Monday, June 24, 2013

இரு நிலவு!!!

நேத்து சூப்பர் மூனைக் கோட்டை விட்டுட்டதால் இன்னிக்கு ரெண்டு நிலாவாப் போட்டுருக்கேன்.






 மந்திரமில்லை மாயமில்லை..... தந்திரமில்லை பார்த்துக்கோங்க:-))))

கல்லா கட்டும் புனிதப் பாம்பு? (பாலி பயணத்தொடர் 5 )

சொன்னால் நம்பமாட்டீங்க...... இந்தோனேஷியா நாட்டில்  சின்னதும் பெருசுமா பதினேழாயிரத்து  ஐநூற்று எட்டு தீவுகள் (17,508 ) அடங்கி இருக்கு.  ஐயோடா..... இவுங்க ரூபாயைப் போலவே இதுக்கும் ஏராளமான எண்கள்!  இதுலே  ஒரு குட்டித்தீவுதான் நம்ம பாலி! நாட்டின் மொத்த ஜனத்தொகை 237.4 மில்லியன்ஸ்,2011 சென்சஸ் படி. இதுலே பாலி மட்டும் 4.2 மில்லியன். அட! எங்க நியூஸியின் மக்கள்தொகையேதான்!!!!   ஆனால் பரப்பளவில்  நியூஸியில்  46 இல் 1 . குறுக்கும் நெடுக்குமாப் பார்த்தால்  வடக்குலே இருந்து  தெற்கு 112 கி மீ, கிழக்குலே இருந்து மேற்கு 152 கிமீ.


சுமார் ஒரு மணி நேரப்பயணத்தில்  டனா லாட் வந்துருந்தோம்.  உள்ளெ நுழையவே கட்டணம் உண்டு. ஆளுக்கு  முப்பதாயிரம். கார் பார்க்கிங் அஞ்சாயிரம். பெரிய அலங்கார வாயில் முகப்பு. பாலி நடனமங்கையர் சிலை ஒன்று கொள்ளை அழகு!  ஒரு கோபுரம்போல இருக்கும்  டிஸைனை நட்ட நடுவில் செங்குத்தா  கோடு  வரைஞ்சு  கட் பண்ண மாதிரிதான்  வாசல்கள் இருக்கு. Candi bentar வகையாம்.  வீடுகளுக்குக்கூட இப்படித்தான்.ஆனால் சின்ன உயரம்.

ஏழெட்டுப் படிகளேறி  இன்னொரு அழகான  வாசல் (Paduraksa style) வழியா உள்ளே போனோம். கொஞ்ச தூரத்துலே இருந்த மேஜைக்கருகில் இருந்த நபர் இங்கே வாங்கன்னு  கை அசைச்சுக் கூப்பிட்டு டிக்கெட் கிழிச்சுக் கொடுத்தார்.  நடுவில் பாதைக்கு இடம் விட்டு இடமும் வலமுமா  சின்னதாத் தெருக்கள்.  ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள். பாதையின்  ஆரம்பத்தில் ஒரு பக்கம் சின்னதா ஒரு கோவிலும் இருக்கு. அங்கே பூஜை செஞ்சுட்டு கூடையை நம்ம பக்கம் கிராமத்து ஆட்கள் தலையிலே வச்சுக்கிட்டு கை வீசி நடப்பது போல்  ஒருத்தர்  நடந்து போனாங்க.  ஆனால் சும்மாடு ஒன்னும் இல்லை கேட்டோ!!!!

மார்கெட் வழியா நடந்து போறோம். புல்லாங்குழல்   வாசிச்சுக்கிட்டு இருக்கார் ஒரு கலைஞர்.  அடுத்து வெள்ளைப் பாம்பை மடியில்போட்டுத் தாலாட்டிக்கிட்டு இருக்கார் இன்னொருத்தர். தீனிகள், துணிமணிகள் கைவினைப்பொருட்கள் இப்படி எல்லாத்தையும் ஒரு கண்ணால் பார்த்தபடியே கோவில் என்று அம்பு போட்டுக் காட்டிய பாதையில் நடக்கறோம்.

