ஃபிஜி அனுபவம் பகுதி 17
***********************
அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது!!! ரேடியோவில் கேட்ட செய்தி இதுதான்! புது மந்திரிசபையினர் காவலில் இருக்கின்றனர்!
அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது!!! ரேடியோவில் கேட்ட செய்தி இதுதான்! புது மந்திரிசபையினர் காவலில் இருக்கின்றனர்!
என்ன நடந்ததென்ற தெளிவு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கொருமுறை அரசாங்கத்தை ராணுவம் எடுத்துக் கொண்டதைப்
பற்றிய செய்தி மட்டுமே வந்து கொண்டிருந்தது!
நேரம் போகப் போகச் செய்திகள் வேறுமாதிரி உருவெடுக்கத் தொடங்கின! தலைநகருக்கும் எங்களுக்கும் இருந்த இடைவெளி வெறும்
5 மணி நேரக் கார் பயணம்தான்!
'ஃபிஜி டைம்ஸ்' என்ற நாளிதழ் ( இது ஒன்றுதான் இங்கே டெய்லி பேப்பர்! ) நடந்த விஷயத்தை முக்கியத் தலைப்புச் செய்தியாக
வெளியிட்டிருந்தது!
'கர்னல் ரம்புக்கா' என்பவர் பிரதமரையும் மற்ற மந்திரிசபை அங்கத்தினரையும் காவலில் வைத்துவிட்டு, 'நாட்டின் பொறுப்பை ராணுவம்
ஏற்றது' என்று அறிவித்திருந்தார்!
காரணம் ஒன்றும் விவரிக்கப்படவில்லை! அவ்வளவுதான். இரண்டுநாட்கள் வழக்கம்போல் கழிந்தன!
அதன்பின் எங்களுக்குக் கிடைத்த செய்திகள் வேறு மாதிரி இருந்தன. தலைநகரில், இந்தியர்களின் கடைகள் சூறையாடப் படுகின்றன.
இந்தியர்களைத் தாக்குகின்றனர். எல்லாக் கடைகளும் அடைக்கப் பட்டிருக்கின்றன என்றெல்லாம் சேதிகள் வந்தன. ஆனால் இது எதுவுமே
அதிகாரப் பூர்வமாகவோ, ரேடியோவிலோ வரவில்லை. ஆட்கள் மூலமாகவே வந்தன!
எல்லாவற்றுக்கும் ரேடியோதான்! தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்காத காலகட்டம்! அதுவுமே நல்லதாகிவிட்டது. பரபரப்பான செய்தி
என்ற முறையில், எங்கோ ஒரு இடத்தில் நடந்த அசம்பாவிதத்தை, விடாது திரும்பத்திரும்பக் காண்பித்து, சும்மா இருக்கும் மற்றவர்களையும்
உசுப்பி விட்டிருக்கக்கூடிய சாத்தியம் இருந்ததல்லவா?
இதற்குமுன், மற்ற சில நாடுகளில் ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த விவரங்களையெல்லாம் படித்தறிந்திருந்த நாங்கள் என்ன ஆகுமோ
என்று கவலைப் பட்டோம். உள்ளூர் ஆட்களுக்கு இருந்த அறியாமையின் காரணம் யாருமே இதை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை.
உடனே நாங்கள் தலைநகருக்கு, நம் இந்திய ஹைகமிஷனரைத் தொடர்பு கொண்டோம். அவர்களும் 'ஆபத்து ஒன்றுமில்லை. பொறுத்திருந்து
பார்க்கவேண்டும். எதற்கும் நீங்கள் கவனமாக இருங்கள்' என்று கூறினர். எங்களுக்குக் கவலையாக இருந்தது!
நம் நண்பரின் ( புது மந்திரி சபையில் இடம் பெற்றவர்) குடும்பத்தினர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றனர். விபரீதமாக
ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் இந்தியர்களுக்கு வர ஆரம்பித்திருந்தது!
நமக்கு ( இந்தியர்களுக்கு) கொஞ்சம் கற்பனைவளம் அதிகமோ என்றுகூட சிலசமயங்களில் நான் நினைப்பதுண்டு! ஒரு 200 மைல் தொலை
விலிருந்து வரும் செய்தி, எங்களை வந்தடைந்துவிடுவதற்குள் அதற்குக் கண்ணும், காதுமட்டுமல்ல, கை கால்கள்கூட முளைத்து விடும்!!!!!
