Friday, September 14, 2018

திப்பு, நீங்க நல்லவரா இல்லை, கெட்டவரா....... (பயணத்தொடர், பகுதி 9)

மனிதன் முக்கால், மிருகம் கால்ன்னு சொல்லலாமா? ஸ்ரீரங்கபட்னாவைத் தலைநகரமா வச்சுக்கிட்டு, இந்தப் பகுதியை ஆண்ட ஹைதர் அலியும், அவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த அவர் மகன் திப்பு சுல்தானும் கோவிலை இடிச்சுப்போடாம விட்டு வச்சதுக்கே நம்ம நன்றியைச் சொல்லத்தான் வேணும்! அதுமட்டுமில்லாம, கோவிலுக்கு கைங்கர்யங்களும் பண்ணினதாத்தான்  சொல்றாங்க. பெருமாளுக்கு வெள்ளி வட்டில்கள் எல்லாம் காணிக்கையாகக் கொடுத்துருக்கார்! இப்பவும் கோவிலில் இருக்கு!
வடநாட்டில் இருந்து  வந்த குடும்பத்தில் பிறந்த ஹைதர் அலி, ஒரு சாதாரணப் படைவீரராகத்தான்  மைசூர் அரசில் இருந்துருக்கார்.  அப்புறம் இவருடைய போரிடும் திறமையைக்  கவனித்த  தளபதிகள் கொடுத்த ஊக்கத்தினாலும், பதவி உயர்வினாலும் மெள்ள மெள்ள முழு சேனைக்கும் அதிபதியாகி, ஒரு கட்டத்தில் இவரே  முழுப்பொறுப்புடன் அரசனாகிட்டார். மதமாற்றம், ஹிந்துக்களை ஹிம்சை செய்ததுன்னு  ஒருபக்கம் குற்றம் சொல்லிக்கிட்டு இருந்தாலும்,  பொதுவில் நல்ல மன்னராகத்தான் இருந்துருக்கார் போல! ஏகப்பட்ட நல்ல திட்டங்களை அவர் காலத்துலே நாட்டுமக்கள் நன்மைக்கு அமல் படுத்தி இருக்கார்!  ராக்கெட் சமாச்சாரத்தை ஆதியில் பயன்படுத்தியது இவர்னு பாராட்டும் உண்டு!
வெள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்த சமஸ்தானங்கள் பல  இருந்தாலும்,  ஹைதர் அலி, முழுமையா வெள்ளையர்களை (கிழக்கிந்தியக் கம்பெனி)எதிர்த்துருக்கார். எதிரிக்கு எதிரி நண்பன் என்றாப்பல ப்ரெஞ்சு அதிகாரிகளுடன் நட்புப் பாராட்டி வந்துருக்கார்.
இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான், ஹிந்துக்களுடன் இணக்கமாவே இருந்துருக்கார்.  ஸ்ருங்கேரி மடத்துக்கு நிலங்களாகவும், பொருட்களாகவும் நன்கொடைகள் கொடுத்து வந்துருக்கார். நன்கொடைகள் கொடுத்ததால் நல்லவர்னு சொல்லலை. அப்ப ஒன்னும் கொடுக்கலைன்னா கெட்டவரா? 

மராட்டியர்கள் ஸ்ருங்கேரி மடத்தைத் தாக்க வந்தபோது, மடத்தலைவரே திப்புவுக்குத்தான் ஓலை அனுப்பி உதவி கேட்டாராம். திப்புவும் உதவி செஞ்சு மடத்தைக் காப்பாத்திட்டார்னு வரலாறு. போரில் பழுதாகிப்போன மடத்தையும் கோவிலையும் சரியாக்கிக் கொடுத்து, ஷாரதாம்பாள் சிலையை மறுபடி பிரதிஷ்டை செய்யறதுக்கும் உதவி செஞ்சுருக்கார்.

