Saturday, November 18, 2006

ஹரிதாஸ் அல்லது பக்த விஜயம்

படம் ஓடோ ஓடுன்னு 110 வாரம் ஓடியிருக்குங்க. ஒரு தீபாவளீக்கு ரிலீஸ் ஆகிமூணு தீபாவளி தாண்டியும் ஓடுச்சுன்னா( ஓட்டியிருக்காங்க?) பாருங்களேன்.


1944வது வருஷத்து ரிலீஸ். பழைய படங்களைத் தேடித்தேடிப் பாத்த நான் எப்படி இதை மட்டும் (62 வருசப் பழசு!) விட்டு வச்சேன்றதே தெரியலை.
சரி.... அப்ப நம்ம வெஸ்ட் மாம்பலம் நேஷனல்லே போட்டுருக்க மாட்டாங்க. இல்லேன்னா என் கண்ணுலே இருந்து தப்புமா?


எப்படியோ போனமுறை ஊருக்குப் போனப்ப கிடைச்சது.அதுதான் இந்த 'கிடைக்கணுங்கறது கிடைக்காமப் போகாது' இல்லே? வாங்கியாந்தேன்..


அப்பெல்லாம் திரைப்படங்களுக்கு ரெண்டு தலைப்பு வைக்கிற வழக்கம். இப்பவும்தான் வரிவிலக்கு கிடைக்குதேன்னு அவசரம் அவசரமா ரெண்டு தலைப்புகள் வருது:-)))


இந்தப் படம் வந்தப்ப நம்ம வலைஞர்களில் முக்காலெ மூணேமுக்கால் வீசம் பேர் பிறந்தே இருந்துருக்கமாட்டோம். அவுங்களுக்காகத்தான் ரொம்பவே விஸ்தாரமான இந்தப் பதிவு. இது வழக்கமான 'துளசி ஸ்டைல்' விமரிசனம் இல்லை.


ஹரிதாஸ் அல்லது பக்த விஜயம்.


திரைக்கதை & இயக்கம்: சுந்தர்ராவ் நாட்கர்னி


வசனம்: இளங்கோவன்


இசை: ஜி.ராமநாதன்


பாடல்கள்: பாபநாசம் சிவன்.

போதும் போதுமுன்னு சொல்ற அளவுக்கு 18 பாட்டுங்க. (சண்டைக்காட்சிகள் நிறைந்த, பாடல்கள் நிறைந்த'ன்னெல்லாம் விளம்பரங்கள் வந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்) நல்ல வேளை! எல்லாம் ச்சின்னச் சின்ன பாட்டுகள்தான். அதிகப்பட்சம் ரெண்டு நிமிஷங்கள். ( இப்பக் கவனிச்சீங்கன்னா, ஏழெட்டு நிமிஷப் பாட்டுகள் கூட சர்வசாதா'ரணம்')


வாழ்வில் ஓர் திருநாள்

ஆடணும்

மன்மத லீலையை வென்றார் உண்டோ? ( புகழ் பெற்றது)

தொட்டதற்கெல்லாம்

கதிரவன் உதயம்

எனது மனம்

எந்நாளும் உங்களை

அன்னையும் தந்தையும்தானே ( புகழ் பெற்றது)

மாமுனி நாதா


என் கண்ணிலொரு

அன்னையும் தந்தையும்

கவலையைத்தீர்ப்பது

காதகி கிராதகி

என்னுடல்தனில் ஈ மொய்த்தபோது (அம்மையப்பா உந்தன் அன்பை)

எனதுயிர்

கிருஷ்ணா முகுந்தா ( புகழ் பெற்றது)

நிஜமா


அடடா...பாட்டைப் பத்திச் சொல்றதுக்கு முந்தி நடிகர் நடிகைகளைப் பத்திச் சொல்லி இருக்கணுமுல்லெ?


எம்.கே.தியாகராஜ பாகவதர்

டி.ஆர். ராஜகுமாரி ( பலரின் தூக்கத்தைக் கெடுத்த அந்தக்காலக் கனவுக்கன்னி)

வசந்த கோகிலம்

ரங்காச்சாரி

என்.எஸ். கிருஷ்ணன்

டி.ஏ. மதுரம்.

மற்றும் பலர்


கதைன்னு பார்த்தீங்கன்னா ரொம்ப சிம்பிள். 'மனுஷன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதுன்றதை விஸ்தாரமாக் காமிச்சு, எப்படி இருக்கணுமுன்னு கடைசியில் சுருக்கமாச் சொல்றாங்க.'

மது & மாது கூடாது

தாய் தந்தையை பேணல்.


ப்ளேபாய் கதாநாயகன். (எம்.கே.தியாகராஜ பாகவதர்)

அடங்காத மருமகள் (வசந்த கோகிலம்)

ஆன்மீக நாட்டம் இருக்குற பெற்றோர்.

ஆடல்கலையில் சிறந்த விலைமகள் ரம்பா (டி.ஆர். ராஜகுமாரி)


அப்பா அம்மாவை மதிக்காத, கல்யாணமான (!!!!!!) கதாநாயகன் ஹரி என்கிற ஹரிதாஸ்.முதல் காட்சியிலேயே 'வாழ்விலோர் திருநாள்'னு சொந்தக்குரலில் பாடிக்கிட்டே வெள்ளைக்குதிரையில் அலங்கார பூஷிதனாய் 'ஆட்டுக் கம்மலோட' வர்றார். ஊர்ப் பெண்கள் எல்லாம் மதி மயங்கி/மறந்து நிக்கறாங்க.( அந்தக் காலத்துலே நிஜமாவே பலரோட 'கனவுக்கன்னனா' இருந்தாராமே!) பார்க்கிற பெண்களையெல்லாம் கண்ணடிச்சுக்கிட்டே பாட்டு வேற. ஹைய்யோ.........


