Tuesday, April 10, 2007

ஜமா மசூதி








நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 12 )

ஜுமா, ஜும்மான்னே இதுவரை (நான்) சொல்லிக்கிட்டு இருந்த மசூதியின் சரியான பெயர் ஜமா மசூதியாம். எப்படியோ ஒரு தவறான உச்சரிப்பு ச்சின்ன வயசுலேயே மனசுலே பதிஞ்சு போயிருந்துச்சு. இதுக்கு முன்பு வந்தப்பெல்லாம் இந்த இடத்துக்குப் போகமுடியாமல் எதோ தடங்கல்கள். இந்தமுறைதான் வாய்ச்சது. இருக்குமிடம் பழைய தில்லி. அஜ்மீரி கேட்டைக் கடந்து போனோம். சாந்தினி சவுக் என்ற பேருக்கேத்தபடி வெள்ளிக்கடைகள் நிறைய ஒரு காலத்துலே இருந்துச்சாம். இப்பவும்பித்தளை, வெள்ளை உலோகம்ன்னு எதேதோ உலோகவகைகளில் செஞ்ச சாமான்கள் விற்கும் கடைகள் ஏராளமா இருக்கு.

புது தில்லிக்கும் பழைய தில்லிக்கும் நடுவில் நம்ம கண்ணுக்குப் புலனாகாத ஒரு திரை தொங்குது. அழகான மரங்கள் அடர்ந்த விசாலமான சாலைகள், வானுயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் மறைஞ்சு புழுதி படர்ந்த புராண காலத்து ஸீனரி இங்கே. ஒருவேளை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நிறைஞ்சதா இருக்கேன்னு அப்படியே வச்சிருக்காங்களோ? எப்படியோ இது 'சரித்திரம்' ஆகாமல் இருந்தால் சரி.

காலம் உறைஞ்சுதுன்னு சொல்லுவாங்களே, அது கண் எதிரில். இசைக்கருவிகள் விற்கும் கடை ஒண்ணு பார்த்தேன்.முதல்முதலில் மின்சாரம் வந்தப்ப நட்டு வச்ச கம்பங்களும் அதில் தொங்கும் ஒயர்களும் கோபால் கண்ணில் பட்டது.'தொழில் தர்மம்'ன்னு ஒண்ணு அவுங்கவுங்களுக்கு இருக்கே! சைக்கிள் ரிக்ஷாக்கள் ஏராளம். அதில் ஒய்யாரமா உக்கார்ந்துக் கடந்தகாலத்தைப் பார்வையிடும் வெள்ளைக்காரப் பயணிகள். அப்பத்தான் ஞாபகம் வந்தது, தில்லியைப் பத்தின ஒரு பயணவிவரம் அடங்கிய ட்ராவல் கைடுலே படிச்சது. 'சைக்கிள் ரிக்ஷாவிலே ஏறி ஒரு சுத்து வந்தால்தான் தில்லிப்பயணம் பூர்த்தியாகி, அவுங்களுக்குக் கைமேல் பலன் கிடைக்குமாம்.'

ச்சின்னச் சந்துபோல இருக்கும் தெருவுக்குள் நுழைஞ்சு கடைசியில் வந்து நின்னால்.......... ஹப்பா! படிகள் அடுக்கடுக்கா மேலே போகுது. எல்லாமே ஒரு வித சிகப்புக் கல்லில் இருக்கு. பாதுகாப்பு ரொம்ப பலம்தான். இத்தனை இடங்களைவிடக் கூடுதல் பாதுகாப்பு இருக்கறது போல ஒரு தோணல். ஏ.கே. 47 ( பெயர் சரியா?) கையில் ஏந்தி எந்த நிமிஷமும் நம்மை நோக்கித் திருப்பலாம் என்ற ஆயுத்தத்தில் ராணுவ உடுப்பில் பலர். சமீபகாலச் செய்திகளைப் படிச்சதுலே இது ஒண்ணும் அவ்வளவு ஆச்சரியமான விஷயமா இல்லேன்னாலும் மனுஷ மனசுகளில் இப்படி 'பயம்' பலகை போட்டுச் சட்டமா உக்கார்ந்துக்கிட்டு இருக்கறதை நினைக்கும்போது 'கவலை'யாத்தான் இருக்கு.