அது உண்மைதானா என்று தெரியாவிட்டாலும் கூட, ஏதோ ஒரு பதற்றம் நம்மைத் தொத்திக்கொள்ளும்!
'ஃபிஜியன்கள் எல்லாம் இந்தியர்களின் வீடு புகுந்து அடிக்கிறார்கள். நகை நட்டையெல்லாம் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்கள்' என்றெல்லாம்
புரளி கிளம்ப ஆரம்பித்துவிட்டது!
நாங்கள் இருக்கும் ஊர் எப்போதும்போல அமைதியாக இருந்தாலும், ஃபிஜியன்களைக் காணும்போது, நெஞ்சுக்குள் 'சுரீர்' என்று ஒரு
உணர்வு, அதனால் சற்று பதற்றம்! 'அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடாதா?' நமக்குப் பழக்கமான ஃபிஜியன்களுக்கும் ஒருவிதமான
'அனீஸினஸ்' வேற்றுமுகம் பார்க்கும் குழந்தையின் உணர்வு! ஆனால் இதையெல்லாம் வெளியில் காண்பிக்காமல் சாமர்த்தியமாக
மறைக்கவேண்டும். விரோத மனப்பான்மை வரவோ, வளரவோ இடம் தரக்கூடாது என்று இரண்டு பிரிவுமே முயற்சி செய்தோம்!
அநேக இந்தியர்கள், (குடும்பத்தில் ஒரு சிலர்) கனடா, இங்கிலாந்து என்று சொந்தத்தை நோக்கிப் போக ஆரம்பித்தனர்!
'ட்ராவல் பிஸினஸ்' செய்து கொண்டிருந்த ஒரு சிலர், 'எரியும் வீட்டில் பிடுங்கினவரை ஆதாயம்' என்பது போல இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டனர்.
'கனடா போயிருங்க. அங்கே 'ஏர்போர்ட்டிலே என்ட்ரி விஸா ஸ்டாம்ப்' செய்யும் போதே உங்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அந்த கவர்மெண்ட்
கொடுத்துருவாங்க. அங்கே பயிர் வச்சுப் பிழைச்சுக்கலாம். அப்பாலெ கொஞ்ச நாள் ஆனதும், இங்கே இருக்கற குடும்பத்தைக் கூட்டிட்டுப்
போயிரலாம். இங்கெ இந்த 'கைவித்தி' ஆளுங்களோட இனிமே இருக்க முடியாது!'
நேடிவ் ஃபிஜியர்களைக் குறிக்கும் வார்த்தைதான் இந்தக் 'கைவித்தி' என்பது!
இதையெல்லாம் நம்பிக்கொண்டு பலர் நாட்டைவிட்டுப் போக முயன்றார்கள். இருந்த சேமிப்பையெல்லாம் டிக்கெட்டு, மற்ற செலவுகளுக்கு
என்று செலவழித்தும், கடன் பட்டும் பல ஆட்கள் போனார்கள். போனவர்கள் எல்லாம் மூன்று மாதங்களில் திரும்பிவரவும் செய்தார்கள்!
இப்படியெல்லாம் போனவர்களில் குஜ்ஜுக்கள் யாரும் இல்லை! வியாபாரம் குறைவான நிலையிலும், பொறுத்திருந்து பார்க்கலாம் என்று
அமைதிகாத்து வந்தார்கள் அவர்கள்!
அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அறிக்கைகள் வந்துகொண்டிருந்தன,' இந்தியர்கள் கலங்க வேண்டாம். உங்கள் உடலுக்கோ, உடமைகளுக்கோ
ஆபத்து ஏதும் ஃபிஜியர்களால் வராது!'என்றெல்லாம்.
இந்த அமளியைப் பார்த்ததும் அண்டைநாடுகளான 'நியூஸிலாந்து, ஆஸ்தராலியா' இரண்டும் அவர்களின் தூதரகத்தைப் பாதுகாக்கவென்று
அவர்களின் கடற்படையைச் சேர்ந்த கப்பலை ஃபிஜிக்கு அனுப்பியிருந்தன!