ஒரு ச்சின்னப்பெண்ணைத் துரத்திக்கிட்டு போறார். அந்தப் பொண்ணும் தொடை தெரியறமாதிரி ஓடுது(கவர்ச்சி?)கைக்கெட்டும் தூரத்தில் அந்தப் பெண் இருக்கும்போது நண்பன் வந்து, இதையாத் துரத்திக்கிட்டு வந்தே? இன்னொருஅழகான பெண் நகரத்துக்கு வந்துருக்காள்ன்னு சொன்னதும் இவளை விட்டுட்டு உடனே திரும்பி வேகமாப் போறார்.அந்த அவசரத்திலும் துரத்திய பெண்ணுக்குப் பரிசு கொடுக்காமப் போகலை. மோதிரத்தைக் கழட்டி அவள் காலடியில் வீசிட்டுப் போறார். நன்றியோடு அந்த மோதிரத்தை எடுக்கும் அந்தப் பெண், அட! நம்ம பண்டரிபாய்.


கிருஷ்ணன் கோயிலில் ஆடும் ரம்பாவைப் பார்க்க ஓடோடி வந்து சேரும்போது நடனம் முடிஞ்சுருது. ரம்பாவை மனைவி லக்ஷ்மிக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்து ஆடவைக்கிறான் தோழன் கண்ணன். ஆட்டம் முடிவடையும் நிமிஷம், மனைவிக்கு உண்மை தெரிஞ்சுபோய் எல்லாருக்கும் குச்சியாலே செம அடி. புருஷனுக்கும் மனைவிக்கும் சண்டை. பாட்டாலேயே மனைவியை மன்னிக்கும்படி செஞ்சுடறார் நாயகன். 'வசனம் இருக்கு பாருங்க, ரொம்ப ஷார்ப்.' நாகரிகம் கருதி நாம் என்ன வார்த்தையெல்லாம் சொல்லமாட்டோமோ, அதையெல்லாம் சரளமாப் பேசறாங்க.



ரம்பாவுக்கு ரோஷம் வந்துருது. லக்ஷ்மி தனியா இருக்கும்போது ஆட்களை அனுப்புக் கட்டித் தூக்கிட்டு வரச் சொல்றாங்க. மாமனார், மாமியார் அந்த சமயம் வந்து காப்பாத்தறாங்க. அடியாட்களை மன்னிச்சு விட்டா, உடனே அவுங்க, மாமனார் மாமியார் மேலேயே பழியைத் திருப்பிப் போட்டுடறாங்க.மனைவியை இப்படிச் செஞ்சது தன்னோட பெற்றோர்கள்தான்னு நம்புன ( ஏற்கெனவே அவுங்களைக் கொஞ்சமும் மதிக்காத )ஹரி அவுங்களை வீட்டை விட்டுத் துரத்திடறார்.அம்மா அப்பா மனம் கலங்கி வீட்டைவிட்டுப் போயிடறாங்க.( தேசாந்திரம்)


லக்ஷ்மியோட அன்பா இருக்கறதுபோல 'நடிச்சுக்கிட்டே' ரம்பா வீட்டுக்கு போய் வந்துக்கிட்டு இருக்கும் ஹரிக்குக் குடிப்பழக்கம் பண்ணி வச்சுட்டாங்க ரம்பா. குடிக்கு அப்புறம் சூதாட்டம். தருமர் மாதிரி இந்த ஆட்டத்துலே தன் வீட்டைக்கூட வச்சு ஆடித் தோத்துட்டார் ஹரி. குடிச்சுட்டு வந்த புருஷனைக் கண்டிக்கும் மனைவியை, அலட்சியம் செஞ்சு தள்ளிவிட்டதுலெ நெத்தியிலே ரத்தகாயம் லக்ஷ்மிக்கு(-:


ரம்பா, ஹரியின் வீட்டுக்கு வந்து வீட்டைச் சொந்தக் கொண்டாடிக்கிட்டு ஹரியையும் லக்ஷ்மியையும் வெளியேபோகச் சொன்னதும், கிராம அதிகாரி வந்து பார்த்துட்டு, குடி போதையில் இருக்கும்போது எழுதிக்கொடுத்த பத்திரம் செல்லாதுன்றார். அடிச் சக்கை! ரொம்பச் சரி. ஆனால்....ரம்பாதான் விலைமகளாச்சே.அதிகாரியையும் மயக்குனதும், அவரும் ரம்பா பக்கம் தீர்ப்பு சொல்லிடரார்.ரம்பாவின் சுயரூபம் இப்பத்தான் ஹரிக்குத் தெரியவருது.