முப்பத்தி மூணு படிகள். விசாலமாவே இருக்கு. அண்ணாந்து பார்த்தபடி ஏறிப்போனோம். காலணிகளை வெளியே விடணும்.வழக்கமா எல்லாக் கோயிலிலும் உள்ளதுதானே? வளைவு அலங்காரத்தில் இருந்த பிரமாண்டமான வாசலைக் கடந்து அந்தப்பக்கம் போனதும் 'கேட்ட' கணக்கு தப்போன்னு ஒரு தோணல். இருபத்தியஞ்சாயிரம் பேர் இங்கே இருக்க முடியுமாம். ம்ஹூம்...ஒரு லட்சம்பேர்ன்னு இருக்கணும். அப்படி ஒரு பரந்த திறந்த வெளி. நல்ல உயரமான மதிள் சுவர் சுற்றி இருக்கு.தரையெங்கும் நல்ல டெர்ரகோட்டாக் கலரில் பெரியபெரிய பேவிங் கற்கள் பதிச்சிருக்கு. நல்லவேளை மார்பிள் பதிக்கலை. இல்லேன்னா ச்சூட்டில் நம்ம கால் பழுத்துரும். ஒரு முறைத் தாமரைக்கோயிலில் மார்பிள் மேலே 'தீ மிதிச்சது' நினைச்சாலே.... பகீர்(-: ஆக்ரா தாஜ்மகால் போனப்ப 'வில்லில் இருந்து புறப்பட்ட ராம பாணம்' மாதிரிநான் ஓடுனதை இப்ப வீடியோவில் பார்த்தாலும் சிரிப்புதான். இத்தனைக்கும் துணிச் செருப்பு கட்டி விட்டாங்க அங்கே.

நாங்க நுழைஞ்சது தெற்கு வாசல். நேரெதிரே வடக்கு வாசல் கதவுகள். வலப்புறம் கடைசியில் எட்டுப் படிக்கட்டு உயரத்தில் கிண்ணம்/ வெங்காய வடிவில் பளபளக்குற வெள்ளையும், கறுப்பும் வரிவரியா இருக்கும் பளிங்கில் மூணு அழகான டோம்களுடன் கூடிய ஹால். நல்ல நீளம். எம்பது மீட்டர் நீளம், இருபத்தியேழு மீட்டர் அகலம். அழகான பெர்ஷியன் கார்பெட்டுகள் சிவப்புக் கலரில் அட்டகாசம். ஒரேநீளத் துண்டா இல்லாமல், ரெண்டு ரெண்டரை மீட்டர்க்கு தனித்தனியா இருக்கும் கார்பெட்டுகள். அழகான மார்பிள் தரையெல்லாம் என்னவோ கட்டம் கட்டியதுபோல வெள்ளை நிறமும்,அதைச் சுத்திப் பார்டர் போட்டு நடுவில் ஒரு டிஸைனும் கறுப்பில் இருக்கு. ஒரு கட்டத்தில் ஒருவர் வீதம் இருந்து வழிபாடு செஞ்சால் எண்ணூத்தித் தொண்ணுத்தியொம்பது பேருக்கு இடம் இருக்காம்.
மேற்கூரையெல்லாம் அழகோ அழகு.வெளியே பள்ளிவாசலை ஒட்டுனாப்போலே நாப்பது மீட்டர் உயரத்துலே ரெண்டு பக்கமும் மினார்கள் ஓங்கி உயர்ந்திருக்கு.டோம்களை அண்ணாந்து பார்க்கும்போது சூரிய வெளிச்சத்தில் கண்ணில் பளீர்! அதோட உச்சிக்குத் தங்கம் போர்த்தி இருக்காங்க. புறாக்கள் அப்படியே எதோ பசை போட்டு ஒட்டவச்சதுபோல அப்படியே கூம்பைக் கட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்குங்க.

