Monday, October 27, 2008

குன்றைக் குடையாய் எடுத்தாய்...... குணம் போற்றி!.

வழக்கமில்லாத வழக்கமாக் காலையில் காதுக்குள்ளே விழுந்த இரைச்சலைக் கேட்டுக் கண்முழிச்சேன். வானம் பொத்துக்கிட்டதோ?

ஃப்யூ ஷவர்ஸ்ன்னுதானே சொன்னாங்க. இது என்னடா நம்ம ஊருக்கு, அதுவும் இன்னிக்குன்னு பார்த்து.... கன்னுக்குட்டியெல்லாம் நனைச்சுறாது? அடடா..... ஜன்னல் வழியாப் பார்த்தால் தோட்டம், முற்றம் எல்லாம் அரிசி கொட்டிவச்சுருக்கு. இந்த மழையிலே அரிசி 'காயப்போட்ட'ப் புண்ணியவான் யாரு? ஐய்யோடா..... இது கனவில்லை என்று காதில் சொல்லுங்கோ....

இதேபோலப் பிரளயம் நடந்துருக்கு, முந்தி கோகுலத்தில். இந்திரனுக்கு ஒரே கடுப்பு. மழையாக் கொட்டித்தள்ளுறான். உயிரினங்கள் எல்லாம் கடும் மழையில் மாட்டிச் செய்வதறியாது மயங்கும் நேரம், ஏழே வயதுப் பாலகன் கோவர்தன மலையை அப்படியே அலாக்காத் தூக்கி( தன் இடது கை சுண்டு விரலால்) நிறுத்தினதும் சகல உயிர்களும் மலைக்கடியில் தஞ்சம் அடைஞ்சது. ( நல்ல காலம். கை மட்டும் கொஞ்சம் தவறி இருந்தால் கூண்டோடு காலி).மழை விட்டப்பாட்டைக் காணொம். ஏழு பகலும் ஏழு இரவும் விடாத மழை. கடைசியில் இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மழையை வாபஸ் வாங்கிட்டார்.

நவீன கால இந்திரனுக்கு இத்தனைநாள் காத்திருப்பது எல்லாம் வேலைக்காகாது. காலையில் ஆரம்பிச்ச மழை, பகல் ஒரு மணிக்கு ஸ்விட்ச் போட்டாப்போல 'டக்'ன்னு நின்னுச்சு. அப்பாடா.....கன்னுக்குட்டிகள் நனையாது.

அறுபது மைல் நீளம், நாற்பது மைல் அகலம், அறுபது மைல் உயரம் உள்ள மலைன்னு புராணங்களில் இருக்கும் வர்ணனையை மனசில் நினைச்சுக்கிட்டேக் கோவர்தனகிரியைப் பார்க்கப் போனாராம் இன்னிக்குப் பிரசங்கம் செஞ்ச இஸ்கான் பக்தர். இது என்னடா கண்ணனுக்கு வந்த சோதனைன்னு வெறும் அம்பது மீட்டர் உயரம், ஒன்பது கிலோமீட்டர் நீளம் வரும் சின்ன குன்றுதான் கண்ணில் பட்டதாம். மலையைச் சுற்றிவரும் மலைப்பாதை (பரிக்ரமா)யில் நடந்துகொண்டே சிந்திச்சாராம். அந்தக் காலத்தில் புராணங்கள் எழுதிவச்சவர்களுக்குக் கற்பனை வளம் ஜாஸ்தின்னு! டில்லியில் இருந்து போனால் மூணு மணிநேரப் பயணம். மதுரா, பிருந்தாவனத்தில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இந்த இடம் இருக்கு.

