Sunday, January 24, 2010

நாம் படிச்ச பள்ளிக்கு நம்ம பெயரையே வச்சால் எப்படி இருக்கும்! (குஜராத் பயணத்தொடர் 7)

இன்னும் 222 கிலோ மீட்டர். அடுத்த இலக்கு நோக்கிப்போகிறோம். எப்படியும் இருட்டுக்கு முன்னே போய்ச் சேந்துரலாமுன்னு காரை விரட்டலாம். ஆனா மாடுகளை விரட்ட முடியுதா? வழியெல்லாம் கூட்டங்கூட்டமா ஹைவேயில் ஜாலியா நடக்குதுங்க. ரொம்ப உறுதியான தடிமனான அழகான கொம்புகள். கோணமாணல்,வளைவு நெளிவில்லாம எதோ மெஷீன்லே வார்த்தெடுத்து தலையில் மாட்டிவிட்டாப்போல அப்படி ஒரு பர்ஃபெக்ஷன்!


வேகாத வெயிலில் தார்ச்சாலையில் எதுக்கு இம்மாநடை? குடிக்கப்போகுதுகள். அந்த அத்துவானத்தில் தண்ணீர்த்தொட்டி கட்டி வச்சுருக்காங்க. அக்கம்பக்கம் பதினெட்டுப் பட்டிகளுக்கும் இப்படி ஒரு ஏற்பாடு.

'நாங்களும் குடிப்போம்லெ'ன்னு பின்னாலேயே வரும் ஒட்டகங்கள்.


நாலுபேர் குடிப்பதைப் பார்த்தால் நமக்கும் ஆசை வந்துருதே. கொஞ்ச தூரத்தில் வந்துச்சு 'ஸ்வாத் ரெஸ்ட்டாரண்ட்'. வாசலில் வரவேற்கும் கயிற்றுக் கட்டில்கள். என்ன இப்படி மின்னுதேன்னு பார்த்தால் சாமான்கள் பொதிஞ்சு வரும் பாலித்லீன் பைகளை கத்தரிச்சு இந்த கயிறுகளோடு சேர்த்து இணைச்சு முறுக்கிவச்சுருக்காங்க. அட! ப்ளாஸ்டிக் பைகளுக்கு இப்படியும் ஒரு பயனா!!! காத்துலே பறக்கவிடாமல் கட்டிப்போட்டு வச்சதுக்கு ஒரு 'சபாஷ்' சொல்லணும். உட்காரும்போது கயிறு உறுத்தாமல் கொஞ்சம் வழவழன்னு இருக்கு (வல்லி கவனிக்கவும்) நேர்த்தியா அழகுணர்ச்சியோடு ஒவ்வொன்னுக்கும் ஒரு டிசைனில் பின்னல் வேற!

ரெஸ்டாரண்டின் முன்பகுதிக் கொட்டகையில் சில மேஜைநாற்காலிகள் போட்டுவச்சுருக்காங்க. பச்சைக் கடலை உரிப்பு நடக்குது. இரவு சமையலுக்காம். நெடுஞ்சாலைப் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு. கடுப்பா தேநீர் கிடைச்சது!

ஒரு சின்ன குன்றை வெட்டி நடுவில் போகும் சாலை. மலைவாயில் விழப்போகும் சூரியன்.

கிடைச்ச வாகனக்களில் ஏறிப் பொழுது சாயுமுன் கூடடையும் கிராமத்து மக்கள்.

ஆஜி நதியின் பாலத்தை கடந்து சரித்திரசம்பவங்களில் இடம் பெற்ற ஊருக்குள்ளே நுழைஞ்சோம். கிழக்கிந்தியா கம்பெனி, சௌராஷ்ட்ராப் பகுதிக்கான கிளை அலுவலகம் வச்சுருந்த ஊர். இங்கே அரசருக்கு திவானா இருந்தவரின் நாலாவது மனைவியின் நான்கு குழந்தைகளில் ஒருத்தர் உங்களுக்கெல்லாம் (ஊர் உலகத்துக்கும்தான்) நல்லாத் தெரிஞ்சவர் படிச்ச பள்ளிக்கூடத்தைத் தாண்டிப்போனோம். இருட்டு. காலையில் படமெடுக்கணும்.

