Friday, November 28, 2025

அதுலே பணம் வச்சுருக்கேன்................

காலை ஏழே முக்காலுக்கெல்லாம் செக்கின் ஆச்சு. எனக்கான வீல்சேரும்  தயாராக இருந்தது.   சம்ப்ரதாயங்கள் எல்லாம் முடிச்சு நேரா நம்ம கேட்டுக்குக் கொண்டுபோய் உக்கார்த்தி வச்சுட்டாங்க. 


ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் எதாவது தேவைன்னா இப்பவே வாங்கி வச்சுட்டுப்போகலாம். நாம் திரும்பி வரும்போது கொடுத்துருவாங்க.  அதேபோல ஊருக்குள் இருக்கும் ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் ஏதாவது வாங்கினாலும், நாம் திரும்பி வரும்போது ஏர்ப்போர்ட்டில் கொண்டுவந்து கொடுத்துருவாங்க. பயணம் போகும் இடங்களில் தூக்கிக்கிட்டு அலைய வேணாம்.  முந்தியெல்லாம்  பெர்ஃப்யூம் வாங்கி வச்சுட்டுப்போவேன்.  இப்பெல்லாம்  நம்மூர் காதிபண்டாரில் வாங்கும் ஜவ்வாதுஅத்தர்தான் நம்ம சிக்னேச்சர் பெர்ஃப்யூம் :-) வீட்டுலே ஸ்டாக் இருக்கு.
கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் போர்டில் நம்ம 'ரூ' பார்த்ததும் 'அட'ன்னு ஆச்சு !  

எட்டே முக்காலுக்கு நமக்கான போர்டிங். வீல்சேர் முன்னுரிமை.  எனக்கு ஜன்னல் இல்லை என்ற ஏமாற்றம். மூணரை மணி நேரம்தானே..... போட்டும் போன்னு இருந்தேன்.  கடைசியில் ஏறிவந்த பெண்மணி, 'எனக்கு ஜன்னல் வேணாம். உங்க கடைசி இருக்கை'யைத் தர்றீங்களான்னு கேட்டாங்க. வெல்லம் தின்னேன்.

"தண்ணீர் பாட்டில்" ஸ்டேண்ட்லே செல்லைச் சாய்ச்சு வச்சு ஏதோ படம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. டௌன்லோடி வச்சுருக்காங்க போல.  ஃப்ரீ வைஃபை வேலையே செய்யலை.  எனக்கு ஃப்ளைட் என்டர்டெய்ன்மென்ட் வழக்கம்போல்  ஃப்ளைட்பாத் &  நம்ம செல்ஃபோன் கெமெரா.   நிலம் முடிஞ்சு போச்சுன்னா .... மேகமும் கடலும்தான். நம்ம  சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இன்னும் பனி கிடக்கு.  குளிர்காலம் முடிஞ்சே ரெண்டுமாசம் ஆகப்போகுது.....  ஆனால் குளிர்விட்ட பாடில்லை.

  
ஆரோக்கி மலை உச்சி  தென்பட்டது.  இது மௌண்ட் குக் என்ற மலையின் மவொரிப் பெயர். இப்பெல்லாம் பரவலா மவொரிபெயர்கள் புழக்கம்  அதிகரிச்சு இருக்கு.   

ஆரோக்கி எனும் மவொரிப்பெயருக்கு 'மேகத்தை துளைக்கும்' (Cloud Piercer) என்று பொருள். இது உண்மைன்னு சொல்றதுபோல் மேகத்துக்குள் புகுந்து நிக்குது மலை உச்சி.  நியூஸியில் மிக உயரமான மலை   இது.   3724 மீட்டர் !  1991 டிசம்பரில்  மலையுச்சி இடிஞ்சு விழுந்து பத்து மீட்டர் உயரம் குறைஞ்சு போச்சு.  கூம்பா இருந்த உச்சி,   ஹேர்கட் பண்ணதுபோல்  ஆச்சு. ஆனாலும்  இப்பவும் இதுதான் நாட்டின் உயரமான மலை.கேப்டன் குக் பெயரை இதுக்குச் சூட்டியவர்கள்  ஆரம்பகால வெள்ளையர்களே . 

இந்த  ஜெட் ஸ்டார்களில் இன்டர்நேஷனல் ஃப்ளைட்டா  இருந்தாலும் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டாங்க. அவ்ளோ தாராளம் !  தீனி வேணுமுன்னா டிக்கெட் புக் பண்ணும்போதே கேட்டுருக்கணும்.

  பதினொரு மணிக்கு விமானம் மெல்பர்னில் தரை தொட்டது . எங்களுக்கும் அவுங்களுக்கும் ரெண்டுமணி நேர வித்தியாசம் இருக்கு. வீல்சேர் மக்கள் விமானத்துலே  ஏறும்போது முதலிலும், இறங்கும்போது கட்டக்கடைசியாகவும் இறங்கணும்.  நாங்களும் கடைசியில் இறங்கிட்டுப் பார்த்தால் வீல்சேர் நஹி.  எங்கேன்னு கேட்டதுக்குக் கொஞ்சம் முழிச்சுட்டு, இன்னொரு உதவியாளர் மூலம்  ஒரு வீல்சேர் கொண்டுவரச் சொல்லிட்டு, 'தள்ளிக்கிட்டுப்போக ஆள் இல்லை. நீங்கதான் தள்ளணும்'னு நம்மவராண்டை சொன்னாங்க.  நான் 'ஐயோ'ன்றேன். இவர் 'ஓக்கே'ன்றார்,  ப்ச்............
 
அடராமா.....

பொதுவா ப்ளேன்லே இருந்து வெளியே ஏர்ப்ரிட்ஜ்லே இறங்கும்போது அது ஒரு சின்ன ஏத்தமாத்தான் கட்டடம் வரை போகும். இதுலே என்னையும் உக்கார்த்தி, என்னோட கேபின் ஸூட்கேஸையும் வச்சு ஒருத்தர் தன் பேக் பேக்கையும் சுமந்துக்கிட்டு வீல்சேரோடு  மேலேறி போகணுமுன்னா முடியும் சமாச்சாரமா என்ன ?  'பரவாயில்லை நான்  மெதுவா நடந்துவரேன்'னு சொன்னால் கேட்டால்தானே ? முன்னே பின்னே தள்ளுவண்டி தள்ளின அனுபவம் இருக்கா என்ன? இதுக்குண்டான பணியாட்கள் இதுக்கான பயிற்சி எடுத்தவங்க இல்லையோ......

மெதுவாக 'மலையேற்றம்' முடிஞ்சு  மேலே வந்ததும்.... ட்ரான்ஸிட்  வழியிலே போறோம். அங்கே செக்யூரிட்டி செக் பண்ணறாங்க. நம்ம பைகள் கேபின் பேக் எல்லாம் எக்ஸ்ரே மெஷினுள்ளே போய் வந்தும், என்னோட கைப்பையை  இன்னொருக்கா ஸ்கேன் செய்யன்னு வாங்கிப்போனவர், அதை என்ன செய்யறார்னு தெரியலை. ஒரு காமணி போலக் காத்திருந்தும் பை வரலை.