Tanah டனா = நிலம்
Lot லாட் = கடல்.
Pura  புரா  =  கோவில்
கடலோர நிலம் என்றே பொருள் சொல்றாங்க.  கடலோரக்குன்றுன்னு சொல்லப்டாதோ?

கவனமா கால் வச்சு நடக்கவேண்டி இருக்கு.  சொரசொரன்னு கல்லும் குழியுமா சமமில்லாத நிலப்பகுதி. வலது பக்கம் கொஞ்சம் உசரமான மேட்டில் ஒரு கோவில். பூசாரி உள்ளே இருக்கார். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இடப்பக்கமும்  ஒரு குன்றும் கோவிலும். அதைத்தாண்டி  கொஞ்ச தூரத்தில்  கடலுக்குள் முளைச்சு நிற்கும் இன்னொரு  குன்று ! அதன்  உச்சியில் ஒரு கோவில் . அலைகள் ஆவேசமா வந்து பாறைகளின் மேல் மோதும் இரைச்சல்கள்.  இத்தனைக்கும்  டைட் குறைவான சமயம் இது. Low tide.

முழங்காலளவு  தண்ணீரில் நடந்துபோய்  கடலுக்குள் இருக்கும் குன்றின் பின்பகுதியில் நிற்கும் சிறு கூட்டத்தில்  கலக்கும் மனிதர்கள்.
உள்ளூர் மனிதர்கள் முக்கியமா  கோவில்சம்பந்தப்பட்ட ஆண்கள் அனைவரும் தலையில் சின்னதா ஒரு தலைப்பாவும் கட்டம்போட்ட சாமித்துணியில் முழங்காலுக்கு மேலே வரும் அரைவேட்டியுமா இருக்காங்க.
நம்மூர் தலைப்பாக்கட்டு மக்களில் ஒரு பகுதி, ஆதிகாலத்துலே இங்கே வந்துட்டாங்க போல இருக்குன்னார் கோபால்.


புனிதப் பாம்புன்னு எழுதுன   ஒரு அட்டை  என் முதுகுப்பக்கம்  வரும் குன்றின் சுவரில் !   இந்தக் குன்றே பாம்பு வடிவத்தில் இருக்கோ...  பரந்தாமன் பள்ளி கொண்ட சேஷன்?  அட்டைத் தகவலுக்கு அடியில் குன்றினடியில்  குகை.  அங்கே ஒரு சிறு பாறைக்கு  முன்புறம் ஒருவரும் பாறைக்குப் பின்புறம் ஒருவரும் ஸ்டூல் போட்டு உக்கார்ந்துருக்காங்க. முன்னவர் முன்னே  இன்னொரு ஸ்டூலில்  ஒரு தாம்பாளம்.  பூஜைச் சாமான்கள்  ஊதுவத்தி  புகையுது.




என்னன்னு கிட்டே போய்ப் பார்த்தோம். தாம்பாளத்தில் இருந்த பணத்தைப் பார்த்ததும்   எதோ விக்கறாங்களோன்னு நினைச்சேன்.  ஹோலி ஸ்நேக்ன்னு  சொல்லி தட்டைக் காமிச்சார் முன்னவர். ஆயிரம் ரூபாயை(இதுதான் ஆகக் குறைஞ்ச சில்லறை!) போட்டதும் பாறையின் பின்பக்கம் கை காமிச்சார்.
நம்மை ஏறிட்டுப்பார்த்த பின்னவர் டார்ச் அடிச்சு பாறையில் இருந்த சின்ன பொந்தைக் காமிச்சார்.  கூடவே 'ஓம் நமச்வாயா. ஓம் நமச்வாயா'ன்னு  சொல்லி அங்கே  மூச்சு விடாமத் தலையும் வாலும் தெரியாமச்  சுருண்டு படுத்திருந்த  பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுத்தார். ஹோலி ஸ்நேக்.  தொட்டுப்பார் தொட்டுப்பார்னும் சொல்றார்.


