Friday, January 09, 2026

குன்றைப் பார்த்தால் விடலாமோ ?

மெதுவா நடக்கும்போதே , மலைப் பாதையும் லேஸா உயர்ந்துக்கிட்டே போகுது.... நமக்கு வலப்பக்கம் கீழே அதலபாதாளத்தில் பினாங்கு நகர் , கீழிறங்கும் மேகத்திரைக்குள் இருக்குது.... கம்பித்தடுப்பு போட்டுருக்காங்கன்றதால்  தைரியமா எட்டிப் பார்த்துக்கலாம்.
சுற்றுலாப்பயணிகளுக்காக சின்னச்சின்ன பெட்டிக்கடைகள் போல..... நினைவுப்பொருட்கள்.   குழந்தைகளுக்கான உடைகள்,  சின்னதா ஒரு ஸ்டூடியோ, பொம்மைகள் இப்படி..........  ஒரு ஓவியர்  மக்களை வரைஞ்சு கொடுக்கறார். நல்லாத்தான்  வரையறார். முக ஜாடையெல்லாம்  சரியாவே இருக்கு. 


ஒரு தகவல் மையம் பார்த்துட்டு, அங்கே போய் விசாரிச்சோம். இங்கே இருக்கும் ஒரு குன்றின்மேல் முருகன் கோவில் இருக்குன்னார். தமிழர்தான். படி ஏறணும் என்றதும் கொஞ்சம் பயந்து போயிட்டேன். படியில்லாத பாதையும் இருக்காம். அந்தக் குன்றைச் சுத்திப்போகணுமாம்.  ஏற்றத்தில் போறதைவிட படிகளே தேவலைன்னு குன்றை நோக்கிப் போறோம்.  வழியில் கொஞ்சநேரம் உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கச் சின்னதா ஒரு பார்க் செட்டிங்! 

                       
ஒரு Buggy  பார்த்துட்டு,  விசாரிக்கப்போன நம்மவர், அதை  ஏற்கெனவே யாரோ புக் பண்ணிட்டாங்கன்னார்.  போகட்டும்..........  படி  பார்த்துட்டுச் சொல்றேன்னேன். முடியலைன்னா.... இவர் போய் பார்த்துட்டு, படங்கள் எடுத்து வரட்டும். 

படியாண்டை போனதும்தான்.... ஏறலாம்னு தோணுச்சு.இந்த முருகனுக்கு என் கால்வலி வேடிக்கையாப் போயிருச்சு போல ! ஒரு பத்துமாசத்துக்கு முன்னால் போன இந்தியப்பயணத்துலே மயிலம் கோவில் படிகள் ஏறவச்சுட்டான்.  ஆனா சும்மாச் சொல்லக்கூடாது..... அற்புதமான தரிசனம். ஏகாந்த தரிசனம் போல அமைஞ்சது, நானும் என் தோழியும்தான் ! இத்தனைக்கும் அன்றைக்குக் கிருத்திகை !!!  இப்ப இங்கே படியேறிவரச் சொல்லிட்டான்னு, மெதுவா ரெய்லிங் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே ஏறிப்போனேன். ஒரு நாப்பதம்பது படிகள் இருக்கணும்....  ஆறேழு நிமிட்டில் மேலே போயாச்! 

குன்றைப் பார்த்தால் குமரனுக்குக் கொண்டாட்டம்தான்.  ஒரு மலையை விடமாட்டான். போதாததுக்கு இங்கே மலைமேல் இருக்கும் சின்னக்குன்று. அதையும் விட்டுவைக்கலை. 
நல்ல அழகான கோவில், பளிச்ன்னு இருக்கு. சுத்தும் முத்தும் பார்வையை விரட்டினால்.... சின்னப்பிள்ளைங்க விளையாட ஒரு குட்டிப்பார்க்.  இது ரொம்ப நல்ல ஐடியா !  பெரியவங்கதான் சாமி சாமின்னு இருக்கோம். கூட வர்ற பசங்களுக்குப் போரடிக்காதா ?  

