Wednesday, October 07, 2015

மூணு மணி நேரத்தில் தென்னிந்தியாவைச் சுத்திப் பார்க்கணுமா? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 84)

ஊறவச்ச அரிசியையும் உளுந்தையும்  ஆட்டுக்கல்லில் போட்டுப் மடமடன்னு ஆட்டி எடுத்தோமா, அரிசி உப்புமாவுக்குத் தேவையான அரிசியை திருகையில் போட்டுப் பரபரன்னு திருச்சு எடுத்தோமா, தேவையான தண்ணீரைக் கிணத்தில் இருந்து  சேந்தினோமான்னு  அன்றாட வீட்டு வேலைகளை ஒரு பக்கம் செஞ்சுக்கிட்டே,  ஜிம் காரியங்களும் ஒரே சமயத்துலே முடிச்சுருவோம்.   மேலும் அம்மிக்கல்லில் சட்னிக்கு அரைப்பது,  நெல்லையே அரிசியாக்க உரலில் போட்டு உலக்கையால் குத்தி எடுப்பதுன்னு   எத்தனையெத்தனை வேலை.

எனக்குத் தெரிஞ்சு  உரல் உலக்கை சமாச்சாரம்தான் நம்ம வீட்டுலே புழக்கத்தில் இல்லை.  ஆனால்  இரும்பு உலக்கை ஒன்னு இருந்துச்சு.  ஆணி இருக்கு பாருங்க....  அதேபோல டிஸைன்.  ஆனா பிரமாண்டமான ஆணின்னு வச்சுக்கலாம்.  நீளம் கூட ஒரு ஒன்னரை அடி இருக்கும்.  இது  மிளகாய் வத்தல் இடிக்கவும், இட்லி மிளகாய்ப்பொடி இடிச்சுக்கவும்தான்.  சிலசமயம் கொத்தமல்லி தொக்கு கூட  இப்படி இடிச்சு எடுப்பாங்க.  பிள்ளையார் சதுர்த்தி சமயம், எள்ளு, வெல்லம் சேர்த்து சிமிளிப்பொடி, அதிரசம் செய்ய, ஊறவச்ச அரிசியை இடிச்சு மாவாக்கறது இப்படி.  நம்ம வீட்டுக் காப்பிப்பொடி அரைக்கும் மெஷீனுக்குக் கைப்பிடி  கழண்டு வந்த சமயம்,  அதை ரிப்பேர் செய்யும் வரை காப்பிக்கொட்டையைக் கூட இப்படி இடிச்சு எடுத்துருக்காங்க  அக்காமார்.



இதையெல்லாம் இப்பத்துக் குழந்தைகளுக்குச் சொன்னால் கூடப் புரியாது. இப்படித்தான் இருக்கும்னு அந்தக் காலத்து கிச்சன் மெஷீன்களைக் காமிக்கவும் நமக்கு வாய்ப்பு இல்லைன்னு  நொந்துக்க வேணுமோ?  ஊஹூம்....  வேணாம். கூட்டிக்கிட்டுப்போய் காமிச்சுடலாம்.

ஈஸிஆர் ரோடில் தக்ஷிணசித்ராவுக்குப் போய்ச்சேர நமக்கு அதிசயமா இன்றைக்கு 20 நிமிட் தான் ஆச்சு. மாமல்லபுரத்தில் இருந்து  ஒரு 25 கிமீ தூரம்.  சாலையும் நல்லா இருக்கு. போக்குவரத்தும் அதிகம் இல்லை! (சென்னையில் இருந்தும் இது 25 கிமீதானாக்கும்!)


ஆளுக்கு நூறுன்னு டிக்கெட், கேமெராவுக்கு ஒரு  இருபது. கூடவே உள்ளே இடத்தின் வரைபடம் ஒன்னும் கொடுத்துடறாங்க. ஆனால் எனக்கு இது மூணாம் முறை என்பதால் நானே கைடு நம்மவருக்கு!   உள்ளெ நுழைஞ்சதும் கண்ணில் பட்டது காமதேனு.  அதான் மயில்தோகை வால் வச்சுருக்கே!

டிக்கெட் கவுன்ட்டர்க்கு எதுத்தாப்லெ ஒரு கடை.  அழகழகான சின்னச்சின்ன மர, உலோக பொம்மைகள்.  இருக்கட்டும் இருக்கட்டும். நுழைஞ்சதும் ப்ரெஷரை ஏத்தவேணாம்.


