Monday, August 19, 2013

ஆத்தா........ மாரியாத்தா....மலேசிய மாரியாத்தா.... (மலேசியப் பயணம் 7 )

'உள்ளே போய் நிறுத்த எங்களுக்கு  அனுமதி இல்லை. அப்படியே வெளியே நிறுத்தினால் நீங்க இறங்கிப்போயிக்குவீங்களா'ன்னார்  டிரைவர்.  ரெட் டெக்ஸியில் போய்க்கிட்டு இருக்கோம், இப்போ.  அப்படி என்ன  மேன்மை பொங்கி வழியும் இடமுன்னு ......     பெருமைக்கு உசரம் கூடித்தான் போச்சு போல!

பெட்ரோனாஸ் ரெட்டைக் கோபுரத்தைப் பார்த்துக்கலாமுன்னு  வந்துருக்கோம். பிரமாண்டமான வளாகம். நேரே போய் கீழ்த்தளத்தில்  இருக்கும்  டிக்கெட் கவுண்டருக்குப் போறோம்.  அட்வான்ஸ்புக் பண்ணிக்கணுமாம்!  இது என்னடா இப்படி? ஆனானப்பட்ட அமெரிக்க ரெட்டைக் கோபுரத்துக்கே  நேராப் போனமா, டிக்கட்டை வாங்கினமா,  லிஃப்ட் தூக்கிப்போய் மாடியில் விட்டுச்சான்னு  பார்த்தமே!  ப்ச்.....இப்ப அதுவே இல்லைன்னு ஆகிருச்சு போங்க:(


வந்த கையோடு கடமையை முடிச்சு விடலை பாருங்களேன்! வெவ்வேற  டைமிங்ஸ்  இருக்கு. எந்த நேரம் வேணுமுன்னு கேக்கறாங்க. இன்னிக்கு  இடம் இல்லை.  நாளைக்கு  நமக்கு முடியாது. அப்ப ஆறாம்தேதி காலை 10 மணி (ஷோ) புக் பண்ணிக்கலாம்.  நாம் எந்த ஊருன்னு கேக்காமலேயே  இண்டியான்னு எழுதிக்கிட்டார்,  பதிவு  செய்கிறவர்.  அடுத்த கேள்வி  வயசு எத்தனை?  நம்ம வயசு கேட்டு என்னாகப்போகுதுன்ற குறுகுறுப்புடன்  மெள்ள   சிக்ஸ்டி ப்ளஸ்ன்னேன்.  அப்ப உங்களுக்கு அம்பது பெர்ஸன்ட் டிஸ்கவுண்ட் என்றார்.  அடிச்சக்கை.  அப்ப எம்பதுன்னா  எழுபத்தியஞ்சா:-))))))



ச்சும்மா   பேஸ்மெண்டைச் சுத்திப் பார்த்தோம்.  நல்ல ஷாப்பிங் செண்டர் போலக்கிடக்கு.  மத்ததை நாளை கழிஞ்சு மற்ற நாள் பார்த்தால் ஆச்சு. இப்போ இதுக்கு ஒதுக்குன நேரத்தில் வேறெங்கே..........  இங்கே ஒரு மாரியம்மன் கோவில் இருக்காமே...... மழைவேற நசநசன்னு  ஆரம்பிச்சிருக்கு.

கோவில்வாசலில் போய் இறங்குனோம். ஒரு ரெட் டெக்ஸிதான். மீட்டர் எல்லாம்  போடலை. முப்பதுன்னு பேரம் பேசிக்கிட்டார். வாசலிலேயே நம்ம ஆன்மீகச்செல்வர் ஜிரா நினைவுக்கு வந்தார். 'குராங்கன் லாஜூ' :-)))  (அவர் தன் முதல் மலேசியப்பயணத்தில் ஜலான் என்பதை லேண்ட் மார்க்கா வச்சதுபோல  நானும் முந்தி குராங்கன் லாஜுவை வச்சுருந்தேன்!!!   ரெண்டுமே வேலைக்காகாது கேட்டோ!  முன்னது தெரு, பின்னது ஸ்லோ டௌன்)


சட்னு பார்த்தால் கோவில் இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களுக் கிடையில்  ஒளிஞ்சு இருக்கு வாசல்.  கொஞ்சம் வித்தியாசமான பெரிய  தூண்கள். சற்றே தலையை உசத்திக் கண்களை அனுப்பினால்....  ஆஹா....அஞ்சு நிலைக்கோபுரம்!  228 பொம்மைகளுடன்,  75 அடி உசரத்தில் கம்பீரமா ஜொலிக்குது. 1972 இல் தமிழ்நாட்டுலே இருந்து வந்து  இங்கே கோபுரத்தைக் கட்டிக்கொடுத்துட்டுப் போனவர் முனியப்ப ஸ்தபதி அவர்கள். அடுத்தவருசமே மகா கும்பாபிஷேகமும் ஆச்சு.