இந்த முருகனுக்கு அருளொளி முருகன்னு பெயராம். (இது அஃபிஸியல் பெயர் ) நம்ம மக்கள், கொடிமலை முருகன்னும் சொல்றாங்க. ஒரு காலத்துலே (ப்ரிட்டிஷ் ஆட்சியில் ) மலைமேல் ராணுவக்கொடி இருந்ததாம். பதினெட்டாம் நூற்றாண்டிலே தமிழர்கள் வந்தாங்க இல்லையா.... அப்போ  அடையாளத்துக்கு கொடிமலைன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க.நம்ம மக்கள், குன்றைப் பார்த்ததும்.... இங்கே ஒரு வேல் நட்டுக் கும்பிட்டுக்கிட்டு இருந்துருக்காங்க. 

  பொதுவா முருகன் வழிபாடுகள் எல்லாம் சிம்பிளா ஒரு வேல்  வச்சு ஆரம்பிச்சவைகள்தான்.  ஃபிஜித்தீவு, சண்டிகர், ஏன் இங்கே நியூஸியில் நம்ம ஊரிலும்  ஒரு குழுவா நாங்களும் புள்ளையார் கோவில் ஒன்னு கட்டலாமுன்னு நினைச்சு, புள்ளையார் விக்ரஹம் ஒன்னும், ஒரு வேலும் வச்சுத்தான் சத்சங்கம்  மாசம் ஒருநாள் நடத்திக்கிட்டு இருந்தோம். இதுக்கு முன்கை எடுத்தவரும் ஒரு மலேசியத் தமிழர்தான். அஞ்சு வருஷம் இப்படியேதான் போச்சு.  கொஞ்சம் நிதி சேர்ந்ததும் தான் கோவிலுக்காக இடம் தேடி, நம் குழுவினர் பலரும் ஒரு நல்ல தொகையைக் கொடுத்து,  ஒரு  கட்டடம் வாங்கி, உள்ளே மாற்றங்கள் பல செஞ்சு,  இந்தியாவிலிருந்து பிள்ளையார் சிலை,   விக்கிரஹங்கள், மற்ற பொருட்கள் வரவழைச்சு ஒரு ஒன்னரை வருசத்துக்குமுன்தான் கும்பாபிஷேகம் ஆச்சு. கீழே மூன்று படங்கள்  நம்மூரில்

                      
இந்தக் கொடிமலை முருகன் கோவில், பினாங்கின் மூத்த கோவில்.  வயசு இருநூறு வருஷங்களுக்கும் மேலே! தீராத நோயெல்லாம் தீர்க்கும் கோவில்னு தனிப்புகழ் பெற்றிருக்கும் கோவில் !


 ரொம்பப்பெரிய கோவில்னு சொல்லமுடியாது.  கருவறையும் சுற்றிலும் மண்டமும்தான் ! வாசலுக்கு நேரே கொடிமரம்,  வேலாயுதம், பலிபீடம், மயில் வாஹனம் கடந்து மூலவர் ஸ்ரீ ஷண்முகநாதர் நின்ற கோலத்தில் ! 

நாம்  கருவறையை வலம் வர்றோம்.  மண்டபத்தில்  ஒரு கோடியில் பிள்ளையாரும்  அடுத்த கோடியில் இடும்பரும் இருக்காங்க. இன்னொரு தனிச்சந்நிதியில்  ஸ்ரீ ஆதிஷண்முகநாதர். 
அடுத்து உற்சவமூர்த்திகளின்  மாடம்.  பக்கத்து சுவரில் பெருமாள் ! இதே மண்டபத்தின் ஒரு மூலையில் கோவிலின் அலுவலகம். ஆச்சு, அவ்வளவுதான் !
வெளி மண்டபத்தின் ஒரு மூலையில் ராமலிங்க அடிகள். அடுத்த மூலையில் அருணகிரிநாதர் !

வெளிப்ரகாரம் சுற்றும்போது, அடர்த்தியான மரக்கூட்டங்கள் தனியழகு !   சிவன் குடும்பத்தினர்  பெரிய நந்தியும் மயில்களுமாக..... ஆஹா..

கோவிலின் வெளிப்புறச் சுவரில் சுத்திவர முருகனின் அழகழகான ஓவியங்கள் ! நல்ல ரசனையுள்ள  நிர்வாகிகள் ! கோவில் இருக்கும்  இந்த இடம்  அரசின்  அன்பளிப்பு ! 



