ஃபிஜி அனுபவங்கள். பகுதி 4
சக்கரை இனிக்குற சக்கரை
******************************
பணம் காசு இங்கே யாருகிட்டே தெரியுமா? வழக்கம்போல குஜராத்திங்க கிட்டேதான்! அவுங்கதானே வியாபாரம் செய்யறாங்க! மத்த இந்தியர்கள் எல்லாம், வெள்ளைக்காரரோட இருந்த அக்ரிமெண்ட் முடிஞ்சபிறகு, இங்கேயே செட்டில் ஆயிட்டாங்கல்ல. அவுங்க என்ன செஞ்சாங்க? அவுங்களுக்குத் தெரிஞ்ச ஒரே தொழிலான விவசாயம், கரும்புத் தோட்டத்துலே பயிர் செய்ய்றதுன்னு ஆரம்பிச்சாங்க.
இந்த நாட்டுலே எல்லா விளை நிலங்களும், எல்லாவிதமான நிலப்பரப்பும் மண்ணின் மைந்தர்களான ஃபிஜியன்களுக்குத்தான்! நமக்குஇடம் வேணுமுன்னா, நாம் ஒப்பந்தம் போட்டு அதை உபயோகிக்கலாம். எந்த மாதிரி ஒப்பந்தம்? 99 வருஷம்! நம்ம ஆளுங்க எல்லாரும் அப்படித்தான் ஒப்பந்தம் போட்டு, இடம் எடுத்து, வீடுவாசல்ன்னு இருக்காங்க! இந்திய ஆளுங்களுக்குத் தேவையான சாமான்களை விக்கறதுக்கு வந்தவங்கதான் குஜராத்திங்க! இதுலே பாருங்க ஒரு விசேஷம், இங்க இருக்கற குஜராத்திங்க 99 சதமானம் ஒரே ஊர்லே இருந்து வந்தவுங்க! குஜராத்துலே இருக்கற 'நவ்சாரி'ங்கறது அந்த ஊர். எப்படி ஒரே ஊர்க்காரங்க வந்திருப்பாங்க? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். கொஞ்சம் யோசிக்க வேணும்.
'ஃபிஜி ஷுகர் கார்ப்பொரேஷன்' ன்னு ஒரு நிறுவனம் இருக்கு. இது அரசாங்கத்துக்குச் சொந்தமானது. நாட்டுலே விளையற மொத்தக் கரும்பையும் இவுங்கதான் வாங்குவாங்க. வேற யாருக்கும் விவசாயிங்க விக்க முடியாது. கரும்பு நடவு காலம் வரும்போது, இவுங்களே விவசாயிங்களுக்குக் கடன் கொடுப்பாங்க. அதைச் செலவு செஞ்சு கரும்பு நட்டு, அறுவடையாகும் காலம் வரும்போது அதை இவுங்க கம்பெனிக்கு வித்துறணும். அப்ப கரும்புக்கு உண்டான விலையிலே இருந்து, கடனைக் கழிச்சுட்டு, பாக்கியை தருவாங்க. இப்படிதான் பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு!
'ஷுகர் கார்ப்பொரேஷன்', சக்கரையை மத்த நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சிரும்! கரும்பு விளையுற ஊரிலே, பொங்கல் பண்டிகைக்குக்கூட ஒரு கரும்பை நாம எடுக்க முடியாது. கடையிலே கரும்பை விக்கக் கூடாது. ஆனா, தெரிஞ்சவுங்க தோட்டத்திலே இருந்து ரெண்டு கரும்பைக் கொண்டு வந்து படைக்கலாம்!
சர்க்கரையைக் கூட நல்ல வெளுப்பா ஆக்காம, ஒரு இளம் பழுப்புக் கலருலேயெ எடுத்து ஏற்றுமதி செஞ்சிருவாங்க. சட்டுன்னு பாத்தா ஆத்துமணலு போலவே இருக்கும்!
