Wednesday, May 04, 2016

குறையொன்றும் இல்லை... கண்ணா....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 29)

காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து ஊருக்குள் நுழையும்போது  மணி சரியா 1.55.   நேத்து ஃபோன் மூலம் புக் பண்ணி வச்சுருந்த ஹொட்டேலுக்குப் போய் சேர்ந்தோம். ஏற்கெனவே வந்து தங்குன இடம் என்பதால் பிரச்சனை இல்லை. ஜிஆர்டி தான்.  ஹொட்டேல் மெயின் ரோடில் கொஞ்சம் உள்ளடங்கி இருக்கு. போறவர்ற வழிதான் ரொம்பவே இடுக்கம்.

அறைக்குப்போய் ஜன்னல் திரைச்சீலையைத் திறந்ததும் சமையல் ஏற்பாடுகள் நடப்பது தெரிஞ்சது:-)  சமையலுக்கான காய்கறிகளையும், சாப்பாட்டுக்கான வாழை இலைகளையும், வட்டத் தட்டின் உள்ளே வைக்கும் வாழையிலை துணுக்குகளை வட்டம் போடுவதையும்  கொஞ்சம் க்ளிக்கினேன். பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  ஆஞ்சி உறவினர்கள்  வந்து  காலிஃப்ளவரை தேர்ந்தெடுத்துத் தின்ன ஆரம்பிச்சாங்க.


மணி ரெண்டரையாகுது,  முதல்லே போய் சாப்பிடலாமுன்னு  நம்மவர்  சொன்னதும், சீனிவாசனை வரச்சொல்லிட்டு  மூணுபேரும் இங்கேயே இருக்கும்  ரெஸ்டாரண்டுக்குச் சாப்பிடப்போனோம். இங்கே பக்கத்துலேயே ஒரு நாலைஞ்சு கடை தள்ளி  இடதுபக்கம் கொஞ்சம் உள்ளே போனால் சரவணபவன் இருக்கு.  சரியாச் சொன்னால் இந்த ஜிஆர்டியின் பின்பக்கம்தான் அது.  அங்கே காய் நறுக்குவதைத்தான் நம் அறையில் இருந்து பார்க்க முடியுது!   'அங்கே இந்நேரம்  கூட்டம் அதிகமா இருக்குமுன்னுதான் இங்கேயே சாப்பிடலாமுன்னு சொன்னேன்'னார் நம்மவர்.  பஃபே லஞ்சுதான்.  ஆனால் சுமாராத்தான் இருந்துச்சு.  வகைகள் அதிகமே தவிர  எல்லாம் பார்க்கும்போதே ரொம்ப உறைப்புன்னு தோணல்.  மேலும் வெஜிடேரியனுக்கான ச்சாய்ஸ் ரொம்பவே கம்மி:-(

காஞ்சி வந்ததுக்குக் காரணம் ஒன்னே ஒன்னுதான்.  பட்டுப்பொடவையா?   ஊஹூம்....   பாண்டவதூதன் மட்டுமே! முந்தியெல்லாம் காஞ்சீபுரம் வந்தாலே  வரதராஜன், உலகளந்தான், காமாக்ஷி, ஏகாம்பரேஸ்வரர்  இத்துடன் கோவில் விஸிட் முடிஞ்சுரும்.  ஹாஸ்டல் தோழி ஸ்ரீமதியுடன் அவுங்க வீட்டுக்கு வீகெண்ட் விஸிட் போனால்  வரதராஜன் மட்டுமே பெரும்பாலும். அவுங்களுக்கு பூஜை விஷயத்தில் பாத்தியதை உண்டு. தோப்பனார் பட்டர்ஸ்வாமிகள்!  ஒருமுறை நானும் அவளுமா கயிலாசநாதர் கோவிலுக்குப்போய் வந்தோம். அப்படியே சங்கரமடத்துக்கும்தான். வீட்டுக்குத் தெரியாமல் போனது தனிக்கதை:-)

இந்த நூத்தியெட்டு தரிசிக்க ஆரம்பிச்சதும்தான்  காஞ்சியிலேயே பதினைஞ்சு கோவில் இருப்பதே தெரியவந்தது! சிலவருசங்களுக்கு முன்னால்  இதே ஜிஆர்டியில் தங்கி எல்லாத்தையும்  பார்த்து வந்து  எழுதியும் ஆச்சு.  மார்கழியில் போனதால்  நிறையக் கோவில்களில்  மூலவர்  திரைக்குப்பின் தைலக்காப்பில் ஒளிஞ்சுருந்தார். அவர் நம்மைப் பார்த்தால் போதும் என்று மனசை சமாதானப்படுத்திக்கிட்டாலும் பாண்டவருக்காகத் தூது போனவனை அப்படி விடமுடியலை.