வெளிறிய சாம்பல் நிறத்தில் கறுப்பு டிசைன் போட்ட தோலுள்ள பாம்பு நாகமா இருக்குமான்னே எனக்கொரு சந்தேகம்!  கடலுக்குள் நீண்டுபோகும்  குன்றின் மேல் இருக்கும் கோவிலைக் காமிச்சு       ' இந்த ஹோலி ஸ்நேக் தினமும் இரவில்  கோவிலுக்குப்போய் சாமி கும்பிடும்' என்றார். கோவிலில் என்ன  சாமி ? ன்னு கேட்டேன்.  சிவன்!

அட!  கண்ணை ஓட்டினால்  மலையேறிப் போகும் படிகளில் ஓரிடத்தில் ரெண்டு பக்கமும் சாமித்துணி   ஸ்கார்ஃப் கட்டிய நந்திகள்.

Danghyang Nirartha என்ற பெயரில்  ஜாவாத் தீவுக்கார சாமியார்  ஒருவர் கட்டுன கோவில் இது. இவர் சைவ மதக்காரர்.  காலம் பதினைஞ்சாம் நூற்றாண்டு.  இவருக்கு டைம்பாஸே கோவில் கட்டுவதுதான். கடலோரப்பகுதிகளில் பொருத்தமா இடம் கிடைச்சால் கோவில் ஒன்னு கட்டிட்டுத்தான் மறு வேலை!  இவருடைய சிலை ஒன்னு இங்கே!

இவர் கட்டுன கோவில்களில் எல்லாம் padmasana architecture வகைகளே.  நம்ம பத்மாசனம்போட்டுக்  கால் மடக்கி உக்கார்ந்துருக்கும்  சாமிச்சிலைகள் உள்ளே இருக்கான்னு பார்க்க எனக்கு ஆவல். ஆனாலும் கோவில்களை எல்லாம் மூடி வச்சுட்டு வெளிப்புறத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குக் காமிக்கிறாங்க.  அதிலும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்குபோது   எட்டிப்பார்க்கவும் அனுமதி இல்லை. அங்கங்கே  தகவல் பலகையில்  'தடா' சமாச்சாரம் எழுதிப் போட்டுருக்கு.

இந்தக் கோவில் பழுதடைஞ்சு  அபாய நிலைக்குப் போய்  இருக்கு. ஜப்பான் அரசு இதை பழுது பார்க்க 800 பில்லியன் ரூபாய்களை தானம்  வழங்கிப் புண்ணியம் கட்டிக்கிச்சு. பழுது பார்த்து (2003 வருசம் )  சரியாப் பத்து வருசம் ஆகி இருக்கு.  இந்தோனேசியாவின்  அப்போதைய  ஜனாதிபதி மேகாவதி சோகர்னோபுத்ரி   திறந்து வச்சுருக்காங்க.

தண்ணீருக்குள் நடக்கவேணாமுன்னு தோணுச்சு எனக்கு. கோபால் மட்டும் செருப்பை  என் காலருகே விட்டுட்டு  எதிர்க்குன்றுக்குப் போனார்.  வரும்போது  நெற்றியில்  திருநீறும் கையில் ஒரு பாதிரிப்பூவுமா வந்தார். வணங்கி தட்சிணை போட்டதும் மூங்கில் குழாய் வச்சு பாறை வழியாக வரும் ஊற்று நீர் தீர்த்தம் தர்றாராம் பூசாரி. கூடவே  விபூதியும் மலரும்.  காதில் பூ ஆண்களுக்கு!   தைரியம் இல்லாத கோபால்,  பூவை எனக்குக் கொடுத்துட்டார். குன்றின் மீதுள்ள கோவிலுக்குப்போக அனுமதி இல்லை. உள்ளூர்க்காரர்கள் மட்டும் போகலாம். அதுவும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே!

