Friday, September 18, 2015

கண்ணைக் காப்பாத்திக்கணுமுன்னா இங்கே போகலாம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 79)

மகாமகக் குளத்துக்கப்பால் சூரியன்  எட்டிப் பார்த்தான். அதிகாலை க்ளிக்ஸ் முடிஞ்சதும் குளிச்சு முடிச்சு  காலை உணவுக்குக் கீழே ரெஸ்ட்டாரண்ட் (Rice n Spice)போனோம். எனக்கு வழக்கமான அதே ப்ரேக்ஃபாஸ்ட்.  காஃபி பித்தளை டபரா செட்டில் வந்தது.  கொஞ்சம் துலக்கி மினுக்கி இருக்கப்டாதோ?



காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம்!
பித்தளைக்கு இந்த மினுக்கல்தானே அழகு!   பாத்திரங்கள் சுத்தமா இருந்தால் போதாது. பளபளப்பும் மினுக்கலும் இருந்தால் ருசி குறைவுன்னாலும் ரொம்பப் பெருசாத் தெரியாது.  பான்பீடா விக்கறவங்க தட்டுலே இருக்கும்  சம்புடங்களையும் டப்பாக்களையும் பார்த்துருப்பீங்கதானே! ஆடை பாதி ஆள்பாதின்றது இதுக்கும்தான்.

மாடி அறைக்குப்போய்க்  கதவைத்திறந்ததும், ஏதோ அலை அடிக்கும் சப்தம் போல ஹோன்னு....  என்னன்னு பார்த்தால்  படுக்கை அறைக்கு அடுத்த கட்டடத்தில் இருந்து வருது. ட்யூஷன் சென்ட்டராம்.  ஒரு முன்னூறு பிள்ளைகள் இருப்பாங்க போல!  எங்க காலத்துலே ட்யூஷன் என்ற  பெயரைக்கூடக் கேட்டதில்லை!  இதே போல ஒன்னு  இலஹபாத் த்ரிவேணி சங்கமம் போனபோதும் பார்த்துருக்கேன். மைக் செட்டெல்லாம் வச்சுக்கிட்டு  சத்தமாப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.
ராயாஸ்லே பில் செட்டில்  பண்ணிட்டுக் கிளம்பினோம்.   ராயாஸ் ஸில்க்ஸ் தறி போட்டு பட்டுப்புடவை நெசவு வியாபாரமும் இருக்காமே!

சோழபுரம் மஸ்ஜித் ரோடுவழியாப் பயணம். வழியில் சில   மசூதிகள்.
இன்றைக்கு முதலில் போய் தரிசனம் பண்ணிக்கும் கோவில் திருவெள்ளியங்குடி கோலவில்லி  ராமர் கோவில்.  15.5 கிமீ நம்ம ராயாஸ் க்ராண்டில் இருந்து.  இதுவும்  108 திவ்யதரிசனக் கோவில்களில் ஒன்னுதான்.
சுக்கிரன் வந்து வழிபட்ட தலம்.  வைணவ நவகிரக் கோவில்களில் இது சுக்கிரனுக்கானது. (வெள்ளி = சுக்கிரன்)  சின்னதா ஒரு மூணு நிலை ராஜகோபுரம். கோவில்  உள்ளே எப்படி இருக்கப்போகுதுன்னு ட்ரெய்லர் காமிக்குது அதில் முளைச்சு நிக்கும் செடிகள்.
கடந்து உள்ளே போனால்  சின்னதா வெளி முற்றத்துடன் ப்ரகாரம்.   கண் எதிரில்  பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடி.  பழையதா, கொஞ்சம் பாழடிஞ்ச தோரணை. பராமரிப்பு வேலை நடக்கப்போகுது போல. மரச்சட்டங்கள் கொண்டு வந்து நிறுத்தி வச்சுருக்காங்க, சாரம் கட்ட. இல்லே... எதாவது உற்சவ சமயம் நட்ட சவுக்குக் கம்பங்களா?