இந்தியத் தூதரகத்தைத் தொலைபேசியில் அணுகுவதும்கூட இயலாமல் போய்விட்டது! ஒரே குழப்பம்தான்! ஆனால் நம் ஹைகமிஷனர், நம்மோடு
தொடர்புகொண்டு, 'பயப்படவேண்டாம். நீங்கள் மூவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்ட நிலையிலெ இருக்கவேண்டும். அப்போதுதான்
அவசியம் என்றால் உங்களுக்கு ( NRI) ஏதாவது உதவி செய்யமுடியும்' என்றார்!
நானும் 'இங்கே எல்லாம் வழக்கம்போல்தான் உள்ளது. தலைநகரில்தான் குழப்பம் என்று தகவல் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள்
பத்திரமாகவும் கவனமாகவும் இருங்கள்' என்று சொன்னேன்.
நாங்கள் இருந்த ஊரில் மொத்தமே 3 குடும்பம்தான் NRI பிரிவில் உள்ளவர்கள். அதில் ஒருவர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்.
இன்னொரு குடும்பம் பேங்க் ஆஃப் பரோடாவின் மேனேஜரும், மனைவியும் இரண்டு மகன்களும். மற்றது நாங்கள்& மூணரை வயதுள்ள
என் மகள். மகள் அங்கே பிறந்ததினால் அவளுக்கு ஃபிஜி பாஸ்போர்ட் எடுத்திருந்தோம். அது ஏதாவது பிரச்சனையாகுமோ என்று பயமாக
இருந்தது!
நாங்கள் மூவரும் தினமும் எங்கள் வீட்டிலே சந்தித்து, கிடைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம். இதில் 'பேங்க் மேனேஜர் சொல்வது,
' எங்கள் வீட்டில் வந்து எல்லோரும் தங்கிவிடுங்கள்'என்று.
நான் சொல்வேன், ' இங்கே தான் உங்களுக்குப் பாதுகாப்பு. நம் வீட்டில் மேல்மாடியில் குடியிருப்பது ஃபிஜியன் குடும்பம்தானே. அவர்
பெயர் 'பென்னி ரம்புக்கா' என்று உங்களுக்குத் தெரியாதா? 'ரம்புக்கா' என்றால் யாரும் தொல்லை தர மாட்டார்கள்.ராணுவத் தலைவர்
'ஜெனரல் ரம்புக்கா'வின் உறவினர் என்று விட்டுவிடுவார்கள்'
இந்த கலாட்டாக்களுக்கு நடுவில், 'கர்னல் ரம்புக்கா', தனக்குத்தானே பதவி உயர்வு அளித்துக் கொண்டு 'ஆர்மி ஜெனரல் ரம்புக்கா'வாக
ஆகி இருந்தார்!
நாட்டின் நன்மையைக் கருதி அவர் செய்த முதல் வேலை, நாட்டின் நாணய மதிப்பை 20% குறைத்ததுதான்! போச்சு, எங்கள் சேமிப்பெல்லாம்
தடாலென்று இருபது சதம் மதிப்பிழந்து போனது!
தினம் தினம் கூடிப் பேசிகொண்டிருந்தோம். மற்ற வெளிநாட்டினருக்கெல்லாம் அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பைக் கருதி பலதும் செய்து
கொண்டிருந்த சமயத்தில், 'ஏர் இந்தியா' எங்களைக் கொண்டுபோக வரும் என்றெண்ணிக் காத்திருந்தோம்!
*************************************************************************************
Wednesday, November 17, 2004
வந்ததே 'கூ'
Posted by
துளசி கோபால்
at
11/17/2004 08:35:00 AM
1 comments
Monday, November 15, 2004
'க்காவோ பீவோ மஜாக் கரோ!!!!!!'
ஃபிஜி அனுபவம் பகுதி 16
*****************************
இங்கிருக்கும் இந்தியர்களின் முக்கிய 'ஸ்லோகன்' இதுதான்!!!! சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு!!!!!!!!
இங்கிருக்கும் இந்தியர்களின் முக்கிய 'ஸ்லோகன்' இதுதான்!!!! சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு!!!!!!!!