வருஷத்துலெ ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சர்க்கரை ஆலை வேலை செய்யும். அப்புறம் அதை 'மெயிண்டனன்ஸ்' செய்யவேணுமில்லையா?அது மூடறதுக்குள்ளெ எல்லா அறுவடையும் நடக்கணும். சிலசமயம் ஆளுங்க கிடைக்காம பிந்திப்போச்சுன்னா, நஷ்டம் ஆயிருமே.அப்போ என்ன செய்வாங்கன்னா, கரும்புக் காட்டுக்குத் தீ வச்சிருவாங்க! எல்லா தழையும் எரிஞ்சதும் அணைச்சிருவாங்க.கரும்பு மட்டும் 'குச்சி குச்சி'யா நிக்கும். அதை வெட்டறது கொஞ்சம் சுலபமாச்சே.' டக் டக்'குன்னு அறுத்துருவாங்க. இந்தத் தீஞ்சகரும்புக்கு விலை கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா, முழுசா நஷ்டம் வரதுக்கு இது மேல் இல்லையா?
கரும்புக் காசு வர்ற சமயம் ஊரே கலகலப்பா இருக்கும். காசு ஓட்டம் இருக்குல்லே! கடைகளிலே வியாபாரம் அமோகம்! துணிமணி,நகை நட்டு, கல்யாணம் கார்த்தி எல்லாம் அப்பதான்.
கொஞ்சம் ஆளுங்க,வீட்டைச் சுத்தி இருக்கற இடத்துலே நமக்குத் தேவையான காய்கறிகளைப் பயிர் செஞ்சு, சனிக்கிழமை கூடும் சந்தைநாளில் கொண்டுவந்து விற்று, அவ்வப்போது கொஞ்சம் காசு பார்ப்பார்கள்.
கிலோக்க கணக்கு கிடையாது. எல்லாம் 'கூறு கட்டி வச்சிக்கிட்டு, குந்துக்கினு கூப்பிட்டா கோடி சனம் தேடிவரும்' கதைதான்! நம்ம ஊர் காய்களுக்குப் பஞ்சமே இல்லை. எப்பவும் வெயில்தானே. அச்சு அசல் தென் இந்தியாதான். ஆனா எல்லோரும் ஹிந்தி பேசுறதாலெ வட இந்தியா மாதிரி ஒரு தோணல்!
இன்னும் வரும்.
****************
Tuesday, October 05, 2004
சக்கரை இனிக்குற சக்கரை
Posted by
துளசி கோபால்
at
10/05/2004 04:11:00 PM
5
comments
Monday, October 04, 2004
குளு குளாத் திருவிழா !!!!
தொடர்ச்சி பகுதி 3 புரட்டாசி மாதம்!!
****************************************
இப்போது புரட்டாசி மாதம் நடக்கிறதல்லவா? ஃபிஜி மாரியம்மன் கோவிலில் 'குளு குளாத் திருவிழா' நடக்கும் காலம்.
இந்தத் திருவிழாவைப் பற்றி இந்தியாவில் ஏதும் விவரங்கள் இல்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் கடைசி சனிக்கிழமையன்று, கோவிலில் குளுகுளாத் திருவிழா நடக்கும்.
குளுகுளா என்றால் என்ன?
இது மைதாமாவில் சர்க்கரை சேர்த்துப் பிசைந்து, சின்ன உருண்டைகளாகச் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் ஒரு தின்பண்டம்.
விழாவுக்கு மூன்று நாட்கள் முன்பே விரதம் அனுஷ்டித்து, இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள், கோவிலிலே தங்கியிருப்பார்கள்.
விழாவன்று மாலையில் அம்மன் சந்நிதி முன்பு ஒரு மேடை போட்டு அதில் அடுப்பு வைத்து, ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்சுவார்கள். வேறு ஒரு பாத்திரத்தில் மாவையும் சர்க்கரையையும் சேர்த்து, நெய்யும் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்து,(சப்பாத்திமாவுப் பதத்தில் ) சின்னப் பந்து அளவில் உருட்டி வைப்பார்கள். எண்ணெய் காய்ந்துகொண்டே இருக்கும்!
இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் குளித்து முடித்து,வாயில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அம்மனை வணங்கி வரிசையாக வந்து எண்ணெய்ச் சட்டிக்கு முன் நிற்பார்கள். மாவு பந்துக்கள் எண்ணெயில் போடப்படும். அவை வெந்து பொன் நிறமாக மாறும்போது, ஒவ்வொருவராக வந்து, 'வெறும்' கைகளால், அந்த எண்ணெயிலிருந்து கோரி எடுப்பார்கள். கைகளை முக்கி குளுகுளாக்களை எடுத்து, அப்படியே கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு, ஒரு பாத்திரத்தில் வைப்பார்கள். விரதம் இருந்த்வர்கள் எல்லாரும் எடுத்தபின்,அவைகளை அம்மனுக்கு முன்வைத்து பூஜித்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்!
