ சமைக்கறதுன்ன்னு யோசனை.   பொறுத்துப்பொறுத்து பார்த்த  விருந்தினர் ஒருத்தர் சமையல் ஆகிருச்சான்னு    கேட்டுட்டாங்க. இவுங்க  தயங்கித் தயங்கி இல்லே இனிமேல்தான்ன்னு இழுத்தவுடன்  எல்லோருக்கும் அதிர்ச்சி:-)

அப்பதான்  தோழிக்கு  விவரம் கிடைக்குது. அவுங்க  கிவி டீ க்கு வந்திருக்காங்க.தோழி இண்டியன் டீ கொடுத்துருக்காங்கன்னு:-)))))  அப்புறம் போய் கொஞ்சம் டேக் அவே  வாங்கிவந்து சமாளிச்சாங்களாம். வெறும் டீ குடிக்கக் கூப்பிடணுமுன்னா,  'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா'  னு சொல்லணும்.




கைப்பையில் இருந்து சீப்பை எடுத்துக் கொடுத்தால் கையைத்  தூக்கி தலை வார முடியலை பாவம்:(  வேனிட்டி அறை  ரெண்டு இருக்கு. எழுந்து அதுக்குப்போக முடியலை. Catheter  போட்டுருக்கே.  ஸலைன் ட்ரிப் வேற போய்க்கிட்டு இருக்கு.  கொஞ்சம் நடக்கலாமான்னு நர்ஸம்மாவிடம் கேட்டதுக்கு   அவுங்கஒரு ஸ்டேண்ட் கொண்டுவந்து  சகல இணைப்பையும்  ஸ்டேண்டிலுள்ள மெஷீனுக்கு மாத்தி விட்டாங்க.  திரும்பி வந்ததும் சுவற்றில் ப்ளக் பண்ணிக்கலாமுன்னும் சொன்னாங்க. டிவிடி பிரச்சனை வந்துருமேன்னு  அதுக்கான தனி ஸ்டாக்கிங்ஸ் போட்டுவிட்டுருக்காங்க நேத்து சர்ஜரியின் போது.  இப்போ நடக்கணுமென்றதும்  வழுவழு என்றுள்ள தரையில் வழுக்கிட்டால் என்னசெய்வதுன்னு  AntiSilp socks கொண்டுவந்து காலில் மாட்டிவிட்டாங்க நர்ஸம்மா.

மெள்ள  அந்தக் காரிடாரில்  மெது நடை. அப்படியே அங்கங்கே என்ன இருக்குன்னு  எக்ஸ்ஃப்ளோர் செஞ்சோம்.  நாலு செட்ஸ் ஆஃப் பாத்ரூம், கழிவறைகள், வேனிட்டி ரூம் (அட்டகாசமா லைட்டிங், ட்ரெஸ்ஸிங் மிர்ரர் எல்லாம் பளபள!)  வார்டின் கடைசியில் ஒரு  டிவி ரூம். ஒரு பத்து வசதியான இருக்கைகள் போட்டு  32 இஞ்ச்  எல் ஸி டி டிவியை  சுவத்துலே பொருத்தி இருக்காங்க.

நாளைக்கு வரும்போது  டாய்லெட்ரி பேக்  கொண்டு வரேன்னேன்.  பொழுதன்னிக்கும்  பயணம் போய்வருவதால்  பயணப்பொட்டியில் எப்பவும் தயாராக இருக்கும்தான்.  நேத்து பயணம் முடிச்சுக் கொண்டு  வந்த பெட்டிகள் எல்லாம் வீட்டுக்கூடத்தில்  அம்போன்னு கிடக்கு.  போட்டது போட்டபடி ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தோமுல்லெ!

