Showing posts with label Earthquake. Show all posts
Showing posts with label Earthquake. Show all posts

Friday, March 16, 2012

மீண்டு(ம்) வருமா? ( கதீட்ரல் தொடர்ச்சி) Christchurch Earthquake 9

நிலநடுக்கம் ஒன்னும் இந்த ஊருக்குப் புதுசுல்லேன்னாலும் இப்படி ஒரேடியா மேலேயும் கீழேயும், இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா சாய்ஞ்சு ஒரே சமயத்தில் ஏற்பட்ட குலுக்கல்களும் ரொம்பவே புதுசு:(

1881, 1888, 1901 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் இந்த பெல் டவர் கும்மாச்சிக்குத்தான் எப்பவும் சேதம் ஏற்பட்டு திரும்பத் திரும்ப சீராக்கும் வேலை நடந்துச்சுன்னாலும் கடந்த 2010 செப்ட்ஃம்பர் முதல் இதுநாள் வரை நிக்காமல் தொடரும் நடுக்கங்களால் பெல்டவர் ஒரேடியா மொட்டைக் கோபுரமா நிக்குது. கீழே விழுந்த கூம்பை எடுத்து ஒரு மரத்தடியில் வச்சுருக்காங்க.

டவர் போனாப் போகட்டும், கோவில் நல்லா இருந்தால் சரின்னு நினைக்க முடியாம 2011 ஃபிப்ரவரி பூகம்பத்தில் உள்ளே நிறைய அழிவு. ஸ்ட்ரக்ச்சர் முழுசும் பாழாகிப்போச்சு. இனிமே இதை வெறுமனே விட்டுவச்சாலும் ஆபத்துதான்னு சொல்றாங்க. சம்பவம் நடந்தசமயம் இதுக்குள்ளே 22 பேர் மாட்டிக்கிட்டாங்கன்னு சேதி வந்து பதைபதைச்சு நின்னோம். டவரில் ஏறிப்பார்த்துக்கிட்டு இருந்தவங்க நாலுபேர் அப்படியே கல்லோடும் மண்ணோடும் புதைஞ்சுட்டாங்கன்னு தகவல். நல்லவேளையா எல்லாம் வதந்தீன்னு தெரிஞ்சப்போ நிம்மதி ஆனோம். இந்த வதந்'தீ' பரப்புவதில் மட்டும் உலகமெல்லாம் ஒரே ஒற்றுமை!!!!
Sue Spigel என்ற பெண், மாடியில் பூஜாரிகளுக்கான மேலங்கி தயாரிக்கும் வேலையில் இருந்துருக்கார். இடிபாடுகள் தலையில் விழுந்து, முகமெல்லாம் ரத்தம் ஒழுக, ஒரு கை ஒடிஞ்ச நிலையில் ஜன்னலை ஒருமாதிரித் திறந்து, உதவி கிடைக்குமான்னு இருந்தபோது ஒரு போலீஸ் ஆஃபீஸர் கண்ணில் விழுந்ததால் உடனே காப்பாற்றப்பட்டார்.

கதீட்ரல் உள்ளே இருக்கும் தூண்களைப்பத்தியும் சொல்லணும். மொத்தம் 14 தூண்கள். ஒவ்வொன்னும் ஒரு குடும்பம், நிறுவனம் இப்படிக் கோவிலுக்காக நிதி கொடுத்து அமைச்சுருக்காங்க. 1851 இல் பாடம் சொல்லிக்கொடுத்த நியூஸியின் முதல் டீச்சருக்கு பள்ளிக்கூடப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு தூண் வச்சுருக்காங்க. கோவில் ரெக்கார்டுகளில் யார் யார் எந்தத் தூண்களுக்கு நிதி உதவி செஞ்சாங்கன்ற விவரம் இருக்கே தவிர, நல்ல வேளையா தூண்களில் இன்னாரின் உபயம் என்று எழுதிவைக்கலை:-)

முகப்புச் சுவரில் ரோஸ் விண்டோன்னு ஒன்னு மிகவும் புகழ்பெற்றதா இருந்துச்சு. 25 அடி குறுக்கு விட்டம். முதல் பிஷப் ஹார்ப்பர் அவர்களின் மகனும் மருமகளும் இதுக்கு நிதி கொடுத்துருக்காங்க. வெனிஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டு இங்கே கொண்டுவந்தது. தேவாலயத்துக்குள்ளே நுழைஞ்சதும் தலையைத் தூக்கி மேற்கே வாசல்பக்கம் பார்க்காம யாருமே இருந்துருக்கவே முடியாது. அப்படி ஒரு அழகும் வேலைப்பாடும்!!!!


ரோஸ் முதல் க்வேக்கில் கொஞ்சம் தப்பியது, டிசம்பர் ஆட்டத்தில் தப்பிக்கலை:(

இழப்பை சகிக்கமுடியாத ஒரு கேக் அலங்கார நிபுணர் இந்த ஜன்னல் அலங்காரத்தைத் தான் செய்த பாவ்லோவா என்னும் கிவி ஸ்பெஷல் இனிப்பில் கொண்டுவர முயற்சி செஞ்சார். இந்தப் படம் பாருங்க. 20 கிலோ மார்ஷ்மல்லோ, 25 கிலோ அரிசிப்பொரி, ஏராளமான முட்டைகளின் வெள்ளைக்கரு, ஐஸிங் சக்கரைன்னு மூணு மீட்டர் குறுக்கு விட்டம் அளவில் பிரமாண்டமான தயாரிப்பு.
கருவறை(ஆல்ட்டர்)க்கு முன்னால் இருந்த மூணு தேவதைகளின் உருவங்களும் கட்டிடம் இடிஞ்சப்பக் கீழே விழுந்துருச்சு. அதில் உடையாமல் தப்பிச்ச 'கேப்ரியல்' என்னும் தேவதூதனை ஒரு க்ரேன்லே கட்டிவிட்டு நகரத்தைப் பார்க்கும்படி வச்சுருக்காங்க. எப்படியோ நகரம் காப்பாற்றப்படணும்.
முந்தி இருந்ததைப்போலவே இந்த தேவாலயத்தைத் திருப்பிக் கட்டணுமுன்னா குறைஞ்சபட்சம் 100 மில்லியன் டாலர் செலவுன்னு ஒரு கணக்கு. எங்க மாட்சிமைதாங்கிய எலிஸபெத் ராணியம்மா அவுங்க காசுலே இருந்து 20 மில்லியன் தரேன்னு சொல்லி இருக்காங்க. மீதி 80 எப்படி சேர்க்கப்போறோமுன்னு தெரியலை. இன்ஷூரன்ஸ் பணம் அவ்ளோ கிடைக்காது. கோவில்வேற ((அல்ப்பமா) பத்து டாலர் டொனேஷன் கொடுங்கன்னு கேக்குது. எங்க ஊர் ஜனத்தொகையே மூணரை லட்சம்தான். எல்லோரும் தவறாமக் கொடுத்தாலும் மூணரை மில்லியன்தான் தேறும். அப்ப பாக்கி????

