Wednesday, February 17, 2021

சரித்திரத்தில் இடம் புடிச்ச பொட்'டீ'க்கடை !

எங்க பாட்டி ( கொள்ளோ, எள்ளோ ! )  இங்கே பொட்'டீக்கடை' வச்சுருந்தாங்க. அவுங்க சேவையைப் பாராட்டி  நினைவு மண்டபம் கட்டப்போறோம்னு இப்ப ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னே பாட்டியின்   வம்சாவழியினர்,  நகரசபை உதவியுடன்  கட்டி விட்டு, அதை   உள்ளூர் மேயர் வந்து திறந்து வச்சுருக்கார் ! 

இங்கிலாந்துலே  பொறந்த ரோஸ் ஆனி, தன்னுடைய பதினோராவது வயசுலே,  அப்பா அம்மாவோடும், கூடப்பொறப்புகள்னு இன்னும் நாலு பேரோடும் கண்காணா தேசத்துக்குக் கப்பலில் வந்து இறங்கினாங்க.  

இங்கிலாந்தில்,  அப்போ 'நியூஸிலாந்து  கம்பெனி'ன்னு ஒன்னு ஆரம்பிச்சு,  தொலைதூரத்துலே இருக்கும் நாட்டுக்கு இடம் மாறிப்போக ஆட்களைப் புடிச்சுக்கிட்டு இருந்த காலம்.   இப்ப அஸ்ட்ராலியா, கனடா, நியூஸி போகணுமா? ன்னு  விளம்பரம் பண்ணிக்கிட்டு இருப்பதைப் பார்க்கறீங்கதானே ?  அதுவும்' படிக்கப்போறேன்னு  போங்க. ஸ்டூடண்ட் விஸா சுலபமாக் கிடைச்சுரும். அப்படியே  படிப்பு முடிஞ்சதும் (! ) மூணு வருஷ  ஒர்க்கிங் விஸா கொடுத்துருவாங்க.  வேலை ஒன்னு தேடிக்கிட்டு நிம்மதியா இருந்துடலாம்' னு  மக்களை ஏமாத்தும் ஏஜெண்டுகளைப் போல இல்லாமல்,  'கப்பலில் போக, அங்கே  விவசாயம் பண்ணிக்க இடம் வாங்க  இவ்ளோ காசு கட்டுங்க.   கொண்டுபோய் இறக்கிருவோம். அங்கே நம்ம கம்பெனி ஆளுங்க உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாங்க 'ன்னு சொன்னதை நம்பி வந்தவங்கதான்.  தேனும் பாலுமா ஓடுதுன்னு சொல்லி இருப்பாங்களோ ?
 
உள்நாட்டு சனமான மவொரிகளுடன் சண்டை எல்லாம் போட்டு, ' அப்புறம் சண்டை ஒத்து நைனா, சமாதானங்காப் போத்தே மஞ்சிதி'ன்னு   1840 ஆம் வருஷம்  மவொரிகளுடன்  ஒப்பந்தம் போட்டு ( வைட்டாங்கி  என்ற  இடத்தில்  நடந்த நிகழ்வு . வருஷாவருஷம் வைட்டாங்கி டேன்னு  ஃபிப்ரவரி ஆறாம் தேதி அரசு விடுமுறை உண்டு !)  நியூஸியில் இடம் புடிச்சு உக்கார்ந்துக்கிட்ட பிரிட்டிஷ் அரசின் காலனிகளுக்கு மக்களைக் கொண்டுவர ஆரம்பிச்சதெல்லாம் அப்போதான். இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிஞ்சக்கணுமுன்னா.... சந்தியா பதிப்பகம் வெளியிட்ட  நியூஸிலாந்து என்னும்  புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம் !  (எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான் ஹிஹி.... )
ஆமாம்...  ரோஸ் ஆனியை அம்போன்னு விட்டுட்டு இது என்ன  பேச்சு இங்கே ? வாங்க 1876க்கே போகலாம்.  ஒருவழியா குடும்பம் செட்டில் ஆகி, புள்ளைகள் எல்லாம் வளர்ந்துட்டாங்க. ஆச்சே பனிரெண்டு வருஷம்!   பசங்க பெருசாக ஆக  இவுங்களைப் போலவே இடம்மாறி வந்த பிரிட்டிஷ் குடும்பங்களோடுதான்  சம்பந்தம் பண்ணிக்கிட்டு கல்யாணம்,காட்சின்னு நடத்திக்கிட்டு இருந்துருக்காங்க, மக்கள். 