 நானோ...மை ம கா ராஜன்லே வெண்ணிறஆடை மூர்த்தி போல..... 'என் பை , அதுலே பணம் இருக்கு'ன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். ட்ரைவிங் லைஸன்ஸ், ஏடிஎம் , க்ரெடிட் கார்டுகள், கொஞ்சம்  கூடுதலாகவே சிங்கப்பூர், அஸ்ட்ராலியா,  யூ எஸ் டாலர்கள்னு இருக்கு.  நம்மவர் பையைத் தேடிக்கிட்டுப்போனா.... அநாதையா ஒரு மேஜை மேலே உக்கார்ந்துருக்கு. கொண்டுபோன ஆளைக் காணோம். இவர் எடுத்துக்கிட்டு வந்தார். அப்படியே வாங்கி மடியில் வச்சுக்கிட்டேன்.  திரும்பத் தள்ளல்.  அங்கிருந்து அடுத்த வாசலுக்குள் போனா எஸ்கலேட்டர்.  அடராமா.... லிஃப்ட் இருக்கான்னு தேடிக் கொஞ்சம் அலைஞ்சு,  இடம் கண்டுபிடிச்சு அதுலே கீழே போறோம். நாம் போக வேண்டிய கேட் எங்கேன்ற ஸைன் போர்டுகூட காணோம். ஒரு இடத்துலே சுவத்துக்குள் இருக்கும் மானிட்டரில் விவரம் கிடைச்சது.  

நம்மவர் ஒவ்வொரு கண்ணாடிக்கதவுகளைக் கடக்கும்போதும்  நேராப்போய்க் கண்ணாடியிலே முட்டிக்குவோமோன்னு  திகிலடிச்சுக் கிடக்கேன். வண்டிச்சக்கரம் , சூப்பர் மார்கெட் ட்ராலிபோல கண்டபடி சுத்துது.  இனியும் சும்மா இருந்தால் ஹார்ட் அட்டாக் கேரண்டீ ! 'போதும் நிறுத்துங்க'ன்னு இறங்கிட்டேன்.  மெல்ல மெல்ல நொண்டி நடக்கறதே தேவலை. 'இனிமே  பயணத்தில் வீல்ச்சேர் புக் பண்ணுங்க....  தெரியும் சேதி' ன்னு கருவினேன்........

ஒரு வழியா கேட்டாண்டை வந்து சேர்ந்தப்ப, ப்ளேனை விட்டு இறங்கி ஒரு மணி நேரம் ஆகி இருக்கு.  போர்டிங் இன்னும் ஒரு மணிநேரத்தில்.    நம்ம ஊர் மணி இப்போ ரெண்டு.  நம்மவர் பசி தாங்க மாட்டார்.  நான் போய் ஏதாவது வாங்கிவரேன்னு கிளம்பறார். இங்கே  கேட்டாண்டை ஏது  ஃபுட்கோர்ட்?  கடைகள் எல்லாம் வேறு ஏரியாவில்தானே ! அதெல்லாம் சரிப்படாதுன்னு  கைப்பையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை வெளியே எடுத்தேன்.  அப்பத்தான் கவனிக்கிறேன்.... பை திறந்தே கிடக்குன்னு !  ஸ்கேன் பண்ணப் பையைக் கொண்டுபோன ஆள்,  பணத்தை எடுத்துக்கிட்டுப் பையை வச்சுட்டுப்போயிட்டாரோ (னோ)  ?  அவசரமா உள்ளே இருக்கும் ரகசிய கம்பார்ட்மென்டைப் பார்த்தால் ஸிப் போட்டுத்தான் இருக்கு. உள்ளே நம்ம புதையல் ! அப்பாடா....

பிஸ்கெட்டைத் தின்னுட்டுத் தண்ணி குடிக்கலாமுன்னா.... செக்யூரிட்டி செக்கில் தண்ணிபாட்டிலைக் கடாசிட்டாங்களாம்.  போர்டிங் லேட்டுன்னு  இன்னும் அரைமணிக் கூறு  காத்திருக்கவேண்டியதாப் போச்சு. ' இந்த மெல்பர்னுக்கு வந்தே இருக்க வேணாம்' னு முகத்தை  மகிழ்ச்சியாக இருக்கும்படி வச்சுக்கிட்டு, மெல்ல சண்டையை ஆரம்பிச்சேன்.  "நீ பார்க்காத ஊராச்சேன்னு..........."    நம்மவர் இங்கே இருக்கும் அவுங்க கிளை  தொழிற்சாலைக்கு அடிக்கடி  போய் வருவார். தான் பெற்ற துன்பம், இவளும் பெறட்டுமுன்னு தோணியிருக்கு போல. 

இந்த மெல்பர்ன், எங்க கிறைஸ்ட்சர்ச்சின் ஏழு சகோதரிகளில் ஒன்னு. எங்க அக்கா. எல்லாம்  ஏறக்கொறைய ஒரே மாதிரி டிஸைன், காலநிலை, செடிகொடிகள்னு தோட்ட நகரம்!    ஏர்போர்ட் சமீபிக்கும் சமயம்  கீழே பார்க்கும்போது  எங்கூர் போலத்தான் நிலமே  தெரிஞ்சது. என்ன ஒன்னு.... இந்த நகரம் ரொம்பப் பெரூசு.  நம்மூரு ஜனத்தொகை கிட்டத்தட்ட  ஆறு  லக்ஷம். மெல்பர்னில்  அம்பத்திநாலு லக்ஷம். 



போர்டிங் நேரம் வந்துருச்சுன்னு கேட்டாண்டை போனால்.... நம்ம விவரம் ஒன்னும் இந்த க்வான்டாஸ் ஃப்ளைட் லிஸ்ட்டில் இல்லையாம்.  அடராமா.....  அங்கே இருந்த பணியாளரிடம்  வாக்குவாதம் பண்ணிக் கடைசியில் அவுங்க ஜெட் ஸ்டாரோடு பேசி (! ) நமக்கு இடம் தருவோம். ஆனால் மெல்பர்னில் இருந்து சிங்கை போக, ஏற்கெனவே  க்வாண்டாஸில் புக் பண்ணி இருக்கும் மக்களை நிரப்பிட்டுத்தான் நமக்குன்னு....... அடப்பாவிகளா..... ஜெட் ஸ்டாரில் பிஸினஸ் க்ளாஸ் கொடுத்துட்டு, இப்போ இதில் இடமே இல்லைன்னா என்ன அர்த்தம் ?  இதுலே வீல்சேர் பாஸஞ்ஜர்னு இவர் சொல்ல, வீல்சேர் எங்கேன்னு கேக்குது அந்தம்மா!  இடிக்குப்  பயந்து அதான் வழியிலே கடாசிட்டேனே!
ஒரு வழியா உள்ளே போனால்..... என் விண்டோ ஸீட் போயிந்தி.  லிஸ்ட்லே நம்ம பெயரே இல்லைன்னா.... நம்ம ஸீட் மட்டும் எப்படி அலாட் ஆகியிருக்கும் ?  ஐய்ல் ஸீட்தான்.  'இதுவாவது கிடைச்சதே,.....  எட்டு மணி நேரம்தான்.... பல்லைக்கடிச்சுக்குகோ' ன்றார் இவர். 

ஒரு மணி நேரத்தில்  சாப்பாட்டு வண்டி வருது. நம்மூர் மணி நாலு. கொலைப்பசி வேற....  காலை ஆறுமணிக்கு ரஸ்க்கும் டீயும்  ,சாப்பிட்ட  வயிறு சோத்தைக் கொண்டான்னுது.  எல்லோருக்கும் சாப்பாடு வந்துருச்சு. நமக்கு ?  அதான்  ப்ளேன் பாஸஞ்சர் லிஸ்ட்லே பெயரே இல்லையே.... அப்ப சாப்பாட்டு லிஸ்ட்லே  இருக்குமா ?  கொஞ்சம் தகராறு ஆனதும்,  வெஜிடேரியனான்னு முணுமுணுத்துக்கிட்டே போன  ஏர்ஹோஸ்டஸ், இருவது நிமிட் கழிச்சுக் கொண்டுவந்தது   மண்ணாட்டம் ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்டும் கொஞ்சம் பட்டரும், தயிரும். எனக்கிருந்த எரிச்சலில் க்ளிக்கக்கூட இல்லை.  சீன்னு போச்சு.

கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் குடிச்சுட்டு உண்மையாவே பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன்.  ஒருவழியா சிங்கையில் இறங்கும்போது  சிங்கை நேரம்  ஏழு.  இங்கே வீல்சேர் உதவியாளர்  ப்ளேன் வாசலுக்கு வந்து 'நடத்தி'க் கூப்ட்டுப்போனார். ஆள் இருக்காம், சேர் இல்லையாம்.  இனிமேல் இந்த அஸ்ட்ராலியன் ப்ளேன்லே போவே ? நெவர்.

லிஃப்ட்லே கீழே இமிக்ரேஷன் பகுதிக்குப்போய் ,  கடவுச்சீட்டில் முத்திரை குத்துதல் எல்லாம் ஆச்சு. உதவியாளர் கூடவே இருந்ததால் எல்லாம் நொடியில். செக்கின் பெட்டிக்காக நாம் பெல்ட்டாண்டை நிக்கறோம். 
  எல்லாப்பெட்டிகளும் போயிருச்சு. நம்ம பொட்டியைக் காணோம் !
 
தொடரும்........:-)

Wednesday, November 26, 2025

இந்தப் பயணத்தொடரில் 'பயணம்' இப்பதான் ஆரம்பிச்சுருக்கு !


நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்றதால் மறுநாள் எங்கள் யோகா வகுப்புக்குப் போகலை. போனவாரமும் போகலை. நம்மவரையாவது போயிட்டு வாங்கன்னா...... வேணாமுன்னுட்டார்.  வரலைன்னு சேதி அனுப்பினோம்.
மகளும் பேரனும் வந்தாங்க. வாரம் ஒருநாள்  செவ்வாய்களில் தாத்தா வீடு. நேத்து ஆஸ்பத்ரி வாஸம் என்பதால்         செவ்வாய்க்குப் பதிலாக புதன். குழந்தை வந்தவுடன் வீடு  கலகலப்பா மாறிடுது இல்லே !
ரெஸ்ட் எடுக்கணுமுன்னு சொல்லிக்கிட்டே நாட்கள்  பறந்து போச்சு.  ச்சும்மாவே இருக்க முடியுதா என்ன ?   ' சும்மா இரு, சொல் அற' இது ரெண்டும் நமக்கில்லை.

ஏற்கெனவே புக் செஞ்சு வச்ச பயணத்துக்கு நாள் சமீபிக்குது. போகலாமா வேணாமான்னு புது யோசனை.  பயணத்தைத் தள்ளிப்போடலாமான்னு விசாரிச்சால்..... முடியாதாம். சரி. போகட்டும்  கட்டுன தொகையையாவது கொஞ்சம் கழிச்சுட்டுத் திருப்பிக் கொடுப்பானான்னா.... அதும் இல்லையாம்.  

அடராமா........... நஷ்டப்பட இஷ்டமில்லை. இன்னும் எட்டு நாள் இருக்கே பார்க்கலாம்......  கடைசி நாளில் முடிவெடுத்தால் ஆச்சு.  இப்படி உடம்புக்கு வந்துபடுத்திருச்சே.....

டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து நல்லாவே வேலை செஞ்சிருக்கு.  மொத்தம் முப்பத்தியாறு மாத்திரைகள். நாளுக்கு ஆறுன்னு  ஆறு நாளில் முடிஞ்சது. இந்த மருந்து இந்தியத் தயாரிப்பு !  மருத்துவ நண்பர் சொல்றார்.... "இப்பெல்லாம் நிறைய மருந்துகள் இந்தியாவிலே இருந்துதான் இறக்குமதி. Cheap & Best !"  அட!!!!

இதுக்கு நடுவில் தீபாவளி வந்துக்கிட்டு இருக்கு . கொஞ்சம் அலங்காரப்பொருட்கள் வாங்கிச் சின்னதா ஒரு அலங்காரம்.  சீனர்கள் நமக்காகச் செஞ்சு அனுப்பறாங்க.  வீட்டுக் கண்ணாடி ஜன்னலில் அங்கங்கே ஒட்டினால் போதாதா ? என்ன ஒன்னு...... UV Safetyன்னு    கண்ணாடிகளையெல்லாம்  Tinted Glass ஆகப் போட்டுருப்பதால் பளிச்னு தெரியலை. அதனால் வெளிச்சுவர்களிலும்  சில !

புரட்டாசி முடியப்போகுதே, முக்கியமான ஒன்னு விட்டுப்போச்சேன்னு நினைவுக்கு வந்துச்சு.  மாமியார் ஞாபகம்தான். சனிக்கிழமையாத்தான் இருக்கணுமா? பெருமாளுக்கு எல்லா நாளும் நல்லநாள்தானேன்னு அந்த திங்கக்கிழமை கொஞ்சமா மாவிளக்குப் போட்டேன். உடம்புக்கு ஆகாதுன்னு  பச்சை மாவில் எப்போதும் செய்யறதில்லை. வறுத்த மாவுதான்.
நம்ம  ஃபிஜி க்ளப்பில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா ஹவன் நடக்கப்போகுது.  சநாதன தர்ம சபையில், பொதுவா எல்லா முக்கிய பண்டிகைகளிலும்  முதலில் ஹோமம் செய்வதுதான் வழக்கம். அந்த பூஜைக்குப் போய் வந்தோம். எல்லோரும் நான் ரொம்ப இளைச்சுப்போனதாச் சொன்னாங்களேன்னு வீட்டுக்கு வந்து எடை பார்த்தால்..... ஏழு கிலோ எடை குறைஞ்சுருக்கேன்! கெட்டதில் நல்லது நடந்துருக்கு !
தீபாவளி தினத்தில்  நம்ம வீட்டில் சுமாராக ஒரு கொண்டாட்டம்.   முதல்நாளே நம்ம பசங்க ஜன்னு & அன்னுவுக்கு புது உடுப்புகளைப் போட்டுவிட்டாச்சு.  அழகிகள் !   மகனாகிய நண்பரும் மருமகளுமா இந்த வருஷ ஆரம்பத்தில் நாம்  போன இந்தியப்பயணத்தில்  எனக்கொரு புடவை எடுத்துக் கொடுத்தாங்க. அதுதான் எனக்கு இந்த வருஷத் தீபாவளிக்கு. அசல் காஞ்சிபுரம் !  வைர ஊசி!  என்னுடைய  பதிவுகளில் போடும் படங்களில் தேடி, என்னிடம் இல்லாத நிறம் எதுன்னு பார்த்து எடுத்தாங்களாம்.  இந்த ஸ்ரத்தை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு ! 

குழந்தைக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடநாள்.  வாரம் ரெண்டு நாட்கள் பள்ளிக்கூடம் போறான்.  காலை பத்துமுதல்  மாலை அஞ்சு மணிவரை.  ஆறு மணிக்கு மகள் குடும்பம் வந்தவுடன்  ஆரத்தியெடுத்துட்டு, மருமகனுக்கு  ரொம்பவும் பிடிச்ச  தஹிபுச்காவ் செய்ய  எல்லாம் தயாராக வச்சுருந்தேன்.  கூடவே பூஜையில் வச்சுருந்த  இனிப்புகளும்.   ஏற்கெனவே வீட்டில் இருந்த கொஞ்சம் பட்டாஸுகள்.  போனவருஷத்துச் சரக்கு !