இடையில் உள்ள  நடைபாதை வராந்தாவை ஒட்டி ரெண்டு பக்கங்களிலும் திறந்தவெளி முற்றங்கள். தோட்டம், டெர்ர கோட்டாவகை சிற்பங்கள். வரவேற்பு கொடுக்கும் ம்யூஸிக் பார்ட்டி  ரொம்பவே நல்லா இருக்கு.  ஹூம்.....

வெராந்தா முடிவில் பூக்கள் மிதக்கும் உருளி.  வரவேற்கும்  விளக்கு வரிசை. பக்கத்துலேயே புள்ளையார் !  இன்னொரு பக்கம் அம்மன் சிலை!
இண்டியன் ஹெரிடேஜ் பகுதிகளை விளக்கும் ஒரு சின்ன  தியேட்டர். வீடியோ ஒன்னு ஓடிக்கிட்டு இருக்கு. பார்க்கதான் ஆள் இல்லை.



இந்தக் கட்டடத்தைத் தாண்டி வெளியே போறோம்.  மரங்கள் நிறைஞ்ச பகுதி.  நடக்கச் சுலபமான பாதைகள்.  எந்தப்பக்கம் என்ன என்பதற்கான  தகவல் பலகைகள், கைகாட்டிகள்.

கால் என்னவோ நேராத் தமிழ்நாடு பக்கம்தான் போச்சு. செட்டிநாட்டு வீட்டுக்குள்ளே போறோம்.  உண்மையாவே  செட்டிநாட்டு கிராமங்களில் இருந்து   சில பல வீட்டின் பகுதிகளை வாங்கி இங்கே இணைச்சுருக்காங்க.  வீட்டின் முகப்பு, தூண்கள், வெளிப்புறத் திண்ணைகள், வீட்டின்   உள்  அலங்காரம் எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!


இந்த வீட்டுக்குப்  பின்னால் கொஞ்ச தூரத்தில் ஒரு தெருவே இருக்கு.


 தெருமுழுக்கத் திண்ணை வச்ச வீடுகள்!  சாத்தனூர் வீடு, ஆம்பூர் வீடு, திருநெல்வேலியில் இருந்து கொண்டுவரப்பட்ட  பிராமணர்களின் வீடு , நெசவாளர் வீடு இப்படி ரகம் ரகமாக!  ஹைய்யோ....

உண்மையிலேயே தறி போட்டு நெய்துக்கிட்டு இருந்தார் கேசவன். அவரும் அவர் மனைவியும் 2005 முதல்  இங்கேயே  நெசவுத்தொழிலைச் செய்வதுடன், நம்மைப்போல் வரும் பார்வையாளர்களுக்கு நெசவு பற்றிய விளக்கங்கள் சொல்றாங்க.  சென்னையில் சுந்தரி சில்க்ஸ்  இருக்கு பாருங்க, அவுங்களுக்குப் புடவை நெய்து தர்றதும் இவுங்கதான்.  இன்னும்  சில நெசவாளர் குடும்பங்களும் வாடிக்கையா  அவுங்களுக்குப் புடவை அனுப்புறாங்களாம்.

  அய்யனார் கோவில், ஆம்பூர் கேலரி,  கோவில் சப்பரம்/ சின்னத்தேர்,  மாட்டு வண்டிகள்,  குயவர் மட்பாண்டம் செய்யும்  அழகு,  கூடை முடையும் கலை இப்படித் தமிழ்நாட்டுப் பகுதிதான் உண்மையிலேயே அமர்க்களமா இருக்கு! சின்னச் சின்னக் கட்டணத்தில் நாமும் சிலவற்றை செஞ்சுகூடப் பார்க்கலாம்.




ஒரு தமிழ்நாட்டு வீட்டில்தான்  ஆரம்பத்தில் சொன்ன வீட்டு மெஷீன்கள்:-) நாமே செஞ்சு பார்க்கலாம் வகையில்  திருகைக் கல் டெமோ இருக்கு. நானும் கொஞ்சம் அரிசியை  ரவையாக திருச்சுப் பார்த்தேன்.  ஒரு நிமிட் வீடியோ எடுத்தார் நம்மவர். இப்பப் பார்த்தால்   அது மிஸ்ஸிங். தவறுதலா டிலீட் பண்ணிட்டேன் போல!  ப்ச் :-(
 அம்மிக்கல், ஆட்டுக்கல்  பயன்படுத்திப் பார்க்கச் சான்ஸ் இல்லை.  தண்ணீர் சேர்த்து அரைக்கும் சமாச்சாரம்.  இடமெல்லாம் ஈரமா ஆகி ஒரே மெஸ்ஸி ஆகிருமுன்னு வைக்கலை போல!
ஆந்திரப்பகுதியில் அவுங்க வகை நெசவுத் தொழிலாளர் வீடும்,  சுட்டில்லு என்ற வகையில் வட்டமான சிறிய வீடும்!
கர்நாடகா....  சிக்மகளூர் வீடு ஒன்னு பிரமாதம்!  1914 இல் கட்டி முடிக்கப்பட்ட வீடு! சரியா 100 வருசம் (நாம் போனபோது!) வீட்டின் உரிமையாளர், முஹம்மது இஸ்மாயில். இவருடைய முன்னோர்கள் துருக்கியில் இருந்து வந்தவர்களாம்!  காஃபித்தோட்டம் வச்சுருந்து,  அரபு நாடுகள் வரை  காஃபியைக் கொண்டுபோய் வியாபாரம்!

