Wednesday, January 29, 2014

முன்னும் பின்னும் சிங்கை

ரொம்பவும் அலைச்சல் இல்லாம எங்க ஊரில் இருந்து இந்தியா குறிப்பாக சென்னைக்கு வரணுமுன்னால்  சிங்கப்பூர் ஏர்லைன்ஸை விட்டால் வேற போக்கிடம் இல்லை. சென்னைக்குப் போறோமுன்னா  கிளம்பின அன்றே  போய்ச் சேர்ந்துறலாம்.  15 மணி நேரப்பயணம். இடையில்  ஒரு ரெண்டு மணி நேரம் சாங்கியில்  வேடிக்கை உண்டு. நியூஸியில் காலை 9க்கு வீட்டை விட்டால் 21 மணி கழிஞ்சதும் சென்னை வீடு.

இந்த முறையும் அவ்வாறே  வேடிக்கை பார்த்தபடி நடந்தோம்.  பயணத்தில் கொடுத்த சாப்பாடுகள் யக்:(  இதுலே  'பன் மட்டும் சாப்பிடும்படி  இருக்கு'ன்னு  கோபால் சொன்னதால் எனக்கொரு பன் வேணுமுன்னு கேட்டதுக்கு  இல்லைன்னு சொன்ன புண்ணியவதி,  கொஞ்சநேரம் கழிச்சுக் கொண்டு வந்து தந்தபோது,  வேண்டியதில்லைன்னு  சொன்னேன். பசி காணாமல் போயிருந்துச்சு!

கிறிஸ்மஸ் & புதுவருசக் கொண்டாட்டமா   சாங்கியில் மலர் அலங்காரங்கள் அழகா இருந்துச்சு. ஸேண்ட்டாகூட பனிமூடிய குடிலில் இருந்தார்.  கொலாஸியம் ஒன்னு  வச்சுருந்தாங்க.  ரெண்டாவது டெர்மினலில்  புதுசா நகைக்கடை ஒன்னு வந்துருக்கு. 22 கேரட் சமாச்சாரம்.  சாங்கியின் முதல்கடை!  நெருங்கிய  சொந்தமொன்றில் பிறந்திருக்கும் புதுப்பூவுக்காக  ஒரு சங்கிலி  (மெல்லிசாதான். குழந்தைக்குக் கழுத்து கனம்  தாங்கணுமே) வாங்கினோம்.  சாங்கி ஷாப்பிங் என்று  பயணிகளை ஊக்கப்படுத்த  ஆளுக்கு 40 டாலர் கிஃப்ட் கூப்பான் கொடுக்கறாங்களாம்.  அதுலே போய் உங்க ரெண்டு பேருக்கும் கூப்பான் வாங்கியாந்தால்  எம்பது டாலர்  குறைச்சுக்கொடுத்தால் போதும் என்று நகைக்கடைப்பெண் சொன்னாங்க. அட!  விடுவானேன்னு  நம்ம பாஸ்போர்ட்டைக் காமிச்சதும்   ரெண்டு கூப்பான் கிடைச்சது.  நகைக்கடையில் ட்யூட்டி ஃப்ரீ விலை. கூடவே மைனஸ்  80 டாலர்.   செராங்கூன் சாலையில் இவுங்க கடை இருக்காம்.

ஒரு காஃபி இருந்தால் தேவலைன்னு மாடிக்குப்போனால்...........  ஒரு அண்டா கொள்ளளவில்  ஒரு  மக் .  ஒரே ஒரு அண்டா மட்டும் வாங்கி நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணியும் அரை அண்டா மீந்து போச்சு!

ஸேண்டா குடிலுக்குப் பக்கத்தில்  இன்னொரு கிஃப்ட் குடில்.  சாங்கியில்  செலவழிக்கும் ஒவ்வொரு 100 டாலருக்கும் ஒரு  சாஃப்ட் டாய் கொடுக்கறாங்க. ஓக்கே. குழந்தைக்கு ஒரு பொம்மையும் ஆச்சு:-)