என் அருகில் இருந்த (மூத்த) தோழி (இன்னொரு தோழியின் அம்மா) நீ கோவர்தன மலைக்குப் போயிருக்கியான்னு கேட்டாங்க. 'கோவர்தன கிரியும், கிருஷ்ணனும் வேறுவேறில்லைன்னு இப்பத்தானே பிரசங்கத்தில் சொன்னாங்க. அந்த கோபாலே என் வசம் இருக்கும்போதுத் தனியா மலையைப் பார்க்கப் போகணுமா என்ன?'ன்னு சொல்லி வச்சேன்:-)

எங்க ஊர் கோவிலில் இன்னிக்கு கோவர்தன பூஜை. எல்லாத்தையும் ஊர் உலகத்துக்கு முன்னாலே கொண்டாடும் என் பழக்கம் இனி கோயிலுக்கும் வந்துருச்சு. தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படவேண்டியது. அன்னிக்கு வேலைநாள் என்றபடியால் இந்த ஞாயிறு. இதுக்கும் அந்த மூத்தத் தோழி, 'கியோங் யே லோக் உள்ட்டா கர்த்தே ஹை. திவாலிகே பாத் கர்னே ச்சாஹியே நா'ன்னும் சொன்னாங்க. நம்ம வாய்ச் சும்மா இருக்கா? 'ஆஜ்கல் பூரா ஸமானா மே சப்காம் உள்ட்டாயீ ஹோதா ஹைநா. இஸ்லியே இதர் பி'

நேத்து இரவு கோவிலுக்குப் பூஜைக்குப் போனப்பவே, இன்னிக்கான வேலைகளை, அலங்காரங்களைச் செய்ய ஆரம்பிச்சுக் கோவர்தனகிரி உருவாகிக்கிட்டு இருந்துச்சு. 'பிஹைண்ட் த ஸீன்' உங்களுக்குக் காமிக்கலாமேன்னு நாலைஞ்சு படம் எடுத்துவந்தோம்.

ஒரு நீள மேஜையில் காலி அட்டைப் பெட்டிகளை மலைத் தொடர் போல் அடுக்கிவச்சு அகலமான ஃபுட் ராப்பர் போட்டு நீட்டாச் சுத்திச் சுத்தி மலை உச்சிகள் (?) ஆடாமல் அசையாமல் செஞ்சாச்சு. ஒரு ஒன்னரை இஞ்சு உயரம் வரும் மூணு மெகா ட்ரேக்களில் சாக்லேட் கேக்குகள் செஞ்சு அதைத் துண்டுகளாக வெட்டி மலைகளை மூடிக்கிட்டு இருந்தாங்க. சாணகம் வச்சுச் செய்யறதில்லையான்னு 'என் அறிவை'க் கொஞ்சமாக் காட்டுனேன். கிருஷ்ணர் மட்டும்தான் சாணகமாம். மற்றது அதே வண்ணத்தில் இருக்கும் கேக்குகளாம். இது ஒரு பக்கமுன்னா கோவில் ஹாலில் சுவர்களைப் புகைப்படங்களால் (முக்கால்வாசி மாடும் கன்னுகளும்தான்)அலங்கரிச்சுக்கிட்டு ஒரு பக்தை.

அரைமுழம் நீளம் வரும் ஊசிவச்சுப் பூச்சரங்கள் கோர்த்து எடுத்துக்கிட்டு இன்னொரு பக்தை. இவர்கள் கூடவே வந்து ஓடிவிளையாடிக் கொண்டிருக்கும் குட்டிக் குட்டி கண்ணன்களும் ராதைகளும்.

நேத்து, மாலை நேரப் பூஜை முடிஞ்சவுடன் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு போயிட்டேன். (இதைப் பற்றி அப்புறம் சொல்றேன்). இன்னிக்குக் கதையைப் பார்க்கலாம். இங்கே கோயில் ஹால் கொஞ்சம் சின்னதுதான். 7 x 8 மீட்டர்தான் இருக்கும். ஆனால் கதவுகள் மட்டும் பயங்கரக் கனமாச் சும்மாக் கிண்னுன்னு இருக்கும். பழையகால மரக்கதவுகள். கதவைத் திறந்தவுடன் இடி இடிக்கிறமாதிரி மிருதங்கத்தை விளாசிக்கிட்டு இருக்கார் ஒரு பக்தர். பஜனை நடந்துக்கிட்டு இருக்கு! அது முடிஞ்சவுடன் 'சட்'னு ஒரு நிசப்தம் வந்துச்சுப் பாருங்க..... மழை ஓய்ஞ்சாப்புலேன்னேச் சொல்வொமெ அப்படி:-) பிரசங்கம் நடந்ததும் ஹாலுக்கு மறுபுறம் இருக்கும் திறந்த வெளித் தோட்டத்துக்கு எல்லாரும் போனோம்.