ஆஸ்பத்திரி கௌனில்  பார்க்கும்போது நோயாளி லுக் வந்துருது:(  நமக்கு விருப்பமென்றால்  நாம் வழக்கமா அணியும் உடைகளைப் போட்டுக்கலாம். பொதுவா இங்கே நோயாளிகளின் உரிமை என்ற ப்ரோஷர்கள் வச்சுருக்காங்க. அதில் நமக்குச் சாதகமாகவே நிறைய  உரிமைகளுண்டு.  எதாவது நம்ம மனசு பாதிக்கும்படி  பணியாளர்கள் (டாக்டர்கள் உட்பட!) நடந்தால்  உடனே புகார் செய்யலாம்.  ஆங்கில மொழி தெரியலைன்னா   ஒரு மொழி பெயர்ப்பாளரையும் நமக்கு எற்பாடு செய்வாங்க. இந்தப் பட்டியலில்  ஹிந்தி கூட இருக்கு!  ஆஸ்பத்திரி முழுக்க அங்கங்கே புகார் பெட்டி. அதை கவனமா எடுத்துப் பார்த்து ஆவன செய்யறாங்க.

இன்னிக்கு ஒரு அஞ்சாறு நிமிச நடை போதும்.  தள்ளாட்டம் வேற இருக்கு. இன்னும் கொஞ்சம் முகம் மலரட்டுமேன்னு  என் கைப்பையில் இருந்த  கோபாலின் மொபைல் ஃபோனை எடுத்துக் கொடுத்தேன்.  கோடி சூர்யப்ரகாசம். ஒரு அம்பதறுபது மெயில்கள்  வந்துருக்கு. எல்லாம் குசலம் விசாரிச்சுத்தான்.

தோழியும் கணவரும் வந்தாங்க.  கொஞ்சநேரம் விசாரிப்புகள். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.

கையோடு  கொண்டுபோயிருந்த  நைட்டி(பஜாமாஸ்)யை  அலமாரியில் வச்சுட்டு மறுநாள் சார்ஜர் கொண்டு வரேன்னுட்டு நாங்கள் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்.

அடுத்தநாள் காலையில்  எனக்கு அழைப்பு.  எல்லாம் இவர்தான். அதான் கையில் ஃபோன் இருக்கே!  காலை உணவு முடிச்சுட்டாராம். இன்னிக்கு ஞாயிறு ஆனதால்  நாங்க ரிலாக்ஸா சாயங்காலம் வந்தால் போதுமாம்.  ராத்திரி கொஞ்சம் ஜுரம் வந்ததாம்.சின்னதா மூச்சுத் திணறல். ஆக்ஸிஜன் வச்சாங்களாம். இப்போ பிரச்சனை இல்லைன்னார்.

நாங்கள் ஒரு நாலரைக்குப் போனோம்.  புள்ளியைக் காணோம்.  டிவி அறைக்குப் போனேன்.  நினைச்சது சரி.  அங்கேதான் ஓய்வா உக்கார்ந்துருந்தார்.  வீட்டு உடுப்பு அதன் மேல் ஆஸ்பத்த்ரி கௌன். கதீட்டர் அவுட்! குளிச்சாராம்.  இப்போ ஜூரம் இல்லை.வயித்துவலி போயே போயிந்தி. இட்ஸ்   Gகான்:-)  ஒரே ஒரு குறை.....  டிவி ரிமோட்டை சுவரில்  ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க:(



அதானே....  போகட்டும். ஆளாளுக்கு கையில் வச்சுக்கணுமுன்னா   ஒரு பத்திருவது ரிமோட் வாங்கிப் போடணுமில்லையோ? அந்த அறையிலிருந்து வியூ அருமையா இருக்கு.  நம்மூர் ஏவான்  ஆறு. தொட்டடுத்து  போட் ஷெட்.  வாடகைக்குப் படகு(Kayak)  எடுத்துக்கிட்டு நாமே சுத்தலாம்.  வேணாமுன்னா punting  கூட உண்டு.