குழந்தைக்கு ஒரு புத்தகமும், ஒரு  கூடாரமும், கொஞ்சம் கைநீட்டமும்!   கம்பிமத்தாப்புக் கொளுத்தியதில் கடைசிப் பகுதியில் இருக்கும் வெறுங்கம்பியில் கையைச் சுட்டுக்கிட்டான். லேசான சூடுதான். ஆனால் அழுகை பலம்!  ப்ளாஸ்டர் போட்டதும் அழுகை சட்னு நின்னது. குடும்ப வழக்கம் இல்லையோ ? இதெல்லாம் இல்லாம என்ன தீபாவளி ?
அவுங்க கிளம்பிப்போனதும் நாங்கள் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம்.  தீபாவளி ஸ்பெஷல் பூஜை. அருமை ! நல்ல கூட்டம்!!!!

மறுநாள் தாத்தா வீட்டு தினம் என்பதால்  காலையிலேயே வந்து மிச்சம் மீதிக் கொண்டாட்டத்தை முடிச்சான்.  கைவிரலில் புது ப்ளாஸ்டராம். பெருமையாக் காமிச்சான். 
பக்கத்துத் தெருவில் வசிக்கும்  ஃபிஜித் தோழி வீட்டிலிருந்து பலகாரங்கள்  வந்தது.  ஃபிஜி மக்கள்  ரொம்பப்பெரிய அளவில் 'திவாலி' கொண்டாடுவாங்க. ஒரு வாரத்துக்கு முன்னாலேயே  அடுப்புலே எண்ணெய்ச்சட்டி ஏறிடும்.  வீடு முழுசும்  அலங்கார விளக்குகள் வேற ! இது க்றிஸ்மஸ் சீஸன் என்பதால்  கடைகளில் சரம் சரமா, கலர்க்கலரா விளக்குகள் கிடைக்கும்.  அழைப்பு இருந்தாலும் இந்த வருஷம் என்னால் போக முடியலை.  

இந்த  திவாலிப் பண்டிகையை மட்டும் நியூஸியின் எல்லாப்பகுதிகளிலும் கொண்டாடறாங்க. நம்ம பார்லிமென்ட்டில் கூட !  பிரதமர், மேயர்கள் எல்லாம் வாழ்த்துச் செய்தி அனுப்பறாங்க. பெரிய வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் கூட ! இதில்லாம தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கும்போதே இங்கிருக்கும் ஏராளமான சங்கங்களில் / க்ளப்புகளிலும் கொண்டாட்டம் ஆரம்பிச்சுருது. எதுவாக இருந்தாலும் வீக் எண்ட் வேணுமே.... அதனால் சனிதோறும் திவாலிதான். தீபாவளி முடிஞ்சபிறகும் அடுத்துவரும் மாசம் முழுசுமே கொண்டாட்டம்தான். எத்தனை க்ளப் இருக்கு!  ஒரு முறை பதிமூணு முறை தீபாவளி விழாவில் கலந்துகொண்டோம். இதோ இப்ப எங்க நகருக்கு அடுத்த நகரில் (வேற மாவட்டம்)  தீபாவளி, நவம்பர் ஒன்னாம் தேதி வச்சுருக்காங்க.  நாம் பயணம் போவது உறுதியானால்....   தீபாவளி விழாவில் கலந்துக்க முடியாது. நம்ம கோபால் ஆரம்பிச்சு வச்ச இண்டியன் ஸோஷியல் & கல்ச்சுரல் க்ளப்பில் அக்டோபர்  கடைசி  வாரம்  சனிக்கிழமைதான் தீபாவளி டே !  உண்மை தீபாவளி  அக்டோபர்/ நவம்பரில் எப்போ வந்தாலும்  இந்த  நாளில் மாற்றமே இருக்காது !   ஏன் ? எப்படி ?


நியூஸியில் தொழிலாளர் தினம் னு கொண்டாட ஆரம்பிச்சது 1890 ஆண்டில்தான். வேலைநேரம்னு இல்லாம ஒவ்வொரு முதலாளிகளும் கண்டபடி வேலை வாங்கிக்கிட்டு இருந்த காலத்தில் தினமும் எட்டுமணி நேரம்தான் வேலை வாங்கணும்னு சட்டம் கொண்டு வந்தது அப்போதான். மேலதிகமா வேலை செய்தால் ஓவர்டைம்  சார்ஜ் தரணுமுன்னும்  முடிவெடுத்தாங்க. பத்து வருஷம் கழிச்சு,  இந்த தினத்துக்கு அரசு விடுமுறை கொடுக்கலாமுன்னு முடிவு செஞ்சப்ப அக்டோபர் மாசம் நாலாம் வாரத்தின் திங்கள்னு ஆச்சு. எப்படியும்  சனி ஞாயிறு விடுமுறை என்பதால் திங்களோடு சேர்த்து லாங் வீக்கெண்ட்!!  குளிர்காலம் முடிஞ்சு கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகியிருக்கும் என்பதால் எல்லோரும் உற்சாகமாகத்தான் கலந்துக்குவாங்க.   வேறெங்கேயும் பயணம் போகாமல் இருந்தால் நிறுவனர் என்ற வகையில் தவறாமல் நாமும் கலந்துக்குவோம். இந்தமுறை  பயணம் வாய்த்துள்ளது.

இந்த வார புதன் கிழமை நம்ம யோகா வகுப்பில் திவாலி விழா!   வழக்கம்போல எல்லோரும் பலகாரங்கள் கொண்டு போயிருந்தோம். வழக்கம்போல அலங்காரப்பொருட்கள் என் வகையில் ! விளக்கேற்றி வச்சு விழாவை ஆரம்பிச்சு வச்சேன். 

மறுநாள் வியாழனன்று, பேரன் பள்ளிக்கூடத்தில் திவாலி கொண்டாட்டம்.  பண்டிகையைப்பற்றி ஒரு சின்ன ஸ்பீச் கொடுக்கணும் நான்.  ராமன் மனைவியை ராவணன் தூக்கிப் போயிட்டான்.  அவளைத் திரும்பக் கூட்டிவர  ராமன் போய் ராவணனுடன் போர் செய்து, அவனைக்கொன்னுட்டு, மனைவியுடன் நாடு திரும்பும் தினம், அமாவாசை என்பதால்  வழியெல்லாம் இருட்டாக இருக்கு. அதனால் தீபங்களை ஏற்றி வச்சு ராமனை வரவேற்கிறாங்கன்னு சொல்லமுடியுமா ? குழந்தைகள் எல்லாம்  மூணு மாசத்திலிருந்து  நாலுவயசு வரையாச்சே !  Wife was stolen !!!  ஹாஹா...  இப்பெல்லாம் வைஃப் என்றுகூடச் சொல்றதில்லை. பார்ட்னர் !  நிறைய சீனியர்ஸ்க்கு இந்த சொல் பிடிக்கலைன்னு சொல்றாங்க.  நாங்கெல்லாம் முறைப்படி சர்ச்சில் கல்யாணம் செஞ்சுகிட்டவங்க. இந்த பார்ட்னர் என்ற சொல் என்னவோ போல இருக்குன்றது அவுங்க எண்ணம்.

