Friday, August 18, 2023

இப்படி விழாக்கள் வரிசை கட்டி நின்னால் எப்படி ?

பெரும்பாலும் ஒரு நாள் முன்னே பின்னேதான் என்றாலும் சிலசமயம்  அபூர்வமா ஒரே நாளில் வர்றதும் உண்டு. அப்படியான நாளில் எனக்கு  வேலை மிச்சம் :-) இந்த முறை அடுத்தடுத்த நாட்களில்தான்.....தமிழ் வருஷப்பிறப்பும் விஷூவும்.  விஷூக்கணியை ரெண்டுநாட்களுக்கும் சேர்த்தே ஒருக்கணும். 

முதலில் நம்ம ஜன்னுவுக்கு ஒரு புது உடை மாத்தணும்.  ஈக்கோ கடையில் ஒரு அலங்காரப் பாவாடை (காக்ரா ஸ்டைல் )மட்டும் கிடைச்சது. அது ரொம்பவே பெரிய சைஸ்.  பத்து வயசுப் பொண்ணுக்குச் சரியா இருக்கும். நம்மளவள் மூணு வயசுக்காரிதான் ! 
அதனால் பெரிய பாவாடையை வெட்டித் தைச்சேன்.  பாவாடை & சட்டை போக மீதம் வந்த துணியில் நம்ம  கிச்சுப்பாப்பாவுக்கும் ஒரு உடுப்பு ஆச்சு. அவனுடைய குட்டிப்பாப்பாவுக்கும் ஒரு உடுப்பு ஆச்சு :-) எல்லாமே சுமாரா நல்லா அமைஞ்சு போனதில்  மகிழ்ச்சி.  நம்மளவந்தான் எனக்கொன்னும் இல்லையா என்னும் பார்வையோடு மிஷின் ரூமில் எனக்குக் கம்பெனி கொடுத்துக்கிட்டு இருந்தான் :-)

விசேஷதின அலங்காரங்கள் எல்லாம்,  முந்தி  வீட்டு முன்னறையில் செஞ்சுக்கிட்டு இருந்த இடத்தில் Bபாலி புள்ளையார்  நிரந்தரமா இடம் புடிச்சுக்கிட்டதால்  இப்பெல்லாம் பூஜை அறையிலேயே செஞ்சுக்கும்படி ஆகிப்போச்சு.  போகட்டும் இதுவும் நல்லதுக்கே !
தமிழ்வருஷப்பிறப்புக்குக்  கணிகண்டால் ஆகாதா என்ன ?  அம்பலப்புழா க்ருஷ்ணன் ஒன்னும்  சொல்லமாட்டாந்தானே ? பழங்களும் , ஸேமியா ஜவ்வரிசிப் பாயஸமும்தான் ஸ்பெஷல்.  மாய்ஞ்சு மாய்ஞ்சு சமையல் செய்த காலமெல்லாம் போச்சு.   வயசாக ஆக ஆண்களுக்கும் வயிறு சுருங்கிருது இல்லே ? 
உள்ளூர் இந்தியன் துணிக்கடையில் ஹரிக்கு ஒரு ரெடிமேட் சுடிதாரும், நம்ம ஜன்னுவுக்கு ஒரு பஞ்சாபி ஸ்டைல் ஸல்வார் கமீஸும் வாங்கிப் பூஜையில் வச்சாச். 

எது குறைஞ்சாலும்  கைநீட்டத்தை விட்டுருவோமா என்ன ?  இப்பக் கூடுதலா ஒருத்தர் வந்துட்டார் :-) 
சாயந்திரம் நம்ம செல்லப்புள்ளையார் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்புப் பூஜை. நம்ம ஊருக்கு அருகம்புல் அத்தாரிட்டி  நாம்தானே?  ஒரு மாலை கட்டி வைச்சேன். கோவிலே நமக்கு மஹாப்ரஸாதம் கொடுப்பதாகச் சொன்னதால் வேறொன்னும் சமைச்சுக் கொண்டு போகலை. கொஞ்சம் பழங்கள் மட்டும்தான்.   நம்ம செந்தில்தான் கேட்டரிங் !

நம்ம செல்லப்புள்ளையார் கோவில் வாரம் ஏழுநாட்களும் மாலை 7 முதல் எட்டரை வரை தரிசனத்துக்கு திறந்திருக்கும். இது போல விசேஷ நாட்களில் அந்த எட்டரை என்பது பத்துமணி வரை கூட நீண்டு போகும் வாய்ப்பு உண்டு. எல்லாம் வர்ற பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான்.



இன்றைக்குப் புள்ளையாருக்கு  அபிஷேகம் செய்யறோம். நம்ம நேபாளி பண்டிட்தான் விஸ்தாரமா அபிஷேகம் செய்வார். பால் அபிஷேகம் செய்யும் நேரம்  வந்தவுடன்,  வரும் பக்தர்கள் அனைவருக்கும் பால் அபிஷேகம் செய்ய வாய்ப்பு கொடுக்கிறோம். ரொம்ப நல்லதுதான், இல்லே !


விசேஷ அம்சமா, எல்லாக் குழந்தைகளுக்கும்  கைநீட்டம் கொடுத்தோம்.  புள்ளையார் தந்த காசுன்னதும் பசங்களுக்கு ரொம்பக் கொண்டாட்டம்.