நேற்றைய 'மலை மேசை' அலங்காரம் முழுசும் முடிஞ்சு கம்பீரமாத் தோட்டத்தில் நிக்குது. சாய்வா வச்ச இன்னொரு பலகையில் கிருஷ்ணர் (அவருக்கு மட்டும் கம்பீரம் கொறைச்சலா என்ன?) இயற்கை வண்ணங்களுடன், இடது கை உயர்த்தி நிக்கிறார். பச்சை இலைகள் பேக் ட்ராப். பட்டாணிப் பருப்புக்களால் ஆன மஞ்சள் பட்டாடை. பவழ உதடுகளுக்களுக்கு ஒரு செந்நிற இலை. காலில் கொலுசு சூப்பர். ரெண்டுரெண்டு வரிசை வெள்ளைப்பட்டாணிகளின் இடையிலே ரெட் கிட்னி பீன்ஸ். ராஜ்மான்னு சொல்வோம் பாருங்க அது. இடுப்புலே இருக்கும் ஆரஞ்சு நிற.உத்தரீயம் மைசூர் பருப்பு. தலையில் உள்ள க்ரீடம், கைவளை, மார்பில் திளங்கும் ஹாரம் இப்படி வகைவகையாப் பருப்போ பருப்பு! செயற்கை ரசாயனப்பொருட்கள் ஒன்னுமே இல்லாம எல்லாமே இயற்கை! எனக்கு ரொம்பப் பிடிச்சது.


நகருக்குள்ளே நாலு கால்நடைகள்(??) அனுமதி இல்லை என்றதால் சிட்டிக் கவுன்ஸில்கிட்டே விசேஷ அனுமதி வாங்கி ரெண்டு கன்னுக்குட்டிகளைக் கொண்டுவந்துருந்தாங்க. தரையில் ஈரம் கூடுதலா இருந்ததால் அதுகளை அந்த ட்ரெயிலரிலேயே வச்சாச்சு. ரெண்டும் செல்லம்போல இருந்துச்சு.



கோபூஜை முடிஞ்சதும், நாங்கள் கோவர்தனகிரியைத் தாங்கும் கிருஷ்ணனை வலம் வந்தோம். மலைப்பாதைக் கற்கள் எல்லாம் சாக்லேட்த் துண்டுகள். டெஸிகேட்டட் தேங்காய்ப்பூவுக்குப் பச்சை நிறம் கலந்து மலையில் புல் நிறைஞ்சுருக்கு. கேக்கையும் தேங்காய்ப்பூவையும் இணைக்கப் பச்சை நிற வெஜிடபிள் ஜெல்லிக் கலவை. அங்கங்கே இருக்கும் குளங்கள், நீர் நிலைகள் எல்லாம் சின்னச் சின்னப் பாத்திரங்களில் ஊத்திவச்சு உறைஞ்சுபோனப் பச்சை நிற ஜெல்லியில் தகதகன்னு ஜொலிக்குது. பாசி படிந்த குளங்கள்!!!! எது என்ன இடம் என்ற விவரங்கள் அடங்கிய பெயர்ப்பலகைகள். எங்கூர் ரோட் ஸைன்ஸ் கெட்டது போங்க!



பெரிய பெரிய பாத்திரங்களில் பலவகையான பர்பி, பால் லட்டு, ட்ரைஃபிள் இப்படி இனிப்புகள் கையில் வச்சுக்கிட்டுப் பக்தைகள். நாங்கள் எல்லாரும் அதை வாரிவாரி (தின்னுட்டோமுன்னு நினைச்சுக்காதீங்கப்பா) எடுத்து கிரிராஜனுக்கு படைக்கிறோம். ஒரு இனிப்பு மலையா அதை மாத்திட்டுத்தான் மறுவேலை! சின்னப் பசங்க ரொம்ப ஆர்வமா கைக்குக் கிடைச்சச் சந்துலே எல்லாம் திணிச்சுவைக்கிறாங்க.