தக்ஷிணசித்ரா, இவருடைய வீட்டை வாங்கி அப்படியே பிரிச்சு இங்கே கொண்டு வந்து திரும்பக் கட்டி இருக்காங்க. வாங்கும்போதே வீடு காலியாத்தான் இருந்துச்சாம். இருவது வருசமாக் காலிதானாம்.  காரணம்  வீட்டுக்குள்ளே பேய் வாசம்!  சென்னை வந்த பின் பேய், துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு ஓடி இருக்கணும்:-)

(நாலு குதிரை, ரெண்டு யானை!)


பொதுவா, பாரம்பரியம் உள்ள வீடுகளை அப்படியப்படியே  வச்சுருந்தால் நல்லது.  ஆனால்  உடமையாளர்களுக்குப் பராமரிப்புச் செலவு  அதிகம். மேலும் வாரிசுகள் இடம் பெயர்ந்து வெவ்வேற இடங்களிலும் நாடுகளிலும் வசிக்கிறார்கள். ஒவ்வொரு வருசமும் வந்து இதுக்கான நேரம் செலவழித்தலும்  ஆகறதில்லை.  அதனால் பலர் வீடுகளை விற்கப் போட்டுடறாங்க.  வாங்கும் நபர்களும் வீட்டை அப்படியே வச்சுருக்காமல் பிரிச்சு மரங்களை வித்துடறாங்க.  பழைய கால தேக்கு மரங்கள் பாருங்க. பயங்கர உறுதி.  இதுவே வாங்குன தொகையை விட பலமடங்கு சம்பாரிச்சுத் தந்துருது.

இப்படி விற்கப்போட்டுருக்கும் வீடுகளில் நல்ல அம்சமானவைகளை தக்ஷிணசித்ரா வாங்கி, இங்கே கொண்டு வந்து  வச்சுடறாங்க. லேசுப்பட்ட வேலை இல்லை. சரியான தொழில் தெரிஞ்சவங்களை வச்சுத் திரும்பக் கட்டுவது  சிரமம்தான்.  அதைப் பொருட்படுத்தாமல், இவ்வளவு தூரம்  கொண்டுவந்து  நமக்குக்  காட்சி வச்சுருக்காங்களே ... அதுக்கே இவங்களை எவ்ளவு பாராட்டினாலும் தகும்!
மலபார் முஸ்லீம் வீடுகளும், அவுங்க அந்தக் காலத்துலே செஞ்ச மசாலாப் பொருட்கள்  வியாபாரமும் தெரிஞ்சுக்கணுமுன்னா இங்கே வந்தாவே போதும்!  மருந்துப்பொருட்கள்,  ஏலக்காய், கிராம்பு, குறுமிளகு கூடவே பாண்டிய நாட்டு முத்துக்கள்  இப்படி  அந்தக் கால பாரதத்தில் இருந்து  பலநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி இருக்கு!  அழகான வெண்கல உருளிகளில் காட்சிக்கு வச்சுருக்காங்க.  கண் நிறைஞ்சுதான் போச்சு!

இஸ்லாமிய மதம் எப்படி  கேரளப் பகுதிகளிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பரவி இருந்ததுன்னு  அங்கங்கே இருக்கும் படங்கள் மூலமாகத் தெரிஞ்சுக்கலாம்.  ஆனால் நேரம் வேணும், ஒவ்வொன்னாப் பார்த்து  அனுபவிக்க!  உண்மையாகவே ரொம்ப  அருமையான  பாரம்பரியமும் அழகுக் கலைகளும்தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை!
கேரளாப் பகுதி ஜோர்!  இஸ்லாமியர், ஹிந்துக்கள், கிறிஸ்தியானிகள் இப்படி மும்மதத்தினரின் வீடுகளும் மாதிரிக்கு ஒன்னுன்னு இருக்கு.  இதைத்தவிர  விசேஷமான இன்னும் சில வீடுகளும் உண்டு. கூத்தாட்டுக்குளம் வீடு, புதுப்பள்ளி வீடு இப்படி....  வீடுன்னு சொல்லப்டாது...  ஒவ்வொன்னும் மாளிகைகள்!