வீடுவாசலைத் துறந்து ஹரியும் லக்ஷ்மியும் காட்டுவழியே நடந்து காசிக்குப் போறாங்க. ஒரு இரவில் காட்டுலே தூங்கும்போது அங்கே ஒரு முனிவரோட ஆசிரமத்துலே மூணு அழகிய பெண்கள் வந்து போறதை ஹரி பார்த்துடறார். கங்கை, யமுனை, சரஸ்வதியாகிய நதிப்பெண்கள். அந்த முனிவரையும் ஏளனமாகப்பேசி எட்டி உதைக்கும் ஹரிக்கு ரெண்டு காலும் முழங்காலுக்குக் கீழே துண்டாப்போயிருது. ( க்ராஃபிக்ஸ், கணினி எல்லாம் இல்லாத காலம். ஆனாலும் ரத்தக்காயத்தோடு தரையில் இழைஞ்சு இழைஞ்சு ஹரி போறார்) முனிவரின் மகிமையும், தான் தன்னுடைய பெற்றொருக்குச் செய்த அவமரியாதைக்கும் இது தண்டனை என்று உணர்ந்த ஹரி பாடிக்கிட்டே ச்சின்னக் குன்றுமேலே இழைஞ்சு ஏறுகிறார்(!!!)


அங்கே இருந்து கீழே பார்க்கும் போது போகும் பஜனை கோஷ்டியில் ஹரியின் அப்பா அம்மா போய்க்கிட்டு இருக்காங்க. அவுங்களை இதுவரை அவமரியாதை செஞ்ச குற்றத்துக்காக, தற்கொலை செஞ்சுக்கலாமுன்னு அங்கே இருந்து உருண்டு விழறார். முனிவர் காப்பாத்தி அவரை வைக்கப்போரில் விழவைக்கவும், பஜனைகோஷ்டி ஓடிவந்து பார்க்கவும், முனிவர் அருளால் வெட்டுண்ட கால்கள் பறந்துவந்து ஒட்டிக்கவும் சரியா இருக்கு.


அன்னையும் தந்தையுமே கண்கண்டதெய்வமுன்னு மனம் திருந்தி அவுங்களுக்கு 'சேவை' செஞ்சுக்கிட்டு காட்டுலே இருக்கார்.ஒரு நாள் காட்டுலே நடந்துபோகும்போது, லக்ஷ்மியைப் பாக்கறார். 'எப்படி என்னை விட்டுப் போகப்போச்சுன்னு அவுங்க கேக்க, பெற்றோர்களுடன் இப்படி இருப்பதே ஆனந்தமுன்னு இவர் சொல்ல, அவுங்க கோச்சுக்கிட்டு தன்னுடைய அப்பா வீட்டுக்குப் போறாங்க. அங்கே ரெண்டு நாளா சாப்பாடு இல்லாம நடந்துவந்த மகளுக்கு, 'கல் & புல்' வியாக்கியானம் சொல்லி, 'புருஷனோடு வந்தாத்தான் இங்கே சோறு'ன்னு அவுங்க அப்பா விரட்டிடுறார்.


கிராம அதிகாரியப் பத்தி, ரம்பாவின் கூட்டத்துலே ஒருத்தர் அரசனிடம் போட்டுக்கொடுக்க, ரம்பாவிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பிடுங்கித் திரும்ப ஹரிக்கே கொடுக்கச் சொல்லி தீர்ப்பு சொல்றார் அரசர்.திருந்தி வாழ ஒரு வாய்ப்புன்னு ரம்பாவை ஜெயிலில் போடாம( கிராம அதிகாரிக்குச் சிறை) விட்டுடறாங்க. அவுங்களும் பாட்டுப் பாடிக்கிட்டே திருந்தி,அப்பா அம்மாவுக்கு சேவை செய்யும் ஹரியின் காலில் 'முகத்தை மறைச்சுக்கிட்டு' விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறாங்க.


'மனம் திருந்தி' காட்டுலே ஹரியைத் தேடிவந்த லக்ஷ்மி, குடிலில் அப்பா காலை அமுக்கிக்கிட்டே பாட்டுப்பாடும் ஹரியைக் கண்டுபிடிச்சுடறார்( அதான் ஏழரைகட்டையிலே காடே அதிரும்படி பாடறாரே. ஆனா நல்ல பாட்டு.கிருஷ்ணா முகுந்தா முராரே)



மருமகளைப் பார்த்து மாமியாருக்கு சந்தோஷம். ஹரி & குடும்பத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம்( அவர்தான் முனிவரா வந்து ஹரியை சோதிச்சாராம்).கிருஷ்ணருடன், கடவுளைவிடப் பெற்றோரே முக்கியமுன்னு ஹரிவாதம் செய்யறார்.


முடிவு: மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷம்.

டி.ஏ. மதுரம் இளமையா, அழகா இருக்காங்க. என்.எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை. ரெண்டு பேருக்கும் சில பாட்டுக்கள் சொந்தக்குரலில். ரம்பாவா வந்த டி.ஆர். ராஜகுமாரி ( எனக்கு என்னவோ நம்ம நடிகை சிநேகாவைப் பார்த்தவுடன் இவுங்க ஞாபகம் வந்துருது. எதோ ஒரு உருவ ஒற்றுமை இருக்கறது போலவே எப்போதும் ஒரு தோணல்) அலட்டல் இல்லாத நடிப்பு. பழி வாங்குவதையும் ஒரு ரசனையுடனே செய்யராங்க. பொதுவா, கோபம் வந்தால் புருவம் நெரிஞ்சு முகம் விகாரமாகும் இல்லையா? அப்படியில்லாம அலட்சியமா, உதட்டோரம் ஒரு சிரிப்புலேயே கோபம், அலட்சியம் எல்லாம் கோடி காட்டிடுறாங்க. 'ம்' ன்னு சொல்லித் தலையை ஆட்டுறதே ஒரு அழகு. 110 வாரம் படம் ஓ(ட்)டுனதே ஒரு வேளை இவுங்களுக்காத்தானோ? 'நின் மதிவதனமும் நீள் விழியும் கண்டு..'