இருபத்தியஞ்சு அடி உசரம்! ஹம்மா..... எப்படி இருப்பான், எப்படி இருப்பான்னு  பலநாட்கள் யோசிச்சிருக்கேன். வாங்க முதலில் அவனைப் பார்த்துட்டே வந்துடலாம். கோவிலாண்டை போகும்வரை கதையைச் சொல்லிட்டால்  எனக்கு ஈஸி:-)

காஞ்சிபுரத்தில்  நம்ம ஏகாம்பரேஸ்வரர் கோவிலை  நடுமையமா மனசில் வச்சுக்கிட்டீங்கன்னா....  இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும்  கோவில்கள் எல்லாம்   ரொம்பப்பக்கம்தான். எல்லா திசையிலும்  ஒரு ஒன்னு ஒன்னரை கிமீ தூரத்துக்குள்ளேயே அமைஞ்சுருக்கு.

திருப்பாடகம் என்ற பேட்டையில் இருக்கார் நம்ம பாண்டவதூதர். வனவாசத்தை முடிச்சுட்டு வந்த பாண்டவர்கள் ,  இனி எங்கே போய் வசிப்பது என்ற கவலையுடன் இருக்காங்க. ராஜ்ஜியம் மீண்டும்  கிடைக்க வழி ஒன்னும் இருப்பது போல் தெரியலை.  வஞ்சகமா சூதாட்டத்தில்  தருமனை (யுதிஷ்ட்ரன்)  இழுத்து  அவன்  பங்கு ராஜ்ஜியத்தையும் கவர்ந்து, அதன்பின்  அவன்  மனைவி, தம்பிகள் எல்லோரையும்  அடிமைகளாக்கிக் காட்டுக்கு விரட்டுன  துக்கத்தையும் அவனால் மறக்க முடியலை.

இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும்  திருப்பிக் கொடுக்க  துரியோதனன்  தயாரா இல்லை. அதெப்படி...  அப்படியா  ரூல்ஸ் இருந்தது? பகடை விளையாட்டில்  பணயம் வச்சு  தோத்துப்போனதை  திரும்பித்தர முடியாது.  நிபந்தனைப்படி வனவாசம் முடிச்சு வந்தபின்  சுதந்திர மனிதரா  இருக்கலாமே தவிர   மீண்டும்  எதையும் திருப்பிக் கேக்க  முடியாதுன்னான். இது என்னவோ உண்மைதான்! நாட்டை ஒத்திக்கு வச்சுட்டாப் போனாங்க? 

பேசாம  கௌரவர்களோடு போர் செஞ்சு அவுங்களைத் தோற்கடிச்சுட்டு நம்ம பங்கு ராஜ்ஜியத்தை மீட்டுக்கலாமுன்னு தருமரின்  தம்பிகள் வற்புறுத்தறாங்க.  ஐயோ.... யுத்தமா?  சொந்தக்காரங்ககூட சண்டை எப்படி? ரெண்டு பக்கத்திலும் உயிர் இழப்பு  ஆகுமேன்னு  தருமனுக்கு  தவிப்பு.

ஸ்ரீ க்ருஷ்ணனிடம்  யோசனை கேட்கறாங்க.  எங்க ஐவருக்கும் அஞ்சு கிராமம் கிடைச்சாலும் போதும். சண்டை வேணாமுன்னு  தருமன்  சொல்ல,  'துரியோதனன் அப்படியெல்லாம் கொடுத்துரமாட்டான்.  சண்டை போட்டுத்தான்  இழந்ததை மீட்கணும்.  ஆனால் எதுக்கும்  ஒரு தூதனை அனுப்பி  எங்களுக்கு அஞ்சு கிராமம் கொடுத்தால் நாங்க எங்க பிழைப்பைப் பார்த்துக்கறோம்.  நமக்குள் யுத்தம் வேண்டாம் என்று சொல்லிப் பார்க்கலாம் ' என்றான் க்ருஷ்ணன்.