இப்பெல்லாம் மதச்சார்பின்மைன்னு என்னவோ பேசிக்கிட்டு,  ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும்  இழிவாகவே நடத்தறாங்களே.... அதைப்போல இல்லாம உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார்னு வரலாறு சொல்லுது. எல்லா மதத்தினரையும் ஒன்னுபோலவே நடத்தினாராம். எந்த மதத்தையும் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை ! (நிம்மதி!) அவருடைய நல்லெண்ணத்தைப் பாராட்டி, இப்போதைய கர்நாடக அரசு, திப்பு சுல்த்தான் பிறந்தநாளை கடந்த மூணு வருஷமாக் கொண்டாடிக்கிட்டு வருது. இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டு இருக்காங்கன்னும்  கேள்வி.

உண்மையைச் சொல்லணுமுன்னா.... இது வரை எந்த சரித்திரமும் உண்மையாக, நடந்தது நடந்தபடியெல்லாம் எழுதப்படவே இல்லை.  எழுதறவங்களும், அந்தந்தக் காலக்கட்டத்தில் இருக்கும் அரசுக்கு சார்பெடுத்துதான் எழுதி இருப்பாங்க. எதிர்த்து எழுதுனா... கழுத்துமேலே தலை நிக்க வேணாமா? ஹூம்..... நமக்குத் தெரிஞ்சேகூட சமீபத்து வரலாறுகளில் காலப்பெட்டகம் புதைக்கிறோம், பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தைத் திருத்தியமைக்கிறோமுன்னு  என்னென்ன தில்லுமுல்லு!!! ப்ச்...
மைஸூர் போர், மராத்தியப்போர்னு அந்தக் காலத்துலே ஏகப்பட்டது நடந்துருக்கு. அதுலே மூணாம் மைஸூர் போரில் வெள்ளையருடன் சண்டையிடப்போன திப்பு சுல்தான், மரணம் அடைஞ்சுடறார்.  இறந்துகிடந்த வீரர் கூட்டத்தில் இவருடைய உடலை அடையாளம் கண்டதா  சண்டையிட வந்தவரே  சொல்லி இருக்கார்.  அந்த உடல் கிடந்த இடத்தை இப்போ ஒரு நினைவிடமா ஆக்கி இருக்காங்க.  தொல்லியல் துறை அங்கே ஒரு தகவல் பலகையும் வச்சுருக்கு.

வெள்ளையரின் கைக்கூலிகளா திப்புவின் அரசில் இருந்த  சிலரின் துரோகமே  இவர் இறப்புக்குக் காரணமாம். துரோகத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது, கேட்டோ!

ரங்கனை தரிசனம் செஞ்சுட்டு, நிமிஷாம்பாளைப் பார்க்க வந்த வழியில் இந்த இடம் பார்த்துட்டு வந்துருந்தோம்.
இறந்த உடலை அப்புறம் கொண்டுபோய் அடக்கம் பண்ண இடம்தான் இந்த கும்பஜ். அங்கேதான் இப்போப் போய்ச் சேர்ந்தோம்.





பெரிய அழகான விசாலமான தோட்டத்துக்கு நடுவிலே  ரொம்பவே அழகான ஒரு கட்டடம். ஜஸ்ட் ஒரு பெரிய ஹால்!  சுத்திவர கருப்பு க்ரானைட் கல்லால் இழைச்ச தூண்கள். எல்லாம் பெர்ஷியன் ஸ்டைலாம்!  உள்ளே மூணு சமாதிகள்!  ஹைதர் அலி, அவர் மனைவி, அவர் மகன் திப்புன்னு மூணுபேரும்  இதுக்குள்ளே!


நாங்க போனப்ப  ஒரு   பயண க்ரூப் மக்கள்  வந்துருந்தாங்க. கூட்டத்தைப் பார்த்ததும் அங்கிருந்த  ஒருவர், வாலண்டியர் கைடா மாறி, விளக்கம் சொன்னார்.  எந்தெந்த சமாதியிலே யாருன்னு.... ( மொத்தமே மூணுதான்! ) திப்பு சுல்தானுக்கு  மைஸூர் புலின்னு ஒரு பட்டப்பெயர் இருந்துச்சுன்னும், அதுக்காகச் சமாதி இருக்கும் கட்டடத்தின் உள்பக்கச் சுவரில் புலி டிஸைன் வரைஞ்சுருக்காங்கன்னும் சொன்னார்.  கூடவே ஒரு குண்டும் போட்டார், படம் எடுக்கக்கூடாது.....  என் முகம் போன போக்கைப் பார்த்துட்டு வாசலில் இருந்து எடுக்கலாம். உள்ளே நின்னு எடுக்கக்கூடாதுன்னார் :-)
வெளியே வந்தப்ப, ஒரு எட்டு மாசக்குழந்தையின் தலையை கீழே தரையில் படும்படி வச்சு  குழந்தையிடம் சாமி கும்பிட்டுக்கோன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க அதன் தாய். குழந்தை செல்லம் போல அழகா இருந்தான். என்னைப் பார்த்ததும்,  அந்த இளம்தாய், 'குழந்தை தலையில் கை வச்சு ஆசீர்வாதம் செய்யுங்கம்மா'ன்னு கேட்டுக்கிட்டாங்க.
(ஹா.... நம்ம தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் இருக்கோ? )