பத்தே மில்லியன் டாலர் செலவில் ஜப்பானியர் ஒருத்தர் இதே மாதிரி ரிப்ளிகாவை அட்டையில் தயாரிச்சுத் தரேன். அதை கோவிலாப் பயன்படுத்தங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். நம்ம தோட்டா தரணியிடம் பயிற்சி பெற்றாரா என்ன? (இப்ப எதுக்குப் புது சட்டசபை செட் விவகாரம் மனசில் வருது? அடங்கு மனசே)

ஸ்டெய்ண்டு க்ளாஸ் stained glass என்ற வகையில் தேவாலயத்துக்குள்ளே ஏராளமான கண்ணாடி அலங்காரங்கள், ஒரு முப்பது இருக்கும். இவையும் உள்ளூர் மக்களால் பல நாடுகளில் இருந்து வாங்கப்பட்டு, கோவிலுக்குக் கொடுத்த தானங்களே!





ஆன்னா ஊன்னா இந்த ஊர்லே பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அவுங்க சொன்னதை இலவச தினசரியில் போட்டுருவாங்க. பொதுவா எல்லாத்துலேயும் அஞ்சு சாதகமாவும் அஞ்சு பாதகமாவும் இருக்கும். இந்த ஒரு விஷயத்துலேதான் பத்துக்கு எட்டு 'கூடாது'ன்னு சொல்லுது. நம்ம சிட்டிக் கவுன்ஸிலர் ஒருத்தர் நம்ம பக்கம்!

ஒரு நாளைக் குறிப்பிட்டு கதீட்ரலின் தலைவிதியின் தீர்ப்பு பகல் ரெண்டு மணிக்குச் சொல்வோமுன்னதும் ஊரே டிவியில் கண்ணும் ரேடியோவில் காதுமாக் கிடந்துச்சு.

ரெண்டு சனி ரெண்டு ஞாயிறு சதுக்கத்துக்குள்ளே விடுவோம். கண்ணாரப் பார்த்துக்குங்க. அப்புறம் சொல்லாமக்கொள்ளாம போயிருச்சுன்னு புலம்பக்கூடாது. ஒரு சனி ஞாயிறு போச்சு. பாக்கி இன்னும் ஒரே ஒரு வார இறுதி.
கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் சாவுக்குக் கட்டாயம் போகணும் என்ற பண்பாடு இன்னும் நம்ம ரத்தத்தில் இருக்கே. ரெண்டு பக்கமும் ஆள் உயர வலைக்கம்பித் தடுப்பும் இடையில் நாலைஞ்சு மீட்டர் அகலமுமா பாதையும். உள்ளே போக ஒரு மூணு நிமிசக் காத்திருப்பு. வரிசை ஒன்னும் இல்லை. ஆனாலும் யார்மேலேயும் இடிச்சுத்தள்ளாமல் அப்படியே போனோம். நிகழ்ச்சி நடந்த ஃபிப்ரவரி 22க்குப்பிறகு முதல்முறையா கதீட்ரலை நேருக்குநேர் சந்திப்பது ஒருவிதமான ஆவல், எதிர்பார்ப்பு, ஐயோ என்ற மனக்கஷ்ட,ம் எல்லாம் சேர்ந்து ஒரு கலப்படமான உணர்வு.


தேவாலயத்துக்கு முன்னால் சதுக்கம் ஆரம்பிக்கும் இடத்தில் இடுப்புயரத்தில் ஒரு தடுப்பும் ஆறேழு மீட்டர் இடைவெளிவிட்டு இன்னொரு தடுப்புமா அமைச்சுருக்காங்க. தப்பித்தவறி இப்போ எதாவது நிலநடுக்கம் வந்தாலும் விழும் கற்கள் நம்மகிட்டே வர வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே உருண்டு விழுந்த உருண்டைக் கற்களை ஒரு கம்பிக்கூண்டுக்குள் சேர்த்து வச்சுருந்ததைப் பார்த்தால் வியப்பா இருக்கு. எங்கே இருந்து வந்தவைகள்????
மணிக்கூண்டு முக்கால்வாசி உடைஞ்சு போய் மொட்டையா நிக்க, தேவாலயத்தில் முன்பக்கச்சுவர்கள் இடிஞ்சு கிடக்கு. இரும்புச்சட்டங்களை அங்கங்கே முட்டுக்கொடுத்து வச்சுருக்காங்க.. ரோஸ் ஜன்னல் இருந்த இடத்தில் பெரிய ஓட்டை:(
சதுக்கத்தில் மக்கள் ஓய்வெடுக்கக் கட்டிவச்சுருந்த ரெண்டு மேடைகளிலும் மக்கள் ஏறி நின்னு கண்கொட்டாமல் கோவிலைப் பார்த்து திகைச்சு நிக்கறாங்க. மனசில் ஓடும் எண்ணக் குவியல்கள் முகத்தில் தெரியுது. ஏறக்கொறைய நிசப்தம். பேச நாக்கும் எழும்புதா என்ன? எழவு வீட்டில் இருப்பதைப்போலத்தான் இருக்கு:(
இந்தச் சதுக்கத்தில் எத்தனைமுறை எத்தனை விழாக்கள், கூட்டம் எல்லாம் நடந்து கலகலப்பா இருந்துருக்கு. ஊருக்குள்ளே நல்லது கெட்டது எதுன்னாலும் இங்கேதானே கூடுவோம்! இந்தியன் க்ளப் தீபாவளி விழாவைக்கூட ரெண்டுமுறை இங்கே நடத்துனோமே! நம்ம ஹரே க்ருஷ்ணா குழுவில் ஒரு கல்யாணம்கூட இங்கே சதுக்கத்தில் கோலாகலமா ஊர்த்திருவிழா போல நடந்துச்சே!

சிலசமயம் எனக்கு மனசு சரி இல்லைன்னா பஸ் பிடிச்சு நேரா இங்கே வந்துருவேன். தேவாலயத்துக்குள்ளே போய் பெருமாளை தியானிச்சுட்டு சதுக்கத்தில் வந்து கொஞ்ச நேரம் உக்கார்ந்து போற வர்ற மக்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். வரும்போது வாங்கின பஸ் டிக்கெட் மூணு மணி நேரம் வரை செல்லும் என்பதால் ரெண்டரை மணிநேரம் சுத்திக்கிட்டு இருந்துட்டு அதே டிக்கெட்டில் வீட்டுக்கு வந்துருவேன். மனசு லகுவாகிப்போகும். புலம்பல் சொல்ல அப்போ ப்ளொக் இல்லை பாருங்க:-)
குறைஞ்சது ரெண்டு மூணு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் சதுக்கத்திலும் கோவிலிலுமா நடமாடுவாங்க. சதுரங்க ஆட்டம் சதுக்கத்தில் நடக்கும். ரெண்டு டாலர் செலவு. இடுப்புயர பொம்மைகள். படைவீரனையும் குதிரையையும் கோட்டையையும் ராஜாவையும் ராணியையும் தூக்கிப்போய் வைக்கணும்.