வில்லியம் ரேனால்ட் என்ற வரனுக்கும் ரோஸ் ஆனி என்ற வதுவுக்கும்  1888லே  லீஸ்டன் என்ற ஊரில் இருக்கும் சர்ச்சுலே  கல்யாணம் ஆச்சு.  ரெண்டுபேருக்கும் அப்போ வயசு 23. 

மெயின்லேண்ட் என்னும்  கேன்டர்புரி  பகுதியின் இன்னொரு பாகமான ஆக்ஸ்போர்டில்  ரெண்டு பிள்ளைகளுடன் ஒரு பனிரெண்டு  வருஷம் போயிருச்சு !   மாமியார் வீடாக இருந்துருக்குமோ ?

எல்லாம் இப்போ நாம் இருக்கும் கிறைஸ்ட்சர்ச் நகரத்தில் இருந்து ஒரு அம்பது மைல் சுற்றளவில் இருக்கும் இடங்கள்தான்.  குதிரை வண்டிகளுக்குப் பஞ்சமா என்ன ? வீட்டுவீட்டுக்கு  இருந்துருக்கே இந்தக் குதிரைக்கார் !  ரொம்பப் பணக்காரர்கள்தான்  நெசமான கார் வச்சுருந்தாங்க. !

  (நியூஸியில் ஒன்னு கவனிச்சீங்கன்னா... இங்கிலாந்துலே இருக்கும் ஊர்களின் பெயர்கள்தான் இங்கேயும் இருக்கும். அங்கிருந்து வந்த மக்கள், புது இடங்களுக்குப் பெயர் வைக்கும்போது தெரிந்த, பரிச்சயமான பெயர்களைத்தானே வைக்க முடியும் , இல்லையோ ? இன்னும் சில இடங்களுக்கு நியூன்னு அடைமொழி சேர்த்து வச்சுருவாங்க. நியூஸீலேண்ட் கூட இப்படித்தான். ஸீலேண்ட்க்கு நியூ சேர்த்தாச்! ) 

 
இந்த ஆக்ஸ்ஃபோர்டில் இருந்துஒரு நாலு மைலுக்கு அந்தாண்டை ,  மலையையொட்டி இருக்கும் பள்ளத்தாக்கில் ஒரு ஆறு ஓடிக்கிட்டு இருக்கு. ஆஷ்லி ரிவர்னு பெயர். இந்தப் பகுதியை சனம் பிக்னிக் ஸ்பாட்டாப் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க.
நம்ம ரோஸ் ஆனி ரேனால்ட், 1920லே  அங்கே ஒரு சின்ன காட்டேஜ் கட்டிக்கிட்டுக் குடிபோனாங்க. அக்கம்பக்கம் இருக்கும் வளமான இடத்தில் பூச்செடிகள், மரக்கன்றுகள் எல்லாம் நட்டு இன்னும் செழிப்பா அழகா மாத்துனது இவுங்கதான். கடும் உழைப்பாளி.  இப்பக் கணக்குக்கு நூறு வருஷங்கள்  ஆனாலும் சிலபல செடிகள்  இன்னும் பூத்துக்குலுங்குது. எலுமிச்சை மரங்கள் இன்னும் காய்க்குதாமே ! 

