Friday, September 09, 2011

விடமாட்டொம்லெ.....கட்டிருவொம்லெ........ Christchurch Earthquake 5

"விடமாட்டோம். கட்டியே தீருவோம்" . இதுதான் இப்போதைய ஸ்லோகன். எல்லாக் கடைகளிலும் போர்டுலே எழுதி வச்சுருக்காங்க. 150 வருசத்துக்கு முன்னே தவறுக்கு மேலே தவறாச் செஞ்சுக்கிட்டே போனதைத் திருத்த இப்போ ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைச்சிருக்கும்போது தப்பாச் செஞ்சுறக்கூடாதேன்னு ரொம்ப கவனம் எடுத்து இப்போதையத் திட்டம் உருவாகிக்கிட்டு இருக்கு.
'சம்பவம்' நடந்த சமயம் தினசரியில் வந்த புகைப்படங்கள் செய்திகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் எடுத்த பேட்டிகள் எல்லாத்தையும் சேர்த்து உள்ளூரின் ஒரே தினசரியான The Press ( இவுங்க கட்டிடமும் இடிஞ்சுபோய் சிகப்புப் பகுதியில்தான். கதீட்ரல் சதுக்கத்தின் இடப் பக்கத்தில் இது இருக்கு) 192 பக்கங்களில் ஒரு புத்தகம் வெளியிட்டு, அதுலே வரும் வருமானம் முழுசும் எர்த் க்வேக் ரெகவரிக்குப் போகுது. இந்தப் புத்தகம் வாங்காத குடும்பமே இருக்காது இந்த ஊரில். விலை 30 டாலர்கள். படிக்கச் சோம்பலா? இதையே சிடியில் போட்டு புத்தகத்துக்குள்ளே வச்சுருக்காங்க. இந்த எர்த் க்வேக் கமிஷன் நல்லாவே செயல்படறாங்க. பொதுமக்களை நல்ல முறையில் அணுகி அவுங்களோடு பேசி அவுங்க முறையீடுகளைப் புரிஞ்சுக்கிட்டு மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும் இல்லையா. இந்த வேலைக்கு காவல்துறையில் முந்தி வேலை செய்ஞ்சுட்டு ஓய்வு பெற்றவங்க, வேலையை விட்டுட்டு வேற வேலைக்குப் போயிட்டவங்கன்னு (Ex Cops) நபர்களைத் தேடிப்பிடிச்சு வேலை நடந்துக்கிட்டு இருக்கு இப்போ. நம்ம வீட்டுக்கு பழுது பார்த்த முடிச்ச வேலைகள் தரமானதா இருக்கான்னு பார்க்க ரெண்டு பழைய போலீஸ்காரர்கள் வந்தாங்க. போலீஸ்ன்னதும் மாமூல் கொடுக்கணுமேன்னு நினைவுக்கு வருதா? இங்கே ரொம்ப மென்மையான குணம் உள்ளவங்கதான் போலீஸே. காவல் துறை உங்கள் நண்பன் என்பது மெத்தச் சரி. (எங்கூர் காவல்துறையையும் நான் விட்டுவைக்காம எழுதுன ஒரு பதிவு, நேரம் இருந்தால் பாருங்க) வந்தவருக்கு நாம் இந்தியர்களுன்னு தெரிஞ்சதும் மகிழ்ச்சி கூடிப்போச்சு. அவருடைய தகப்பனார் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் கடைசி 20 வருசம் இருந்தாராம்.

ஊர்மக்கள் எல்லோருமே இந்த EQC நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமா பாராட்டலை. இவுங்க பழுதுபார்க்க அனுப்பும் வேலையாட்கள் ரொம்ப முரட்டுத்தனமா தரமற்ற முறையில் வேலை செஞ்சுட்டாங்க. இதுக்குப் பேசாம நாங்களே எங்களுக்குத் தெரிஞ்ச ப்ளம்பரையோ, பில்டரையோ மற்ற தொழிலாளர்களையோ வச்சு பழுது பார்த்திருப்போமுன்னு ஒருசில புகார்கள் வந்துக்கிட்டு இருக்கு. எல்லாத்துக்குமே அதிர்ஷ்டமுன்னு ஒன்னு வேணுமோ? என்னவோ போங்க............