ஒவ்வொருவரும் எண்ணெயில் கைவிடும்போது 'கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷம் முழங்கப்படும்! புரட்டாசி மாதம் என்றெல்லாம்சொல்லத்தெரியாது. ஆனால் கோவிந்தாப் பூஜை மாசம் என்றே குறிப்பிடுவார்கள். இந்த 'கோவிந்தா' முழக்கம் எல்லா திருவிழாக்களுக்குமே பொது!
பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலும் இந்த புரட்டாசிச் சனிக்கிழமை பூஜை நடத்துவார்கள்.
இங்கே சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை இவர்கள் தொடங்கி, பள்ளிக் கூடங்களைக் கட்டி நடத்தி வருகின்றனர். இப்பள்ளிகளில் கற்பிப்பதற்கு, தமிழ் நாட்டிலிருந்தே ஆசிரியர்களை வரவழைத்திருந்தனர். இங்கே தமிழும் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டு வந்ததாம். தலைமுறைகள் மாற மாற, தமிழ்ப் படிக்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் அதனால் தற்சமயம் தமிழ் போதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சங்கம் பள்ளிகள் அநேகக் கிளைகளைக் கொண்டிருக்கிறது!
வட இந்தியர்கள் முதலில் வந்ததால், ஹிந்தி மொழி பரவலாகப் பேசப்பட்டு, பின்னர் நம் தென் இந்தியர்களும் அவசியத்தை முன்னிட்டு ஹிந்தி பேசக் கற்றுக் கொண்டனராம். இப்போது ஃபிஜியில் ஹிந்தியும் ஒரு தேசியமொழியாக உள்ளது. மற்ற இரண்டும் ஆங்கிலமும்,ஃபிஜியன்என்னும் மண்ணின் மைந்தர்களின் மொழியும்! இந்த மொழிக்கு எழுத்துரு கிடையாது. ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.
ஃபிஜியர்
இவர்கள் கள்ளமில்லா மனத்தினர். என்ன ஒன்று, நாளை என்பதைப் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்து பழகியவர்கள்.இவர்களுடைய வாழ்க்கை முறை நம் வழக்கத்திலிருந்து மாறுபட்டது.
ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும், 'கோரோ' என்று அழைக்கபடும் சின்ன கிராமத்தில் கூட்டாக வசிக்கின்றனர். அந்த்க் 'கோரோ'வின் தலவர்தான் இவர்களுக்குப் படியளக்க வேண்டும்! அவர்கள், தங்களது இருப்பிடத்தைச் சுற்றி மரவள்ளிக் கிழங்கு, இன்னும் 'டாரோ'என்று அழைக்கடும் கிழங்கு வகைகளப் பயிரிட்டு , அதையே முக்கிய உணவாகவும் பயன் படுத்துகின்றனர். அரசாங்கம் தரும் உதவிப்பணம் அந்தந்த கோரோவின் தலைவர் மூலமாகப் பொருளாகவோ, பணமாகவோ அவர்களுக்குப் பிரித்துத் தரப்படுகின்றது.
வேலை செய்பவர்களும் அந்தந்த வாரச் சம்பளத்தை கிடைத்த அன்றே தீர்த்துவிடுவார்கள்!
வீட்டுவேலைக்கு இவர்கள் வந்தால் எல்லா வேலைகளையும் நம் மனம்
கோணாமல் செய்வார்கள். என்ன ஒன்று, சாப்பாடு
எதிர்பார்ப்பார்கள். சாப்பாடு என்றால், தலை வாழை இலை போட்டு விருந்தா? 'ப்ரெட்'ம் தேனீரும் தான்! இதுவே இவர்களுக்கு விருப்பம்!
இவர்களின் குடியிருப்புகளுக்குப் போனால் அன்போடு வரவேற்பார்கள். நல்ல வெள்ளந்திச் சிரிப்பு !!! இவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஹிந்தி பேசுவார்கள்! ஆனால் ஃபிஜியன் மொழி பேசும் இந்தியர்கள் வெகு அபூர்வம்! எல்லோரையுமே 'கைஸே பெஹனி, கைஸே பையா ( எப்படி இருக்கின்றீர்கள் சகோதரி/சகோதரா) என்றே சம்பாஷனையை ஆரம்பிப்பார்கள்.