சனம் வண்டிகட்டிக்கிட்டு வந்து இந்தக் காட்டையொட்டி மலைஅடிவாரத்தில் ஓடும் நதியாண்டை வீகெண்டில் வந்து தங்கி, ஆத்துலே குளிச்சு, ஆக்கித்தின்னுன்னு  இருந்துருக்கு.  வர்ற சனம் ரெண்டுநாளுக்குத் தேவையான எல்லாத்தையும் மறக்காம மூட்டைக்கட்டிக்கிட்டு வரமுடியுமா?
எப்படிப்பார்த்தாலும் ஒன்னுரெண்டு சாமான்களை  மறந்துறமாட்டாங்க ? 
மிஸஸ். ரேனால்ட் (நம்ம ரோஸ் ஆனி) பிஸினஸுக்குள் நுழைஞ்சது அப்போதான்.  வீட்டுலேயே  பொட்டிக்கடை ஒன்னு ஆரம்பிச்சாங்க.  சனி ஞாயிறு மட்டும்தான் வியாபாரம்.  பழம், பிஸ்கெட், சாக்லெட் முக்கியமா சிகரெட், பைப்புலே வச்சுப்புடிக்க புகையிலைன்னு  வாங்கி வச்சாங்க.  கூடவே காஃபி, டீ, சிம்பிளா கொஞ்சம்  வீட்டுத்தயாரிப்புத் தீனி வகைகள்.....  பிஸினஸ் பிச்சுக்கிட்டுப் போச்சு! 
அட!  அப்போ  ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் படித்துறை போல !


சும்மா வர்ற சனத்துக்குக் கூட,  ரொம்ப ஆழமில்லாம அழகா ஓடும் ஆத்தைப்பார்த்தா, இறங்கிக் குளிக்கத் தோணுதே !

 அச்சச்சோ.... குளிக்கிறப்போ போட்டுக்கற உடுப்பைக் கொண்டு வரலையே.... 

அந்தக் காலத்துலே பிக்னிக் வரும்போது போட்டுக்கிட்டு வர்ற ட்ரெஸைப் படத்துலே  பாருங்க !

 நோ ஒர்ரீஸ்......  மிஸஸ் ரேனால்ட் 'கடை' யில் வாங்கிக்கலாம்.  வெறும் அஞ்சு ஷில்லிங், ஆறு பென்ஸ்தான்!

நியூஸியில்  அப்போ கரன்ஸிகூட பவுண்ட், ஷில்லிங் , பென்ஸ்தான்.  இப்போ 1967 இல் தான்  டாலர், சென்ட்டுன்னு  டெஸிமல் கரன்ஸிக்கு மாறினாங்க.

எங்கெயோ பிறந்து, எங்கெயோ இடம் பெயர்ந்து வந்து , வந்த இடத்திலும் ச்சும்மா உக்காராமத் தன் உழைப்பால் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்திய மிஸஸ். ரேனால்ட், தனது 72 வது வயசில் கடைசியா சாமிக்கிட்டே போனாங்க.  அவுங்க கல்லறை இங்கே நம்மூரில்தான் இருக்கு!

அவுங்களுக்கு அப்புறம்  'கடை' என்னாச்சுன்ற விவரம் இல்லை. புள்ளைங்க வளர்ந்து பெரியவங்களாகி அவுங்கவுங்க வாழ்க்கை முறையை, அவுங்கவுங்க விருப்பப்படி மாத்திக்கிட்டு இருந்துருப்பாங்க, இல்லே ?

அந்த ஆஷ்லிகார்ஜ் இடம் இப்போ 25 ஏக்கரில் பெரிய ஹாலிடே பார்க்கா மாறி இருக்கு.  சின்னதும் பெரியதுமா அறைகள் எல்லாம் கட்டிவிட்டுருக்காங்க. நம்மாண்டையே கேம்பர் வேன், இல்லே கூடாரம் இருக்குனா, இடத்துக்கு மட்டும் சின்னதா ஒரு  வாடகை கொடுத்துட்டு அங்கே போய் தங்கிக்கலாம்.

பொதுவா இங்கத்துக் கோடைகாலம், பள்ளிக்கூட விடுமுறை காலங்களில் எல்லாம்  சனம் நிறைஞ்சு வழியும் இடங்களில் ஒன்னா ஆகி இருக்கு! 
அக்கம்பக்க சனம், ஒருநாள் அவுட்டிங்காப் போய் வர்றாங்க. 

