கஷ்யபமுனிவருக்கு விநிதை, Gகத்ரு என்ற ரெண்டு மனைவிகள். கத்ருவின் பிள்ளைகள் அனைவரும் பாம்ப்ஸ். விநிதைக்கு ரெண்டே ரெண்டு மகன்கள். கருடனும், அருணனும். விஷமுள்ள பிள்ளைகளின் உதவியால் விநிதையைச் சிறைப்பிடிச்சு வச்சுட்டாள் கத்ரு. தாயை மீட்க வழி இல்லாமல் கலங்கிய கருடன், பேசித்தீர்க்கலாமுன்னு Gகத்ரு வீட்டுக்குப் போறான்.
ஓ........ பாம்புக்கும் கருடனுக்கும் ஏன் ஆகவே ஆகாதுன்றது இப்போப் புரிஞ்சு இருக்குமே! பங்காளிச்சண்டை.
தேவலோகத்தில் இருக்கும் அம்ருதம் கொண்டுவந்து தந்தால் உன் தாயை விடுவிக்கறேன்னு பேரம் பேசறாள் Gகத்ரு. பெருமாளை தியானித்து தவம் இருந்து வலிமை பெற்ற கருடன் தேவலோகத்துக்குப்போய் ஒரு சின்னப் பாத்திரத்தில் அம்ருதம் வாங்கிக்கிட்டுப் பறந்து வந்துக்கிட்டு இருக்கான். Turbulence காரணம் ஒரு இடத்தில் கொஞ்சம் கை ஆடுனதில் ஒரு துளி அம்ருதம் கீழே பூமியில் விழுந்துருது.
அங்கே ஏற்கெனவே இருந்த குளம் முழுசும் இப்போ அம்ருதம்! வழக்கம்போல் அதுலே குளிக்க வந்த மனிதர்கள், குளிச்சு முடிச்சவுடன் இன்னும் இளமையா ஆகிடறாங்க. அவ்ளோதான்.... சேதி தெரிஞ்சு சனக்கூட்டம் அம்முது! ராவும் பகலுமா ஏகப்பட்ட ரகளை!
இதே குளத்தில் இரவில் தீர்த்தமாட வந்துக்கிட்டு இருந்த தேவர்களுக்கு இப்போ குளிக்க இடமில்லாமல் போச்சு. காரணம் என்னன்னு தேடுனதில் கருடனால் சிந்திய அம்ருதம்னு புரிஞ்சதும் வழக்கம்போல் போய் மஹாவிஷ்ணுவிடம் முறையிடறாங்க. இதுலே தருமராஜன்தான் முன்னாலே நிக்கறான். அம்ருதம் குடிச்சவங்க, குளிச்சவங்க எல்லோருக்கும் சாவே இல்லைன்னா.... அவன் வேலை எப்படி நடக்கும்? பேசாம ஆஃபீஸை இழுத்து மூடவேண்டியதுதான்.....
திரும்ப ராஜகோபுரத்தைக் கடந்து வெளியில் வந்தால் மாலைச்சூரியன்.... தகதகன்னு...
கண் எதிரில் கிராமத்தில் இருந்து நாம் இறங்கி வந்த படிகள்.
'வலக்கைப்பக்கம் பிரம்மனுக்கு ஒரு கோவில் இருக்கு. அது இவ்ளோ அழகா இருக்காது. போய்ப் பார்க்கணுமுன்னா போகலாமு'ன்னு பாஷா சொல்றார். இப்பவே அஞ்சே முக்கால். இருட்டுக்குமுன் கடப்பாவுக்குப் போகலாமேன்னு எண்ணம் நமக்கு. புது இடத்துலே ராத்திரியில் ..... வேணாம்.
மறுபடி ஆத்தைக் கடந்து வந்தோம். 'இங்கே ரொம்பக் கிட்டத்தில் ஒரு பழைய கோவில் இருக்கு. அதைப் பார்க்கலாம் வாங்க'ன்னதும், 'வண்டியில் ஏறுங்க'ன்னு கூப்பிட்டதுக்கு ரொம்பப் பக்கம். தெருமுனை திரும்பினால் போதுமுன்னு நடக்க ஆரம்பிச்சார்.
நாயார் ஒருவர் வந்து நம்மைக் கண்டுக்கிட்டதும் அவருக்குப் பொட்டிக் கடையில் கிடைச்ச ஒரு பிஸ்கெட் பாக்கெட்.
நாங்க வண்டியில் ஏறித் தெருமுனையில் திரும்பினோம். கோவில் பார்த்துட்டு அங்கிருந்தே கிளம்பிடலாம் இல்லையா!