நிலநடுக்கத்தால் கொஞ்சம் ஒரு குளியலறையில் தண்ணீர் ஒழுகுதுன்னு நாலைஞ்சு நாளுக்கு முன்னே வெள்ளிக்கிழமைதான் கவனிச்சோம். சொன்னதும் திங்கக்கிழமை ப்ளம்பர் வந்து மூணு மணி நேரம் பைப் லைன் முழுசும் நல்லாப் பரிசோதிச்சுட்டு, தரையில் டைல்ஸ் அடியில் பிரச்சனை இருக்கலாமுன்னு அதுக்கு வேற ஒருத்தரை அனுப்பறேன்னு சொல்லிட்டுப் போனார். இன்னிக்கு வந்த அந்த நபர், டைல்ஸ்க்கு அடியில் தரை ட்விஸ்ட் ஆகி உடைஞ்சுருக்கு. முழு பாத்ரூமையும் பிரிச்செடுத்துப் பழுது பார்த்து சரிப்படுத்தணுமுன்னு சொல்லிட்டார். மேஜர் ரிப்பேர்! ஒரு மாசம் ஆகலாம்:(

எதுக்கும் வட்டம் சதுரமுன்னு யாரையும் பார்த்து சிபாரிசு தேட வேண்டாம். அரசாங்க சமாச்சாரங்கள் எல்லாமே வெளிப்படை. லஞ்ச லாவண்யங்கள் (!!!) இல்லை என்பதால் எல்லாமே டைரக்ட் அப்ரோச்தான். நியூசியில் எங்கேயுமே டிப்ஸ் கொடுக்கும் வாங்கும் வழக்கம் இல்லைன்னு முந்திகூட சொன்ன ஞாபகம். இந்தியா மாதிரி இருந்துருந்தால் EQC சார்பில் வீட்டைப் பரிசோதிக்க, ரிப்பேர் செய்யன்னு வரும் மக்கள் நிலநடுக்கத்தின் உபயத்தால் கோடிகள் குவிச்சுக் கேடீஸ்வரர்கள் ஆகி இருப்பாங்கன்னு எண்ணம் வர்றதை நிறுத்த முடியலை. ஒன்னும் இல்லாத நிலத்துலேயே வீடு இருந்து, அது போயிருச்சுன்னு சான்றிதழ் கொடுத்து அரசுகிட்டேயே அடிச்சுருப்பாங்க:(((((((((

உள்ளூர் நிலவரத்தின்படி இன்னொரு பெரிய கஷ்டம் என்னன்னா..... வீடுகளுக்கு காப்பீடு வாங்க முடியலை. இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் நஷ்ட ஈடுகளை வாரிவாரி 'வழங்குனதில் நிறைய நஷ்டப்பட்டுக் கிடக்காம்..புதுசா வாங்கும் வீடுகளுக்கும், கட்டிய வீடுகளுக்கும் கூட காப்பீடு லேசுலே தர்றதில்லை. பழைய காப்பீடுகளைப் புதுப்பிக்கவும் பேஜாராப் போச்சுது. லேண்ட் ரிப்போர்ட், பில்டிங் ரிப்போர்ட் அது இது என்னென்னத்தையோ கேக்குறாங்க. இந்தக் குழப்படிகளால் வீடு வாங்க விற்கன்னு இருக்கும் ரியல் எஸ்டேட்டு மார்கெட் டல்லடிச்சுக் கிடக்கு.

நகரத்தந்தை பாப் பார்க்கர் Bob Parker ( கிஸ்கா பாப் ஹை?) முன்னாள் ரேடியோ டிவி ஹோஸ்ட்டா வேலை செஞ்சவர். 2007 இல் தேர்தலில் நின்னு ஜெயிச்சவுடன் நகர மையத்தில் சிலபல கட்டிடங்களை சிட்டிக்கவுன்சில் வாங்கியதில் எங்களுக்கெல்லாம் இவர் வரிப்பணத்தை வாரி விடுறார்ன்னு ஒரு எண்ணம். வீட்டு வரியை வேற கொஞ்சம் கூட்டிட்டாரேன்னு எரிச்சல். அடுத்த மூணாவது வருசம் அக்டோபரில் தேர்தலில் இவர் போயிருவாருன்னு ஒரு ஊகம். இங்கே மூணு வருசத்துக்கு ஒரு முறை நகர சபைத் தேர்தல். எல்லாமே போஸ்ட்டல் ஓட்டுதான். தேவையில்லாம அதுக்குன்னு நாள் குறிச்சு ஓட்டுச் சாவடி எல்லாம் வச்சு காசை விரயம் செய்வதில்லை.
இந்த செப்டம்பர் நிலநடுக்கம் வந்து இவர் பதவியைக் காப்பாத்திருச்சு. அந்த நிகழ்வில் அப்ப உயிர்ச்சேதம் ஒன்னுமே இல்லைன்னாலும் பழைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் பலதும் இடிஞ்சு போயிருச்சு. நம்ம வீட்டுலே கொஞ்சம் பழுதுன்னு சொல்லி இருந்தேனே அது கூட அந்த செப்டம்பர் நிலநடுக்கத்தால்தான். பாதி சிட்டி அப்பவே போயிருச்சு:( அந்த சமயம் இவர் நகருக்குச் செய்த சேவைகளையும் ஏற்பாடுகளையும் கவனிச்ச மக்கள் ரெண்டாவது முறையும் இவரையே மேயராத் தேர்ந்தெடுத்தாங்க. கருத்துக்கணிப்பில் போன வருசம் ஜூன் மாசம் 21 சதம் ஓட்டுதான் வாங்குவார்ன்னு இருந்ததை அதே கருத்துக்கணிப்பு செப்டம்பர் கடைசியில் 55 சதம் வாங்குவாருன்னு சொல்லுச்சு. அவ்வளவு உழைச்சிருக்கார்! அதே போல 53.7 சதம் வாக்குகள் வாங்கி ஜெயிச்சார்!
நிழல்குடை