இன்னும் வரும்
******************
Posted by
துளசி கோபால்
at
10/04/2004 11:18:00 AM
2
comments
Friday, October 01, 2004
கரும்புத் தோட்டத்திலே !!!!
'பாரதி' யின் கரும்புத் தோட்டத்திலே படித்திருக்கின்றீர்களா?
ஃபிஜித் தீவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்களல்லவா? இவர்களில் மூன்று பிரிவினர் உண்டு.தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்.
இவர்களில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை, 'மந்த்ராஜிகள்' என்று மற்ற பிரிவினர் குறிப்பிடுகின்றனர். வட இந்தியர்களை 'குருவிக்காரங்க' என்று நம் 'மந்த்ராஜிகள்' கூறுவார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்களை உலகம் பூராவும் எல்லா இடத்திலும் சொல்வதுபோலவே 'குஜ்ஜுஸ்' என்றும், நேடிவ் ஃபிஜி ஆட்களை, நம்ம ஆளுங்க எல்லாம் 'காட்டுப் பூச்சி' என்றும் சொல்வார்கள்.
எல்லாம் மறைமுகமாக, ரகசியமாகத்தான். ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம்.
நம் தமிழ் ஆட்கள் தங்களோடு கூடவே தம் கடவுளர்களையும் கொண்டு வந்துவிட்டனர்.
இங்கே 'ம்பா' என்னும் இடத்தில் உள்ள 'மாரியம்மன் கோயில்' மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆடிமாதத்தில், 'தீமிதி' உண்டு. தீமிதித் திருவிழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, தீயில் இறங்கும் ஆட்கள் அனைவரும் காப்புக் கட்டிக்கொண்டு விரதம் அனுஷ்ட்டிப்பார்கள். உணவு, உறக்கம்எல்லாமே கோவிலில்தான். கரகம் ஒன்றை அல்ங்கரித்து, தினமும் மேளதாளத்துடன் (சுத்தி இருக்கற பதினெட்டுப் பட்டி) கிராமங்களுக்குப் போவார்கள். அங்கங்கே கிராம மக்கள் , கிரகத்துக்கு கற்பூரதீபம் காட்டி, பிரசாதங்களை வைத்துப் பூஜித்து அந்தக் குழுவினருக்கு வழங்குவார்கள். வீடுவீடாகஇந்தக் கரகமும், தீமிதிக்கும் குழுவினரும் போவார்கள். இங்கே ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே கரும்புத் தோட்டங்கள் காணப்படும்! ஏழெட்டு வயதுமுதல், முதியோர்கள்வரை இந்த தீமிதிக்குழுவில் இருப்பார்கள். அட்டைகளால் செய்யப்பட்ட ஒரு உருவம் 'மெகா சைஸஸில்' கூடவே வரும்! அதற்குள்ளே ஒரு ஆள் இருந்து அதைச் சுமந்துகொண்டு வருவார்!
மாரியம்மன் சிலையும் சும்மா பெரிதாக 'லைஃப் சைஸ்'ல் இருக்கும். நல்ல நைலக்ஸ் புடவை உடுத்தியிருக்கும் சாமி சிலைகள் எல்லாம். களிமண் கொண்டு பூசிய சிலைகள். கண்கள், முகம் எல்லாம்பெயிண்ட் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருக்கும்.
தெருக்கூத்து நாடகமும் உண்டு! ஒரே கதைதான். அசுரனைக் காளி நிர்மூலம் செய்தது! கட்டியங்காரர்,விதூஷகர் எல்லாமும் உண்டு. தமிழும் ஹிந்தியும் கலந்துதான் நாடக வசனக்கள் இருக்கும்.
பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேசுவார்கள். இப்போதுள்ள தலைமுறையினர், தாங்கள் மந்த்ராஜிகள்தான் என்றும் தாத்தா, பாட்டிதான் மந்த்ராஜி பேசுவார்கலள் என்றும் இவர்களுக்குத் தெரியாது என்றும் ஹிந்தியில் சொல்வார்கள்.
சுமார் 150 வருடங்களுக்கு முன்பூ 'ப்ரிட்டிஷ்' காரர்களால் கரும்புத் தோட்டத்தில் கூலிவேலை செய்யக்கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள்.
இன்னும் வரும்
****************
Posted by
துளசி கோபால்
at
10/01/2004 01:54:00 PM
5
comments