முன்மண்டபம் கடந்தால் நேரா கருவறைதான். மூலவருக்குத் திரை போட்டு வச்சுருக்காங்க.  வாசலில் பார்த்த டுவீலர், பட்டாச்சாரியாரோடது போல.
திருமங்கை ஆழ்வாரின் பத்துப்பாசுரங்களும் சுவற்றில் எழுதிப் போட்டுருக்காங்க.

பிரகாரம் சுற்றிட்டு வரலாமுன்னு  வெளியே வந்தோம்.  தாயார் சந்நிதிகிட்டே  ஒடைஞ்சு கிடக்கும் வாகனங்கள். (அட! ஆண்டாள் தப்பிச்சுட்டாளா!!!)
தாயார் மரகதவல்லியை ஸேவிச்சுக்கிட்டோம். இங்கேயும்  கம்பி வழியாத்தான் தரிசனம். மினுக் மினுக் என்ற மெல்லிய விளக்கு வெளிச்சத்தில்  தாயாரைப் பார்க்கும் போது லேசா ஒரு பச்சை நிறம் புலப்படுது. ஓ.... மரகதவல்லி அப்படித்தானே இருக்கணும். மரகதக்கல் சிலையாக இருக்கலாம்.

நவநாகரிகப்புடவையில் இருக்காள், நம்ம ஆண்டாள். குட்டியா ஒரு சந்நிதி. உள்ளே  போய்  நமஸ்கரிச்சு,  அப்படியே நம்ம ஆண்டாளம்மாவுக்கும்  தூமணி பாடிட்டு (அதென்னவோ வேற பாட்டு சட்னு வர்றதில்லையாக்கும்!)




திரும்ப மூலவர்  கருவறைக்கு  வந்தால், திரை விலகி இருக்கு.  ஆனால் நமக்கும் பெருமாளுக்கும் இடையில் கம்பிக்கதவு.  கண்களை உள்ளே அனுப்பினால்....  சயனகோலத்தில்...  கிழக்கு பார்த்து பாற்கடலில் பள்ளி கொண்டவர். க்ஷீராப்திநாதர். பெருமாளுக்கு மேலே எதோ  வண்ணம் பூசுனதுபோல் இருக்கு!

உற்சவர் பெயர்தான்.....  ரொம்பவே அட்டகாசம்! ஸ்ருங்கார சுந்தரர் கோலவில்லி ராமர்!

பட்டரைக் காணோம்.  இருந்துருந்தால் கொஞ்சம் கோவிலைப்பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். அதென்ன.... வந்து விளக்கேத்திப் பூஜையை முடிச்சுக்கிட்டுப் போயிட்டார்.  ஒருவேளை வேற சில கோவில்களுக்கும் இவர்தான் பொறுப்போ என்னமோ!

 கண்பார்வைக்குக் கேரண்டீன்னு சொல்லும் தகவல் பார்த்தேன்.

வாங்க கதைக்குள் போகலாம்.  அப்படியே.....   கட் பண்ணி வாமன அவதாரத்துக்குப் போறோம்.  மஹாபலிச்சக்ரவர்த்தியின் யாகம் நடந்து முடிஞ்சு  தானம் கொடுக்கும் நேரம். கேட்டது கேட்டபடி.  சிறுவனான வாமனன், தன் சின்னப் பாதத்தைக் காமிச்சு மூணடி நிலம் வேண்டறான்.  மஹாபலிக்கு ஒரே வியப்பு.  இத்துனூண்டு  இடத்தை வச்சு இவரென்ன பண்ணுவாரோன்னு....



இந்த  ஓவியம்தான்  கொஞ்சம் புதுசு!
அரசரின் குருவாகிய சுக்ராச்சாரியாருக்கு, வந்தவர் யாரென்று தெரிஞ்சு போச்சு! லேசா அரசரின் காதைக் கடிச்சார். "வந்தவன் லேசுப்பட்டவனல்ல. ஜாக்ரதை."  அரசருக்குச் சொல்ல முடியாத பெருமை.  ஆனானப்பட்ட விஷ்ணுவுக்கே நாம் தானம் கொடுக்கப் போறோமுன்னு!  தந்தேன்னு சொல்ல, தாரை வார்க்கணும். கெண்டியைக் கையில் எடுத்தார்.