உள்ளூர் நண்பர்கள்  மூணு பேர் குடும்பத்துடன் விஸிட் வந்து போனார்கள். நாலு ஸ்பூன் தயிர்சாதம் குட்டியூண்டு  தூக்கில் கொண்டு போயிருந்தேன்.  சோறு கண்டவுடன் முகம் மலர்ந்தது.

திங்கள் காலையிலே போயிட்டேன்.  லஞ்ச் சமயம்  மகள் வந்து  வீட்டுக்குக் கூட்டிப் போனாள். மாலை வேலை முடிஞ்சு வந்ததும் மகளும் நானுமா அப்பாவைப்போய்ப் பார்த்துவந்தோம்.  நேத்து இரவும் காய்ச்சல் வந்துச்சாம்(  மற்றபடி கெட்டிங் பெட்டர், டே பை டே. (டச் வுட்)  ஐவி கூட எடுத்தாச்சு. ஆனால் கையில் குத்திவைப்பு அப்படியே இருக்கு.  ஒரு அவசரமுன்னா சட்னு கனெக்ட் பண்ணிடலாம்.

செவ்வாய் காலை போனால்......  டாக்டர் குழு கூடி இருக்கு. டிஸ்சார்ஜ் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறார். 24 மணி நேரம் ஜுரமில்லாம இருந்தால்தான் வீடுன்னு கண்டிப்பாச் சொல்றாங்க. நேத்து இரவும்  ஜுரம் வந்து போயிருக்கு.  "அதெல்லாம் ஒன்னுமில்லை. கட்டிலுக்குப் பக்கத்தில் ஹீட்டர் இருப்பதால்  ஜுரம் போல இருக்காம்."

'சரி.  வீட்டுக்கு விடறோம். ஆனால் எதாவது  பிரச்சனைன்னா உடனே  வரணும்' என்றதோடு டிஸ்சார்ஜ் எழுதிக் கொடுத்தார் டாக்டர்.  எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிய  ஒன்னரை மணி நேரமாச்சு. அதுக்குள்ளே வார்டில் இருந்த எல்லாருக்கும் டாடா பைபை சொல்லி முடிச்சார்:-)

 வார்டு சுத்தம் செய்யும்  பெண்  (ஃபிஜி)  'பையன் நல்லவன்.  சந்தேகமே வேண்டாம். பேசிப்பார்' என்றதும் எனக்குக் குழப்பம்!

மகளுக்கு சம்பந்தம் பேசி இருக்காங்க.  இவர் 'மகளைக் கேக்கணும்' என்று சொல்லி இருக்காராம். என்ன கதை? ன்னு கேட்டேன்.  ரெண்டு மூணுநாளா மகளைப் பார்த்ததும்   இவரிடம் விசாரிச்சு இருக்காங்க.' சொந்தக்காரப்  பையனுக்கு   பொண் பார்த்துக்கிட்டு இருக்கோம்  நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கான்.  என்ன சொல்றீங்க'ன்னு  கேட்டாங்களாம். ஸோ...திருமணங்கள்  ஹாஸ்பிட்டலிலும் நிச்சயிக்கப்படும்:-)

மகளுக்கு சேதி சொல்லிட்டு (ஐ மீன், டிஸ்சார்ஜ் ஆனதை)  ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.

நம்ம மருத்துவர் தோழி தினமும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.

இவருக்கு ஓரளவு குணமானதும்  சனிக்கிழமை கோவிலுக்குப் போனோம். நம்ம கோவிலில் தீபாவளி, புது வருசம், அன்னக்கூட்  எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கு.  நாம் ஏன் வரலைன்னு கேட்டு துளைச்செடுத்துட்டாங்க. அன்னக்கூட் ப்ரசாதம் எடுத்து வச்சுருந்தது கிடைச்சது.