அங்கே இருந்து மசூதியின் திறந்த முற்றம் 'ஹோ'ன்னு இருக்கு. நேர் எதிரா கிழக்கு வாசல். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இந்த வாசலைத் திறப்பாங்களாம். நாங்க போனது சனிக்கிழமையாப் போச்சு. அந்தப் பக்கம் 35 படிகள். சுத்திவரமதிளில் வளைவு வளைவா இருக்கும் பிரமாண்ட ஜன்னலில் பார்த்தா செங்கோட்டை தெரியுது. அதுக்கும் இதுக்கும் நடுவில் தெரியும் தெரு முழுசும் கடைவீதி மாதிரி ரெண்டு பக்கமும் கைவண்டிகளில் வியாபாரம். மனுஷத் தலைகளா மிதக்குது. வடக்கு வாசலைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கு. 'ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ்'ன்னு சொல்லும் விதத்தில் அடுக்குப்படிகள் இறங்குது. ம்ம்ம்ம்ம் ஒண்ணு, ரெண்டு ன்னு எண்ணினால் 39 படிகள். (எனக்கு எண்ணுறது என்னவோ ஒருபழக்கமாகிப் போச்சு. ஜன்னல் கம்பி, வீட்டுக்குள் கூரையில் ஓடும் உத்திரம்னு ஒண்ணையும் விடமாட்டேன்.) ரொம்பஅகலமான படிகள். எதோ விசேஷமோ? கறுப்பு தோரணங்கள் கட்டி இருந்தாங்க.

அப்படியே கண்ணை ஓடவிட்டப்ப, ஒரு கறுப்பு மியாவ் இருந்தார். மசூதி மியா(ன்)வ். தரையிலும் கூட்டம் கூட்டமாப் புறாக்கள். வெளிநாட்டு சுற்றூலாப் பயணிகள், உள்ளூர் & உள்நாட்டு மக்கள்ன்னு ஒரு கலவை. இவ்வளவு 'சள சள'ன்னுபேச்சுச் சத்தத்திலும் ஒருவர் அமைதியாக அங்கே தொழுகை செஞ்சுக்கிட்டு இருந்தார். அவரைப் பார்த்தும்தான்'அடடா....இது கோயிலாச்சே'ன்ற மன அடக்கம் வந்துச்சு. உலகில் எங்கே இருந்தாலும், வழக்கமா சனிக்கிழமைகளில் கோயிலுக்குப் போகும் ஒரு பழக்கம் உண்டாக்கி வச்சுக்கிட்டதாலே இங்கேயே ஒரு பக்கமா நானும் உக்கார்ந்துஎம் பெருமா(ள்)னைக் கும்பிட்டுக்கிட்டேன். மனசில் இருக்கும் சாமியை எங்கே கும்பிட்டால் என்ன?

1656 வருஷம் கட்டி முடிச்சாங்களாம். இந்தியாவுலேயே மசூதிகளில் மிகப்பெரியது இந்த மசூதிதானாம். ரம்ஜான்நோம்பு முடிஞ்சதும் பண்டிகை கொண்டாடும்போது இங்கே மக்கள் தொழுகையை டிவியில் பார்த்த ஞாபகம் இருக்கு.ஆனா இந்த இடத்தை நேரில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பை சொல்லில் விளக்க முடியாது. ஆயிரக்கணக்கில் மக்கள் வரிசையா உக்கார்ந்து தொழுகை நடத்துறதைக் கற்பனை செஞ்சு பாருங்க. ஹைய்யோடா..............