அப்ப சரி. எளிதில்  உணர்ச்சிவசப்பட்டு ஏடாகூடமாகப்பேசி நிலைமையை மோசமாக்காத  நல்ல தூதன் வேணுமேன்னு  நினைச்ச தருமன்,  'க்ருஷ்ணா, நீயே போய் சமாதானம் பேசிப்பார்' என்றான்.

க்ருஷ்ணனும் கிளம்பிப் போறார்.  விஷயம்  கேள்விப்பட்ட துரியோதனன்,  க்ருஷ்ணனின்  ஆதரவு இருப்பதால்தான் பாண்டவர்கள்  நம்மை எதிர்க்கும்  துணிவுடன்  வலிமையோடு  இருக்காங்க. அதனால் க்ருஷ்ணனை மேலே அனுப்பிட்டால்.............  பண்டவர்களை புழுப்பூச்சிகளைப்போல் நசுக்கிடலாமுன்னு   தூது வருபவரையே கொல்ல ஒரு திட்டம் போட்டான்.

சபைக்கு வருபவருக்கு  எப்படியும் ஒரு  ஆசனம் கொடுக்கணுமில்லையா?   உக்கார்ந்தவுடன் உடைஞ்சு விழும் தரத்தில்  ஒரு  நாற்காலி  தயாரிக்கச் சொன்னான்.  அதுக்குக்கீழே நிலவறை ஒன்னு கட்டி அதில் ஆயுதங்களோடு மல்லர்களை  நிறுத்தினான்.   க்ருஷ்ணன் உள்ளே தொபுக்கடீர்னு  விழுந்ததும் மல்லர்கள் பாய்ந்து  அவரைக் கொன்னுடணும். திட்டம் பக்கா!  ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சாச்சு.

'எல்லாம் தெரிஞ்ச' ஸ்ரீ க்ருஷ்ணர்  சபைக்கு  வந்தார். ஒன்னுமே தெரியாதமாதிரி ஆசனத்தில் அமர்ந்தார். பாதங்களை அழுத்தி உட்கார்ததும் கீழே நிலவறைக்குள்  இருந்த மல்லர்கள் எல்லாம் பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள்!

என்ன ஆச்சுன்னு  முழிச்ச  துரியோதனனுக்கும்  த்ருதராஷ்ட்ரனுக்கும்  தன்  விஸ்வ ரூபத்தைக் காட்டினார்.  ஒரு கணம் பிரமிச்சுப்போன  துரியோதனன் அடுத்த கணம் சமாளிச்சுக்கிட்டான். தூதுப்பேச்சு ஆரம்பமாச்சு. அஞ்சு கிராமங்கள் தரமுடியாதுன்னு  மறுத்தான். சரி போகட்டும் அஞ்சு வீடுகளாவது  கொடுன்னால்....  ஊசிமுனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன்னான்.

ஒரு கட்டிடத்தில் அஞ்சு ஃப்ளாட், இல்லை அஞ்சு பெட் ரூம் ஃப்ளாட் ஒன்னு  இப்படிக் கேட்டுருந்தாலும்  அதே பதில்தான் கிடைச்சிருக்கும்:(
தூது முயற்சி தோல்வியானதும்  பாரதப்போர் தொடங்கினது எல்லாம்  உங்களுக்கு வியாஸரே சொல்லி இருக்காரில்லையா!

வைஸம்பாயனரிடம் இருந்து  பாரதக் கதை கேட்டுக்கிட்டு இருந்த  ஜனமேஜயனுக்கு (  அர்ஜுனனின் கொள்ளுப்பேரன்  இவன்) தானும் அந்த விஸ்வரூப தரிசனத்தை தரிசிக்கணும் என்ற பேராவல். அவன் யாகம் செய்ய  ஆரம்பித்தான். யாகத்தின் இறுதியில் தரிசனம் கிடைச்சதாம் இங்கே!
இந்தக் கோவிலில்,   விஸ்வரூபமெடுத்த க்ருஷ்ணர்  25அடி உயரச்சிலையாக  அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கார்.  தாயாருக்கு  இங்கே ருக்மிணி என்ற பெயர்.  க்ருஷ்ணரின்  பட்டமகிஷி!