தீபாவளி அலங்காரம், தீபாவளி வாழ்த்து அட்டை செய்யறது, இந்திய உடையான  வெரி லாங் பீஸ் ஆஃப் க்ளாத், எப்படிக் கட்டிக்குவாங்கன்னு சின்ன சின்ன ஆக்டிவிட்டியாக பிள்ளைகளுக்குக் காண்பிக்கலாமுன்னு மகளுடன் சேர்ந்து முடிவு செஞ்சேன்.  கடைசியில் ஏதாவது இனிப்பு கொடுக்கலாமான்னு  மகளைக்கேட்டால் கூடாதுன்னாள். சில பிள்ளைகளுக்கு ஏதேனும் அலர்ஜி இருக்கலாம்.  அதனால் நோ மிட்டாய், சாக்லெட், & இண்டியன் ஸ்வீட்ஸ்.  நல்லது. சரி. ஆனால்  வேறேதாவது சின்னப்பரிசுப்பொருட்கள் கொடுக்கலாமுன்னு நினைச்சேன்.  கடைக்குப்போய்த் தேடினால், எல்லாம் ஸான்ட்டா, ரெயின்டீர்னு போட்ட சின்னச் சின்னப் பரிசுகள்தான்.  கொஞ்சம் யோசிச்சதில் ஸ்டிக்கர் மாதிரி ஒன்னு கொடுக்கலாமுன்னு.... தேங்க் யூ ன்னு ஒன்னு கிடைச்சது.  

கடைசியில்  வியாழனன்று கால நிலை சரியில்லாமல்  கொடுங்காற்றும் பயங்கர மழையுமா இருக்கப்போகுதுன்னு வெதர் ரிப்போர்ட் வந்ததால்..... பள்ளிக்கூடங்களுக்கெல்லாம்  விடுமுறைன்னு அறிவிச்சுட்டாங்க.

பயணம் போகலாமா வேண்டாமான்னு  இருந்த குழப்பம்  முடிவுக்கு வந்தது. . பெருமாள் வா வான்னு கூப்பிடறார்.  வெள்ளிக்கிழமை காலை ஒரு நாலரைக்கு எழுந்து கடமைகளை முடிச்சுட்டு,  ஏழரைக்கெல்லாம் கிளம்பிடணும். வியாழன் ராத்ரி, பொட்டிகட்டி வச்சாச். 

வியாழன் ராத்ரி பனிரெண்டரை மணிக்கு, ஜெட் ஸ்டார்காரன் , ஃபோன் பண்ணறான். மெல்பர்ன்லெ இருந்து சிங்கை போகும் விமானத்தில்  எஞ்சின் கோளாறாம்.  பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்.  ஆனாலும் சரியாகும்னு சொல்ல முடியாது. ரிஸ்க்  வேணாமுன்னு, நம்மை க்வான்டாஸ் விமானத்துலே அனுப்புவாங்களாம்.  அதே நேரத்தில்தான் போய்ச் சேரும் என்பதால் ப்ரச்சனை இல்லையாம். பாதித்தூக்கத்தில் எழுப்புனதில் நல்ல தூக்கம் போச். ப்ச்.... 


காலையில்   காஃபி & ரஸ்க்னு  ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு,  சரியான நேரத்துக்கு வந்த டாக்ஸியில்  கிளம்பிப் போயாச்சு.  கிளம்பறதுக்கு முன்னால் சின்னச்சின்னதா எத்தனை வேலைகள்.....  செடிகளை மகள் பார்த்துக்கறேன்னு சொன்னது நிம்மதி. 

இந்தப் பயணத்தொடரில் 'பயணம்' இப்பதான் ஆரம்பிச்சுருக்கு !


Monday, November 24, 2025

நாமொன்று நினைக்க............( பயணத்தொடரில் இதையும் சேர்க்கத்தான் வேணும்..... )

எனக்கும் உடம்பு படுத்தல் அதிகமாக இருக்கு. பகலெல்லாம் சுமாராக இருந்தாலும்,  ராத்ரி நேரத்துலே மட்டும் பயங்கர இருமலும், அப்பப்போ சிறு காய்ச்சலும், உடல் சோர்வுமாக , நம்ம கால்வலிக்குக் கூட்டுச் சேர்ந்துருக்காங்க. தூக்கம் என்பதே இல்லாமல் போயிருக்கு. 
நான் ஏற்கெனவே நினைச்சபடி எதுவும்  சரியா அமையலை. கொலுவுக்குக் கூப்பிட  நினைச்ச தோழிகள் பலருக்கு அழைப்பு அனுப்பவேயில்லை. வர்ற சனிக்கிழமை நடத்த நினைச்சுருந்த  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயண நிகழ்ச்சியைக்கூட தாற்காலிகமாத் தள்ளி வைக்கவேண்டியதா ஆச்சு. ப்ச்.... 

'மெனு எல்லாம் அப்படியே இருக்கட்டும்.  கொஞ்சம் உடம்பு சரியானதும் ஒரு சனிக்கிழமை வச்சுக்கலாமு'ன்னு நம்ம செந்திலிடம் சொல்லியாச்சு.  மார்கழி சரியாக இருக்கும்தானே ? 

விஜயதசமியன்னிக்குக் காலையில் எழுந்துக்க முடியாம  ஒரே உடல்வலி.  நாளும் கிழமையுமா இப்படிக்கிடக்க மனசு ஒப்புதா ?  சட்னு கடமைகளை முடிச்சு, பாலும் பழங்களுமே நிவேத்யம் என்று நம்ம பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு,  சூர்யகாயத்ரியின் 'ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்க விட்டேன். நம்மவரே ஸ்வாமி விளக்கேற்றி ஆரத்தியெடுத்தார்.  பெரிய எழுத்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வச்சு வாசிக்கவும் செய்தார். 

நம்ம டாக்டரின் க்ளினிக்கில்  அன்றைக்கு அப்பாய்ன்ட்மென்ட் இல்லைன்னுட்டு ,  மூணு நாள் கழிச்சுத் திங்கள் கிழமைக்குக் கொடுத்தாங்க. நடுவிலே வீகெண்ட் வேற வந்துருதே!

இங்கெல்லாம் நினைச்சா உடனே டாக்டரைப் பார்க்க முடியாது. அவசரமுன்னா  After hour  surgeryன்னு  24 மணிநேர ஹாஸ்பிடல் ஒன்னு இருக்கு. அங்கே போகணும்.  அங்கேயும் போய் உக்கார்ந்து தேவுடு காக்கணும்.  இல்லைன்னா நம்ம ஊர் ஆஸ்பத்ரி ( இங்கே தனியார் மருத்துவனைகள் கிடையாது) அவசர சிகிச்சைப்பிரிவுக்குப் போகணும். அங்கேயும் தேவுடேதான். சில சமயம்  மூணு மணிநேரம் கூட ஆகலாம். என்ன ஒன்னு..... ஆம்புலன்ஸ்லே போனால்.... உடனே பார்த்து சிகிச்சை ஆரம்பிச்சுருவாங்க.  அதுக்காக...... இருமல், உடம்பு வலி, காய்ச்சலுக்கு ஆம்புலன்ஸைக் கூப்பிடறது நல்லாவா இருக்கு ?  ஒரு நியாயம் வேணாம் ?

அடுத்த வந்த நாட்கள் கொஞ்சம் பிரச்சனையாத்தான் போச்சு.  எதையும் சாப்பிடவே பிடிக்கலை.  கஷ்டப்பட்டுக் கொஞ்சம் சாப்பிட்டாலும் ஒரே டேஷ். காய்ச்சலும் விடலை. பயங்கரமான இருமலும்..... கூட.   இதுலே   கபம் வேற கட்டிகட்டியா.....   மகள் வந்து பார்த்துட்டு, இருமல் ஸிரப்பும், அப்படியே  டீஹைட்ரேஷன் ஆகிடபோகுதேன்னு Hydralyte (Electrolyte Powder )வாங்கி வந்து கொடுத்தாள்.   

விஷயம் தெரிஞ்சதும் நம்ம யோகா ஃபேமிலியினர் சாப்பாடு செஞ்சு கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க.