பகல் 12 ஆனதும் டவுன் க்ரையர் என்றவர் பழங்கால உடுப்புகளுடன் சதுக்கத்தில் வந்து நின்னு அன்று ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை கையில் உள்ள சுருட்டி வச்ச ஓலையைத் திறந்து வாசிப்பார். நம்மூர் மந்திரவாதி ஒரு சின்ன ஏணியில் நின்னு நாட்டு நடப்பையும் எப்படி உலகம் கெட்டுக்கிடக்குன்னும் சொல்லிக்கிட்டு இருப்பார். உலகத்தின் வரைபடம் ஒன்னு தலைகீழாய் வரைஞ்சது இவர் வச்சுருப்பார். சுருக்கத்தில் சொன்னால் லண்டன் ஹைடு பார்க் போல ஆளாளுக்கு 'உசரமா நின்னு' பேசலாம்.
டூரிஸ்ட் அட்ராக்ஷனா ட்ராம் வண்டிகள் மீண்டும் ஓட ஆரம்பிச்சதும் சதுக்கத்தைச் சுற்றி கலகலப்பு இன்னும் கூடுனதென்னவோ நிஜம். இப்போ வெறிச்சோடிக்கிடக்கும் இடம் பார்த்தாலே மனசைக் கலக்குது:(

ஹூம்..... எல்லாம் போச்சு.
தேவாலயத்துக்கு வடக்குப்பக்கம் ஒரு வார்மெமோரியல் வச்சுருந்தாங்க. அதுக்குப்பின்பக்கம் 1995 இல் புதுசா ஒரு விஸிட்டர்ஸ் செண்டர் கட்டிடம் கட்டி அதை எங்க மாட்சிமை தாங்கிய ராணியம்மாதான் திறந்து வச்சாங்க. சுற்றுலாப்பயணிகள்/பார்வையாளர்களுக்கான தகவல்கள், காஃபி ஷாப், நினைவுப்பொருட்கள், கிஃப்ட்ன்னு இருந்தாலும் அது கோவில் டிஸைனுக்கு ஒட்டாத eye sore ன்னு எனக்கு ஒரு நினைப்பு. ஆனாப் பாருங்க..... இது அழிவிலே இருந்து தப்பிச்சமாதிரிதான் தெரியுது!


தேவாலயத்தின் தெற்குப்பக்கத்தில் பிரமாண்டமான மூணு தூண்களை வச்சு அதை Columbarium ன்னு ஐரோப்பிய நாடுகளின் ஒரு வழக்கத்தை அனுசரிக்கும்விதமாச் செஞ்சுருக்காங்க. மதங்கள் நம்பிக்கைகள் இப்படி எந்த வித்தியாசமும் இல்லாம ஊர் மக்கள் அனைவருக்கும் பொதுவா, நம்ம குடும்பத்தில் இறந்து போனவர்களின் அஸ்தியை ஒரு சின்னப்பெட்டியில் வச்சுக் கொடுத்து அதுக்கான ஒரு கட்டணமும் கட்டினால் அதுக்குள்ளே வச்சுருவாங்களாம். 700 அஸ்திகள்வரை வைக்கலாமாம். முன்கூட்டியே இதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சுக்கலாம். அந்தத் தூண்கள் சேதம் ஆகாமல் இப்போதைக்கு நிலையாத்தான் நிக்குது. (பாங்காக் நகரில் ஒரு கோவிலில் இப்படி அஸ்திகள் அழகழகான ஜாடிகளில் வச்சுருப்பதைப் பார்த்த நினைவு வருது)
உலோகச்சிற்பமான சலீஸ் சேதாரம் ஒன்னும் இல்லாம இருந்தாலும் அதுக்குள்ள கம்பீரம் குறைஞ்சுபோய் சோகமா நிக்குதோ?

வலைக்கம்பி வேலியில் மஞ்சள் நிற ரிப்பன்களில் ஊர்மக்கள் சேதி எழுதி கட்டியிருக்காங்க. அநேகமா எல்லோரும் கோவிலைக் காப்பாத்த நினைப்பவர்கள்தான்.

ரெண்டு தடுப்புகளுக்கிடையில் ஒரு போலீஸ் கார் மக்கள் பாதுகாப்புக்காக நிக்குது. நம்ம சோகத்துலே பங்கெடுத்துக்குது போல. அங்கே ஒன்னு இங்கே ஒன்னு ரெண்டு செக்யூரிட்டி. தனக்கு நாட்டாமை கொடுத்தமாதிரி மக்களைப் போ போ நிக்காதேன்னு சொல்லி விரட்டும் எண்ணமே இல்லாம தூரத்துலே கைகட்டி அமைதியா நிக்கறாங்க.
இந்தப் படத்தில் தெரியும் புதுசு, பழசுன்னு அத்தனை கட்டிடங்களுமே இடிபடப்போகுது.:(
சிட்டிமாலின் இந்தப்பகுதி மொத்தமும் இடிச்சுடப்போறாங்க. நகரின் நடுவில் ஒரு 12 சதுர கிலோமீட்டர் பரப்பு முழுசும் காலியாகுது:(


நமக்கு எவ்வளோ நேரம் இருந்து பார்க்கணுமோ அவ்ளோ நேரம் மனம் அடங்கும்வரை நின்னு நிதானமா சோகத்தை ஜீரணிக்கும்வரை இருக்கலாம். பாழும் கண்ணீர்தான் திரைபோட்டுக்கிட்டே இருக்கு. நமக்குப் பழக்கமே இல்லாத யார்யாரோ ஆறுதலா தோளைத்தட்டிப் போறாங்க. பொது சோகத்துக்கு ஊரே பழக்கபட்டுருக்கு.
மெள்ள நடந்து வெளியே வர்றோம். பாதை முடிவில் கடைசியில் ஒரு டொனேஷன்ன்னு ஒரு ப்ளாஸ்டிக் வாளி வச்சுருக்காங்க. கொஞ்சம் காசைப்போட்டால் தேவலைன்னு இருந்துச்சு. இதே வாளியை சதுக்கத்தில் கோவிலுக்கெதிரில் இருக்கும் இடுப்பளவு தடுப்புக்கு முன்னே வச்சுருந்தால்...... நிறைய கலெக்ஷன் ஆகச் சான்ஸ் இருக்கு. மக்கள் எமோஷனலா இருப்பாங்க இல்லே? அதென்னவோ போங்க..... பொழைக்கத் தெரியாத ஊர்..... நானூறு மீட்டர் நடந்து வந்தபிறகு துக்கம் குறைஞ்சு நிகழ்கால நடைமுறைக்கு வந்துறமாட்டோமா?

ஆச்சு. நாளைக்கும் நாளன்னைக்கும்தான் கடைசி நாள். இன்னொருமுறை கட்டக்கடசியா முகம் பார்க்கலாமுன்னு இருக்கேன். கோபால் சம்மதிக்க மாட்டார்.

" அங்கே போய் என்னத்துக்கு அழறே..... அதை இங்கேயே உக்காந்து அழுது முடியேன்"


Thursday, March 15, 2012

கடசியா மொகம் பார்க்கணுமுன்னா.......... Christchurch Earthquake 8

வறட்டியைக் கையில் வச்சுக்கிட்டு, கடைசியா முகம் பார்க்கணுமுன்னா சீக்கிரம் பார்த்துக்குங்க. மூடிட்டா அப்புறம் எடுக்கமுடியாதுன்னு சுடுகாட்டுலே வெட்டியான் சொல்றதைப்போல.......

எங்க பிஷப் விக்டோரியா ரொம்பவே கடக்கா இருக்காங்க. " மக்கள் பாதுகாப்பை முன்னிட்டு இடிக்கத்தான் போறோம். ஆனால் புல்டோஸர் கிடையாது. ரொம்ப மரியாதையா, கண்ணியம் குறையாம கல் பை கல்லா எடுத்துருவோம். விழுந்தாலும் மனிதர்களுக்கு ஆபத்து இல்லாத வகையில் ஒரு ரெண்டு இல்லை மூணு மீட்டர் உயரம் பாக்கி இருக்கும்வரைதான் எடுக்கப்போறோம்."