Low tide ன்னு  சொன்னாலும் அலைகள் வந்து கற்பாறைகளில் மோதும் வேகம்  பயங்கர அழகா இருக்கு. ஓயாத   அலைகளும் அவற்றின் இரைச்சலும்!  இப்பவே இப்படின்னா.... டைடு அதிகமாகும்போது எப்படி இருக்கும்!!!! இதுலே பாம்பார் எப்படி நீந்திப்போய் சாமி கும்பிட்டு வருவார்?  அலை அப்படியே அடிச்சுக்கிட்டுப் போயிடாதோ?

நான் ஆ....ன்னு வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தப்பக்கம் திரும்பினா கோபால் செருப்புகளில் ஒன்னு காணோம்!  கண்ணை ஓட்டினால் சின்ன அலை தூக்கிக்கிட்டுப் போகுது! ஓடிப்போய் மீட்டு வந்தேன். கால் நனைய வேணாமுன்னு பார்த்தால்.....  இப்படி ஆச்சு:)




பாம்பு குகைக்கு மேல் பாறையில் தட்டுத் தடுமாறி ஏறிப்போனால் அங்கே ஒரு புரா! பூட்டிய வாசல். ஜஸ்ட் க்ளிக்கிட்டு எதிர்ப்பக்கம் நடந்தால் சுலபமா கீழே இறங்கிப் போகும்  வழி. அடடா.... முழங்கால்வலிக்க அபாயமான பாதையிலே  ஏறி வந்தோமேன்னு.........

எதிர்வாடையிலே  நாம் பார்த்தபோது அழகான  தோட்டம்.  மக்கள் எல்லா இடத்திலும் ஏறிப்போய் பார்த்துக்கிட்டு இருக்காங்க.  கூட்டத்தில் நாமும்:-)  கொஞ்சம் சமதரையான இடத்துலே  இன்னொரு  கோவில். நோ எண்ட்ரி நமக்கு!

அதைக்கடந்து கொஞ்சம் ஏற்றமாப் போகும் பாதையில் நடந்தோம். எங்கே பார்த்தாலும் பசுமையும் பளிச்சும்!   கல் பாவிய நடைபாதை. கண்ணெதிரே கொஞ்ச தூரத்தில் கடலுக்குள் நீட்டி இருக்கும்  குன்றும் அதன் மேல் இன்னொரு கோவிலும்.  தடுக்கி விழுந்தால் புராவில் விழுவோம் பாலியில்.  இருபதாயிரம் கோவில்கள் இருக்காம்!

கடலில் மூக்கு நீட்டி இருக்கும்  டைனோஸார்  போல் இருக்கு அந்தக்குன்று. அடியில் ஒரு  பெரிய  துளை. அதன்வழியா அலை அடிச்சு வரும்போது பார்க்கவே அழகா இருக்கு!



அங்கங்கே  சின்னக்கூரைகளுடன் உக்கார்ந்து ஓய்வெடுக்க ஒரு அமைப்பு. மரக்கட்டில் போல! பேசாம படுத்தே ஓய்வெடுத்துக்கலாம்:-) கழிப்பறை வசதிகளும் ஒரு கட்டிடத்துக்குள்ளே!  நல்ல விஷயம்!

அருமையா லொகேஷன் என்பதால்  கல்யாணப்பொண்ணு முதல் கமர்ஸியல்  ஷூட்டிங் வரை படம் புடிச்சுக்கன்னே வர்றாங்க.

கடைவீதி வழியாகவேதான்  திரும்பி வெளியே வரணும்.  கைவினைப்பொருட்கள் ஏராளம்.   குறிப்பா மரச்சிற்பங்கள் அலங்கார பேனல்கள் அபாரம். குரங்குகள்  ஒரு குட்டி பூதத்தை(??!!)  உண்டு இல்லைன்னு பண்ணும் மரச்சித்திரம்  சூப்பர். ஆசையோடு பார்த்த என்னிடம்  மரச்சாமான்களை நம்ம நாட்டில் அனுமதிக்க மாட்டாங்கன்னு  ஓதினார் நம்மவர். என்ன ஒரு முன் ஜாக்கிரதை!