இந்தியாவில் நடந்தது என்ன?  இப்ப எழுதும் சிங்கைப்பகுதியை முடிச்சுட்டு  விவரமாச் சொல்றேன்.சரியா?
இந்தியப்பயணம் முடிஞ்சது   பொங்கலன்றுதான்.  குடும்பப் பொங்கலா அமைக்கப்பட்டது அது. ஒரு குடும்பப்பாட்டு மட்டும் இருந்திருந்தால் ரொம்பவே பர்ஃபெக்ட்டா இருந்துருக்கும் என்பது என் எண்ணம். உறவுகளிடம் சொன்னபோது பாட்டுத் தேடும் பொறுப்பை  ஏத்துக்கிட்டு  மகிழ்ச்சியாத் தேடிக்கிட்டு இருக்காங்க. கிடைச்சதும் சொல்றேன்:-)

மாலை எட்டரைக்கு விமான நிலையம் வந்துட்டோம்.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸில்  செக் இன் பண்ணிக்கப் போனால், எதோ கல்யாண வீட்டுக்கு தவறுதலா வந்துட்டோமோன்னு திகைப்புதான். பட்டு வேஷ்டியும் பட்டுச் சட்டைகளுமாக  இருக்காங்க கவுண்ட்டர் மக்கள்ஸ். சின்னகிண்ணங்களில் சக்கரைப்பொங்கல் தந்து  பொங்கல் வாழ்த்துகள் சொல்லி  வரவேற்றாங்க. தரையில்  ரங்கோலி போல ஒரு  பொங்கல் அலங்காரம்.  இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

எட்டுகிலோ  கூடுதலா இருக்கு நம்ம பெட்டிகள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  பயணிக்குப் பத்து கிலோ எடை கூடுதலா தர்றோமுன்னு  தகவல் அனுப்பி இருந்தாங்க. எப்போதும் இருக்கும்  இருபது  கிலோ இப்ப முப்பது கிலோவா ஆகி இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் கிடைக்கும் கூடுதல் இருபது  கிலோவுக்குப் புத்தகங்கள் வாங்கிக்கணும் என்று அடி போட்டுருந்தேன்:-)

இப்ப எட்டை என்ன செய்வது?   ஆட்டைத் தூக்கி மாட்டில் போடணும்.  செக் இன் பெட்டிகளில் இருந்து  சில சாமான்களை எடுத்து  கேபின் பேகில் வச்சார் கோபால்.  அநேகமா சரியாகி இருக்கனும்.  ஓக்கே ஆச்சு.  ஆனால் கேபின் பேகில் கூடுதல் எடை இருக்கே:(   லேப்டாப் வைக்கும் பையில்  ஒரு ஆறேழு புத்தகங்களை போட்டேன்.  பயணத்துக்கு ரீடிங் மெட்டீரியல்!

பொங்கல் ரங்கோலிக்கு முன் ரெண்டு வரிசையில் ஏர்லைன்ஸ் மக்கள் நின்னு படம் எடுத்துக்கிட்டாங்க. நானும் க்ளிக்கி வச்சேன்.  SIA வின்  நியூஸ் லெட்டருக்கு  போடணுமுன்னு  போஸ் கொடுக்கறீங்களான்னு  என்னையும் கோபாலையும் கேட்டாங்க.  ஆஹா... விடுவானேன்னு போய் நின்னோம்:-)  பொங்கப்பானை டிஸைன் போட்ட உடுப்பு வேற போட்டுருக்கேன் பொங்கல் ஸ்பெஷலா!



சரியான நேரத்துக்குக் கிளம்பி  சிங்கைக்குப் போய்ச் சேர்ந்தது விமானம். ரெண்டு நாள் தங்கும் உத்தேசம்.  நாம் தங்கப்போகும் ஹொட்டேலில் செக் இன் டைம் பகல் மூணு மணிக்குத்தான்.  காலை 6 மணிக்குப்போய்ச் சேர்ந்துட்டு பகல் மூணு வரை தேவுடு காக்க முடியாதுன்னு  முதல் நாள் அறை வேணுமுன்னு  மூணு நாளைக்கு ஏற்பாடு செஞ்சுருந்தார் கோபால். டாக்ஸி எடுத்து அறைக்குப்போகும் வழியிலேயே.... 'போனதும் சீனு சீனுன்னு ஆடாதே. கொஞ்ச நேரம்  ஓய்வெடுத்துக்கிட்டு நிதானமாக் கோவிலுக்குப் போகலாம். பகல் பனிரெண்டு வரை கோவில் திறந்துதான் இருக்கு' என்றார்.  எனக்கும்  மூணு வாரமா சரியான ஓய்வில்லாமல் உடல் அசதியாகத்தான் இருந்துச்சு.