"அப்ப..... குட்டிச்சுவரா நிக்குமா? கல் பை கல் எடுக்கத் தெரிஞ்சவங்க அதே கல் பை கல்லை வச்சு திரும்பக் கட்டி எழுப்பக்கூடாதா? "

ஊரே ரெண்டு பட்டுக்கிடக்கு இந்த விவகாரத்துலே! "நிபுணர்கள் ரிப்போர்ட் வந்துருக்குன்னு சொல்லும் பிஷப், அந்த அறிக்கையை வெளியிடணும். அதுலே என்னதான் இருக்குன்னு மக்களுக்கும் தெரியணும்."

"அது ரொம்ப டெக்னிக்கலா இருக்கு. மக்களுக்குப் புரியாது."

"புரியுதோ புரியலையோ காமிம்மா காமி."

"நான் எஞ்சிநீயரிங் படிக்கும் மாணவன். எனக்குப் புரியும். சீக்கிரம் வெளியிடும் பிஷப்பே! "

ஐய்ய..... போன பிஷப் ரொம்ப நல்லவர். மக்களோடு மக்களா பழகுவார். இந்த பிஷப்தான்...... எதுக்கும் மசியலை. எல்லோரும் நொந்து போயிருக்கும்போது வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்காம சதுக்கத்தை கடற்கரை சினிமா தியேட்டர் ஆக்கலாமுன்னு திருவாய் மொழிஞ்சாங்க இந்தம்மா:(

Christchurch's Cathedral Square could be transformed into an artificial beach with large movie screens. Bishop of Christchurch Victoria Matthews said the proposal could help make the earthquake-damaged Square "welcoming and engaging" again.
She spoke about the idea during the visit of the Australian governor-general to Christchurch.

(எங்கூலே பொம்நாட்டிகள் பூஜாரிணியா இருக்க ஒரு தடையும் இல்லை கேட்டோ!)
ரைட் ரெவரண்ட் விக்டோரியா மாத்யூஸ் கனடாவில் பிறந்து வளர்ந்தவங்க. எங்க ஊர் (ஆங்லிகன் சர்ச்சு) கதீட்ரலுக்கு பிஷப்பா வந்து இது நாலாவது வருசம் ஆகுது. உள்ளூர் மக்களுக்கு மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த கதீட்ரலோடு இருக்கும் பிணைப்பும் உணர்ச்சியும் சொந்தமும் இவுங்களுக்கு அவ்வளவா இருக்காதுன்னுதான் நினைக்க வேண்டி இருக்கு. இது எங்க அடையாளம். இந்த ஊர் பெயருக்குக் காரணகர்த்தா. எங்க ஊர் சரித்திர சாட்சி.
இந்த ஊருக்கு முதல் பிஷப்பா ஹென்ரி ஜான் ச்சிட்டி ஹார்ப்பர் 1856க்கு வந்தார். அவருடைய முயற்சியால் திட்டங்கள் போட்டு 1858 ஆண்டு சர்ச் கட்டிக்க ஒப்புதல் கிடைச்சது இங்கிலாந்தில் இருந்து. ப்ரிட்டிஷ்காரர் ஜ்யார்ஜ் கில்பர்ட் ஸ்காட் என்ற கட்டிடக் கலைஞர் ( கோதிக் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட்) வந்து கட்டிடத்துக்கு ப்ளான் போட்டுக் கொடுத்தார்.

1864 வது ஆண்டு அடிக்கல் நாட்டினாங்க. காசு பத்தாக்குறைன்னு கிடப்பில் கிடந்துச்சு சில வருசங்கள். அப்போ இது ரொம்பச் சின்ன ஊர். மக்கள் கணக்கெடுப்பெல்லாம் பார்த்தால் 450 ஆண்கள் இருந்துருக்காங்க. பெண்கள் பற்றிய குறிப்புகள் ஒன்னும் கிடைக்கலை. சரிக்குச்சரின்னு பார்த்தால்கூட குழந்தைகள் உட்பட ஒரு ஆயிரம் பேர் இருந்துருக்கலாம்.

1873 வது வருசம் உள்ளூர் கட்டிடக்கலைஞர் பெஞ்சமின் மவுண்ட்ஃபோர்ட் திட்டம் நிறைவேற முயற்சி எடுத்தார். முந்தி வரைஞ்ச பழைய டிஸைன் நல்லாவே இருக்குன்னு அதையே ஆதாரமா வச்சுக்கிட்டு, பக்கத்துலே பெல் டவர், கூடுதல் பால்கனிகள், வெராந்தா இப்படி சேர்த்துக்கிட்டார்.
ரெட்டைக் கதவுகளுடன் கோவில் உள்வாசல்

ஒரிஜனல் ப்ளான்படி இது முழுக்க முழுக்க மரக்கட்டிடம்தான். ஆனால் திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துன சமயம் நல்ல masonry stone உள்ளூர் பேங்க்ஸ் பெனின்சுலா (Banks Peninsula) வில் கிடைக்குதேன்னு அதையும் சேர்த்துக்கிட்டாங்க. உள்ளூர் நேடிவ் மரங்களான டோடரா, மடாய் (totara and matai) மரத்தடிகளை கூரைக்கான சப்போர்ட்டுக்குப் பயன்படுத்திக்கிட்டாங்க.
மளமளன்னு வேலைகள் நடந்து 100 அடி உயர பெல் டவர் கட்டி முடிச்சப்ப வருசம் 1881. 17 வருசம் கழிச்சு ஊர் அழகுக்காக சர்ச்சின் தெற்குப்பக்கம் ரெண்டு Sycamore மரங்களையும் நட்டு வச்சாங்க!

முதல்முதலா குடியேறுன குடும்பங்களில் ஒருவரான ராபர்ட் ஹீட்டன் ரோடஸ் என்றவர் தன்னுடைய சகோதரனின் நினைவுக்காக கோபுரக் கும்மாச்சிக் கூம்பு எல்லாம் வச்சுத்தர முன்வந்தார். இன்னும் 33 மீட்டர் உயரம் கூடிப்போய் மொத்தம் 63 மீட்டர் ஆஜானுபாகுவாக சதுக்கத்துக்கு ஒரு அழகை கூட்டிச்சு. அதுலே ஏறிப்போய்ப் பார்க்க படிகள் வச்சுருக்கு. உசரே இருந்து பார்த்தால் ஊரே தெரியும். குறுகலான படிகளில் ஏறிப்போய் வந்தவர்களுக்கு ஒரு சான்றிதழ் கிடைக்கும். நம்மகிட்டே கூட ஒன்னு இருக்கு. இதுக்கு ஒரு சின்னக் கட்டணமா ரெண்டு டாலர் கொடுக்கணும்.
1881 வது வருசம் பெல்டவருக்குள்ளில் ஆலயமணிகளா பத்து காண்டாமணிகளை வார்த்துக் கொடுத்துச்சு ஒரு லண்டன் கம்பெனி. John Taylor & Co of Loughborough. லண்டனில் இருக்கும் செயிண்ட் பால் தேவாலயத்து மணிகளைச் செஞ்சு கொடுத்தவங்களும் இவுங்கதான். இந்த மணிகளின் எடை 7 டன்! இவ்வளவு பாரமும் தாங்கும்விதமா பெரிய மரங்களை உத்தரமாப் பயன்படுத்துனாங்க. 1978லே எங்க தேவாலயத்தைப் பழுது பார்த்து சீரமைக்கும்போது இந்த உத்தர மரங்களை மாற்றவேண்டியதாப்போச்சு. பாவம் அதுவும் எத்தனை வருசம் கனம் தாங்கும்? அப்போ புது மணிகள் வேணுமுன்னதும் இதே கம்பெனி 13 மணிகளைச் செஞ்சு கொடுத்தாங்க. சரியாச் சொன்னால் 12 காண்டாமணிகளும் பெரிய தாம்பாளம்போல் ஒரு மணியும்! பெரிய மணிகள் D நோட்டும் இந்த தாம்பாளம் C நோட்டுமா ட்யூன் ஆகி இருக்குமாம்.
மணி இழுத்த மகான்கள்