சரியான குளிர். வழக்கமில்லாத வழக்கமாத் தோட்டத்துலே செருப்போடு வரலாமுன்னு விதியைத் தளர்த்தினாங்க. மதியம்வரை பெய்ஞ்ச மழையில் தரையெல்லாம் ஒரே ஈரம். எங்கள் சாக்ஸ் & பாதங்கள் எல்லாம் தப்புச்சு. ஸ்ரீ கிருஷ்ணா நீ நல்லா இருக்கணுமுன்னு மனசார வாழ்த்தினேன். இதுக்குள்ளே மணி ஏழாயிருச்சு. நம்ம கோவிலில் எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும் ஏழு மணிக்கு ஆரத்தின்னா அது ஏழு மணிக்குத்தான். கோவர்தன கிரிதாரியை அங்கேயே விட்டுட்டு உள்ளே ஓடுனோம்.


வழக்கமான ஆரத்தி ஒரு பக்கம் அதுபாட்டுக்கு நடக்குது. கர்ப்பக் கிரகத்தின் முன்னால் ஒரு மேசையில் இந்த விழாவுக்காக வச்சுருந்த குட்டிக் கண்ணனுக்கு வலம்புரிச் சங்கில் அபிஷேகம். கண்குளிரப் பார்த்தோம்.

அடுத்த முக்கிய நிகழ்ச்சிக்காக எல்லாரும் பந்தியில் உக்கார வேண்டியதாப் போச்சு. இன்னிக்கு விருந்து ஸ்பான்ஸார் செஞ்சது ஒரு மூணுவாரக் குழந்தை. பிள்ளைகிட்டே இருந்து பிடுங்கித் தின்னுட்டோமுன்னு சொல்லமாட்டீங்கதானே? கோவில் முந்திபோல இல்லாமல் வரவு செலவுகளில் தள்ளாடுதுன்னு நமக்குத் தெரியும் என்பதால் ஒரு சின்னத் தொகையைச் சாமிக்குன்னு தட்டுலே (கோயில் ஆட்கள் கேக்காமலேயே) எல்லாரும் போட்டோம்:-)

இந்த வாரம் எங்களுக்கு லேபர் டேயை முன்னிட்டு லாங் வீக் எண்ட். அதனால் கோயிலில் ஆட்களும் கம்மிதான். சமையலோ எக்கச் சக்கமாச் செஞ்சு வச்சுருந்தாங்க. சிம்பிள் மெனுதான். சாதம், பருப்பு, தக்காளிச் சட்டினி, பீன்ஸ், உருளை & பனீர் போட்ட ஒரு கூட்டு, போண்டா ( ஹை! வலைப்பதிவர் சந்திப்பு!) பப்படம், ராஸ்பரி சேர்த்த கேஸரி( அம்பி உங்க பங்கை நானே சாப்புடவேண்டியதாப் போச்சு), லெமன் ஜூஸ் தாகத்துக்கு .

இதில்லாம கிரிராஜாவை அலங்கரித்த இனிப்புவகைகள் வேறு. இஷ்டம்போல் எடுத்துக்கலாம். நம்ம வீட்டில் நாம் ரெண்டே பேர் என்றதால் கொஞ்சமாக் கொண்டுவந்தேன். மறுநாள் திங்கள் தீபாவளிப் பண்டிகையைக் கோவிலில் கொண்டாடப்போறோம். அதுக்கான அறிவிப்பைச் செஞ்சாங்க.


சாப்பாட்டை எடுத்துவச்சுக் கொடுக்க முடியாது என்றதால் கிரிவலம் வந்த பலனை நம் வலைநட்புகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

25 comments:

said...

ஜெய் கோவர்த்தன கிரிதாரி மஹராஜ்கி ஜெய்!!!

said...