ஹொட்டேலைத் தேடிப்பிடிச்சு அறைக்குள் போனால் அதிர்ச்சி!!

எடைபார்க்கும் மெஷின் வச்சுருக்குப்பா(-:

மறுநாள் காலையில் ஜன்னலின் திரைச்சீலையை விலக்கிப்பார்த்தால்..... லட்சக்கணக்கான கூட்டம். நம்மை வரவேற்க இப்படி ஒரு ஏற்பாடான்னு மாய்ஞ்சு போயிட்டேன்!

எதிர்வரிசைக் கட்டிடத்தில் கிளி(கள்) கொஞ்சுது. ஜகன்னாத் மந்திர் ஒன்னு இங்கே இருக்காம். வேறென்ன இடம் இங்கே விசேஷமுன்னு வலையிலே தேடிட்டு காலைஉணவை முடிச்சுக்கிட்டு, அறையைக் காலிசெஞ்சுட்டுக் கிளம்பினோம். நல்ல வசதியான அறைதான். வரவேற்பில், ஜன்னலைத் திறந்தால் உள்ள ஆபத்தைச் சொன்னால், ஹொட்டேலின் அடுத்த பகுதியில் இதுக்கு மேட்சா ஒன்னு இருக்காம். தேனெடுக்காம விடமாட்டாங்க போல!

சின்னதா ஒரு சதுக்கத்தில் ஜெகன்னாத் மாஹாதேவ் மந்திர். அந்தச் சதுக்கமே கலகலப்பா இருக்கு. புத்தம்புதுக் காய்கறிகள் வியாபாரம். கோவில் முகப்புலே நுழைவாசல் மேலே நம்ம நடராசர்! உள்ளே நுழைஞ்சவுடன் வலது பக்கம் ரெண்டு மனைவிகளுடன் பிள்ளையார். அவரெதிரே பெரிய சைஸ் எலி. மூணுபேரைச் சுமக்கணுமே... ஃபேமிலி கார்! தலவிருட்சம். கடந்தால் பெரிய முற்றம்போல் வளாகம். இடதுபக்கம் பெரிய ஹால். வலதுபக்கம் வரிசையாச் சந்நிதிகள். கட்டிலைவிடக் கொஞ்சம் உயரமான ஒரு அமைப்பில் பனிக்குல்லாவுடன் பெரியவர் ஒருவர் சந்நிதிகளைப் பார்த்து உக்கார்ந்துருக்கார்.

பெயர் வைஷ்ணதாஸ். பரம்பரையாகக் கோவில் நிர்வாகம். இந்தப் பக்கமெல்லாம் கொஞ்சம்கூடத் தயக்கமில்லாம 'சாதி என்ன?' கேள்வி.
எங்க பக்கம் அதெல்லாம் சொல்றதில்லைன்னு சொன்னேன். என்ன மார்க்கமுன்னதுக்குமட்டும், வைஷ்ணவம், ராமானுஜர் வழி. படம் எடுக்க அனுமதி கிடைச்சது

சிவன், காயத்ரி, லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீராம் அண்ட் கோ, ஸ்ரீஅம்பா, ஹனுமான், ராதையும் க்ருஷ்ணருமா எல்லாச் சிலைகளுமே வெண்பளிங்கில் அருமை. அழகாகவும் அலங்கரிச்சு வச்சுருக்காங்க. ஹனுமன் மட்டும் சுயம்பு என்று தோணும்விதம் ஆரஞ்சடிச்சு இருந்தார்.


நம்ம டாக்கூர்நாத்ஜி மட்டும் கருப்புப் பளிங்கில் ஜொலிக்கிறார். "என்னடா...உன்னைப் பார்க்க அங்கே வந்துக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா இங்கே கண்ணை விரிச்சுவச்சுக் காத்துக்கிட்டு இருக்கியே!"

'பள்ளிக்கூடம்' நோக்கிப்போகும் வழியில் ராமக்ருஷ்ணா மடத்தின் கோவில். சென்னை மயிலையில் இருப்பதுபோலவே கட்டிட அமைப்பு அலங்காரம், தோட்டம் எல்லாம் அப்படிக்கு அப்படியே, 7 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்ற அறிவிப்பு உள்பட!