ஆளுக்கொரு இளநீரை  வாங்கிக் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.  என்ன இளநீரோ........  அரைத்தேங்காய்ன்னு சொல்லணும். அதையும்  நீரெல்லாம்  வெளியே   வழியும்  வகையில் கிட்டத்தட்ட  அரையாகப்  பாதியில் வெட்டிக் கொடுக்கறாங்க.  நம்மூர் போல நாசுக்கா மேல்பக்கம் சீவுவது இல்லை. பெரிய அரிவாளால் போடுபோடுன்னு போட்டால் வேற எப்படி வரும்?  அந்தத் தேங்காயை எடுக்கக் கூடவே ஒரு டேபிள் ஸ்பூன். கடைசியில் ஸ்பூன் வளைஞ்சதுதான் மிச்சம்:-)

டனா லாட்டில் சூரிய அஸ்தமனம் பார்க்க பெரும் கூட்டமா மக்கள்  வருவாங்களாம்.  சன்செட் பாய்ண்ட் இது.  அஞ்சுமணிக்கு  கூட்டம் அம்முமாம். நாம்தான் ரெண்டுக்கெட்டான் நேரமா வந்துருக்கோம் போல!



தொடரும்..........:-)






Friday, June 21, 2013

விடியல் பொழுதில் ஒரு ப்ரஹஸ்பதி (பாலி பயணத்தொடர் 4 )

பொழுது இன்னும் சரியாப் புலராத ஒரு  காலையில்  கடற்கரையை நோக்கிப்போய்க்கிட்டு இருக்கோம். நேத்து நம்மை ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்ட மேடி  நம்ம தெருவுக்குள் நுழையுமுன் இடதுபக்கம் கை நீட்டி அங்கே பத்மா பீச் இருக்குன்னு சொல்லி இருந்தார். பத்மா ரிஸ்ஸார்ட் இருப்பதால் இதை பத்மா பீச்ன்னு சொல்றாங்களே தவிர இந்தப் பகுதிக்கு  Legian என்றே பெயர்.



இங்கே  இந்தப்பகுதியில் சாலை முழுசுமே கல்பாவி இருக்கு!  அதை கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்த பணியாளர்களிடம் பீச் ? என்று கேட்டதற்கு  நாம் போகும்திசையையே கைநீட்டிக் காமிச்சாங்க.    சாலைக்கு ரெண்டு பக்கமும் பச்சைப்பசேலுன்னு மரங்களும் செடிகொடிகளும். ராத்திரி இருட்டுலே சரியாத் தெரியலை!


நாயை வாக்கிங்  கூட்டிப்போறார் ஒரு உள்ளுர் வாசி!

அஞ்சாறு நிமிச  நடை. கடற்கரையில்   இங்கொன்னும் அங்கொன்னுமா சிலர்.  தண்ணீரில் போய் நின்னு பார்த்த கோபால் நல்லா வார்மா இருக்குன்னார். கொஞ்சதூரம் மணலில் நடந்துபோய்  கால் வலிச்சதும்   அமர்ந்தோம்.

இதேபோல் தைரியமா  நம்ம மெரீனாவில்  அமர முடியாது. ஏகப்பட்டபேர் 'உட்கார்ந்த தடயம்' மண்ணுக்குள் இருக்கும் அபாயமுண்டு  அங்கே:(

ஜப்பான் மங்கை ஒருவர் நீச்சலுடையுடன்  தண்ணீரில்  நின்னு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தார். காலண்டர் ஷூட்டிங்கோ என்னவோ!


""  நம்மூரிலும்தான் அழகான கடற்கரை இருக்கு. ஒருநாளாவது அதிகாலையில் போனோமா?"