திங்கக்கிழமைக் காலை பத்துமணிக்கு டாக்டரைப் பார்த்தோம். செக்கப் செஞ்சுட்டு, நம்மை பப்ளிக் ஹாஸ்பிடலுக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செஞ்சாங்க.  ஹாஸ்பிடலுக்கு ஃபோன் செஞ்சு நம்மை அனுப்பறதா விவரங்கள் எல்லாம் சொல்லிட்டாங்க.  மகளைக் கூப்பிட்டுச் சொன்னதும்.....  உடனே வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போனாள்.

இங்கே ஹாஸ்பிடல் பார்க்கிங் இன்னொரு பிரச்சனை.    வளாகத்தின் வெளியே சாலையையொட்டி ஒரு பத்து வண்டிகள்வரை நிறுத்தக் கார்பார்க்கிங் இருக்கு. பார்க்கிங் மீட்டரில் அப்பப்பக் காசைக் கட்டிட்டு வரணும்.  ஆனாலும் அங்கெ இடம் கிடைப்பது அபூர்வம்தான்.   ஹாஸ்பிடலில் இருந்து ஒரு ரெண்டரைக்கிமீ தூரத்தில்  ஹாஸ்பிடல் பார்க்கிங் ஏரியா  தனியாக வச்சுருக்காங்க.  அங்கே நிறுத்திட்டு,  அங்கேயிருந்து ஒரு ஷட்டில் சர்வீஸில்  ஆஸ்பத்ரிக்கு வரலாம்.  அதே போல் ஆஸ்பத்ரியிலிருந்து  பார்க்கிங் ஏரியாவுக்கும் வரலாம்.  இலவச சேவைதான் இந்த ஷட்டில் சர்வீஸஸுக்கு மட்டும்.  நம்ம வண்டியைப் பார்க்கிங்கில் நிறுத்தச் சார்ஜ் உண்டு.   ஆஸ்பத்ரி  ஊழியர்களும் இங்கே வண்டியை நிறுத்திட்டு, ஷட்டிலில் தான் வேலைக்கு வர்றாங்க. 

நாங்களும்  சிட்டிக்கவுன்ஸிலிடம் ஹாஸ்பிடல் பார்க்கிங் , ஹாஸ்பிடலுக்குப் பக்கத்துலேயே இருக்கணுமுன்னு போராடிக்கிட்டு இருக்கோம். இப்போ புதுசா ஒரு அடுக்குமாடிப் பார்க்கிங் கட்டடம்  ஆஸ்பத்ரிக்குப் பக்கத்துத் தெருவில் கட்டிவிட்டுருக்காங்க. அங்கிருந்து போக்குவரத்து அதிகம் இருக்கும் மெயின்ரோடு வழியா  ஒரு அரைக்கிமீ நடந்துதான் ஆஸ்பத்ரிக்கு வரணும்.  நோயாளியை எப்படி அரைக் கிமீ நடத்திக்கூப்பிட்டுப்போக?  ப்ச்... ஸல்யம்.....
மேலே படம்:  சிகப்புக்குள் இருப்பது பார்க்கிங் கட்டடம். ஹாஸ்பிடல் மாடியில் இருந்து ஒரு க்ளிக்.

அவசர சிகிச்சைக்கு இப்பப் புதுசா தனிக்கட்டடம் கட்டியிருக்காங்க. அதிலிருந்து மெயின் ஆஸ்பத்திரியின் மற்ற பகுதிகளுக்கு போய் வர வழிகளும் பேஸ்மென்ட்டில் அமைச்சுருக்காங்க.  நாங்கள் போனதும்.... எங்களைத் தனியேக் கூட்டிப்போய் வேறொரு இடத்தில் வச்சு, ஒரு செக்கப் ஆச்சு.  எமெர்ஜென்ஸியில் இருக்கும் ஒரு வார்டில் பெட் அலாட் செஞ்சு என்னை அங்கே கொண்டு போயிட்டாங்க.  மகளும் கூடவே இருக்காள். நடுவில் ஒருமுறை பார்க்கிங் மீட்டருக்கு ஃபீட் பண்ண போயிட்டு வந்தாள்.

டாக்டர்ஸ் குழு வந்து விசாரிச்சு ஒவ்வொரு டெஸ்ட்டா எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.  பகல் ரெண்டுமணி போல ஆச்சேன்னு, நம்மவரையும் மகளையும் சாப்பிடப்போகச் சொன்னேன்.  தகப்பனும் மகளுமாத் திரும்பிப்போய்,  டாக்டர் க்ளினிக்கில் விட்டுட்டு வந்த நம்ம காரை எடுக்கத்  தகப்பனை இறக்கி விட்டுட்டுப்  போனாளாம் மகள்.

கொஞ்ச நேரத்தில் நம்மவர், திரும்ப வந்துட்டார். ஷட்டிலில் வந்தாராம். அதுக்குள்ளே எனக்கு ஈஸிஜி, ப்ளட் டெஸ்ட், எக்ஸ்ரே எல்லாமும் ஆச்சு.   என் வழக்கமான மருந்து மாத்திரைகளோடு,  இன்னும் ரெண்டு ஊசி மருந்தும் ஆச்சு. ஏற்கெனவே ட்ரிப் ஏத்தறதுக்கு புறங்கை நரம்பில்  குத்திவச்சுட்டதால்.... எல்லாம் அதுபாட்டுக்கு அது..... ரத்தம்  மட்டும் இன்னும் ரெண்டுமுறை எடுத்துக்கிட்டுப்போனாங்க.  ப்ளட் கல்ச்சர்க்கு வேணுமாம்.  ப்ளட் ஷுகர் டெஸ்ட்டும் ஆச்சு. BP செக்கப் அப்பப்ப.... அதுபாட்டுக்கு எகிறிக்கிடக்கு !    மணிக்கொருமுறை டாக்டர்ஸ் வந்து போறாங்க.  

நம்ம யோகா குடும்பத்துக்குச் சேதி  தெரிஞ்சதும்  விஸிட் வர ஆரம்பிச்சாங்க. ப்ளாக் கேட்ஸ் போல எனக்குக் காவல் இருக்கு  யோகா குடும்பம் . . கையில் ஏகே 47 மட்டும் மிஸ்ஸிங். அப்பப்பப் படங்கள் எடுத்து 'யோகா குடும்ப வாட்ஸப்'பில் பகிர்தல் வேற.... உடனே   வராதவர்கள் ஆறுதல் சொல்லி, விரைவில் நலம் வேண்டி பதில்.  இப்படி  ஜாலியாப் பொழுது போகுது ! 


இங்கே  ஹாஸ்பிடலில் சாயங்காலம் ஆறுமணிக்கெல்லாம் டின்னர்  கொடுத்துருவாங்க.  எனக்கு ஒன்னும் வேண்டியிருக்கலைன்னு திருப்பி அனுப்பினேன். 

ராத்ரி ஒன்பதுவரை இங்கேயே இருந்தாங்க, கோபாலும்  குடும்ப நண்பர்களும்.  திடீர்னு இங்கே வந்ததால்  எந்த முன்னேற்பாடும் செஞ்சுக்கலை.  மேலும்  என்னை, ஆஸ்பத்ரியில்  வேற வார்டுக்கு மாத்தறதாச் சொல்லி இருந்தாங்க. எங்கேன்னு தெரியாததால் அங்கே போனதும்தான் வீட்டுக்கு செய்தி அனுப்பணும். 