ரெண்டரையாள் உசரக் கோபுரவாசல் கதவு!  பளிச்ன்னு  ரெண்டு பக்கமும்  ஒரு ஷூ படம்.  காலணியோடு உள்ளே வராதே!  அட ராமா......   முதலில் கண்ணில் படுவது செருப்பா:(   அப்படியா சனம் செருப்புக்காலோடு  போகுது????



உள்ளே  கண்ணெதிரே கருவறை. தங்கக்கொடி மரம்.  ஜொலிக்கிறாள் மாரி! அமர்ந்த திருக்கோலம். முன்மண்டபம் ரொம்பப் பெரூசு.   நம்ம கவலை நமக்குன்னு  கோவில் அலுவலகம் தேடி ஓடினேன்.  'எஸ் ஃபொட்டோக்ராஃபி'  வயிற்றில்  பாலும் தேனும் பஞ்சாமிர்தமுமாய் வார்த்தார். நல்லா இருக்கணும்!   இனி மகளே உன் சமர்த்து என்று சிரிக்கிறாள் மாரி. மாரியம்மா....  மாரியம்மா, திரிசூலியம்மா..... சூலியம்மா....

பளிச்சுன்னு  சுத்தமாக இருக்கு  கோவில்.  கருவறையும் முன் மண்டபமும் நடுவிலும், சுற்றி வர  பெரிய பிரகாரமும், ஓரங்களில்பெரிய வராந்தா போன்ற மண்டபங்களுமாய் அட்டகாசமா இருக்கு.  வராந்தா மண்டபச் சுற்றுச்சுவர்களில் நேர்த்தியான  ஓவியங்களும் சிற்பங்களுமாய்  சந்நிதிகள்.

கருவறை வெளிப்புற சுவர்களில் அம்பாளின் திவ்ய சொரூபங்கள் கண்ணாடித் தடுப்பின் பின்னே மாடங்களில்.

கோலாலம்பூரின் முதல் ஹிந்துக் கோவில் என்ற பெருமையும் பணக்காரக்கோவில் என்ற பெருமையும் ஒன்னாச்சேர்ந்து இருக்கு  மாரியம்மனுக்கு!  மொத்தமாப் பார்த்தால் மலேசியாவில் 311 ஹிந்துக்கோவில்கள்  இருக்குன்னு அரசு பதிவு செஞ்சுருக்கு. அதில் 21 கோவில்கள்  நம்ம கோலாலம்பூரில் இருக்கு.


1873 வருசம் தம்புசாமி என்றவர், தன்னுடைய குடும்பக்கோவிலா இதைக் கட்டி அம்மனை ஆராதிச்சு வந்துருக்கார்.  கே எல் ரயில்வே ஸ்டேஷனுக்குப்பக்கத்தில்  கொஞ்சநாள் இருந்த கோவிலை, இப்போ இருக்கும் இடத்துக்கு மாத்தினது 1885 ஆம் ஆண்டு. அப்போதையக் காலக்கட்டத்தில் இருந்தவைகளைப்போலவே இங்கேயும்  மரம் வச்சுச் சுவர் எழுப்பி மேலே பனை/தென்னை ஓலைக்கீற்றால் வேயப்பட்ட கூரையுடன் கோவில்.  அக்கம்பக்கத்து மக்களும் வந்து கும்பிட்டுக்கிட்டுப் போயிருக்கணும். ரெண்டு வருசம் கழிச்சு ,செங்கல் தயாரிப்பு கைவந்த கலையா மாறிட்டதால்  செங்கல் கட்டிடமா மாத்திப்பிட்டாங்க.சீனர்களும் தொட்டடுத்துள்ள  மற்ற இடங்களை வாங்கி சைனா டவுனா இந்த இடம் மாறிக்கிட்டு இருந்துருக்கு. மாரி சட்னு இடம்பிடிச்சு நகராம உக்கார்ந்துட்டாள்.