'த ஆல்ஃப்ரெட் ஹைஸ்கூல்' எடின்பரோ கோமகன் வருகை தந்ததை நினைவுகூறும் விதமாக, ஜுனா gகட் நவாப் கட்டிய பள்ளி. வருசம் 1875. அப்போதைய பம்பாய் கவர்னர் ஸர். ஃபிலிப் வுட்ஹௌஸ் திறந்து வச்சுருக்கார். இப்போ இந்தப் பள்ளியின் பெயரை மாற்றிட்டாங்க. அங்கே படிச்ச ஒரு பழைய மாணவரின் பெயரை வச்சுருக்காங்க. மோஹன்தாஸ் காந்தி வித்யாலய், ராஜ்கோட்.

நகரைவிட்டு வெளியேறும் சமயம் சட்னு கண்ணில் பட்டது ஒரு புதுமாதிரியான வண்டி. மோட்டார்சைக்கிளுக்குப் bபாடி கட்டுன்னது!!
என்னடான்னு ஒரே வியப்பு! இதுக்குப்பெயர் ச்சக்கடா. இங்கே ராஜ்கோட்டில் மட்டுமே இதைத் தயாரிச்சு விக்கறாங்க. என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு! நல்ல உயரமான இருக்கையில் 'ராஜா' மாதிரி உக்கார்ந்து ஓட்டிக்கிட்டு வர்றார் ஓட்டுனர்! நம்ம தையல் மெஷீன்கள் தயாரிப்புக்கும் பெயர்போனது இதே ராஜ்கோட்தானாம்!


இவர்களுக்குன்னு சங்கம் இருக்கோ என்னவோ! ஆனால் ஒன்னு, இவுங்கமட்டும் வேலை நிறுத்தம் செஞ்சாங்கன்னு வைய்யுங்க. சௌராஷ்ட்ரா முழுசும் அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும். அதிலும் கிராமப்புறங்களில் இவுங்க 'சேவை' ரொம்பவே மெச்சத்தக்கது. எதைத்தான் ஏத்திக்கிட்டுப்போவது என்ற கணக்கே இல்லை. வீட்டுச்சாமான், பால் கேன்கள், இரும்பு , வைக்கோல், தேங்காய், லொட்டு லொசுக்கு இப்படி சகலமும். இவ்வளவு ஏன்? கலியாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலம்கூட இதுலே நடக்குது. மாப்பிள்ளையின் செல்வம், புகழ் அனுசரிச்சு எண்ணிக்கை, 21 ச்சக்கடாக்கள் பொண்ணுவீட்டுக்குப் போய் நின்னா, அலறி அடிச்சுக்கிட்டு வரவேற்பு கிடைக்கும்!

சக்கடா ஓட்டுனர் ஒருவரிடம் சின்னதா ஒரு பேட்டி. வண்டி விலை ஒன்னரை லட்சமாம். ரெண்டரை டன் கனம் ஏத்தலாமாம். எப்பேர்ப்பட்ட சாலையிலும் ஓட்டிக்கிட்டுப் போகலாம். கிராமப்புறங்களில் இதுதான் ஷேர் ஆட்டோ! டீஸல் எஞ்சின். லிட்டருக்கு 12 கி.மீ கொடுக்குதாம்.



உடனே சினிமாவுக்கு ஒரு கதை மனசுக்குள் எழுதினேன். கதாநாயகன் ச்சக்கடா ஓட்டுனர். இனியமுகத்தோடு பாட்டுப்பாடிக்கிட்டே ஏழைஎளியவர்களுக்குச் சேவை செஞ்சுக்கிட்டு இருக்கார். தினமும் அவர் வண்டியில் ஏறிப்போகும் ஒரு கிராமத்துப்பெண்ணுடன் நட்பு ஆரம்பிச்சுக் காதல் மலருது. சக்கடாவிலேயே ஊர் ஒலகமெல்லாம் (?!) சுத்தி , கலர்க்கலாரான புதுமாதிரி உடைகளில் டூயட் பாடறாங்க. இன்னொரு ச்சக்கடா ஓட்டிக்கு இந்தப் பொண்ணுமேல் கண்ணு. (ஐய்யோ..... கதை என்னமா டெவலப் ஆகுது பாருங்க. இதை அப்புறமா ரூம் போட்டு இன்னும் நல்லா யோசிக்கலாம். இதுவரை ச்சக்கடா ஓட்டியா நடிச்சதே இல்லை. இதை ஓட்டக் கத்துக்கிட்டது எவ்வளோ அருமையான அனுபவம்ன்னு நாயகனும், திரை உலகில் இதுவரை வந்தே இராத புதுமைன்னு இயக்குனரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பேட்டி தரலாம். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் ஆயிரக்கணக்கானச் சக்கடாக்கள் அப்படியே வடிவேலு இல்லை விவேக் தலைமையில் வந்து சேருது. ஆஹா..பயங்கர ஸ்கோப் இருக்கே! படம் ஹிட்! நம்ம கேபிளுக்கு இயக்குனர் சான்ஸ். , நம்ம ஆடுமாடுக்கு பாட்டு எழுத சான்ஸ் கொடுக்கலாம். ஜிகுஜிகு ச்சக்கடா பளபள சக்கடான்னு அமர்க்களப்படுத்திருவார் )