பதவியைக் காப்பாத்தின நிலநடுக்கம் ஒரேடியா இப்படி மூணு முறை வந்ததுதான் பெரிய மிஷ்டேக்கு. பாவம் பாப். மனச்சோர்வில் இருக்கும் நகர மக்களை கொஞ்சமாவது குஷிப்படுத்தனுமுன்னு சிலபல ஏற்பாடுகள். பேருந்துக்குக் காத்திருக்கும் நேரம் உக்கார புதுவகை டிஸைனில் ஒரு இருக்கையை ம்யூஸியத்துக்கு முன்னால் போட்டு வச்சுருக்காங்க, மெள்ள்ள்ள்ளச் சுத்திக்கிட்டு இருக்கும் ராட்டினம் போல!. நிழல்குடை!!!! எப்ப வேணுமுன்னாலும் தடுமாறாம ஏறலாம் உக்காரலாம், இறங்கலாம். ஆனா பேருந்து? உண்மையான பேருந்து நிலையம் இடிபாடில் சிக்கி போயிருச்சு. நகரில் வெவ்வேற பகுதிகளில் பஸ்கள் இப்போ புறப்படுது. போலீஸ் தலமையகமும் டேமேஜ். இடிக்கப்போறாங்க. பொதுமக்களுக்கான பொடானிக்கல் கார்டன் பப்ளிக் கார்பார்க்கை ஆஸ்பத்திரி எடுத்துக்குச்சு. முதலில் உடல்நலத்தைக் காப்பாத்திக்கணுமுல்லெ? ஆர்ட் கேலரியை பொதுமக்களுக்கு இல்லாம மூடி வச்சு அதுலே அரசாங்க அலுவலகங்கள், போலீஸ் தலைமையகம் தாற்காலிகமா இயங்குது.
எங்கூர் ஆர்ட் கேலரி

எங்க வீட்டாண்டை இருக்கும் நூலகத்தை சிட்டிக்கவுன்ஸில் ஆபீஸுக்குக் கடன் கொடுத்துருக்கோம். புத்தகம் எடுக்கணுமுன்னா அடுத்த பேட்டைக்குப் போகணும். எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்தான். சிட்டி மால் அழிஞ்சு போனதால் எங்க பேட்டை மால் அமர்க்களமா பிஸியா இருக்கு. ரெண்டாயிரம் கார்களுக்கு பார்க்கிங் வசதி. ஆனால் இடம் இல்லாமச் சுத்திச்சுத்தித் தேடவேண்டியதா ஆகிப்போச்சு. கூட்டம் மொத்தமும் இங்கேதானே! வடகிழக்குப்பகுதியில் இருந்த பெரிய மால் ஒன்னு பழுதுபார்க்கும் வேலைகள் முடிஞ்சு இன்னிக்குத் திறக்கறாங்க.

ஆர்ட் செண்டர் வளாகத்தில் ஒரு ஷெட் வச்சு அதில் எதிர்கால ஊரு எப்படி இருக்கப்போகுதுன்னு கற்பனை செஞ்சு எங்களையெல்லாம் மகிழ்விக்கும் எண்ணத்தில் வச்சுருக்காங்க. ஷெட்டுக்குள் போனால் ஒரு மேசையில் ஒரு லேப்டாப் வச்சுருக்கு. அதில் விஸ்தரிச்சு இந்த டிஸைனைப்பத்திப் படிக்கலாம். ஷெட்டின் இருட்டுப்பகுதிக்கு உள்ளே சுவற்றில் ஒரு குறும்படம் ஒன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. அஞ்சு நிமிசப்படம். நமக்காக நாலு இருக்கைகளைப் போட்டு வச்சுருக்காங்க. கற்பனைக்கு ஏது எல்லை? கனவு காணுகின்றோம்.

