Wednesday, September 28, 2011

பொம்மை(இல்லா) கொலு!!

நவராத்ரி வந்தாச்சு. இனி நம்ம வீட்டில் பனிரெண்டு நாளுக்கு அமர்க்களம்தான். வழக்கம்போல் கோபால் தன் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிக் கொடுத்தார். அவர் சரியாச் செஞ்சாரான்னு கவனிக்கத்தான் நம்ம கோகி இல்லாமப் போயிட்டான்:( அஞ்சு படிகள்.

முதல்படியில் தாயாரும் பெருமாளும். குட்டியா ஒரு கலசம். பிள்ளையார் புக் எண்ட்ஸ் இருபுறமும்.
ரெண்டாம்படியில் மகிஷாசுரமர்த்தினி, லக்ஷ்மி, சரஸ்வதி, புள்ளையார் முருகன். எங்கே இருக்கோமுன்னு அவுங்களுக்குக் குழப்பம் வந்துருமோன்னு இருக்குமிடம் சொல்ல பெங்குவின் குடும்பம். நம்ம ட்ரேட் மார்க்கா யானைகளும் பூனைகளும்.

மூணாவதில் செம்பருத்திப்புள்ளையார், பாலகிருஷ்ணப்புள்ளையார், வேணு வாசிக்கும் புள்ளையார், கீரைக்காரம்மா. அப்புறம் இந்த வருஷ ஸ்பெஷலா ஒரு பதிவர். யுவாங் சுவாங் என்ற ஆதி காலத்துச் சீனப் பதிவர். இவர்மட்டும் பதிவு பண்ணாமப் போயிருந்தால் நமக்கு சரித்திர சம்பவங்கள் பாதி தெரிஞ்சே இருக்காது. வெட்டிப்போட்ட மரத்தடியில் அதே மரத்தின் ஒரு பகுதியை மேசையா வச்சுக்கிட்டு 'உக்காந்து யோசிச்சு' எழுதறார் பாருங்க:-)))))
நாலாவது வாத்துக் குடும்பங்களும் வெள்ளைப்புலியும் நாயும் பூனையுமா இருக்கும் சூழலில் ஒருவருக்கொருவர் எப்படி அன்பா ஆறுதலா இருக்கணுமுன்னு சிம்பாலிக்காச் சொல்லும் இருவர்.( உபயம்: மகள்)

அஞ்சாவதில் யானைக்கூட்டம்.
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் யானைகளின் அணிவகுப்பு ஒரு புறம். விருச்சிகப்புள்ளையார் மறுபுறம்.

நைவேத்தியமா மாம்பழக்கேஸரி, வேர்க்கடலை சுண்டல் & பழங்கள்.
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் சிரமம் பார்க்காம ஒரு நடை வந்து ஒரு பாட்டுப் பாடிட்டுச் சுண்டல் எடுத்துக்குங்க. (அம்பி, சீக்கிரம் வந்தால் மொத்த கேஸரியும் உமக்கே:-)
சின்னவளை ரெடி பண்ண இவ்வளோ நேரமாயிருச்சு. அதான் ..... இப்போ வந்து நிக்கிறாள்.

அனைவருக்கும் இந்த நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


PIN குறிப்பு: அதென்ன இப்படி ஒரு தலைப்பு? இன்னும் நம்ம வீட்டுச் சாமான்கள் வந்து சேரலைங்க. பொம்மைகள் எல்லாம் கப்பலில் இருக்கு. பொழைச்சுக்கிடந்தால் அடுத்தவருசம் கூடவே ரெண்டு படிகள் கட்டிடலாம். சரக்கு வருதுல்லே:-))))))



42 comments:

said...

பொம்மை [இல்லா] கொலு... சின்னதாக இருந்தாலும் சிம்பிளாக இருப்பது எப்பவும் அழகுதான்.... இல்லா என்றே சொல்ல முடியாது....

மாம்பழ கேசரி, வேர்க்கடலை சுண்டல் எடுத்துக் கொண்டேன்.... டேஸ்ட்.... வாவ்! ரகம்..... :)

said...