ராத்திரி பதினொருமணிக்கு மெயின் பில்டிங்க் கொண்டுபோய்  நம்ம உடல்நிலைக்கான வார்டில்( a medical ward specializing in respiratory conditions)இருக்கும் நர்ஸ் இன் சார்ஜிடம்  ஒப்படைச்சாங்க. ஸ்வந்தம் நாடு ஆலப்புழையாம்.  நன்னாயி.   படுக்கை ரெடியாக இருந்தது.  அடுத்த அஞ்சாவது நிமிட்,  டாக்டர் வந்து பார்த்தார்.  இன்னும் லேப் டெஸ்ட் ரிப்போர்ட் வரலை.  கொஞ்சநேரத்தில் வந்துரும்னு சொல்லிப்போனார். 

சரியான  தூக்கமே இல்லை.  ரெண்டு மணிக்கொருமுறை  Drip மாத்த,  BP  எடுக்க, ப்ளட் ஷுகர் பார்க்கன்னு நர்ஸுகள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துக்கிட்டே இருக்காங்க. இதுக்கிடையில் டாக்டர் வந்து,  வேற மருந்துகளைக் கொடுக்கப்போறோம்.  நிமோனியான்னு ரிஸல்ட் வந்துருச்சுன்னார். 

காலை ஒரு நாலரை மணிபோல  வீட்டுக்கு செய்தி அனுப்பினேன்.  ஹாஸ்பிடல் வைஃபை நல்லாவே வேலை செய்யுது.  வார்டு நம்பர் விவரம் அனுப்புனதோடு  பல் விளக்கத் தேவையானவை, மாத்து உடுப்பு எல்லாம்  காலையில் கொண்டுவரச் சொன்னேன். 
 
காஃபி, டீ க்கு தனி ஊழியர்கள் ஒரு நாளைக்கு நாலைஞ்சு முறை  வந்து விசாரிச்சு நமக்கு வேண்டியதுபோல் கலந்து கொடுத்துட்டுப் போறாங்க. ஒரே ஒரு கஷ்டம்....  காய்ச்சாத பால்.  தனியாக ஒரு பெரிய அறையில் காஃபி, டீ நாமே கலந்து குடிக்கும் வகையில்  வச்சுருக்காங்க.  எப்ப வேணுமோ அப்போ அங்கே போய் குடிச்சுக்கலாம். அங்கே ஒரு  பெரிய டிவியும்  சோஃபாக்களும் இருக்கு.  படுக்கை போரடிச்சசால் கொஞ்சநேரம் அங்கே. இப்படி எல்லா வார்டுகளிலும் வச்சுருக்காங்க.   
காலை ப்ரேக்ஃபாஸ்ட் வந்துச்சு.  கூடவே டாக்டர்ஸ் குழுவும். கொஞ்ச நேரத்தில் நம்மவரும் வந்தார். காலைக்கடமைகளை முடிச்சுட்டுத் தயிர் மட்டும் சாப்பிட்டேன்.  நமக்கும் விஸிட்டர்ஸ் வர ஆரம்பிச்சாங்க.  நம்ம யோகா ஃபேமிலியில்  சிலர் இங்கே வெவ்வேற துறைகளில் இருக்காங்க. சின்னச்சின்ன ப்ரேக் எடுத்துக்கிட்டு வந்து பார்த்துட்டுப் போறாங்க.
இங்கே ஆஸ்பத்ரியிலும் நிறைய ஃபிஜி இந்தியர்கள்  வேலை செய்யறாங்க.  நமக்கு நல்ல பரிச்சயமுள்ள பலரும் கூட. வேறேதோ காரணத்துக்காக  வந்த  ஒருவர் நம்மைப்பார்த்துப் பேசிட்டுப்போனதும் இன்னும் சிலர் வந்துட்டுப்போனாங்க.  ட்ரிப் ஏறிக்கிட்டு இருப்பதால்  எங்கேயும் எழுந்து போக முடியாமல் படுக்கையே கதி.

நம்மவரை  லஞ்சுக்கு போகச் சொல்லி அனுப்பிய கொஞ்ச நேரத்தில் நமக்கும் லஞ்ச் வந்துருச்சு.  ஒன்னும் சரியில்லைன்னு  சூப் மட்டும் குடிச்சேன்.  கொஞ்ச நேரத்தில் ஒரு டீயும்.  ரெண்டுமூணு மணி நேரமா ஜூரம் இல்லை. 
சீனியர் டாக்டர் வந்து பார்த்துட்டு,  காலையில் மாற்றிக்கொடுத்த மருந்து வேலை செய்யுதுன்னார். நிமோனியா கன்ஃபர்ம்டு.  எப்போ வீட்டுக்குப் போகலாமுன்னு நான் கேட்டதுக்கு, இன்றைக்கே கூடப் போயிடலாம்.  மருந்துச் சீட்டை, உங்க மருந்துக்கடைக்கு அனுப்பறோம். நீங்க  அதை  ஆறுநாள் தொடர்ந்து எடுத்துக்கணும். வீட்டிலும் கம்ப்ளீட் ரெஸ்ட்லே இருக்கணும்.   எட்டு வாரத்தில் இன்னொரு எக்ஸ்ரே எடுக்கணும்.  அந்த விவரத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.  இதுக்கிடையில்  உடல்நிலை சீராகலைன்னா உடனே நாம் தகவல் அனுப்பணும்னார்.  
செல்ஃபோன் எதுக்கு இருக்கு ?  உடனே நம்மவருக்கு செய்தி அனுப்புனதோடு, யோகா குடும்பத்துக்கும், 'வீட்டுக்கு விட்டுட்டாங்க.  விஸிட்டர்ஸ் வீட்டுக்கு வந்தால் போதும்'னு  தகவல் கொடுத்தேன்.   அப்படியும் அங்கே வேலை செய்யும் இருவர்(யோகா குடும்பம்தான்)வந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.
நம்மவர் வந்ததும்  டிஸ்சார்ஜ் லெட்டர் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வர்ற வழியிலேயே ,   மருந்து ரெடியா இருக்குன்னு பார்மஸியிலிருந்து செய்தி.  அதையும் வாங்கிக்கிட்டு வீடு வந்தாச்சு.

  இங்கே நியூஸியில் நம்ம GP யோ, ஹாஸ்பிடல்  டாக்டர்ஸோ நமக்கு எழுதிக்கொடுக்கும் மருந்துக்கள் எல்லாமே  நமக்கான மருந்துக்கடைகளில் இப்பெல்லாம்  இலவசம்தான்.  சில வருஷங்களுக்கு முன்புவரை,  எவ்வளோ விலை இருக்கும் மருந்துன்னாலும் ஒரு மருந்துக்கு அஞ்சு டாலர்னு  நாம்  கட்டணும்.

குளிச்சுட்டு சாமி விளக்கேத்தி வச்சேன். நல்லவேளை இதெல்லாம் நவராத்ரி சமயம் நடத்தாமல் காப்பாத்திட்ட பெருமாளே................  ஒன்பதுநாளும் ரொம்பச் சின்ன அளவிலாவது கொண்டாட வச்சேயே அதுக்கே நன்றி ! 

நம்ம செந்திலும் அவர் மனைவியுமா  டின்னர் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க. பீன்ஸ் பொரியலும், பருப்பும்.  ரொம்பப் பசின்னு நல்லாவே சாப்பிட்டேன்.   