அக்கிரஹாரம் போல இருக்கும் வீதியில் மூணடுக்கு கோபுரவாசல் கடந்து உள்ளே போனோம். பார்த்தவுடனே தெரிஞ்சது ரொம்பவே பழைய கோவில்னு. வெளிப்ரகாரம். பலிபீடம், கொடிமரம் தாண்டி கோவிலுக்குள் போனால் தன்வந்திரி தானே ஸ்தாபிச்ச சிவலிங்கம்! வைத்யநாத ஸ்வாமி! குட்டி மாடத்துலே தன்வந்திரி இருக்கார்!
தீபாராதனை காமிச்சு விபூதி ப்ரஸாதம் கிடைச்சது. நாம் சிவனைத் தொட்டுக் கும்பிடலாம்! ஆனால் உடலை ரெண்டா வளைச்சுக் குனிஞ்சு போகணும். போனோம்!
பிரகாரம் சுற்றி வரும்போது பிரகாரத் திண்ணை முழுசும் சிலைகளோ சிலைகள். ஏதோ பராமரிப்புப் பணிக்கு கோவிலுக்குள் நிலத்தைத் தோண்டும்போது அகப்பட்டவைகளாம்!
ஆல்பம் போட்டே ஆகணும் என்பது உறுதியாச்சு! இங்கே க்ளிக்கலாம் .
அப்படியே க்ளிக்கிட்டு நகர்ந்தபோது, இன்னொரு சந்நிதி வாசலில் சில பெண்கள் காத்திருக்காங்க. அம்பாள் சந்நிதி. வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை விசேஷமாம். அட! நல்ல நாளில்தான் நாமும் வந்துருக்கோம். அர்ச்சகர் வந்து கம்பிக்கதவைத் திறந்தார். சிக்குன்னு சின்னப்பொண்ணா அம்பாள்! காமாக்ஷியாம்! எதிரே மேலெல்லாம் குங்குமம் நிறைஞ்ச மஹாமேரு! ஆதி சங்கரர் பிரதிஷ்டை செஞ்சது.
கீழே படங்கள் ரெண்டும்: கூகுளாண்டவர் அருளிச்செய்தது. நன்றி
புஷ்பகிரி கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹாசமஸ்தானம் என்ற பெயரில் ஒரு அத்வைத மடம் இருக்கு. ஆந்திராவில் உள்ள ஒரே ஒரு அத்வைத மடம் இதுதானாம். புஷ்பகிரிபீடம்! ஸ்ரீ வித்ய சங்கர பாரதி அவர்கள்தான் தற்போதைய பீடாதிபதி. போன செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கிட்டவர்.
அர்ச்சனை செய்யணுமான்னு கேட்டவரிடம், 'இல்லை. நமஸ்காரம் செஞ்சுட்டுக் கிளம்பணும் ' என்றேன். அந்தப் பெண்களிடம் அஞ்சு நிமிஷம் பொறுங்கன்னு கை காமிச்சுட்டு, தீபாராதனை காட்டினார். குங்குமம் கொடுங்கன்னு நம்ம பாஷா சொன்னதும், சட்னு ஒரு பெரிய பாக்கெட் குங்குமத்தை எடுத்து என் கைகளில் திணிச்சார். யம்மாடி.... ஒரு கிலோ! வச்சுக்கிட்டு நானென்ன செய்ய? திருப்பிக் கொடுத்துட்டு, துளி குங்குமம் கொடுங்கோன்னு உள்ளங்கையை நீட்டினேன்.
வெளியே போனதும் நான் நம்மவரிடம், பாஷாவுக்கு கொஞ்சம் அதிகமாக் கொடுக்கலாமுன்னு ரகசியமொழியில்(!) சொன்னதுக்கு அவர் இன்னும் ரகசியமா என் காதில் முணுமுணுத்தார் அதே ரகசிய மொழியில்:-)))) தொகையைக் கைகளில் கொடுத்ததும் பாஷா கண்களில் ஒரு திகைப்பு!
நாம் பார்த்த அந்தப் பொட்டிக்கடைக்குப் பக்கத்தில் ஒரு வீட்டை இப்போதான் கட்டிக்கிட்டு இருக்காராம். தானே கல்வச்சு அடுக்கிக் கட்டறார்.
'இப்படி நில்லுங்க...உங்களை ஒரு படம் எடுத்துக்கறேன்'னேன்.
'இங்கே ஒரு காசி விஸ்வநாதர் கோவில் இருக்கு. கட்டாயம் அங்கே தரிசனம் செஞ்சுட்டுப் போங்க. புஷ்பகிரி கோவில்களில் அங்கேயும் போனால்தான் புண்ணியம்' என்றார்.
எது? நாங்க வர்றவழியில் ஒன்னு பார்த்தமே அதுவான்னு கேட்டு, வரும்போது க்ளிக்கியதைக் காமிச்சால்... அதுதானாம்! (டிஜிட்டல் கேமெராவின் வசதிகளில் ஒன்னு! க்ரேட்!)