 சிலபல ஆண்டுகளில் ஊர் மக்கள் எல்லோருக்கும் பொதுவா இருக்கட்டுமேன்னு  கோவிலையே தூக்கிக் கொடுத்துட்டாங்க  பெரிய மனசுள்ள தம்புசாமியும் குடும்பத்தினரும். ஒரு ட்ரஸ்ட் பொறுப்பை ஏத்துக்கிச்சு.  அதுக்குப்பிறகு வளர்ச்சி அமோகம். புள்ளையாரும் முருகனுமா புள்ளைங்க ரெண்டு பேரும் அம்மா கூடவே குடியேறிட்டாங்க.

தேர் திருவிழாகூட நடக்க ஆரம்பிச்சது. அந்தக் காலத்துலேயே மரத்தேர் ஒன்றை, அம்பதாயிரம் மலேசிய வெள்ளி செலவில் தமிழ்நாட்டுலே செஞ்சு இங்கே கொண்டு வந்துருக்காங்க.  கோவிலின் செல்வவளம் பெருகப்பெருக மரத்தேர்  இப்போ அசல் வெள்ளித்தேரா மாறி இருக்கு.  முன்னூத்தியம்பது கிலோ அசல் வெள்ளியில் மூணரை லட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் 240 வெள்ளி மணிகளும், அச்சு அசலா ரெண்டுகுதிரைகளுமா ஜொலிக்குது.  மொத்தம் பனிரெண்டு தனித்தனி பாகங்களாச் செஞ்சு தமிழ்நாட்டிலே இருந்து இங்கே கொண்டு வந்து ஒன்னாச் சேர்த்துப் பொருத்தி இருக்காங்க. தேரின் உசரம்  ஆறரை மீட்டர்.

தைப்பூசத் திருவிழாவுக்கு  இங்கே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து முருகன்  வள்ளி தேவசேனா சகிதம் வெள்ளித்தேரில் புறப்பட்டு பத்து மலைக்கு விஸிட் போயிட்டு வர்றாராம். 25 கிலோமீட்டர் தூரம். அன்னிக்கு தேரோடும் பாதையில்  பொதுவான போக்குவரத்துகள் மாத்தி அமைச்சுக்கொடுத்து அரசு உதவுதாம்.

தேருக்கு வெளிச்சம் போடும் வழக்கமான விளக்குகளை சமீபகாலமா மாற்றிச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத LED  bulbs போட்டு க்ரீன் சிக்னல் வாங்கிட்டாங்க.




 குழந்தை ஸ்மிதா (இன்னும் ரெண்டு நாளில் முதல் பொறந்தநாள்!) வுக்காக , நேர்ந்துக்கிட்டு  பால்சாதமும், வெள்ளைக் கொண்டைக் கச்சான் சுண்டலும் செஞ்சு கொண்டுவந்து  அம்மனுக்கு படைச்சுட்டு  பக்தர்களுக்கும்  விளம்பினாங்க. நல்ல  டேஸ்ட்!

பிரகாரத்தின் மூலைகளில்  நாட்டார் தெய்வங்களுக்கான சந்நிதியில் பெரியாச்சி பேச்சி அம்மனும், மதுரை வீரனும், முனியாண்டி, வீரபத்திரர்  இருக்காங்க.

இன்னொரு சந்நிதியில் துர்க்கை அம்மன். தகதகக்கும் பெரிய கண்களோடும் எலுமிச்சை மாலையோடும் !

 ராவு காலத்தில் எலுமிச்சம்பழம்/காய்  மூடிகளில் விளக்கேற்றிக் கும்பிடறாங்க உள்ளூர் மக்கள். நாம் போன சமயம் கொஞ்சம் பிந்திப்போச்சு என்ற அவசரத்தில் எலுமிச்சங்காய்களை அங்கேயே உக்கார்ந்து வெட்டி விளக்கு தயாரிச்சுக்கிட்டு இருந்தாங்க உள்ளூர் சகோ ஒருத்தர். அன்றைக்குச் செவ்வாய் என்பதால் மூணு நாலரை ராகுகாலம்.  முகத்தில் பதைப்பைக் கண்டு விசாரிச்சதில்  பிந்தினபிறகு போட்டால் பலிக்காதோ என்ற சம்சயம்:(

'கவலையை விடுங்க.  அந்த சரியான நேரத்தில்  விளக்குப் போடணுமேன்னு நினைச்சீங்களா இல்லையா'ன்னேன். ஆமாவாம்.  ஐயோ...  பிந்திருமேன்னு நினைச்சேன்னாங்க.  அப்ப அதுக்குண்டான பலன் கிடைச்சுருச்சு.  அம்மனுக்குத் தெரியாதா..... என்ன காரணத்தால்  பிந்திப்போச்சுன்னு. அதெல்லாம் மன்னிச்சுட்டாள்னு அடிச்சுச் சொன்னதும் ஆமாவா ஆமாவான்னு முகத்தில் நிம்மதி வந்துச்சு. கைகள் மட்டும் பரபரன்னு எலுமிச்சைகளை வெட்டி உள்ளே இருக்கும் சதைப் பற்றுகளை கத்தியால் சுரண்டிப் போட்டுக்கிட்டு இருந்தவேகம் பார்த்திருக்கணும் நீங்க!  வீட்டுலேயே செஞ்சு கொண்டு வந்திருந்தால்  சாயங்காலம் எலுமிச்சை சாதம் மெனுவில் இருக்கும்!