சின்னவள்.... க்யூட்.... ரெடியாகி வரவேண்டாமா.... அதுக்குள்ள என்ன அவசரம்.... பார்த்து பெருசுக்கு என்ன அவசரம்-னு கேட்டுட போறா அந்தச் சீனத்து சிங்காரி....!

said...

சிறப்பான சின்ன கொலுவுக்கு பாராட்டுக்கள்.

said...

வாவ்..மாம்பழ கேசரி எல்லாம் எனக்கு இல்லையா டீச்சர்:? :-(

சின்னவள் ரொம்ப அழகு டீச்சர்.. அந்த Saree அவளுக்காகவே வாங்கினீங்களா? :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிரமம் பாராமல் இருமுறை வந்துட்டுப் போனதுக்கு ரொம்ப நன்றி.

சீனத்துச் சிங்காரியை சல்வார் கமீஸ் போட்டு சிலவருசங்களுக்கு முன்னே இந்தியளா மாத்தினேன். இப்போ கஞ்சிப்பட்டுடுத்தித் தமிழ்நாட்டுப் பொண் ஆகிட்டாள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.


வருகைக்கு நன்றிங்க.

said...

வாங்க ரிஷான்.

உங்களுக்கில்லாத கேஸரியா!!!!! எடுத்துக்குங்க:-)

சென்னையில் ஒரு கடையில் குழந்தைகளுக்கு ரெடிமேட் புடவை இருப்பதைப் பார்த்தேன். அப்பதான் இவளுக்கும் ஒன்னு வாங்கலாமேன்னு தோணுச்சு. மூணு வயசுக்குன்னு சொல்லி வாங்கினேன். ப்ளவுஸ்தான் கொஞ்சம் சரி செய்யணும். புடவை உயரம் சரியா இருக்கு!

காதுகுத்தத்தான் கொஞ்சம் சிரமமாப் போச்சு. ஜிமிக்கியை ப்ளாஸ்ட்டிஸைன் போட்டு ஒட்டமுடியாதுல்லே?

இன்று காதணி விழாவும் ஆச்சுன்னு சொல்லிக்கலாம்:-))))))

said...

அற்புதம் துளசி.இது மாதிரி பிரசாதம் கிடைக்கும்னு தெரிந்தால் நான் வந்திருப்பேனே:)
சிம்பிள் கொலு. சிறப்பான கொலு.
அழகு அள்ளிக் கொண்டு போகிறது.

said...

சீனத்து சிங்காரியை பார்த்து பொறாமையா போச்சு. புடவையும் பிளவுஸும் கச்சிதமா இருக்கே :))))

கொலு அழகா இருக்குங்க.

கேசரியும், சுண்டலும் எடுத்துக் கொண்டோம். (நானும்,ரோஷ்ணியும்)

நவராத்திரி வாழ்த்துகள்.

said...

டீச்சருக்கும் மற்றும் அனைவருக்கும் இந்த நவராத்ரி வாழ்த்துக்கள் ;-)

சுண்டல் சூப்பர் ;-)

said...

Cute mam.

said...

கொண்டாடுவதில் நீங்கள் சுப்பர்!
முதல் கொலு அழைப்பு நீங்கள் தான்.
கேசரி பர்பெக்ட்.;-)

said...

கொலுவும்,மாம்பழ கேசரியும் சூப்பர்ர் அக்கா...நவராத்திரி வாழ்த்துக்கள்!! தினமும் சுண்டலை பார்சல் அனுப்பிடுங்க...

said...

// குழந்தைகளுக்கு ரெடிமேட் புடவை //

சாதனா புடவைன்னு சொல்லுவாங்க.. இங்கே மஹாராஷ்டிரர்களின் ஸ்டைல்லயும் கிடைக்கும்.

கொலு ஜூப்பரா இருக்கு. அதை விட உங்க கோயில் என் பையருக்கு ரொம்ப பிடிச்சுருச்சு :-)

ஜிக்குஜூவை மேற்பார்வைக்கு வெச்சுருக்கலாமே.. அங்கே இங்கே போகாம கண் பார்வையிலேயே வெச்சு வேலை வாங்கியிருப்பானே :-))

said...

வாங்க வல்லி.

கிளம்பி வாங்க முதலில். உங்களுக்கு ஸ்பெஷலாப் பிரசாதம் பண்ணிருவேன்:-)

புடவையில் 'பளிச்'ன்னு ஆகிட்டாள்ப்பா:-)

said...