மறுநாள் நம்ம வீட்டில் தீபாவளி. அன்றைக்குக் கார்த்திகை தீபமாகவும் அமைஞ்சு போனதால்..... எடு புடவையை.  புதுசு கட்டிக்கோ. கொண்டாடுன்னு .....    மகளும் வந்தாள்.  போனவருசம் வாங்கி வச்ச பட்டாஸ் பொதியில் இருந்து கம்பி மத்தாப்பை எல்லாம் எடுத்து கொளுத்தினோம்.






அடுத்த தீபாவளிக்குப் புதுப்புடவை வாங்கி வைக்கலாமா வேணாமான்னு இப்போ யோசனை:-)))))

இனி எல்லாம் நலமே!

ரொம்ப அலைஞ்சுட்டே... கொஞ்சநாள் சும்மா இரு என்றார்.

எப்படி????

கொஞ்சநாள் சமைக்காம இரு.
கொஞ்சநாள் காய்கறி நறுக்காமல் இரு.
கொஞ்சநாள் துணி துவைக்க வேணாம்.
கொஞ்சநாள் பாத்திரம் தேய்க்காமல் இரு

இப்படியெல்லாம் சொல்லப்டாதோ?

கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!


Friday, November 29, 2013

ச்சே..... இது ராசி இல்லாத புடவை..........

எப்படாப் பொழுது விடியுமுன்னு காத்திருந்து  ப்ரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து  ரஜ்ஜுவுக்கு 'ஹேப்பி தீபாவளி' சொல்லிட்டு அதுக்கான சாப்பாட்டைக் கொடுத்தேன். காலையில் கண்ணைத் திறக்கும்போதே 'திங்கத்தா திங்கத்தா' உயிரை எடுத்துருவான்.  நாம் எழுந்திருக்கும் அடையாளம் இல்லைன்னா, கட்டிலைச் சுற்றிச் சுற்றிவந்து  பரபரன்னு ச்த்தம் வர்றமாதிரி கார்பெட்டை  நகங்களால் பிச்சு எடுப்பான். அதென்னவோ இப்படிஒரு சுபாவம்.

குளிச்சு முடிச்சு சாமி விளக்கேத்தி எம்பெருமாளுக்கும் தாயாருக்கும், இன்னபிற பரிவாரங்களுக்கும் 'ஹேப்பி தீபாவளி'  சொல்லிட்டு காஃபி நைவேத்யம் செஞ்சேன்.  காலை ப்ரேக்ஃபாஸ்ட்  முடிச்சு ரெடியானபோது மகள்  வந்துட்டாள்.  அவளுக்கும்  தீபாவளி வாழ்த்து சொன்னேன். அப்பா உடம்பு சுகமாகி வீட்டுக்கு வந்ததும் ஒரு நாள் தீபாவளி  கொண்டாடணும்.

மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்டுட்டு  மகள் போய்விட்டாள்.  உள்ளே இருக்கும் சாப்பலில்  ஒரு நிமிசம் போய் உக்கார்ந்து , 'என்னடா பெருமாளே  இப்படி பண்டிகை கொண்டாட விடமாட்டேங்குறயே........  அதுவரை  ஆபத்துலே இருந்து காப்பாத்துனதுக்கு முதல்நன்றி சொல்லணும். சொல்லிக்கறேன்.  ஆனாலும் இன்னும் கொஞ்சம்  கருணை காட்டு'ன்னு  விண்ணப்பம் போட்டுட்டு,  மாடியில் இருக்கும் ஐஸியூவுக்குப் போனேன்.

கதவுக்கு வெளியே இருக்கும் தொலைபேசியை எடுத்தால் உள்ளே இருந்து 'எஸ்' குரல் கேட்கும். நோயாளியின் பெயரைச் சொன்னதும் நோயாளியைக் கவனிக்கும் நர்ஸ் வந்து நம்மை உள்ளே கூட்டிப் போவாங்க.  கதவைத் திறந்த நர்ஸம்மா,  கோபால் கண்ணைத் திறந்துட்டார்.  மயக்கம் எல்லாம் போச்சு. டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க என்றார்.  ஐஸியூ முழுக்க முழுக்க பெண் நர்ஸ்கள்தான்.  அதிலும் எல்லோரும் நல்ல ஸ்மார்ட்.  கவனம் சிதறாமல் கொடுத்த பொறுப்பை சமாளிக்கும் குணம் பெண்களுக்கு இயல்பா இருக்குதானே!