ரம்பா..........

ஸ்வாமி.......

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

லக்ஷ்மியா வந்த வசந்த கோகிலம், வெடுக் வெடுக்குன்னு பேச்சு. யதார்த்தமான நடிப்பு. அந்தக் காலப் பெண்களுக்கு எப்படி வீட்டுலே வேலை நெட்டி முறியுதுன்னு பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்.


ப்ளவுஸ் பேஷன் அப்ப 'பஃப் வச்ச ஸ்லீவ்.' :-)))))))))


சுபம்.

56 comments:

Anonymous said...

துளசியக்கா!
இப்படத்தை; நான் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஈழத்தில் வின்சர் திரையரங்கில் பார்த்தேன். அதைத் திரையிட்டதன் காரணம்;அப்போ "காலரா" பரவி...ஒரு வகையாக மக்கள் நடமாட்டம் குறைந்த போது; கொழும்பிலிருந்து படப்பெட்டிகளும் வராததால்;திரையரங்கு உரிமையாளர்கள். தங்களிடம் சொந்தமாக இருந்த பழைய படங்களைப் போட்டார்கள்.நடிகர்கள் பெயரில் திரப்பட வாரம் என ஒரு படம் ஒன்று;இரண்டு நாள் காண்பிக்கப்பட்டது.
அப்போ பல சுருட்டுப் பத்தும் வயோதிபர்களுடன்;நானும் பார்த்தேன். நம் இசையில் எனக்கு ஈர்ப்பிருந்ததால் ;இந்தப் படம் என்னால் வெகுவாக ரசிக்கப்பட்டது.சிவகவி;வேறு பலவும் கூடப் பார்த்தேன்.
காந்தர்வக் குரல் தான். இப்போதும் அவர் குரலை ஒலிநாடாவில் கேட்பேன்.
நல்ல பதிவு
யோகன் பாரிஸ்

said...

துளசி..

எனக்கும் சினேகாவ பார்த்தா டீ.ஆர். ராஜகுமாரி ஞாபகம் வரும்..

அந்த காலத்து Play Boy..

ரம்பா...சுவாமி... ஒரே ரொமான்ஸ்

said...

துளசி, இதுதானா நீங்க சொன்ன இன்ப அதிர்ச்சி ?))

said...

ஷோக்கா கத சொன்னீங்க..
பாகவதர் படமே மறுக்க பார்த்தா மாறி பீலிங்.

said...

வாங்க யோகன்.

ச்சும்மா சொல்லக்கூடாது, அருமையான குரல்தான். இல்லை?
குரல் மட்டுமில்லை, அப்படி ஒரு நிறமா வேற இருப்பாராம். அவர்
அழகுக்கு அப்ப ரொம்பப் பெண்கள் 'மயங்குனதா'க் கேள்விப்பட்டுருக்கேன்.

நடிகர் நடிகையர் மேலே ஒரு ஈர்ப்பு, மக்களுக்கு அப்ப இருந்தே தொடங்கிருச்சு இல்லே?

வாழ்க்கையின் கடைசி காலத்துலெதான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டார்.பாவம்.

said...

மங்கை வாங்க.

//எனக்கும் சினேகாவ பார்த்தா டீ.ஆர். ராஜகுமாரி ஞாபகம் வரும்..//

ஆஹ்ங்..... உங்களுக்குமா? கண், வாய் னு எதோ ஒரு ஒற்றுமை.............

said...

என்னங்க ஜெயஸ்ரீ, நிஜமாவெ இது இன்ப அதிர்ச்சி இல்லையா? (-:

said...

என்னா அரை ப்ளேடு,

புச்சா? எப்டிக்கீறே?

என்னாபா இப்படி ஒரே பீலிங்ஸ் ஆய்ட்டெ?

வந்துட்டுப்போனதுக்கு டாங்க்ஸ்.
.
அப்பப்ப வந்து கண்டுக்கினு போப்பா.

said...

அந்த காலங்களில் படம் ரொம்ப நாள் ஓடினதுக்கு இன்னொரு பெரிய காரணம் வெளிவரும் படங்கள் மிகவும் குறைவு. ஒன்னும் இல்லாத படங்களே மாதக்கணக்கில் ஓடுமாம்.தாத்தா தியேட்டர் நடத்தியதால், 'குண்டம்மா கதா' படத்தை நூறுமுறைக்கு மேல் பார்த்ததாக என் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

said...

உங்க ரசனய கை எடுத்து கும்புடுனும். எம்புட்டு பொறுமையா பாத்து ரசிச்சிருக்கீங்க. 'கவலையைத் தீர்ப்பது' அதுவும் புகழ் பெற்ற ஒரு பாடல்.