கோவில்  சுத்தமாத்தான் இருக்குன்னாலும்..... தரையில் பதிச்ச பளிங்கு ஓட்டின்  நிறமோ என்னமோ 'அந்த பளிச் ' மிஸ்ஸிங்.  நம்ம கோவில்களுக்கு வெள்ளை நிறம் சரிப்படாதுன்னு மனசைத் தேற்றிக்கிட்டேனாக்கும்.

பெருமாளுக்கும் ஒரு தனிச்சந்நிதி உண்டு. தாயார்களுடனும் சிறிய திருவடியுடனும் சேவை சாதிக்கிறார்.  கோவில் முன்மண்டபத்தின் வலது பக்கமும்  தனிச்சந்நிதிகளில் உற்சவர்கள் இடம்பிடிச்சு இருக்காங்க.

அறங்காவலர்கள் வரிசைகளில்  மலேசிய அரசின் அங்கங்களான  தமிழமைச்சர்கள் பங்கு பெறுவதால்  எல்லாம் நல்லபடியாகவே நடக்குது.

வெளியே பூமாலைக்கடையில் எனக்குத் தலையில் சூட்டிக்க ரெண்டு முழம் மல்லிகை வாங்கிக் கொடுத்தார் கோபால். சென்னையில் பூக்கட்டி விற்பவர்களிடம் இந்தப் படத்தைக் காண்பிக்கவே கூடாது!


தொடரும்...........:-)






Friday, August 16, 2013

சந்தைக்கடையில் பச்சைப்புட்டு (மலேசியப் பயணம் 6 )

ப்ளூ டெக்ஸியில் ஏறி  நாலே நிமிசத்தில் மார்கெட்டில் இறங்கினோம்.  ஒன்னரை கி.மீட்டர். ஏழுவெள்ளி.  அதெப்படி?  ஏன்னா இது ப்ளூ டெக்ஸி.  மீட்டர் ஆரம்பமே ஆறு.  ரெட் டெக்ஸியை விட இது ரெண்டுமடங்கு அதிகம். அதுக்குப்பிறகு கி.மீட்டருக்கு ஒரு வெள்ளி ரெண்டிலுமே!

இந்த ப்ளூ வண்டி கொஞ்சம் பெருசு & புதுசு.  ரெண்டு வகை இருக்குன்றதை இப்பத்தானே கண்டு பிடிச்சோம்:-))))

  ஆரம்பத்தில்  ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், இறைச்சி மீன்கள்  இப்படி விற்கும் வெட் மார்கெட் என்று சொல்லப்படும் வகை  மார்கெட் இது.  ப்ரிட்டிஷார் ஆண்ட பகுதிகளில் இப்படி ஒன்னு கட்டாயம்  இருக்கும் . நம்ம மூர் மார்கெட் யாருக்காவது நினைவு இருக்கோ?

அங்கே முன்புறக் கட்டிடத்தில்  பழைய  அண்ட் புதிய சாமான்கள் கொட்டிக்கிடக்கும் . ஒரு காலத்துலே புடவைக்கடை  பர்ச்சேஸ் முடிஞ்சதும் நேரா 'பஸ்' புடிச்சு மூர்மார்கெட் ஓடுவோம்.  அங்கே புத்தம்புது  தோல் செருப்புகள் நம்ம புடவையின் கலருக்கேத்தமாதிரி மேட்சிங்கா அஞ்சு ரூபாய்க்கும் குறைந்த விலையில் கிடைக்கும். ஆக்ஸெஸரீஸ்க்கு  அலைஞ்ச காலக்கட்டம் அவை:-)  அதிகநாள் உழைக்காதுதான். ஆனால்  அதே கலரா எப்பவும் கட்டப்போறோம்? பேஸிக்கா ஒரு பத்து கலர் இருந்தா சமாளிச்சுடுவொம்லெ:-))))

பழைய புத்தகங்கள் வேட்டையும் எனக்கு அங்கேதான். ஒரு முறை  பழைய பதிப்பு பாரதியார் பாடல்கள் வசனக்கவிதை உட்பட முழுத்தொகுதி, ரெண்டே ரூபாய்க்குக் கிடைச்சதாக்கும்!