சரின்னுட்டு பாஷாவிடமிருந்து விடைபெற்றோம். அஞ்சாறு நிமிட்லே காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போயிட்டோம். வாசல் கேட் மூடி இருக்கு. ஆள் போகும் சின்ன கேட் வழியா வளாகத்தின் உள்ளே போய்ப் பார்த்த நம்ம சீனிவாசன் யாரும் இல்லை மூடி இருக்குன்னு வந்து சொன்னதும், வெளியே இருந்து கொஞ்சம் படங்களாவது எடுத்துக்கலாமேன்னு நானும் இறங்கிப் போனேன்.
சுத்திக்கிட்டு அந்தப்பக்கம் போய் மரத்தடி மண்டபத்துலே இருக்கும் சிவலிங்கத்தைக் க்ளிக்கினப்ப, பேச்சு சத்தம் கேட்டுத் திரும்பினால்.....
நம்மவர், இன்னொரு காவித் துண்டணிந்தவரோடு வர்றார். கொஞ்ச தூரத்தில் போய்க்கிட்டு இருந்தவர் கோவிலாண்டை வண்டி நிக்குதேன்னு திரும்பி வந்தாராம். இவர்தான் இந்தக் கோவிலின் அர்ச்சகர். பெருமாள் எப்படி ஆளை அனுப்பிட்டான், பாருங்க!
இடுப்பில் இருந்த சாவியைப் போட்டுக் கோவிலைத் திறந்தார். இருட்டுக்குள் போறோம். இந்தப் பக்கங்களில் கோவில் கொடிமரம் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு. அடிப்பாகம் ஒரு வெங்கலப்பானை கணக்கா! இங்கே பானை ரொம்பவே பெரூசு!
உள்ளே போனவர் விளக்கை ஆன் செஞ்சதும் பளிச்! நல்ல அருமையான சிவன் சந்நிதி! அருமையான அலங்காரத்தில் எளிமையாக இருக்கார். பாட்டுப்பாடி மந்திரம் சொல்லி, தீபாராதனை காமிச்சு விபூதி ப்ரஸாதம் கிடைச்சது.
அடுத்த சந்நிதி அம்பாள் விஸாலாக்ஷி. தீபாராதனை காட்டி முடிச்சுக் குங்குமம் கிடைச்ச மறுவிநாடி........ டக்ன்னு விளக்குகள் அணைஞ்சு போச்சு. பவர் ஃபெய்லியர்:-(
இருளோ இருளில் தட்டுத்தடுமாறினப்ப கோபாலின் செல்ஃபோன் வெளிச்சம் காமிச்சது. அங்கங்கே சர்ஜரியே பண்றாங்க, இல்லே! சந்நிதிகளைச் சாத்திப் பூட்டிட்டு வந்தவர் நாம் உள்பிரகாரங்களை வலம் வரும்வரை காத்திருந்தார். ஆயிரம் ஆண்டுகாலத்துக்கு முற்பட்ட கோவில். புஷ்பகிரி கோவில்களெல்லாமே தொல்துறையின் கீழ்!
இதனால் ஏற்பட்ட ஒரு நல்லது என்னன்னா.... வளாகம், கோவில் எல்லாம் சுத்தமா பளிச்னு இருக்கு!
போற வழியில் என்னை இறக்கிட முடியுமான்னு கேட்ட அர்ச்சகரை முதலில் பார்த்த கிராமத்துப் பாதை அருகே இறக்கி விட்டுட்டு, நேராப்போய் மெயின் ரோடுலே போய் சேர்ந்துக்கிட்டோம். வானத்தில் நிலா பளிச். நாளைக்குப் பௌர்ணமி!
அரைமணி நேரத்தில் கடப்பாவுக்குள்ளே நுழைஞ்சாச்சு. நேரா ஸ்ரீநிவாசா ரெஸிடன்ஸி ரெஸ்ட்டாரண்டுக்குப் போய் ஆளுக்கொரு டீ. சொல்லி இருவது மினிட் ஆச்சு. வர்றவழியைக் காணோம். வேணாமுன்னு சொன்னால்... இதோ வந்துருச்சு ஸார்னு சொல்லி இன்னும் அஞ்சு மினிட்டுக்கு அப்புறமா வந்துச்சு. சாப்பாட்டு நேரமாம். சமையல்காரர்கள் டின்னர் வேலையில் பிஸியாம். டீ போட ஆளில்லைன்னார் மேனேஜர். கூடவே டின்னர் சாப்புடறீங்களா ஸார்? ரெடியா இருக்குன்னார்!
ஏழரைக்கு என்ன டின்னர்? அப்புறம் ஆகட்டுமே.....
அறைக்குப் போனோம். போன அஞ்சாவது மினிட்டில் இங்கே இன்னொரு இடம் இருக்குன்னு பார்த்தேன், போகலாமான்னார் நம்மவர்.
தொடரும்...........:-)