வாங்க கோவை2தில்லி.

பண்டிகை நாளில் கூட புடவைக் கட்டக்கூடாதான்னு இனி யாரும் நம்மைக் குறை சொல்ல முடியாது:-))))

உங்களுக்கு ரோஷ்ணிக்கும் என் நன்றிகள்.

said...

வாங்க கோபி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

சுண்டல் தாளிக்கலை கேட்டோ! எதுக்கு எண்ணெய்ன்னு இருந்துட்டேன்.

said...

வாங்க ப்ரியா.

நன்றிப்பா.

said...

வாங்க வெற்றி மகள்.

டேட் லைனில் குடி இருப்பதால் எல்லாம் ஊர் உலகத்துக்கு முன்னே முதலில் நடந்துருது!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க மேனகா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

தினமும் சுண்டல் இல்லைப்பா. தினம் செஞ்சாலும் தின்ன ஆள் வேணாமா?


முதல் நாளும் தசமிக்கும் சுண்டல் கட்டாயம் உண்டு. மற்ற நாட்களில் பழங்கள் மட்டுமே இந்தக் கிழங்களுக்கு:-)

வழக்கமா விஜயதசமிக்குத்தான் நம்மூட்டில் பூஜையும் விருந்தும். இந்த முறை அதை விஜயதுவாதசியா வச்சுக்கணும். வீக் எண்ட் என்றால் நண்பர்களுக்கு வர எளிதா இருக்கும்

said...

வாங்க அமைதிச்சாரல்.

அவனும் கப்பலில்தான் பயணம். உங்க வாய் முகூர்த்தம் கப்பல் நம்ம துறைமுகத்துக்கு வந்துருச்சுன்னு சேதி இப்பத்தான் வந்துச்சு. க்ளியரன்ஸ் கிடைச்சு எப்ப வர்றானோ தெரியலை.

மகாராஷ்ட்ரா சாதனா புடவைக்கு முந்தி வேற ஒரு பெயர் இருந்ததா நினைவு. நானும் பூனாவில் இருந்தப்ப தோழியின் மகளுக்கு ஒன்னு தைச்சுக் கொடுத்தேன். முன்பக்கம் நிறையக் கொசுவம் அடுக்கடுக்காய் வரும் அதுலே!

said...

கொலு அழகா இருக்கு. நவராத்திரி வாழ்த்துகள் அம்மா!

said...

வேர்க்கடலைச் சுண்டல் வேகலை போலிருக்கேன். மாம்பழக்கேசரியா?? சரி சரி, எல்லாத்தையுமே எடுத்துக்கறேன். எனக்கு என்னமோ சரியாவே அப்டேட் ஆகலை; உங்க பதிவு, பின்னூட்டம் போடாட்டியும் படிப்பேன். இப்போப் பதிவு வந்ததே தெரியலை.

said...

ஹிஹி.. நம்ம வீட்டுக் கொலு. சின்ன வயசுல இப்படித்தான்.. அக்கம்பக்கத்து வீடுகள்ல ஆறு படி பத்து படினு பொம்மைகளோட பெரிய கொலு இருக்கும். எங்க வீட்டுல ரெண்டு படி.. சில சமயம் நாங்களே அதுல உக்காந்துக்குவோம்.

said...

மாம்பழக் கேசரி - விவரம் எழுதியிருக்கலாமே?
கேரளா நண்பர் வீட்டில் ஒரு தடவை வேர்க்கடலை சுண்டல் சாப்பிட்டிருக்கிறேன். நம்ப முடியாத ருசி!

said...

கொலு மிக அழகா இருக்கு.நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.

said...

ஹல்லோ! துளசி ரெம்ப நாளைக்கப்புறம். நலமா? கொலு சின்னதாக நன்றாக இருக்கு பட்சணம் அருமை. செகப்புப் புடவை ஜோரா இருக்கு. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

said...

வாங்க கவிநயா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா.

said...

வாங்க கீதா.