கோவில்  ரொம்ப சுத்தமா இருக்கு.  சின்னதா   அடக்கமா இருக்கும் திருக்குளம் கூட சுத்தமே!  நல்ல பாராமரிப்புதான்.

கோவிலில் தலபுராணங்கள், ரோஹிணி நட்சத்திரம் ( கிருஷ்ணன் பிறந்தது ரோஹிணியில்) பற்றிய விரதபலன்கள் எல்லாம்  (மாடர்ன்) கல்வெட்டுப்பலகையில் இருக்கு.

கோவிலுக்குள்ளில் ஒருபுராதனக் கல்வெட்டு இருக்காம்.அதில் தூதஹரி என்று குறிப்பிட்டு இருக்காங்கன்னு  கேள்விப்பட்டேன். கோவில் கட்டுனது எட்டாம் நூற்றாண்டில்.

தினமும் காலை  ஏழு  மணி முதல்  பதினோரு மணி வரையும் மாலையில் நாலு  மணி முதல் ஏழரை வரையும் கோவில் திறந்திருக்கும்.

மேலே சொன்ன கதை, ஏற்கெனவே  ரெண்டுவருசத்துக்குமுன் நம்ம துளசிதளத்தில் வந்ததுதான். நமக்கு அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு கிடையாது கேட்டோ:-)படங்கள் எல்லாம் இப்போ எடுத்ததுன்னு மட்டும் சொல்லிக்கறேன்.   

நாம் நாலரைக்குக் கோவிலில் வாசலில் போய் இறங்கினோம். இந்தக்கோவில் எப்பவுமே பளிச்ன்னு சுத்தமாத்தான் இருக்கு.
மூலவர் சந்நிதியில் திரை.  உள்ளே பூஜைக்கான வேலைகள் நடக்குது. அதுவரை சும்மா நிக்காமல் கோவிலை வலம் வர்றோம்.  முதலில் தாயார் சந்நிதி. ருக்மிணி இருட்டுக்குள் உக்கார்ந்துருக்காள். சந்நிதிக்கதவும் மூடி இருக்கு. அங்கே மூலவர்  டிஃபன் சாப்ட்டானதும், இங்கெ இவளுக்கும்  கொண்டு வரும்போதுதான் கதவைத்  திறப்பாங்களா இருக்கும்.
கும்பிடு போட்டுட்டு வலம் தொடர்கிறோம்.
வெளிப்புறம் கருவறையை ஒட்டிய இடத்தில் ரெண்டு சிறுமிகள் கோவில் விளையாட்டில்:-) துர்கா & ஸ்வேதா.  என்ன இது எங்கேபோனாலும் ஸ்வேதாக்கள்! சீஸனல் பெயர்களோ!


வீடு பக்கத்துலேதான் இருக்காம்!  நாட்டில் இன்னும் கொஞ்சம்  பழைய ஸ்டைல் வாழ்க்கை ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கோ! செல்ஃபோனும், கம்ப்யூட்டர் கேம்ஸ் எல்லாம் இந்தத் தெருவரைக்கும் வரலை போல!

நான் சின்னப்பிள்ளையா இருந்தகாலத்தில், பக்கத்து வீட்டு சுப்ரமணியோடு வீட்டுக்குப்பின்பக்கத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் இருந்து  கற்பூரம், வேண்டுதலுக்கு வச்சுருக்கும் மண் பொம்மை உள்படக் கொண்டு வந்து (இது திருட்டில் சேர்த்தியா? )நம்ம வீட்டுத் திண்ணையில் வச்சு  கோவில் விளையாட்டும் சாமி கும்பிடுவதுமா இருந்தது ஞாபகம் வந்துச்சு.