நேற்று இரவு  அறுவை சிகிச்சை நடத்திய ஸர்ஜன், நோயாளியின் நிலை எபடி இருக்குன்னு பரிசோதிச்சுட்டு  மேற்கொண்டு என்ன செய்யணுமுன்னு  சொல்லிக்கிட்டு இருந்தார். நான் போனதும்  யார் என்ற அறிமுகம் செய்து கை குலுக்கியவர்,  சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் அரைமணி தாமதாப் போயிருந்தா  burst டாகி இருக்கும் . அப்படி ஆயிருந்தால்  அது மேஜர் ஜாப். குடலையெல்லாம் வெளியே எடுத்துக் கழுவி அடுக்க வேண்டி இருக்கும்.  ஜஸ்ட் ஆன் டைம் என்றார்.  இவர் எப்படி தமிழ் சினிமா பார்த்துருப்பார்? டயலாக் சரியாச் சொல்றாரே:-))))))))))

கல் ரொம்பப் பெருசு தானாம். லேபுக்கு அனுப்பி இருக்குன்னார்.  (பெரிய கல்லுன்னா பெண்டண்ட் செஞ்சுக்க சரியா இருக்கும்,இல்லே!)  ஊஹூம்....ச்சுப்.

எப்ப சரியாவேன்னு  கோபால் கேக்க, ஆல்ரெடி சரியாயாச்சு.  நீங்க எது வேணுமுன்னாலும் செய்யலாம் என்றார்.  வேறு வார்டுக்கு மாத்தப்போறேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துலே அங்கே போய் ஓய்வெடுங்கன்னார்.  காலையிலேயே வாயில் இருந்த ட்யூபை  அகற்றி இருந்தாங்க.  ப்ரேக்ஃபாஸ்டும் கொடுத்தாங்களாம்.   தயிரும், வாழைப்பழமும்.

டாக்டரின் உத்தரவை  'ஸாரா ' வார்டுக்குச் சொல்லி அங்கே படுக்கையைத் தயார் செய்யச் சொன்னாங்க நர்ஸ். அதுக்குள்ளே  ஆர்டர்லி  இன்னொரு கட்டிலை உருட்டிக்கொண்டு வந்து நம்ம அறையில்  வச்சார்.  சுவரிலிருந்த கருவிகளில்  கொடுத்திருந்த இணைப்புகளையெல்லாம்  இந்தக் கட்டில் இருந்த மெஷீனில் இணைச்சு, கோபாலையும் இந்தக் கட்டிலுக்கு மாத்தினாங்க.

எங்களுக்கு இப்பதான் ஒரு வார்த்தை பேசக்கிடைச்சது. 'ஹேப்பி தீபாவளி'ன்னு வாழ்த்தியவுடன், முகத்தில் ஒரு திகைப்பு.  போன தீபாவளிக்கு இதே ஐஸியூவில் தவம் கிடந்தோம். அப்போ மகளுக்கு  ரொம்பவே உடல்நலமில்லை.  உயிர் பிழைப்பது உத்திரவாதமில்லைன்னு சொல்லிட்டாங்க. நாலுநாள் அல்லும்பகலும்  ஐஸியூ. அந்த நாலு நாளும் நரகவேதனைதான். ;ஷீ இஸ் இன் குட் ஹேண்ட்ஸ்.  முதல்தரமான கவனிப்பு' .பயப்படாதேன்னு மருத்துவர் தோழிதான் அப்ப(வும்)சொன்னாங்க.