மைக்ரோவேவில் வேகவச்சது. இன்னும் அஞ்சு நிமிஷம் வச்சால் ரொம்ப வெந்துபோகும். ரொம்ப வெந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்குப் பிடிக்காது. கொலுவுக்கு வரும் விஸிட்டர்களே அவுங்கதானேப்பா:-)))))

அட ராமா! ஓசைப்படாம வந்துட்டதா இந்தப் பதிவு!!!!

said...

வாங்க அப்பாதுரை.

கொலுப்படிகள் எப்பவும் ஒற்றைப்படை எண்களில்தான்.

நம்மிடமும் பெரிய பொம்மைகள் ஒன்னும் இல்லை. மண் பொம்மை...ஊஹூம்.

ஆனால் இல்லாமல் இருப்பதற்கு இப்ப வாகா ஒரு ச்சான்ஸ் கிடைச்சுருக்கு. நிலநடுக்கம் காரணம் பெரிய படிகள் கட்டி பொம்மைகள் அடுக்க பயமா இருக்கு. இன்னும் ஆஃப்டர்ஷாக்ஸ் வருவது நிக்கலை:(

சுவரில் பொருத்தும் ஷெல்ஃப் எல்லாம் இப்பக் கழட்டித் தரையில் ஒரு மூலையில். எப்போ திரும்ப அதன் இடத்துக்குப்போகுமோ தெரியலை:(

வேர்க்கடலை சுண்டல் ரொம்பவே ஈஸி. அதே போல மாம்பழக்கேஸரியும். வழக்கமான செய்முறை. வெறும் தண்ணீருக்கு பதிலா மாம்பழக்கூழில் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கேஸரி செஞ்சால் ஆச்சு.

said...

வாங்க ராம்வி.

ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

பொண்ணு வளை போட்டுருக்காள். மீண்டும் வருக:-)

said...

வாங்க கவிதை.

நலம். நலமா?

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

புடவை அழுத்தமான பிங்க். மஜந்தான்னும் சொல்லலாம். அவ அழகுக்கு இது இன்னும் அழகு செய்யுது:-))))

said...

பொம்மையில்லா கொலுவா இது கலக்கல் கொலுவா இருக்கு..

பதிவரில் மூத்தபதிவர்.. அன்புக்கு அடையாளமான வெள்ளைநீல பொம்மை எனக் கலக்கிட்டீங்க..:)

said...

வாங்க கயலு.

நீங்கதானே சொன்னீங்க புதுமை புகுத்துவேன்னு! அதான்:-))))))))

said...

//திவுலக நண்பர்கள், வாசகர்கள் சிரமம் பார்க்காம ஒரு நடை வந்து ஒரு பாட்டுப் பாடிட்டுச் சுண்டல் எடுத்துக்குங்க//

நான் கொஞ்சம் லேட், சுண்டல் மிச்சம் இருக்கா துளசிம்மா? தங்கள் மணிவிழாவிற்கு நல் வாழ்த்துக்கள். நேற்றுதான் நாச்சியார் அம்மா பதிவில் பார்த்தேன். நவராத்ரி நல்வாழ்த்துக்கள்.

said...

சுண்டல் இருந்தா கொஞ்சம் பார்சல்ல அனுப்பி வைங்க டீச்சர்..!

said...

"காஞ்சிப் பட்டுடுத்தி....." சின்னவள் ரொம்பவே கலக்கிறாள்.

said...

வாங்க கைலாஷி.

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி..

பலமுறை கயிலை தரிசனம் செஞ்சவரின் வாழ்த்துகளை அந்தப் பெருமானே சொன்னதா எடுத்துக்கறேன்,

அன்புக்கு நன்றி.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

இது டிஜிட்டல் சுண்டல். அள்ள அள்ளக் குறையாது:-)

எல்லாம் உமக்கே!

said...

வாங்க மாதேவி.

'ஜன்னு' கலக்கலாத்தான் இருக்காள். என் கண்ணே பட்டுரும்போல இருக்கு!

said...

டீச்சர் : கலக்குறீங்க. எல்லா பதிவுகளும் பின்னூட்டங்களும் செம சுவாரஸ்யம். இந்த பதிவில் அந்த பெண் பொம்மை செம சூப்பர்

said...

வாங்க மோகன் குமார்.

அவள் சீனத்துச் சிங்காரி. அவளை இந்திய அழகியா மாத்திட்டேன்:-)