//என் அருகில் இருந்த (மூத்த) தோழி (இன்னொரு தோழியின் அம்மா) நீ கோவர்தன மலைக்குப் போயிருக்கியான்னு கேட்டாங்க. 'கோவர்தன கிரியும், கிருஷ்ணனும் வேறுவேறில்லைன்னு இப்பத்தானே பிரசங்கத்தில் சொன்னாங்க. அந்த கோபாலே என் வசம் இருக்கும்போதுத் தனியா மலையைப் பார்க்கப் போகணுமா என்ன?'ன்னு சொல்லி வச்சேன்:-)//

அளவாச் சாப்பிட்டு நல்லாத்தானே இருக்காரு!! சும்மா அவரை உடம்பைக் குறை உடம்பைக் குறைன்னு பல விதங்களில் சொல்லறதே உங்களுக்கு வேலையாய்ப் போச்சு!

said...

வாங்க குமரன் தம்பி.


குன்று என்றதும் ஓடோடிவந்து குன்றுதோறும் நின்றாடுபவன் 'குமரன்' என்பதை நிரூபிச்சுட்டீங்க.

குன்றைக் கண்டால் குமரன் விடுவதில்லை:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

இண்டு இடுக்குலே, பாய்ஞ்சு பாய்ஞ்சுப் படிக்கறதே உங்களுக்கு வேலையாப் போச்சு:-)))))

said...

ஆனாலும் கண்ணுக்கும் மனசுக்கும் ஏகப்பட்ட விருந்துப்பா. இத்தனை டீடெயில். சாமி கோபாலா,கோவிந்தா:)
இங்க இப்ப பனிச்சாரல் வீசுது மத்தாப்பு போட முடியாம.
கொஞ்சம் அங்க நிக்கறவரை வரச் சொல்லுங்க:)

நாங்க எல்லாம் இங்க இருக்கிறப்போ இப்படி(மலைன்னு) கோபாலைக் குறை சொல்றது தப்புப்பா.:)

said...

வாங்க வல்லி.

மலைப் போலப் பரந்த மனசுன்னு சொன்னதை நீங்க எல்லாம் ஏந்தான் இப்படித் தப்பா(வே)ப் புரிஞ்சுக்கறீங்களோ!!!

வெறும் கம்பி மத்தாப்புக் கொளுத்துனதுக்கே நம்ம 'வீரன்' பயந்துபோய்ப் பதுங்கிக்கிட்டான்:-)

குடைக்குள் மத்தாப்புன்னு கொளுத்துங்கப்பா.

மத்தாப்புக்குக் குடை பிடித்த 'குடைவள்ளல்'ன்னு நாளை உங்களைச் சரித்திரம் புகழட்டுமே:-)

said...

நகைச்சுவையுடன் கூடிய பக்தி நயம் மிகுந்த பதிவு. துளசியின் கண்ணும் நினைவாற்றலும் கூர்மையானது. உதவிக்குக் கோவர்தன கிரி வேறு. கேட்க வேண்டுமா - பதிவிற்கு

கலக்கல் போங்க

படங்கள் அருமை

நல்வாழ்த்துகள்

said...

//கோவர்தன கிரியும், கிருஷ்ணனும் வேறுவேறில்லைன்னு இப்பத்தானே பிரசங்கத்தில் சொன்னாங்க. அந்த கோபாலே என் வசம் இருக்கும்போதுத் தனியா மலையைப் பார்க்கப் போகணுமா என்ன?'ன்னு சொல்லி வச்சேன்:-)//
அப்படி போடுங்க ..

தெய்வந் தொழாஅன் கொழு நற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

அப்படின்னு வள்ளுவர் எழுதியது ஏன்னு
இப்பல்ல புரியுது !

மீ.பா.
http://arthamullavalaipathivugal.blogspot.com

said...

Hello Madam,

I am sindhusubash and living n dubai. past one year i am reading yr blog everyday without fail.it s very impressive and useful too.i was trying to send u msgs but not able to create a account bcoz everything n arabic.somehw i got it now.Happy Diwali.

said...