இந்த மணிகளை இழுத்து ஒலிக்கச் செய்ய பெல் ரிங்கர்ஸ் என்னும் குழு இருக்கு. பலவருசங்களா இவுங்க ஞாயிறு (சண்டே சர்வீஸ்) பூஜை நேரங்களுக்கு மணி அடிச்சுக்கிட்டு இருந்தாலும் கூட, வாரம் ஒருநாள் பெல் அடிச்சுப் பிராக்டீஸ் செஞ்சபடியே இருப்பாங்க.அது செவ்வாய்க் கிழமைகளில் மாலை 7 முதல் ஒன்பது வரை. அந்த நாட்களில் நாங்க வேற வேலை காரணமா சிட்டி செண்டர் பக்கம் சுத்திக்கிட்டு இருந்தோமுன்னா மணிச்சத்தம் கேட்டதும் வண்டியை ஓரங்கட்டி அதைக் கேட்டு ரசிப்போம். ஏதோ பாட்டு மாதிரி ரொம்ப நல்லா இருக்கும். அந்த தினங்களில் பொதுமக்கள் போய் மணி அடிக்கும் அழகை நேரில்கூடப் பார்க்கலாம். ஆனாலும் அப்போ ஒரு முறைகூடப்போய்ப் பார்க்கத் தோணலை:(

இந்த ஆலயமணி என்பது முக்கியமா சின்ன ஊர்களில் மக்களுக்குச் சேதி சொல்லும் சமாச்சாரம் என்பது இப்போ நினைவுக்கு வருது. திருச்சபையைச் சேர்ந்த ஒருவர் சாமிகிட்டே போயிட்டாருன்னா சீரான இடைவெளியில் 'டிங்' ன்னு ஒற்றை ஓசையா வரும் மணிச்சத்தம் தகவல் பலகைதான். ஒரு நீண்ட ஒலி உலகத்து சோகத்தையெல்லாம் எப்படி விளம்புதுன்னு பாருங்களேன்!!!!
அழிவில் வீழ்ந்து கிடக்கும் மணிகள்


இனிமேல் மணி அடிச்சு சேவை செய்ய இங்கே வாய்ப்பே இல்லைன்னு ,மனம் நொந்துபோல எங்க பெல் ரிங்கர்ஸ் குழு, அண்டை நாடான அஸ்ட்ராலியாவுக்குப் போய் சிலபல சர்ச்சுகளில் மணியை இழுத்து அடிச்சு தங்கள் சோகத்தைத் தீர்த்துக்கிட்டு வந்துருக்காங்க.

எங்கூரு கதீட்ரலின் ஆர்கன் கூட ஒரு விசேஷத்தன்மை வாய்ந்தது. வில்லியம் ஹில்ஸ் அண்ட் சன்ஸ் என்ற கம்பெனி 1882 இல் இந்த ஆர்கனை அமைச்சுத் தந்தாங்க. அதுக்குப்பிறகு 1927 வது ஆண்டு அதைப் பழுதுபார்த்துச் சரிவராம புதுசாவே ஒன்னு செஞ்சு வச்சாங்க. 1980 வது ஆண்fடு மீண்டும் புதுப்பிச்சு கூடிதலா 11 ரேங்க்ஸ் ( இதுலே ஒன்னு ட்ரம்பெட் ஒலியும் தரும்) பொருத்தினதும் பூவுலகின் தென் கோளத்துலேயே 'பெஸ்ட் ரொமாண்டிக் இன்ஸ்ட்ரூமெண்ட்' என்ற பெயரைத் தட்டிக்கிட்டுப் போச்சு. காதல் எதனாலே வருது, எப்ப வருது... எப்படி வருது, எதுக்கு வருதுன்னு இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியலை பாருங்களேன்!!!!

PIN குறிப்பு 1 : பதிவின் நீளம் கருதி மீதிப்பாதி அடுத்த பதிவில்.

PIN குறிப்பு 2 : கண் முன்னால் காணாமப்போனாப்லெ சரித்திரம் அழியுதே என்ற அங்கலாய்ப்பிலும், 'போனவங்க பெருமைகளை' மறப்பது தமிழ்ப்பண்பாட்டில் இல்லை என்பதாலும் கதீட்ரலின் கதியை இங்கே பதிவு செய்து வைக்கிறேன். வாசிக்க Bபோரா இருந்தாலும் புரிஞ்சுக்குவீங்க என்ற நம்பிக்கை என்னை விட்டுப்போகலை கேட்டோ!

PIN குறிப்பு 3 : இந்தப்பதிவை வெளியிடும் இன்று பகல் எங்கூர் மந்திரவாதி, தேவாலயத்தை இடிக்கக்கூடாதுன்னு சொல்லும் மக்கள் ஆதரவைத் திரட்டி கையெழுத்து வேட்டை நடத்தப்போவதாகவும், 'பிஷப் ஜெபம் பண்ணட்டும். நான் அதுக்கு எதிரா மந்திரம் ஸ்பெல் போடறேன்'னு சொல்லிக்கிட்டு இருக்கார். மந்திரமோ தந்திரமோ பலிக்கட்டுமுன்னு நாங்க ஜெபம் பண்ணறோம். மந்திரவாதி ஒன்னும் ஏப்பை சாப்பை இல்லை. கலாசாலை பேராசிரியராக்கும்.



Wednesday, December 14, 2011

துணிந்தகட்டைகளுக்கு மட்டும்........... Christchurch Earthquake 7

உன் தலைமேலே கல்லு விழும். கூடவந்தா நீ திரும்பிப் போக முடியாது. கட்டிடம் இடிஞ்சு அதுலே மாட்டிக்குவே. நிலநடுக்கம் வந்தா அதுலே அப்படியே புதைஞ்சு போயிடுவே. இன்னிக்குச் செத்தா இன்னிக்கே பால். அப்புறம் 'ஐ ஆம் நாட் அவேர் ஆஃப் திஸ்' ன்னு 'இந்தியப்பிரபலம்' மாதிரி கூவிப் பிரயோசனமில்லை.

என்னடா இப்படி அறம் 'பேசி' வைக்கிறாங்களேன்னு கொஞ்சம்கூட பயமில்லாம 'நான் துணிஞ்சகட்டை'தான்னு சொன்னதும், 'சரி மேலே படிக்கிறேன் கேளு'ன்னாங்க அம்மிணி.


உனக்குப் பதினைஞ்சு வயசாயிருச்சா? இல்லேன்னா ஒரு பெரியவங்க துணையோடுதான் வரணும். அதுவும் நாலைஞ்சு பசங்களுக்கு ஒரு துணை என்ற கதை எல்லாம் இல்லை. ஒரு 'பசங்' ஒரு துணை.