எங்கூர் போலீஸ் தலைமையகம். இதையும் இடிக்கப் போறாங்க:(

Pre school ( கிண்டர்கார்டனுக்கும் முன்னால் போகும் சைல்ட் கேர் செண்டர்) டீச்சரா இருக்கும் தோழியிடம் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொல்றாங்க ' சிட்டின்னு ஒன்னு ஏது? இப்ப கிறைஸ்ட்சர்ச் சின்ன டவுன்' நம்ம பேட்டைதான் அதுக்கு செண்டரா இருக்குன்றாங்க. உண்மைதான் போல. நிறையப்பேர் இந்தப் பகுதிகளில் குடியேறிக்கிட்டு இருப்பதால் இந்தப் பக்கத்தில் காலையும் மாலையும் கொஞ்சம் ட்ராஃபிக் ஜாம் ஆகுது!

'நிலநடுக்கம் வந்தப்ப என்ன பண்ணே?'ன்னு கேட்டேன். அவுட் டோரில் குழந்தைகளை விளையாட விட்டுருந்தாங்களாம். நிலம் ஆடுனதும் பிள்ளைகளை அணைச்சுக்கிட்டு அந்த வெட்டவெளியில் தடாலுன்னு குப்புற விழுந்து கிடந்தேன்னாங்க. பிஞ்சுகளுக்கு விபரீதம் புரியாமல் குலுக்கலில் சிரிச்சுக்கிட்டு இருந்துச்சுங்களாம்!

PIN குறிப்பு: இந்த சமாச்சாரத்துலே இதுதான் கடைசி இடுகைன்னு எழுத ஆரம்பிச்சது கொஞ்சம்(??) நீண்டு போனதால் ரெண்டா வெட்டிப்போடவேண்டியதாப் போச்சு. இதை வெளியிட்ட சிலமணி நேரத்தில் அடுத்த பகுதியையும் போட்டு இப்போதைக்கு மங்களம் பாடிடலாம்.

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் ஓணம் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


19 comments:

said...

துள்சி,
நலமா?
நிலநடுக்கம் உங்களை நடுங்க வைக்கலை போல. நல்ல நிதானமா தகவல்கள் தந்திருக்கீங்க. இந்தியாவும் எப்போ கையூட்டு வாங்காத நாடாக மாறும்?

said...

//எங்கூர் காவல்துறையையும் நான் விட்டுவைக்காம எழுதுன ஒரு பதிவு, நேரம் இருந்தால் பாருங்க//

சுட்டி குடுங்க டீச்சர்.... :)

//கிஸ்கா பாப் ஹை?//

அப்னே பேட்டே கா! :))

//நிலம் ஆடுனதும் பிள்ளைகளை அணைச்சுக்கிட்டு அந்த வெட்டவெளியில் தடாலுன்னு குப்புற விழுந்து கிடந்தேன்னாங்க. பிஞ்சுகளுக்கு விபரீதம் புரியாமல் குலுக்கலில் சிரிச்சுக்கிட்டு இருந்துச்சுங்களாம்!//

என்ன ஒரு சமயோஜிதம்...

விவரங்களும் படங்களும் கூடிய பகிர்வு. நிச்சயம் மீண்டு வரும் உங்கள் நகரம்.... நம்பிக்கை தானே எல்லாம்....

என் பக்கத்தில் உங்களுக்குப் பிடித்த கோட்டைகள் பற்றி எழுதி இருந்தேன்... நீங்க தான் படிக்கலை... :)

http://venkatnagaraj.blogspot.com/2011/09/blog-post.html

said...

அருமையான பதிவு.
அங்குள்ள அரசாங்கத்தையும் மக்களையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நிலைமை சீரடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள் அம்மா.

said...

//கடைசியில் 55 சதம் வாங்குவாருன்னு சொல்லுச்சு. அவ்வளவு உழைச்சிருக்கார்! அதே போல 53.7 சதம் வாக்குகள் வாங்கி ஜெயிச்சார்!//

பரவாயில்ல இங்க மாதிரியான கருத்துகணிப்பு இல்லை :-) சரியா இருக்கு.