பெரியவளா லக்ஷணமா, (பெருமாளே...  இந்தக் குழந்தையை நல்லபடியா நீதான் பார்த்துக்கணுமுன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே) குழந்தையை ஆசீர்வதிச்சேன். 'ஒன்னும் ஆகாதுல்லே மா? 'ன்னு  கேட்டதும் தூக்கி வாரிப்போட்டுச்சு. ஐயோ... நம்ம தொட்டதால் ஒன்னும் ஆகாதுன்னு கேக்கறாங்களோ?  தாய் முகத்தில் கவலை. குரலிலும்தான்!

என்ன ஏதுன்னு விசாரிச்சேன். குழந்தை கீழே விழுந்துருக்கு. தாய் பதறிப்போயிட்டாங்க. எவ்ளோ உயரத்தில் இருந்து விழுந்தது?  வேன் ஸீட்டுலே கிடத்தி  நேப்பி மாத்தும் போது, துள்ளி அந்தாண்டை  வேன் தரையில் விழுந்துருக்கான்.
'எப்படியும் வேனுக்குள்ளே  மிதியடியெல்லாம் இருக்கும்தானே?  உயரமும் ஒன்னரை அடிதான் இருக்கும். ஒன்னும் ஆகாது. பயப்படாதீங்க'ன்னேன். ரொம்ப அழுதானா?  இல்லையாம். கொஞ்சம் அழுதுட்டு நிறுத்திட்டான். நல்ல வேளை.... வலி ரொம்ப இருந்தால் அழுகையை நிறுத்தி இருக்குமோ?  தலையில் எங்காவது தொட்டால் வலியில் சிணுங்கறானா?  இல்லைம்மா. தொட்டுப் பார்த்துட்டேன்.

ஹப்பாடா.....  ஒன்னும் ஆகாது.  ஊருக்குத் திரும்பிப்போனதும் எதுக்கும் டாக்டராண்டை காட்டுங்க. கடவுள் இருக்கார்!
தாய் முகத்தில் கொஞ்சம் புன்னகை.  அவுங்க  அனுமதியோடு சில க்ளிக்ஸ். குடும்ப அங்கங்களோடு  பெரிய வேன்லே வந்துருக்காங்க, பெண்களூரில் இருந்து.  இதுக்குள்ளே குடும்ப அங்கத்தில் சிலரும் எங்களோடு வந்து சேர்ந்து பேசினாங்க. எல்லோருமா சில க்ளிக்ஸ்.


கட்டட வெராண்டா முழுசும்  கிரானைட் தூண்களுக்கிடையில் ஏகப்பட்ட சமாதிகள். சிலதில் பெயர்கள் இருக்கு. பலதில் இல்லை. சின்னதா இருப்பதெல்லாம் சின்னப்புள்ளைங்களோடதுன்னு எப்பவும்  நினைச்சுக்குவேன். இப்பவும்....


இதைத்தவிர வெளியே மேடையிலும் அங்கங்கே கூட்டங்கூட்டமா சமாதிகளே!   பெரிய குடும்பி போல!  ராயல் ஃபேமிலின்னா ச்சும்மாவா?

இந்த அழகான கட்டடத்தைக் கட்டுனவரே நம்ம திப்புதான்! அப்பா அம்மாவுக்கு சமாதி கட்டுனவரை, விதி இங்கே கூட்டியாந்து  வச்சுருச்சு பாருங்க!  சமாதிக் கட்டடம் தவிர ஒரு மசூதியும்  இங்கே இருக்கு.  நாங்க அதுக்குள்ளே போகலை.....