"  இங்கே மாதிரியா? குளிர் கொன்னுருமே... "

"  பரவாயில்லைன்னு  கிளம்பிப்போய்  வண்டியிலேயே  இருந்து சூரியோதயம் ஒரு நாள் பார்க்கணும். என்ன ஒரு நாள்  கிளம்பலாமா? "

"  சம்மர் வரட்டும் பார்க்கலாம். "

 " ஐயோ... அப்ப நாலுமணிக்கே எழுந்து கிளம்புனால்தான் உண்டு. அஞ்சுமணிக்கு சூரியன் வந்துருவானே! "

போகாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருந்தோம்:-)


மணலில் மூன்று நாய்கள் எஜமானை இழுத்துக்கிட்டு  போகுதுகள்;-)

வானத்தில்  உதயகால வெளிச்சங்கள் ! சூரியன் வருதான்னு கண்ணை நட்டபோதுதான்   மனசில் ஒரு விஷயம் புலனாச்சு. நமக்கு மேற்காலே கடல். அப்போ சூரியன் ?  சடார்னு திரும்பி  கிழக்கே பார்த்தால்  வரிசை கட்டி நிற்கும் ரிஸார்ட்டுகளின் பின்னால் மரக்கிளைகளுக்கிடையில்  இருக்கான்.

கடற்கரை மணலில் வரிசையாக் குடைகள். சர்ஃப் போர்டுகள்  ப்ளாஸ்டிக் நாற்காலிகள். சன்பாத் எடுக்கத்  தோதான படுக்கை நாற்காலிகள்  இப்படி ......   இன்னும் கொஞ்சம் நேரமானதும் எண்ணெய் மஸாஜ், ச்சில் பீர், தீனிகள் என்று இந்த இடமே சுறுசுறுப்பாகிவிடும் அடையாளம் பளிச்சுன்னு தெரியுது.




பெரிய சங்கு ,சோழிகள்  விற்பனையாளர்  அன்றைய வியாபாரத்துக்குக் கடை தொறந்துக்கிட்டு இருக்கார்.  வாங்கிக்க ஆசைதான். ஆனால்  இங்கே நியூஸிக்குக்  கொண்டுவர முடியாதே:(

மணி ஏழாகுது. அறைக்குத் திரும்பலாமுன்னு வந்தால்  கோவில்போல ஒன்னு பீச்சாண்டை கண்ணில் பட்டது. உள்ளே போய்ப்பார்த்தால் கோவிலேதான். ப்ரஹஸ்பதி மூலவர். ஆஹா.... இன்னிக்குத்தானே குருப்பெயர்ச்சி, இல்லையோ!!!!

காலையில் கோவிலைத் திறந்து(!!??)  பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து  பூஜைப் பொருட்களை  அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க ஒரு அழகான பெண்மணி. பெயர் மேடியாம். இங்கே இது முப்பாலருக்கும் பொதுவான பெயராக இருக்கோ?  அப்புறம் நம்ம கண்ணனின் பதிவில் பார்த்தது நினைவுக்கு வந்தது  ....  இந்தப்பெண்  அவுங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டாவதாப் பிறந்தவங்க.

முதல் குழந்தைக்கு 'வயான்(Wayan)', இரண்டாம் குழந்தைக்கு 'மேட்(Made), மூன்றாம் குழந்தைக்கு நியோமன்(Nyoman), நான்காம் குழந்தைக்கு கேடுட் (Kedut)'. இதன் தொடர்ச்சியில் ஐந்தாம் குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் 'அடுத்த வயான்', ஆறுக்கு 'அடுத்த மேட்', ஏழுக்கு 'அடுத்த நியூமான்', எட்டுக்கு 'அடுத்த கேடுட்'. ஒன்பதாம் குழந்தைக்கு 'கடைசி வயான்' இப்படியாக 12 குழந்தைகள் பிறக்கும் வரிசைக்கு பெயர் வைத்து அதன் படியே எந்த ஒரு குழந்தை அது ஆண் பெண் என்றாலும் வரிசைப்படி இருக்கும். பிறகு ஆண் பெண் குறித்த அடையாளம் 'I' (ஆண்) மற்றும் 'Ni' (பெண்) குறித்த அடையாளம், பிறகு சாதிப் பெயர்கள் இடம் பெறும்.

