Tuesday, October 06, 2015

ஒரு எலுமிச்சம்பழம் ஊறுகாய்.

நம்ம வீட்டு எலுமிச்சம்பழச் செடியில்  காய்ச்சுப் பழுத்த எலுமிச்சம்பழங்களைப் பறிக்காமல் விட்டு வச்சேன்.  ஒரு அலங்காரமாத்தான்  இருக்கட்டுமே!  செடிக்கு வயசு நாலு.  இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பார்த்தால்..... நம்ம வீட்டுச்செடிகள், தோட்டம் எல்லாமே  போயிருந்துச்சு.  பார்த்துப் பார்த்து வச்ச செடிகள் எல்லாம், நம்ம இடப்பெயர்ச்சி, ரெண்டரை வருசத்தில்   பராமரிப்பு இல்லாம எல்லாம் காலி. வாடகைக்கு இருந்தவர்களின் கைங்கரியம்  :-(


இப்ப இருப்பவை எல்லாம் அதுக்குப்பிறகு வாங்கி வச்சவைகளே.  அதிலும் இந்த எலுமிச்சம் செடி இருக்கே... அதுவும், கறிவேப்பிலையும், வாழையும்  வருசாவருசம் செத்துப்பிழைக்கும் வகை.  குளிரில் மண்டையைப் போட்டுரும்.  வசந்ததில் வந்துரும். அதனால்  வாழை வச்சு  12 வருசமாகியும் குலை தள்ளலை.  மார்க்கண்டேயன் வம்சம்!


நம்ம எலுமிச்சை மெயர் வகை. Meyer . தடித்த தோலுடன் இருக்கும்.
இப்படியாக  எலுமிச்சம்பழங்களோடு இருந்த செடியில் இருந்து  ஒரு பழத்தைப் பறித்து வந்து ஊறுகாய் போட்டேன்.  (செடியில் மொத்தமே மூணே பழங்கள் தான்!)



கடை ஊறுகாய்தான் எப்போதும் வாங்குவது.  நம்ம வீட்டில் ஊறுகாய் ப்ரேமி நம்ம கோபால்தான்.  அதுவே போதும் போன்னு ......  ஆனாலும் அதுலே நிறைய ப்ரிஸர்வேடிவ் சேர்ப்பதாலோ என்னவோ  ஒரே புளிப்பு.  நீண்டநாள் ஷெல்ஃப் லைஃப் காரணமாக இருக்கலாம்.


நம்ம இண்டியன் கடைகள் ஒன்றில் (இப்ப நாலு கடைகள் இருக்கு !)ஊறுகாய் மசாலா கிடைச்சது. அதை வச்சு தயாரிச்ச ஊறுகாய்  இப்ப வீட்டில் எல்லாருக்கும்(!) ரொம்பவே பிடிச்சுப் போச்சு.  இனி கடை ஊறுகாய் வேணாமுன்னு சொல்லிட்டாங்கப்பா!


உப்புப் போட்டு  நம்மூரில்,  சிலபல நாட்கள் வெய்யிலில் வச்சு எடுத்து அப்புறமா ஊறுகாய் போடும் தினுசு இல்லைப்பா.  எல்லாம் இன்ஸ்டண்ட்:-)


செய்முறை பார்க்கலாமா?

வரிசையாப் படங்களைப் பார்த்துட்டு, சமையல்குறிப்பைப் படிக்கலாம்:-)








சமையல் குறிப்பு:



ஈஸி பீஸி எலுமிச்சம்பழ ஊறுகாய்!



தேவையான பொருட்கள் :

எலுமிச்சம்பழம்        1  (இந்தியா எலுமிச்சைன்னா  3 போட்டுக்குங்க)

ஊறுகாய் மசாலா (ரெடிமேட்)       2  டேபிள் ஸ்பூன்

உப்பு                                                 1+ 1/2 டீஸ்பூன்

வறுத்து அரைத்த வெந்தியப்பொடி     1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்                              1/4 டீஸ்பூன்.

நல்லெண்ணெய்                                 1/4 கப்

கடுகு                                                   1/2 டீஸ்பூன்.


செய்முறை:

எலுமிச்சம்பழத்தை நல்லா கழுவிட்டுத் துண்டுதுண்டாக நறுக்கிக்கணும். விதைகள் இருந்தால் எடுத்துடலாம்.   உப்பு சேர்த்து  அதை ஒரு கடாயில் போட்டுச் சிறுதீயில் அஞ்சு நிமிசம் வேகவிடலாம். (வெயிலில் சிலநாட்கள் வச்சு எடுத்த மாதிரி இருக்கும் இப்போ!)


கொஞ்சம் சூடு ஆறினதும், அதுலே ஊறுகாய் மசாலாவைச் சேர்த்துக் கலக்கி வச்சுடணும்.