படி இறங்கி வரும்போது, வாசலில் வரிசைகளா சைக்கிள் ரிக்ஷாக்கள், அதுலே ஏறி உக்காரும் வெள்ளையர்கள்.கெமெரா ரிக்ஷா ஓட்டுனர் கைக்கு வருது. உடனே அவுங்களைப் படமெடுத்துக் கொடுத்துட்டு ரிக்ஷாவை மிதிச்சு ஓட்டிக்கொண்டு போகும் ரிக்ஷாவாலாக்கள்னு ஒரே களேபரமாவும் கலகலப்பாவும் இருக்கு நம்ம தெற்கு வாசல்.

ரொம்ப நீளமான நல்ல சாட்டைகளைக் கையில் வச்சுக்கிட்டு வித்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். எதுக்கு? திடீர்னு எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. ஏன்னு தெரியாம கோபால் முழிக்கிறார்.

"என்ன சொல்லிட்டுச் சிரி"

" அது ஒண்ணும் இல்லீங்க. ஒரு சாட்டை வாங்கிக்கிட்டா நீங்க அதைச் சுழட்டிச் சுழட்டி அடிச்சுக்கலாம். அப்பநம்ம வீட்டுலே இருக்கும் பெரீய்ய்ய்ய்ய தாம்பாளத்துலே நான் 'டுண் டுண் டுண்'ன்னு கொட்டு அடிப்பேன்"

" சரிதான்...........பாவம் கோபால கிருஷ்ணன், இதுகளுக்கு என்ன ஆச்சுன்னு முழிப்பான்"

படிகள் இறங்கி வெளியே வந்து நிமிர்ந்து பார்த்தால் என்ன ஒரு அழகு! என்ன ஒரு பிரமாண்டம்!

ச்சும்மாச் சொல்லக்கூடாது.....பேரரசர் ஷாஜகான் நல்லாப் பார்த்துப் பார்த்துதான் கட்டிடக் கலையை வளர்த்திருக்கார்.இந்த ஜமா மசூதி, இதுக்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் இருக்கும் செங்கோட்டையெல்லாம் இவர் காலத்துலே கட்டுனதுதான்.ஆனாலும் இவர் கட்டுன தாஜ் மகால் எல்லாப் பெருமையையும் அடிச்சுக்கிட்டு போயிருச்சு. ஷாஜகானின் வாழ்க்கையைப் படிக்கும்போது என் மனசுக்குள்ளெ மிஞ்சுனது விசனம்தான். முகலாயப் பேரரசின் அஞ்சாவது பரம்பரை. 20 வயசுலேகல்யாணம். 36 வயசுலே மகாராஜாவா மகுடம். 39 வயசுலே காதல் மனைவி மறைவு. மனசுலே தீராத சோகம். மொத்தம்30 வருஷம் அரசாட்சி. துக்கத்தை மறக்கடிக்கவே அழகழகான கட்டிடங்கள் கட்டினார் போல. 8 வருஷம்ஹவுஸ்(சரி........ பேலஸ்) அரெஸ்ட். 74 வயசுலே மரணம். அதீத துக்கத்தாலே மனைவி மறைந்ததும் ஒரே வருஷத்தில் இவர் தலை தும்பைப்பூவா வெளுத்துருச்சாம். என்ன அரச வாழ்க்கையோ? பாவம் மகாராஜா.
----------------
தொடரும்............

Thursday, April 05, 2007

லோதி கார்டன்ஸ்








நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 11 )

லோதி கார்டனுக்குப் போனேன். வெய்யிலுக்கு இதமான இடம். வாசலில் பைரவர்கள் ஆழ்ந்த நித்திரையில். ரொம்பப் பழங்காலத்துலே கட்டுன பாலம். கீழே தாமரைப்பூக்கள் நிறைந்த தடாகம். அக்பர் ஆட்சியிலே அவரோடஒரு மந்திரி கட்டுன பாலமாம். தாஜ்மஹாலைவிடப் பழசோ! அவ்வளவாக் கூட்டம் இல்லை. மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதிகளில் உலகை மறந்து இருக்கும் ஜோடிகள். ஜாக்கிங், நடைப்பயிற்சின்னு இருந்த ஒரு சிலர், குடும்பத்தோடு பிக்னிக் வந்த சிலர்ன்னு இருந்தாங்க.