ஜாம்நகரைக் கடந்து போகும் பைபாஸ் ரோடில் போய்க்கிட்டு இருக்கோம். .பைபாஸின் தொடக்கத்தைத் தவறவிட்டுட்டு ரெண்டு நிமிஷம் போயிட்டு, மறுபடி திரும்பி அங்கே வந்து சேர்ந்தோம். நாலைஞ்சு போலீஸ் நிக்குது. கையில் சின்னதா மாடு ஓட்டும் குச்சி. ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர் உள்ளே போனதும் கூட்டம், ஜனமும் போலீஸுமா நிக்குது. கடந்து போக முடியாதாம். வலதுபக்கம் கை காமிச்சு ஜாம்நகர் வழியாத்தான் போகணுமுன்னு சொல்றாங்க. ஏனாம்? மோடி வர்றார், ஒரு கிராமப்புற நிகழ்ச்சிக்கு! ஸோ? பாதுகாப்பு! நாடெங்கும் (அரசியல்) வியாதிகளின் போக்கு இப்படி! வேண்டாமுன்னு நினைச்ச ஊருக்குள்ளே போகும்படி ஆச்சு. அந்தப் பாதையில் தண்ணி, கேஸ் எல்லாத்துக்கும் பைப்லைன் போடும் வேலைவேற நடக்குது. எல்லா வண்டிகளையும் இப்படித்திசை திருப்பிவிட்டதால் ஊர்ந்துபோனோம். ஆமாம்..... ஆரம்பத்துலேயே பார்த்த குச்சிப்போலீஸார் சொல்லி இருக்கலாமுல்லே, பைபாஸில் இன்னிக்குப் போக முடியாதுன்னு? ச்சும்மா நின்னு வேடிக்கை பார்க்கும் ட்யூட்டி போல!


என் சிந்தனை(?) ஓட்டத்தைச் சட்னு தடை செய்யும் விதம் திடீர்ன்னு ஓசைகள் அடங்கி, வழுவழுப்பான சாலையில் அனக்கம் இல்லாம வண்டி போகுது. கண்ணை அகலத்திறந்து பார்த்தால் வெளிநாட்டில் இருக்கோமோன்னு ஒரு ஐயம். பூக்களும் செடிகளும் பசுமையும், பராமரிப்புமா..... இது என்ன இடம்? முப்பது கிலோமீட்டருக்கு இப்படி இருக்குமாம்! ஆஹா........ அம்பானியின் சாம்ராஜ்யத்தில் நுழைஞ்சுருக்கோம்.


பயணம் தொடரும்.........:-)

22 comments:

said...

புகைப்படங்கள் அருமை.உங்க தொகுப்புரை பொருத்தம்.கடைசியா திருஷ்டி பொட்டா தமிழ் சினிமாவா?

அன்புடன் நன்றி

Anonymous said...

//சக்கடா //

முதல்ல கச்சடான்னு படிச்சிட்டேன்.

புக் போடறீங்க. திரைக்கதை எழுதறீங்க. சென்னை போனதில இருந்து எங்கியோ போயிட்டீங்க டீச்சர். :)

said...

nallathan kathai elutharanga

said...

கலக்கறிங்க டீச்சர்.
போட்டோ போட்டு ஊர் சுத்திக் காமிக்கறதுக்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்.
:))

said...

