Monday, September 30, 2013

வாரம் ஒரு முறை ரீசார்ஜ் செஞ்சால்தான் வாழ்க்கை (சிங்கைப்பயணம் 4)

சாப்பாடு ஆனதும் அப்படியே  திரும்பி   Chander ரோடு பக்கம் போனால்  வெஸ்ட்டர்ன் யூனியன் வாசலில் பெரிய வரிசை நிக்குது.  ஊருக்குப் பணம் அனுப்பக் காத்திருக்கும் மக்கள்ஸ். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை பாருங்க. தொழிலாளர்களுக்கு லீவுநாள்.  மதியம் முதலே இந்த ஏரியாவுக்கு வரத் தொடங்கிருவாங்க. பணம் அனுப்பிட்டு, மற்ற நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்து இங்கேயே ராச்சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டு  அடுத்த ஒரு வாரத்துக்கு வேண்டிய மனோ பலத்தையும், மகிழ்ச்சியையும் சுமந்துக்கிட்டுப் போவாங்க. சுருக்கமாச் சொன்னா ,  மனசுக்கு ரீசார்ஜ் ஏத்திக்கறது!

மகிழ்ந்துன்னு சொல்றேனே தவிரக் கவலை படிந்த முகங்களே கண்ணில் பட்டன என்பதே உண்மை. எனக்குத்தான் கண்ணில் கோளாறோன்னு கூடஒரு சமயம் நினைச்சேன்.  கடின உழைப்பினால் மெலிந்துபோன உடல்கள்...ப்ச்.....:(


ஆஹா....அதான்  அறையை விட்டுக்கிளம்புமுன்  ஜன்னலில்  பார்த்தபோது, பார்க் பகுதி புல்வெளியிலும் மரநிழலிலும் அங்கங்கே  சின்ன முடிச்சுகளா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்களோ!

முந்தி  ஒரு  இருபத்தியெட்டு வருசங்களுக்கு முன்  வீரமாகாளியம்மன் கோவில் வாசல் மட்டுமே  தமிழகத்தொழிலாளி மக்கள் கூடுமிடமா இருந்துச்சு. நானும் அப்ப  அவங்களோடு கோவில் வாசலில் உக்கார்ந்து கதை பேசி இருக்கேன். மிஞ்சிப்போனா ஒரு முப்பது நாப்பது ஆட்கள் இருப்பாங்க.

 இப்ப?ஆயிரக்கணக்கானவர்கள்!  இத்தனை பேரின் உழைப்பால் சிங்கை ஜொலிச்சுக்கிட்டு இருக்கு!


இந்தத் தெருவிலேயும் ஏராளமான உணவகங்கள் இருக்கு.  தூரக்கே மூணு வடக்கிந்திய வகை கோபுரங்கள் . என்ன கோவிலா  இருக்கும்? இந்தப்பக்கமெல்லாம் வந்ததே இல்லையேன்னு காலை வீசிப்போட்டோம்.லக்ஷ்மிநாராயண் மந்திர். உள்ளே போனோம்.  நல்லபெரிய ஹால்.  நல்ல கூட்டம். குழந்தையும் குட்டிகளுமா  ஜேஜேன்னு  இருக்கு. ஒரு பக்கம் மேடையில் நாலு சின்ன சந்நிதிகள்.




ராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன், லக்ஷ்மி நாராயணர் எல்லாம்  ஜிலுஜிலுன்னு  வடக்கத்திய  துணிமணிகளோடு  யூனிஃபாம் போட்டுக்கிட்டு இருக்காங்க.நல்ல அழகான முகங்கள்.

மேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம் விட்டுருக்காங்க.   நந்தி இருக்காரேன்னு சிவலிங்கம் தேடினால்  எல்லோரும் வெண்பளிங்கி இருக்க இவர் மட்டும் கரும்பளிங்கில்!


சிம்மவாஹினி, சரஸ்வதி, லக்ஷ்மி  மூவரும் தனிச்சந்நிதியில். சஞ்சீவி மலையுடன் நம்ம நேயுடு/!



இந்தப் பக்கம் புள்ளையார். பக்கத்தில்  நிறைய முகங்களோடு ஒரு சாமி.  பண்டிட்டிடம் விவரம் கேட்டால்... 'வோ......  ஆப்லோக் கா  முர்கா ஹை. ஆர்மோகம்' என்றார். அட...  ஆமாம்...ஆறுமுகம்!