பாரம்பரிய உடைகளும், சித்திரங்களும், உள் அலங்காரங்களும்  கண்ணை விரிய வைக்குதே!  அந்தக் கால சமையலறைகள், பாத்திர பண்டங்கள், பொட்டி படுக்கைன்னு எத்தனையெத்தனை!!!!  அஞ்சரைப்பெட்டின்னு சொல்றோமே.... அதெல்லாம் இந்த ஸ்பைஸ் அலமாரிக்கு முன்னால் ஒன்னுமே இல்லை!!!!!

பள்ளிக்கூடப்பிள்ளைகளை ஒருநாள் சுற்றுலாவா  இங்கே கூட்டிவந்தால், மற்ற  விஸிட்டர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்,   அவர்களுக்கு சின்னச்சின்னக் கலைகளை விளக்கவும், சொல்லிக் கொடுக்கவும் இடம் வேணுமுல்லே? இதுக்குன்னே ஒரு பெரிய ஹால் ஒதுக்கி இருக்காங்க. இதுலேயே   வேணும்போது பெரிய குழுக்களா வரும் மத்தவங்களுக்கும் வகுப்பு நடத்திக்கலாம்.

  பகல் சாப்பாட்டுக்கு  இங்கேயே இருக்கும்  ரெஸ்டாரண்டுக்கு  (Kanali restaurant . Taj Hotel sponsored) போனோம். தாலி மீல்ஸ் கிடைச்சது.  ருசி பரவாயில்லைன்னு சொன்னார் நம்மவர்.  நான்  வெறும் கூட்டு போட்டு சாப்பிட்டேன்.  கடைஞ்ச பருப்பு இல்லையாம் :-(   என்ன டிஸைன்னு தெரியலை!

கைவினைப் பொருட்களுக்குன்னு ஒரு சந்தை!  எல்லாமே பார்க்கும்போது ஆசையா இருந்துச்சு என்பது உண்மை.  ஆனால்.....  ஒன்னும் வாங்கிக்கலை! மனதில் உறுதி வேணுமுன்னு  நம்ம முண்டாசு சொன்னது இதைத்தான் போல:-)

பள்ளிக்கூடப் பிள்ளைகள் வரும்நாட்களிலும், வெளிநாட்டு விருந்தினர் குழு வருகை தரும் நாட்களிலும் முன்கூட்டியே அவர்களிடம் சொல்லி வைத்தால்  தமிழ்நாட்டுப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தும் தர்றாங்க.
நானும் அண்ணன், அண்ணியோடு போயிருந்த சமயம் மயில் நடனம் ஒன்னு பார்த்தேன். 



அப்புறம் மகளோடு ஒரு சமயம் போனபோது  கரகாட்டம், பொய்க்கால்குதிரை, மயில் நடனம்  பார்க்கும் சந்தர்ப்பம் அமைஞ்சது.  என்ன இருந்தாலும் மகள் ஒரு ஃபாரினர் பாருங்க:-)

ட்ரைவர்களுக்கு ஒரு ரெஸ்ட் ஏரியா வச்சுருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம். போரடிச்சுக்கிட்டு வண்டியில் உக்கார்ந்துருக்காம அவுங்க கூடிப் பொழுதைக் கழிக்கலாம். எப்படியும் ஒரு நாலுமணி நேரம் ஆகத்தான் செய்யும்.  நம்ம சீனிவாசனை உள்ளே கூட்டிப் போகலாமுன்னால்....  'ஏற்கெனவே பார்த்துருக்கேன். நீங்க போயிட்டு வாங்க.  நான்  இங்கேயே இருக்கேன்' னு சொல்லி நண்பர்களுடன் பேசப் போயிட்டார்.