மறுநாள் விஷூ. நம்ம வீட்டுலே  நைவேத்யம் மட்டுமே வேற.  ட்ரை ஃப்ரூட்ஸும், சாக்லெட்டும் போதுமுன்னு சொல்லிட்டான் க்ருஷ்ணன்.
அன்றைக்கு சனிக்கிழமையா இருந்ததால் வழக்கம்போல் ஹரே க்ருஷ்ணா தரிசனமும் ஆச்சு! ஆனால்  பகல் தரிசனம்.  மதியம் ஒரு மணிவரை இஸ்கான் கோவில் திறந்திருக்கும்.  
இங்கெ நிறைய நிகழ்ச்சிகளை வீக்கெண்டுக்குன்னு  நேர்ந்து விடுவதால்....  மாலை ஆரத்திக்குப் போகமுடியாத நாட்களில் பகல் தரிசனத்துக்குப் போய் வர்றதுண்டு.

ஆமாம்.... இன்னைக்கு வேறென்ன கொண்டாட்டம் ? 
நம்ம தமிழ்ச்சங்கத்தின்  தமிழ்ப் புத்தாண்டு விழாதான் !  நம்ம வழக்கப்படி ஒருமணி நேரம் தாமதமாகத்தான் விழா ஆரம்பிச்சாங்க. சுமாரான கூட்டம்தான் இன்றைக்கு.  
இந்த ரெண்டு வருஷங்களா, இந்தியத்தமிழர் ஒருவர்தான் சங்கத்தின் தலையாக இருக்கார். போட்டிகள் எல்லாம் குறைஞ்சுருக்கு.  ஆரம்ப காலத்துலேயே   விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான்  தமிழ்நாட்டுத் தமிழர்கள் !   பெரும்பாலான அங்கங்கள்  இலங்கை மக்கள் என்பதால்..... தலைமையிடத்துக்கான போட்டியில்   கொஞ்சம் விரும்பாதவைகள் நடந்து போச்சு.   1994 இல் இந்தத் தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதால்   எனக்குக் கொஞ்சம் மனவருத்தம்  வந்ததெல்லாம் உண்மை.  

இந்த கலாட்டாவால்தான்,  அப்புறம் அங்கங்களாச் சேர்ந்த  இந்தியத் தமிழர்கள் பலர், இங்கிருந்து பிரிந்துபோய்  'இண்டியன் தமிழ் அசோஸியேஷன்' ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே மொழியாக இருந்தாலும்  மொழிக்காக ஆரம்பிச்சதில்,  பிரிவு வந்ததுருச்சு.....  ப்ச்....

ஒரு பதினாலு ஆண்டுகள், கலை கலாச்சார ஒருங்கமைப்பாளராக இருந்தபோது  பல தலைகளின் கூடப் பொறுப்பை  ஏற்று நடத்திய  அனுபவம்  நமக்கு இருக்கே !  நம்ம ஆட்சியில்தான்  சங்கத்தின் பேனர் தயாரித்தோம்.  திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு நண்பரின் உதவியால் இந்த வேலையை முடித்துக்கொடுத்தேன். இந்த பேனரைப் பார்த்தவுடன்தான்  கடந்த கால சம்பவங்களின் நினைவு ,    கொசுவத்தியைப் பத்தவச்ச மாதிரி   (ஃப்ளாஷ்பேக்) எனக்கு எப்பவும்  வந்துரும்.  இதுவரை வெளியில் புலம்பாததை இன்றைக்குச் சொல்லிட்டேன்...... 

வழக்கம்போல் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நடனம், பாட்டு, பேச்சுன்னு எல்லாம் ஆச்சு.  மணப்பாறை மாடு கட்டி அட்டகாசமாக இருந்துச்சு . ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன்.  விரும்பினால் இந்தச் சுட்டியில் பார்த்து மகிழலாம் 

https://fb.watch/mtx6bDyIqG/


தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப்  பத்து ஆண்டுகள் பொறுப்பேற்று நடத்திய நண்பர்,  இன்று பள்ளிப்பொறுப்பை விட்டு விலகுகிறார். இத்தனை ஆண்டுகள் அவர் செய்த சேவையைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.  
விரும்பினால் தமிழ்ச்சங்க நிகழ்வுகளை இங்கே ஃபேஸ்புக்கில்  பார்க்கலாம்.

https://www.facebook.com/CanterburyTamilSociety

வழக்கமா எங்க தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு நாங்க எல்லோருமே 'பாட்லக்' வகையில் ஏதாவது சமைச்சுக்கொண்டு போவோம். இந்த முறை டின்னர், சங்கமே கொடுப்பதாக அறிவிச்சுருந்தாங்க. நம்ம தோழி ஒருவர் ரெஸ்ட்டாரண்டு நடத்தறாங்கன்னு சொல்லியிருந்தேனே... அவுங்கதான் ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க.   தமிழருக்குப் பிடிச்ச பரோட்டாவும், வெஜிடபிள் குருமாவும், சாம்பாரும்  ! சாம்பாருக்கான சோறு மட்டும்,  சங்கம் சமைக்கிறதா இருந்து, எப்படியோ  மறந்துட்டாங்க :-)   

போகட்டும்....

'தமிழன் சோற்றாலடித்தப் பிண்டமா'கவே எப்போதும் இருக்கணுமா என்ன ? 

ஹாஹாஹாஹா    



2 comments:

said...

கொண்டாட்டங்கள் அருமை.

said...

வீட்டு விழாவும் செல்லப் பிள்ளையார் அபிஷேகமும் , தமிழ் சங்க விழா என கொண்டாட்டங்கள் அருமை.

ஜன்னு புது உடுப்பில் ஜொலிக்கிறாள்.