ஒரு அந்தக்கால கிளுகிளு தகவல். ஒரு முறை பாகவதர் எங்கயேயோ தனியாய் பெண்களிடம் மாட்டிக்கொண்ட போது அவரை அவர்கள் எல்லோரும் கூட்டாக 'கற்பழிக்க முயன்றார்களாம்'. பாகவதரைப் பற்றி கேள்விப்படும் மற்ற விவரங்களைப் பார்க்கும் போது இது உண்மையாக இருக்குமென்றே தொன்றுகிறது.

said...

//என்னங்க ஜெயஸ்ரீ, நிஜமாவெ இது இன்ப அதிர்ச்சி இல்லையா? (-://

அட நெஜமா ரொம்பவே இன்ப அதிர்ச்சி தான். ஓடாத படத்துக்கு பதிலா ஓகோன்னு ஓடின படத்தோட விமரிசனம். ))

பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். பல முறை கேட்டிருக்கேன். படத்த பாக்காத குறையும் இப்போ உங்க புண்ணியத்துல தீர்ந்து போச்சு. சும்மா சொல்லக்கூடாது. ரொம்பவே நல்லா கதை சொல்றீங்க.))

said...

என்ன அக்கா இப்ப தான் இந்தப் படத்தைப் பாக்குறீங்களா? நானெல்லாம் சின்ன வயசுல இருந்து ஒரு ஆறு தடவையாவது பாத்த படமாச்சே?

பதிவை முழுசா படிக்கலை. நாளைக்கு காலையில படிக்கிறேன். :-)

said...

பன்ருட்டி,

வாங்க. உங்க பேரைப் பார்த்ததும் பலாப்பழம் ஞாபகம் வருது:-)))

இந்த குண்டம்ம கதா நானும் பார்த்துருக்கென். என் டி ஆர், சாவித்ரி, ஜமுனா இருப்பாங்க.
இது தமிழிலெ கூட வேற எதோ பேருலெ வந்துச்சுன்னு நினைக்கிறேன்.

அப்பெல்லாம் மெட்ராஸ்லே ஸ்டுடியோக்களில் தெலுங்கு தமிழ் ன்னு ரெண்டு படத்துக்கும்
ஒரே கதைதான். வசனம் மட்டும் வெவ்வேற மொழி. ரெண்டு மாதிரியும் பேசி ஒரே சமயத்துலே
ஷுட்டிங் இருக்குமாம். மாயாபஜார், பாதாள பைரவி, இன்னுமென்னென்னவோ படங்கள்.

said...

வாங்க ஓகை.

பழைய படங்கள் கருப்பு வெள்ளைன்னாலும் பல படங்கள் நல்லாத்தாங்க இருக்கு.
முக்கியமா அனாவசிய ஸ்டண்ட் காட்சிகள் முக்கியமா கதைக்கு கொஞ்சம் கூட ஒட்டாம,
அப்புறம் நம்பவே முடியாம பறந்து பறந்து அடிக்கிறதுன்னு இல்லாம சண்டைன்னு வந்தாலும்
கொஞ்சம் இயல்பா இருக்கும்.

பாட்டுக்களும் அப்படித்தான். இரைச்சலான பாட்டா இல்லாம, பாட்டோட வரிகள் வார்த்தைகள் எல்லாம்
எவ்வளவு தெளிவாக் கேக்குது பாருங்க. அதான் பல பாட்டுகள் ரேடியோவிலே அப்பக் கேட்டதெல்லாம்
இன்னும் ஞாபகம் இருக்கு பாருங்க.

said...

ஜெயஸ்ரீ,

ஓடாத படம் போடறேன்னு நீங்க எல்லாரும் கலாட்டா செஞ்சுக்கிட்டு இருந்தீங்கதானே?
அதான் ஓடுன படமாவும் இருக்கணும், அதெ சமயம் நீங்க பார்க்காத படமாவும் இருக்கணுமுன்னு
நினைச்சேன். இது மாட்டிக்கிச்சு:-))))

said...

நானும் இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் துளசி..

ஆமாம் எப்படி இப்படி விரைவாக இத்தனை பதிவுகளை போடுகிறீர்கள் துளசி.. அதுவும் கலாசலாக..வாழ்துக்கள் போங்க

said...

கார்த்திக்,

நட்சத்திர வாரத்துலெ தினம் ஒரு பதிவு போடணுமே அதான்.
இன்னிக்கு வீக் எண்ட் வேறயாச்சா......... மக்கள்ஸ் சினிமா பார்க்கட்டுமுன்னு
ஒரு நல்லெண்ணம்தான்:-))))

said...

டீச்சர், உங்களுக்கு வயசாகிப் போச்சு!!

said...

கொத்ஸ் வாப்பா.

இது இப்படி இருக்கவேணாமா?

டீச்சர், உங்களுக்கு(ம்) வயசாகிப் போச்சு:-)))

said...

ரொம்ப விவரமா முழுக்கதையையும் போட்டுட்டீங்களே! ரொம்ப கவனிச்சுத் தான் பாத்திருக்கீங்க. :-)

என்னுடைய முதல் பின்னூட்டத்தை இப்படி கவனிக்காம விட்டுட்டீங்களே?! :-(

said...

குமரன்,
அதான்ப்பா, எப்படியோ இது விட்டுப்போச்சு. இப்ப வெறும் 100 ரூபாய்க்கு ஆப்ட்டுக்கிச்சு:-))))

said...

என்ன துளசி நீங்க வயசாயிருச்சிங்கறத ஞாபகம் படுத்தறீங்களே..