 மேடைச் சந்நிதியை மூடிட்டு, ஒருபக்கமா உக்கார்ந்து பக்தர்களுக்கு  பூ, சிந்தூர் கொடுத்து ஆசிகள் வழங்கிக்கிட்டு இருக்கார் பண்டிட். முக்கியமா, சின்னப்பசங்களைக் கூப்பிட்டு  பிரசாதம் கொடுத்தார்.

நாங்களும் குங்குமம் வாங்கிக்கிட்டு வெளியே வந்தோம். கோவில் ஹால் முழுசும்  வடக்கர்கள்  கூட்டம். தமிழ்முகம் நாங்க மூணுபேர்மட்டுமே!


கீழ்தளத்தில்கோவில்.  மாடியில் குடியிருப்புகளோ என்னவோ?  தனியார் கட்டிடமாத் தெரிஞ்சது. நாலே எட்டில்   குடை கேன்டீன் தமிழ்நாடு ஸ்பெஷல் என்ற இடம்.  உள்ளே வெவ்வேற உணவுக்கடைகள் இருக்கு போல. வெளியே இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. மக்கள் வெள்ளம்.

'ஒரு வாரத்துக்குரிய பிஸினெஸ் இன்னிக்கு ஒரே நாளிலே நடந்துரும் போல'ன்னார் கோபால்.  உண்மைதான்!





 இதுக்கு எதிரிலும் ஒரு ஹெரிட்டேஜ் பில்டிங் இருக்கு. 1900 வது ஆண்டு கட்டப்பட்டது.  அப்போ கட்டப்பட்ட சைனீஸ் வில்லா ஸ்டைல் வீடுகளில் எஞ்சி இருப்பது  இது ஒன்னுதான்..   அந்த நாளில்  ஒரு சீன வியாபாரி தன் மனைவிக்குக் கட்டிய வீடாம். எட்டு அறைகள். Residence of Tan Teng Niah. தமிழன் பேட்டையில் தைரியமா இடம்புடிச்ச சீனர்!

இப்போ   உலகத்தில் உள்ள எல்லா கலர்களிலும் பெயிண்ட் அடிச்சு அழகுபடுத்தி(??? !!!)  வியாபார நிறுவனம் ஒன்னுக்கு லீஸ்லே விட்டுருக்காங்க.  இந்த ஏரியாவில்  ஏழெட்டு மாமரங்கள் நிழல் கொடுக்குது.  பூவும் பிஞ்சுமா பார்க்கவே அருமை!

அப்படியே செராங்கூன் சாலைக்குள் புகுந்து நம்ம அறையை நோக்கிப் போறோம். காரைக்குடியில் இளநீர் குடிக்க ஒரு ஸ்டாப் போட்டோம். முந்தி இங்கே சிங்கையில் கிடைக்கும் தாய்லாந்து இளநியைக் காணோம்.  இப்ப மலேசியாவில் இருந்து வருதாம்.  பார்க்க பெருசே தவிர ருசி அதைப்போல் இல்லை:(


திடீர்னு , 'கணேஷ், கணேஷ்'ன்னு கோபால் உரக்கக் குரல் கொடுக்கறார். புள்ளையார் வர்றாராக்குமுன்னு   எட்டிப் பார்த்தால்  அட! நம்ம கணேஷ்!  குடும்பத்தோடு எதிர்சாரியில் நடந்து போய்க்கிட்டு இருந்தவர்,  சட்னு தன் பெயரை உரக்க யாரோ கூப்பிடுறதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துட்டு  சாலையைக் கடந்து இந்தப்பக்கம் ஓடி வந்தார்.


நியூஸியில் இருந்தவர்.  இவர் இல்லாம நம்ம வீட்டுலே  எந்த விசேஷமும் நடக்காது.  எல்லாத்துக்கும் புள்ளையார் முதலில் வேணாமோ?   அஞ்சு வருசங்களுக்கு முந்தி இந்தியாவுக்குத் திரும்பிப்  போனவர்  அங்கே வேலையில் சேர்ந்து  சென்னையில் ஒரு அழகான வீட்டையும் கட்டிட்டார். அந்த க்ரஹப்ரவேசத்து சமயம் நாங்க இந்தியாவுக்குப் போயிருந்தாலும்  அந்த குறிப்பிட்ட நாள்   போடியில் மாமியார் வீட்டுக்கு விஜயம்.    அன்றைக்கு இரவுதான்  சென்னைக்குத் திரும்பி வர்றோம்.  மறுநாள்தான் புது வீட்டைப்போய்ப் பார்க்க முடிஞ்சது. சென்னை வெயிலுக்குப் பிள்ளைகள் எல்லாம் கருத்துப்போய் கிடந்தாங்க.