தாங்க முடியலை குருவால். சட்னு வண்டு ரூபம் எடுத்துக் கெண்டி ஓட்டையில் போய் அடைச்சுக்கிட்டு உக்கார்ந்தார். சரிச்ச கெண்டியில்  தண்ணீர் வரலை. நோ தண்ணி, நோ தானம்.  இதென்னடான்னு  மூக்கு வழியா (கெண்டிச்சொம்பு மூக்கு) பார்த்தால் கருப்பா என்னவோ அடைசல். யாகம் நடக்கும் இடத்தில் தர்பைக்குப் பஞ்சமா?  எடுத்தார் ஒரு புல்லை. அதால் மூக்கைக் குத்திவிட்டார்.

இதை வாமனர் செஞ்சாருன்னு சொல்வார்கள். எனக்கென்னமோ   மஹாபலி செஞ்சாருன்னுதான் தோணுது. லாஜிக் பாருங்க. வாங்க வந்தவன் அதிகப் பிரசங்கித்தனமா ராஜா கையில் இருக்கும் கெண்டி மூக்கைக் குத்த முடியுமா?  கேட்ட பொருள் கிடைக்கும் வரை நீட்டிய கைகளுடன் இருப்பதுதானெ மரியாதை?  அப்படி மரியாதையே தெரியாத மண்டுவா மஹாவிஷ்ணு?

உள்ளே அனுப்பின தர்ப்பை, வண்டின் கண்ணைப் பதம் பார்த்துருச்சு. வலி தாங்காமல்,  ஐயோன்னு  தெறித்து வெளியில் விழுந்த வண்டு, கண்ணில் ரத்தம் வழியும் சுக்ராச்சாரியாரா உருமாற்றம் அடைஞ்சு நின்னதைப் பார்த்த மன்னருக்குப் பாவமாவும் இருக்கு, கோபமாவும் இருக்கு. கேட்டதைத் தவறாமல் கொடுப்பவன் என்ற பெயருக்குக் களங்கம் வரும்படி நடந்துக்கிட்டாரேன்னு....   குருவுக்கோ.... சிஷ்யன் அழிஞ்சுப் போகப்போறானேன்னு மனசுலே பதற்றம்.


வேற கெண்டி கொண்டு வரச்சொல்லி தாரை வார்த்துத் 'தந்தேன்' என்றதும், வாமனர் விஸ்வரூபம் எடுத்து மேலேயும் கீழேயுமா ஈரேழு புவனங்களை ரெண்டடியில் அளந்துட்டு, மூணாவது அடிக்கு இடம் கேட்டார். 'இனி ஏது இடம்? என் தலை தான் பாக்கி. இதுலே  உம் காலை வையும்' என்றதும் அப்படியே ஒரே அமுக்.  கொல்லாமல் உயிரோடு பாதாளத்துக்கு அனுப்பிட்டார்.  ஏன் கொல்லலை? முதலில்  மஹாபலி நல்லவர் அண்ட் வல்லவர். மேலும் பக்த ப்ரஹலாதனின்  பேரன்.  உன்னோடு இருந்து உன் பரம்பரையைக் காப்பேன்னு  நரசிம்ம அவதாரத்தில் சொன்ன உறுதிமொழியை  நட்டாத்துலே விடமுடியுமோ?


இப்பக் கண்பார்வை போன சுக்ராச்சாரியார்,  மீண்டும் பார்வை திரும்ப என்ன செய்றதுன்னு யோசிச்சு, அந்த  பெருமாளையே சரண் அடையத் தீர்மானிச்சார்.  தவம் செய்ய இடம் தேடி வந்தப்ப, இங்கே மார்கண்டேய மகரிஷி தவம் செஞ்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்து, இது நமக்கும் சரியான இடம்தான்னு  இங்கே குடி இருந்து  தன் தவத்தை ஆரம்பித்தார்.  தவத்துக்குப் பலன் கிடைச்சது. போன கண் மீண்டும் வந்துச்சு.  அதான் கண்பார்வைக் குறைபாடு நீங்கவும், எப்போதும் கண்பார்வை குறைவில்லாமல் இருக்கவும் கோலவில்லியைக் கும்பிடுங்கோன்னு சொல்றாங்க.