பதினைஞ்சு முதல் பதினெட்டு வயசுன்னா உன் ஃபோட்டோ அடையாள அட்டையோ இல்லை பொறப்பு சான்றிதழோ கொண்டு வா.

நல்லா நடக்கத் தோதான காலணி போட்டுக்கணும். ஹவாய் செருப்பு இல்லேன்னா, ஓப்பன் ஸேண்டல், ஹைஹீலுன்னு போட்டுக்கிட்டு வந்தால் அப்படியே திருப்பி அனுப்பிருவோம். ஒரு அவசரம் ஆபத்துன்னு வந்தால் கல்லு, வாய் பொளந்த ரோடு, கண்ணாடித்துண்டுகள் மேலெல்லாம் ஓடித் தப்பிக்கவேண்டி இருக்கும்.

ஆமாம் உனக்கு இங்லீஷூ தெரியுமா? அறிக்கை, மேல்விவரம் தகவல், எச்சரிக்கை எல்லாம் இங்கிலிபீஸுலேதான் சொல்வாங்க. மொழி தெரியலைன்னா தெரிஞ்ச ஒருத்தரைக் கூடக்கூட்டியாரணும்.

நீ சக்கரநாற்காலி பார்ட்டியா? அப்டீன்னா ஒருத்தருக்குத்தான் இடமிருக்கு. ஒருத்தரை மட்டும் நாங்க பார்த்துக்குவோம்.

கண்பார்வை சரி இல்லைன்னு வழிகாட்டும் நாய் வச்சுருக்கியா? நோ ப்ராப்லம். கூட்டிக்கிட்டு வந்துரு!

கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன். இது முற்றிலும் இலவசம் இல்லை. 'தங்கக்காசு' கொடுக்கணும்.

இளவரசர் வில்லியம் வந்தப்பக் கூட்டிக்கிட்டுப்போய்க் காமிச்சீங்க. போகட்டும் அவர் நம்ம வருங்கால ராஜா. குடிமக்கள் பட்ட கஷ்டம் என்னன்னு தெரிஞ்சுக்கும் கடமை இருக்குல்லே? அப்புறம் ரேச்சல் ஹண்ட்டரைக் கூட்டிக்கிட்டுப்போய்க் காமிச்சீங்களே அது எதுக்கு? நம்ம நாட்டு நம்பர் ஒன் மாடல்(முந்திய சூப்பர் மாடல் அழகி(??!!) என்றதும் மனசில் கருணை வந்துருச்சா? அப்ப உள்ளூர் மக்களுக்கு ஏதும் வசதி செஞ்சு தரமாட்டீங்களா? 'சம்பவம்' நடந்த இடத்தை அப்படியே காபந்து பண்ணி மூடி வச்சுட்டா........... அங்கே என்ன ஆச்சோன்னு நாங்க பதைபதைக்க மாட்டாமா? ங்ய் ங்ய்ன்னு நாங்க விடாமப் போராடுனதுக்குப் பலன் கிடைச்சது.

நவம்பர் 5 முதல் டிசம்பர் 11 வரை ஆறுவாரத்துக்கு வீக் எண்டுகளில் மட்டும் ரெட் ஸோன் டூர் ஒன்னு ஸெரா CERA ( Christchurch Earthquake Recovery Authority) ஏற்பாடு செஞ்சு கொடுத்துச்சு. தனி பஸ்ஸுலே கூட்டிப்போய்க் காமிப்பாங்க. விருப்பம் இருந்தால் 0800 RING CERA வில் கூப்பிட்டு இருக்கையைப் பதிவு செஞ்சுக்குங்கன்னு சொன்னாங்க.

அங்கே தொலைபேசுனப்ப அடுத்த முனையில் இருந்த அம்மணி பேசுன 'அறம்' தான் பதிவின் ஆரம்பத்தில் நீங்க படிச்சது. இதுக்குமேலே துணிஞ்சால் மட்டும் வான்னதும் நான் துணிஞ்சுட்டேன்னேன். முதல் செய்தி, எல்லா இடங்களும் ஏற்கெனவே பதிவாகிருச்சு. எதாவது கேன்ஸலேஷன் இருக்கான்னு பார்க்கிறேன். ஒரு இடம் ஞாயிறு மாலை 7 மணிக்கு இருக்கு. பரவாயில்லையா? ஊஹூம்.... எனக்கு ரெண்டு இடம் வேணும்( அவ்ளோ குண்டா? ச்சீச்சீ...ரெண்டு பேருக்குங்க) இன்னும் கொஞ்சம் நேரம் தேடிப்பார்த்துட்டு அதிகாலை பஸ்ஸுலே இருக்கு. ஹௌ ஏர்லி? 9.20. ஆஹா..... எடுத்துக்கறேன். அடுத்த கட்டமா பதிவு ஆரம்பிச்சது. . முழுப்பெயர் நம்ம ஸர் நேமோட சேர்த்து ஒவ்வொரு எழுத்தா ஃபொனெடிக் கோடுலே சொல்லணும் அப்புறம் பிறந்த தேதி. வீட்டு விலாசம், தொலைபேசி எண்கள் (நல்லவேளை. உயில் எழுதிட்டயா? யார் பேருக்குன்னு கேக்கலை) எதாவது ஆகிருச்சுன்னா, தகவல் பதிய விவரம் வேணுமே.