வாங்க சீனா.

கிரிதாரி இருக்கப் பயமேன்னு நானும் இருக்கேன்.

எல்லாம் அவ(ர்)ன் பார்த்துப்பா(ர்)ன். நான் தமிழ்ச்சேவை பிழியணுமுன்னு உத்தரவாகி இருக்கு:-)))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

எல்லாம் உங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம். கொடுத்துவச்சுருக்கேன்:-)

இந்த அன்பு எப்பவும் நிலைக்கணும் என்பதுதான் என் ஆசை.

said...

வாங்க சிந்து.

நலமா இருக்கீங்களா?

இன்னிக்கு லக்ஷ்மி பூஜை. கூடவே புதுவருசமும்.

நல்ல நாளாப் பார்த்து (வாசகர்) வரவு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.

நல்லா இருங்க.

said...

இண்டு இடுக்குலே, பாய்ஞ்சு பாய்ஞ்சுப் படிக்கறதே உங்களுக்கு வேலையாப் போச்சு:-)))))
இவுங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் பிடிபடுகிறது என்றும் இன்னும் புரியமாட்டேன் என்கிறது. :-)
கடைசி படத்தில் அதென்ன பால்கோவாவா?

said...

//'கோவர்தன கிரியும், கிருஷ்ணனும் வேறுவேறில்லைன்னு இப்பத்தானே பிரசங்கத்தில் சொன்னாங்க. அந்த கோபாலே என் வசம் இருக்கும்போதுத் தனியா மலையைப் பார்க்கப் போகணுமா என்ன?'ன்னு சொல்லி வச்சேன்:-)///

சூப்பரு!!!!!! இதில்லை மாட்டரு!:)))))))

கோவர்த்தனகிரிதாரியைப் பத்தி இப்போத் தான் படிச்சுட்டு வந்தேன். தூக்கும்போது ஏழு வயசுங்கறதிலே கொஞ்சம் சந்தேகம்! ம்ம்ம்ம்ம்??? இன்னும் கொஞ்சம் ஆழமாப் போய்ப் பார்க்கணும். அப்புறம் எப்படித் தூக்கினான்? ஏன் தூக்கினான்? தூக்க முடிஞ்சது உண்மையானு எல்லாம் லாஜிக்கலா புரியுது. எப்படித் தூக்கி இருப்பான்கிறதும் சரி, மலை பெரிசாத் தான் இருந்திருக்கும் என்பதும் சரி உண்மைதான்னு நினைக்கிறேன். கழுதையே தேய்ஞ்சு கட்டெறும்பா ஆகிறப்போ குன்று தேய்ஞ்சு, பாறாங்கல்லா ஆகுமே! நல்லதொரு பதிவு! பின்னூட்டம் தான் நீஈஈஈஈளமாப் போகுது, கண்டுக்காதீங்க! தீபாவளி வாழ்த்துகள் தாமதமாய்! :))))))

said...

நானும் கோவர்த்தனம் போயிட்டு வந்து போஸ்ட் போட்டேனே.. ஆனா அதிக உயரமில்லாத ஆனா நீளமா இருக்கறத பார்த்தா குடை மாதிரியே தானே இருக்குது.. அங்க கிரிராஜ் கோயிலில் சுண்டுவிரலில் க்ருஷ்ணன் தாங்கினாலும் மத்த கிராமத்து ஆளுங்களெலாம் ஆளூக்கொரு கழி வச்சு தாங்குவது போல ஒரு காட்சி வச்சிருக்காங்க..

நிஜ கோவர்த்தனம் போலவே செய்திருக்காங்க அழகா இருக்கு..

Anonymous said...

சின்ன வயசுக்கனவுல இப்படி சாக்லேட் மலையை சாப்படணும்னு நெனச்சுருக்கேன். தீபாவளி வாழ்த்துக்கள்

said...