அதே மூர்மார்கெட்டின் பின்புறக் கட்டிடத்திற்கு  எப்பவாவது போய்ப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்.  பெரிய பிரம்புக்கூடைகளில்  கோழிக்குஞ்சுகள் முதல்  வான் கோழி வரை  உயிருடன் வச்சு விற்பாங்க. கிளிகளும், புறாக்களும் இன்னும் பலவித பறவைகளும் விற்பனைக்கு உண்டு.  லவ்பர்ட்ஸ்  பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கேன்.வளர்க்க ஆசைதான்.... ஆனால்... ஹாஸ்டல் வாழ்க்கையில் .....   ஹூம்..... வேற வழி?

1888 வது ஆண்டு  பெருகி வரும்  ஊர் மக்கள் தொகைக்கு ஏற்ற படி, வெள்ளீயச்சுரங்கத்தில்  வேலை செய்ய இங்கே குடிவந்த குடும்பங்களுக்கான  சந்தை இது.  கூட்டம் பெருகப்பெருகத் தேவைகளும் கடைகளும் பெருகிவரவே அதுக்குத் தகுந்தாப்லெ  மரக்கட்டிடத்தை இன்னும் விரிவாக்கினாங்க. மாடியெல்லாம் கூட வந்துருச்சு. 1930களில் இதோ இப்போ நாம் பார்க்கும்  இந்த நிலையில் இருந்துச்சு. 1970 வது வருசம் கட்டிடத்தை இடிச்சுட்டு வேற மாதிரி கட்டிக்கலாமுன்னு   ஒரு எண்ணம்  வந்தப்ப, பாரம்பரியக் கட்டிடங்களின் அருமை தெரிஞ்சு அவற்றைக் காப்பாற்ற உருவான ஹெரிடேஜ்  சொஸைட்டி இதை இடிக்கக்கூடாதுன்னு போராடிக் காப்பாத்துனது ஒரு சரித்திரம்.

1980 இல் புது ஏரியாவில்  ஃப்ரெஷ் மார்கெட் ஒன்னு கட்டி முடிச்சதும்  இங்குள்ள வியாபாரிகளை அங்கே  அனுப்பிட்டாங்க. இந்தக் கட்டிடத்தை சீரமைச்சு, மலேசிய கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள் ,  குடிசைத்தொழிலா நடக்கும்  பத்தீக் டிஸைன்கள் இப்படிப் பிரத்யேகப்பொருட்களுக்கான  மார்கெட்டா மாத்திட்டாங்க.  புது ஓனர் இன்னும் பத்து மில்லியன் ரிங்கிட்ஸ் செலவு செஞ்சு அக்கம்பக்கத்து  இடங்களையெல்லாம் வாங்கி  நல்லா விஸ்தரிச்சுட்டார்.
 Kasturi walk இல் ஒரு வாக்:-)

மார்கெட்டின் பின்புறம் உள்ள பெரிய ஹாலில் ஆர்ட் கேலரி, பக்கவாட்டு திறந்த வெளியின் மற்ற  பக்கத்தில் இருக்கும் வரிசைக்கடைகளின் இடைவெளியில்   அலங்கார மேற்கூரை  (விதவிதமான  காற்றாடி(பட்டங்கள்) வடிவில் டிஸைன் செஞ்சவை) போட்டு  அந்த இடத்துக்கு கஸ்டூரி வாக் என்ற பெயர் சூட்டி,     உணவுக்கடைகள் இப்படி ஏகப்பட்ட அமர்க்களம்.


காலை 10 மணி முதல்  இரவு பத்துவரை தினமும் திறந்து வைக்கிறாங்க.  தினமும் இரவு ஒன்பது முதல் கலைநிகழ்ச்சிகள் வேற நடத்தறாங்க. பார்க்கவேண்டிய முக்கிய இடங்களில் ஒன்னு என்று இப்போ சுற்றுலாத்துறை ரொம்பப் பெருமையுடன் இதை விளம்பரப்படுத்துது!