நன்றி: கோவியாரின் 'காலம்'

கோவிலில் உண்டியல் ஏதும் இல்லை!  பூஜை செய்யச் சொல்லி  இருபதாயிரம் ரூபாயை  'திடீர் அம்பானி' வழங்கினார். சின்னதா  குருத்தோலைகளால் பின்னப்பட்ட  விளிம்புள்ள   சின்னக் கூடைத் தட்டில்  பூக்கள், ஊதுபத்தி, மிட்டாய், பிஸ்கெட்,  கலர் போட்ட பிடிச்சோறு, எதாவது காய்கறிகள்    இப்படி வச்சுருக்காங்க.

'துள்ஸி, நாளைக்கு இதே டைமுக்கு வாங்க உங்களுக்கு ஸராங் கொண்டு வந்து  தரேன்' னு அன்பாச் சொன்னாங்க நம்ம மேடி! எஸ்  and நோவுக்கு மையமாத்  தலையாட்டி வச்சேன்.

காலை உணவுக்கான விலைப்பட்டியல்கள் அங்கங்கே ரெஸ்ட்டாரண்ட் வாசலில் இருக்கு.


வரும்வழியில் இருந்த கடையில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கிட்டோம். சைக்கிளில் ஒருவர் காலை ப்ரேக் ஃபாஸ்டுக்கான  இலையப்பம் போல உள்ள பொட்டலக் கொத்துகளுடனும் கூடவே சின்னச் சின்னப்ளாஸ்டிக் பாட்டில்களில்சட்னி, ஊறுகாய் துவையல் போன்ற சமாச்சாரங்களுடனும்  விற்பனையில்  மூழ்கி  இருந்தார்.

  எல்லா கடைகளிலும் வியாபார நிறுவனங்களிலும்  வாசலில் ஒரு சாமியை வச்சுருக்காங்க. கறுப்பு வெள்ளைன்னு பெரிய கட்டம் போட்ட துணிகள் சாமி போட்டுருக்கு. கூடவே ஒரு குடையும்! நம்ம ஹொட்டேல் வாசலில் புள்ளையார் இருக்கார். மங்களகரமான மஞ்சள் பட்டு கட்டியிருக்கார். மேட்சிங்கா மஞ்சள் குடை!

அறைக்குப்போய் குளிச்சுட்டு வந்து  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாமுன்னா  மூணுமாடி ஏறி இறங்கணுமே என்ற பயத்தில் கையோடு சாப்பிட்டுட்டுப் போயிடலாமுன்னு சொன்னது நாந்தான்.உண்மையில் இது மூணுமாடின்னாலும் தரைதளம் ஒன்னாவது மாடியாம்.  அப்படியும் நாலுமுறை படியேறி இறங்க  முழங்கால் மறுக்குதே :(

அறை வாடகையில் காலை உணவும் சேர்த்தி.  சூப் முதற்கொண்டு ஏராளமான வகைகள் இருக்கு.   ப்ரேக்ஃபாஸ்டுக்கு  எதுக்கு சூப்?  நமக்குண்டான ஸாலடோ, சாண்ட்விச்சோ நாமேகூட செஞ்சுக்கலாம்.  பேக்கரி ஐட்டங்களும்  அட்டகாசம்!

சாப்பாடை முடிச்ச கையோடு ஊர் சுத்திப் பார்க்கஒரு வண்டிக்கு ஏற்பாடு செஞ்சுக்கலாமேன்னு வரவேற்பில் கேட்டதுக்கு,  'நீங்கள் எங்கே போகணும் என்ன ஏதுன்ற விவரங்களைச் சொல்லி பேரம் பேசிக்குங்கோ'ன்னுட்டு,  ஒரே விநாடியில்  ஹொட்டேல் வாசலில் இருந்து ஒருத்தரை வரவழைச்சார். நம்முடைய ஒரே கண்டிஷன்  ட்ரைவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிஞ்சுருக்கணும் என்பதே.

வந்த இளைஞர்  Nyoman Urip Suryawan.  காலையில் சில இடங்களைப் பார்த்துட்டு அறைக்குத் திரும்பிட்டு  கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் மாலையில் சில இடங்களைப் பார்த்துக்கலாமுன்னு முடிவாச்சு. ஏழு லட்சம் கேட்டு, அஞ்சு லட்சத்துக்கு ஒத்துண்டார். முழுநாள் என்பதால் சரின்னு நினைச்சோம்.  இப்ப மணி எட்டேகால். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பலாமுன்னு சொல்லி அறைக்கு வந்து குளிச்சு தயாரானோம்.