கோபாலின் மணிவிழாவுக்கு அவுங்க வந்தப்ப, சிங்கையில் வேலை கிடைச்சுருக்குன்னும்,  முதலில் அவர் மட்டும் போவதாகவும் சொல்லி இருந்தார்.  பிள்ளைகளுக்கு அந்த வருசப்படிப்பு முடிக்கணுமே.  இங்கே சிங்கையில் கல்வி ஆண்டு,  ஜனவரி -டிசம்பர் என்பதால்   ஏப்ரலில் இங்கேயே  கொண்டு வந்து சேர்த்துட்டாராம்.  எந்தப்பள்ளிக்கூடமுன்னு விசாரிச்சால், எனக்குத் தெரிஞ்சதுதான். நம்ம சித்ரா அங்கேதான் டீச்சர்.  சித்ரா டீச்சரைத் தெரியுமான்னு அவர்களை வர்ணித்தால் ரொம்ப நல்லாத் தெரியும், என் வகுப்பு டீச்சர்தான் என்றது சின்னது.   ஆஹா..... உலகம் எப்படிச் சுருங்கிருச்சு பாருங்க! எல்லோரையும் எல்லோருக்கும் தெரியுது:-)))))

மறுநாள் பகலுணவு எங்களோடு சாப்பிடச் சொல்லி அழைச்சோம்.  எங்க எல்லோருக்கும் தெரிஞ்ச இன்னொரு தோழி மறுநாள் வர்றாங்க. அவுங்களும்  நியூஸியில் இருந்துட்டுப் போனவங்கதான். கணேஷுக்கு வேலை இருப்பதால்  அவர் மனைவியும் பிள்ளைகளும் வரேன்னாங்க.
திரும்ப அறைக்குப்போய் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். மூணரைக்குக் கிளம்பிட்டாங்க. அன்றைக்கு மாலை பதிவர் சந்திப்பு இருக்குன்றதை நினைவு படுத்தினேன். முடிஞ்சால் அங்கே வந்து கலந்துக்கறேன்னு சொன்னாங்க.

சிங்கை சைனீஸ் கார்டன் கார்டன் போகணுமுன்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன். ஆனால்  ஒவ்வொரு முறையும் எதோ குறுக்கீடு வந்துரும். இன்றைக்கு ஒரு எட்டுப்போயிட்டு வரலாமுன்னா....  அந்த இடம் முந்தி போல இல்லை. பாழடைஞ்சு போச்சு. விஸிட்டர்ஸ் யாரும் போவதில்லை. அதுவுமில்லாமல்  எம் ஆர் டி யில் போனாலும் இறங்கி நிறைய நடக்கணுமுன்னு  நண்பர் சொன்னதால்  இந்தமுறையும் போகலை:(   நடைக்குப் பயந்த என்னை நடக்க வைக்கணுமுன்னு 'அவன்' முடிவு செஞ்சுட்டான்.

கிடைக்காது என்பது கிடைக்கவே கிடைக்காது போல! போயிட்டுப்போகுது போன்னு  இருக்கலாம்.

சாண்ட்ஸ் ஹொட்டேல் பக்கத்துலே கார்டன் வேலையெல்லாம்  முடிஞ்சுருச்சாம். அதையும் கையோடு பார்த்துக்கணுமுன்னு முடிவு செஞ்சோம்.  லிட்டில் இண்டியா ஸ்டேஷனுக்குப்போய்  ரயில்  எடுத்தோம்.


  போற வழியில் ஒரு கடையில்  பத்துமலையான் சிரிச்சுக்கிட்டு 'அங்கே பார' என்றான். சுண்டைக்காய், முருங்கக்கீரை, சின்ன பாவக்காய் , மாங்காயெல்லாம் விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஆஹா ஆஹான்னு பார்க்க ஃப்ரெஷா வேற இருக்கு.





வீட்டுலே சமைச்சுச் சாப்பிடும் நிலையில் உள்ள சிங்கைவாசிகள் நிறைய புண்ணியம் பண்ணி இருக்காங்க!





15 comments:

said...

அருமை.....