வெள்ளி என்னும் சுக்ரன் குடி வந்ததால் இந்த இடத்துக்கு  வெள்ளியங்குடின்னு பெயர். திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவெள்ளியங்குடி.  பழைய காலத்துப்பெயர் பார்கவ க்ஷேத்ரம். சுக்ரபுரி.


நம்ம பெரியதிருவடி இங்கே நான்கு கரங்களுடன், சங்கும் சக்ரமும் தரிச்சு இதோ வந்தேன்னு சட்னு எழுந்துபோகும் நிலையில் இருக்கார்.  காரணம்?


திரும்ப அசுரர்கள் காலத்துக்குப் போகலாம் வாங்க. தேவர்களுக்கு ஆர்க்கிடெக்ட் விஸ்வகர்மா. அசுரர்களின் ஆர்க்கிடெக்ட் மயன். இவர்தான் நம்ம ராவணனின்  மாமனார். மண்டோதரியின் அப்பா.  விஸ்வகர்மா, அழகான கோவில்கள் கட்டி விட்டுக்கிட்டு இருக்கார்.  மயனோ.... மகளுக்கான  சீதனமா  ராவணனுக்கான மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும்  தங்கம்,வெள்ளி, வைரம், முத்துன்னு வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்கார்.  தேவலோகத்துக்குச்  சரி சமமா அசுர லோகங்களும்!  சொல்லப்போனால்  ஆடம்பரமா இருந்தது அசுரலோகம்தான்.


ஒரு சேஞ்சுக்கு  நாமும் ஒரு கோவில் கட்டினால் என்னன்னு மயனுக்குத் தோணுச்சு. தயங்கித்தயங்கி தன் ஆசையை வெளிப்படுத்தறார்.  அதுக்கென்ன? போய் பெருமாளிடம் பர்மிஷன் வாங்கிக்கிட்டுக் கட்டிக்கொடுத்துருன்னு சொல்லிட்டாங்க அசுரத் தலைவர்கள். எப்பவும் கெட்ட குணம் இல்லையாக்கும். அப்பப்ப  கொஞ்சம் வரும் போகும் அம்புட்டுதான்.  தேவர்கள் பண்ணாத அக்கிரமமா?

பெருமாளைக் கும்பிட்டு அனுமதி வாங்க இங்கே வர்றார் மயன்.  அப்ப  அசுரத் தச்சனுக்குக் காட்சி கொடுக்கறார்  மஹாவிஷ்ணு. மயனுக்குத் தெரியும் இவர்தான்  ராமாவதாரம் எடுத்துத் தன் மாப்பிள்ளையைப் போட்டுத் தள்ளியவர்னு. ராமரா அவதாரம் செஞ்ச கோலத்தை தான் பார்க்கலையேன்னு, 'ராமர் வேஷங்கட்டி எனக்குத் தரிசனம் கொடுங்கோ'ன்னு விண்ணப்பிக்கிறார்.  பெருமாள் அப்போ நல்ல மூடில் இருந்துருக்கணும். 'நோ ஒர்ரீஸ். வெறும் மனுஷ்யனாத்தான் இப்படி இருந்தேன்'னு சொல்லி, தன் கையில் இருந்த சங்குசக்ராதிகளைப் பக்கத்தில் தொடர்ந்து நின்னுக்கிட்டு இருந்த  கருடாழ்வாரிடம், 'இதைக் கொஞ்சம் பிடிச்சுக்குங்கோ'ன்னு கொடுத்துட்டு,  வெறுமனே வில்லோடு கோலம் காமிச்சுருக்கார்.


கையில்  சங்கு சக்ரம் வாங்கின பெரியதிருவடி, அதை ஜம்ன்னு தன் கைகளில் ஏந்தி அவரும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கிட்டார். அம்மா நகையைக் குழந்தை போட்டுப் பார்க்கறாப்போல!  இவருக்கும் டெர்ரகோட்டா வண்ணம்போல காவி பூசி வச்சுருக்காங்க.