தக்ஷிணசித்ரா என்ற பெயருக்கு ஏத்தமாதிரி,  தென்னிந்தியா முழுவதும் ஒரே இடத்தில் சுற்றிப் பார்த்த நிறைவு வரத்தான் செய்யுது. அதே சமயம்  நாகரிகம் என்ற பெயரில் எவ்வளவு சமாச்சாரத்தை இழந்துட்டு இன்னும் இன்னும் வசதிகள் என்று  அமைதியான வாழ்க்கையைப் பறிகொடுத்துட்டு இருக்கோமுன்னு  மனசில் ஒரு வலி!  இது என்னப்போல போன ரெண்டு தலைமுறையைச் சேர்ந்த ரெண்டுங்கட்டான்  ஆட்களுக்கு கட்டாயம் வரும் உணர்வுதான். இப்போதைய தலைமுறை இப்படியெல்லாம் ஒன்னு  இருந்துருக்குன்னே தெரியாம வளர்ந்துக்கிட்டு இருக்கு! அறியாமையே ஒரு வரம்!

நான் இங்கே எழுதுனது, அங்கே பார்த்ததில் ஒரு துளி.  நேரில் பார்த்தால் அந்த அனுபவமே வேற.  இன்னொருக்காப்போய் அந்தத் திண்ணைகளில் நிம்மதியா உக்கார்ந்துட்டு வரணும்தான்.  பேசாம அங்கே ஒரு பதிவர் சந்திப்பு நடத்திடலாமா?

தொடரும்...........:-)

PINகுறிப்பு:  அங்கே எடுத்த ஐநூற்றுச் சொச்சம் படங்களில், ஒரு பகுதியை  ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன்.  இது அதற்கான சுட்டி......






12 comments:

said...

ஈசிஆர் சாலையில் உள்ள தங்கும் விடுதிகளைப் பற்றி நேற்று தான் பத்திரிக்கையில் பலவற்றை படித்தேன். ஆனால் இந்த செய்தி ஆச்சரியமாக உள்ளது. எங்கள் ஊர் போலவே பல இடங்கள் நினைவுக்கு வருகின்றது.

said...

இன்னோரு தடவை பார்த்தாச்சு தக்ஷின் சித்ரா. 600 ரூக்கு வளையல் வாங்கி விட்டு விட்டு வந்ததுதான் நினைவுக்கு வந்தது.
அருமையான விவரங்கள் துளசிமா.

said...

திண்ணை ல உட்கார்ந்து பேசினா நல்லாதான் இருக்கும் .
என் மகளும் பானை செய்ய ஆசைப்பட்டு செய்து பார்த்தாள் .நல்ல அனுபவம் தான் .

said...

வாங்க ஜோதிஜி.

செட்டிநாட்டு வீடு உண்மையாகவே ஆர்யகுடி, கண்டனூர் என்னும் இடங்களில் இருந்த உண்மையான வீடுகளைப் பிரிச்சு எடுத்து இங்கே கொண்டுவந்து இணைத்தவைகளே! கிபி 1850 ஆண்டு சமாச்சாரம்! கண்டனூர் வீடு 1895. கதவும் உட்புறத்தாழ்வாரமும் 1900 ஆண்டு. இப்படி வருசங்கள் மாறினாலும் ஸ்டைல் மட்டும் மாறலை பாருங்க!

அதான் உங்களுக்கு அதிகம் பரிச்சயமான உணர்வைத் தந்துருக்கு!

said...

வாங்க வல்லி.

ஏன், எப்படி வாங்குன வளையலை விட்டுட்டு வந்தீங்க? ஙே.....

said...

வாங்க சசி கலா.

பல்வேறு கைத் தொழில்களையும் ஒரு கை பார்த்துடலாம் அங்கே:-)))))

அருமையான இடம்!

said...

அழகான படங்களும்.. சுவையான விளக்கங்களும்...

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றிஸ்.

said...

சூப்பர்! பார்த்திருக்கின்றோம் நாங்கள் இருவருமே.

அட உங்க ஐடியா கூட சூப்பர்....அதே அதே இங்கேயே ஒரு பதிவர் சந்திப்ப வைச்சுக்கிட்டா என்ன நம்ம பாரம்பரியமும் பேசப்படுமே....யாராவது இதக் கண்டுகினீங்களா?!!

நாங்க எப்படியும் அடுத்த் பதிவு அதுல என்ன தவிர்க்கலாம்னு எழுதலாம்னு இருக்கோம் அதோட இதையும் சொல்லிட்டாப் போச்சு...சத்தியமாக நல்ல ஐடியா....

நன்றி சகோ...

said...

வாங்க துளசிதரன்.

வெயிட்டிங் ஃபார் உங்க பதிவு. do வை விட don't ரொம்ப முக்கியம்!

said...

Mikka nandri madam

said...

வாங்க எழுத்தாணி,

வருகைக்கு நன்றி !