பிறந்த நாட்டிலிருந்தே அந்நியப்பட்டுப் போனதால் வந்த விரக்தியில் எழுந்ததா இந்த வாசகம் என்றுகூடத் தோணலாம்!
அல்லது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து, அவர்களின் வாழ்க்கையை அருகே இருந்து
கண்டதால் ஏற்பட்ட அனுபவமாகவும் இருக்கலாம்! எப்படியோ இதே எண்ணம் 'நம் நாட்டிலும்' இப்போதெல்லாம் பரவி
வருவதை இல்லையென்று நாமும் மறுக்க முடியாதல்லவா?
இங்குள்ள இந்தியர்களுக்கு, வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சிறு மாற்றம் வேண்டுமானால் எங்கே போவது?
இந்தியா என்ன அருகிலா இருக்கிறது? அப்படி இருந்திருந்தால் அவர்கள் எண்ணப் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்ட விதம்
வேறாயிருந்திருக்குமோ?
இதுவோ மிகச் சிறிய தீவு. முன்பே சொன்னதுபோல ஒரு எட்டுமணி நேரம் போதும் இதை ஒரு முறை வலம் வர!
ஒரு சில நாட்களுக்கு எங்கேயாவது போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர்கள் நாடுவது இங்கேயுள்ள
'ரிஸார்ட்'களைத்தான்!
இது இங்கே சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில்! எல்லா இடங்களிலும் கடற்கரைகளை ஒட்டி,
பல ரிஸார்ட்டுகள் பெருகிவிட்டன. உள்ளூர் ஆட்கள் போய் அனுபவிப்பதற்கு சுமாரான வகையில் உள்ள கடற்கரைகள்கூட அபூர்வமாகி
விட்டன! எல்லாவற்றையும் 'காசுக்கு' விற்றாகிவிட்டது அரசாங்கம்! பல வெளிநாட்டு 'ஹோட்டல்' நிறுவனங்கள் பல இடங்களிலும்
அருமையான 'ரிஸார்ட்டு'களைக் கட்டியிருக்கின்றன! இங்குள்ள பழங்குடி மக்களின் குடிலைப் போன்றே தோற்றம் தரும், நவீன வசதிகள்
படைத்த குடில்கள்! பர்ணசாலையைப் போன்ற அமைதியான இடங்கள். கூட்டம் இருந்தால் அல்லவா சத்தமும், இரைச்சலும் இருக்கும்?
அவர்களும் இந்நாட்டில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் நல்ல கொழுத்த லாபம் அடைந்து வருகின்றனர். ஃபிஜியர்களுக்கு வேலை வாய்ப்பு
கிடைப்பதென்னவோ நிஜம்தான்! ஃபிஜியின் தனிச் சிறப்பைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, சுற்றுலா சம்பந்தமுள்ள இடங்களில் எல்லாம்
நேடிவ் ஃபிஜியர்களுக்கு மட்டுமே வேலைதரும் நிறுவனங்களும் உண்டு! ஆனாலும் 'பிஹைண்ட் த ஸீன்' என்று கணக்கு வழக்கு பார்க்கும்
சம்பந்தமுள்ள ஆஃபீஸ் நிர்வாகம், இன்னும் இந்தியர்களுக்குத்தான்!
இந்த ரிஸார்ட்டுகள் சுற்றுலா வரும் ஆட்களிடம் வாடகை நிறைய வசூலித்தாலும், உள்ளூர் ஆட்களுக்கு மட்டும் எப்போதும் 50% தள்ளுபடி!
அதனால், உள்ளூர் மக்களும் குறிப்பாக இந்தியர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அழகான 'காட்டேஜ் ஸ்டைல்' இருப்பிடங்கள், ஒவ்வொன்றிற்கும் தனியாக நீச்சல் குளங்கள் என்று அட்டகாசமாக ரம்யமான சூழலில்
சில நாட்கள் தங்கி, அந்த 'க்காவோ பீவோ மஜா கரோ'வை நடத்துகின்றனர்!
உள்ளூர் 'பீர்' இங்கே 'ஃபிஜி பிட்டர்'என்னும் பெயரில் ஒரு நியூஸிலாந்து நிறுவனத்தால் தயாரிக்கப் படுகின்றது! இதற்குப் போட்டி
நிறுவனம் இதுவரை இல்லை!