//கதாநாயகன் சக்கடா ஓட்டுனர்//
நல்ல கற்பனை.

//மின்னும் கயிற்று கட்டில்//

என் அம்மா ப்ளாஸ்டிக் பைகளை வைத்து கோர்ஸாஊசியில் பலவித மலர்களை மலர வைப்பார்கள்.

வல்லி அவர்களுக்கு உறுத்தாத கட்டில்,ரசித்தேன்

said...

டீச்சர் பதிவு..புக்..இப்போ சினிமா வேறயா!!!..ஆகா கலக்குறிங்க ;))

நீ சொல்றதை பார்த்தா நம்ம ஊர் அரசியல்வாதிகளை குஜராத்ல போயி ட்ரைனிங் எடுக்க சொல்லனும் போல!! ;)

said...

இப்ப அந்தக் க்கயித்துக் கட்டில் படு அவசரமாத் தேவை.
அத்தோட நல்ல கம்பளியும் இருந்தா,இந்தக் குளிர்ஜுரத்துக்கு நல்லாவே இருக்கும்:)
ஒண்ணு கூட விடாம படம் எடுத்து விவரமமும் போடுறீங்க பாரு. அங்கதான் நிற்கிறது துளசிதளம் சாம்ராஜ்யம்!!

said...

மெஷீன்லே வார்த்தெடுத்த கொம்புகள், கயிற்றுக் கட்டில்கள், முதல் எல்லாமே சுவார்ஸமாக இருக்கு

said...

அந்த குன்று சூரியன் படம் சூப்பர் துளசி..

சக்கடா ஓட்டர படம் கச்சடா ஆகாதுன்னு நம்பலாம்.. ஏன்னா ப்ளாக்கர்ஸ் சேர்ந்து செய்யறீங்க.. ;))

said...

So movies is in your plans too...May be we should say "Welcome to Kollywood"!!

said...

வாங்க சாந்தி.

பிரிக்க முடியாதது எது?

தமிழனும் சினிமாவும். இல்லையோ!!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

இந்த 35 வருச மாற்றத்துலே நாமும் கலக்கலைன்னா எப்படிப்பா:-)))

சினிமாவுக்கு அப்படி ஒரு பொருளும் இருக்கு;-)

said...

வாங்க எல் கே.


யாரு கண்டா? இது யாராவது உதவி இயக்குனர் கண்ணில் பட்டு அது அவரோட 'சொந்தக் கதை' ஆனாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை!

said...

வாங்க கார்த்திகா.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சிதான்ப்பா.

said...

வாங்க கோமதி அரசு.

இதுக்குத்தானே 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்'ன்னு சொல்லே வந்துருக்கு!

said...

வாங்க கோபி.

சரியாப்போச்சு. அங்கே போய் நம்ம விஷயங்களை அவுங்களுக்குக் கற்றுக்கொடுத்துட்டா?

வேற வினையே வேணாம்

said...

வாங்க வல்லி.

கிளம்பி வாங்க. ரெண்டுபேருமாப் போய் ஆளுக்கொரு 'கவுத்து'க் கட்டில் வாங்கியாரலாம்:-)

said...

வாங்க டொக்டர் ஐயா.

உலகம் முழுக்க இப்படி சுவாரஸியமான விஷயங்கள் எக்கச்சக்கம். நமக்குத்தான் நேரமே இல்லை!

said...

வாங்க கயலு.

ஆர்ட் டைரக்டர் வேலை என் அண்ணாத்தைக்குத்தான்!
சொல்லிவச்சுருங்க. ஸீன் போடச்சொல்லி:-)

said...

வாங்க சந்தியா.
இப்ப இருக்கும் நினையில் எதுவும் நடக்கும். யூ நெவர் நோ:-))))

எனி வே...வரவேற்புக்கு நன்றி:-)

said...

கச்சடா - சே... ச்சே... சக்கடா ”பார்த்தேன் - ரசித்தேன் - பயணம் செய்ய துடித்தேன்.... ” நல்ல அலங்காரம் வேறு செய்திருக்கிறார்களே! பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அப்பப்ப இடுகைக்கு மறு வாழ்வு இப்படித்தான் கிடைக்குது:-)))))