'இங்கே இருக்கும் பறவைகள்'னு ஒரு போர்டு. அட! இத்தனை வகைகளா? எத்தனை வகை இன்னிக்குக் கண்ணுலே படுதுன்னு பார்த்துறணும். காக்காக் கூட்டம். அப்புறம்.........? இது மட்டும்தான் கூட்டம்கூட்டமா.கொஞ்சம் புறாக்கள். எல்லாம் கட்டிடத்து மேலே ஒட்டிப்பிடிச்சு உக்காந்துருக்கு.

எதிரும் புதிருமா ரெண்டு கட்டிடங்கள். பரா கும்பட், ஷீஷ் கும்பட். இஸ்லாமியர்கள் கட்டுனது பதினைஞ்சாம் நூற்றாண்டுலே.அப்ப சிக்கந்தர் லோதி, தில்லி மன்னரா இருந்துருக்கார். ஓஹோ... அதான் இந்தத் தோட்டம் லோதியின் பெயரில் இருக்கா?( ரொம்ப வருஷங்களுக்கு முன்னே தில்லி வந்தப்ப ஒரு லோதி ஹொட்டலில்தான் தங்குனோம். வெளியே அட்டகாசமான அலங்காரம். எல்லாம் ரிஸப்ஷன் வரைதான். உள்ளே போனால் அறைகள் ரொம்ப சாதா'ரணம்'. அப்ப ஜூன் மாசம் வேற. சூடு பொங்குது. அறைக் குழாயிலே காத்தும், எங்க கண்ணுகளில் தண்ணியும் வந்துச்சு) சரி. இன்னிக்குக் கதையைப் பார்ப்போம். இந்தக் கட்டிடங்கள் மசூதியாவும், சில முக்கிய புள்ளிகளின் சமாதியாவும் இருந்துச்சாம். இப்ப இங்கே சரித்திரச் சின்னங்களாத்தான் நிக்குது.

பரா கும்பட் உள்ளெ போனால் நல்ல உயரமான கூரை பேசுனாவே எதிரொலிக்குது. நான் போனப்ப அங்கே ரெண்டு இளைஞர்கள். ஒருத்தர் பாட்டுப் பாடறார். ஹே..........ஹே..ம்ம்ம்ம்ம்ஹா...........கோரா காகஸ்தா யே மனு மேரா........... மேரா........ மேரா......... எதிரொலி. அருமையான குரல். நல்லா இருக்குன்னு பாராட்டுனதும் அவருக்குக் கொஞ்சம் வெக்கமாப் போச்சு. 'நல்லா இருக்கா ஆண்ட்டி? இந்தப் பாட்டு'ன்னு சொல்ல ஆரம்பிச்சார். நான் அதுக்குள்ளெ 'தெரியும். ஆராதனா படம்'னதும் அவருக்கு கொஞ்சம் ஆச்சரியம். (இந்த மத்ராஸிக்குத் தெரிஞ்சுருக்கு பார்) படம் வந்த புதுசுலே மெட்ராஸ்லே அப்படி ஓடுச்சு. இதைப் பார்க்காதவங்கன்னு யாராவது இருந்துருப்பாங்களா? நம்ம பக்கம் ஆன்னா ஊன்னா இந்த 'மேடம் மேடம்' கேட்டுப் புளிச்சிருந்த காதுகளுக்கு இந்த 'ஆண்ட்டி' இனிமையா இருக்கு. நம்ம பசங்கன்னு ஒரு சொந்தம் வந்துருது. குடும்பமுன்னு வந்துட்டா உடனே ஒரு இளகுன மனம் அமைஞ்சுருது பார்த்தீங்களா?