பசார் சேனி க்குள் நுழைகிறோம்.  'ஹோ'வென்று பரந்து விரியும் ஹால். இடதுபக்கம்  கண்ணை இழுத்தது குட்டி இந்தியா. அதுக்குப் பக்கத்தில்  குட்டி கஷ்மீர். போச்சுடா.....   இனி குட்டி ம.பி, குட்டி உ.பி, குட்டி குஜராத்ன்னு ஆரம்பிச்சுருவாங்க  போல:(

ஒரு கடை எங்கே முடியுது, இன்னொன்னு எங்கே ஆரம்பிக்குதுன்னு தெரியாம தொடர்ச்சியா  ஒருபக்கம் ஓடும் கடைகள்.  நடுப்பகுதியில்   நடப்பதற்கு இடம் விட்டுத் தீவுகள் போல் தனித்தனியாகக் கடைகள்.  கடையைக் கட்டும்போது எப்படி மூடி வைப்பாங்களோ?

வாசனைத் தைலங்கள், துணி பொம்மைகள், மரச்சிலைகள், துணிமணிகள், காஸ்ட்யூம் நகைநட்டூஸ்  இப்படி ஏராளம்.

சிறுதீனியாக் கொறிக்க  கடலைகள், வற்றல்கள் இப்படி இன்னொரு பக்கம்.



அஞ்சு ரிங்கிட்டுக்கு  பத்து நிமிசம்  உங்க பாதங்களைக் கடிச்சுக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட மீன்கள் ரெடி:-)

ம்யாவ் டிஸைன்ஸ்க்குன்னே ஒருகுட்டிக்கடை.  வாவான்னு அது கை ஆட்ட, இவர் பைபை எனச் சொல்லிக்கிட்டே என்னை இழுத்துக்கிட்டுப் போயிட்டார். கடிகார டிஸைன்ஸ் ச்சும்மா எட்டிப் பார்த்தேன்.

நிர்மலா சாரி என்ற பெயரில் ஒரு  காஸ்மெடிக்  கடை!


பித்தளை மாடும், அம்பாரி யானையும் அழகோ அழகு! ஜஸ்ட் க்ளிக். அம்புட்டுதான்:(

மாடியில்  படீக் டிஸைன்ஸ்லே நான் தேடுவது கிடைக்குமான்னு பார்க்கப்போனேன்.  சில வருசங்களுக்கு முன் நம் சென்னை வாழ்க்கையில் நம்ம அல்ஸாமால் இருக்கு பாருங்க அங்கே பேஸ்மெண்ட்டில் ஒரு லினன் ட்ரெஸ் கிடைச்சது.  படீக் &  பூத்தையல்.  மலேசியத் தயாரிப்பு. அது போல வேறொன்னு கிடைக்குமான்னு என் தேடல். (காரணமே இல்லாம நான் ஷாப்பிங் போகமாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? )


ஒரு சில உடைகள் அழகாத்தான் இருக்கு. மகளுக்கு வாங்கலாமுன்னா   முன் அனுமதி இல்லாம எடுத்தோமுன்னா தொலைஞ்சோம்.  அவளுக்குக் காமிச்சுட்டு வாங்கலாமுன்னு  கோபாலின் ப்ளாக்பெர்ரியில் படம் எடுத்து  மகளுக்கு அனுப்பிட்டு பதில் வரட்டுமுன்னு  மற்ற கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.

அங்கங்கே கைத்தொலைபேசியை வச்சே அட்டகாசமான படம் எல்லாம் எடுக்கறாங்க இல்லே?  நம்ம கோபாலின் கைப்பேசி தனித்தரம். என்னதான் படு அழகான காட்சியும் லைட்டிங்ஸுமா அமைஞ்சிருந்தாலும் அது த்ராபையாத்தான் எடுக்கும். (செட்டிங்ஸ் சரி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்)  அதுலே எடுத்து அனுப்பிய படங்களுக்கு  கொஞ்ச நேரத்தில் எதிர்பார்த்த  பதில் வந்தது..... வாங்கவே வாங்காதேன்னு!  எப்படியோ  மிஷன் வெற்றி:-)))))

24 கடைகளில் கொட்டிக்கிடக்கும் படீக் வகைகளில் என்னிஷ்டம்போலவும் கிடைக்கலைதான்.  அதுக்காக.....  போனால் போகட்டுமுன்னு (கோபாலின் வற்புறுத்தலுக்காக) ஒரு டாப் மட்டும் வாங்கிக்கிட்டேன். இதே தளத்தில் மூணு  ரெஸ்ட்டாரண்டும் இயங்குது. எல்லாம்  சீனச்சாப்பாடு வகைகள்.

ரெஸ்ட்ரூம்  வசதிகளுக்கு  அரை வெள்ளி ஒரு நபருக்கு.