வெளியே  சின்னப்பிள்ளைகளுக்கான  விளையாடும் இடத்துக்கு அந்தாண்டை....  படிகள்! மேலே என்ன இருக்கும்னு  பார்த்தால் மசூதி. 1966 இல் கட்டியிருக்காங்க. இந்துக்கள் மட்டுமில்லாமல் இஸ்லாமியர்களுக்கும்  கொடிமலைக்கு வந்து வழிபாடு நடத்தலாம்.  (செக்யூலர்னு சொல்றது இதுதான். எல்லா மதத்துக்கும் சம உரிமை!  ஒரு சாமி ஆகும் , ஒரு சாமி ஆகவே ஆகாது என்ற போலித்தனம் இல்லை, பாருங்க ! ) படிகள்  ஏறணுமேன்னு நான் போகலை. கீழே இருந்தே  சுமாராத் தெரிஞ்சது. அப்புறம் ஆண்டவர் அருளினார்.

கோவில் தோட்டத்தில்  ஆஹா....  என் 'கனகாம்பரம் ' !!!!   சிலபல க்ளிக்ஸ் முடிச்சுட்டு. 'கேசவா, நாராயணா. கோவிந்தா'ன்னு படிகளில் மெதுவாக இறங்கிவந்தேன். எதையெடுத்தாலும் எண்ணும் குணம் இப்பக் காணோம்.....
பினாங்கு மலையில் கோவில் இருக்கும் குன்றுக்கு  Gun Hill  என்று பெயர் . பீரங்கி (cannon)ஒன்னு 1796 இல் நிறுவியிருக்கு  ப்ரிட்டிஷ் அரசு.   தீவை நோக்கி வரும் கப்பல்களுக்கு  சிக்னல் கொடுக்கறதுக்காகவாம். இப்பவும் அந்த பீரங்கி இங்கே இருக்குதான்.  மேலே மசூதிக்குப்பக்கம் என்றதால் நம் கண்ணுக்குப் படலை. நாம்தான் மேலேறிப் போகலையே.........  ப்ச்.........

இறங்குவதில் எனக்கு அவ்வளவாகப் பிரச்சனை இல்லை.  Angsana  என்ற பெயர் போட்ட ஒரு அமைப்பு! கலை நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கும்  அரங்கம் போல மேடை இருக்கு.  
பாதையோரக்கடைகளில் பேரனுக்கு ரெண்டு உடுப்பு , நினைவுப்பரிசுன்னு  வாங்கினோம்.  கடைகளின் விற்பனையாளர்/ ஓனர் எல்லோரும் பெண்கள்தான் !  கேட்கும் பொருட்களைப் பொறுமையாத் தேடி எடுத்துக் காமிக்கிறாங்க.  பயணிகள் ரசிக்கத் தெரு ஓவியங்கள் இருக்கும் பகுதி ஒன்னு இருக்காம்.  கீழே இறங்கினதும் நேரம் இருந்தால் போய்ப் பார்க்கணும். 

நாம் இப்போ இருக்குமிடத்தில் இருந்து ஒவ்வொரு அடுக்காக இறங்கிப்போக படிகள் எல்லாமும் இருக்குதான். என் கால்கள், 'போகாதே'ன்னு கெஞ்சியது உண்மை. (இதுக்குத்தான் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும்போதே பயணங்களை  மேற்கொள்ள வேணுமுன்னு நான் எப்பவும் சொல்வது. )
பினாங்கிலிருந்து மெயின்லேண்ட் மலேசியாவுக்குப் போக பாலம் இருக்கு. 1985 இல் கட்டியிருக்காங்க. பதிமூணரை கிமீ நீளமாம். கடல் தண்ணீருக்கு மேலே மட்டும் கிட்டத்தட்ட எட்டரை கிமீ!  இப்போ  2014 இல் ரெண்டாவது பாலம் ஒன்னும்  கட்டியிருக்காங்க. இது இருபத்திநாலு கிமீ நீளமாம்.  கடல் தண்ணீருக்கு மேலே கிட்டத்தட்ட  பதினேழு கிமீ போகுது.  மலேசியாவின் மிகவும் நீளமான பாலம் இதுதான் (இப்போதைக்கு ) தென்கிழக்கு ஆசியாவின் நீண்டபாலமும் இதுதான்னு சொல்றாங்க.  பெனாங் மலையில் இருந்து தெரியுதான்னு தேடுனப்ப,  மேகக்கூட்டத்துக்கிடையில்  தூரமா மசமசன்னு தெரிஞ்சது. இது முதலாவதா இல்லை ரெண்டாவதான்னு தெரியலை..... 
கீழே போகும் ரயிலுக்காக  சீனியர் அறையில் ஒரு  காமணி காத்திருந்தோம். பயண நேரத்தைவிடக் காத்திருப்பின் நேரம் அதிகமே !  