அறைக்குப்போய் கொஞ்ச நேரம் படுத்தவள்  கண் விழிக்கும்போது  பதினொன்னரை மணி.  சட்னு குளிச்சு ரெடியாகி  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போனோம். மூணு நிமிச நிதான நடையில் கோமளவிலாஸ். சாலையைக் கடக்கும்போதே வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் நுழைஞ்சு ஒரு கும்பிடு.

செராங்கூன் சாலை முழுசும் பொங்கலுக்கு அலங்கரிச்சு இருக்காங்க.  பார்க்கவே அழகா இருந்துச்சு.  சில சைடு தெருக்களில் போக்குவரத்தை நிறுத்திட்டு   தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு  பொங்கல் சந்தை நடக்குது. ஹேஸ்ட்டிங் சாலை முகப்பில் ஒரு ரெட்டை மாட்டு வண்டி  நிக்குது. கொட்டாய்க்குள்ளில்  சின்னத் தடுப்பு வச்சு அதுக்குள்ளே பசுமாடுகள்!  சிங்கையில் எங்கிருந்து மாடு வந்துச்சு?  இன்னிக்கு மாட்டுப்பொங்கல் இல்லையா?  மாடுகளை ஊருக்குள்ளே கொண்டு வந்து காட்டிட்டுப் போறாங்க.  எல்லாம் வளமான 'வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்'. ஆஹா.... அதான் நீங்காத செல்வம் நிறைஞ்சுருக்கு சிங்கையில்!


சிங்கையின்  பால்பண்ணை மாடுகள்தான் அவை. பண்ணை ஜோஹூர் பாரு அருகில்  சிங்கை எல்லையில் இருக்கு. விக்னேஷ் பால் பண்ணை.  நாலு பசுக்கள்,ரெண்டு கன்னுக்குட்டிகள், ரெண்டு வெள்ளாடுகள். எல்லோருக்கும் ஒரு கொம்புக்குச் சிகப்பும் இன்னொரு கொம்புக்குப் பச்சையுமா வர்ணம் தீட்டி இருக்காங்க. மாடுகளுக்குக் கழுத்தில் பூமாலையும், சலங்கையும்! பாவம்..... தலையை ரொம்ப அசைக்கவிடாமல் ரெண்டு பக்கமும் கயிறு போட்டுக் கம்பித்தடுப்போடு கட்டி வச்சுருக்கு.

 மாடுகளுக்கு நகரின் சூடு தாக்காமல் இருக்க  நாலைஞ்சு மின்விசிறி போட்டு வச்சுருந்தது  எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பாதிசனம் மாடுகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கு.  வாழைப்பழம் வாங்கி  வரிசையா ஒன்னொன்னுக்கும்  ஊட்டுது சனம். பாவம் மாடுகள்  வெறும் பழமே கொடுக்கறீங்களேன்னு  போரடிச்சுப் பார்க்குதுங்க.

கொட்டகையின்  முடிவில் மேடையும்  இருக்கைகளின் வரிசையும். இன்னும்கொஞ்ச நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் தொடங்குதாம்.  இன்னொரு பக்கம்  மேசை நாற்காலிகள் போட்டு  கோலம் வரைவது, தோரணங்கள் செய்வதுன்னு  கைவேலைகளைச் சொல்லிக்கொடுக்கும் இளம்பெண்கள்.

இன்னொரு தடுப்பு அமைப்பில்  பொங்கல் பானைகள் கரும்புகள், அடுப்புகள் என்றுபொங்கல் வைக்குமிடம். அமர்க்களம்தான் போங்க!


இங்கே  சிங்கையில் ஜனவரி பத்து தேதி முதலே கொண்டாட்டங்கள் துவங்கிருது. நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய ப்ரோஷர்ஸ்  கொடுத்தாங்க. லிட்டில் இண்டியா முழுசுமே கோலாகலமா இருக்கு! கேம்பெல் லேன் முழுசும்  போக்குவரத்தை நிறுத்திப்  பந்தல்போட்டு வச்சுருக்காங்க.  பொங்கல் விழா கிராமம் இது. ஃபெஸ்ட்டிவல் வில்லேஜ். ஜோதி புஷ்பக்கடையில் ஆரம்பிச்சு  தெருவை அடைச்சு பாத்திரபண்டங்கள்.  வரப்போகும் தைப்பூசத் திருநாளுக்கான  சாமான்களாக் கொட்டிக்கிடக்கு!