Sunday, November 23, 2025

சுடுகாட்டைச் சுத்திப்பார்க்கப் போனோம்

நம்மூரில் முதல்முறையா இப்படி ஒரு சேவை ஆரம்பிச்சுருக்காங்க. அது ஆச்சு ஒரு அஞ்சு மாசம்.  மூணு மாசத்துக்கு முன்னால் 'எந்தமாதிரி நடத்தறோம்முன்னு வந்து பாரு'ன்னு ஒரு அழைப்பு வந்தும்  வேறேதோ சில காரணங்களால் போக முடியலை.
இப்போ மறுபடியும் ஒன்னு வந்தது.  தண்ணீரில் ஈமச் சடங்கு !  நம்மூர்களில்  மரணித்தவர்களுக்கு  ஆத்தங்கரைப் பக்கம் தான் பொதுவாக எரியூட்டும் சடங்கு நடத்துவார்கள் ஒரு காலத்துலே . அப்ப அதுபோல ஒன்னுன்னு நினைச்சேன். ஏவான் நதி, இங்கே நம்மூருக்குள் சுத்திச்சுத்தி ஓடித்தான் கடலில் கலக்கிறது.  எந்தப்பகுதியில் இது நடக்குமாம்?     ஙே............

இன்றைக்கு 'ஓப்பன் டே' பகல் ஒன்னு முதல் நாலுவரை. அதுவும் நகரத்துக்குள் !!!!!

ஒரு ஒன்னரைபோலக் கிளம்பிப்போனோம்.    சாஸ்திர சம்ப்ரதாயங்கள் முடிஞ்சதும் சவப்பெட்டியைக் கடைசியாகக் கல்லறை கொண்டுபோகன்னே தனிப்பட்ட முறையில் வடிவமைச்ச காரும், அதுக்குப் பக்கத்திலேயே ஒரு 'மோட்டார் ஸைக்கிளில் சவப்பெட்டியை வச்சுக் கொண்டுபோகும் வசதியுள்ள ஒன்னும் முன்வாசலிலேயே வச்சுருந்தாங்க.
பள பளன்னு மின்னும் மோட்டர் ஸைக்கிள் மனசை இழுத்தது உண்மை.  எனக்கு இதுலேதான் போகணும் என்றதும், நம்மவர் சொன்னார், அது அன்றைய காலநிலையைப் பொறுத்ததுன்னு.....  'மழையோ, குளிரோ என்னை ஒன்னும் செய்யாது' ன்னு சொன்னேன்.

அங்கே இருந்தவரிடம், படம் எடுக்கலாமான்னதுக்கு, நான் நல்ல ப்ரிண்ட் தரேன்னு 'அந்தக் காருக்குள்' இருந்து எடுத்துக்  கொடுத்தார்.

வளாகத்தில் ஒரு கூடாரம் போட்டு, நாற்காலிகள்  போட்டு வச்சுருக்காங்க. ஒரு பக்கம் குடிதண்ணீர். அடுத்த பக்கம் குடைகள். ரெண்டுமே  தண்ணீருக்கு !
உள்ளே ஒரு வீடியோ காட்சி நடக்குதாம். அது முடிஞ்சதும்,  பார்வையாளர்கள் நகர்ந்ததும் நாம் போகலாமாம்.

நம்ம முறை வந்ததும் நாம் உள்ளே போனோம். சின்ன ஹாலாக இருக்கு.  திரைக்கு உயிர்வந்ததும் வாட்டர் க்ரிமேஷன் மெஷீன் எப்படி வேலை செய்யுதுன்னு...... வீட்டுக்கு வந்தவுடன் யூ ட்யூபில் தேடினால் இதேதான் இருக்கு. ஆனால் அவுங்க காமிச்சதில்,  இந்த கேர் டேக்கர்ஸ் கம்பெனி, முதலாளிகளும், மற்ற உயர் பதவி வகிப்பவர்களுமா இடைக்கிடையே  விவரங்கள் பேசியதில்  நாலு நிமிட் வீடியோவை காமணி நேரத்துக்கு நீட்டிட்டாங்க.


https://youtu.be/tecbXKsNJPs?si=gLBkHMcOHBgYM7-R


அப்புறம் கேள்வி- பதில். பலரும்  பலகேள்விகள் கேட்டாங்க. நம்மவர், எலும்புகளை என்ன செய்வீங்கன்னார்.  அதை ஒரு மெஷீனில் பவுடராக அரைச்சு, அதை அப்படியே அஸ்தியாகக் கேக்கறவங்களுக்கு அழகான ஜாடிகளிலும். நகையாகவோ, பொருளாகவோ செஞ்சு தரச்சொன்னால் அப்படியும் செய்து தருவாங்களாம்.(இதுக்கெல்லாம் தனிக் காசு) மகளுடைய செல்லம் சாமிகிட்டே போயிருச்சுன்னால்.... நாங்க பெட் க்ரிமெடேரியத்துக்குத்தான் அனுப்பறோம்.  மகள் விருப்பப்படி அந்த அஸ்தியை ஒரு மணியாகச் செஞ்சு கொடுக்கறாங்க.  அதை ஒரு ப்ரேஸ்லெட்டில் கோர்த்துப் போட்டுக்கறாள். இப்படி நாலு மணிகள்,  அவள் ககையில். எனக்குச் சங்கடமா இருக்குதான். என்ன செய்ய ? ஒரு செல்லமும் வேணாமுன்னால் கேட்டால்தானே ? ப்ச்....

அடுத்த அறைக்குக் கூட்டிப்போனாங்க. மெஷீன் அங்கெதான் இருக்கு !  ஒரு குறிப்பிட்ட உல்லன் துணி கொண்டு  பொதி போல  மூடி மெஷினுக்குள் அனுப்பறாங்க.  மெஷீனைத் திறந்து பார்த்தால் ஃப்ரன்ட் லோட் வாஷிங் மெஷீன் போல, ஆனால் நீளமா இருக்கு.  அங்கே சில க்ளிக்ஸ் ஆச்சு. எல்லாம் மூணரை முதல் அஞ்சு மணி நேரத்தில் முடிஞ்சுருமாம். இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வகையாம்.




அந்தத் தண்ணீரை என்ன செய்வீங்கன்னு நான் கேட்டேன்.  கழிவு நீருக்கான Drain வழியாகப் போயிருமாம்.  இதனால் மண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.  

அப்போ நாம்  வழி அனுப்பும் சவப்பெட்டி என்ன ஆகுமுன்னு இன்னொரு கேள்வி என்னாண்டை.  இங்கே சவப்பெட்டி பயங்கர விலை ! ஆறாயிரம் வரை போகுது.  ஆனால் இந்த முறையில் அடக்கம் என்றால் சவப்பெட்டியே தேவை இல்லையாம்.  இவுங்களே ஒரு சவபெட்டியை வாடகைக்குத் தர்றாங்களாம்.
என்ன ஒன்னு.....  அடக்கத்துக்கு முன் நடக்கும்  நிகழ்ச்சிக்கு உறவினர், நண்பர், தெரிஞ்சவங்கன்னு பலரும் கலந்துகொள்ள அமைத்த ஹால் அளவு ரொம்பச் சின்னதுன்னு சொன்னதற்கு, பெரிய கட்டடம் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காங்களாம்.  எப்படி இருக்குமாம்?  இப்படி ! (கீழே: படம்)
தீ, தண்ணீர்  இவைகளில் எதெதுக்கு என்ன செலவுன்னு ஒரு பட்டியலும் அச்சடிச்சு வச்சுருந்தாங்க. நாலு வகை சடங்கு. அஞ்சுலே இருந்து பதினாலு வரை இருக்கு. அப்படியொன்னும் பெரிய வித்தியாசம் இருக்கறாப்போல இல்லை. ஒவ்வொன்னிலும் நானூறு, ஐநூறுன்னு தான் வித்தியாசம்.  இதுக்கு மெனெக்கெடுவானேன்னு எனக்குத் தோணுச்சு.

போகட்டும், புது வியாபாரம். எல்லா மக்களுக்கும் ஒருநாளில்லாட்டா ஒருநாள் தேவைப்படும் சமாச்சாரம் ! மார்கெட்டிங் செய்யறாங்க ! நடக்கட்டும் !