வலத்தைத் தொடர்ந்தோம். ரொம்பப் பெரிய கோவில் கிடையாது.  கிருஷ்ணனுக்கு  வலப்பக்கம் ருக்மிணின்னா, இடப்பக்கம்  யோகநரசிம்ஹர்.  வழக்கம்போல்  சக்ரத்தாழ்வார் இவர் பின்னம்பக்கம்.



பொதுவா பல கோவில்களில் யோகநரசிம்ஹரைக் கண்ணாடி வழியாவோ, இல்லை  பின்னால் உள்ள சின்னூண்டு ஜன்னல் வழியாவோ தரிசிக்கிறமாதிரி இல்லாமல்  இந்தக் கட்டிடத்துக்கே  ரெண்டு தனித்தனி வாசலா அமைச்சுருக்காங்க.  ஆதிகாலத்துக் கட்டிடம் மாதிரி தெரியலை.  பிற்கால வரவோ? இல்லை பழுதான  சந்நிதியை மாத்திக் கட்டி இருக்காங்களோ என்னவோ!

வலம் முடிச்சு திரும்ப முன்மண்டபத்துக்குப் போனோம். கொஞ்சூண்டு கூட்டம் சேர்ந்துருக்கு. இன்னும் திரை விலகலை.  அங்கே காத்துக்கிட்டு இருக்கும்போது,  ஒரு தம்பதியைப் பார்த்தேன். நல்ல இனிய முகம்.  பேச்சுக் கொடுத்தது  இந்தமுறை அவுங்கதான்.  என்னப் பார்த்தால் அவுங்க மாட்டுப்பொண் மாதிரியே இருக்குன்னாங்க !  ஆஹா....   இருக்கலாம் ஆனால்  இன்னும் இளவயசாகன்னேன்:-) சென்னைதானாம். வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வரணுமுன்னு சொன்னது பிடிச்சுருந்தது. பதிலுக்கு நானும் அப்படிச் சொல்லி இருக்கணுமோ.....
இதே பாண்டவதூதனைப் பார்க்கப் போனமுறை  வந்தபோதுகூட ஒரு இனிய தம்பதிகளைச் சந்தித்தோம். அவர் மேலக்கோட்டைப் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார். நமக்கும்( பெருமாள் இவர் மூலம்)அழைப்பு விட்டுருக்கார். ஒருமுறை போகத்தான் வேணும்! 

திரை விலகியதும்  நேரா ஓடி க்ருஷ்ணன் முன் நிக்கறேன். ஹைய்யோ!!!!!  என்னத்தைச் சொல்ல !!!!  நெற்றியில் திருமண் தவிர வேற எந்த அலங்காரமும் இல்லை. பொதுவா ஒரு வேஷ்டியைச் சுத்தி விட்டுருப்பாங்களே அப்படிக்கூட இல்லை. ஏற்கெனவே கல்லில் செதுக்கிய உடையலங்காரம் மட்டுமே!  ஒரு காலை மடக்கி இன்னொரு காலைத் தொங்கப்போட்டு  கருவறைக்கூரை  தலையில் இடிக்கும் உயரத்துக்கு  ஆஜானுபாகுவா உக்கார்ந்து இருக்கார்!  வழக்கமா நான் சொல்லும் 'ன்' கூட   என்னையறியாமல் இப்ப 'ர்'னு  ஆகிப்போச்சு!  மனசுலே மரியாதையை வரவழைச்சுட்டார்! நண்பனாப் பார்த்தவரை பயபக்தியோடு  பார்க்கிறேன்!
உடுத்தி இருக்கும் உடையின் மடிப்பு ஒரு அழகுன்னா, தொங்கப்போட்ட காலின் பாதம்..........   ஹைய்யோ.... விரலும், நகமும் அப்படியே பார்க்கப்பார்க்க பிரமிப்பு. கண்ணுலே ஒத்திக்கலாம்! ஒத்திக்கணும்.... வாயடைச்சு நின்னேன் என்பதே நிஜம்!

