Friday, October 16, 2015

ரொம்ப வருசங்களுக்குப்பின் உயர்நிலைப்பள்ளிக்குப் போனேன். ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 87)

நம்ம பூரணப்ரம்மம் கோவிலுக்குப் பக்கத்துலேயே  பள்ளிக்கூடம் இருக்கு. தோட்டத்தில் கலைமகள் இருக்காள்!   உள்ளே நுழைஞ்சதுமே வரவேற்பது புத்தர்தான்!  ஞானம் கிடைக்கணும்!  ஹாலில் மாணவ மணிகள் வாங்கிய வெற்றிக்கோப்பைகளும், கேடயங்களுமா ஒரு பக்கம்.  ஆர்ட் வகுப்பில் செஞ்ச ஓவியங்கள், கைவினைப்பொருட்களின்  காட்சி,  கண்ணாடி அலமாரிகளில்!


அடுத்த பகுதியில்  உண்மையிலேயே  பெரிய ஆம்பி தியேட்டர்.  கட்டிக்கிட்டு இருக்காங்க. இதைக் கட்டும் பணியில் இருப்பவர் பாபாவின் பக்தர்களில் ஒருவர். அநேகமா அடுத்த மாசத்துக்குள்ளே முழு வேலையும் முடிஞ்சுரும் என்றார்.


வகுப்பறைகளில்  ஒரு சில மாணவியர்.  இன்றைக்குப் பள்ளிக்கூடம் லீவுதான் என்றாலும்  ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவமாணவியர்  வகுப்பறைக்கு வந்து  படிச்சுக்கிட்டு இருக்காங்க.  CBSE பாடத்திட்டம் இங்கே!

மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி விடுதிகள். பசங்க ரொம்ப நல்லாவே படிக்கிறாங்களாம்.  தமிழ்நாட்டின் சிறந்த பத்துப் பள்ளிகளில் இதுவும் ஒன்னு!

ஆசிரியர்கள் அனைவரும் ரொம்பவே கருத்துடன் கற்பிக்கிறாங்க.  பாபாவும் ஊரில் இருக்கும் நாட்களில்  பள்ளிக்கூடம்போய்  சொல்லித் தர்றார். தமிழறிவு  அதிகம். நினைச்ச மாத்திரத்தில் திருக்குறளையும், மற்ற பாடல்களையும்  சொல்றார். 'நான் குரு. ரொம்ப உச்சாணிக் கிளையில் போய் உக்கார்ந்துக்குவேன்' என்றெல்லாம் கிடையாது.  குழந்தைகளோடு குழந்தையா பழகுவதால் பிள்ளைகள்  இவரைப் பார்த்ததும்  பலாப்பழத்தில் ஈக்கூட்டம் போல் ஒட்டிக்கறாங்க.


வகுப்பறைகள் இருக்கும் பகுதிகள் பெரிய தோட்டங்களுக்கிடையில். வெயிலே தெரியாது! அருமையான சூழல்!  கொடுத்து வச்ச பிள்ளைகள்தான்! பிள்ளைகளின் உடல்நலத்தைக் கவனிக்க  ஒரு டாக்டரும் இங்கே பணியில் இருக்காங்க. பல் நலம் காக்க டெண்டல் செக்கப் உண்டு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா  இருந்தது.  எல்லா உடல்நலக் கேடுகளுக்கும் காரணம் பற்கள்தான் இல்லையோ!   (மற்ற கேடுகளுக்குக் காரணம்  வாய்.  வச்சுக்கிட்டு சும்மா இருந்துட்டாலும்........  )







 (இங்கே நியூஸியில் ஒவ்வொரு ஆரம்பப் பள்ளிக்கூடத்திலும் ஒரு டென்டல் க்ளினிக்கும், நர்ஸும் உண்டு.  ரெகுலரா பிள்ளைகளின் பற்கள் வளர்ச்சியையும்,  பற்களின் நலத்தையும் கவனிச்சுக்கிட்டே இருப்பாங்க. இதுக்கெல்லாம்  பணம் கட்டவேணாம்.  அரசு அமைச்சுக் கொடுத்துருக்கு இலவசமாகவே! பள்ளி வயசு வருமுன்பே கூட குழந்தைக்குப் பல்முளைக்க ஆரம்பிச்சதும் இங்கே போய் காமிச்சுக்கலாம். அந்தந்த  பேட்டைகளில் இருக்கும் பள்ளிக்கூடத்தில்தான் பிள்ளைகளைச் சேர்ப்பாங்க என்பதால்  ரெகார்ட் வச்சுக்கவும் சுலபமே!)