பின்பக்கக் கட்டிடத்தில்  ஆர்ட் கேலரி அனெக்ஸ்ன்னு  நிறைய படங்களை  காட்சிக்கு வச்சுருக்காங்க. என் கண்ணைக் கவர்ந்தது வண்ண மணல்  பாட்டில் அலங்காரம். அட்டகாசமான  வண்ணங்களில்  மிருதுவான பொடி மணல்களின் குவியல். மெல்லிசான  ஃபுனல் வச்சுருக்காங்க. வரைய ஆர்வம் இருந்தால்  வண்ண ஓவியங்களை நாமே பாட்டிலில் அடைச்சு வாங்கிக்கலாம்.  என்ன ஒரு அற்புதமுன்னு வா பிளந்து பார்த்துட்டு க்ளிக்கிட்டு வந்தேன். பாட்டிலை ஸீல் செஞ்சு கொடுத்துடறாங்க. அதுக்கப்புறம் எப்படி ஆட்டினாலும்  ஓவியங்கள் நகர்வதில்லை!!!!!



உள்வேடிக்கை போதும்னுன்னு வெளியே கஸ்டூரி வாக்கில் நடந்தோம். சின்னதும் பெருசுமா  நடுவில்  ஏகப்பட்ட தீனிக்கடைகள்.  எலெக்ட்ரிக் புட்டு  பார்த்தேன். மூங்கில்குழாய் புட்டு ட்ரெடிஷனல். அரிசிமாவு, பனை வெல்லம்,  தேங்காய்த்துருவல்,  பாண்டன் நிறமும்மணமும். (Pandan.  Screw pine  என்று சொல்லப்படும் ஒருவித தாழை வகை.  கேக்குகளிலும்  சீன மலேசிய உணவு வகைகளிலும் இந்த மணமுள்ள எஸ்ஸென்சைப் பயன்படுத்துவார்கள்.)

ஒரு  15 செமீ நீளம் வரும் உருளையில்  தண்ணிர் சேர்த்துப் பிசறின அரிசி மாவு பனைவெல்லாம் முக்கால்வாசி வரை நிரப்பி வச்சு அதன்மேல்  பாண்டன்  மணம்  கலந்ததேங்காய்ப்பூவை நிரப்பி வச்சுக்கறாங்க. பிறகு ஒரு பெரிய ட்ரே மாதிரி ஒன்னு. அதில்  9 X 7   ன்னு 63 வட்ட துவாரங்கள்.  இந்த மூங்கில் உருளைகள்  அந்த துவாரத்தில்  சக்ன்னு  உக்கார்ந்துக்குது.  ட்ரேயின் அடிப்பாகத்தில் மின்சாரம் மூலம் கொதிக்கும் வெந்நீர். அதில் வரும் நீராவியின் மூலம் அஞ்சே நிமிசத்தில்  சின்னதா அழகான 63 பிட்டு உருளைகளிலும் குழாப்புட்டு தயார்!







தயாரிப்பை கொஞ்சநேரம் நின்னு பார்த்துட்டு ஒரு செட் புட்டு வாங்கினோம்.  ஆறு   புட்டு பிட்டுகள் ஒரு செட்டில்! இன்னொரு கடையில்  நறுக்கி வச்ச  ராக்ஷச சைஸ் கொய்யாப் பழங்கள் ஒரு ட்ரே 1.20க்கு வாங்கிக்கிட்டோம்.  கோபாலின் கைப்பை எல்லாத்துக்கும் சௌகரியமா இருக்கு:-)

தாகமா இருக்கேன்னு  இன்னொரு ஸ்டாலில் ஆளுக்கொரு இளநீர்.  அம்மாம்பெரிய சைஸும் உள்ளே இருந்த இளம் தேங்காயுமாக  வயிறு ஃபுல்.  இனி லஞ்சுக்கு இடமில்லை:(  ஆனாலும் எதிர்வரிசைகளில் இருந்த உணவுக்கடைகள் ஒன்றில் அம்மும் கூட்டத்தைப் பார்த்து என்னதான்  சமையலுன்னு  தெரிஞ்சுக்கப்போனேன். ' யம்மா...... இவ்ளோ பெரிய மீன் தலையா?' என்றார் கோபால். எவ்ளோ பெருசா இருந்தாலும் எனெக்கென்ன பயம் ?க்ளிக் க்ளிக்.