தீபாரத்தி காமிச்சு சடாரி ஸேவித்து முடிச்சு எல்லோரும் சந்நிதிவிட்டு வெளியேறிட்டாங்க. நான் மட்டும் நிக்கறேன். தரையிலே உக்கார்ந்தால்  இன்னும் நல்லாவே முகம் பார்க்கலாம்! பட்டாச்சாரியாரிடம், 'வெளியே போக மனசு வரலை. இன்னும் கொஞ்சநேரம் பார்த்துக்கவா'ன்னு  கேக்கறேன்.  'பார்த்துக்குங்கோ. ஆனா ரொம்பநேரம் பார்க்கப்டாது'ன்னார்! (ஏனாம்? திருஷ்டி ஆகிருமோ?)
வலையில் சுட்டபடம்: கூகுளாண்டவருக்கு நன்றி.

இடுப்புயரத் தடுப்பை இழுத்து மூடிட்டு பட்டாச்சாரியாரும்  சந்நிதி விட்டகல, நானும் கிருஷ்ணனும் மட்டும்   ஏகாந்தமா!  என்னென்னவோ பேசணுமுன்னு  நினைக்கிறேன். ஒன்னுமே தோணாம நிக்கறேன்!  ஒரு நாலைஞ்சு நிமிஷம் ஆகி இருக்கும்போல!

தரிசனத்துக்கு  சிலர் உள்ளே வர்றாங்க. இடுப்பை வளைச்சு  அண்ணாந்து முகம் பார்த்துட்டு, ஏதோ  ட்ரான்ஸ்லே இருந்து   வெளிவர்றமாதிரி  சந்நிதியை விட்டு வெளியே வர்றேன்.  மண்டபத்தில் இருந்த யாருமே  கண்ணில் படலை.  கோபால் என்னவோ கேட்டார்..........  காதும் கேட்கலை..........

சட்னு போதை தெளிஞ்சு மனம் முழிச்சது.  சுத்தமான குளத்தை எட்டிப் பார்த்துட்டு,  அந்தாண்டை  தகரப்பொட்டி கம்பிகளுக்கு பின்னால் நாகர்களையும்  க்ளிக்கிட்டு கிளம்பும்நேரம்... கோபுரக்கிளிகள் காட்சி கொடுத்தன!


அடுத்து எங்கேன்னு கேட்டார் நம்மவர்.  மனசு நிறைஞ்சு கிடந்ததால்  'போகுமிடம் உங்க இஷ்டம்'னு சொன்னேன்.




தொடரும்.......:-)


18 comments:

said...

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் சென்று வந்தோம். மீண்டும் ஆற அமர பார்க்க வேண்டும்

said...

உங்க பதிவில் பார்த்ததே எனக்கும் மனசு நிறைஞ்சாப்ல இருக்கு.

said...

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா இராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா-ன்னு எம்.எஸ்.வி இசைல கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்காரே. அந்தக் கண்ணன் உங்களைக் கட்டிப்போட்டுவிட்டான் போல.

இந்தக் கோயிலைப் பத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன்.

காஞ்சிபுரம் இதுவரைக்கும் போனதேயில்ல :)

குரங்குகளின் பசியாறல் அருமை. எடுத்துச் சாப்பிட்டுத்தானே குரங்குகளுக்குப் பழக்கம். என்ன.. அடுத்த வேளைக்குன்னு சேத்து வைக்காது. பேராசையோடு மறைச்சு வைக்காது. குரங்குகள் வாழ்க.

said...

வாங்க முரளிதரன்.

ரெண்டு மூணுநாள் தங்கியிருந்து நிதானமா எல்லாக் கோவில்களையும் தரிசிக்கலாம். கோவில்நகரத்தில் தடுக்கி விழுந்தால் கோவில்வாசல்தானே!

said...

வாங்க சாந்தி.

அதுக்காக காஞ்சிக்குப் புடவை வாங்கப்போகும்போது இவரைப் பார்க்காமல் வரக்கூடாது கேட்டோ:-)

said...

வாங்க ஜிரா.

என்ன...காஞ்சிக்கு இதுவரை போகலையா? அடடா..... சந்தர்ப்பம் கிடைச்சால் தவறவிடவேண்டாம் கேட்டோ!

குரங்கு, மனுசனா என்ன? பத்துத் தலைமுறைக்குச் சேர்த்து வச்சுக்க....

எவ்ளோ நேரம் பார்த்தாலும் நமக்கு அலுக்கலை என்பதுதான் மகிழ்ச்சி!

said...