ஈமெயில் ஐடி சொல்லு. டிக்கெட்டை அனுப்பறேன்னதும் சொன்னேன். அஞ்சு நிமிசத்தில் ஈ-டிக்கெட் வந்துருச்சு. அதை ப்ரிண்ட் பண்ணிக்கணும். சரியா 20 நிமிசத்துக்கு முன்னால் க்ரான்மர் சதுக்கத்துக்கு வந்துறணுமாம். பயணம் முழுசும் பஸ் கதவு மூடியே இருக்கும். திறக்கப்படமாட்டாது. (அட! அப்ப எதுக்கு suitable footwear? ஓ....ஆபத்துலே இறங்கி ஓடித் தப்பிக்கவா?) எப்படியும் உயிரோடு திரும்பி வந்துருவோம் என்ற நம்பிக்கையில் பகல் சாப்பாட்டை ஆக்கி வச்சுட்டுக் கிளம்பினேன்:-)
க்ரான்மர் சதுக்கத்தில் நமக்குப் பார்க்கிங் இலவசம். மூணு தொகுதியாத் தனித்தனி கூடாரம் அடிச்சு வச்சுருக்காங்க. ஒவ்வொரு கூடாரத்துக்குப் பக்கத்திலும் அடுத்த வண்டி புறப்படும் நேரம். அவசரகாலத்தில் செய்யவேண்டியவை என்னென்ன தகவல் பலகை. அதுலேயும் கடைசி வரி...... இதையெல்லாம் வாசிச்ச பிறகும் டூர்லே வரேன்னா சொல்றே? சரியான 'தில்' பார்ட்டியா இருக்கே! நீ செத்தாலும் செத்துருவேன்னு இன்னொரு 'அறம்' :-)
மூணு பஸ்ஸுகள் வரிசையா நிக்குது. எங்க பயணத்துக்கு செக்கின் செஞ்சுக்க வரிசையில் நின்னோம். கூடாரத்தின் முகப்பில் இருந்த பணியாளர்களில் ஒருவர் சிரித்தமுகத்துடன் 'வாங்க' என்றார். எங்களுக்கு முன்னால் ரெண்டு பேர் வரிசையில். எங்களுக்குப்பின் வந்து சேர்ந்துக்கிட்டவர்களில் ஒரு பெண்மணி காலை விந்திவிந்தி நடந்து வந்தார். கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக். இதைப்பார்த்த பணியாளர் 'சடார்' என்று அவர் அமர்ந்திருந்த இருக்கையைத் தூக்கிக் கொண்டுவந்து அந்தப் பெண்மணிக்கு போட்டு 'இதுலே உக்கார்ந்துக்குங்க' என்றார். இப்படிச் சின்னச்சின்ன சமாச்சாரங்களால்தான் இந்த மக்கள் மேலும் நாட்டின் மேலும் உள்ள மதிப்பு என் மனசுலே உசந்த இடத்தைப் பிடிச்சுருது.
முதல் இரண்டு பஸ்ஸுகளும் 9க்கு ஒன்னும் 9.10க்கு ஒன்னுமாக் கிளம்பிப்போச்சு. அடுத்து நம்மது. ப்ரிண்ட் அவுட்டாக் கொண்டு போயிருந்த டிக்கெட்டைப் பார்த்துட்டு அவுங்க கிட்டே இருந்த பட்டியலைச் சரிபார்த்துக்கிட்டு 'ஆஜர்' போட்டாங்க. பக்கத்துலே மூடிபோட்ட ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட் உண்டியல். 'தங்கம்' அவ்வளவு மதிப்பில்லைன்னு நோட்டாப் போட்டோம். நம்மூர்லே ஒரு டாலர், ரெண்டு டாலர் நாணயங்கள் தங்க நிறத்தில் இருக்கு. பஸ்ஸுலே ஏறி உசரமா இருக்கும் இருக்கைகளில் உக்கார்ந்தோம். ரெண்டே நிமிசத்தில் வண்டி நிறைஞ்சது.
செஞ்சிலுவை அங்கி போட்ட 'ஷான்' எல்லோரையும் வரவேற்று விளக்கங்கள்(do's & don'ts ) கொடுத்தார். தேவைப்பட்டால் முதலுதவியும் அவர் செய்வார்.இன்னொருமுறை 'அறம்' வாசிச்சுட்டு கூட வர்றீங்களா இல்லை இறங்கிப் போறீங்களான்னார். இதுக்குள்ளே 'அறம் அறிக்கை' முழுசும் எனக்கு மனப்பாடமாகி இருந்துச்சு:-) 'ஆபத்து' ஏற்பட்டால் நம்மைக் காப்பாத்த ஒரு செக்யூரிட்டி இளைஞர் பஸ்ஸின் பின் கதவுப்பக்கம்.
ஒரு சின்ன சர்ச்சைக்கூட விட்டுவைக்கலை பாருங்க:(
சம்பவம் நடந்த இடங்களைப் பார்க்கும்போது மக்கள் உணர்ச்சிவசப்படுவது சகஜம். மன அழுத்தம் கூடும் இப்படிப்பட்ட சமயங்களில் நண்பர்கள் உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்க. அப்படி யார்கிட்டேயும் பேசமுடியாதுன்னா இந்த 0800 *********** எண்ணுக்குத் தொலைபேசுங்கன்னு சொன்னார். ஸேரா ஏற்பாடு செஞ்சுருக்கு இந்த கவுன்ஸிலிங்கை.!

நானோ சும்மாவே அழுவேன். இப்போக் கேக்கணுமா? முன் ஜாக்கிரதையா ஏகப்பட்ட டிஷ்யூக்களை எடுத்துக்கிட்டுப் போயிருந்தேன்.

'நடந்த' வண்டி தெருமுனை திரும்புனதும் நின்னுச்சு. நாம் இப்போ ரெட்ஸோனுக்குள்ளே நுழையப்போறோம். யாருக்காவது கூட வரவேணாமுன்னு தோணுச்சுன்னா இப்ப இறங்கிடலாம். இது கடைசிச் சான்ஸ். இதுக்குப்பிறகு பயணம் முடியும் வரை எங்கேயும் வண்டிக் கதவுகள் திறக்கப்படாதுன்னு எச்சரிக்கை வந்துச்சு ஷானிடம் இருந்து.

கைவிரலைக் காமிச்சு 'இந்த மோதிரத்தை வச்சு என்னை அடையாளம் கண்டுபிடிச்சுருங்க'ன்னு கோபால் கிட்டே கிசுகிசுத்தேன்.

யாரும் வண்டியைவிட்டு இறங்கலை. தீரர்களா இருந்தோம். வண்டி மறுபடிக் கிளம்பி 'நடக்க' ஆரம்பிச்சது! இதுவரை கம்பி வலைக்குப்பின் ஏதோ அரசப்புரசலாத் தென்பட்டப் பகுதிக்குள்ளே போனால்....... 'கோஸ்ட் டவுன்'ன்னு சொல்வாங்க பாருங்க அதுபோல வெறிச்சோடிக்கிடக்கு. கலகலன்னு மக்கள் நடமாட்டம், வண்டிகள் ஓடும் சாலைகள், குறுக்கே புகுந்து வரும் ட்ராம் பாதைன்னு எல்லாமே கப்சுப். கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டு நிரவிவிட்டு காலி மனைகள் அங்கங்கே! ஆகாசத்தை முட்டும் ராக்ஷஸ க்ரேன்கள் தெருவுக்கு நாலு. ஏவான் நதிக்கரை ஓரம் விக்டோரியா சதுக்கம் இடுப்புயரப் புல்லில் ஒ(ழி)ளிஞ்சுருக்கு. (இதுதான் தமிழ்சினிமா டூயட் ஸ்பாட். இங்கே எடுக்கும் ஷூட்டிங்கில் இந்த இடத்தை விடவே மாட்டாங்க. அப்படி ஒரு பிரியம்)
சதுக்கத்தில் ஃபிப்ரவரி 25க்கு(2011) நடக்கப்போகும் சீனர்களின் லேண்ட்டர்ன் ஃபெஸ்டிவலுக்காக விளக்குகளைக் கட்டித்தொங்கவிட்டு அலங்கரிச்சுக்கிட்டு இருந்த சமயம் நிலநடுக்கம். எல்லோரும் துண்டைக்காணோம் துணியைக்காணோமுன்னு ஓடி இருக்காங்க. அடுத்த சில மணிகளில் நகர மையம் வேலித்தடுப்புக்குள்ளில் வந்துருச்சு. நடந்ததை எல்லாம் மௌனமாப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் நிலையில் நிற்கும் மகாராணி விக்டோரியா !