 என்னை வசீகரிச்சது அங்கே இருந்த டேக்ஸாக்கள்.  ஹப்பா..... எவ்ளோ நாளாச்சு இந்தப் பாத்திரங்களை எல்லாம் பார்த்தே!  பாத்திரம் மட்டும் அழகல்ல  ..... அவை இருந்த சுத்தமும் நேர்த்தியும் இன்னும் அழகு. பளிச்சுன்னு துலக்கி  அளவான தட்டு மூடலுடன் அதற்கான கரண்டியுமா  ஜம்முன்னு உக்கார்ந்துருக்கு.  கரண்டியிலோ தட்டிலோ இல்லை அது இருக்கும் இடத்திலோ குழம்பின் சுவடு கூட இல்லை! (ஒரு வேளை காலியோ? ச்சீ.... இருக்காது! இருக்கவும் முடியாது )


மற்ற ஷாப்பிங் மால்களுக்குப் போகணுமுன்னா இலவச பஸ்ஸில் கொண்டு போய் விடறாங்க.


அதான் லஞ்சு வேண்டாமுன்னா ....  அறைக்குப்போய் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமேன்னு  டெக்ஸி தேடினால் அங்கே நின்னுக்கிட்டு இருந்த நாலைஞ்சு டெக்ஸிகளும்  லஞ்ச் டைம் ஓய்வாம்.  பக்கத்துலே  ரயில் நிலையம் இருக்கான்னா..... பசார் சேனி நிலையம் இருக்குன்னாங்க.  மெள்ள அங்கே நடந்து போய்  புகிட் பின்டாங் ஸ்டேஷனுக்கு  தானியங்கி டிக்கெட் மிஷீன்லே டிக்கெட்டை வாங்கிக்கிட்டு  மேலே படிகளேறிப்போய் பார்த்தால் அது மோனோ ரயில் இல்லை. லைட் ரயில். அதுலே ஏறினதும் அடுத்த ஸ்டேஷன் சென்ட்ரல்.  அவ்ளோதான் . அதுக்கு மேல்போகாது!


என்னடா  இதுன்னு  வெளியே  பாதி தூரத்தில் இருக்கும்  தகவல் உதவிப் பணியாளரிடம் கேட்டால்.....  வெளியே ரயில் நிலையத்தைக் கடந்து போய்  அரைக்கிலோ மீட்டர் நடந்தால் மோனோ ரயிலுக்கான சென்ட்ரல் ஸ்டேஷன் வருமாம். தொலையட்டும் நடந்தே போகலாமுன்னா.... இந்த ஸ்டேஷனை விட்டு வெளியே போகணுமுன்னா நம்ம கையில் இருக்கும் டிக்கெட்டை  அதற்கான  ஸ்லாட்டில் போட்டால்தான்  நம்மை வெளியே விடும்.  அப்புறம் அங்கே போய்  இன்னொரு டிக்கெட் வாங்கினால்தான் உள்ளெயே போக முடியும்.

எல்லாத்துக்கும் சேர்த்து டிக்கெட் கொடுக்கும் மிஷின் இருக்கு. ஆனால் சரியான  கோஆர்டிநேஷன்  komutersக்கு  இல்லையேன்னு கடுப்பு.  இவரோ துடிக்கிறார். வா வெளியே போய்  டெக்ஸி பிடிக்கலாமுன்னு. நான் சில சமயங்களில்  பிடிவாதமா அடம் பிடிப்பேன். இப்ப அப்படி ஒன்னு. இடும்பியோடு முப்பத்தியொன்பது வருசம் வாழ்ந்ததால்  பழக்கப்பட்டுப்போன  இவர்தான் பாவம்.


 வெளியே போகாமல் வேறென்ன வழி இருக்குன்னு விசாரிச்சால், நாம்  திரும்ப இதே லைட் ரயிலில் ஏறி  வந்தவழியே போய்  Hang Tuah ஸ்டேஷனில் (இங்கே இண்ட்டர் சேஞ்ச் கனெக்‌ஷன் இருக்கு.  மேல் மாடியில் ஒரு ரயிலும், மாடியில் ஒரு ரயிலுமா ஓடுது) மோனோ ரயிலுக்கு மாத்திக்கலாம் என்றார்கள்.

அப்படியே Hang Tuah ( தருமிக்கு: இவர்  15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  legendary Malay warrior) போய் இறங்கி இன்னொரு மாடியேறி நம்ம மோனோ ரெயில் பிடிச்சு  புகிட் பின்டாங் வந்து அறைக்குப் போனோம்.  லேட் லஞ்சுக்குப் பிட்டும் கொய்யாப்பழமும்:-)

கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு  நாலுமணி போல கிளம்பலாம். சரியா?

தொடரும்...............:-)