வழக்கம்போல்  கேம்பல் லேன் காய்கறிக்கடையைப் பார்த்து பெருமூச்சு விட்டுட்டு, டெக்கா மால் கீழ்தளத்துலே இருக்கும் சூப்பர் மார்க்கெட்டையும் சுத்தி வந்தோம். பலா, வாழை, மா என்று முக்கனிகளை  வாங்கிக்கிட்டு அறைக்குப்போனோம்.  நல்லவேளையா ஞாபகமா ஒரு கத்தியை செக் இன் லக்கேஜில் போட்டு வச்சது நல்ல பயன்:-)


தொடரும்............:-)


25 comments:

said...

கோலம் ஒரு கண்கொள்ளா காட்சி.

அந்த கோலத்திலே பட்டு பாய் விரித்து,
அதில் துளசி கோபால், கோபால் இரண்டு உட்கார வைத்து,
கழுத்திலே இருவரும் துளசி ரோஜா மலைகளுடன் வீற்றிருக்க,
நான் ஒரு போட்டோ எடுப்பதாகக்
கனாக் கண்டேன் தோழி நான்.

மீனாட்சி பாட்டி.
www.subbuthatha72.blogspot.in

said...

அண்டா கொள்ளளவில் காஃபியா...!

பொங்கல் அலங்காரம் அழகு அருமை... அசர வைக்கிறது பல படங்கள்...

வாழ்த்துக்கள் அம்மா...

said...

கோபால் நலமா? படங்களைப் பார்க்கும் போது, அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிகிறது!

உங்கள் இடுகைக்கு தமிழ் மனம் + 2 வோட்டு போட்டு இருக்கிறேன்; தயவு செய்து நான் வோட்டு போட்டேன் என்று மறு வோட்டு போடவேண்டாம் Please! நான் வோட்டு போட்டதற்கு காரணம் உங்கள் எழுத்து மற்றும் உழைப்பு! தயவு செய்து மறு வோட்டு போடவேண்டாம்.

நான் பல பரிமாணங்களில் அடித்து ஆடுவேன். இங்கு அது ஒகே..நம் நாட்டில் அது அசிங்கம். என் காதல் மனைவியே, என்னை,"You vulgar fellow" என்று தான் விளிப்பார்கள்.

உங்கள் உழைப்பை,உங்கள் பதிவை, மக்கள் அறியும் படி தமிழ்மணம் மகுடம் ஏற்றுவேன்.

உங்கள் உழைப்பு படங்களுடன் அபாரம். என் மனைவுயுடன் சிங்கை சென்றது 23 வருடங்கள் முன்பு; தனியாக சென்றது 21 வருடங்கள் முன்பு!

உங்கள் பதிவுகள் எங்களுக்கு உதவியாக இருக்கும்; என் மனைவி ஒரு முருக பக்தை!
அப்ப நான்?
நான் என் மனைவியின் பக்தன்--என்றும்!

said...

//என் மனைவி ஒரு முருக பக்தை!
அப்ப நான்?
நான் என் மனைவியின் பக்தன்--என்றும்! //

அந்த முருகனே மனைவி பக்தன் தானே.
சாரி, மனைவிகள் பக்தன்.
நடுவிலே உட்கார்ந்து இரண்டு பக்கமும்
தெய்வானை, வள்ளி, ..

கொடுத்து வச்சவர் முருகன். !!

எதுக்கு இரண்டு பக்கமும் இவுக முருகனை நடுவிலே உட்கார வச்சுண்டு இருக்காக அப்படின்னு யோசனை பண்ணி பார்த்தேன்.

திரும்பவும் இன்னொரு வள்ளியை தேடி டிட போறாரே என்ற பயத்துலே ஷிபிட் லே இருக்காங்க..!!! இன்னொரு தரம் பழனிக்கு மொட்டை அடிச்சுக்கிட்டு பொயிடப் போறாரே என்ற கவலையாகவும் இருக்கலாம்.
நீங்க என்ன சொல்றீக நம்பள்கி சாரே.!!

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.in

said...