தொடரும்............ :-)



Wednesday, January 07, 2026

நம்ம சரவணனுக்குக் கல்யாணம் !

கூட்டாளிகள் எல்லாம் சேர்ந்து பேனர் அடிச்சுருக்காங்க ! சினிமாவின் வீச்சு அதிகம்தான் !
ஒரே மாதிரிப் புடவை கட்டின வரவேற்புக்குழு, உள்ளே போயிட்டாங்க. இது நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயமாம் !  வாசலில் நின்னு (மூணே படிகள்தான் ) எதிர்வாடையில் பார்த்தால்.... இப்ப நாம் போய்வந்த கோவில்.  நம்ம பெருமாளின் விமானம் தங்கமா மின்னுது ! (என்ன இருந்தாலும்.... மஹாலக்ஷ்மியைக் கட்டுன பாக்கியசாலி இல்லையோ !) 
ஹாலுக்குள்ளே காலெடுத்து வைக்கிறோம்.      ஒரு பக்கம் புள்ளையார் கல்யாணத்துக்கு  வந்துருக்கார்.  


நடுவிலே பாதையை     விட்டுட்டு ரெண்டு பக்கமும் பூக்கள் அலங்காரம்.  இடது பக்கம்  மணவறை. வலப்பக்கம் விருந்தினர் உக்கார நாற்காலி வரிசைகள்.  ரொம்பப் பழைய காலத்து ஸ்டைலில் ரெண்டு பக்கங்களிலும் திறந்தவெளி முற்றம் !    


நெடுநெடுன்னு ஏகப்பட்டத் தூண்கள் வரிசை! பார்க்க அழகாவே இருக்குதான் !

நாம் ஒரு பக்கமா ஒதுங்கி  உள்ளே போய் மூலவர் சந்நிதிக்குப் போனோம். அழகான  முன்மண்டபம் பளிச்ன்னு இருக்க, உள்ளே ஸ்ரீ தண்டாயுதபாணி நிக்கிறார்.  தண்ணீர்மலை மேல் பாலதண்டாயுதபாணியா இருக்கறவர், இங்கே  குமரனாகக் காட்சி கொடுக்கறார் ! 
கருவறை வாசலுக்கு  வலப்புறம் (நமக்கு இடப்புறம்  ) அண்ணன் !  சந்நிதிக்கு நேரெதிரா மயில் வாகனம் !    எல்லோருக்கும் பெரிய பெரிய மாலைகள் !               கொஞ்சம் தள்ளி, அந்த அழகான மணவறை ! 
சந்நிதிக்குமுன் இருக்கும்  முன்மண்டபப் பெரிய தூண்களுக்கு  ஸீத்ரூ ப்ளாஸ்டிக் சுத்திவிட்டுருக்காங்க.        கைக்கெட்டும் உயரம்வரைதான் கண்ணாடிச்சீலை !!!!  நல்ல ஐடியாதான் !  மனிதக் கைகளின்   அழுக்கில் இருந்து தப்பிக்கலாம் !     
          
 வலம் வர்றோம். சுத்திக் கம்பியழி. இடையிடையே தஞ்சாவூர் பெயிண்டிங் ! நடராஜர்,  பெருமாள், அஷ்டலக்ஷ்மி, கோஷ்டத்தில் பழனியாண்டி!  தனிச் சந்நிதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன்.   

இன்னும்கூட அந்தாண்டை சந்நிதிகள் இருக்கலாம். நாம்தான் கல்யாண வீட்டினருக்குத் தொந்திரவாக இருக்கவேணாமேன்னு  இந்தப்பக்கமே இருந்துட்டோம். 