பாய்ஸ் ஒரு  இடத்தில் பேட்மின்ட்டன்  ஆடிக்கிட்டு இருந்தாங்க.

பள்ளிக்கூடத்தைச் சுத்திப்பார்த்துட்டு  ஜைனக்கோவிலுக்கு வந்துருக்கோம். உள்ளே போய் கும்பிட்டுக்கிட்டோம்.  அடுத்தாப்லே ஒரு  தெப்பக்குளம்.

பக்கத்துலே ஒரு கிணத்தடியில் இந்தியாவும் கொடிக்கம்பமும்.


தினைப்புனத்தில் ஆலோலம் பாடிக்கிட்டு வள்ளி  பரணில் இருக்காள்.

 தொட்டடுத்து  இன்னொரு முருகர்.  திருச்செந்தூரார்!


விசிறி சாமியாரைக்கூடப் பார்த்தோம்!

 குன்றைக் குடையாய் ஏந்திக்கிட்டு இருக்கான் ஒருவன்:-)

குகை போல  ஒன்னு. உள்ளே அமர்ந்து தியானம் செஞ்சுக்கலாம்.  ஊர்வன உண்டு என்பதால் எட்டிப் பார்த்ததோடு சரி.

சோலைகளும் மரங்களும் தடாகங்களுமா  என்ன ஒரு அமைப்பு!  நிம்மதியா உலா வரலாம்!   உலக சமாதானம் வேண்டி ஒரு தோட்டப்பகுதியில் உலகின் பலபாகங்களின் பெயரில் மரங்கள்.  நியூஸி இருக்கான்னு பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டேன்.  ஆனால்  இன்னொரு இடம் பார்த்துட்டு வரலாமேன்னு போனதில் இதை மறந்துட்டேன் :-(   நெவர் மைண்ட் நெக்ஸ்ட் டைம் இது எங்க கிவி ஆட்டிட்யூட்!



துர்கை கோவிலுக்குப் பக்கம்   ஒரு பண்ணை வீடு! உள்ளே போய்ப் பார்க்கலை.

'பாவம்.... சுசீலா. காலை ஆறுமுதல்  அஞ்சு மணி நேரமா நம்ம கூடவே சுத்திக்கிட்டு இருக்காங்க.  அவுங்க வேலையைப் போய்ப் பார்க்கட்டும். நாம் அறைக்குப் போகலாம்'னு நம்மவர் சொன்னார்.  நியாயம்தான்.

ஆனால்  சுசீலாவோ, 'நமக்கு   மதிய உணவு என்ன வேணுமு'ன்னு கேட்டாங்க.  இன்னொரு வயிறு முதலில் வாங்கிக் கொடுங்கன்னேன்.

இன்னொரு சுசீலாவைப் பார்த்தோம் பாருங்க.... அவுங்க ஒரு விஷயம் சொன்னாங்க இந்த சுசீலாவைப் பத்தி.  இவுங்க  இந்தப்பள்ளிக்கூடத்தின் ஆர்ட் டீச்சராம்!  அட சொல்லவே இல்லை......  நாமா இருந்தால்  இந்நேரத்துக்கு  எவ்ளோ கொளுத்திப் போட்டுருப்போம்!

விருந்தினர் மாளிகையின் அடுத்த கட்டிடத்தில்  இவுங்க வரைஞ்ச ஓவியங்கள் இருக்காம்.


அதைப் பார்க்க  ஓடினேன். கட்டடப் பராமரிப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த மாளிகை இன்னும் அழகு.  ரொம்பவே பெருசும் கூட!  ரொம்பவே நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருக்கு!  மாடியிலும் அறைகள்!  வரவேற்பு ஹாலுக்குப் பின் வரிசை வரிசையாய்  அறைகள்!

 போனமுறை அங்கே  நாம்  பார்த்த குழலூதும்  கண்ணன்கூட    இவுங்க கைவண்ணம்தானாம்!  இங்கே மூணு படங்கள் இவுங்க வரைஞ்சது!  ஒவ்வொன்னும் ஒரு அழகு!



'இந்த வெயிலில் காக்கா மாதிரி சுத்தணுமா?  காலையில் சீக்கிரமா வேற எழுந்தியே'ன்னார் கோபால்.  அதுவுஞ்சரி.

கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் ( நம் திட்டத்தில் இல்லாத ) வேறொரு இடத்துக்குப் போகப் போறோம்! ஓக்கே?

தொடரும்........:-)


9 comments:

said...

கண்ணைக் கவரும் படங்கள். இடத்தில் நிலவும் அமைதி தெரிகிறது.

தொடர்கிறேன்.

said...

ஜப்பான் குறித்த விபரங்களை சுதாகர் என்பவர் முகநூல் மற்றும் வலைபதிவில் மிக அழகாக எழுதிக் கொண்டு வருகின்றார். மாணவர்கள் மேல் அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கை அதற்காக ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு ஆசிரியரும் எடுக்கும் முயற்சிகள். நீங்க பல்மருத்துவர் மற்றும் செவிலியர் குறித்து எழுதியதைப் பார்க்கும் போது இங்கே அடிப்படை வசதிகள் கூட செய்து தர மறுக்கும் அரசின் கொள்கைகள், அதிகாரிகள் கரிசனம் குறித்து நினைவில் வருகின்றது.

said...

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
...என்பது போல, டீச்சரும் ஒரு நாள், பள்ளிக்குப் போன பதிவு அழகு:)

பரவாயில்லை, நல்ல பள்ளி தான் போல!
நன்கு "நடைமுறைப்படுத்தப்படும்" பள்ளி, அதன் சூழலிலேயே தெரிஞ்சீரும்! - புறச் சூழல் & அகச் சூழல்!
மாணவ/ மாணவிகள் யார் கிட்டவாச்சும் பேசினீங்களா டீச்சர்? என்ன நினைக்கறாங்க, தங்களின் கல்வி பற்றி?

UNICEF மூலமாக, Ethiopia, Child Prostitution Rescue Camp சென்று வந்தேன், சில மாதங்களுக்கு முன்!
அப்போ தான் தெரிஞ்சுது, அது அரசுப் பள்ளியோ/ மத நிறுவனங்கள் நடத்துற பள்ளியோ.. எதுன்னாலும் பரவாயில்லை.. ஆனா ஒரு பள்ளி எவ்ளோ முக்கியம் என்பது!

கல்வியின் கூடவே, மதத்தையும் போதிக்கறாங்களா? போதிச்சிக்கிட்டுப் போவட்டும்!
அவனே பெரியவன் ஆனதும்,
மத மாயைகளைத் தெரிஞ்சுப்பான், "இறை அன்பு" ஒன்றே போதும்-ன்னு நிப்பான்! ஆனா எதுன்னாலும், ஒரு பள்ளி வேணும்!

முகாம் சென்ற போது, சிறார்களிடம் "நயமாப்" பேசிப் பேசியே, பள்ளிக்கு இழுத்து வர வேண்டிய சூழ்நிலை!
அதுங்க இப்பவே பணம் பாக்குதுங்க, Child Prostitution மூலம்! அரசாங்கமும் கண்டுக்கறதில்லை! Mafia பலம்!
இது போல சில தன்னார்வ மன்றங்கள், மீட்பில் எறங்குனாத் தான் ஆச்சு; Police வச்சில்லாம் மிரட்ட முடியாது; நயமாப் பேசிப் பேசி, எதிர்காலம் பத்திச் சொல்லிச் சொல்லி, ஒன்னை ரொம்ப நாள் வச்சிருக்க மாட்டாங்க, ரெண்டே வருசப் பணத்துக்காக, 60 வருசம் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிப்பியா? -ன்னுல்லாம் கேட்டுக் கேட்டு, உணர வச்சித் தான் மீட்புப் பணியே! Bendu கழண்டீரும்:)

இதுல, நாம தான் புள்ளைகளைக் கெடுக்க வந்துட்டோம் என்பது போல Local Mafia மிரட்டல்கள்:)) அட முருகா, என்னைய பாத்தா, ஊரைக் கெடுக்குற பையன் மாதிரியா இருக்கு?:) கூட UNICEF Seargent இருப்பதால், தப்பிச்சோம்:)

அதான் டீச்சர்.. நீங்க இந்தப் பள்ளி பத்தி எழுதிய விதம், அதன் தூய்மை, படமெல்லாம் கண்டு, லேசாக் கண்ணீர்; பழைய நினைவு திரும்பிருச்சி!





said...

//எல்லா உடல்நலக் கேடுகளுக்கும் காரணம் பற்கள் தான் இல்லையோ! (மற்ற கேடுகளுக்குக் காரணம் வாய். வச்சுக்கிட்டு சும்மா இருந்துட்டாலும்....//

ha ha ha
"வாய்"-மை எனப்படுவது யாதெனின் - யாதொன்றும்
தீமை இலாத சொலல்!