வழக்கம்போலவே சரளமான நடையில எங்களையும் உங்கக் கூட்டிக்க்கிட்டு போய்ட்டீங்க. போன வருஷம் பொங்கலுக்கு மலேஷியாவுல இருந்தேன். சந்திரப் பொங்கல்னு ஒரு வீட்டுல மட்டும் சூரிய அஸ்தமனத்துக்கப்புறம் பொங்கல் வச்சாங்க. இங்க அதுமாதிரி பாத்ததில்ல. ஏறக்குறைய எல்லா தமிழர்ங்க வீட்லயும் வீட்டு போர்ட்டிக்கோவுல நிக்கிற கார எடுத்து வெளியில விட்டுட்டு மூனு கரும்ப கூடாரம் போல அமைச்சி பொங்கல் வச்சிருந்தத பாத்தப்போ தஞ்சாவூர்ல இருந்தப்போ பாத்த ஞாபகம் வந்துது. சென்னையில இப்பல்லாம் இந்த மாதிரி யாரும் செய்யிறதில்ல. உங்க பதிவ படிச்சதும் அந்த ஞாபகம் வந்தது.

said...

வழக்கம்போல அருமை அம்மா... படங்களும் சூப்பர்....!

அந்த நகை கடையில் 24 காரட் கிடைக்காதா .. தம்பிய வாங்கி வர சொல்லனும்

said...

கோபால் அவர்களைப் போல புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். மாடுகளுக்கு மின் விசிறியா? சூப்பரு.

said...

விளக்கங்களும் படங்களும் அருமை .
பொங்கல் பானை design துப்பட்டா சூப்பர் !!

said...

சிங்கப்பூரிலா இந்தப் பொங்கல். இல்லை சென்னையிலா. கொஞ்சம் குழப்பம். அண்டாவில் காப்பி சரி . நல்ல காப்பியா. இங்கே மஹா போர். மாடுகள் அழகு. செழிப்பாக இருக்கின்றன.

said...

உங்களுடன் நானும் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி.....

படங்கள் மிக அருமை!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

உங்கள் கனவு சீக்கிரம் பலிக்கட்டும். நம்ம பீமரதசாந்தியில் கனவை நனவாக்கிடுங்கக்கா.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பியர் மக் போல ராக்ஷஸ மக் காஃபி அண்ட் டீக்கு!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க நம்பள்கி.

கோபால் நலமே! விசாரிப்புக்கு நன்றி.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் எனக்கு மார்க்கெட்டிங் அறிவு குறைச்சல்.

கோபால்தான் அதில் ராஜா:-)

சிலவருசங்களுக்கு முன்னே மா.சிவகுமார் என்றொரு பதிவர் இங்கே தமிழ்மணத்தில் ரொம்ப பிரபலம். அவர் தமிழ்மண மகுடம் என்றொரு வரிசை ஆரம்பிச்சு முதல் மகுடம் நமக்குச் சூட்டிட்டார்.

அப்போமுதல் எனக்குத் தலைக்கனம் கூடிப்போச்சு:-))))

உங்க தங்கமணி மலேசியா பத்துமலை பதிவுகளைப் பார்த்தார்களா?

said...

வாங்க டி பி ஆர் ஜோ.

சென்னையில் பொங்கல் விழாவன்று இருந்தேன்.

வேறென்ன சொல்ல? மக்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவதில் இருக்கும் வேகம் பாரம்பரியமான கொண்டாட்டங்களுக்கு இல்லை:(((

said...

வாங்க ஆனந்த்.

சாங்கியில் இருக்கும் நகைக்கடையில் 22 24 எல்லாமும் கிடைக்குது.

said...

வாங்க ஜோதிஜி.

ரொம்ப அமர்க்களமாகக் கொண்டாடுறாங்க. விறகு அடுப்பில் பொங்கல்!

மாடுகள் செழிப்பா இருப்பது கவனிப்பால்தான். இல்லையோ?

said...

வாங்க சசி கலா.

கமீஸின் முன்புறம் ஒரு பெண் பானையைத் தலையில் ஏந்திப்போவாள்.

அது உண்மையில் வெண்ணெய். சமய சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி இஅதைப்பொங்கல் பானையா மாத்திக்கிட்டேன்:-)

ஹைதராபாத் பயணத்தில் வாங்கியது அது.

said...

வாங்க வல்லி.