வளாகத்துக்கு வெளிப்புறம்   ஏகப்பட்ட கடைகள். அழகழகான பொருட்கள்.  ஒன்னும் வாங்கிக்கலைன்னா நம்புங்க. சனம் கூட்டங்கூட்டமா  வண்டியில் வந்திறங்குது!  ஸ்ரீரங்கபட்னாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இது ஒன்னு ன்னு  சுற்றுலாத்துறைப் பரிந்துரைச்சு இருக்கே!

ஒரு இளநீர் மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பினோம். .  திப்புவின் கோட்டை இருக்குன்னாலும் போகலை.  கோட்டை மதில் சுவர் வழியா வரும்போது  அங்கங்கே இடிஞ்சு கிடப்பதை வண்டியில் இருந்தே பார்த்தது போதும்.  மைஸூர் எல்லைக்குள் வந்ததும், போகும்போதே பார்த்துவச்ச  கடையில் போய் மகளுக்கு ஒரு மைஸூர் ஸில்க் புடவையும், எனக்கொரு ஸல்வார் கமீஸ் துணியையும்  வாங்கினோம்.

புடவைகளின் படங்களை (ஷார்ட் லிஸ்ட்  ஆனதும்)மகளுக்கு அனுப்பிட்டுக் கடையிலேயே கொஞ்சம் காத்திருந்தோம். இந்தியாவில் இருக்கும்போது    மாலை நாலு மணி வரை மகளுடன் தொடர்பில் இருப்பது வாடிக்கை.   மகளுக்கு எது வாங்கணுமுன்னாலும் படம் அனுப்பி ப்ரிஅப்ரூவல் வாங்கணும்:-)

புடவைகளில் ஒன்னு செலக்ட் ஆச்சு.  வாங்குன கையோடு ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.

இங்கே நாலைஞ்சு நாளா நகைநட்டு எக்ஸிபிஷன் நடக்குதாம். நேத்து இங்கே வந்திறங்கியதுமே கவனிச்சேன்.  வாங்க, வேடிக்கை பார்க்கன்னு வர்ற கூட்டமே  பயங்கர மேல்தட்டுவாசிகளாத் தோணுச்சு.   ராத்ரி ஒன்பது வரை இருக்காம்... பார்க்கலாம்....

இன்னும் சில இடங்களைக் கார் இருக்கும்போதே பார்க்கணும்.  சின்ன ஓய்வுக்குப்பின் கிளம்பலாமா?

தொடரும்.......   :-)


Wednesday, September 12, 2018

கேட்டதும் கொடுப்பவளே..... (பயணத்தொடர், பகுதி 8 )

உண்மையில்  யாராவது எதையாவது கேட்டாங்கன்னா.... அவுங்களைக் காக்க வைக்காம உடனே அந்த க்ஷணமே கொடுக்கறதுதான் நல்லது.  ஒரு விநாடி தாமதிச்சாலும் மனசு மாறி செகண்ட் தாட் வந்திரும்.  கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தால்.... இது எவ்ளோ நிஜமுன்னு நமக்கே புரியும், இல்லே?
தேவதாஸா விட்டலா சொன்ன கோவிலுக்கு வந்துருக்கோம். ஸ்ரீ நிமிஷாம்பாள் கோவில்!  தேவியிடம் கேட்கும் வரங்களையும், நாம் வைக்கும் நியாயமான கோரிக்கையையும்  நிமிஷத்துலே நிறைவேத்திடுவாளாம்!

காவிரிக் கரையோரமா இருக்கு கோவில்.  பார்க்கிங் இடத்துலே வண்டியை நிறுத்திட்டுச் சின்னதா இருக்கும் தெருவைத் தாண்டி அப்பாலே போகணும். ஆரம்பத்துலேயே  காலணி பாதுகாப்புக்கான இடம்.  காவலர் இருக்கார் :-)


ரெண்டுபக்கமும்  பூஜை சாமான்கள், பூக்கள் விற்கும் கடைகள்.  இடது பக்கம் அந்த ஓரத்தில் சின்ன அஞ்சு நிலை ராஜகோபுரத்துடன் கோவில். இந்தாண்டைக் கம்பித்தடுப்புகள் வச்சுருக்காங்க. ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஒரு கட்டணம் உண்டு. கம்பித்தடுப்புக்குள்  யாருமே இல்லை என்றதால் பொது தரிசனமே போதுமுன்னு போய் கோவில் படிகளில் ஏறினோம்.
உள்ளே படம் எடுக்கத்தடை!  வாசலில் நின்னே நாலு க்ளிக்ஸ் ஆச்சு.