தீமை இல்லாத நன்-நோக்கங்களுக்கு வாய் திறந்து தான் ஆகணும்; சில பலர் கோச்சிக்கிட்டாலும்:))
---

சமணர் கோயிலும் இருப்பது சிறப்பு!
என்ன சொன்னார், அருகர் எனும் முருகர்?:))

குன்றம் ஏந்தியவன் எதுக்கு ஏந்திக்கிட்டே இருக்கான்? கை வலிக்காதா? கொஞ்சம் இறக்கி வச்சாத் தான் என்னவாம்?:)

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் - பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!
(பாசுரம்: இன்னொரு பையன், 32 வயசு, நாயகி பாவப் பையன்.. மாறன் எ. நம்மாழ்வார்)
--

அந்த வள்ளி ரொம்ப Modern போல:) அழகா இருக்கா!
சேலையே, தூக்கிக் கட்டி, Midi Skirt போல இருக்கு:)

ஏனோ, வள்ளி-ன்னா, முருகன்/ பெருமாள் கூடச் சற்றுப் பின்னாடி போயிடறாங்க; அவளின் "காத்திருந்த அன்பு" ஒன்றே மனசில் பாரமா நிக்குது!

அந்த முருகனும், "சுத்தமான" அழகு! ரொம்ப நகை/ பூவெல்லாம் போட்டு, அவன் அழகை மறைக்காம வச்சிருக்காங்க! நன்றி!
கீழே பாத்திரமெல்லாம் கூடப் பளிச்! அந்த ரெட்டை காமாட்சி அம்மன் விளக்கு!

முருகன் கழுத்தில் எளிய நகைகள்! செம பளிச்!
அவன் கழுத்தில், கைகளையே மாலையாப் போட்டுக்கிடத் தான் ஆசை:)
அந்தக் கழுத்து வாசத்திலேயே, காலமெல்லாம் வாழ்ந்துறணும்!

வள்ளியின் Closeup படம் இருக்கா டீச்சர்?



said...

என்னமா இருக்குது தோப்பும் தொரவுமா......படங்கள் அத்தனையும் அருமை....ஹும் இங்க பிள்ளைங்களுக்கு அரசு பள்ளில அடிப்படை வசதிகள் கூட இல்லை...பாவம் புள்ளைங்க...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரு பெரிய தோட்டத்துக்குள்ளே அமைதிக்குப் பஞ்சம் என்ன?

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

மக்கள் நலனுக்காகவே அரசு இருக்கு என்பதை ஏன் ஆட்சியாளர்கள் மறந்துடறாங்க?

நேத்து நீயா நானா பார்த்தோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வேலையில் சம்பளத்தில்/கூலியில் வேறுபாடு ஏன் என்ற பகுதி.

அரசு இயற்றிய சட்டங்களை மக்கள் போராடிப் பெறணுமாம்!! சட்டம் இயற்றியதும் அது தானே மக்களுக்குப் போய்ச் சேரவேணாமா? அதுக்கு ஏன் போராடணும்?

எடுத்துக்காட்டா, முதியவர் பென்ஷன் இருக்குன்னா, அவர் முதியவர் என்ற ஆதாரம் (பிறப்புச் சான்றிதழ்) இருந்தால் உடனே கொடுக்க வேணாமா? அதுக்கு ஒரு அரசு அலுவலகம். அங்கே போய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழே கிடைக்கும். அப்புறமும் இல்லாத ரூல்ஸ் பேசி அவரிடமே பணம் பறிக்கும் ஜென்மங்கள் அரசு அலுவலகத்தில் :-( கேவலமா இல்லை?

said...

வாங்க கே ஆர் எஸ்.

சின்னப்பிள்ளைகளை இப்படி சீரழிக்க எப்படித்தான் மனம் வருதோ? எல்லாம் கடைசியில் பணம் பணம் என்பதில் போய் நிக்குது :-(

வள்ளியின் க்ளோஸ் அப் வேணுமா? அடுத்தமுறை படம் எடுத்துடலாம்!

said...

வாங்க துளசிதரன்.

அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள், ஊர்கள், எல்லாம் நாட்டுக்குக் கேவலம்:-(

நம்ம மக்களும் சுத்தம் என்பதை மறந்து பலவருசங்களாகுது :-(

ப்ச்........