இங்கே நாலு பக்கமும் அழகான வாசல்.அதுவழியா வெளியே பளிச்சிடும் வெயிலைப் பார்க்கும்போது என்னவோ சினிமாக் காட்சிபோல இருக்கு. ரொம்ப உயரமான வயசான மரங்கள். பச்சைப் புல்வெளி. பரா கும்பதைக் கடந்து நேர் எதிரில் இருக்கும் ஷீஷ் கும்பட் போனேன். இங்கே முன்புறச்சுவரில் ரொம்ப மேலே எட்டாத உயரத்தில் அழகான டைல்ஸ் பதிச்சு இருந்ததாலே இதுக்கு, இந்தப்பேர். ஷீஷ் ( கண்ணாடி) கும்பட். நிறைய ச்சில்லுகள் விழுந்துட்டு இருக்கு.உள்ளே போனால் வரிசையா ஏழெட்டு சமாதிகள். உள்ளே யாரும் இல்லை. நான் சொல்றது கட்டிடத்துக்குள்ளே! ஜன்னலில் வெளியே பார்த்துக்கிட்டு ஒருத்தர் உக்கார்ந்திருந்தார். ஐந்நூறு வருஷக் கட்டிடங்கள் இதெல்லாம். இன்னும் நல்லா ஸ்ட்ராங்காவே இருக்கு. தோட்டமும் நல்ல பராமரிப்பில் சுத்தமாவும் அழகாவும் இருக்கு.

அங்கிருக்கும் ரோஜாத் தோட்டத்துக்குப் போனேன். புதுத் தளிர்கள் வரும் சமயம். குச்சிகுச்சியா நிக்குது செடிகள்.வெளியில் வரும்போது அந்த பழைய பாலத்துக்கடியில் இருக்கும் வளைவுகள் மூலம் மாலைச்சூரியன் மஞ்சள்நிறத்தில் தாமரைத் தடாகத்துக்கு வந்திருந்தான். இந்தத் தடாகத்துக்குத் தண்ணி சப்ளை யமுனை நதியிலிருந்து கால்வாய் மூலம் வருதாம். தூக்கம் முடிஞ்சு பைரவர் ஸ்மார்ட்டா உக்கார்ந்துருந்தார். 'இந்தப்பக்கம் பாருடா'ன்னு சொன்னதும் அழகா போஸ் கொடுத்தார். எப்படியோ தமிழ் புரிஞ்சாச் சரி.

தில்லி மக்கள் நிறையப்பேர் ஜாகிங் செய்யவும், உடற்பயிற்சி வேகநடை நடக்கவும் அதுக்கேத்த காலணிகளோடு உள்ளே வந்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம நடேசன் பார்க் நினைவு வந்துச்சுங்க. பேசாம இங்கேயே ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடத்திறணும் அடுத்த முறை:-)

கிளம்பி ஜன்பத் மார்கெட்டில் இறங்கிக்கிட்டுக் காரை அனுப்பிச்சுட்டேன். காலையில் தில்லிஹாட்டில் பார்த்த அதே சாமான்களையும் கொஞ்சம் யானைகளையும் சல்லிசான விலைக்கு வாங்கிக்கிட்டேன். கறுப்புக் கல், வெள்ளைமெட்டல், மார்பிள், மரம், பித்தளைன்னு பலவிதத்தில் யானைகள் சூப்பரா இருந்துச்சு. 'மருமான்'கிட்டே பேரம் பேசிவாங்கினேன். இப்பெல்லாம் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மார்கெட் நடக்குது. நின்னு நிதானமாச் சுத்தலாமுன்னா,நேரம் பொருத்தமா அமையலை. கோபால் கைப்பேசியில் கூப்புட்டு நான் எங்கே இருக்கேன்னு விசாரிக்கிறார். எனக்கும் கூடடையும் நேரமாச்சு. ஆகட்டும், அடுத்தமுறை இருக்கவே இருக்கு.

தொடரும்............

Tuesday, April 03, 2007

Zen garden





ட்ஸென், ஜென், சென் இப்படிப் பலதும் சொல்லி எழுதிப்பார்த்தாலும் Zenக்குச்சரியான உச்சரிப்பு வரமாட்டேங்குதே(-: சரி போட்டும், இதா நமக்கு முக்கியம்.தோட்டத்துக்குள்ளெ போலாம். ட்ஜென்( அய்யோ பழையபடி தகராறு?) மணல்தோட்டம்.