இன்னொரு கடாயில் கொஞ்சம்  (2 டீஸ்பூன்) எண்ணெய் ஊத்தி அது சூடானதும் கடுகுபோட்டு வெடிக்கவிட்டுட்டு, அடுப்பை அணைச்சுடலாம்.

 உடனே  அந்த எண்ணெயிலேயே பெருங்காயப்பொடியைச் சேர்ந்து லேசா வதக்கிட்டு, கூடவே வறுத்து அரைச்சு வச்சுருக்கும்  வெந்தியப்பொடியையும் சேர்த்து ஒரு கலக்கு.

இப்ப  இந்த தாளிப்பு சமாச்சாரத்தை மசாலா சேர்த்த எலுமிச்சம்பழம் இருக்கும்  கடாயில் கொட்டிக் கலக்கணும்.

அப்புறம் இதே தாளிப்பு செஞ்ச கடாயை அடுப்பில் ஏத்தி, அந்தக் கால் கப்பு நல்லெண்ணெயில் மீதம் இருப்பதை ஊற்றிக் காயவிட்டு, லேசாப் புகை வரும் அளவுக்குச் சூடானதும் அடுப்பை அணைச்சுடலாம்.  கொஞ்ச நேரம் ஆறவிட்டு, இன்னொரு கடாயில் இருக்கும் கலவையில் ஊற்றிக் கலக்கினால்......

ட்டடா.......   ஊறுகாய் ரெடி.

ஃப்ரிஜ்ஜில் வச்சுப் பயன்படுத்தினால் நாலைஞ்சு நாளைக்குக் கெடாமல் இருக்கும்.(அதுவரை பாக்கி இருந்தால்!)

இப்படி ஆரம்பிச்ச ஊறுகாய் தயாரிப்பு, காலப்போக்கில்  கடையில் வாங்கிய  நாலைஞ்சு எலுமிச்சம்பழம் வரை வளர்ந்துபோச்சு.  அப்புறம் ஒருநாள் ஊறுகாய்  செஞ்ச மூணாம் நாள்  பயணம் ஒன்னு போகவேண்டி இருந்துச்சு.  ஐஸ் க்யூப் ட்ரேயில் பாக்கி இருந்த ஊறுகாயை நிரப்பி ஃப்ரீஸ் செஞ்சேன்.  மறுநாள் அதை எடுத்து ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுட்டு ஊருக்குப்போயாச்.

திரும்பி வந்தபின் ஒரு நாள் , தயிர் சோத்துக்குத் தொட்டுக்கலாமேன்னு ஒரு க்யூபை மட்டும் எடுத்து ஒரு சாஸரில் வச்சேன்.  அரைமணி ஆனதும் பார்த்தால்....    டீஃப்ராஸ்ட் ஆகி தின்னும் பக்குவத்தில் இருந்துச்சு.


தின்னு பார்த்தால்....  என்னமோ இன்றைக்குத்தான் செஞ்சதுபோல் !  ருசியில் ஒரு மாற்றமும் இல்லை. சூப்பரோ   சூப்பர்!


ஊறுகாயைப் ஃபீரீஸ்  செஞ்சுக்கலாமுன்னு  தெரிஞ்சது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.


எஞ்சாய்  த ஊறுகாய் எனி டைம்!



19 comments:

said...

அட்டகாசம். இன்னும் நிறையப் பழங்கள் கிடைக்கட்டும்.

said...

ஒரே ஒரு எலுமிச்சையில் ஊறுகாய் ரெசிப்பி பார்ப்பது என் வாழ்வில் இதுவே முதல் முறை!!! அடுத்து நிறைய பழங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் அம்மா.

said...

ஃப்ரீசர் டெக்னிக் சூப்பர். நானும் செய்து பார்க்கிறேன்.

said...

வாரே வா].ஹ்]}}}}}}. ஃப்ரீசர் டெக்னிலக் சூப்பர் துளசி. ஊறுகாய் பார்க்கவே இவ்வளவு நல்லா இருக்கே..
நானும் ஊறுகாய்ப் பக்கம் போய் நாளாச்சு.
சுமிகிட்ட சொல்கிறேன்.

said...

Super

said...

எலுமிச்சைச் சாறெடுத்து ஃபரீஸரில் போட்டு அவ்வப்போது ஒரு ணதுரம் எடுத்து உபயோகிக்கலாம்.

ரெடிமேட் பொடி போடாமல் நாங்கள் ஊறுகாய் போடுவோம். சமீபத்தில் வெஜிடபிள் ஊறுகாய் வீட்டில் செய்ததில் சேர்த்த எ.ப கசப்பைத் தந்தது!

said...

சதுரம் ணதுரமானதுக்கு மன்னிக்கவும். மொபைலில் இவை அருகாமை எழுத்துகள்!

said...

ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜிலேயே ஃப்ரீசர் இல்லாமலேயே வைக்கலாம் நன்றாகவே இருக்கும்

said...

ஃப்ரீசர் ஒரு பொக்கிஷச் சுரங்கம் ஜீபூம்பா தெரியுமோ...!!! நாங்க எலுமிச்சை, நாரத்தை, சாத்துக்குடி இப்படி ஜூஸ் எல்லாம் ப்ளெய்ன் ஜீஸ், பிழிந்த உடன் யூஸ் இல்லைனா உடனே இருகக்வே இருக்கு நம்ம ஜீபூம்பாக்குள்ள அங்க போட்டுற வேண்டியது..அந்த ஐஸ் க்யூப் பெட்டிலதான்...அப்புறம் என்ன எப்ப வேணுமோ அப்போ...ஊறுகாய் கூட

சப்போஸ் திடீர்னு ஊருக்குப் போக வேண்டியது நீண்ட பயணமாக வந்தால்..வீட்டில் ஆள் இருந்தால் ப்ரச்சினை இல்லை இல்லேனா, பருப்பு முதல் ரவை எல்லாமே மாயப் பெட்டிக்குள் ஃபிர்ட்ஜுக்குள்ள அடக்கிட வேண்டியய்து..இல்லேனா வண்டாழ்வார், சீனிவாசன் எல்லாரும் வந்துருவாங்க. ஓ இவங்க எல்லாரும் வந்து வீட்டுல குடியிருந்தா வீட்டுக்கே நல்லதுதானோ...

கீதா

said...

அருமையான எ.பழம் ஊறுகாய் . நல்ல தொக்கா இருக்கு. ப்ரீசர் ஐடியா சூப்பர் !!

said...

வாங்க சாந்தி.

நிறையப்பழங்கள் வேணாம். விண்ட்டரில் செடி மண்டையைப் போடாமல் இருந்தால் போதும்!

said...

வாங்க அபிநயா.

ஆஹா.... சண்டே மார்கெட்டில் ஒரு எலுமிச்சம்பழம் வாங்கி வந்தேன். நல்ல பெரூசு. நானூறு கிராம்! மார்மலேட் செய்யும் வகையாம். அதையும் ஒரு நாள் ஊறுகாய் போடத்தான் வேணும்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஒர்க்கவுட் ஆகுதான்னு சொல்லுங்க!

said...

வாங்க வல்லி.

ஊறுகாய் மன்னியின் பாராட்டுகளுக்கு நன்றீஸ்!

said...

வாங்க மாலு!

நன்றீஸ்.

முதல் வருகை! மீண்டும் வருக!

said...

வாங்க ஸ்ரீராம்.

எலுமிச்சை சாறு ஐஸ் க்யூப் நம்ம வீட்டிலும் உண்டு:-) இந்த வீட்டைக் கட்டும் சமயம், இங்கிருந்த எலுமிச்சைச் செடியைக் காப்பாற்றமுடியாதுன்னு தோட்ட நிபுணர் சொன்னதால் அதில் இருந்த பழங்களை எல்லாம் பறிச்சு சாறெடுத்து க்யூப் பண்ணி, நம்ம வீட்டுலே ஆன்னா ஊன்னா எலுமிச்சை சாதம்தான். ஒரு வருசத்துக்கும் மேலேயே வந்துச்சு!

சாறெடுத்தபின் இருக்கும் எலுமிச்சம்பழம் மூடியையும் ஃப்ரீஸ் செஞ்சுக்கிட்டால், குக்கரில் கறை பிடிக்காமல் இருக்க ஒன்னொன்னு போடலாம். நம்ம கிச்சன் ஸிங் வேஸ்ட் மாஸ்டரில் போட்டு அரை நிமிசம் சுத்த விட்டால்..... ஃபுட் வேஸ்ட் மணம் கூடப் போயிரும்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மைதான். ஆனால் வெளியூர் போகும்படி ஆனதால் ஃப்ரீஸரில் வச்சுட்டுப் போனேன். அதுவும் இப்போ நல்லாவே இருக்கு!

said...

வாங்க துளசிதரன்.

நானும் ஃப்ரீஸர் இல்லைன்னா காலி!

நல்லவேளையா இங்கே நம்மூரில் வண்டாழ்வார், சீனிவாசன்கள் யாரும் இல்லை. கரப்ஸ்கூட இல்லை. அதனால் பருப்பு இன்னபிற வகைகள் வெளியில் இருந்தாலுமே நல்லாத்தான் இருக்கு! (டச் வுட்!)

பூனாவில் நம்ம தோழி வீட்டில் ஃப்ரிட்ஜ் முழுக்க ஸ்டோர் சாமான்கள்தான்! அப்ப நம்மிடம் ஃப்ரிட்ஜ் கிடையாது :-(

said...

வாங்க சசி கலா.

நன்றீஸ்ப்பா!