//( அம்பி உங்க பங்கை நானே சாப்புடவேண்டியதாப் போச்சு), //

ada, இந்த சந்தோஷமான விஷயம் கண்ணிலே படலை, ரொம்பவே மனசுக்குத் திருப்தியா இருக்கு! :P:P

கோவர்த்தனகிரியைப் பார்த்திருக்கேன், நேரிலேயும், அப்புறமா வேளுக்குடியின் கீதைப் ப்ரவசனம் வருதே பொதிகையிலே, அதிலேயும் எல்லாவிதமான நைவேத்தியங்களோடயும் காண்பிச்சாங்க அப்போவும் பார்த்துக் கேட்டேன். வேளுக்குடி சொன்னது என்னனு மனசைத் தோண்டிட்டு இருக்கேன்.ம்ம்ம்ம்ம்ம்?????? கோவர்த்தனம் இங்கேயே கட்டி இழுக்குது! :))))

said...

தீபாவளி வாழ்த்துக்கள் துளசி டீச்சர். :)

சாப்பாட்டு படங்கள் அருமையாக இருக்கிறது(பசியோடு இருப்பதால் அது தான் முதலில் கண்ணுக்கு தெரிகிறது :) )

said...

வாங்க குமார்.

அதானே.... சாதாரணமா வந்து விழும் வரிகளுக்குக்கூட உட்பொருள் இருக்குபோல!!!!

பால் லட்டு, ராஸ்பரி கேஸரி, மலையை மூடிய பச்சை ஐஸிங் செஞ்ச கேக், மற்ற பர்பி வகையறாக்கள்தான் தட்டிலே.

சரியான 'மலை முழுங்கிய மகாதேவி' நான்:-)

said...

வாங்க கீதா.

ஆன்மீகப் பதிவர் வந்து அப்ரூவ் செஞ்சது ரெட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கு.

தாமதமான வாழ்த்துன்னு ஒன்னு இல்லவே இல்லை. எங்க தீபாவளி இன்னும் முடியலை. நவம்பர் 22தான் (இப்போதைக்குக்) கடைசி:-)

அம்பி மேலே இவ்வளோ பாசமா? அடடடா.....:-)

நான் பொதிகை எல்லாம் பார்க்கலைப்பா(-:

போனமுறை சென்னைக்கு வந்தப்ப, சில நாட்கள் காலையில் ஜெயா டிவியில் கோயில் பார்த்ததோடு சரி.

said...

வாங்க கயலு.

நீங்க சொன்னதுதான் இன்னும் பொருத்தமா இருக்கு. மக்கள்ஸ் எல்லாம் சேர்ந்து மலையைச் சுமப்பது!!!!

உங்க பதிவைக் கோட்டை விட்டுருக்கேனே. சுட்டியைத் தனிமடலில் அனுப்புங்கப்பா. இங்கே போட்டாலும் சரி. தவறவிட்டவங்க பார்த்துக்கலாம்.

said...

வாங்க க.ஜூ.

அது வெறும் டிஸ்ஸர்ட் போட்டோதான். அன்னிக்குச் சாப்பாட்டைப் படம் எடுக்க மறந்துட்டேன். ஆனா மறுநாள் விழாவில் உணவு பரிமாறியதும் க்ளோஸப் எடுத்துவச்சுருக்கேன். அதுக்குண்டான பதிவுக்கு அது வரும்:-))))

Anonymous said...

டெஸர்ட்டே இத்தனையா? ஆகா...

said...

வாங்க தூயா.

இன்னும் சிலது பச்சை ஜெல்லி, சிலவகை பர்பின்னு இருந்துச்சுதான்.

நாந்தான் கொலஸ்ட்ராலை நினைச்சுக்கிட்டுக் கையை மடக்கிக்கிட்டேன்:-))))

said...

கோவர்த்தன கிரிவலம் 1
கோவர்த்தன கிரிவலம் 2

வச்சிட்டேன் விளம்பரம்.. பாருங்க பின்னூட்டமே இல்லாம காத்தாடுது .. நான் போட்ட நேரத்துல யாருமே படிக்காம மிஸ் பண்ணியிருப்பீங்களாட்டம் இருக்கு.. :)