ஜப்பானியர்கள் சமூகத்துலே ஆரம்பிச்சதாம் முதல்முதலில். அங்கேதானே 'புத்தமதம்'ரொம்பப் பலமா வேர் ஊனியிருக்கு. தியானம் செய்யத் தகுந்த இடம் இந்த(ஹை, பேர் எழுதாமத் தப்பிச்சுட்டேனே)த் தோட்டமாம். மனசுலே இருக்கும் தேவையில்லாத எண்ணங்களைக் களைந்து அமைதிப்படுத்தி, ரொம்பசாந்தமா, சமாதானமா ஆக்கி குறைஞ்சது ஒரு கணமாவது எண்ண ஓட்டமில்லாம ஆடாம அசையாம வச்சுக்கும் சக்தி இருக்காம் இதுக்கு.
இந்தவகைத் தோட்டங்களுக்கு முக்கியமானதுன்னு பார்த்தா கடல், மலைகள், காடு கட்டாயம் வேணும்.வீட்டுக்குள்ளெ உக்காந்த இடத்துலே கடல், மலை, காடுக்கு எங்கே போவேன்?



கவலை வேணாம். அது உன்னைத்தேடி இங்கேயே வருது.



அழகான ஒரு அட்டைப் பெட்டி. வெளியே போட்டுருக்கு, அதுக்குள்ளெ 'எட்டு சாமான்கள் இருக்கு'ன்னு.
திறந்தா, ஒரு மரத்தாலான ட்ரே. 28.5 x 19.5 செ.மீ அளவு.
வெள்ளை மணல்- ஒரு பொதி ( அசப்புலே நம்மூர் கோலப்பொடி)
கூழாங்கல் - 3
மூங்கில் வேலி, மேலே வேயப்பட்ட கூரையுடன்
வாளி
மூங்கில் Rake
நீண்ட கைப்பிடியுள்ள மரக்கரண்டி
kakei fountain (ஜப்பானிய நீரூற்று?) மரக்கட்டையில் செஞ்சு நம்மூர் அடிப்பம்பு குழாய் மாதிரி இருக்கு)




இதையெல்லாம் மரத்தட்டுலே எடுத்து வச்சுத் தோட்டம் போட்டுறவேண்டியதுதான்.சரி. அந்தக் கடல், மலை, காடு எங்கே?
கடல்- மணல்
மலை- கூழாங்கல்
காடு- மூங்கில் Rake




இது ஒருவித தியானம் செய்யற பலனைக்கொடுக்கும். எந்த வேலை செஞ்சாலும்,அவதிஅவதியாச் செய்யாம நிதானமா, செய்யறவேலையை அனுபவிச்சுச் செய்யணுமாம்.ஒரு ஞானி சொல்லி இருக்கார். ( பதிவு எழுதறதைச் சொல்றாரோ?)
கணினி பக்கத்துலே வச்சுக்கிட்டு அப்பப்ப, 'தோட்டத்தில் டிசைன் போட்டு'த் தியானம்செஞ்சுக்கிட்டே இருக்கேன்.

whatever the task do it slowly with ease, in mindfulness
Don't so any tasks in order to get them overwith
Resolve to do each job in a relaxed way with all your attention
"Thich Nhat Hanh"


இந்த தோட்டத்தை'எதையெடுத்தாலும் ரெண்டு டாலர்' கடையிலே வாங்குனேன். ரெண்டே டாலருக்கு எப்படி? இது செஞ்சு விக்கலாமுன்னு எப்படித் தோணுச்சு? உக்காந்து யோசிக்கறதுன்றது இதானா?


மகள் பார்த்துட்டு சொன்னா " ஜிகே கிட்டே காமிக்காதே. மணலும் ட்ரேயும் தனக்குன்னு நினைச்சுக்கப்போறான்"