ஃபிஜியில் ஏராளமான சிறிய தீவுகள் இருக்கின்றன என்று முன்பே குறிப்பிட்டிருந்தேனல்லவா? அவைகளிலும் பல ரிஸார்ட்கள் இருக்கின்றன.
ஒரு தீவில் ஒன்று என்று இருப்பதால், அமைதி வேண்டிவரும் வெள்ளைக்காரர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்க இவற்றைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அங்கே வேறு கடைகண்ணிகள் இருக்காது. எல்லாமே அந்த ரிஸார்ட்டில் இருப்பதுதான்! முக்கியமாக டி.வி. கிடையாது! பொழுது போக்கு
என்ற வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்!
இது போன்ற தீவுகளுக்கு ச்சும்மா ஒரு நாள் போய் திரும்பி வரவும் 'டே எக்ஸ்கர்ஷன்' உண்டு. சிலர் வேறு தீவுகளில் தங்கிக் கொண்டு
மற்ற தீவுகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கவும் வருவார்கள். இது போன்ற ஒரு நாள் சுற்றுலாக்களுக்கும் உள்ளூர் ஆட்களுக்கு
50% தள்ளுபடி உண்டு.
நாங்கள் ஒருமுறை 'பீச் கோம்பர் ஐலண்ட்' என்ற தீவுக்கு இப்படிப் போனோம். 'லட்டெளகா' என்னும் ஊரில் இருந்து ( இதுதான்
இத்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகம். மற்றொன்று தலைநகரான 'சுவா'வில் உள்ளது) பாய்மரக் கப்பலில் பயணம்
செய்தோம். சுமார் 2 மணிநேரப் பயணம். பேருக்குத்தான் பாய்மரக்கப்பலே தவிர, அவசியம் ஏற்பட்டால் அதை எஞ்சின் மூலமும் இயக்க
முடியுமாம்! பாய்மரம் எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கட்டும் என்ற 'பாவ்லா'தான்! இதன் பெயர்
'தூயித்தாய்'. பாயையெல்லாம் விரித்துக் கொண்டு காலையில் 8.30 கிளம்பி இது 'பீச் கோம்பர்' தீவை நோக்கிப் போகும். அப்போது
சில தூண்டில்களை படகின் பின்னால் கட்டிவிடுவார்கள். போகும் வழியிலேயே மீன்களைப் பிடித்துவிடுவார்கள். பத்தரை மணிக்கு நாம்
அந்தத் தீவை அடைந்துவிடுவோம். அந்த மீன்கள் எல்லாம் சமையலறைக்குப் போய்விடும்!
நாமும் ஓய்வு எடுத்துக்கொண்டு அந்தத் தீவைச் சுற்றிப்பார்க்கப்(!) போவோம். ஒரு சுற்று சுற்றிவர அதிகபட்சமாக 30 நிமிடங்கள்!
முன்னால் கூரை வேயப்பட்ட ஹோட்டல் கட்டிடம், அதன் பின்பக்கம் சிறிய காட்டேஜ்கள்! சுற்றிவர வெள்ளைமணலும்,
அதிலே படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கும் சுற்றுலாப் பயணிகளும்! அவ்வளவுதான்.
சில விளையாட்டுகள் முக்கியமாக ஃபுட்பால் போல ஒன்று அந்த மணல்வெளியில் நடந்துகொண்டிருக்கும். அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பகலுணவுக்கு மணி அடித்தவுடன், அனைவரும் போய் அவற்றை எடுத்துக் கொண்டு, திரும்ப மணல்வெளியிலே அமர்ந்து சுற்றிலும் உள்ள
கடலை ரசித்தபடி உண்ணலாம். கட்டிடத்தின் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லோரும் வெளியிலே இருக்கவே விரும்புவார்கள்.
ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்!
ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது! அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல்பகுதி! 'ஸ்நோர்கேல்'
செய்யவும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும்
கண்டு மகிழலாம்!
பகல் உணவுக்குப் பின் அடித்தளம் கண்ணாடியால் உருவாக்கியிருக்கும் சின்னப் படகுகளில் பவளப்பாறைகளைப் பார்க்கச் செல்லலாம்!