சென்னையில் உள்ள கட்டடங்கள் எல்லாம் ரொம்ப பழையது யாருமே சரியான முறையில் கட்டிடம் கட்டுவதில்லை.. எதோ பிரச்சனை வரலை என்பதால் ஓடிட்டு இருக்கு. இங்க மாதிரி எல்லாம் சென்னையில் வந்தால் சென்னை எழவே பல பல வருடங்கள் ஆகும். ஏற்கனவே ஒருமுறை சின்னதா நில அதிர்ச்சி வந்து ஜெர்க் கொடுத்து அதற்க்கு அலறி அடித்துட்டு ஓடினது இன்றும் நினைவு உள்ளது. ஒரு சனிக்கிழமை... அலுவலகத்தில் நான்கு படிகளாக தாவி இறங்கி ஓடினோம்.

நில அதிர்வு ரொம்பக் கொடுமையானது சில நிமிடங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது.

said...

வாங்க நானானி.

எப்போவா?

நல்லா ஆழமா எல்லா லெவலிலும் புகுந்து புரையோடிப்போன புண்.

யார் என்னன்னு பார்க்காம கொடுங்'கை' காமிக்கணும். சட்டம் விதிகள் எல்லோருக்கும் ஒன்னுபோல என்றைக்கு ஆகுதோ அன்றைக்கு விடிவு காலம் வரலாம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சுட்டி இதோ. மூணு வருசத்துக்கு முந்தியது.

http://thulasidhalam.blogspot.com/2008/11/blog-post_03.html

நாங்களும் நம்பிக்கையோடு காத்திருக்கோம்.

தோ கிளம்பறேன் உங்க கோட்டையைப் பிடிக்க:-)))))

said...

வாங்க ரத்னவேல்.

முகநூலில் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க கிரி.

//நில அதிர்வு ரொம்பக் கொடுமையானது சில நிமிடங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது.//

உண்மைதான். இயற்கை அழிவுகள் எல்லாமே இந்த கேட்ட'கிரி'தானே!

said...

வீடுகளுக்கு காப்பீடு வாங்க முடியலை./

சமாளிப்பது சிரமம் தான்!

said...

ஓணம் திருநாளுக்கான இனிய வாழ்த்துக்கள்!.

வாழ்க வளமுடன்!

said...

இந்த வாரம் ஒரு முறை தில்லி ஆடி என்னை கலக்கப்படுத்தியது..

குழந்தைகளுக்கு சிரிப்பாமா.. ?
எனக்கு திகில்..

said...

நியுசி அரசாங்கத்தின் ஏற்படுகளை அழகா விவரிச்சு இருக்கீங்க.லஞ்சமெல்லம் ஒண்ணும் கிடையாதுன்னு நீங்க எழுதியிருப்பதை பார்க்கும் பொழுது, இந்தியாவை நினைத்து வேதனையாக இருக்கு.தகவல்களுக்கு நன்றி.

said...

டிப்ஸே வாங்காத நியூஸி வாழ்க!
இந்தியாவை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது.

இங்கயும் சின்ன ஆட்டம் ஆடிருச்சு.

ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

காப்பீடு கம்பெனிகள் 'போண்டி ஆகறோம்' என்று ஒரே அழுகை:(

ஓணம் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

said...

வாங்க கயலு.

ஆபத்துன்னா என்னன்னே தெரியாத வெள்ளை உள்ளமல்லவா குழந்தைகளுக்கு.

வளரவளரத்தான் பயம் பிடிச்சுக்குது.

said...

வாங்க ராம்வி.

வருங்கால இந்தியா, ஊழல் இல்லாம இருக்கணுமுன்னு கடவுளை வேண்டிக்கணும்.

சாமியைப் பார்க்கப்போனாலும் காசுதானே முன்னால் நிக்குது!

said...

வாங்க கோவை2தில்லி.

அஸ்ட்ராலியாவிலும் இந்த டிப்ஸ் வழக்கம் இல்லைங்க.

ஆனா இந்தப் பழக்கத்தில் ஊறிட்டு டிப்ஸ் கொடுக்காம மறந்துட்டு பலநாடுகளில் கேவலப் பார்வை வாங்கி இருக்கோம்!

ஸோனிப்பெட்லே பாதிப்பு அதிகமில்லைதானே? இங்கே நியூஸ் ஒன்னும் வரலை.

ஓணம் வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

ஓணம் வாழ்த்துகள்.

said...

வாங்க மாதேவி.


வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.