நல்ல காஃபியா? ஐயோ.... என்னன்னு சொல்வேன்:(

ரிவர்ஸில் போகலாமுன்னு இன்னும் சிங்கையில்தான் இருக்கேன்.

ஆனால் சரிப்படாது போல இருக்கே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் மகிழ்ச்சிக்கும் நன்றீஸ்.

said...

நம்பள்கி,

நேரம் இருந்தால் பாருங்கள்.

http://masivakumar.blogspot.in/2006/11/1.html

எட்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மகுடம்:-)

said...

சென்னையிலிருந்து சிங்கையா? இல்லை சிங்கையிலிருந்து சென்னை வந்தீர்களா? ரிவர்ஸில் கொஞ்சம் குழப்பமா இருக்கு டீச்சர்...:)

முதல்ல இருந்தே வாங்க....:))

பொங்கல் அலங்காரங்கள் அழகாக இருந்தது...

said...

மகுடம் பார்த்தேன்! மகிழ்ச்சி!
நான் இந்தியாவிற்க்கு போகும் போது...இருக்கு...இருக்கு என் மனைவியிடம் ஒரு கோவில்கள் லிஸ்ட்! அவர்களும் தமிழ்நாடு தாண்டி எங்கும் போக விருப்பப்பட மாட்டார்கள். அதிக பட்சம் குருவாயூர் தான்! தமிழ்நாட்டில் இல்லாத கோவில்களா?

குருவாயூர்! மன்னார்குடி ராஜகோபால சாமி! இரண்டும் என் மனைவிக்கு விசேஷம். என்னுடைய் விருப்பமான பிரசாதம்; அழகர் கோவில் பட்டைசாதம்--புளியோதரை! (ரொம்ப முக்கியம்!)

எல்லா முருகன் கோவிலுக்கும் செல்வார்கள். திருப்போரூர் மிக விசேஷம் அவர்களுக்கு பழனியை விட சுருங்க சொனால், அறுபடை வீடுகளை விட.

மே. மருவத்தூரும் ஒரு விசேஷம் - எல்லாம் ஒரு ட்ரிப்! லோக்கல் ட்ரிப்புக்கு எங்கள் அம்மாவும் வருவார்கள். குல தெய்வம் கோவில் என் மனைவிக்கு must visit! அப்பாவும் ஒட்டிக்குவார்!

பாலாஜியை என் மனைவியே லிஸ்டில் இருந்து எடுத்துவிட்டார்கள்; அப்பாடா! நிம்மதி! பாலாஜியைப் பார்த்தே முப்பது வருடம் மேல் ஆகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு பிராஞ்ச் ஆபீஸ் பிட்ஸ்பர்க் எப்பவாவது போவது உண்டு!

எல்லாக் கோவில்களுக்கும் கூட்டம் இல்லத நாட்களாப் பார்த்து போவோம்; நல்ல நேரம் இல்லாவிட்டால் விசேஷம். பழனி எப்பவும் செவ்வாய்கிழமை ராகுகாலம் தான்; ஒரு ஈ கக்கா இருக்காது!

அரை மணி நேரம் தான் என் maximum லிமிட்; அதற்குள் எத்தனை சாமி வேண்டுமானாலும் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம். அர்ச்சனை அபிஷேகம் எங்கு கிடையாது. என்னை புரிந்து கொண்டு அவர்களும் சீக்கிரம் வந்து விடுவார்கள் இல்லையென்றால், நான் கோவிலில் நடமாடும் சிலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன் என்ற பயம்.

said...

பொங்கல் விழா கண்டு மகிழ்ந்தோம்.

said...

"தரையில் ரங்கோலி போல ஒரு பொங்கல் அலங்காரம். இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!"

:-)

"பொங்கப்பானை டிஸைன் போட்ட உடுப்பு வேற போட்டுருக்கேன் பொங்கல் ஸ்பெஷலா!"

கலக்கிட்டீங்க . பொங்கல் ஸ்பெஷல் ஆக கைத்தறி புடவை கட்டி சார் க்கு வேட்டி கட்டி இருந்தா.. இன்னும் நல்லா இருந்து இருக்கும் :-)

said...

இந்த வருடம் ஜனவரியிலிருந்தே உங்கள் பதிவுகளை சரியாகப் படிக்கவில்லை. இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன். நடுநடுவில் சில படித்தேன். சீக்கிரம் படித்து முடிக்கிறேன்.