முன்வாசல் திண்ணைச் சுவர்களில் முருகனின் ஓவியங்கள்!  அருமை !
சாலையைக் கடந்து எதிர்வாடையில் நிறுத்தியிருந்த காடிக்குத் திரும்பினோம்.  மணி இப்போப் பத்தேகால்தான்.  இங்கிருந்து ஆறே கிமீ தூரத்தில்  கொடிமலை இருக்காம். (Flagstaff Hill) மேலே போய்ப்  பார்க்க ரயில் இருக்குன்னதும்  நம்மவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி ! 
அடிவாரத்தில் இருக்கும் ரெயில்வே ஸ்டேஷனில் கொண்டுபோய் விட்டார் மேகநாதன். நாம் திரும்பி  வந்ததும் அவரை ஃபோனில் கூப்பிடலாம்.  அவரையும் நம்மோடு வரச் சொன்னோம். ஆனால் ட்ராவல் டெக்ஸி கம்பெனி  சூப்பர்வைஸர் கொஞ்ச நேரத்தில்  வருவாராம். 


நாங்க போய் டிக்கெட் வாங்கிக்கிட்டுக் காத்திருந்தோம்.  கொஞ்ச நேரத்தில்  மேலேயிருந்து ரயில் வந்துருச்சு. ஒரே ஒரு பெட்டிதான். நாம் போய் உக்கார்ந்தோம். அஞ்சு நிமிட்டுக்கும் குறைவான நேரத்தில் மேலே போய் இறங்கியாச்சு. இந்த அஞ்சே நிமிட்டுக்குள்ளே ஒரு சுரங்கப்பாதை வேற !  இந்த ரயிலுக்கும் ரயில்பாதைக்கும் வயசு நூத்தியிரண்டு ! 2023 இல்தான் நூற்றாண்டுவிழா கொண்டாடியிருக்காங்க.  
பல்ச்சக்கரம் எல்லாம் இல்லை. கனமான கேபிள்தான் பெட்டியை  இழுத்துக்கிட்டுப் போகுது .  ஏற்கெனவே பச்சைப்பசேல்னு இருக்கும் ஊரை,  மலைமேல் இருந்து பார்க்கும்போது அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. இந்தக் காட்சிகளை அனுபவிக்க அங்கங்கே  தனிஏற்பாடுகள் வேற !

இங்கே  மலைமேல் தங்குவதற்கு ஒரு ஹொட்டேல் கூட இருக்கு.  வெறும் பனிரெண்டே அறைகள்தான் என்பதால்  ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே புக் பண்ணனுமாம். ( ஒரு தகவலுக்குச் சொன்னேன். நாம் அஞ்சரைக்குள்ளே கப்பலுக்குத் திரும்பணும், கேட்டோ !)

இந்த பினாங்கு மலையைக் 'கண்டு பிடிச்சவர்'  ப்ரிட்டிஷ் ஆட்சியில் இங்கிருந்த  கேப்டன் ஃப்ரான்சிஸ் லைட் என்றவர். (மலை காணாமப்போயிருச்சா என்ன கண்டுபிடிக்கறதுக்கு ?   ஐ மீன்  மலையை எப்படிப் பயன்படுத்தலாமுன்னு..... ஹிஹி  ) ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்னு உருவாக்கலாமுன்னு நினைச்சு மலையுச்சி வரைப் போய்ப் பார்த்தப்ப, அங்கிருக்கும் அழகுகள், அருவிகள், இயற்கைக் காட்சிகள் எல்லாம் பிடிச்சுப்போனதும்  அங்கே போய்வர என்ன வழின்னு உக்கார்ந்து யோசிச்சுருக்கார் !   காலம் பதினெட்டாம் நூற்றாண்டு !  மலையேற்றம்தான் ஒரே வழி.  இப்பவும் மலையேறிப் போற மக்கள்ஸ் இருக்காங்க. ஆரோக்யமான உடல் இருந்தால் மூணு மணிநேரத்தில் போய்ச் சேரமுடியுமாம். அதுக்கான பாதையை நவீனப்படுத்திப் பராமரிக்கிறாங்கன்னு கேள்வி. 

ரயிலை விட்டிறங்கிய நாமும் அங்கங்கே நின்னு வேடிக்கை பார்த்துட்டு மெதுவா நடந்து  முன்னே போகும் மக்களைப் பின் தொடர்கின்றோம்.  

போற வழியில்...........

தொடரும்............. :-)