நல்ல இளசா, ஒரு புத்தம் புது படத்தோட அதாவது இந்தியாவுல வராத படத்தோட.. விமர்சனம் போடாம..

நட்சத்திர வாரத்துல போடற விமர்சனமா இது.. டூ பேட்..:((

said...

டீச்சர், இந்தப் படம் பத்தி நான் என்ன சொல்ல! என்னன்னமோ சொல்றீங்க; எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த ஒண்ணு தான்! இதுவே அன்றும், இன்றும், என்றும் எங்க motto!:-)
இதோ

http://www.musicindiaonline.com/p/x/IqKgu.1w.d.As1NMvHdW/

said...

ஹரிதாஸை நான் பார்க்காத குறையை போக்கினீர்கள். கதை செம' கதை'யாக இருக்கிறதே!

said...

கேள்விப் பட்டதோட சரி வேற ஒண்ணும் தெரியாது படத்தைப் பத்தி. அதை பத்தி இவ்வளவு நுணுக்கமா சொல்லி இருக்கீங்க பார்த்த ஒரு திருப்தி வந்துடுச்சு உங்க பதிவைப் படிச்சிட்டு :-))).

said...

படத்தையா? பதிவையா?
எதைப் பாராட்றதுன்னேத் தெரியல்லே!

said...

//ரெண்டு நாளா சாப்பாடு இல்லாம நடந்துவந்த மகளுக்கு, 'கல் & புல்' வியாக்கியானம் சொல்லி, 'புருஷனோடு வந்தாத்தான் இங்கே சோறு'ன்னு அவுங்க அப்பா விரட்டிடுறார்.// நல்ல வேளை கல்லைஉம் புல்லையும் தின்னுண்ணு சொல்லிடலே.

என் பொண்ணு `ஹரிதாஸ்' படம் எப்படியாவது பார்க்கணும், CD வாங்கித் தரணும்னு கேட்டப்போ, அதையெல்லாம் உக்காந்து பாக்க முடியாது, அரை அடிக்கு ஒரு பாட்டு வரும்ணு `பயம்' காட்டி வைச்சிருந்தேன். உங்க விமர்சனம் பார்த்த பிறகு ஒருதரம் முயற்சிக்கலாமோன்னு தோணுது!

said...

//என்னா அரை ப்ளேடு,
//புச்சா? எப்டிக்கீறே?

புச்சுதாம்மா.. ஏதோ ஒங்க புண்ணியம் நல்லா கீறேன்..

//என்னாபா இப்படி ஒரே பீலிங்ஸ் ஆய்ட்டெ?

நம்ப பாகவதர பத்தியும் எயுத ஆளு கீதேன்னு பீலிங்ஸ் ஆயிடிச்சி.. டாங்ஸ்மா

//வந்துட்டுப்போனதுக்கு டாங்க்ஸ்..
//அப்பப்ப வந்து கண்டுக்கினு போப்பா.

கண்டுக்காமலியா.. நீங்கதான் ஸ்டார் ஆச்சே..
கட்சியா பாகவதர் பத்தி எயுதனதுக்கு இன்னொரு தபா படா டாங்ஸ் ஒண்ணு வச்சிக்கிறேம்மா..

said...

குமரன்,

உங்க பின்னூட்டத்தையும் கவனிச்சேன் , படத்தையும் கவனிச்சேன்.
கூர்த்த மதி வேணுமா இல்லையா? :-)))

அப்ப போட்ட பதில் ரொம்ப லேட்டாக் காமிக்குது.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

என்ன இப்படி சொல்லிட்டீங்க?

ரெண்டு மாசத்துக்கு முன்னாலெதானே 'நாடோடிமன்னன்' ரி ரிலீஸ் செஞ்சு
பயங்கர வெற்றின்னு பேப்பரில் இருந்துச்சு.
அப்ப அதைப் பார்த்தவங்கெல்லாம் வயசானவங்களா? :-)))))

"இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிக்கும் படம் 'ஹரிதாஸ்'.
இன்றே காணத் தவறாதீர்கள் துளசிதளத்தில்"

இலங்கை வானொலியில் அறிவிப்பு வந்துக்கிட்டு இருக்கு பாருங்க :-))))

said...

KRS,

அதைத்தான் அந்த சீனியர் அப்பவே இருந்து பாடிக்கிட்டு இருக்காரே.
எல்லாம் உங்களுக்கே உங்களுக்குத்தாம்ப்பா:-))))

said...

மணியன் வாங்க.

டிவியிலே கூட இதுவரை இந்தப் படம் வரலையா?
'தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக....'

said...

செந்தில் குமரன்,

கிடைச்சாக் கட்டயம் ஒரு முறை பாருங்க. நல்லாதான் இருக்கு.
இப்ப படங்கள்னு வர்ற எத்தனையோ குப்பைகளுக்கு இது
நிஜமாவே தேவலைதான்

said...

சிஜி,

வாங்க வாங்க.
நீங்களும் இதைப் பார்க்கலையா?
இதானே...?
படத்தையும் பதிவையும் பத்தி ரெண்டு பத்தி சொல்லக்கூடாதா? (-:

ரெண்டு வரின்னு சொல்லவந்து அதை மாத்திக்கிட்டேன்.:-)))

said...

தாணு,

இனியும் தப்ப முடியாது. சிடி வாங்கிரணும்:-))))

said...

ஜெய ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!

என்ற பாடல் இடம்பெற்ற படம்தானே!