இந்த விசேஷ  கோலங்களால்,  இங்கத்துப் பெருமாளை ஸேவிச்சால்  108 திவ்யதரிசனக் கோவில்களையும் ஒருசேர தரிசனம் செஞ்ச புண்ணியம் கிடைச்சுருமாம்.


கும்மோணத்தைச்சுற்றியுள்ள வைணவ நவகிரகக்கோவில்களின் சின்ன பட்டியல் உங்களுக்காக.

சூரியன் - சாரங்கபாணி கோவில்.
சந்திரன் - ஸ்ரீநாதன் கோவில், நந்திபுரவிண்ணகரம்.
செவ்வாய்(அங்காரகன்)- நாச்சியார் கோவில் திருநறையூர்
புதன் - திருப்புள்ளப்பூதங்குடி
குரு-  திரு ஆதனூர்
சுக்ரன் -  திருவெள்ளியங்குடி
சனி -  ஒப்பிலியப்பன் கோவில், திருவிண்ணகர்
ராகு -   கஜேந்த்ரவரதர், கபிஸ்தலம்.
கேது - ஆடுதுறைப்பெருமாள் கோவில்,  திருக்கூடலூர்.


கும்மோணத்தைச் சுத்தியே  பதினொரு திவ்யதேசக் கோவில்கள். இந்த முறை தரிசனங்கள் எல்லாம் ஆச்சுன்னாலும்,  திருச்சேறை, திரு ஆதனூர் ரெண்டு கோவில்களையும் விஸ்தரிச்சுக் கதையோடு எழுதலை.  காரணம் படங்கள் எடுத்துக்க முடியலை என்பதுதான்.

சுக்ரனைப் பார்க்கப்போனால் சனியார் இருந்தார். அண்டங்காக்கா. நியூஸியில்  நோ காக்காஎன்பதால் டபுள் க்ளிக்ஸ்:-)

இதோ கும்மோணம் எல்லையைத் தாண்டிப் போகிறோம். அணைக்கரை வழியாகத்தான் பயணம்.


தொடரும்...........:-)



18 comments:

said...

தொடர்ந்து நானும் உங்களோடு பயணிக்கிறேன்..... பல புதிய தகவல்களை தெரிந்து கொண்ட படியே.....

said...

திருவெள்ளியங்குடி மற்றும் சதுர் புஜ கருடாழ்வார் விளக்கங்கள் அருமை .....

said...

படங்கள் அழகு அம்மா

said...

புராணக் கதைகளில் லாஜிக் எதிர்பார்க்கலாமா. எனக்கு சில கதைகள் புதுசு. நன்றி.

said...

அழகான படங்களும், தலவிளக்க புராணக் கதைகளும் அருமை.

said...

அருமையாக இருந்தது தரிசனங்கள். ஆண்டாள் தலை சாய்த்து நிற்கும் அழகு பிரமாதம். தனியா மூலைல
ஒரு சன்னிதி. மேலே அர்த்த மண்டபம் ஒண்ணும் காணோமேப்பா.

கட்டிட வேலை நடக்கிறதோ ,இல்லை உத்சவ நேரமோ.
கோலவில்லி ராமன் மிக நல்ல பிரபலமான ஸ்தலம்னு கேள்வி..
கருடன், மயன் கதைகள் புதிது. நன்றி துளசிமா.

said...

இதுவரை போய் இந்த கோலவில்லி ராமனை சேவித்ததில்லை. அடுத்தமுறை கும்மோணம் போகும்போது இவரை இவரது அருளால் சேவித்துவிட்டு வரவேண்டும்.
இந்தப் பயணத்தில் நிறைய திவ்ய தேசங்கள் சேவித்தீர்கள் போலிருக்கிறது. மறுபடி மறுபடி சேவிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும்.

said...

Saree teacher..
oops, Sorry teacher
இம்முறை பதிவில் ஒன்னுமே படிக்கலை; ஆண்டாள் Saree மட்டும் பாத்துக்கிட்டே இருக்கேன்
Very Cute! My fave Violet.. Royal Violet!