ஒவ்வொரு விஷயத்தினையும் ரசிக்கும் உங்கள் மனது அவற்றை எழுத்தில் வடிக்கிறது உங்களது கைவிரல்கள்.....

படங்களையும் ரசித்தேன்.

said...

ஆகா... படங்கள் அனைத்தும் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...

said...

ஆறுமுகமும் நந்தியும் அடையாளமே தெரியவில்லை ...!

said...

/மேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம் விட்டுருக்காங்க. நந்தி இருக்காரேன்னு சிவலிங்கம் தேடினால் எல்லோரும் வெண்பளிங்கி இருக்க இவர் மட்டும் கரும்பளிங்கில்!/

என்ன பண்ண, இவர்தான் ஒரிஜினல் பொன்னார் மேனியன்னு சொல்லிக் குடுக்க வேண்டியதுதான்.

said...

அனைத்து படங்களும் அருமை, குறிப்பாக ஆறுமுகம்... ரசித்தேன்...

said...

இத்தனை விஷயங்களை பாக்கர்து பெரிசு கிடையாது அதை அப்பிடியே மனசுல பதிவு பண்ணிண்டு வந்து பதிவா போடறேள் பாத்தேளா அதுதான் அழகான ஆச்சரியம். ரசித்தேன் டீச்சர்! :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசித்தமைக்கு என் நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றீஸ்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரெண்டு பேரும் க்ரீடம் போட்டதாலா?;-)))))

said...

வாங்க கொத்ஸ்.

ஒரு புலித்தோலை அரையில் கட்டி இருக்கலாம். அப்போ பாட்டு தானே வந்திருக்குமே:-)

கருப்பிலும் ஒரு ஜொலிப்பு இருந்தது!

said...

வாங்க ஸ்கூல் பையன்.

'ஆர்மொகம்' நல்ல அமைதியான முகம். நானும் ரசித்தேன்.

பொதுவா வடக்கர்கள் கோவிலில் முருகன் கிடையாது.

அங்கே ஒரு சில கோவில்களில் பாலக் பாபா என்று குழந்தை முருகனைப் பார்த்திருக்கேன்.

said...

வாங்க கோந்தே தக்குடு.

எப்படி இருக்கேள்? பார்த்து ரொம்ப நாளாச்சே! குட்டிக்கோந்தை சுகமா?

said...

சுண்டக்கா பாவக்கா மாங்கா... ஒவ்வொன்னு பளிச்சுன்னு இருக்கே. சுண்டக்கா புளிக் கொழம்பும், பாவக்கா வதக்கலும் மாங்காச் சோறுமா ஜிவ்வுன்னு இருக்குமே!

தாய்லாந்து எளநியெல்லாம் முந்தி தெருவுக்குத் தெரு முக்குக்கு முக்கு இருக்கும். ஒன்னு குடிச்சா போதும்..பிரஷ்ஷா இருக்கும். இப்பல்லாம் காணோம். முஸ்தபா மாதிரி கடைகள்ள கிடைக்குதுங்குறாங்க.

அவருதான் ஆறுமுகமா? மூனுதானே தெரியுது! மிச்சம் பின்னாடி இருக்கோ? கர்நாடகாவுல சிவகங்கா மலையில் கவனிப்பே இல்லாம ஒரு ஆறுமுகம் இருக்கான். ஆனா அஞ்சு முகம் தான் தெரியும். பின்னாடி தடவிப் பாத்தா ஆறாவது முகம் கைக்குத் தட்டுப்படும்.

said...

வாங்க ஜி ரா.

ஒரு நிலைக்கண்ணாடி முருகனுக்குப் பின்னே வச்சுருந்தால் அத்தனை முகமும் நமக்குத் தெரிஞ்சுருக்கும்.

கண்ணாடி டைல்ஸ் கூட பதிக்கலாம்.

அடுத்தமுறை போனால் கண்ணாடி ஐடியாவைப் பண்டிட் கிட்டே சொல்லிடலாம்.

வரவர முஸ்தாஃபா கடைக்குள்ளே போகவே பிடிக்கலை.

மாடியில் காய்கறி பகுதியை அடுத்த முறை பார்க்கணும். ரொம்பநாளாச்சு அங்கே போய்.

டெக்கா மாலில் பேஸ்மெண்டில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் காய்கறிகள் அட்டகாசமா இருக்கு.

said...

ராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன் அழகாக இருக்கிறார்கள்.

குடை கடை சூப்பர்.