குட்டிப் பெண்களின் கோயில் சோப்பு விளையாட்டு வெகு அழகு!
அப்படியே அந்தக் கிளிகள்;
கிளி கோபுரம் எங்க திருவண்ணாமலைப் பக்கம் உண்டு; இன்று காஞ்சியிலும் கண்டேன்:)

பாண்டவத் தூதப் பெருங்கோலம், பெரும் பெரும் கோலம்!



said...

அப்பாடி ஆசை நிறைவேறித்தா துளசி. நாங்க அப்பாவோட 70 ஆவது வயது பூர்த்திக்கு எல்லோரும் போனபோது கிடைத்த அபூர்வ தரிசனம்.
கறுப்புக் கண்ணன் நகம்தான் முதலில் பார்த்தோம். அப்பா நகரவே இல்லை.
வெறும் கல்கண்டுதான் கொண்டு போயிருந்தொம்.

கோவிலுக்குப் பக்கத்தில் பட்டர் வீட்டுக்குப் போய் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம்.
இவ்வளவு பெரியதாகப் பார்த்த நினைவில்லை. கண்ணனின் பிரம்மாண்டம் தான் நினைவில் நிற்கிறது.
எல்லோரையும் காப்பாத்தட்டும்.

said...

நாங்கள் சென்றமுறை காஞ்சி சென்றபோது இக்கோவில் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

said...

தொடரின் நிறைய பகுதிகளை விட்டிருக்கிறேன். முதலிலிருந்து வர வேண்டும். விரைவில் வருவேன்.

said...

உங்களுடன் தரிசித்த திருப்தி

திருவிளையாடலில் சிவனும்
தர்மியும் பேசிக்கொள்வர்களே
அதைப் போல கதையின் இடையிடையே
இந்தக் காலத்துக்கு வந்து போனதை
மிகவும் இரசித்தேன்

புகைப்படங்கள் மிக மிக அருமை

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

காஞ்சி கோவில்கள் நம் அருட்பொக்கிஷம். மறக்க முடியாத அனுபவங்கள்... நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மேடம்!

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆஹா.... இதே காஞ்சியில் முன்பொருக்கில் சிவகாமியும் பல்லவனும் பதிவில் கோபுரக்கிளிகளைப் பார்க்கலையா? அடடா.... அந்தப் பதிவில் வேறொரு சின்ன விசேஷமும் இருக்கு கேட்டோ :-) க்ளூ: மைல்கல்:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2007/03/blog-post_09.html

said...

வாங்க வல்லி.


ஆஹா.... ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயமும் அனுபவிச்சுப் பார்க்கணும் அவனிடம்!

அப்போ சரவணபவன் இல்லைதானே :-)

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

காஞ்சியிலே ஏகப்பட்ட கோவில்கள். 108 திவ்யதேசங்களில் 15 அங்கேதான்!

சித்ரகுப்தனுக்குக்கூட அங்கே ஒரு கோவில் இருக்கு!

நாம்பொதுவா காஞ்சின்னதும் வரதராஜர், ஏகாம்பரேஸ்வரர், காமாக்ஷின்னு இருந்துடறோம். போய் வரும் ஒருநாள் பயணத்தில் இவ்ளோதான் பார்க்க முடியும். இங்கே கோவில் மட்டுமா இருக்கு? பட்டுப்பொடவைகள் கொட்டிக்கிடக்கே :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வலைப்பதிவுகளில் ஒரு வசதி... எப்ப நேரம் கிடைக்கும்தோ அப்போ வாசிக்கலாம். நானும் ஏகப்பட்டவைகள் பாக்கி வச்சுருக்கேன்:-(

நாம் நிதானமாக வாசிக்கலாம் ஓக்கே:-)

said...

வாங்க ரமணி.

ரசித்தமைக்கு நன்றீஸ்.


அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் இடையில் போடும் பாலத்தில் நான் ஒரு சின்ன அணில்!

(நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதோ:-)))))

said...

வாங்க மோகன் ஜி.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்கலை என்பதுதான் இன்னும் சிறப்பு , இல்லையோ!

வருகைக்கு நன்றி.