நன்றாக இருக்கும். படம் அவ்வளவு நாட்கள் ஓடியதில் வியப்பில்லை!

said...

நாமக்கல் சிபி.

வாங்க. அதே பாட்டுதான் . அருமை.
அந்தப் பாட்டுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ( ஒரு ஏழெட்டு வயசுதான் இருக்கும்)
ஆடுறதும் நல்லாவே இருக்கு.

said...

வாப்பா, அரை ப்ளேடு.
டாங்க்ஸ்ப்பா.

said...

படம் பார்த்ததில்லேன்னு சொன்னேனா?
பாடல்களெல்லாம் போட்டு கேட்டுட்டு
வந்தேன்(நோஸ்டால்ஜியா?).....

said...

சிவகவி என்னைக்கு?

said...

துளசியக்கா இதில் அந்த படப்பாலைக் கேட்டுப்பருங்கள்.
பாகவதர் வீட்டில் இருந்தால் அத்தர் சந்தனம் வாசம் வீட்டு முத்ததில் வரும் என்பார்கள் பெண்களை கவரக்கூடியவர்தான்.
http://www.musicindiaonline.com/music/tamil/m/year.60/

said...

நான் கருப்பு வெள்ளையில பார்த்த மொத படம் இருகோடுகள். அதுக்கப்புறம் சின்ன வயசு கோளாரு காரணமா வெள்ளை படங்கள் வந்தாலே சேனல மாத்திடுவேன்.

நான் பார்க்கணும்னு நினைக்கிற படம் பாசமலர்.

இன்னும் வாய்ப்பு கிடக்கல! :((

said...

மன்மத லீலையை வென்றார் உண்டோ.... இந்தப் பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்தது.அன்றும் ஏன் இன்றும் ரசிகர்களைக்கொண்டது. சமீபத்தில் நாரத கான சபையில்(சென்னை) உதய ராகம் குழுவினர் பாபநாசம்சிவன் படல்களைக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் இந்தப்பாடல் பாடியபோது ரசிகர்கள் இரண்டு தடவை "ஒன் ஸ் மோர்' கேட்டு பாடப்பட்ட பாடல் இது.

நம்ப வீட்டு விசேஷம் வரமாட்டேனு சொல்லிட்டீங்க.இதை விட டீச்சர் என்னை பென்ச்சு மேலே நிக்க வெச்சுருக்கலாம்.

said...

எங்க ஊர்ல மூணாவது தியேட்டரா வந்தது தினமணி தியேட்டர்னு சொன்ன நினைவு. ( முதல் - இம்பீரியல் - இப்போ இல்லை; இரண்டாவது - சிடி சினிமா - இப்பொ பார்க்கிங் லாட் ) அந்த தியேட்டர்ல அந்த காலத்துல பார்த்த நினைவு. கால் இல்லாமல் இழுத்து இழுத்து கதாநாயகன் போனது மட்டும்தான் ஞாபகத்தில் வருது...

said...

வணக்கம் துளசி....படம் பார்க்காட்டிலும் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்திய இந்த பதிவுக்கு நன்றிகள்...

எப்படிங்க. என்னங்க ரகசியம்... உங்க பதிவுகளின் பின்னூட்டங்களில்.... ஹவுஸ் புல் ஆக எப்பவும்.. ஆட்கள் இருந்துக்கினே இருக்கிறாங்க...

said...

வாங்க சிஜி.

பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டீராக்கும்? :-)))
110 வாரம் ஓடுனதுலே உங்க பங்கு இருந்துருக்குமோ? :-)))
சிவகவி?
எப்பக் கிடைக்குதோ அப்ப! நம்ம கிரி ட்ரேடிங்லே வாங்குனதுதான் .
அங்கே 'இன்னும் பழைய படங்களை' அடுத்தமுறை தேடணும்.

said...

வாங்க என்னார்.
ம்யூசிக் இண்டியாலெயும் எல்லாப் பாட்டுகளும் இல்லீங்களே(-:

said...

தம்பி,

என்ன... இன்னும் 'பாசமலர்' பார்க்கலையா?
அக்காகிட்டே 'இப்படிச் சொல்லிட்டீங்களே' தம்பி.

சரி. பாட்டு இப்படி வருது.....

'தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து......'

இப்படியெல்லாம் அக்காதங்கச்சிப் புள்ளைங்களுக்கு
மாமன் வாங்கித்தரணுமாம்.

நினைவு இருந்தாச் சரி:-)))

said...

வாங்க திராச.
மன்னிக்கணும் உடனே வரமுடியலை. இதெல்லாம் ஒரு நாளுலே முடியுற விசேஷமா என்ன?
வருசம் பூராவும் கொண்டாட்டம்தானே? வாழ்த்து(க்)கள்.

பாபநாசம் சிவன், பாருங்க எவ்வளவு நல்ல நல்ல சாமிப் பாட்டு எழுதுனவர்,
இப்படி சிருங்கார ரசத்தையும் ஒரு கை பார்த்துருக்கார்:-)))

ச்சும்மா சொல்லக்கூடாதுல்லெ?

said...

வாங்க தருமி.

இந்தப் பழைய படங்களை விசிடியாப் போடறது உங்கூருலேதான்!

மாடர்ன் சினிமா, # 28, மேல வடம்பூகித் தெரு,

கூடலழகர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் எதிர்ப்புறம்,
மதுரை

said...