பார்க்க இன்னும் நல்லாவே இருக்கும் கண்ணாடிச்சுவர் கட்டிடங்கள் எல்லாம் இடிபடக் காத்திருக்கு. வெளிப்பார்வைக்கு நல்லா இருக்கே தவிர உள்ளுக்குள் சேதம் கூடுதலாம். நில நடுக்கத்தின்போது இடமும் வலமுமாக் குலுங்குனதோடு மேலேயும் கீழேயுமா ஆடுனதில் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுபோய் கட்டிடத்தைத் தாங்கும் காங்க்ரீட் தூண்கள் எல்லாம் முறுக்கிக்கிட்டு நிக்குதாம். அட ராமா............
எங்கூரின் அதிக உசரமான கட்டிடம் என்ற பெருமையை இதுவரை தக்க வச்சுருக்கும் 'ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்' பில்டிங்...... 'எப்போ? எப்போ? ன்னு இடிக்கப்படக் காத்திருக்கு அடடா......
மான்செஸ்ட்டர் தெருவில் திரும்பி உள்ளே போறோம். துல்சி ரெஸ்ட்டாரண்ட் இருந்த இடம் தரை மட்டம்:( சரி...போகட்டும் இன்னொருமுறை பிஸினெஸை ஆரம்பிக்கலாம். தெருவின் ரெண்டு பக்கமும் இத்தனை வகை யாவாரம் நடந்துக்கிட்டு இருந்துருக்கா என்ன? ஒன்னுமே கவனிக்காம ஏதோ கண் பட்டிக் கட்டிவிட்ட மாதிரியில்லே 'நகர்வலம்' நடத்தி இருக்கேன், கனகாலமா:(
சிடிவி இருந்த இடம் சிமெண்டுத்திடலா இப்போ:(

நடந்துக்கிட்டு இருந்த வண்டி நிதானிச்சு நின்னது. CTV பில்டிங் இருந்த இடம் தரைமட்டமா........... இப்போ...வெறும் கட்டாந்தரை! 106 உசுரை காவு வாங்கிய இடம். கண்ணுலே தெம்படவே கூடாதுன்னு முதல்லே இடிபாடுகளை அகற்றியிருக்காங்க. இதுலே 65 பேர் ஜப்பான் நாட்டு மாணவர்கள். சம்பவத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால் வந்திறங்கினவங்க. முதல்நாள் தங்கப்போகும் ஊரைச் சுத்திக் காமிச்சுருக்காங்க. அழகான ஊரில் கொஞ்சநாள் இருக்கப்போறோமுன்னு ஒரே ஆனந்தம். மறுநாள் முதல் வகுப்பு. முதல்நாள் பள்ளிக்கூடம். லஞ்சு டைம். எமன் சாப்பிடக்கூட விடலை. அப்படியே அள்ளிக்கிட்டுப் போயிட்டான். அவனுக்கு அப்படி ஒரு பசி:( ப்ச்..............
வண்டி கிளம்பி 'நடக்க' ஆரம்பிச்சது. புக் ஷாப் ஒன்னுலே சம்மர் ஸேல் ஆரம்பிச்சு..... குவியல் குவியலா காத்திருக்கும் புத்தகங்கள். ஹூம்......அதிர்ஷ்டம் கெட்டது புத்தகங்களா...இல்லை வாசகர்களா?
எங்கே பார்த்தாலும் டெமாலிஷன் ஒர்க் நடந்துக்கிட்டு இருக்கு. தெருவோர மரங்கள் எல்லாம் மண்டையைப் போட்டுருச்சுங்க. நியூஸிலண்ட் போஸ்ட் உள்ளே எத்தனை முக்கிய கடிதங்களும் பார்ஸல்களும் மாட்டிக்கிச்சோ! வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகளும் காபந்து செஞ்சுக்கிட்டு இருக்கும் கண்டெய்னர்களுமா என்ன ஒரு காட்சி:(
நம்ம மெட்ராஸ் ஸ்ட்ரீட்

கட்டக்கடைசியா கதீட்ரலுக்கு முன்னால் போறோம். ஐயோ! மொட்டைக்கோபுரம்:( இதுவரைக் கட்டிக்காத்த உணர்ச்சிக் கொப்புளம் 'பட்'ன்னு உடைஞ்சது. யாரும் கவனிக்குமுன் கண்களைத் துடைச்சுக்கணுமுன்னு...... மெனெக்கெட்டுருக்க வேண்டாம். அநேகமா எல்லோர் நிலையும் இதே இதே! வண்டிக்குள் பேச்சரவம் காணோம்..
கொழும்புத்தெருவில் வந்து இடதுபுறம் திரும்பி மௌனசாட்சியா நிற்கும் மாட்சிமை தாங்கிய மகாராணி விக்டோரியாவைக் கடந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். மன அழுத்தத்துக்கு வடிகாலா ஏற்பாடு செஞ்சுருக்கும் கவுன்ஸிலிங் நம்பர்கள் அடங்கிய அட்டையை, வண்டியை விட்டு இறங்கும் ஒவ்வொருத்தருக்கும் விநியோகிச்சாங்க.

கடந்த ஞாயிறோடு இதுவரை 18,000 பேர்களுக்கு இடம் ஒதுக்கி மிச்சம்மீதி இருக்கும் உடைந்த நகரைக் காமிச்சுருக்காங்க. இனி இந்த சர்வீஸ் கிடையாது. உயிர்ச்சேதம் ஏற்பட்டால் நகரம் தாங்காது என்பதால் கூடுதல் கவனம். சட்புட்ன்னு இடிக்கவேண்டியதை இடிச்சு நிரவி புது நகரை நிர்மாணம் செய்யணும். வேடிக்கை காமிச்சுக்கிட்டு இருந்தால் வேலை நடக்க வேணாமா?

பஸ் சர்வீஸ் இல்லைன்னா என்ன? (இந்த பஸ்ஸே நடந்து போகும் வேகத்தில்தான் போச்சு) நடந்து போய்ப் பார்க்கறோம் என்று 'ஆசை'ப்பட்ட மக்களுக்காக சின்னதா ஒரு வாக்கிங் டூர் ஆரம்பிச்சுருக்காங்க. கதீட்ரல் சதுக்கத்தில் நின்னு தேவாலயத்தை வெளியில் இருந்து பார்க்க மட்டுமே!
கதீட்ரல் ஸ்கொயர்

இதுக்கும் நிறைய ரூல்ஸ் இருக்கு. முதல்லே வருவது பொருத்தமான காலணி. நடைபாதை ஒன்னு அமைச்சுருக்கோம். அதுலேயே போகணும். ஃபென்ஸுக்கு இந்தப் பக்கம் இருந்துதான் பார்க்கணும். ஒரு மணி நேரத்துலே 300 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. போயிட்டு 50 நிமிசத்துக்குள்ளே திரும்பி வந்துறணும். செல்ஃபோனை ஃபுல் சார்ஜ் பண்ணி வச்சுக்கணும். நீங்க எப்போ உள்ளே போறீங்கன்னு உங்க நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ தெரிவிக்கணும். நிலநடுக்கம் வந்தால் 'கபால்'ன்னு தரையோடுதரையா படுத்துக்கணும். வழிகாட்டும் நாயைத்தவிர மற்ற செல்லங்களுக்கு அனுமதி இல்லை. அதி முக்கியமானது உங்க அடையாள அட்டையை உடம்புலே வச்சுக்கணும். சட்டைப்பை, பேண்ட் பாக்கெட் இப்படி. ஒருபோதும் கைப்பையிலே வச்சுக்கக் கூடாது. அடடா....முந்தியே தெரிஞ்சுருந்தா பச்சை குத்திக்கிட்டு வந்துருப்பமே:-)

PIN குறிப்பு:
பஸ்ஸுலே ஏறிப்போய்ப் பார்க்க விருப்பம் இருந்தா இங்கே க்ளிக்கவும். கூட்டிப்போய்க் காமிக்கிறாங்க ஸேரா சார்பில்.