இந்தப்படகுகளில் ஒரு பத்துப் பேர்தான் போக இடம் இருக்கும் என்பதால் பல 'ட்ரிப்'கள் அடித்துக் கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கே
மிகவும் ரம்மியமான காட்சிகள்தான் கடலின் மடியில்!
நாலுமணிக்கு 'லட்டெளகா'வுக்குப் போக கப்பல்( கப்பல் என்ன பெரிய கப்பல்! ஒரு பெரிய படகுதான்)தன் பாயையெல்லாம் சுருட்டிக்
கொண்டுத் தயாராக இருக்கும். இந்தமுறை எஞ்சின் உதவியோடு ஒரு மணிநேரத்தில் துறைமுகத்தை அடைந்துவிடும்! எல்லாம் ஒரு வியாபாரத்
தந்திரம்தான்!
இந்த 'லட்டெளகா'விலிருந்து 30 நிமிடம் 'ட்ரைவ்' செய்தால் நம்வீடு உள்ள 'ம்பா' வந்துவிடும்! சாலைவசதிகள் ஓரளவுக்கு நன்றாகவே
இருக்கும்! சாலையின் இரு புறங்களிலும் கரும்புக்காடுகள்! வந்துகொண்டிருக்குபோதே, 'விருட்'டென்று சாலையின் குறுக்கே ஓடும்
கீரிகள்! இங்கே கீரிகள் ஏராளம். அதனால் பாம்பு என்ற ஜீவராசி இல்லவே இல்லை! இன்னும் சொல்லப் போனால் இங்கே வகை
வகையான மிருகங்களும் கிடையாது! பசு, காளை,குதிரை, நாய், பூனை இவ்வளவுதான். எருமை மாடுகூட இல்லை!
வெள்ளையர்கள் வந்த புதிதில் அவர்கள்தான் மாடுகளை இங்கே கொண்டு வந்தார்களாம். அப்போது ஃபிஜியர்கள் அதைக் கண்டு வியந்து
அது என்ன என்று கேட்டபோது இது 'புல்', இது 'கெள'(bull & cow) என்று சொன்னார்களாம். ஃபிஜியர்கள் மாடுகளை இப்போதும்
அவர்கள் பாஷையில் 'புல்மகெள' என்றே சொல்கிறார்கள்!
இப்படி எல்லோரும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்குபோது இடிபோல வந்தது ஒரு செய்தி!
இன்னும் வரும்
************
Posted by
துளசி கோபால்
at
11/15/2004 10:35:00 PM
2
comments
Wednesday, November 10, 2004
தீபாவளி வாழ்த்துக்கள்!!!
அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!
அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!
இந்த தீபாவளிக்கு நான் பார்க்கப் போகும் திரைப்படம் 'பறக்கும் பாவை!!!!'(புத்தம் புதிய காப்பி)
இன்றுதான் வந்து சேர்ந்தது!( கணவர் மலேசியாவிலிருந்து வாங்கிவந்தார்!)
எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி, மற்றும் பலர் நடித்தது!
திரைப்படப் பாடல்களிலே மோசமான அர்த்தம் வரும்படியெல்லாம் இப்போது பலபாடல்கள் வந்து
கொண்டிருக்கின்றன. சமூகச் சீரழிவுக்கு இவையும் ஒரு காரணமே!
இந்தப் 'பறக்கும் பாவை'யில் பாட்டுகள் எல்லாம் அருமை. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.
'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?'
ஆஹா! காதலனும் காதலியும் பெற்றோரை நாள் பார்க்கச் சொல்லிக் கேட்கிறார்கள்!
( ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா இல்லை!)
இசையும் நன்றாக இருக்கிறது. வார்த்தைகளை முழுங்கிவிடும் இரைச்சலான இசை இல்லை!
என்னதான் சொல்லுங்க, பழைய படங்கள் அதுவும் எம்.ஜி.ஆர். படங்கள் எப்போதும் அலுப்பதே இல்லை!
இந்த நாடு 'டேட் லைன்' ஆரம்பத்தில் இருப்பதால் நாளின் முதல் சூரியனும் எங்களுக்குத்தான்!
பண்டிகையைக் கொண்டாடும் முதல் ஆளும் நான் தானோ?
Posted by
துளசி கோபால்
at
11/10/2004 07:38:00 PM
1 comments