வாங்க சின்னகுட்டி,

'சினிமா'ன்னாவே 'ஹவுஸ்ஃபுல்' சகஜமில்லையா? :-)))

said...

கட்டபொம்மன்,

உங்க பின்னூட்டத்தை ப்லொக்கர் அனுமதிக்கலை.

என்ன கொடுமை சரவணன்:-)))

வருகைக்கு நன்றி.

said...

துளசி:

உங்க விமர்சனம் பார்த்தபின் இப்படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல்..அந்த ராஜகுமாரியிடம் அப்படி என்ன இருக்குன்னு..(ஆம்பிளை புத்தி போகாதே :-))

சினேகா இன்னொரு பழைய உபநடிகையயும் ஞாபகப் படுத்துகிறார். எனக்கு இவர் அவரின் புதல்வியோ என்ற சம்சயமுண்டு. சிநேகா பற்றி விவரமான பதிவு ஏதாவது இருந்தால் சொல்லுங்க. முதல்ல போய் பார்க்கிறேன் :-))

said...

வாங்க கண்ணன்.

வராதவுங்க வந்துருக்கீங்க? எல்லாம் பகவத் ஸங்கல்ப்பம்:-)

ராஜகுமாரி இப்ப சமீபத்துலேதான் இறந்துட்டாங்க. ஆனா அவுங்க நிஜமாவே
ஒரு அழகிதான். எல்லாம் கருப்பு/வெள்ளைப் படங்கள். அதிலும் கூட.....
கவர்ச்சியாதான் நடிச்சிருந்தாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஜனங்கள்.
கொஞ்சம்கூட சுருக்கமே இல்லாத பலபள ஸாட்டின் ப்ளவுஸ். கொஞ்சமே
கொஞ்சம் விலகுனது மாதிரி தாவணி போட்டாலெ கவர்ச்சின்னு கைகொட்டிக்
களிச்சிருந்த காலம்.

மனோகரா பார்த்தீங்களா? அதுலெகூட அவுங்கதான் வசந்தசேனா.

சிநேகா ரசிகர் மன்றம் முந்தி வலையில் இருந்த ஞாபகம். அவுங்கதான் இப்ப
கட்சி மாறி அசின் ரசிகர் மன்றவாசிகளா ஆகிட்டாங்க போல.

எதுக்கும் நம்ம வலைஞர்கள்கிட்டே கேட்டுப் பார்க்கலாம்.

said...

ஹரிதாஸ்...மூனு தீபாவளிக்கு ஓடுன படமாமே.....நானும் படம் பார்த்திருக்கேன். காதல், காமம், கடவுள், நகைச்சுவை எல்லாம் கலந்த கதம்பம் இந்தப் படம்.

பண்டரிபாயை அப்படிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆனாலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாட்டு சூப்பர்தான். அதிலும் அந்த ரம்பா...ஸ்வாமி....டி.ஆர்.ராஜகுமாரி அன்றைய பலருடைய தூக்கத்தைக் கெடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

இவருடைய தம்பி டி.ஆர்.ராமண்ணா பின்னாளில் இயக்குனராகவும் புகழ் பெற்றவர். பிற்காலத்தில் கிட்டத்தட்ட துறவு நிலையில் இருந்த டி.ஆர்.ராஜகுமாரி நன்றாகவும் சமைப்பாராம். அவருடைய வெங்காய கத்தரிக்காய் குழம்புக்கு பல திரைப்புள்ளிகள் விரும்பிகளாய் இருந்தார்களாம்.

இந்தக் கதை ஏதோ வடக்கத்திய பக்திக் கதையாம். ஸ்ரீமகா பக்த விஜயம்னு நெனைக்கிறேன். அந்தப் புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்ட கதையென்று நினைக்கிறேன்.

said...

வாங்க ராகவன்.

வடக்கத்திக் கதையா? அதான் 'சுந்தர்லால் நட்கர்னி சுட்டுட்டார்:-))))

தமிழ் தெரியாத எத்தனைபேர் அந்தக் காலத்துலே தமிழ் திரைப்பட இயக்குனர்களாவும்,
ஒளி ஓவியர்களாவும் இருந்துருக்காங்கன்னு பார்த்தா ஆச்சரியம்தான்.

//துறவு நிலையில் இருந்த டி.ஆர்.ராஜகுமாரி //

ஆமாங்க. இவுங்க திருமணமும் செஞ்சுக்கலை. தம்பி டி.ஆர். ராமண்ணாவோட
புள்ளைங்களையே குடும்பமா நினைச்சு இருந்துட்டாங்களாம். இவுங்க
தம்பிமனைவிதான் சமீபத்துலே இறந்துபோன ஈ.வி. சரோஜா அவர்கள்.

ராஜகுமாரியோட சொந்த தியேட்டர்தான் பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டர்.
இப்ப அதை இடிச்சு வணிக வளாகம் ஆயிருச்சு. வயசான நிலையில்.
வீட்டு வாசலில் தெருப்பக்கம் பார்த்த மாதிரி நாற்காலியில் உக்கார்ந்து
வேடிக்கை பார்க்கறதுதான் இவுங்க பொழுது போக்கா இருந்துச்சுன்னு எங்கியோ ஒரு
சமயம் படிச்சேன்.

வெங்காயக் கத்திரிக்காய்க் குழம்பா? ஆஹாஹா........