ஒரு பிரகாரம்தான். கண்ணுக்குக்கு நேரா  உயரமான கருவறையில் மூணு சந்நிதிகள்! நடுவிலே தேவி நிமிஷாம்பாள்.  நமக்கு இடப்புறம் சிவனுக்கும், வலப்புறம் பெருமாளுக்கும்(ஸ்ரீலக்ஷ்மிநாராயணர்) தனித்தனியா சந்நிதிகள்! அவரவருக்கு அவரவர் வாஹனங்கள். நிமிஷாம்பாளுக்கு முன்னே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கராச்சாரியார் அவர்கள்.

இந்த மூவரைத்தவிர பிரகாரத்தில் சூரியனுக்கும், புள்ளையாருக்கும் தனித்தனி சந்நிதிகள். மொத்தம் அஞ்சு சந்நிதிகள்.  எல்லாம்  ஆதிசங்கரர் ஏற்படுத்திய பஞ்சாயதன பூஜை முறைகள் இங்கே!


கூகுளாண்டவர் அருளிய படங்கள் !  நன்றீஸ்!

எல்லா கடவுளர் சிலைகளும் பளபளன்னு கிருஷ்ண சிலா என்னும் கருப்புக் கல்லில் !

இந்தக் கோவிலுக்கு  வயசு ஒரு எழுநூறுன்னு தகவல்.  இந்தப்பகுதியை ஆண்டுவந்த முக்தராஜன் என்ற அரசன்,  தன்நாட்டுமக்களைத் துன்புறுத்திய  அரக்கன் ஜானு சுமண்டலனை எதிர்த்துப் போராடியும், அவனால் அரக்கனை கொல்ல முடியலை.  அம்பாள் பக்தனான மன்னன்,  அருள் வேண்டி உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்திக்கறான். பக்தனுடைய வேண்டுகோளுக்காக  மனம் இரங்கிய அம்பாள், அரக்கன் முன்போய் நின்னு கண்ணை மூடிக் கண்திறந்த நிமிஷத்தில் அரக்கனை வதம் செய்து, அவன் பிடியில் இருந்து நாட்டுமக்களைக் காப்பாத்தினதாக கோவில் கதை !  அப்போ கட்டுன கோவில்! அம்மனுக்கும் நிமிஷாம்பாள் என்ற பெயரும் அப்போ வந்ததுதான்!

கோவில்கதைகளைச் சொன்னாக் கேட்டுக்கணும். நிமிஷத்தில் எல்லாம் செய்யக்கூடியவள், அரசனைப்  பலகாலம் உண்ணாவிரதம் இருக்கச் செய்தது ஏன்னு கேள்வியெல்லாம் கேக்கப்டாது, கேட்டோ!  கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான். நம்புனானாத்தான் கடவுள்!

நம்பிக்கையோடு இங்கே வேண்டிக்கிட்டவர்களின் கஷ்டங்கள் சீக்கிரம் போயிருது. அதுவும் பௌர்ணமி நாட்கள், நிமிஷாம்பாள் ஜயந்தி, பிரதோஷம்னு விசேஷ  தினங்களில் கோவிலுக்கு வந்து தரிசனம் பண்ணி, வேண்டுதலும் வச்சா ரொம்ப சீக்கிரமாவே நிவாரணம் கிடைக்குதாம். அந்த தினங்களில் மட்டும்  கிட்டத்தட்ட ஒரு லக்ஷம் பேர் வர்றாங்களாம்!  ஓ.... அதுதான்.... கம்பித்தடுப்பெல்லாம் போட்டு  சனம் வரிசையில் வர வழி பண்ணி இருக்காங்க! 