அப்புறம்.. அது கோலவில்லி?
பெருமாளுக்கு ஆண்டாள் வில்லி ஆயிட்டாளா என்ன?:)))

கோல-வல்-விலிப் பெருமாள்
*கோலம்= அழகு
*வல்= வல்லமை
அழகெனும் மென்மையும், வல்லெனும் வன்மையும் ஒருசேர உடைய வில்லேந்தும் பெருமாள் = கோலவல்வில்லிப் பெருமாள்!

ஆனா, கோயில் Boardலயே.. கோலவல்விலி -> கோல"வில்லி" ஆக்கிப்புட்டாய்ங்க போல:) நம்ம மக்கள் நல்ல மக்கள், ha ha ha:)
---

இளங் கோவே, "கோலவல்விலி" பிரானே
அரக்கர் அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம்
தடம் பொங்கத்தம் பொங்கோ! (பாசுரம்)

கோல "வல்வில்"!
"வல்வில்" ஓரி-ன்னு கூட ஒரு ராஜா..
சரி விடுங்க! நம்ம Mega Serial மக்கள் அவளை "வில்லி" ஆக்கிச் சந்தோசமா இருக்கட்டும்:))


said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணங்களில்தான் எத்தனை தகவல்கள். கொட்டிக்கிடக்குதே!!!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.


வருகைக்கு நன்றி.

said...

வாங்க அபிநயா.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

லாஜிக்? குறுக்கு புத்தி மூளை, சொன்னபேச்சைக் கேக்கறதில்லையே:-))))

said...

வாங்க துபாய் ராஜா.

இவ்ளோ கதைகளையும் எப்படி ஒருங்கிணைச்சு இருக்காங்கன்னு பார்த்தால் வியப்புதான்!

said...

வாங்க வல்லி.

சந்நிதிக்குள்ளே போனால் முன்மண்டபம் இருக்கு. சின்ன விமானமும்!

நல்ல சின்ன சிலை! புடவையைக் கொசுவி அழகாக்கட்டி விட்டுருக்காங்க!!!

said...

வாங்க ரஞ்ஜனி.

இந்த முறை கூடியவரை திவ்யதேசக்கோவில்களைத் தரிசிக்கணுமுன்னே திட்டம். அதான் கிடைச்சது.

அடுத்த பயணம் சீர்காழிக்கு அக்கம்பக்கம். இப்படிப் பகுதி பகுதியாப் பார்த்தால்தான் உண்டு.

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆண்டாளமா ஒரு பக்கமா ச்சும்மாத்தான் இருக்காள். இங்கே வில்லி ஆக்குனது ஸ்ரீராமனைத்தான்:-)))))

வல்வில் ஓரி எல்லாம் இக்காலத்துலே (கோவில் மக்கள்ஸ்)அவுங்களுக்கு ஞாபகம் இருக்குமா? இப்பெல்லாம் தமிழ்ப்பாடத்திட்டம் எப்படி இருக்குன்னு தெரியலையேப்பா :-(

said...

சித்த மருத்துவத்தில் வெண்கலத்திற்கு முக்கிய இடமுண்டு. ஆனால் அதனை சுத்தமாக பராமரிப்பது இப்போது பெண்களுக்கு சவாலாகவே உள்ளது. சீர் சடங்கு போன்றவற்றுக்கு இன்னமும் வெண்கல பானை தான் எங்க ஊர் பக்கம் கொடுப்பது வழக்கம்.

said...

வாங்க ஜோதிஜி.

அரிசி உப்புமா வெண்கலப் பாத்திரத்தில் செஞ்சால்... அதன் ருசியே தனி!

கனம் காரணம் இப்ப வீடுகளில் இருந்து காணாமப்போயிருச்சு போல!

அடுத்தமுறை ஒரு வெங்கலக்குண்டு (பாத்திரம்தான்) வாங்கிவரணும்.

வீட்டில் வெங்கலப்பானைகளை பத்திரமா எடுத்து வையுங்க. திரும்ப ஃபேஷன் வந்துரும்!