கோபாலின்  அறுபதுக்கு  சென்னை போனபோது  முகூர்த்தத்துக்கு  ஒன்னும் மாலை வரவேற்பு ஒன்னுமா ரெண்டு புடவை வாங்கினோம். வரவேற்புக்கு வாங்குனதை என்னமோ அன்னிக்குக் கட்ட  மனம் இல்லைன்னு  பழைய புடவை ஒன்னையே கட்டிக்கிட்டேன்.  இந்தப் புதுப்புடவை அதோட நாளுக்காகக் காத்திருந்தது.  போன தீபாவளிக்குக் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன். தீபாவளியன்னிக்கு  மருத்துவமனை வாசமாப் போனதால்....  இந்த வருசம் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன்.  ஆனால் இந்த வருசமும்  அதே மருத்துவமனை, அதே ஐஸியூ.  போதுண்டா  சாமி.

நாங்க பேசிக்கிட்டு இருந்த சமயம், இவர் படுத்திருந்த ஐஸியூ படுக்கை அடுத்த நோயாளிக்குத் தயாராகுது.  க்ருமி நாசினி போட்டு கட்டில் கால், சக்கரம் உட்பட தேயோதேயுன்னு தேய்ச்சாங்க. படுக்கை விரிப்புகளை மாத்தினபோதுதான் தெரியுது  அஞ்சு விரிப்புகள் ஒன்னுமேலே ஒன்னாக!  எல்லாத்தையும் எடுத்துட்டு புது செட் இன்னும் அஞ்சு  விரிச்சாங்க. தலையணை உறைகளும் டபுள் டபுளா இருக்கு. மாத்து அதையும்!  சுவரில் இருக்கும் கருவிகளின் ட்யூப்கள், ஒயர்கள் இப்படி ஒன்னு விடாம கிருமிநாசினி தொட்டு பயாங்கரமா துடைச்சாங்க. இவ்ளோவேலை இந்தப் படுக்கைக்கு இருக்குன்னு நமக்கே அப்போதான் தெரியுது!

சுமார் ஒருமணி நேரமாச்சு. அதுக்குள்ளே தரை சுத்தம்செய்யும் பணியாளர் வந்தாங்க. இந்திய முகம் இருக்கேன்னு விசாரிச்சேன். நேபாளியாம்.  நேபாளிகளை பார்த்துருக்கீங்களான்னு (அபத்தமா) ஒரு கேள்வி.  ஏன்? நிறையமுறை மணிஷா கொய்ராலாவைப்  பார்த்திருக்கேன்  என்றதும் ஒரே சிரிப்பு.  வந்து மூணு வருசமாகுதாம்.  இங்க  எந்த வேலையும் கீழ்த்தரமானதில்லை. சம்பளமும் குறைஞ்சபட்சம் மணிக்கு  16  டாலர் கிடைச்சுரும். சமோவன்களும், ஃபிஜியர்களும் ஃபிஜி இந்தியர்கள் உட்பட க்ளீனிங் வேலையில்  ஏராளமானவர்கள் இருக்காங்க. எட்டுமணி நேர வேலை.  சீருடை எல்லாம்போட்டுக்கிட்டு பளிச்ன்னு இருக்காங்க.

ஸாராவில்  இடம் ரெடின்னு ஆர்டர்லி வந்து படுக்கையைத் தள்ளிக்கிட்டுப் போனார்.  நோயாளியின் ஃபைல் கூடவே வருது. நர்ஸம்மா கூட்டிப்போய் அந்த வார்டு  நார்ஸம்மாவிடம் இவரை  ஒப்படைச்சாங்க.