ஏராளமான கோவில்கள் இருந்தாலும் முதலில்  Tanah Lot என்ற கோவிலுக்குப் போறோம்.  சுமார்  21 KM வடக்கே கடற்கரையோரமா இருக்கு.  கூட்டா ஏரியாவை விட்டு வெளிவர  ஒருவழிப்பாதைதான். போறவழியில் கடைத்தெருக்களையெல்லாம் கடந்து போகணும்.  ஊரைவிட்டு வெளிவந்துட்டால்.....   வழியெல்லாம் சிற்பங்களே!  ஏராளமான புத்தர்களும் புள்ளையாருமாத்தான் இருக்காங்க. காங்க்ரீட் சிற்பங்கள். கூடவே என்னென்னமோ சாமிச்சிலைகள். பார்க்க த்வாரபாலகர் மாதிரியே இருக்கு.  எல்லா சின்ன பெரிய கோவில்களில் எல்லாம் வாசலில் ரெண்டு பக்கம் கட்டம்போட்ட துணி கட்டிக்கிட்டு நிற்கறாங்க.


வீட்டுத் தோட்டங்களில் வைக்கும் அலங்காரச் சிலைகள்,  அலங்கார விளக்குகள். மரச்சாமான்கள் இப்படி கடைகள்  வரிசையாக் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு. பேசாம சிலவற்றை வாங்கிக் கப்பலில் அனுப்பிக்கலாமான்னு ஆசை வந்தது நிஜம்.

பசுமையோ பசுமைன்னு கண்ணுக்குக் குளிர்ச்சியான நெல்வயல்களும் மரஞ்செடி கொடிகளும். அலங்காரச் செடிகள் விற்கும் நர்ஸரிகள்  அடுத்தடுத்து சாலைகள் ஓரமாக ஏராளம். வழியில் தென்பட்ட வீடுகளின் முற்றத்தில் முதலில் இருப்பவை எல்லாம்  குடும்பக் கோவில்களே.  நல்லா அழகா ஓரம் கத்திரிச்ச வைக்கோல் கூரைகளுடன்  சின்னதும் பெருசுமா வரிசைவரிசையா காம்பவுண்டு சுவருக்குள்ளில் இருந்து தலை உயர்த்திப் பார்க்குது.

இந்தப் பயணப்பதிவில்  நாட்டைபற்றியோ, அங்குள்ள மக்களின் மனோபாவங்களைப்பற்றியோ  அதிகமா ஒன்னும் எழுதப்போறதில்லை. நம்ம கோவி.கண்ணன்  அவருடைய 'காலம்' பதிவில் ரொம்பவே விலாவரியா  இந்துத் தீவுன்னு 10 பகுதிகளில் அருமையான தொடர் எழுதி இருக்கார். அதை ஒரு எட்டு போய் பாருங்க.  படிக்காதவர்கள்  இந்தச் சுட்டியில் இருந்து நூல் பிடிச்சுப்போகலாம்.



http://govikannan.blogspot.co.nz/2012/02/1.html


தீவில் கிட்டத்தட்ட 85 சதவீதம் ஹிந்து மதம் சார்ந்த மக்களே இருக்காங்க. இந்தோனேஷியாவில் ஏராளமான தீவுகள் இருந்தாலும்  இந்த பாலித்தீவில் மட்டும்  ஹிந்துக்கள் எப்படி வந்துருப்பார்கள்? அநேகமாகப் புதியவரைச் சந்திக்கும்போது 'பேச்சுவாக்கில் ஹிந்துவா' ன்னு கேக்கறாங்க. ஆமாம்னு சொன்னதும் பெருமிதம் கலந்த குரலோடும் புன்னகையோடும் நானும் ஹிந்துன்னு சொல்லும்போது பார்க்கணுமே!

தொடரும்........:-)