நாமும் இப்படித்தான்.  முந்தியெல்லாம் அடிக்கடி போய் வர்ற நாம், இப்போ ஒரு  20  வருசங்களா அந்தப்பக்கம் போகவே இல்லை. நம்ம எதிர்வீட்டுலே  இருக்கும் மரங்கள்,  நம்மூட்டுப்  புழக்கடையில் இருந்து பார்க்கும்போது, அசப்பிலே ஆஷ்லிகார்ஜ் மரங்கள் போலவே  இருக்கும்!  அடடா.... ஆஷ்லிகார்ஜ் போய் எவ்ளோ நாளாச்சுன்னு நினைக்கறதுதான். 
கீழே படம் : எதிர்வீட்டு மரங்கள்
அதான் ஒருநாள் லஞ்சுக்குப்பிறகு சட்னு கிளம்பிப்போனோம். நம்ம வீட்டில் இருந்து 71.7 km தூரம். நதியாண்டை  பள்ளத்தாக்கைக் கடந்து போக பெரிய பாலம் இருக்கு!  முதலில் பாலத்துக்கு  வலப்புறமா இறங்கிப்போய்  கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு, அப்படியே 'நம்ம ரஜ்ஜு சட்னி அரைச்சுக்க  ஒரு அம்மிக்கல்லை'யும் ஆத்துலே இருந்து எடுத்துக்கிட்டேன். அப்புறம் பாலம் கடந்து  அந்தாண்டை ஒரு நாலைஞ்சு கிமீ தூரத்தில் இருக்கும் ஹாலிடே பார்க் போனோம். 







பிக்னிக் வந்த சனம் தண்ணியிலும், கரையிலுமா இருந்துச்சு.
காட்டுக்குள் (! )கொஞ்ச தூரம் நடந்தால் புதுசா ஒரு  மரக்கூடாரம்  கட்டி இருக்காங்க. என்ன ஏதுன்னு கிட்டப்போய்ப் பார்த்தப்பதான் 'மிஸஸ் ரேனால்ட்' பற்றிய விவரம் கிடைச்சது ! 





என்னங்க வேணும் ?  ரெண்டு இட்லி, ஒரு வடை


உள்ளுர் நியூஸ் பேப்பரில் கூட அப்போ இவுங்களைப்பற்றிய சேதிகள் வந்துருக்கு ! சில விஷமிகள், இவுங்க 'கடை'யைக் கூட விட்டுவைக்காம ஆட்டையைப் போட்டுருக்காங்க. ப்ச்.....    
ஆனால் ஒரிஜினல் காட்டேஜ் இருந்த இடத்தில், அதே அமைப்பில் சிறைக்கைதிகளின் உடலுழைப்புடன் இப்போ கட்டி விட்டது அருமை.  அந்தக் காலத்தில் செஞ்ச சின்ன நல்ல விஷயங்களைக்கூட, மறக்காமல் நன்றி செலுத்துறது  ரொம்பவே பாராட்டப்படவேண்டிய அம்சம் இல்லையோ !  
 

9 comments:

said...

பொட்டீக்கடை தரிசனம் ஆச்சு.

நீங்க ஆற்றில் குளித்தீர்களோ இல்லை அதிகவேகமா தண்ணீர் ஓடுதா?

said...

Mam super narration. Arumai arumai

said...

சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனித்துச் செய்வது மிகச் சிறப்பு.

தகவல்கள் அனைத்தும் நன்று.

said...

அம்மிக்கல் -
சுட்டது நீங்க,
பழியோ ரஜ்ஜு மேல, ம்ம்ம்

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தண்ணீர் சாதாரண வேகம்தான். ஆற்றில் குளிக்கும் பழக்கம் எல்லாம் ஆத்தூர் (மதுரை)யோடு போயே போச்.

said...

வாங்க எழுத்தாணி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அடுத்தவன் புகழைத் திருடத்தெரியாத சனம்:-)



வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்,

பழி ஓரிடம் பாவம் ஓரிடம்னு ஒன்னு இருக்குல்லே ? ஹாஹா

said...

இப்படி செய்வது சிறப்பு.