இது Surgical Assessment & Review Area வார்டு. இங்கே ஒரு இருவது நோயாளிகளுக்கு  இடம் உண்டு. ஒரு பெரிய அறையில்  திரைச்சீலைகளால்  சுவர் வச்சுப் பிரிச்சிருக்காங்க. நடுவில் நடைபாதை விட்டு வலமும் இடமும் மும்மூணு படுக்கைகள். கோபாலுக்கு  ஜன்னலோரமா இடம்!  ஆஹா....வ்யூன்னு எட்டிப்பார்த்தால்  இன்னொரு கட்டிடம்  மலைபோல் நிக்குது:(  இந்த வார்டில் பூக்களுக்கு  அனுமதி இல்லை.   மேலும் இங்கே   ஆண் பெண்களுக்கான தனித்தனி வார்டு ஏற்பாடுகள் கிடையாது.  குழந்தைகளுக்கு மட்டுமே தனி வார்டு. மற்றவைகள் எல்லோருக்கும் பொதுவே!

SARA  நர்ஸ் வந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு  பல்ஸ், பிபி, டெம்பரேச்சர்ன்னு  பலதையும்  செக் செஞ்சாங்க. பகல் ஒருமணி ஆகி இருந்துச்சு. இன்னிக்கு இங்கே சாப்பாடு  கொஞ்சம் லேட்டாம். மகளும் வந்துட்டாள்.  பகல் சாப்பாடும் வந்துச்சு. யுவர் வெஜிடேரியன் மீல். எஞ்சாய்!  மேஷ் பொட்டேட்டோ, பாயில்ட் வெஜ்ஜீஸ்,  பேக்டு பம்ப்க்கின்,  மஷ்ரூம் ஸூப்,  கஸ்டர்ட் ஸ்கொயர், பனானா!

இங்கே ஆஸ்பத்திரிகளில்  சாப்பாட்டு மெனு நாமே தெரிஞ்செடுக்கலாம். ஒவ்வொருத்தருக்கும் தனியா மூணு கோர்ஸ் உணவு.  ஸூப், மெயின்ஸ், டிஸ்ஸர்ட்,  கூடவே எக்ஸ்ட்ரா  ஃப்ரூட்  இப்படி மெனு கார்டை நம்மிடம் கொடுக்கும்போது நாமே அதில் செலக்ட் செஞ்சு டிக் செய்யலாம். உணவின் அளவு கூட நாம் சொல்லலாம். ஸ்மால்.மீடியம், லார்ஜ். இதனால் சாப்பாடு வீணாவதைத் தடுக்கலாம்.

ஒருவேளை உணவு  கொண்டு வரும்போதே அடுத்த வேளைக்கான மெனு கொடுத்துருவாங்க. இதில்லாம  நாலு வேளை  காஃபி, டீ, மைலோ இப்படி. இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் காஃபி டீ வேணுமுன்னா  ஒவ்வொரு  வார்டுக்கும்  நாமே இவைகளைத் தயாரிச்சுக்கும் வசதிகள் உண்டு.  ரெண்டு மூணு வகையான பால் சின்ன ஃப்ரிட்ஜில் இருக்கும்.  ZIP Water heaters  கொதிக்கும் வெந்நீரோடு  24 மணி நேரமும் தயார் நிலையில்  ஒரு கப்போர்டில் காபித்தூள், டீ பேக்ஸ்,சக்கரை எல்லாம் இருக்கும். தெர்மாக்கோல் டம்ப்ளர்களும் அடுக்கி வச்ச்சுருக்கும்.  இது போதாதா?யதேஷ்டம்!

பகல் ஒன்னுமுதல்மூணு மணி வரை ரெஸ்ட்டிங் டைம்  என்பதால் விளக்குகளையெல்லாம் அணைச்சு செயற்கை இருள்  ஏற்படுத்தினாங்க. நாங்களும் கோபால் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டுமுன்னு   கிளம்பி  வீட்டுக்கு வந்தோம்.

தீபாவளி விருந்து  தாய்க்கும் மகளுக்கும். நேத்து செஞ்ச சமையல் அப்படியே இருந்ததை  ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுடவச்சுச்  சாப்பிட்டோம்.