பிரகாரம் சுத்தி வரும்போது  ஆஞ்சிக்கும் தனியா ஒரு சந்நிதியும், அதுக்கு எதுத்தாப்லெ துலாபாரமும். சமீபத்துச் சமாச்சாரமா இருக்கணும்.  வாழைப்பழம் தராசுத்தட்டில் !


கோவில் காலை 6 முதல்  மாலை 8.30 வரை திறந்துருக்கு. ஹைய்யோ....   பயணிகளுக்கு எவ்ளோ சௌகரியம் பாருங்க !  இதே போல் நம்ம பக்கங்களிலும் இருந்தால் நல்லா இருக்கும்..... 


கோவிலையொட்டியே தொட்டடுத்துப் பெரிய அகலமான படித்துறை!  ஏராளமான படிகள் ! கடந்தால் காவிரி!  காவிரி, ஹேமாவதி, கபினின்னு  மூணு நதிகளின் சங்கமமாம்.
படியையொட்டிக் கொஞ்சமாத் தண்ணீர் குளம்போல இருக்கு!  அந்தாண்டை ஏதோ சிலை இருக்கேன்னு கேமெராக் கண்ணால் கிட்டே கொண்டு வந்தால்... நம்ம புள்ளையார்!
'ஒண்டிக்கொண்டி வர்றயா'ன்னு  கேட்டுச் சண்டைக்குத் தயாரா இருக்கான் ஒருத்தன். எதிராளிக்கு மூட் இல்லை. கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு, சீ போன்னு போய்  உக்கார்ந்தான் அந்த ரௌடி :-)


இலவச  ஹெல்த் செக்கப்  முகாம்,  அன்றைக்கு  ரத்த அழுத்தம் பார்த்துச் சொல்றாங்க! 'நம்மவர்'  போய் செக் பண்ணிக்கிட்டார். நிறையத்தான் இருக்கு.  ஏற்கெனவே இருக்கும் அழுத்தம், பயணங்களில் கொஞ்சம் அதிகம்தான் அவருக்கு! எப்பவும், நான் எதாவது வாங்கிருவேனோ, அதுவும் கனம் அதிகமானதா வாங்கிட்டால் எப்படிக் கொண்டு போக.... இப்படி ஏகப்பட்ட பயத்தில் ப்ரெஷர் அதுபாட்டுக்கு ஏறி உச்சிக்குப் போயிருதே.....

கோவில் வாசலுக்கு முன் இருக்கும் பெரிய முற்றம் போன்ற இடத்தில்  காய்கறிகள், பழங்கள், தீனி இப்படி சிறு வியாபாரிகள். கீரையெல்லாம் தளதளன்னு இருக்கு!


முற்றத்துக்கு நடுவிலே உயரமான சிவலிங்கம் போன்ற அமைப்பின் மேலே ஒரு குட்டி சிவலிங்கம்!  தொட்டடுத்து ஒரு  பழைய கட்டடம்.


காலணிக்காப்பகத்துலே இப்போ ரெண்டு பேர் ட்யூட்டியில்!
பூக்கடைகளில் கனகாம்பரம் பார்த்ததும் வாங்கினேன். எனக்குப் பிடிச்ச பூக்களில் ஒன்னு. மணம் இல்லைன்னாலும் கனம் இல்லை பாருங்க!
குதிரை சவாரி இங்கே விசேஷமோ? கார்பார்க்கில் நாலைஞ்சு குதிரைகள், இதே வேலையா!  கொஞ்ச நேரத்துக்கு முந்தி ரெங்கநாத ஸ்வாமி கோவில் முன்னாலும் ரெண்டு மூணு குதிரைகள் சவாரிக்குத் தயாராத்தான் இருந்தன.
திரும்பிப் போகும் வழியில் தேன், தேனில் ஊறவச்ச சமாச்சாரங்கள்  வியாபாரம்!

ஏழெட்டு நிமிட்டுலே இன்னொரு புது இடம் !

ஆமாம்.... சென்னையில் நிமிஷாம்பாளுக்கு ஒரு கோவில் இருக்கு தெரியுமோ?

சௌகார்பேட்டை, காசி செட்டித் தெருவில் இருக்காம்!  அடுத்த பயணத்தில் போயிட்டு வரலாமா?

தொடரும்...........  :-)